Saturday, November 14, 2009

இனி இது சேரி இல்லை...

அன்னை சத்யா நகர் பற்றி சிலமுறை பதிவுகளில் எழுதியிருக்கிறேன். சென்னை விலிங்டன் கார்பரேட் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு அன்னை சத்யா நகர் என்னும் சேரிப் பகுதியை எடுத்துக்கொண்டு அங்குள்ள மக்கள், அரசு இயந்திரம் ஆகியவற்றுடன் இணைந்து பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

அந்த மாற்றங்கள் என்னென்ன? அவற்றால் நீடித்த முன்னேற்றம் அந்த இடத்தில் ஏற்படுமா? சேரி என்றால் என்ன? சேரிகளில் உள்ள மக்கள் படும் பாடு என்ன? வெளியிலிருந்து வரும் தொண்டு அமைப்புகள் சேரிப் பகுதியில் மாற்றங்களை ஏற்படுத்திவிடமுடியுமா? சேரியை மாற்றுவது என்பது வெறும் பணம் சார்ந்த ஒன்றா? பாதுகாப்பு உணர்வு இன்றி, அரசு எப்போது வேண்டுமானாலும் துரத்தக்கூடும் என்ற நிலையில் வாழும் மக்களுக்கு, அவர்கள் வாழும் இடம் அவர்களுக்கே சொந்தம் என்று பட்டா, நில ஆவணம் என்று கையில் கிடைக்கும்போது என்ன மாற்றம் ஏற்படுகிறது? சுத்தம், சுகாதாரம் என்பதை எங்கும் மலரச் செய்யமுடியுமா?

இதுபோன்ற பல கேள்விகளுக்கான விடைகள் இந்தப் புத்தகத்தில் கிடைக்கும்.

இந்தப் புத்தகத்தின் ஆரம்ப வடிவம் ஆங்கிலத்தில் "A Slum No More" என்று எழுதப்பட்டு (அதுவும் நியூ ஹொரைசன் மீடியா வெளியீடுதான்), பின்னர் தமிழில் மறு எழுத்தாக்கம் செய்யப்பட்டது. கிழக்கு பதிப்பக வெளியீடு.

இந்தப் புத்தகம் படிப்பதன்மூலம் சில கார்பரேட் நிறுவனங்கள், Corporate Social Responsibility என்ற அடிப்படையில் மேலும் சில சேரிகளை எடுத்துக்கொண்டு, அங்கு மாற்றங்களைக் கொண்டுவந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

செப்டம்பர் 2008-ல் நான் எழுதிய பதிவு இது. இதிலிருந்து தொடங்கிய உறவில், பைரவன் இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார்.

4 comments:

  1. இன்று காலை திருச்சி விமான நிலையத்தின் உள்ளே உள்ள புத்தகக்கடையில் நீங்கள் வெளியிட்ட ‘டீன்தரிகிட’ என்ற புத்தகத்தை வாங்கினேன். அதன் விலையாக அவர்கள் என்னிடம் பெற்றது ரூபாய்.முன்னூறு. விலைப்பகுதியில் அவர்கள் 300 என்று குறிப்பிட்ட ஸ்டிக்கரை ஒட்டி இருந்தனர். கிழக்கில் இவ்வளவு விலையா இந்த புத்தகத்திற்கு நிர்ணயம் செய்துள்ளனர் என்று கேட்டபோது ஆமாம் என பதிலுரைத்தனர். நிச்சயம் அவர்கள் செய்வது தவறு என்று எனது மனதிற்குத் தோன்றுகின்றது. கொஞ்சம் தெளிவுபடுத்துங்களேன்.

    ReplyDelete
  2. அப்துல்லா: இந்தப் புத்தகத்தின் விலை ரூ. 60 மட்டுமே. விமான நிலையத்தில் எதை விற்றாலும் ஐந்து-ஆறு மடங்கு விலை ஏற்றி விற்று ஏமாற்றுகிறார் இந்தக் கடைக்காரர். இதனை என் கவனத்துக்குக் கொண்டு வந்ததற்கு நன்றி. இதை உடனடியாக விசாரிக்க ஏற்பாடு செய்கிறேன்.

    ReplyDelete
  3. பத்ரி,

    சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலும் இதே மாதிரியான அவல நிலை தான். இரண்டு முறை ஏமாந்த பிறகு, இப்பொழுது நான் விழித்துக்கொண்டு விட்டேன்! கஸ்டம்ஸ், போர்டிங்கெல்லாம் முடிந்து விமானம் ஏறுவதற்கு முன்னால் இருக்கின்ற இடத்தில் இப்படிப்பட்ட ஒரு அநியாய விலைக் கடை இருக்கிறது. (கடை பெயர் மறந்து விட்டது) தமிழ்ப் புத்தகங்கள் பற்றி எதுவுமே தெரியாத மலையாளிகள் தான் கடையில் வியாபாரம் செய்தபடி இருந்தார்கள்.

    நான் வழக்கமாக எட்டு, பத்து புத்தகங்கள் வாங்குவது பழக்கம். ஆயிரக்கணக்கில் பில் வந்ததும் ஆச்சரியப்பட்டேன்.

    முதல் தடவை, எல்ஸ்ட்ராவாக ஒட்டப்பட்ட அந்த மஞ்சள் ஸ்டிக்கருக்கு அடியில் இருந்த விலையைப் பார்த்ததும் ஏற்பட்ட ஷாக்! பிறகு ஒரு முறை பப்ளிஷரின் விலை விபரப் பக்கமே கிழித்து எடுக்கப்பட்டிருந்தது. எல்லாப் புத்தகங்களுமே ஐந்து, ஆறு மடங்குக்கும் மேலே! 'கேஷ் ஒன்லி' வேறு!

    உதாரணமாக, பாலகுமாரனின் 'கனவுக் குடித்தனம்' (விசா பப்ளிகேஷன்ஸ்) ரூ. 375. விசிறி சாமியார் ரூ. 120. 'காசும் பிறப்பும்' (திருமகள் நிலையம்) ரூ 380. அவர்கள் இஷ்டத்திற்கு அவ்வப்போது ஒரு ஸ்டிக்கர் போலும்!

    இப்படிப்பட்ட ஓநாய் வியாபாரிகளால் புத்தகங்கள் வாங்குகிற ஆசையே போய்விடும் போலிருக்கிறது. ஏர்போர்ட் கடைகளில் மட்டுமெ இந்த ஏமாற்று வேலைகள் மிக அதிகம், buyers beware!

    ReplyDelete