Saturday, April 17, 2010

செம்மொழிக் களஞ்சியம்

நேற்று சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு நானும் நாகராஜனும் சென்றிருந்தோம். அங்குள்ள சில ஆராய்ச்சி மாணவர்களிடம் பேசுவதற்காக.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்காக நாங்கள் ஒரு மென்பொருளை உருவாக்கிவருகிறோம். வேலைகள் முடிந்துவிட்டன. விரைவில் வலையேற்றப்பட்டு அதன் சுட்டியைத் தருகிறேன். தமிழ் பா இலக்கியங்களை தரவுத்தள வடிவமைப்பில் சேர்த்து அவற்றில் சொற்களைத் தேடுவதற்கான ஓர் இடைமுகம் இது.

உரைநடை இலக்கியம் உருவாவதற்கு முந்தைய காலகட்டத்தில் தமிழ் செம்மொழி இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள், பதிணெண்கீழ்க்கணக்கு, தொல்காப்பியம் ஆகிய நூல்களும், அவற்றுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பக்தி இலக்கியங்கள் (ஆழ்வார்கள், நாயன்மார்கள்), கம்பராமாயணம் என்று இருபதாம் நூற்றாண்டு வரையிலும் தொடரும் பாடல் வகைகள் உண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதியிலிருந்தே தொடங்கி, இருபதாம் நூற்றாண்டில் உரைநடை பாடல் மரபை ஒழித்துக்கட்டிவிட்டது. புதுக்கவிதை என்ற வடிவம் மேலோங்கியது. அதே நேரம் சினிமாப் பாடல்கள் என்பவை பல்கிப் பெருகியுள்ளன.

ஆராய்ச்சியாளர்கள் இந்த பாடல் corpus-ஐ ஆராயவேண்டும் என்றால் இவற்றை வெறும் பிரதிகளாக வைத்து கூகிள் தேடுதலை மட்டும் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய இயலாது. இந்தப் பிரதிகள் அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் தரவுத்தளத்தில் போய் விழுமாறு வடிவமைக்கவேண்டும்.

அதன் விளைவாக உருவான திட்டமே தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு நாங்கள் செய்துதரும் மென்பொருள்.

பாடல்கள், XML கோப்புகளாக மாற்றப்படுகின்றன. Tag மூலம் ஒரு hierarchy உருவாக்கப்படுகிறது. உதாரணத்துக்கு திருக்குறள் என்றால், அதில் பால், அதிகாரம், பாடல் எண், அடி எண், சீர் எண் என்பது ஒரு குறிப்பிட்ட சீரைக் குறிப்பது. ஆனால் ஒரு சீரில் இருப்பது ஒரு முழுச் சொல்லாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்களும் ஒரு சீரில் இருக்கலாம். எனவே பாக்களை இரு பிரதிகளாகச் சேர்க்கவேண்டும். ஒன்று பாக்களின் இலக்கணப்படி சீர் பிரித்து உருவாக்கப்பட்ட பாடம். எ.கா:

காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்

இங்கு, மேலே உள்ள நான்கு சீர்களில் இரண்டாம் சீர், தளை காரணமாக கன்னாபின்னாவென்று உடைக்கப்பட்டுள்ளது. இதையே இன்றைய உரைநடையில் எழுதவேண்டும் என்றால்

காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்

என்று எழுதுவோம். இந்த இரண்டு பாடங்களையும் சேர்த்தால்தான் வார்த்தைகளைத் தேடும்போது சரியாக பதில் கிடைக்கும்.

கூடவே ஒரு கட்டத்தில் காலத்தினால் = காலம்+த்+இன்+ஆல் என்று பெயர்ச்சொற்களையும் அவற்றின் வேற்றுமை உருபுகளையும் சந்தி, சாரியைகளையும் பிரிப்பது, செய்த = செய்+த்+அ என்று வினை எச்சங்களையும் வினை முற்றுகளையும் சரியாகப் பிரிப்பது போன்றவற்றையும் செயல்படுத்தவேண்டும்.

மற்றொரு கட்டத்தில் on mouse over, சொற்களின் பொருள்கள், அவற்றின் synonyms போன்றவை தென்படுமாறு செய்தல் வேண்டும். ஒரே பொருளைத் தரும் பல்வேறு சொற்களைக் கொண்டு ஒரே நேரத்தில் corpus முழுவதிலும் தேடும் வகையில் அமைக்கவேண்டும்.

***

ஜூன் 2010-ல் கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டுக்கு முன்னதாக செம்மொழிக் களஞ்சியத்தை உருவாக்கி முடித்திட தமிழ்ப் பல்கலைக்கழகம் விரும்புகிறது. அதற்காக, செம்மொழி இலக்கியங்கள் (என நான் மேலே சொன்னவை) அனைத்தையும் தரவுத்தளத்தில் ஏற்றவேண்டும். அதற்காக அவை அனைத்தையும் XML கோப்புகளாக மாற்றவேண்டும். இதனை தமிழ் அறிந்த சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு செய்துமுடிப்பது என்பது திட்டம்.

இதனால்தான் இந்த மென்பொருளை சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களிடம் காண்பித்து அது பற்றிப் பேசவேண்டி இருந்தது. நாங்கள் பார்த்த மாணவர்கள் அனைவருமே பிஎச்.டி செய்பவர்கள். எல்லா மாணவர்களையும் போலவே இதில் பலருக்கு நாங்கள் காண்பித்ததில் எந்த விருப்பமும் இல்லை. மகிழ்ச்சி என்னவென்றால் பலருக்கும் கொஞ்சமாவது விருப்பம் இருந்தது என்பதே. அதில் பெண்கள் கணிசமானவர்கள். ஒரு பெண் ‘தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் இடைச்சொற்கள்’ என்பது பற்றி ஆராய்ச்சி செய்கிறார். அதற்கு இந்த மென்பொருள் எப்படிப் பயன்படும் என்பதை விளக்கியவுடன் அவர் முகத்தில் ஒரே பிரகாசம்.

அங்கே பேரா. ஜெயதேவன் மேஜையில் ஒரு எம்.ஃபில் தீசிஸ் இருந்தது:- ‘இராமானுச நூற்றந்தாதியில் (திருவரங்கத்தமுதனார்) அகழ்வாய்வும் சொல்லடைவும்’. உள்ளே இருக்கும் அனைத்தையும் பார்த்தபின், அந்த தீசிஸையே இந்த மென்பொருள் கொண்டு தானாகவே உருவாக்கிவிடலாம் என்று தோன்றியது.

சில மாணவர்கள், ‘கூகிள் தேடுதல் இருக்கும்போது இந்த மென்பொருள் எதற்கு?’ என்றனர். அதனை விளக்கவேண்டியிருந்தது.

இதில் வேலை செய்ய கம்ப்யூட்டர் வேண்டுமே என்று மாணவர்கள் அங்கலாய்த்தனர். அதிர்ச்சியாக இருந்தது. இந்த 21-ம் நூற்றாண்டில் சென்னைப் பல்கலைக்கழகம் போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில்கூட பிஎச்.டி மாணவர்கள் அனைவருக்கும் கணினிகள் இல்லையா? கோடி கோடியாகக் கிடைக்கும் நிதி அனைத்தும் எங்கே போகிறது? இவர்கள் அனைவரும் ஒரு கணினியை வைத்துக்கொண்டு அடிதடி சண்டை போட்டுக்கொண்டு... பாவமாக இருந்தது. என் வீட்டிலேயே மூன்று கணினிகள் உள்ளன!

கம்ப்யூட்டர் புரோகிராமிங் என்பது ஏதோ கணினியியல் ஆசாமிகளுக்கானது என்ற எண்ணம் மாறவேண்டும். தமிழ் மாணவர்கள் அனைவருக்கும் கணினி புரோகிராமிங் கற்றுத்தரவேண்டும். String processing பற்றியும் யூனிகோட் பற்றியும் ஓரிரு வார்த்தைகள் மட்டும் அவர்களிடம் சொன்னேன். நாகராஜன் ஒரு XML கோப்பை எடுத்துக் காட்டி, அதில் தமிழிலேயே Tags இருப்பதைக் காண்பித்தபோது மாணவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. இது எச்.டி.எம்.எல் போன்றதா என்று ஒரு மாணவி வினவினார். அவருக்கு எச்.டி.எம்.எல் என்பது தெரிந்திருந்தது. பிற மாணவர்களுக்கு அதுவும் தெரிந்திருக்கவில்லை. சிறிது நேரம், எச்.டி.எம்.எல், ஜாவாஸ்கிரிப்ட், எக்ஸ்.எம்.எல், எஸ்.கியூ.எல், பி.எச்.பி போன்றவற்றைப் பற்றி அவர்களிடம் பேசினேன்.

நம் கல்வி நிறுவனங்களில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணத்துடன் நானும் நாகராஜனும் திரும்பிவந்தோம்.

விரைவில் இந்த மென்பொருளின் சுட்டியை உங்களுக்குத் தருகிறேன்.

28 comments:

  1. நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மிக நல்ல முயற்சி. பலர் தமிழ் கணினிக்கு சேவைச் செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டே இருக்கிறார்கள், நீங்கள் தான் NHM Writer மற்றும் இதுப் போல இலவசமான மென்பொருட்கள் மூலம் உண்மையாக (சிறிய அளவிலாவது) சேவை செய்கிறீர்கள்). வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு.கணேசன் ஒரு tagging tool உருவாக்கியிருக்கிறார். நீங்கள் சொற்களைத் தொகுத்து அதை இலக்கண விதிப்படிப் பிரித்து (parsing)் செய்துவிட்டால் கணினி வழி மொழி பெயர்ப்பை நோக்கி முன்னேறலாம்.

    பழைய சொற்களைத் தொகுத்துப் பிரிப்பதற்கு பதில் சம காலச் சொற்களை எடுத்துக் கொண்டால் ஊடகங்களுக்கு உதவும். ஒருவேளை மின் ஆளுகைக்கும் உதவலாம்

    அன்புடன்
    மாலன்

    ReplyDelete
  4. "அங்கே பேரா. ஜெயதேவன் மேஜையில் ஒரு எம்.ஃபில் தீசிஸ் இருந்தது:- ‘இராமானுச நூற்றந்தாதியில் (திருவரங்கத்தமுதனார் அகழ்வாய்வும் சொல்லடைவும்’. உள்ளே இருக்கும் அனைத்தையும் பார்த்தபின், அந்த தீசிஸையே இந்த மென்பொருள் கொண்டு தானாகவே உருவாக்கிவிடலாம் என்று தோன்றியது."

    திருவனந்தபுரம், மதுரை, கோவை தமிழ்த் துறைகளிலும் நூற்றுக்கணக்கான ஆய்வேடுகள் இவ்வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவற்றை இணையத்தில் பாதுகாக்க வேண்டும்.

    மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்களிலேயே இந்தியவியல் தீஸிஸ் பல ஆண்டுகள் கழிந்தபின் தேடினால் காணாமல் போவதும் உண்டு. முக்கியமான ஆய்வுகளை தட்டச்சிலோ, பிடிஎப் கோப்பு ஆகவோ காத்தல் அவசியம்.


    > நம் கல்வி நிறுவனங்களில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும்
    > என்ற எண்ணத்துடன் நானும் நாகராஜனும் திரும்பிவந்தோம்.

    பின்முடுகு வெண்பா, ... போன்றவற்றை அடையாளம் காணுதல், விருத்த வகைகள், சந்த விருத்த யாப்பு, வண்ணப் பாடல்களுக்கு (உ-ம்: திருப்புகழ் ஒவ்வொன்றுக்கும் சந்தக் குழிப்பு - தந்தன தன தான ...) சந்தம், ... என்று புரோகிராம் செய்யலாம்.

    தி வே கோபாலையர் தேவாரம் முழுக்க விருத்த வகைகளை எழுதியுள்ளார். ஊரன் அடிகளின் வாழ்நாட் பணியாக வள்ளலாரின் 6000+ விருத்தங்களுக்கு யாப்பைக் கணித்துள்ளார்.

    தமிழ் இலக்கண நூல்கள் சில பற்றிய பா. ஜெய்கணேஷ் கட்டுரை:
    http://groups.google.com/group/santhavasantham/msg/ef2adb94bcd79eef

    நா. கணேசன்

    ReplyDelete
  5. பத்ரி,நாகு வாழ்த்துகள்

    பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களின் கணினி மொழியியல் முயற்சி வறண்ட பாலைநிலைத்தில் ஒரு சுனை நீருக்குச் சமம்.பெரும்பாலான ஆசிரியர்கள் கணினியில் ஆர்வம் காட்டவில்லை. அரசு நிறுவனம் ஒன்றுக்குப் பேசுவதற்குச் சென்றேன்.

    வீடியோ கான்பரசிங் வசதி உண்டு என்று அழைத்துச் சென்றனர்.மிகப்பெரிய கற்பனையில் சென்ற எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.இருந்த பல கணினிகள் யாவும் பழுது.பிளக் பாயிண்டு கூட சரிவர இல்லை. நூலாம்படை படிந்து கிடந்தது.இந்த நிலையில்தான் தமிழ் இணையத்தை நாம் அறிமுகம்
    செய்யவேண்டியுள்ளது.
    மு.இளங்கோவன்
    புதுச்சேரி

    ReplyDelete
  6. //நம் கல்வி நிறுவனங்களில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணத்துடன் நானும் நாகராஜனும் திரும்பிவந்தோம்.//

    சாக்கடையைச் சுத்தம் செய்ய அதற்குள் இறங்கியே தீருவது என்று முடிவு செய்துள்ளீர்கள் போலிருக்கிறது. மூழ்கிப் போய்விடாமல் ஜாக்கிரதையாகச் செயல்படுங்கள்.

    ReplyDelete
  7. பத்ரி,

    இது ஒரு நல்ல முயற்சி....வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  8. //எச்.டி.எம்.எல், ஜாவாஸ்கிரிப்ட், எக்ஸ்.எம்.எல், எஸ்.கியூ.எல், பி.எச்.பி போன்றவற்றைப் //

    If anyone knew these thing then he would be working in IT service companies. These are basic any college student but in our country these are requirement to join


    /கூடவே ஒரு கட்டத்தில் காலத்தினால் = காலம்+த்+இன்+ஆல் என்று பெயர்ச்சொற்களையும் அவற்றின் வேற்றுமை உருபுகளையும் சந்தி, சாரியைகளையும் பிரிப்பது, செய்த = செய்+த்+அ என்று வினை எச்சங்களையும் வினை முற்றுகளையும் சரியாகப் பிரிப்பது போன்றவற்றையும் செயல்படுத்தவேண்டும்//

    I couldn't understand but I could feel you are saying about Stemming and lemmatization of word. Am I right or my understanding was wrong?.

    //மற்றொரு கட்டத்தில் on mouse over, சொற்களின் பொருள்கள், அவற்றின் synonyms போன்றவை தென்படுமாறு செய்தல் வேண்டும். ஒரே பொருளைத் தரும் பல்வேறு சொற்களைக் கொண்டு ஒரே நேரத்தில் corpus முழுவதிலும் தேடும் வகையில் அமைக்கவேண்டும்//

    Do we have lexical database in Tamil ? I am using Wordnet for English from Princeton university. you know that I am not talking about Dictionary?. Is any project in progress on that?. Can you give info on these ?

    ReplyDelete
  9. வெங்கட்ரங்கன்,

    \\ பலர் தமிழ் கணினிக்கு சேவைச் செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டே இருக்கிறார்கள் \\

    நீங்கள் என்ன செய்துள்ளீர்கள், சொல்ல முடியுமா?

    - து.குமரேசன்

    ReplyDelete
  10. இதுவரை தமிழ்க் கணிமையில் ஏற்பட்ட முன்னேற்றங்களைப் பருமட்டாக முதல் கட்டம் என்று கொண்டால், corpus தொடங்கி இவ்வாறு இனி நிகழப்போகும் முன்னேற்றங்களை இரண்டாம் கட்டம் எனலாம். அதற்கான ஆயத்தங்களைச் செய்ய முயன்றிருக்கும் தங்களுக்கும் தங்கள் நிறுவனத்திற்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  11. படித்தவுடன் வியப்பாய் இருந்தது. முயற்சிகளை விட ஆழமான உள்ளார்ந்த அக்கறை.

    பல்கலைகழக துணைவேந்தர்கள்தான் இப்போது வேறு சில பொறுப்புகளையும் பார்க்க வேண்டியதாய் இருக்கிறதே? இல்லாவிட்டால் அப்பாவுக்கு தப்பாத போன்ற காலத்தால் அழிக்க முடியாத காப்பியங்கள் வராதே?

    ReplyDelete
  12. //விருபா குமரேசன் கேட்கிறார்:

    வெங்கட்ரங்கன்,

    நீங்கள் என்ன செய்துள்ளீர்கள், சொல்ல முடியுமா?
    //

    இதென்ன கேள்வி? செம்மொழி மாநாட்டுக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார். அது எவ்வளவு பெரிய சேவை?

    பத்ரி,
    இந்த திட்டம் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு கிழக்கு நிறுவனம் கையளிக்கும் இலவசத் திட்டமா அல்லது வணிக ஒப்பந்தமா? வெங்கட்ரங்கன் சேவை என்று குறிப்பிட்டிருப்பதால் ஒரு தெளிவுக்காக கேட்கிறேன். வேறொன்றுமில்லை.

    ReplyDelete
  13. அனானி: வணிக ஒப்பந்தம்தான். நாங்கள் காசு வாங்கிக்கொண்டுதான் இதனைச் செய்கிறோம். சேவை என்று நான் எங்குமே சொல்லவில்லை.

    ReplyDelete
  14. விருபாவின் கேள்வியை விருபாவே அனானியாகி மேற்கொள் காட்டியிருப்பது நல்ல வேடிக்கை :-)

    ReplyDelete
  15. Tagging என்பதைவிட செமண்டிக் வெப் என்பதின் முலம் எளிதாக தேடலாம்

    ReplyDelete
  16. பத்ரி,
    உங்கள் பதிலுக்கு நன்றி. நான் நீங்கள் கூறியதாக சொல்லவில்லை. வெங்கட்ரங்கன் குறிப்பிட்டதை வைத்து தான் கேட்டிருந்தேன். பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், ‘அப்பாவுக்கு தப்பாத’ போன்ற காப்பியங்களைத் தவிர இது போன்ற முக்கியமான திட்டங்களையும் முன்னெடுக்கிறார்கள் என்பதை ஜோதிஜி போன்றவர்கள் கவனிக்க வேண்டும்.

    இப்படி ஒரு பல்கலைக் கழகத் திட்டத்தை தனியார் நிறுவனச் சேவையாகவும், பல்கலைக்கழகங்கள் அரசியல் ஜால்ராக்களாக மட்டும் இயங்குவதாகம் மெத்தப் படித்தவர்களான வெங்கட்ரங்கன், ஜோதிஜி போன்றவர்கள் புரிந்துகொள்ளும் அளவுக்குத் தான் நம் பொதுவிவாதத் தரம் இருக்கிறது. ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது, பொதுநிறுவனங்கள், தனியார் வணிக நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், தனிநபர் முயற்சிகள் என்று பற்பல தரப்புகளின் முயற்சிகளின் ஒட்டு மொத்த விளைவு.

    இரண்டாவது அனானி எழுதுகிறார்:
    //விருபாவின் கேள்வியை விருபாவே அனானியாகி மேற்கொள் காட்டியிருப்பது நல்ல வேடிக்கை :-)//

    இன்னொரு அறிவாளியின் கண்டுபிடிப்பு. இரண்டாவது அனானியே விருபாதான் என்று கண்டுபிடிக்கும் அளவுக்கு மூளை வளரவில்லை போலிருக்கிறது. விரைவில் வளர வாழ்த்துக்கள்.

    - முதல் அனானி

    ReplyDelete
  17. நான் இன்றுவரையில் அனானியாக என்றுமே பின்னூட்டம் இட்டுப் பழக்கமில்லாதவன். நேரடியாகவே தான் கேட்பவன். நான் வெங்கட்ரங்கன் தொடர்பில் இதே தொனியில் வேறு இடத்தில் கேள்வி கேட்டுள்ளேன் என்பதை இங்கு உண்மையான பெயரில் பின்னூட்டம் போட்ட பலர் அறிவர்.



    பதில் தரமுடியாத நிலையால் வெங்கட்ரங்கன் அல்லது அவர் சார்ந்தவர்கள் கூட அனானியாக பின்னூட்டம் போட்டிருக்கலாம் என்று ஏன் எந்த ஒரு அனானியும் எண்ணவில்லை - யோசியுங்கள்.

    ReplyDelete
  18. ஒரு தெளிவுக்காக. நான் விருபாவைச் சார்ந்தவனுமல்ல. வெங்கட்ரங்கனைச் சார்ந்தவனுமல்ல. சுயமாக சிந்தித்து, சுதந்திரமாக இயங்குபவன். தேவையில்லாமல் இரண்டாவது அனானி செய்த குறும்பு காரணமாக திசைமாறிப் போகிறது. விருபா, வெங்கட்ரங்கன் இருவரும் மன்னிக்க.

    - முதல் அனானி

    ReplyDelete
  19. //சாக்கடையைச் சுத்தம் செய்ய அதற்குள் இறங்கியே தீருவது என்று முடிவு செய்துள்ளீர்கள் போலிருக்கிறது. மூழ்கிப் போய்விடாமல் ஜாக்கிரதையாகச் செயல்படுங்கள்.//

    How nice it'd be if moronic comments like these auto-annihililate as they mothball into such farts?

    ReplyDelete
  20. Anony friend,
    Pa. Rengadurai is a regular at this blog and his comments are invariably moronic. But he thinks that he is sarcastic and is taking a dig at Tamils/Dravidians at every opportunity. He must have been very badly screwed by a Tamil/Dravidian very early in his life which he is not able to forget. Poor guy. Leave him alone and let him keep licking his wound forever. I don't think people like Badri care about what Tamil haters like Pa. Rengadurai say. For them business is more important. Loving or hating Tamil/Tamils is secondary.

    ReplyDelete
  21. பத்ரி உங்களிடம் ஒரு கேள்வி

    \\ வணிக ஒப்பந்தம்தான். நாங்கள் காசு வாங்கிக்கொண்டுதான் இதனைச் செய்கிறோம். சேவை என்று நான் எங்குமே சொல்லவில்லை. \\

    என்று கூறியுள்ளீர்கள்.

    தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் இவ்வாறு ஒரு மென்பொருள் உருவாக்கவேண்டும் என்று பத்திரிகைகள் மூலம் ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பம் ஏதாவது வெளியிட்டிருந்தார்களா ? வெளிப்படைத் தன்மையுடன் இதனை பொதுவில் அறிய முடியுமா ?

    இதைக் கேட்பதற்கான காரணம் 2008 இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் Tamil S/W Seminar என்று ஒன்றை ஏற்பாடு செய்த வேளைகளில், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்யும் முறை ( கலந்துகொள்பவர்களுக்கு போக்குவரத்துப் படி தமிழ்ப் பல்கலைக்கழகத்தினால் தரப்படமாட்டாது என்ற ) ஏற்புடையதன்று என்று ஆண்டோ பீட்டர் தலைமையில் இயங்கும் சென்னைக் கணித்தமிழ்ச் சங்கமும் அதன் உறுப்பினர்களும் இடையில் முறித்துக்கொண்டு கலந்துகொள்ளவில்லை. நீங்களும் அதில் கலந்துகொள்ளவில்லை.

    சென்னையில் இருந்து நான், இணையப் பல்கலைக்கழகம், பழனியப்பா பிரதர்ஸ் செல்லப்பன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், புதுக்கோட்டை சர்மா சொலூஷன்ஸ் இன்னமும் சிலர் கலந்துகொண்டோம்.

    இதன்போது, எதிர்காலத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு ஏதாவது தமிழ் தொடர்பான தேவைகள் ஏற்படின் கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களை அணுகுவதாக சொல்லியிருந்தார்கள். இதனை சம்பிரதாயமான சொற்களாகவே எடுத்துக்கொண்டாலும் இவ்வாறான அரச நிறுவனங்கள் வெளிப்படைத் தன்மையுடன் இயங்குகின்றவனவா என்பது எந்த அளவிற்கு என்பதை பலரும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக // நம் கல்வி நிறுவனங்களில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணத்துடன் நானும் நாகராஜனும் திரும்பிவந்தோம்.// என்று கூறும் நீங்கள் உணர்வீர்கள் என்பதால் கேட்டுள்ளேன்.

    பதில் தருவதில் சங்கடங்கள் இருப்பின் தவிர்ப்பதற்கு உங்களுக்கு முழு உரிமையும் உள்ளதென்பதை நான் அறிவேன்.

    ReplyDelete
  22. விருபா: நீங்கள் கேட்கும் கேள்விகளை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் கேட்பதுதான் பொருத்தமாக இருக்கும். எங்கள் நிறுவனத்தின் சார்பில் இதற்கான தேவை இருப்பது தெரிந்ததும் ஒரு புரபோசலும், அதற்கு அடுத்து ஒரு கொடேஷனும் அனுப்பியிருந்தோம். அவை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர்களிடமிருந்து எழுத்துமூலமாகத் தகவல் வந்ததும் வேலையைத் தொடங்கினோம்.

    ReplyDelete
  23. \\ தேவை இருப்பது தெரிந்ததும் \\

    தேவை இருப்பதை வெளிப்படையாக அறிவித்திருந்தார்களா ? இல்லையா ?

    ஆம் அல்லது இல்லை என்பதே போதுமானது.

    ReplyDelete
  24. \\
    \\ தேவை இருப்பது தெரிந்ததும் \\

    தேவை இருப்பதை வெளிப்படையாக அறிவித்திருந்தார்களா ? இல்லையா ?

    ஆம் அல்லது இல்லை என்பதே போதுமானது.
    \\

    இதற்கு ஆம் அல்லது இல்லை என்று என்னால் பதில் கூற முடியாது. அவர்கள் வெளிப்படையாக டெண்டர் அறிவித்தார்களா என்பது எனக்குத் தெரியாது. இப்படிப்பட்ட ஒரு தேவை அவர்களிடம் இருப்பதாக தமிழ்ப் பல்கலைக்கழகம் அல்லாத மற்றொரு பல்கலைக்கழகத்தில் பணியில் இருக்கும் ஒரு பேராசிரியர் தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, நாங்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்குக் கடிதம் எழுதி, எங்கள் புரபோசலையும் விருப்பத்தையும் தெரிவித்தோம்.

    நிற்க.

    உங்களுக்கு என்னுடன் வாக்குவாதம் செய்யவேண்டும் என்று தோன்றினால், (அதாவது, எங்கள் நிறுவனம் ஏதோ குறுக்குவழியில் நடந்துகொண்டு இந்தத் திட்டத்தைப் பெற்று, அதனால் பணம் குவித்துவிட்டது என்று உங்களுக்குத் தோன்றினால்...) அதனை வெளிப்படையாகக் குறிப்பிட்டு அதன்படி நாம் வாதம் செய்யலாம்.

    அல்லது உங்களுக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்மீது ஏதேனும் வருத்தங்கள், கோபங்கள் இருந்தால், அதனை இங்கே விவாதிக்க வேண்டாம். வேறு தளத்துக்கு எடுத்துச் செல்லுங்கள். அவர்கள் டெண்டர் அறிவித்தார்களா, அதற்கு யாரெல்லாம் விண்ணப்பித்திருந்தார்கள் போன்ற கேள்விகளுக்கெல்லாம் என்னிடத்தில் பதில் இல்லை.

    ReplyDelete
  25. //தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்யும் முறை ( கலந்துகொள்பவர்களுக்கு போக்குவரத்துப் படி தமிழ்ப் பல்கலைக்கழகத்தினால் தரப்படமாட்டாது என்ற ) ஏற்புடையதன்று என்று ஆண்டோ பீட்டர் தலைமையில்//


    அதை நீங்களும் நம்பிட்டீங்களா?

    அழைப்பிதலில் மனோஜ் அண்ணாதுரை பேரும் இருந்ததனால் ஆண்டோ பீட்டருக்கு எஸ்ஸாயிடுச்சு.. விருபா.

    உடனே, கணித்தமிழ் சங்கம் கலந்துக்காதுன்னு சனநாயகப்படி அறிவிச்சாரு.

    சொல்லப்பட்ட காரணம் தான் வேறு!

    ReplyDelete
  26. பெயர் சொல்லியுள்ள, பெயர் சொல்லாத நண்பர்களே, இந்த விஷயத்துக்கு நேரடியான தொடர்பில்லாத நபர்களை இந்த விவாதத்தில் தேவையில்லாமல் நுழைக்கவேண்டாம். அவர்கள் எனக்குத் தெரிந்த நண்பர்கள் என்பது ஒரு பக்கம். மேலே சொல்லப்பட்டுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம் - கணித்தமிழ்ச் சங்கம் விவகாரம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பது மறு பக்கம்.

    என்னைப் பற்றியோ அல்லது நான் நடத்திவரும் நிறுவனம் பற்றியோ நேரடியாக ஏதேனும் விஷயம் என்றால் அதைமட்டும் இங்கே விவாதிக்கலாம். ஆண்டோ பீட்டர் அல்லது மனோஜ் அண்ணாதுரை ஆகியோர் பற்றி இங்கே விவாதிக்கவேண்டாம்.

    நன்றி.

    ReplyDelete
  27. Great proposal! My recommendation would be to set up *chronological* sections, so as to help research studies from a *historical* perspective. Limitations of our current dictionaries/lexicons include a lack of proper historical perspective. Compare the Oxford English Dictionary (OED).

    If you're interested, please visit my prototype at:
    (http://www.letsgrammar.org/verbsTamilProto1.html). Please also remember that it is NOT a full-fledged project, but just a wishful prototype.

    ReplyDelete