Wednesday, May 12, 2010

ஓங்கி உலகளந்த உத்தமன்: திரிவிக்கிரமச் சிற்பத் தொகுதி

வராக மண்டபத்தில் காணப்படும் மற்றொரு சிற்பத்தொகுதி, விஷ்ணு திரிவிக்கிரமனாக விசுவரூபம் எடுத்து, வலக் காலை பூமியில் அழுந்தி, இடக்காலால் ஓங்கி, உயர்ந்து, வானைக் கீறிப் புறப்பட்டு ஆகாயத்தை அளக்க முனையும் அந்தக் கணத்தில் எடுக்கப்பட்ட ஒரு freeze frame.

எப்படி வராகம் விசுவரூபம் எடுத்துள்ளதோ அதற்கு இணையான, அதைவிடப் பெரிய விசுவரூபம் இது.

நரசிம்ம அவதாரம் எடுத்து, தன் பக்தன் பிரகலாதனுக்காக தூணிலிருந்து வெளிப்பட்டு, இரணியகசிபுவைப் பிளந்து கொன்று, ஆட்சியை பிரகலாதனுக்கு அளிக்கிறார் விஷ்ணு. பிரகலாதனின் பேரன் மகாபலி.

பாகவதத்திலும் வேறு சில இடங்களிலும் வாமன அவதாரம் பற்றி விரிவாக வருகிறது. பாகவதத்தின் வெர்ஷனை எடுத்துக்கொள்வோம். புராணங்களைப் பார்வையிடும்போது காலக்குழப்பங்கள் ஏற்படுவது இயற்கையே. எனவே கேள்விகள் கேட்காமல் கதையை மட்டும் பாருங்கள்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, அது தேவர்களுக்கு மட்டும் போய்ச் சேருமாறு செய்கிறார் மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணு. இதனால் தேவர்களின் கை ஓங்கியுள்ளது.

பிரகலாதனனின் மகன் விரோசனனின் மகன் மகாபலி. அசுரர்களின் தலைவனாக இருக்கும் மகாபலி தேவர்களுடனான போரில் கொல்லப்படுகிறான். ஆனால் அசுர குரு சுக்கிராச்சாரியாரின் தவ வலிமையால் மகாபலி மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறான். கடும் போரில் தேவர்களையும் இந்திரனையும் அடித்து விரட்டி தேவலோகத்தைக் கைப்பற்றுகிறான்.

தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று முறையிட, அவர்கள் இழந்த தேவலோகத்தை மீட்டுத்தர வாமனராக அவதாரம் எடுக்க முடிவெடுக்கிறார் விஷ்ணு. இந்திரனின் தாய் அதிதிக்கும் தந்தை காஸ்யபருக்கும் மகனாகப் பிறக்கிறார். இயல்பிலேயே குள்ள உருவம். உபநயனம் முடிந்து, தலையில் அரைக்குடுமி, மார்பில் பூணூல், கையில் சிறு குடை, ஒரு கமண்டலம் ஆகியவற்றுடன் கிளம்புகிறார்.

எங்கே கிளம்புகிறார்?

மகாபலி ஒரு மாபெரும் யாகத்தைச் செய்துகொண்டிருக்கிறான். வாமனர் நேராக அங்கே போகிறார். யாகம் நடக்கும் இடத்தில் பிராமணனுக்கு மரியாதை செய்வது வழக்கம். அந்த முறைப்படி, மகாபலி, வாமனரை அழைத்து, கால் கழுவி, மரியாதை செய்வித்து, என்ன வேண்டுமோ அதை அவருக்குத் தருவதாகச் சொல்கிறான். மூன்றடி மண் போதும் என்கிறார் வாமனர்.

அந்தக் கட்டத்தில் சுக்கிராச்சாரியாருக்குப் புரிந்துவிடுகிறது, வந்திருப்பது சாதாரண ஆள் இல்லை என்பது. என்ன கபட நாடகம் என்பது புரியவில்லை. எனவே மகாபலியைத் தனியே அழைத்து, எதையும் கொடுக்காதே என்று எச்சரிக்கிறார். ஆனால் ஏற்க மறுக்கிறான் மகாபலி. தன் கையில் உள்ள கமண்டலத்திலிருந்து நீரை வார்த்து, தருவதாகச் சத்தியம் செய்ய மகாபலி முனையும்போது சுக்கிராச்சாரியர் வண்டாக மாறி கமண்டல ஓட்டையை அடைத்துக்கொள்கிறார். வாமனர் தன் குடையிலிருந்து ஒரு கம்பியை எடுத்து, ஓட்டையைக் குத்த நீர் வருகிறது. சுக்கிராச்சாரியாருக்கு ஒரு கண்ணில் பார்வையும் போய்விடுகிறது.

மூன்றடி மண் தருகிறேன் என்று மகாபலி வாக்குக் கொடுத்ததும், வாமனர் விசுவரூபம் எடுக்கிறார். ஓங்கி உயர்கிறார். மகாபலிக்கும் சுற்றி உள்ள அசுரர்களுக்கும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை; திகைத்து நிற்கிறார்கள்.

ஓரடியால் பூமியை அளந்து, இரண்டாவது அடியால் ஆகாயத்தை அளந்து, மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்கிறார், திரிவிக்கிரமனாக உலகளந்த விஷ்ணு. அன்று ஞாலம் அளந்த பிரானின் மூன்றாவது அடியைத் தன் தலைமேல் வைத்துக்கொள்ளச் சொல்லி, கொடுத்த வாக்கைக் காக்கிறான் மகாபலி. மூவுலகும் ஈரடியால் அளந்த திரிவிக்கிரமன், தன் மூன்றாவது அடியால் மகாபலியை அழுத்த, பாதாள லோகத்துக்கு அனுப்பப்படுகிறான் மகாபலி.

Trivikrama Panel, Varaha Mandapam, Mamallapuram

வராக மண்டபச் சிற்பத் தொகுதியைப் பாருங்கள். பூமியில் ஒரு கால் பதிந்து நிற்க, சமநிலை மாறாது நிற்கிறார் விஷ்ணு. அவரது இடது கால் உயர்ந்து, உயர்ந்து அவரது தோளையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. எத்திசையில் அந்தக் கால் செல்கிறது என்பதைக் காண்பிக்கிறது எட்டு கைகளில் ஒரு இடது கை. பிற மூன்று இடது கைகளில் ஒன்றில் வில், ஒன்றில் கேடயம், ஒன்றில் சங்கு. வலது கைகளில் ஒன்றில் உருவிய வாள், ஒன்றில் கதை, ஒன்றில் சக்கரம். நான்காவது வலது கை வானையே தாங்கிப் பிடிப்பதுபோல உள்ளது.

தரையில் மகாபலியும் அரக்கர்களும் நடப்பது தெரியாமல் திகைத்தபடி உள்ளது தெரிகிறது. ஒரு அசுரன் பயத்தில் வாளை உருவ, கைப்பிடியில் கையை வைத்துள்ளான்.

இவர்களுக்கு மேலே, திரிவிக்கிரமனின் இரு பக்கமும் தலைக்குப்பின் வட்டம் உள்ள இரு பறக்கும் வானவர்கள். அவர்கள்தான் சூரியனும் சந்திரனும். ஆக திரிவிக்கிரமனின் தலை சூரிய சந்திரர்களுக்கும் மேலே, நீள் விசும்பில் எங்கோ, எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. சூரிய சந்திரர்கள் அருகே தலைகீழாகத் தொங்கியபடி, அல்லது விழுந்தபடி ஒருவன்.

இது திரிசங்குவோ என்கிறார்கள் சிலர். ஆனால் நமுசி என்ற அரக்கன் என்கிறார்கள் சிலர். மகாபலியின் யாகம் நடக்கும் இடத்துக்குள் வாமனர் நுழையும்போது, ‘இந்த ஆசாமி பிரச்னைக்குரியவர்’ என்று முதலில் கண்டுகொண்டது நமுசிதான் என்றும் அதனால் அவனை விட்டார் ஓர் உதை திரிவிக்கிரமர் என்றும் கதை.

சூரிய, சந்திரர்களுக்கும் மேல் தளத்தில் தாமரையில் அமர்ந்துள்ள பிரம்மா விஷ்ணுவின் ஓங்கி உயரும் பாதத்தை கமண்டல நீரினால் கழுவி பூஜிக்கிறார். சுட்டிக்காட்டும் திரிவிக்கிரமனின் விரலை மற்றொரு கையால் பிரம்மா பிடித்துள்ளார். பிரம்மாவின் அருகே, குதிரை முக தும்புரு மிருதங்கத்தில் இசைக்கிறார். தும்புரு தேவலோக கந்தர்வர்களில் ஒருவர். இசை விற்பன்னர். மறுபக்கம், சிவன் அனைத்தையும் பார்த்தபடி இருக்கிறார்.

திரிவிக்கிரமனின் இரண்டு காதுகளில் இருவேறு குண்டலங்கள் - பல்லவச் சிற்பங்கள் அனைத்திலும் இதனைப் பார்க்கலாம். விஷ்ணுவுக்கே உரித்தான் கச்சம், அழகான கிரீடம், கிரீடத்தில் மையத்தில் ஒரே ஒரு கல் பதிக்கப்பட்டுள்ளது, வஸ்த்ர யஞோபவீதம், கழுத்தில் எளிமையான ஒரே ஒரு ஹாரம்.

நடுவில் ஒரு நாயகன், சுற்றி 10 பிற உருவங்கள் என்றிருந்தாலும் வேண்டிய அளவு white space இந்த தொகுப்பில் உள்ளது. நடுவில் இருப்பவர் மட்டும் அசையாது இருக்கிறார். சுற்றி உள்ள அனைவரிடமும் இயக்கம். ஒருவர் மிருதங்கம் வாசிக்கிறார், இருவர் பூஜிக்கிறார், இருவர் வானில் ஒளிவீசிப் பறக்கிறார்கள், ஒருவர் உதைத்த உதையில் பந்தாகப் பறக்கிறார், நால்வர் கையைக் காலை அசைத்தபடி உள்ளனர். சிவனிடம் அதிக இயக்கம் இல்லை.

***

இரண்டு நாள்களுக்கு முன் திருச்சி, திருவெள்ளறை, நாமக்கல், நார்த்தாமலை, மலையடிப்பட்டி, குன்றாண்டார்கோவில் ஆகிய இடங்களில் உள்ள குடைவரைக் கோயில்களைப் பார்த்துவிட்டு வந்தேன்.

நாமக்கல்லில் இரு குகைக்கோயில்கள் உள்ளன. நரசிம்மர் குகை, அனந்தசயனர் குகை. இந்த இரு குகைகளிலும் சுவர் புடைப்புச் சிற்பங்களில் திரிவிக்கிரமனை வடித்துள்ளனர். இரண்டிலுமே, கதை இன்னுமும் விரிவாக உள்ளது. குள்ள வாமனர் யாசகம் கேட்பதையும் மகாபலி கமண்டலத்திலிருந்து நீர் வார்ப்பதையும் சேர்த்தே வடித்துள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள சிற்பிக்கு அதற்கான இடம் கிடைக்கவில்லை தெரிகிறது.

நாமக்கல் பற்றி தனியே எழுதவேண்டும். நரசிம்மர் குகையில் அற்புதமான நான்கு புடைப்புச் சிற்பத் தொகுப்புகள்: விஷ்ணு வைகுண்டத்தில் இருக்கும் காட்சி, நரசிம்மம் இரணியனைப் பிளக்கும் காட்சி, வராகம் பூமிதேவியைத் தூக்கிச் செல்லும் காட்சி, திரிவிக்கிரமன் ஓங்கி உலகை அளக்கும் காட்சி. இங்கே திரிவிக்கிரமன் இடக்காலால் ஆகாசத்தை அளக்கிறார்.

அனந்தசயனக் குகையில் திரிவிக்கிரமன் வலக்காலால் ஆகாசத்தை அளக்கிறார். அங்குள்ள அனந்தசயனர் வழிபாட்டில் உள்ளதால் சொல்லவொண்ணாக் கொடுமையை அனுபவிக்கிறார். நாமக்கல்லில் உள்ள அனைத்துச் சிற்பங்கள் மேலும் வழுவழுவென்று எண்ணெய்க் கரி கலவையைப் பூசி, அடியில் உள்ள கிரானைட் கல் தெரியாத அளவுக்கு ஆக்கி, அதன்மேல் மட்டமான வெள்ளை பெயிண்டால் கன்னாபின்னாவென்று நாமங்களை வரைந்து, அதற்கிடையே சிகப்பு பெயிண்டால் ஸ்ரீசூர்ணத்தைக் கிறுக்கி, இரண்டு வயதுக் குழந்தை கலர் கலர் கிரேயானை எடுத்து தி லாஸ்ட் சப்பர் ஓவியத்தின் இடையே கிறுக்கியதுபோலச் செய்திருக்கிறார்கள். வழிபடும் மூர்த்தி என்பதால் அந்த அனந்தசயனருக்கு அழுக்கு வஸ்திரம் சார்த்தி, ஆங்கங்கே கிரீடம் அது இது என்று அசிங்கமான அணிகலன்களையும் அணிவித்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

ஒரிஜினல் சிற்பி கல்லில் வடித்த கிரீடம், கச்சத்தின் அழகையா இந்த அழுக்கு ஆடைகளும் அணிகளும் மீறிவிடப்போகின்றன? முட்டாள்கள்!

(தொடரும்)

விஜயின் பதிவில் கல்லிலே கலைவண்ணம் காணும் பல பதிவுகள் உள்ளன. கட்டாயமாகப் படியுங்கள்.

2 comments:

  1. mahuvishnu VIN PARAKRAMATHAI VARNIKKA VAARTHAIGALE KIDAYATHU, MIGAVUM AZHAGAAGA PALA vishayangalai varnithu irukireergal, mikka nandri, waiting for next episode, just now visiting your blog, i doesn't know ur email id si

    ReplyDelete
  2. sir, im subhashree, my email id is subhakannan@ymail.com, i doesn't want to post my comments under anonymous, so i diplayed my name, your work are great, just started reading,

    ReplyDelete