Wednesday, May 13, 2009

விஐபி வாக்குச் சாவடி

நம் ஜனநாயகக் கடமை முடிந்தவுடன் அடுத்து பக்கத்துத் தெருவில் முதல்வர் வாக்களித்துவிட்டாரா என்று பார்க்கக் கிளம்பினேன். அவரது வாக்குச் சாவடி அவர் வீட்டுக்கு 25 அடி தள்ளி இருக்கும் சாரதா செகண்டரி ஸ்கூலின் பின்புறம். கிருஷ்ணர் கோயில் இருக்கும் அதே தெரு.

8.15-க்கு, இன்னும் அவர் வரவில்லை, வாக்களிக்கவில்லை என்று தெரிந்தது. எங்கும் செய்தியாளர்கள் கூட்டமாக இருந்தனர்.

Entrance to VIP polling booth - were Karunanidhi is expected to vote

கீழே பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்: “அங்க மக்கள் வேற, போராளிகள் வேற இல்லை. மக்கள்தான் போராளிகள்.” எதிரே நின்றுகொண்டிருந்த ஆண் பத்திரிகையாளர் பதிலுக்குக் கேட்டார்: “அப்ப ஏன் புலிகள் மக்களை துப்பாக்கி முனைல நிறுத்தி வெச்சிருக்காங்க?” வாக்குவாதம் தொடர்ந்தது. கடைசியில் ஆண் பத்திரிகையாளர், “என் விருப்பம் மக்கள் காப்பாற்றப்படணும்கிறதுதான்” என்றார்.

மொபைல் போனை காதில் மாட்டியிருந்த ஒரு பெண் பத்திரிகையாளர், சுவரை நோக்கித் திரும்பி, வெளிச் சத்தம் ஏதும் தனது பேச்சில் நுழைந்துவிடக்கூடாது என்ற கவனத்துடன், ஆங்கிலத்தில், “கோயம்புத்தூர் பக்கமெல்லாம் தீவிர ஈழப் போராட்ட ஆதரவாளர்கள் இருப்பதனால், திமுக கூட்டணிக்கு மிகவும் பிரச்னையாக இருக்கும்” என்று சொல்லிக்கொண்டிருந்தார். அது ஏதோ ஒரு சானலில் நேரடியாகப் போய்க்கொண்டிருந்தது.

ஆக, மக்கள் பேசுகிறார்களோ இல்லையோ, பத்திரிகையாளர்களுக்கு இன்று இலங்கைப் பிரச்னை தமிழகத் தேர்தலை எந்த அளவுக்கு பாதிக்கப்போகிறது என்பதுதான் முக்கியமானதாக இருந்தது.

வீடியோ கேமரா ஸ்டாண்டுகள் கருணாநிதிக்காகக் காத்திருந்தன. யாரோ ஒருவர், “9.00-9.30க்கு வந்துடுவார்” என்று சொல்லிக்கொண்டிருந்தார். தயாநிதி மாறனுக்கு ஒரு வாக்கு நிச்சயம் கிடைக்கும்.

Video cameras on vigil, expecting Karunanidhi

சற்றுத் தள்ளி, மீண்டும் லாயிட்ஸ் சாலையில் திரும்பினால் ஒரே OB Van மயம். குறைந்தது 10 வண்டிகள், டிஷ் ஆண்டெனா புடைசூழ நின்றுகொண்டிருந்தன.

OB Vans, guzzling diesel, with their dish antennae spread

ஜெயலலிதாவின் வாக்குச் சாவடி எப்படி இருக்கும் என்று நினைத்தேன். போகலாமா என்று யோசித்தேன். பசித்தது. சரவணபவனை நோக்கி நடையைக் கட்டினேன்.

6 comments:

  1. சும்மா ஒரு எட்டு அம்மா வாக்கு சாவடிக்கும் போய்
    வந்து சொல்லுங்க பாஸ்

    ReplyDelete
  2. Great..keep going on..a live blog about the election day..planning to cover the entire day??

    ReplyDelete
  3. நேற்று ஜெயா டிவியில் மாலனுடன் தங்கள் உரையாடலை பார்த்தேன்.

    நன்றாக விளக்கினீர்கள்.

    ReplyDelete
  4. Iam srilankan tamil,I know the real situation in srilanka.peoples some times blame LTTE thats true but they always love LTTE bottom of their heart!!
    Good example! in 1995 ,500,000 people moved from jaffna to chavakachcheri during one night they faced so many probleam,that time they blemed ltte you don't know how much!!!.
    But in 2002 when ltte came back to jaffna that time more than 150,000 people went to invite them that day,so what do you think about this??

    Who is Ltte?are they came from another planet?or are they diffrent nationality people?

    In second world war Russia lost 23 million people,its 70% of their population in 1942.
    Now Russian population is 48 million in 2007.

    from 13 years upto 60 years people were fighting in that war,but they won.
    if they didn't fight,if they didn't loose their life what happened to the russian now?

    They live like tamilnadu people, under the KARUNANITHI'S AND JEYALAITHA'S POLITICALS.

    ReplyDelete
  5. //“என் விருப்பம் மக்கள் காப்பாற்றப்படணும்கிறதுதான்”//

    பதிவு நன்று!
    பதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்!!
    நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.
    உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!
    www.kalakalkalai.blogspot.com

    ReplyDelete
  6. கமல்ஹாசனும் நானும்...
    ************************

    யாராவது இந்த வருடம் ம்யூசிக் அகாடமியில் கச்சேரி இல்லை என்று வருத்தப்பட்டால், இதை இப்படியே வெளியே சொல்லாதே, "நானும் பீம்சென் ஜோஷியும் இந்த முறை அகாடமியில் பாடவில்லை" என்று சமாளி என்போம்.

    மூன்று மணி அளவில், வாக்காளர் அடையாள அட்டையுடன் தி.நகர் சென்ற என்னையும் லிஸ்டில் பெயர் இல்லையென்று திருப்பியனுப்பி விட்டார்கள். ராமநாதன் தெருவிலுள்ள பள்ளியில் எனக்கு வாக்கு இருப்பதாக அறிந்து, அருண் குமாரை 'கிளப்பி' அழைத்துச் சென்றேன்.

    காலையிலேயே சுறுசுறுப்பாக வாக்களித்துச் சென்றிருப்பார்கள் என எண்ணினேன். எல்லோரும் இப்படியே நினைத்து, மதியம் கூட்டமாக இருக்கும் என்று அருண் சொல்லிக்கொண்டிருந்தான்.

    தெருக்கள் சற்று வெறிச்சோடி இருந்தன. பூத்திலும் ஜனங்களைக் காணோம். Ramp-ன் வழியில் ஒரு விளம்பரமும் ஒரு TVS 50-யும் நிறுத்தி வழியை அடைத்திருந்தார்கள். 'You Tube புகழ்' விஜய்யின் குருவி - வில்லு படங்கள் ஓடும் தியேட்டர் போல காற்று வாங்கியபடி இருந்தது அவ்விடம்.

    "இங்க இல்ல சார், பக்கத்து ரூம்பு"

    பக்கத்து ரூமில் நிறைய காகிதங்களைக் கிழித்துப் போட்ட குப்பைகளுக்கு நடுவே மூவரும், எதிரே ஐவரும் அமர்ந்திருந்தனர்.

    "சார்... இங்க வா சார்... பூத்து சிலிப்பு இருக்கா?"

    "இல்ல..."

    "இரு சார்... பாக்கறோம்..."

    ஐவரும் தத்தம் புத்தகங்களில் என் பெயரோ படமோ இருக்கிறதா என்று தேடிக்கொண்டேயிருக்கும்போது நாலு பேராக வந்த ஒரு குடும்பம் கண்டு, ஸஃபாரியில் ஒருவர் சிரித்தபடி, "நீங்க போயிட்டு வாங்க... அடுத்த Election-ல போடலாம்" என்றார். Presiding Officer அங்கே அமர்ந்து, இதற்கு வழி சொல்ல்லாமல் மௌனம் காத்தார்.

    அவர் கவலை அவருக்கு. அதற்கான படிவத்தை நிரப்பி, முத்திரையிட்டு, கையெழுத்து வாங்கி, கவரை ஒட்டி என்ற அலுவல்களில் அலுப்பு கொண்டு பேசாதிருந்தார் என்று பிறகு அப்பா சொல்லத் தெரிந்துகொண்டேன். "இதுக்கு தான் ஒட்டு போட எல்லாம் வரவேணாம்னு சொன்னேன்" என்றான் அருண்.

    மீண்டும் கைனடிக்கில் ஏறும் போது, வாசலில் உட்கார்ந்திருந்த சிலர் யாரிடமோ, இப்போது வேண்டாம், பிறகு என்று ரகசியமாய்க் கை காட்டிக் கொண்டிருந்தனர்.

    வழியில் அயோத்யா மண்டபம் தாண்டி SBI - ATM வாசலில், கூட்டமாக சில பெண்கள் அமர்ந்து வோட்டு போட முடியவில்லை என்று அங்கலாய்த்தபடி அதற்கு பதில் சொல்லிக்கொண்டிருந்த ஒருவனின் பரம்பரையையே வார்த்தைகளால் மோக்ஷத்துக்கு அனுப்ப முயன்று கொண்டிருந்தார்கள்.

    மூன்றிலிருந்து ஐந்து மணிக்குள் தான் கள்ள ஓட்டுகள் பதிவாகும் நேரம் என்று காற்று வாக்கில் காதில் விழுந்தது. Blog-ல் எழுதுவதற்கும் "வாக்கு" வன்மைக்கும் சம்பந்தம் இல்லை தான்.

    எப்படியோ, என்னுடைய "WALK"-கினை எப்போதும் போலவே இன்றும் என்னால் பதிவு செய்ய முடியாமல் இயற்கையுடனான என் போராட்டம் தொடர்கிறது.

    விஷயம் என்னவென்றால், கமல்ஹாசனும் நானும் ஒட்டு போட முடியவில்லை!

    ReplyDelete