Tuesday, June 29, 2010

தன்னார்வலர்கள்



தமிழ் இணைய மாநாடு சிறப்பாக நடைபெற உதவியவர்களில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர்கள் தன்னார்வலர்கள். கோவை பாரதியார் பல்கலைக்கழகம், PSGR கிருஷ்ணம்மாள் கலைக் கல்லூரி மற்றும் பிற கல்லூரிகளிலிருந்து வந்திருந்தனர். மொத்தம் மூன்று குழுக்களாக இவர்கள் இருந்தனர். எல்லாவித எடுபிடி வேலைகளுக்கும் என்று ஒரு குழு. கட்டுரைகள் படைக்கப்படும் 5 அரங்கிலும் உள்ளே இருந்து உதவி செய்ய ஒரு குழு. மேடையில் ஏறி ஒவ்வோர் அமர்வின் தலைவரையும் அறிமுகப்படுத்த ஒரு குழு. (மேலே உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது அரங்குகளில் உள்ளே இருந்து உழைத்த குழு.)

ஒவ்வொரு நாள் காலையும் என் முதல் வேலை, அந்த நாள் அன்று ஒவ்வொரு அரங்கிலும் என்னென்ன அமர்வுகள் உள்ளன என்ற பட்டியலை ஒவ்வொரு அரங்குக்குமான தன்னார்வலர்கள் கையில் கொடுப்பது. பின் அந்த அரங்கில் தலைமை தாங்க உள்ளோர் பற்றிய குறிப்புகளைக் கொடுப்பது. சிறப்பு நிகழ்ச்சி என்றால் அது நிகழும்போது அறிவிப்பாளர் என்ன பேசவேண்டும் என்பதை விளக்கமாக வரி வரியாக எழுதிக்கொடுத்து, அவர்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டு, மாற்றங்களைத் தெரிவிப்பது.



பிற தன்னார்வலர்கள் பங்கேற்போருக்குப் பல விதங்களிலும் உதவி புரிந்தனர். உதவி கேட்போருக்கு உதவி செய்வது, ஏதேனும் ஆவணங்களை நகலெடுக்கக் கேட்டால் செய்துதருவது, பங்கேற்பாளர்களுக்குத் தரவேண்டிய பொருள்களை விநியோகிப்பது என்று பல வேலைகள். இவர்களில் சிலர் சுடுசொல்லால் தாக்கப்பட்டனர். பங்கேற்பவர் ஒருவரது கடுமையான வார்த்தைகளைத் தாளமாட்டாது ஒரு பெண் ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டார். அவரை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

மேடையில் பேசிய ஒரு பெண்ணின் குரல், ஏற்ற இறக்கம், உச்சரிப்பின் தன்மை ஆகியவை மிக அருமையாக இருந்தன. இந்த மாணவர்கள் அனைவருமே முழு ஆர்வத்துடன் உழைத்தனர். நாம் சொல்லித் தருவதைச் சட்டெனப் புரிந்துகொண்டு, செயல்படுத்தினர். ஏனோ தானோவென்று நடந்துகொள்ளவில்லை. பொறுப்புடன் செயல்பட்டனர்.

நம் எதிர்கால மனித வளம் இவர்கள். இவர்களுடன் சேர்ந்து வேலை செய்ததில் எனக்கு முழு மகிழ்ச்சி.

[படங்கள்: தேவராஜன்]

நோய்க்கூறு மனநிலை

கையேந்திக் கேட்பது என்பது ஒரு நோய்க்கூறு மனநிலை. அதுவும் அந்தப் பொருளால் தனக்கு ஏதேனும் பயன் உள்ளதா என்பதைப் பற்றி துளியும் புரிந்துகொள்ளாது, வேண்டும், வேண்டும், கொடு, கொடு என்று பறப்பது நோய்க்கூறு மனநிலை. தனக்கு வேண்டியதைக் கொடுத்துவிட்டார்கள் என்றபின்னும் மேலும் மேலும் கொடுங்கள் (என் மாமனுக்கு ஒண்ணு, என் மச்சானுக்கு ஒண்ணு, என் கூட்டாளிக்கு ஒண்ணு) என்று கையேந்துவதும் நோய்க்கூறு மனநிலைதான். கீழே வைத்துள்ள பொருள்களை உரியவர் அனுமதி இன்றி எடுத்துச் செல்வது நோய்க்கூறு மனநிலை. யாரும் இல்லாத நிலையில் பொருளைத் திருடுவது அதீத நோய்க்கூறு மனநிலை.

கோவை செம்மொழி மாநாட்டில் இவை அனைத்தையும் பார்த்தேன்.

இணையக் கண்காட்சியில் நாங்கள் வாடகைக்கு எடுத்து வைத்திருந்த இரண்டு கணினிகளில் ஒன்றைக் களவாடி விட்டார்கள். இரவு கண்காட்சி முடிந்து, அடுத்த நாள் காலையில் வண்டியில் கட்டி எடுத்துப்போவதற்குமுன்னதாகவே களவாடிவிட்டார்கள். NHM Writer, NHM Converter அடங்கிய 3,000 சிடிக்களை வைத்திருந்தோம். அதில் 1,000-ஐ விநியோகித்திருந்தோம். காலையில் பார்த்தால் 700-தான் மீதம். சுமார் 1,300 சிடிக்கள் அடங்கிய பெட்டிகளை எடுத்துப்போய்விட்டார்கள். அதனை ஆளுக்கு ஒன்றாக கணினி வைத்திருப்போரிடம் சேர்த்தார்கள் என்றால் பயன் கொண்டதாக இருக்கும்.

தமிழ் இணைய மாநாட்டு வளாகத்தில் இந்தியத் தமிழர் முதல் வெளிநாட்டுத் தமிழர் வரை, படித்த பேராசிரியர்கள் முதல் பாமர துப்புறவுத் தொழிலாளர் முதல், கையேந்தி கையேந்தி, இலவசமாக அதைக் கொடு, இதைக் கொடு என்று பறக்காவட்டியாகப் பறந்து அலைந்ததைப் பார்க்க வெட்கமாக இருந்தது. செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த பலர் அடித்துப் பிடித்துக்கொண்டு கிடைத்ததையெல்லாம் சேகரிக்க விரும்பியதன் பலனாக, தமிழ் இணைய மாநாட்டுக்கு வந்தவர்களுக்குக் கொடுக்க என்று வைத்திருந்த மாநாட்டுக் கட்டுரைகள், சிடி அடங்கிய பைகளை பாதுகாக்கவேண்டியிருந்தது. இதனால் தமிழ் இணைய மாநாட்டுப் பேராளர்களுக்குக் கடும் கோபம். பெயர்களைப் பரிசீலித்து, கையெழுத்து போட்டு வாங்குங்கள் என்றால், பலர் பொய்க் கையெழுத்துகளைப் போட்டு பைகளைத் திருடிச் சென்றனர்.

யாரோ புண்ணியவான், Coimbatore என்ற பெயரில் ஒரு Coffee-Table வண்ணப் புத்தகத்தை அச்சிட்டு விநியோகிக்கச் சொல்லிக் கொடுத்திருந்தார். தமிழ் இணைய மாநாட்டுப் பேராளர்களுக்காக சுமார் 450 பிரதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால் வந்திருந்தவர்களுக்குக் கொடுக்கும் முன்னால் அங்கும் இங்கும் செல்பவர்கள் உள்ளே நுழைந்து ஆளுக்கு இரண்டு, மூன்று என்று அள்ளிக்கொண்டு சென்றனர். ‘கொங்கு வரலாறு’ என்ற பெயரில் யாரோ அடித்துத் தந்த புத்தகத்துக்கும் இந்தக் கதிதான். தைரியமாக கண் பார்வைக்கு முன்னால் தெனாவட்டாக வந்து அள்ளி எடுத்துச் செல்பவர்கள். அங்கும் இங்கும் ஓரப்பார்வை பார்த்து, சடாரெனக் குனிந்து அள்ளிக்கொண்டு செல்பவர்கள். இரவு யாரும் இல்லாதபோது திருடிச் செல்பவர்கள். பத்திரிகைக்காரர்களுக்கு என்று நான் எடுத்து வைத்திருந்த புத்தகங்களும் மறுநாள் காலை களவாடப்பட்டிருந்தன.

கொடுக்கப்பட்டிருந்த பைகளில் கண்ட கண்ட பொருள்களையும் வைத்து, முறைகேடாகப் பயன்படுத்தியதில், பை வார் பிய்ந்துபோக, அவற்றை மாற்றித்தாருங்கள் என்று வந்தவர்கள் பலர். எப்படி மாற்றித்தர முடியும் என்று சிறிதேனும் யோசித்தார்களா? இது என்ன, விட்கோவில் காசு கொடுத்து வாங்கிய பொருளா, மாற்றித்தர?

ஊரில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு நான்கு பைகள், மெமெண்டோக்கள் வேண்டும் என்று சொல்லிவைத்து, அதிகாரம் கொண்டோரிடமிருந்து வாங்கி எடுத்துக்கொண்டுபோன கண்ணியமான பதவிகளில் இருப்போர், பத்திரிகைக்காரர்கள். அழகிரி சொன்னாரு, கனிமொழி சொன்னாங்க, ஸ்டாலின் பெண்டாட்டி கேட்டாங்க என்று 15, 15 பைகளாக வந்து எடுத்துச் சென்ற போலீஸ்காரர்கள்.

எண்ணற்ற சால்வைகள், எண்ணற்ற மெமண்டோக்கள் (கண்ணாடிப் பெட்டகத்துக்குள் அடைக்கப்பட்ட, செப்பில் வெள்ளி(?)யால் அடிக்கப்பட்ட திருவள்ளுவர்கள்) என அனைத்தும் ஆங்காங்கு அவரவர்களால் முடிந்தவரை அள்ளப்பட்டன. வைத்துக்கொண்டு என்ன சாதனை செய்துவிடப் போகிறார்கள் என்று புரியவில்லை.

செம்மொழி அந்தஸ்து தமிழுக்கு வருகிறதோ இல்லையோ, பிச்சைக்காரன் அந்தஸ்து தமிழனுக்கு என்றுமே இருக்கும்.

[இந்த ரகளைகள் அனைத்தையும் நேரில் கண்ட காரணத்தால் ஒரு துண்டு சோவனீர்கூட எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதில் முடிவாக இருந்து, எனக்குக் கிடைத்தவற்றையெல்லாம் தானம் தந்துவிட்டேன்.]

Sunday, June 27, 2010

யூனிகோட் பற்றிய தமிழக அரசின் ஆணை

இன்று தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழா நடந்தது . அப்போது பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலர் பி.டபிள்யூ.சி.டேவிதார், இ.ஆ.ப, யூனிகோட் பற்றிய தமிழக அரசின் ஆணையை அறிவித்தார். இந்த ஆணை சென்ற வாரம் சனிக்கிழமை அன்று தமிழக முதல்வருடைய கையொப்பத்தைப் பெற்றுள்ளது. அதன் சுருக்கம்:

1. இனி தமிழக அரசு நிறுவனங்கள், அதன் நிதி உதவி பெறும் அமைப்புகள் ஆகியவை TAM, TAB மற்றும் பிற பிரத்யேக 8-பிட் குறியீடுகளிலிருந்து 16-பிட் தமிழ் யூனிகோடுக்கு மாற வேண்டும்.

2. 16 பிட் தமிழ் யூனிகோட் மட்டுமே ஒரே அங்கீகரிக்கப்பட்ட எழுத்துக் குறியீடாக இருக்கும்.

3. எங்கெல்லாம் தமிழ் யூனிகோட் வேலை செய்யவில்லையோ அல்லது பிரச்னைக்குரியதாக உள்ளதோ, அந்த இடங்களில் மட்டும் TACE-16 குறியீடு மட்டுமே ஒரு மாற்றுக் குறியீடாகப் பயன்படுத்தப்படலாம்.

ஆக, இனி தமிழ் யூனிகோட், TACE-16 ஆகிய இரண்டு மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட குறியீடுகள். அதிலும், TACE-16 என்பதை, தமிழ் யூனிகோட் உடையும் அல்லது பாதிக்கப்படும் இடங்களில் மட்டுமே பயன்படுத்தலாம்.

தமிழ் இணைய மாநாடு - ஆய்வுகள்

இன்று இறுதி நாள். பொதுவாக ‘பின் அறையில்’ இருந்தபடி நிகழ்ச்சிகள் நடக்க உதவிவந்ததால் அரங்கங்களில் நான் அதிகமாகப் பங்கேற்கவில்லை. வாசு அரங்கநாதன் இல்லாத நிலை ஏற்பட்டால் அப்போது அவருடைய இடத்தில் இருந்து பேச்சாளர்களை அறிமுகம் செய்து கலந்துரையாடலில் ஈடுபடுத்தினேன். அவ்வளவுதான். அந்த அமர்வுகளைப் பற்றி பின்னர் எழுதுகிறேன்.

தமிழ்க் கணினி ஆராய்ச்சியில் எனக்கு இன்றைக்கு ஆர்வம் அதிகமாக இருப்பது ‘உரையிலிருந்து பேச்சுக்கு’ (Text-to-Speech), கையெழுத்தை உணர்தல் (Handwriting Recognition), சொல் பகுப்பான்கள் (Morphological segmenters) ஆகியவை. தமிழில் இந்தத் துறைகளில் ஆராய்ச்சிகள் ஆரம்பித்து ஓரளவுக்கு முன்னேறியிருப்பது மிகவும் மகிழ்ச்சியானது. அத்துடன் ‘உரையிலிருந்து முகபாவனை’ (மதன் கார்கி + அவருடைய குழுவினர்) சுவாரசியம் தரும் ஓர் ஆய்வு. அடுத்த சில ஆண்டுகளில் நான் இவற்றில் ஏதோ ஒரு வழியில் ஈடுபடுவேன்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் தெய்வசுந்தரத்தின் கணினி மொழியியல் துறையினர் செய்யும் ஆய்வுகள் மிகவும் ஆசுவாசம் அளிக்கின்றன. அவர்களது முடிவுகளை கணினி வல்லுனர்கள் நேரடியாகப் பயன்படுத்திக்கொள்ளமுடியும். அதேபோல அண்ணா பல்கலைக்கழகம், சென்னை (கிண்டி பொறியியல் கல்லூரி) குழுவினர் செய்யும் வேலைகளும் நிறைவை அளிக்கின்றன. இந்த இரு குழுவினருடனும் சேர்ந்து உறவாடினால் புதிய கருத்துகள் நிறையத் தோன்றும்.

உரையிலிருந்து பேச்சுக்குக் கொண்டுவரும் மென்பொருள்களை இணையத்தில் பல இடங்களில் அற்புதமாகப் பயன்படுத்தலாம். பார்வை குறைவு கொண்டோர், வயதானவர்கள், தமிழ் படிக்கத் தெரியாத, ஆனால் புரிந்துகொள்ளக்கூடியவர்கள், நேரப் பற்றாக்குறை உள்ளவர்கள், தமிழ் கற்றுக்கொள்பவர்கள், குழந்தைகள் என்று பலருக்கும் உபயோகமாக இருக்கும்.

இன்று அடோபி பி.டி.எஃப் கோப்புகளைப் படிக்கும் ரீடர் மென்பொருள், ஆங்கில உரைகளைத் தானாகப் படிக்கிறது. அதேபோல தமிழ் உரைகளைப் படிக்க வழி வேண்டும். அப்படி ஏற்பட்டால் முழுப் புத்தகங்களை கணினியைப் படிக்கவைத்துக் கேட்கமுடியும்.

கையெழுத்தை உணர்தல் தேவையில்லை என்றே பலர் நினைக்கலாம். விசைப்பலகை கொண்டு வேகமாக இன்று பலராலும் எழுதிவிட முடிகிறது. ஆனாலும் ஒரு மாநாட்டில் உட்கார்ந்திருக்கும்போதோ, வகுப்பறையிலோ, ஒரு தொழில் சந்திப்பின்போதோ, கையால் எழுதித்தான் குறிப்புகளை எடுத்துக்கொள்கிறோம். மேலும் கைபேசிகள் போன்ற கைக்கருவிகளில் எழுத்தாணி கொண்டு எழுதமுடியும். அப்படி எழுதும் குறிப்புகள் படமாக இல்லாமல், எழுத்தாக உணரப்படவேண்டும். அப்போதுதான் அதிகப் பயன். iphone, ipad போன்ற தொடுதிரைக் கருவிகளில் ஆங்கில மென்பொருள் விசைப்பலகை மேலெழும்பி வரும். அந்தக் கருவிகளில் அவ்வாறே மேலெழும்பும் தமிழ் விசைப்பலகை இருத்தல் வேண்டும். அது தமிழ்99 விசைப்பலகை வடிவில் இருக்கவேண்டுமா அல்லது அதிலிருந்து சற்றே மாறுபட்டதாக இருக்கவேண்டுமா என்பது மற்றொரு கேள்வி.

கணினி மொழியியல் புரிதல் மிகவும் அவசியமானது. பேரா. தெய்வசுந்தரம் இதனை மிக அழகாக விளக்கினார். ஆங்கிலத்தில் ஒரு வினைச்சொல்லுக்கு ஐந்து வடிவங்கள்தான் இருக்கும். உதாரணமாக 'go' என்பது, go, went, gone, going, goes என்ற ஐந்து வடிவங்களில்தான் மாற்றம் அடையும். ஆனால் தமிழ் ஒரு agglutinative மொழி என்பதால் ஒரு வினைச்சொல் கிட்டத்தட்ட 8,000 வடிவங்களாக மாற்றம் பெறும். சுமார் 5,000 வினைமுற்று, சுமார் 3,000 வினையெச்சம். ‘போ’ என்பது போனான், போகிறான், போவான், போனாள், போகிறாள், போவாள், போனார், போகிறார், போய்க்கொண்டிருக்கிறார்களா, போய்விட்டார்கள்... போனாரோ... போன, போகிற, போகும்... என்று பல. ஆங்கிலத்தில் 5,000 வினைச்சொற்கள் கொண்ட சொற்பிழை திருத்தி வேண்டும் என்றால், 5x5,000 = 25,000 வினை வடிவங்களை தரவுத்தளம் ஒன்றில் ஏற்றி, ஒப்பிட்டால் போதும். ஆனால் தமிழில் 5,000 x 8,000 = 40,000,000 - அதாவது 4 கோடி சொற்களை தரவுத்தளத்தில் ஏற்றவேண்டும். இது செயல்படுத்தக்கூடிய காரியமே அல்ல. கணினியால் இயங்கவே முடியாது.

எந்த ஒரு கணினிப் பிரச்னைக்கும் மூன்றுவிதமான தீர்வுகள் சாத்தியம். ஒன்று empirical முறை. தரவுத்தளத்தில் அனைத்துச் சொற்களையும் சேர்த்து ஒவ்வொன்றாக ஒப்பிடுவது இந்த முறை. அடுத்த rules based. எந்த விதிகளைக் கொண்டு தமிழ் மொழி வினை வடிவங்களை உருவாக்குகிறது என்பதை நன்கு தெரிந்துகொண்டு, கணினிக்குப் புரியும் வழியில் இந்த விதிகளைத் தருவது. மூன்றாவது முறை neural network முறை. இதில் கணினி, ஒரு புரிதலுடன் தொழிலை ஆரம்பிக்கும். ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் தானாக மேற்கொண்டு புரிந்துகொண்டு, தன் அறிவை விசாலப்படுத்திக்கொள்ளும். மொழிமாற்றல் கருவிகளை இவ்வாறுதான் உருவாக்கப் பலர் முனைந்து வருகிறார்கள். மைக்ரோசாஃப்டின் குமரன் தனது பேச்சின்போது இதனை அழகாகக் குறிப்பிட்டார். “ஆங்கிலத்திலிருந்து ஃபிரெஞ்சுக்கும் ஃபிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிமாற்ற, ஒரு மில்லியன் வாக்கியங்கள் போதும். ஆனால் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிமாற்ற குறைந்தது நான்கு மில்லியன் வாக்கியங்களாவது வேண்டும்” என்றார்.
அத்துடன் புதிய புதிய வாக்கியங்கள் வரும்போது மேலும் மேலும் தனது மொழிமாற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ளும்.

இந்தத் துறைகளுடன் சேர்த்து, உரையிலிருந்து முகபாவம் கொண்டுவரும் வீடியோ மென்பொருள் துறையும் முக்கியமானது. ஏற்கெனவே ஆங்கிலத்தில் இதுபோன்ற சிலவற்றை பல ஆண்டுகளுக்கு முன்பே பார்த்திருக்கிறேன். தமிழில் இதைப்போல வந்தால் பிரமாதமாக இருக்கும். உங்களுக்கான பிரத்யேக செய்தி வாசிப்பாளரை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அவருடைய குரலின் குழைவையும் இனிமையையும் கடுமையையும் நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதற்குமேல் உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.

இவைபற்றி வரும் நாள்களில் மேலும் எழுதுகிறேன்.

Thursday, June 24, 2010

கோவை தமிழ் இணைய மாநாடு 2010

கோவை நல்ல ஊர். இங்கு மக்கள் மிகவும் நல்லவர்களாக இருக்கிறார்கள். செம்மொழி மாநாடு போன்ற விழா நடந்தால் கூட்டம் கூட்டமாக அதனைக் காண வருகிறார்கள்.

திமுக நல்ல கட்சி. அதன் தொண்டர்கள், தலைவரின் அறைகூவலைக் கேட்டு, தமிழகம் எங்கிருந்தும் கிளம்பி கோவை வந்துள்ளார்கள். ஒரு நாள் தமாஷா முடிவடைந்ததும் அனைவரும் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் தமிழ் இணைய மாநாடும் நடைபெற ஆரம்பித்துள்ளது.

ஐடி கார்ட், தங்கும் அறை, போக்குவரத்து வசதி, டாய்லட் வசதி என்று பலவற்றிலும் பலருக்குக் குறைகள் உள்ளன. சில குறைகள் களையப்பட்டு, பல குறைகள் மாற்றமே இல்லாமல் அப்படியே தொடர்கின்றன.

கோபம், வருத்தம் அனைத்தையும் மீறி, பங்கேற்போர் குடும்பத்தோடு வந்து தமிழக அரசின் விருந்தோம்பலை மெச்சுகிறார்கள்.

இணையத்தில் - முக்கியமாக ட்விட்டரில் - செம்மொழி மாநாட்டைத் திட்டுகிறார்கள். இணைய மாநாட்டைப் பற்றி பொதுவாக எப்போதுமே யாருக்குமே நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை.

நீங்கள் தமிழ் இணைய மாநாட்டுக்கு வந்தீர்கள் என்றால் என்னைச் சந்திக்கலாம். ஓரிரு நிமிடங்கள் நாம் பேசவும் செய்யலாம்.

Thursday, June 10, 2010

போபால் தீர்ப்பு

போபால் விஷவாயுக் கசிவு, 26 வருடங்களுக்குப் பிறகு அளிக்கப்பட்டுள்ள முதல் தீர்ப்பு இவையெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

இதில் அப்போதைய யூனியன் கார்பைட் இந்தியா சேர்மன் கேசுப் மஹீந்திரா முதற்கொண்டு 7 பேருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை அளித்துள்ளது மாவட்ட நீதிமன்றம்.

ஒரு கம்பெனி என்ற அமைப்பில் பங்குதாரர்கள் (Shareholders), இயக்குனர்கள் (Directors), நிர்வாகம் (Management) என்று மூன்று தளங்கள் உள்ளன. பங்குதாரர்கள்தான் பணம் போட்டு நிறுவனத்தை ஆரம்பிப்பவர்கள். கம்பெனியாக இந்தியாவில் நிறுவப்பட்டால் (கம்பெனீஸ் ஆக்ட்டின்படி), அந்த நிறுவனத்தை வழிநடத்த என்று சில இயக்குனர்கள் நியமிக்கப்படுவார்கள். இயக்குனர்கள் இரண்டுவகை. எக்சிகியூட்டிவ் டைரெக்டர்ஸ் - அதாவது செயல் இயக்குனர்கள். மற்றொருவகை நான்-எக்சிகியூட்டிவ் இயக்குனர்கள். எக்சிகியூட்டிவ் இயக்குனர்கள் தினசரி நிர்வாகத்தில் நேரடியாக ஈடுபடுபவர்கள். மற்ற இயக்குனர்கள் தினம் தினம் நடக்கும் அலுவலக வேலைகளில் எந்தவகையிலும் ஈடுபடாதவர்கள். போர்ட் மீட்டிங் எனப்படும் இயக்குனர் சந்திப்பில் மட்டும் கலந்துகொள்பவர்கள். அடுத்ததாக நிர்வாகத்தினர். மேல்மட்ட நிர்வாகத்தினர்தான் தினம் தினம் கம்பெனியை நடத்துபவர்கள். இவர்களில் ஓரிருவர் இயக்குனர்களாகவும் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான நிர்வாகத்தினர் இயக்குனர்கள் கிடையாது.

பிரைவேட் லிமிடெட் கம்பெனி என்றால் இரண்டு இயக்குனர்கள் போதும். வெளியார் யாரையும் இயக்குனர்கள் ஆக்கவேண்டியதில்லை. அப்பா, பிள்ளை அல்லது கணவன், மனைவி என்று குடும்பத்தில் இரண்டு பேரை இயக்குனர்கள் ஆக்கி கம்பெனியை ஆரம்பித்துவிடலாம். அதுபோன்ற நேரங்களில் பொதுவாக பங்குதாரர், இயக்குனர்கள், கம்பெனியின் நிர்வாகிகள் எல்லாமே ஒரு குடும்பத்துக்குள்ளேயே போய்விடும். ஆனால் பப்ளிக் லிமிடெட் கம்பெனிகளின் நிலை வேறு. அங்கு இண்டிபெண்டெண்ட் டைரெக்டர்கள் தேவை. கம்பெனிச் சட்டப்படி, அந்நியர்கள் சிலரை நிறுவன இயக்குனர்களாக ஆக்கவேண்டும். அப்படி யூனியன் கார்பைட் இந்தியாவின் இயக்குனராக வந்தவர்தான் கேசுப் மஹீந்திரா. இப்படி நான்-எக்சிகியூட்டிவ் இயக்குனராக இருந்த கேசுப் மஹீந்திரா, இயக்குனர் குழுமத்துக்குத் தலைவராக, நிறுவன சேர்மனாகவும் இருந்தார். இவர் மஹீந்திரா அண்ட் மஹீந்திரா குழுமத்தை ஆரம்பித்தவர். இந்தக் குழுமம் இன்று டிராக்டர்கள், கார்கள் உற்பத்தியில் முன்னணியில் இருப்பது. நொந்துபோன சத்யம் கம்ப்யூட்டர் குழுமத்தை விலைக்கு வாங்கி மஹீந்திரா சத்யம் என்று நடத்துவது.

ஆண்டுக்கு நான்கு முறை (அல்லது ஆறு முறை) இயக்குனர்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருப்பார் கேசுப் மஹீந்திரா. நிறுவன லாபத்தில் அவருக்கு எந்தப் பங்கும் இருந்திருக்காது. போர்ட் மீட்டிங்கில் கலந்துகொள்ள போகவரச் செலவு கொடுத்து, ஒரு சந்திப்புக்கு இவ்வளவு என்று கொஞ்சம் பணம் கொடுத்திருப்பார்கள். அதற்காகவா அவரை ஜெயிலுக்கு அனுப்பவேண்டும்?

கம்பெனிச் சட்டப்படி, பொதுவாக ஒரு நிறுவனத்தின் குற்றங்களுக்கு அதன் இயக்குனர் குழுமம்தான் பொறுப்பு. பங்குதாரர்களுக்கு நேரடியான பொறுப்பு கிடையாது. அப்படிப் பார்த்தால் விஷவாயுச் சம்பவம் நடந்தபோது யூனியர் கார்பைட் (அமெரிக்கா) நிறுவனத்தின் சேர்மனும் மேனேஜிங் டைரெக்டருமாக இருந்த வாரன் ஆண்டர்சனுக்கு என்ன பொறுப்பு?

வாரன் ஆண்டர்சனை ஓடிப்போக விட்டுவிட்டார்கள் என்று பிலாக்காணம் படிக்கிறோம். விஷவாயுவைப் பரப்பு என்று அவர் எங்காவது சொன்னாரா?

***

உண்மையில் யார் மீதுதான் குற்றம்? வாரன் ஆண்டர்சன், கேசுப் மஹீந்திரா ஆகியோர் மீது குற்றமே இல்லை என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் உண்மையான குற்றவாளிகள் யார், அவர்களுக்கு என்ன தண்டனை என்பதை ஆராயாமல் ‘ஹை புரொஃபைல் ஆட்கள்’ என்ற காரணத்தாலேயே அவர்கள்மீது குற்றம் சாட்டுவது இந்தியக் குணம்.

கார்பாரில் என்ற பூச்சிக்கொல்லியைத் தயாரிக்க, மீதைல் ஐசோசயனேட் என்ற (விஷப்) பொருளைப் பயன்படுத்தாமல் வேறு சில வழிகளும் உள்ளன. ஆனால் அந்த வழிகள் அதிகச் செலவு பிடிப்பவை. அபாயம் வரக்கூடும் என்ற நிலையிலும் மீதைல் ஐசோசயனேட்டைத் தொடர்ந்து பயன்படுத்தியது யூனியன் கார்பைட் செய்த தவறு. இந்தத் தவறுக்கு யூனியன் கார்பைட் (அமெரிக்கா) காரணமா? அல்லது யூனியன் கார்பைட் (இந்தியா) காரணமா?

இதை அடுத்து, மாநில, மத்திய, நகராட்சி அமைப்புகளின் தொழிற்சாலைக் கண்காணிப்பாளர்கள் மீதும் நாம் குற்றம் சொல்லவேண்டும். விஷப் பொருள்கள், எரியக்கூடிய, வெடிக்கக்கூடிய பொருள்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் இருக்கவும் இந்தியாவில் குறைந்தபட்சம் 20 சட்டங்கள் உள்ளன. (The Indian Explosives Act, 1884, The Explosive Substances Act, 1908, The Destructive Insects and Pests Act, 1914, The Poisons Act, 1919, The Drugs and Cosmetics Act, 1940, The Factories Act, 1948, The Industries (Development & Regulation) Act, 1951, The Inflammable Substances Act, 1952, The Air (Prevention and Control of Pollution) Act, 1981 ஆகியவை ஒருசில. 1984-க்குப் பிறகு மேலும் பல சட்டங்கள் வந்துள்ளன.) இந்தச் சட்டங்களை எல்லாம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தாத அரசாங்கத்தின்மீது குற்றம் இல்லையா?

இந்தியர்கள் பாதுகாப்பு பற்றி சிறிதும் கவலைப்படுவதே இல்லை. சாலையைக் கடக்கும்போது, தெருவில் சர் புர்ரென்று வண்டிகளை ஓட்டிச் செல்லும்போது, வீட்டில் நெருப்பைக் கையாளும்போது என்று எங்கும் அந்த கவனக்குறைவு தெரிகிறது. யூனியன் கார்பைட் இந்தியாவின் போபால் ஆலையில் வேலை செய்த ஊழியர்களின் கவனக்குறைவுக்கு யாரைக் குறை சொல்வது?

இவை அனைத்தையும் தாண்டி யூனியன் கார்பைட் இந்தியா நிர்வாகிகள்மீது குற்றம் சாட்டியாகவேண்டும். ஆனால் அந்தக் குற்றம் சிறையில் அடைக்கக்கூடிய ஒன்றா?

நிறுவனங்களின் செயல்பாடுகளை சரியான வழியில் கொண்டுசெல்ல, முக்கியமான ஆயுதம் ஒன்று உள்ளது. அதுதான் கடுமையான அபராதம். இந்தியச் சட்டங்கள் எல்லாம் பல ஆண்டுகாலமாக மாற்றப்படாமல் தூசு படிந்து உள்ளவை. அதனால்தான் 2 ஆண்டுகாலச் சிறை + சில ஆயிரம் ரூபாய் அபராதம் என்றெல்லாம் உள்ளது. மாறாக அபராதம் பல லட்சங்கள் அல்லது சில கோடிகள் என்று ஆகிவிட்டால், நிறுவனங்கள் கொஞ்சம் கவனமாக இருக்கத் தொடங்கும். மோசமான நடத்தை கொண்ட நிர்வாகத்தை அபராதத்தின்மூலமே திவாலாக்க முடியும். திவால் ஆகிவிடுவோம் என்ற பயம் இருந்தால் அது ஒன்றே அந்த நிறுவனத்தை சரியான பாதையில் பயணிக்க உதவும். ஆனால் அத்துடன் லஞ்ச லாவண்யத்தையும் ஒழிக்கவேண்டும். இல்லாவிட்டால் லஞ்சம் கொடுத்துத் தப்பிக்கவே நிறுவனங்கள் முயற்சி செய்யும்.

போபால் விஷவாயு வழக்கில் என் கணிப்பில் மிகப்பெரிய குற்றவாளி இந்திய அரசுதான். 1984-ல் யூனியன் கார்பைடிடம் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு கேட்ட இந்திய அரசு, 1999-ல் 450 மில்லியன் டாலர் போதும் என்று ஒப்புக்கொண்டது. மாறாக, இந்திய அரசு, 3.3 பில்லியன் டாலருக்கு ஒரு துளியும் குறையாமல் யூனியன் கார்பைடிடம் கறந்திருக்கவேண்டும். அப்படி அந்தப் பணத்தைப் பெற்று - அல்லது அந்தப் பணத்தைக் கையில் வாங்குவதற்கு முன்னமேயே - பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்குமாறு செய்திருக்கவேண்டும். செத்த ஒவ்வொருவர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் (இன்றைய பணத்தில்); உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 25 லட்சம் முதல் 50 லட்சம் வரையில்... என்றால் ஓரளவுக்கு அது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்.

அதைச் செய்யாமல், இன்று ப.சிதம்பரம் தலைமையில் மற்றொரு கமிட்டி போட்டு ஒரு பிரயோசனமும் இல்லை.

எரிக்கப்படவேண்டியது வாரன் ஆண்டர்சனின் கொடும்பாவி அல்ல, ராஜீவ் காந்தி முதற்கொண்டு மன்மோகன் சிங் வரையிலான பிரதமர்களின் கொடும்பாவிகளை.

சுமேரிய எழுத்துமுறை - இடமாற்றம்

மூன்று மாடிகள் ஏற முடியாத பலரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கிழக்கு பதிப்பக மொட்டைமாடியிலிருந்து ஸ்ரீபார்வதி ஹாலுக்கு சுமேரிய எழுத்துமுறை பேச்சு மாற்றம் பெறுகிறது.

ஸ்ரீபார்வதி ஹால், எல்டாம்ஸ் சாலையில் உள்ள கிழக்கு பதிப்பகத்துக்கு நேர் எதிராக உள்ள கட்டடம்.

Tuesday, June 08, 2010

சிங்கப்பூர் டயரி - 7

இதுதான் சிங்கப்பூர் பற்றிய கடைசிப் பதிவு. இதற்குமேல் நீட்டிக்க முடியாது. மறந்துபோய்விட்டது!

தமிழ்ப் புத்தக விற்பனையாளர்களைச் சந்தித்தபின், பாதி நாள் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் கழித்தேன். நோக்கம், புத்தகங்களைப் பார்வையிடுவது அல்ல. அங்கே மூன்று காட்சிகள் நடந்துகொண்டிருந்தன. ஒன்று ரிஹ்லா - அரேபியாவிலிருந்து தென்கிழக்கு ஆசியாவுக்கு வந்த வணிகர்கள் பற்றிய காட்சி. 10-வது தளத்தில் நடந்துகொடிருந்தது. (10 அக்டோபர் 2010 வரை தொடர்கிறது.)

ஹத்ராமிகள் எனப்படும் இவர்கள் பயன்படுத்திய இலச்சினைகள், குரான் கையெழுத்துப் பிரதி, உயில் முதலிய ஆவணங்கள், ஆடைகள், பாய் விரிப்புகள், ஆயுதங்கள், படகின் மாதிரி, களிமண்ணால் ஆன செங்கற்கள், எழுதுபொருள்கள், மேஜைகள், சடங்குகள் பற்றிய விவரங்கள் எனப் பலவும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு ஆவணப்படமும் ஓர் இடத்தில் ஓடிக்கொண்டிருந்தது. நான் மட்டும்தான் அங்கு உட்கார்ந்திருந்தேன். யேமெனில் மண்ணால் செய்யப்பட்ட வீடுகள் இருக்கும் இடத்தில் இப்போது காங்கிரீட் வீடுகள் வருவதுபற்றிய படம். ‘காங்கிரீட் 100 ஆண்டுகள் வரைகூடத் தங்காது, ஆனால் மண் பல நூறு ஆண்டுகள் தாங்கும்’ என்று ஒரு வயதானவர் சொன்ன விவரம் மனத்தைவிட்டு அகலவில்லை.

வெளியே வரும்போது நூலக ஊழியர் ஒருவர் என்னை விசாரித்தார். எங்கிருந்து வந்தவன் என்று கேட்டார். அவர் பார்க்க சீனர் போலத் தெரியவில்லை. ஆனால் தான் புத்தமதத்தைச் சேர்ந்தவன் என்று சொன்னார். இந்தியாவிலிருந்து வருகிறேன் என்று சொன்னதும், ‘நீங்கள் மும்பையிலிருந்து வரவில்லையே? அங்கு இந்துக்கள் முஸ்லிம்களைக் கொல்கிறார்கள்’ என்றார். கொஞ்சம் தர்மசங்கடமான நிலையில் நான் நிற்பதைப் பார்த்ததும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டு நகர்ந்தேன்.

அடுத்து வில்லியம் ஃபார்க்வார் (William Farquhar) என்ற ஸ்காட்டிஷ்காரரைப் பற்றிய காட்சி நடக்கும் 7-வது தளம். சிங்கப்பூர் என்ற இடத்தை ஆரம்பித்துவைத்தவர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபில்ஸ் (Stamford Raffles) என்றால், அதை வளர்த்தெடுப்பதில் முக்கியமானவர் ஃபார்க்வார். 1791-ல், 17 வயதான இவர் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். ஹைதர் அலி, திப்பு சுல்தானுக்கு எதிரான மைசூர் போர்களில் பங்கெடுத்தவர். டச்சுக்காரர்கள் கையிலிருந்த மலாக்காவைக் கைப்பற்ற ஆங்கிலேயர்கள் முடிவெடுத்தபோது ஃபார்க்வாரை அங்கே அனுப்பிவைத்தனர். அதன்பிறகு தென்கிழக்கு ஆசியாவிலேயே தங்கிவிட்டார் இவர்.

ராஃபில்ஸ் சிங்கப்பூர் என்ற தீவை ஒரு சிறு கிராமமாக வளர்த்தெடுக்க ஆரம்பித்தபோது, அதனைப் பெருநகரமாக ஆக்கமுடியும் என்ற கருத்தை முன்வைத்தவர் ஃபார்க்வார். ஆனால் அதற்கு ஆங்கிலேயே கிழக்கிந்தியக் கம்பெனியிலேயே எதிர்ப்பு இருந்தது. சிங்கப்பூர் வளர்ந்தால் பெனாங்கின் (இப்போது மலேசியாவைல் இருக்கும் பகுதி) முக்கியத்துவர் குறையும் என்று அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரி நினைத்தார். ஆனால் அதையெல்லாம் தாண்டி இன்று சிங்கப்பூர் இவ்வளவு தூரம் முன்னேறியுள்ளதற்கு ஃபார்க்வார் மிக முக்கியமான காரணம்.

அந்த நன்று உணர்ச்சியில் உருவான காட்சி இது. மிகவும் அருமையாக இருந்தது.

அடுத்து பார்த்தது 10-வது தளத்தில் இருந்த எஸ்.ராஜரத்தினம் பற்றிய காட்சி. இலங்கையில் பிறந்து மலேயா வந்த இவர், சிங்கப்பூரின் முக்கியமான தலைவர் ஆனார். இங்கிலாந்தில் சட்டம் பயின்றவர். லீ க்வான் யூவுடன் இணைந்து பீப்பில்ஸ் ஆக்‌ஷன் பார்ட்டி என்ற கட்சியை 1954-ல் உருவாக்கினார். தொழிற்சங்கம், பத்திரிகை, சிங்கப்பூரின் முதல் தொலைக்காட்சி நிலையம் என்று பல முக்கியமான காரியங்களைச் செய்திருக்கிறார். 1959-ல் சிங்கப்பூர் தன்னாட்சி பெற்ற நாடானது முதற்கொண்டு ஆளும் அரசில் அமைச்சராக இருந்தார். சிங்கப்பூரும் மலேசியாவும் இணையப் போராடினார். ஆனால் வேறு வழியின்றி மீண்டும் இரு நாடுகளும் பிரிய முற்பட்டபோது சிங்கப்பூரை முன்னேற்றத் தொடர்ந்து பாடுபட்டார். சிங்கப்பூரின் வெளியுறவுத் துறை அமைச்சராக உலகெங்கும் சென்று நல்லுறவை வளர்த்தார். சீனர், மலாய், இந்தியர் என்றில்லாமல் சிங்கப்பூரர் என்ற உணர்வு வரவேண்டும் என்பதை அழுத்தமாக முன்வைத்த தேசியவாது இவர்.

ஆனால் இவர் தொடர்பான தகவல்கள் அவ்வளவு கோர்வையாகக் காட்டப்படவில்லை என்றே எனக்குத் தோன்றியது. வில்லியம் ஃபார்க்வார் காட்சியில் செலவிட்ட சில மணித்துளிகளில் அவரை முழுமையாக அறிந்துகொண்ட அளவு ராஜரத்தினத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

***

ஒரு நாட்டின் தேசிய நூலகம் இந்த அளவுக்கு அறிவைப் பரப்பும் செயலில் ஈடுபடுவது நெகிழ்ச்சியாக இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து அமைச்சர் முதற்கொண்டு அலுவலர்கள்வரை சிங்கப்பூருக்குச் செல்கிறார்கள். ஆனால் உருப்படியாக எதையுமே படைப்பதில்லை. இந்தியாவின் கலைச்செல்வங்கள் பற்றி, இந்தியாவின் முக்கியஸ்தர்கள் பற்றி, வரலாறு பற்றி எவ்வளவு அற்புதமான காட்சிகளை உருவாக்கலாம்? ஏனோ, நமக்கு அதுமாதிரி வாய்க்கமாட்டேன் என்கிறது.

குறைந்தபட்சம், தனியார் முயற்சிகளாக ஏதேனும் இப்படிச் செய்யமுடியுமா என்று பார்க்கவேண்டும்.

***

வியாழன் அதிகாலை கோலா லம்பூர் செல்லும் பேருந்தில் ஏறினேன். Nice என்ற பேருந்துச் சேவை. பெயரைப் போன்றே இருந்தது. ஆனால் வண்டியில் கூட்டமே இல்லை. என்னையும் சேர்த்து 8 பேர்தான் மொத்தமே! ஓர் இந்திய ஜோடி, ஒரு சிங்கப்பூர் சீனக் குடும்பம் (3 பேர்), என்னைப்போல இன்னும் இரண்டு பேர் தனித்தனியாக! ஓட்டுனர், பணியாளர் இருவர் சேர்த்து மொத்தமே 10 பேர்தான்! அந்தப் பேருந்தில் மொத்தம் 26 பேர் பயணிக்கலாம்.

சரியாக சொன்ன நேரத்துக்குக் கிளம்பி, குறிப்பிட்ட நேரத்துக்கு கோலா லம்பூரை அடைந்தது. வழியில் பாஸ்போர்ட் கண்ட்ரோல். இதற்கு முன், தரைமார்க்கமாக ஒரேயொரு முறைதான் நாடுகளைத் தாண்டியுள்ளேன். லன்டனிலிருந்து பாரிஸுக்கு யூரோ ரயில் மூலம் போனது. அங்கு ஒரே ஒரு புள்ளியில்தான் பாஸ்போர்ட் கண்ட்ரோல். இங்கே சிங்கப்பூர் எல்லையில் ஒருமுறை இறங்கி, சோதனை முடித்து, பாஸ்போர்ட்டில் அச்சு வாங்கிக்கொண்டு, மீண்டும் பேருந்தில் ஏறி, நான்கடி தள்ளி இறங்கி, மலேசிய குடியேறல் துறையில் மீண்டும் ஒரு ஸ்டாம்ப் வாங்கிக்கொண்டு, கஸ்டம்ஸ் தாண்டி, மீண்டும் பேருந்தில் ஏறி...

ஆனால் அற்புதமான சாலை, அழகான வனாந்திர சுற்றுப் பிரதேசம். போக்குவரத்துக்கு ஆகும் செலவு $58 மட்டுமே. வாய்ப்பு கிடைத்தால் இந்தப் பாதையில் காரிலோ அல்லது பஸ்ஸிலோ செல்லுங்கள் என்பேன்.

***

அடுத்து மலேசியா பற்றி இரண்டு அல்லது மூன்று பதிவுகள். சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நான் பேசியது ஒரு பதிவு. எப்படியும் இந்த வாரத்துக்குள் முடித்துவிடுவேன்.

Monday, June 07, 2010

10 ஜூன்: சுமேரிய எழுத்துகள் பற்றி பேரா. சுவாமிநாதன்

எழுதுவதற்காக மனிதன் செய்துள்ள முயற்சிகள் சாதுர்யமானவை. எழுதத் தேவையான பொருள்களை உருவாக்க பனை மரமோ, பாபிரஸ் செடியோ இல்லாவிட்டால் என்ன செய்வீர்கள்? மரங்கள் அதிகம் இல்லாத சுமேரியாவில் மக்கள் களிமண்ணைப் பயன்படுத்தினார்கள். களிமண்ணை வைத்துக்கொண்டு என்ன செய்வது? சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்படுவதைப்போல சில முத்திரைகளை மட்டுமே உருவாக்கமுடியும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு! இந்தக் களிமண்ணில் உருவானதுதான் கிட்டத்தட்ட 4,000 வருடங்களுக்கு முந்தைய சுமேரிய எழுத்துமுறை. அதை வைத்து, சுமேரியாவின் சமூகம் தொடர்பான தெளிவான ஆவணங்களை அவர்கள் உருவாக்கினர். அவர்கள் உருவாக்கிய கில்காமேஷ் என்ற காப்பியம் இன்றும் கிடைக்கிறது.

சுமேரியர்கள் சிற்பக்கலையில் சிறந்து விளங்கினர். அவர்கள்தான் வில், அம்பு, சக்கரம் ஆகியவற்றை முதலில் பயன்படுத்திய புதுமைக்காரர்கள். பத்தடிமானம், ஆறடிமானம் போன்ற எண் முறைகளை உருவாக்கியவர்கள். இன்றும் நேரத்தைக் குறிப்பிட ஆறடிமான முறைதான் பயன்படுகிறது. வட்டத்தின் கோணங்களும் ஆறடிமான முறையைத்தான் பின்பற்றுகின்றன. சுமேரியர்கள் கணிதம், மருத்துவம், வானியல் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கினர். மந்திரங்கள், புராணங்கள், காப்பியங்கள் ஆகியவற்றை எழுதிவைத்தனர்.

சுமேரிய வரிவடிவத்தைப் பார்த்தால் அதனை எழுத்துகள் என்றே சொல்லமாட்டீர்கள்! சுமேரிய எழுத்துமுறை மிகவும் சுவாரசியமானது. ஆனால் அதைவிடச் சுவாரசியமானது, தொலைந்துபோன இந்த எழுத்துமுறையைப் போராடிக் கண்டுபிடித்த ஓர் ஆராய்ச்சியாளரின் கதை.

மேலும் தெரிந்துகொள்ள, வரும் வியாழக்கிழமை, 10 ஜூன் 2010, மாலை 6.30 மணிக்கு கிழக்கு மொட்டைமாடிக்கு வாருங்கள். பேரா. சுவாமிநாதனின் தொடர் லெக்ச்சர் வரிசையில் இரண்டாவது லெக்ச்சர் இது. முதல் லெக்ச்சரின் வீடியோவை இங்கே காணலாம்.
.

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் ‘ஸ்பெஷல் ஆஃபர்’

நேற்று முதற்கொண்டு பலர் இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி வேண்டும் என்றும் அது வெளியீடு அன்று கிடைத்த ஸ்பெஷல் விலைக்குக் கிடைக்குமா என்றும் கேட்டிருந்தனர்.

நான் ஏற்கெனவே சொன்னபடி, ரூ. 600 மதிப்புள்ள புத்தகங்கள் வெறும் ரூ. 150-க்குக் கிடைத்ததன் காரணம் கிழக்கு பதிப்பகம் கொடுத்த தள்ளுபடி மட்டும் அல்ல, ராமு எண்டோமெண்ட்ஸ் கொடுத்த சப்சிடியும் சேர்த்துத்தான். அந்த சப்சிடியும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புத்தகங்களுக்கு மட்டுமே.

இப்போது பலரும் கேட்டுள்ளபடியால், சரியாக ஒரு வாரத்துக்கு மட்டும் என்று இந்தத் தொகுதிகள் இரண்டையும் சேர்த்து, ரூ. 400-க்குத் தருவதாக உள்ளோம். கீழே உள்ள சுட்டியின்மூலம் இணையம் வழியாக இங்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்.

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைத் தொகுப்பு ஸ்பெஷல் ஆஃபர்

தவிர, எங்களது ஷோரூம்கள் அனைத்திலும் கிடைக்கும். இந்த ஆஃபர், இந்த வாரத்துக்கு மட்டுமே.

ஐம்பெரும் காப்பியங்கள்





செம்மொழி என்ற வரையரைக்குள் வருபவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள், பதினெண்கீழ்க்கணக்கு, தொல்காப்பியம் ஆகியவை.

தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல். ஐம்பெருங்காப்பியங்கள் தவிர்த்த பிற அனைத்தும் தனிப்பாடல்களின் தொகுப்புகள் அல்லது ஒரு குறிப்பிட்ட தலைப்பைச் சார்ந்து எழுதப்பட்ட பல பாடல்கள். இவை அகம், புறம், பக்தி, அறிவுரைகள் என்ற நான்கில் ஏதோ ஒன்றைச் சார்ந்ததாக இருக்கும். காதல் மற்றும் அதனைச் சார்ந்த ஊடல், கோபதாபங்கள் அனைத்தும் அகம். அது அல்லாத பிற அனைத்தும் - நட்பு, வீரம், போர், பரிசில் பெறப் பாடப்படும் பாடல்கள் - புறம். பரிபாடல் ஒன்று மட்டும்தான் தீவிர பக்தி இலக்கியம். திருக்குறள் முதலாகப் பல, ‘இதைச் செய், அதைச் செய்யாதே’ எனப்படும் அறிவுரைகள்.

ஐம்பெருங்காப்பியங்களில் நம்மிடம் முழுமையாகக் கிடைப்பவை மூன்றே. அவற்றில் பிற்காலத்தில் எழுதப்பட்ட பல இடைச்செருகல்கள் இருக்கலாம். இந்த மூன்றிலும், அகம், புறம், பக்தி, அறிவுரை ஆகிய நான்கும் கலந்துவருவதைக் காணலாம்.

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகிய இந்த மூன்றையும் எளிய தமிழில், உரைநடை நாவல் வடிவில் கொண்டுவர எண்ணினோம். அத்துடன் பிற செம்மொழி இலக்கியங்களையும் அனைவரும் எளிதில் படிக்கும்வண்ணம் கொண்டுவரப்போகிறோம். வரும் மாதங்களில் அவை வெளியாகும்.

இப்போது வெளியாகியுள்ள மூன்று புத்தகங்களில் இரண்டு, கன்னி முயற்சி. ராம்சுரேஷ், ஜவர்லால் ஆகியோர் பதிவுலகத்துக்குத் தெரிந்தவர்கள் என்றாலும் அவர்கள் எழுதி அச்சாகும் முதல் புத்தகங்கள் இவை. மூன்றாவதை எழுதியுள்ளவர் என்.சொக்கன், ஒரு வெடரன். சொக்கனின் முத்தொள்ளாயிரம் விரைவில் வெளியாக உள்ளது.

எங்களது இந்த முயற்சியில் பல குறைகள் இருக்கலாம். அவற்றைச் சுட்டிக்காட்டினால் வரும் பதிப்புகளில் எப்படி அவற்றை மேம்படுத்தலாம் என்று பார்ப்போம். நிஜமான சவாலே இனிதான் வரப்போகிறது. திருக்குறள், தொல்காப்பியம், பரிபாடல், நெடுநல்வாடை, பதிற்றுப்பத்து எனப் பலவற்றையும் எப்படி சுவை குன்றாமல், போரடிக்காமல் உரைநடை வடிவம் கொடுக்கப்போகிறோம் என்று தெரியவில்லை.

பா.ராகவனின் பதிவு
ஜவர்லால்: சிலப்பதிகாரம்
என்.சொக்கன்: மணிமேகலை
ராம்சுரேஷ்: சீவக சிந்தாமணி

எழுத்து முறைகள் பற்றி பேரா. சுவாமிநாதன் - 1 (வீடியோ)

சென்ற மாதம் (13 மே 2010) அன்று நடந்த நிகழ்வின் வீடியோ கீழே.


Watch Story of Scripts (in Tamil) - Month 1, 13th May 2010 in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

இந்தத் தொடர் பேச்சின் இரண்டாம் பகுதி, வரும் வியாழன் (10 ஜூன் 2010) அன்று மாலை 6.30 மணிக்கு கிழக்கு மொட்டைமாடியில் நடக்கும்.

Sunday, June 06, 2010

இந்திரா பார்த்தசாரதி சிறுகதை வெளியீடு நிகழ்ச்சி

சற்று முன்னர்தான் முடிவடைந்தது. அரங்கில் குறைந்தது 350 பேராவது இருந்திருப்பார்கள்.

எஸ்.ஆர்.மது ஆங்கிலத்தில் அறிமுகம் செய்ய, அடுத்து புத்தக வெளியீடு. சாரி புத்தகத்தை வெளியிட, நடிகர் சிவக்குமார் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிவக்குமார் பேசினார். இந்திரா பார்த்தசாரதியின் ‘உச்சி வெயில்’ என்ற கதை இயக்குனர் சேது மாதவனால் ‘மறுபக்கம்’ என்ற பெயரில் படமாக்கப்பட்டபோது அதில் நாயகனாக நடித்தவர் சிவக்குமார். அது சார்ந்த தன் ஞாபகங்களைப் பற்றிப் பேசியவர், தனது இன்றைய விருப்பமான கம்பராமாயணம் பற்றிப் பேசி, தனது கம்பராமாயணச் சொற்பொழிவுகளை இ.பா மிகவும் ரசித்ததைச் சுட்டிக்காட்டி, முடித்துக்கொண்டார்.

அடுத்து திருப்பூர் கிருஷ்ணன், சுஜாதா விஜயராகவன், குடந்தை கீதப்பிரியன், ராமசாமி சுதர்சன் ஆகியோர் இ.பா எழுதியிருந்த கதைகளிலிருந்து ஆளுக்கு ஒன்றைத் தேர்ந்தெடுத்துச் சொன்னார்கள்.

ஆரம்பித்து வைத்த திருப்பூர் கிருஷ்ணனின் பெர்ஃபார்மன்ஸை அடுத்து வந்த யாராலும் நெருங்கமுடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ‘இவர்களே, அவர்களே’ என்று நேரத்தை வீணடிக்கவில்லை. கதையின் தலைப்பைச் சொன்னார் (பதி, பசி, பாசம்). கதையை குரல் மாடுலேஷனில் பிரமாதமாகச் சொன்னார். அவர் கையில் குறிப்புகள் ஏதும் இல்லை. அதற்குத் தேவையும் இருந்திருக்காது. திருப்பூர் கிருஷ்ணன், இ.பாவின் எழுத்துகளை ஆராய்ச்சி செய்து பிஎச்.டி பட்டம் பெற்றவர். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள சிறுகதைத் தொகுப்புகளுக்குத் தேவையான முந்தைய வெளியீடுகளை திருப்பூர் கிருஷ்ணனிடமிருந்தும் ரோஜா முத்தையா நூலகத்திலிருந்துமே பெற்றோம்.

அடுத்து சுஜாதா விஜயராகவன் சொன்ன கதை. இ.பாவின் சொந்தக் கதை. தன் நான்கு வயதுப் பேத்தியின் நாய் பொம்மையைத் தொலைத்துவிட்ட ஒரு தாத்தா படும் பாடு. கடைசியில் தாத்தா அங்கும் இங்கும் சுற்றி மற்றொரு நண்பரின் பேத்தி வைத்து விளையாடிய பொம்மையை வாங்கிக் கொண்டுவந்து வைத்துவிட்டு தப்பித்துவிட்டோம் என்று நினைக்கும்போது முடிவு எதிராபாரா திருப்பம் ஆகிறது.

குடந்தை கீதப்பிரியன் படித்த ‘குருதட்சிணை’ என்ற கதையும் இ.பாவின் சொந்தக் கதைதான் என்று தோன்றியது. இறுதியாக சுதர்சன் சற்றே அதிகமாக நேரம் எடுத்துக்கொண்டு அஸ்வத்தாமா என்ற கதையைப் பற்றி கிட்டத்தட்ட ஓர் ஆய்வையே செய்துவிட்டார்.

இ.பா ஏற்புரையில், இது தன் புத்தகங்களுக்காக நடத்தப்படும் இரண்டாவது வெளியீட்டு விழா என்றார். முதலாவது 1968-ல் அவரது முதல் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவாம். ஆனால் சில ஆண்டுகளுக்குமுன் மித்ர வெளியீடாக வந்த ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ நாவல் ஒரு மாபெரும் விழாவில் பல புத்தகங்களுட்ன சேர்ந்து வெளியிடப்பட்ட நிகழ்ச்சி பற்றி எனக்குத் தெரியும்.

விழா சரியாக 9.30-க்குத் தொடங்கி, 11.00 மணிக்கு கண்ணன் நன்றி கூற, முடிவுற்றது.

அடுத்து மக்கள் வரிசையில் நின்று புத்தகங்களை வாங்கி, இந்திரா பார்த்தசாரதியிடம் கையெழுத்து பெற்றனர். இ.பாவே அசந்து போய்விட்டார். மொத்தம் 150 பிரதிகளைத்தான் அரங்குக்குக் கொண்டுவந்திருந்தோம். அனைத்தும் தீர்ந்துபோக, மேலும் பலர் ‘புக்கிங்’ செய்துவிட்டுப் போயுள்ளார்கள்.

[விழா தொடர்பாக இணையத்தில் சில அன்பர்கள், அன்பான கருத்துகளைச் சொல்லியுள்ளனர். என் பதிவில் ஒருவர், இது எழுத்தாளரைக் கேவலப்படுத்துகிறது என்று சொல்லியுள்ளார். நான் கேட்டுக்கொண்டது இரண்டுதான்: சரியான நேரத்துக்கு வாருங்கள். முன்னதாகச் சொல்லிவிட்டு வாருங்கள்.

வெளிநாடுகளில் வெஸ்டெர்ன் கிளாசிகல் கான்சர்ட்டுகள் சிலவற்றுக்கு நான் போயிருக்கிறேன். நீங்கள் காசு கொடுத்து டிக்கெட் வாங்கியிருந்தாலும் சரி, கான்சர்ட் ஆரம்பிக்கும்போது இருக்கையில் அமரவில்லை என்றால் அடுத்த இடைவேளையின்போதுதான் உள்ளே நுழைய அனுமதிப்பார்கள்.

மற்றபடி இது கிழக்கு பதிப்பகம் மட்டும் தனியாக நடத்தும் நிகழ்ச்சி அல்ல. மற்றொரு அமைப்புதான் முன்னின்று நடத்தியது. அவர்களுக்கென்று சில சட்டதிட்டங்கள் உள்ளன. அதனால்தான் அவற்றைக் குறிப்பிட்டேன். மற்றபடி விழாவுக்கு வந்திருந்த கிழக்கு பதிப்பக வாசகர்களுக்கு ஏதேனும் சங்கடங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.]

கிழக்கு மொட்டைமாடி: மருந்துக் கொள்கை - சுகுமாரன் - ஒலிப்பதிவு

வெள்ளிக்கிழமை (4 ஜூன் 2010) அன்று கிழக்கு மொட்டைமாடியில் நடந்த கலந்துரையாடலில் சுகுமாரன் (முன்னாள் துணைத்துலைவர், Federation of Medical and Sales Representatives Association of India), இந்திய மருந்துக் கொள்கை பற்றிப் பேசினார்.

வெறும் காலாவதி மருந்துகள், போலி மருந்துகள் என்பதைத் தாண்டி, மருந்துகள் பற்றிய அழகான அறிமுகம் ஒன்றைக் கொடுத்தார். மின்சாரத் தடை காரணமாக முற்றிலும் இருட்டில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல விஷயங்களைப் பற்றிப் பேசமுடியவில்லை. அவர் எடுத்துவந்த பலவற்றையும் காட்ட முடியவில்லை. எனவே இந்தத் துறை தொடர்பாக மேலும் பல சந்திப்புகளை நடத்த உள்ளோம். இந்தச் சந்திப்பின் ஒலிப்பதிவு - இரு துண்டுகளாக, கீழே.

இங்கேயே கேட்க:

துண்டு 1:

துண்டு 2:

டவுன்லோட் செய்துகொள்ள: துண்டு 1 | துண்டு 2

Saturday, June 05, 2010

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் - ஸ்பெஷல் ஆஃபர்

நாளைக் காலை (ஞாயிறு, 6 ஜூன் 2010) டி.டி.கே ரோடு டாக் மையத்தில் (Tag Centre) நடக்க உள்ள இந்திரா பார்த்தசாரதி சிறுகதைத் தொகுதி வெளியீட்டின்போது ‘சூப்பர் ஸ்பெஷல் ஆஃபர்’ ஒன்று.

ரூ. 600 மதிப்பிலான இரு தொகுதிகளும் சேர்ந்து வெறும் ரூ. 150-க்கே கிடைக்கும். முதல் சில பிரதிகளுக்கு மட்டுமே இப்படி. இந்த ஆஃபர் கிழக்கு பதிப்பகம் தருவதல்ல. ராமு எண்டோமெண்ட்ஸ் தரும் ‘சப்சிடி’. இது வெளியீடு நடக்கும் அந்த ஓரிரு மணி நேரங்களுக்கு மட்டுமே.

நான் முன்னர் எழுதியிருந்த பதிவு மிலிட்டரி தோரணையில் இருப்பதாகச் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். ஆனால் அவ்வப்போது வந்து, அவ்வப்போது வெளியேறுவதைத் தவிர்ப்பது நலம்.கையில் அழைப்பிதழ் எதுவும் வேண்டியதில்லை.

Friday, June 04, 2010

உலக சினிமா ரத்து

வரும் ஞாயிறு மாலை (6 ஜூன் 2010) கிழக்கு மொட்டைமாடியில் காண்பிக்கப்படுவதாக இருந்த உலக சினிமா நிகழ்ச்சி ரத்தாகிறது.

காப்புரிமை தொடர்பாக எங்களுக்கு இணைய நண்பர்கள் அளித்த அறிவுரைகளின்படி இந்த முடிவு.

ஆனால் இதனை எப்படி சட்டத்துக்கு உட்படச் செய்வது என்பதில் இறங்கியுள்ளோம். சில படங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை பொதுமகக்ளுக்குக் காண்பிக்கும் உரிமையைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அதற்கு ஆகும் நேரம், காலம் தெரியவில்லை. எனவே அந்த முயற்சியில் பலன் கிடைத்தவுடன் தகவல் தெரிவிக்கிறேன்.

Thursday, June 03, 2010

கிழக்கு உலக சினிமா

ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று மாலை 5.30 மணி அளவில், ‘உரையாடல்’ அமைப்பினர் (சிவராமன், ஜ்யோவ்ராம் சுந்தர்) உலக சினிமா ஒன்றைக் காண்பித்து வந்தனர். அதற்கான முழு முயற்சியும் அவர்களுடையது. சிறு உதவிகளை நாங்கள் செய்தோம். முதல் மாதத்துக்குப் பிறகு கிழக்கு பதிப்பக மொட்டை மாடியில் இந்தத் திரையிடல் நடைபெற ஆரம்பித்தது.

இப்போது சில காரணங்களால் ‘உரையாடல்’ நண்பர்களுக்கிடையே மனஸ்தாபம் என்பதால், வரும் 6 ஜூன் மாலையில் படம் திரையிடப்படுமா என்பதில் சந்தேகம் இருந்தது. சிவராமனிடம் பேசியபிறகு, இதனை நாங்களே தொடர்ந்து எடுத்து நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

ஜூன் 6 மாலை 5.30 மணிக்கு Paradise Now என்ற பாலஸ்தீனியத் திரைப்படம் திரையிடப்படும். (முழு விவரங்கள் இங்கே.)

ஞாயிறு என்பதற்குப் பதிலாக சனிக்கிழமை என்று மாற்றினால் உபயோகமாக இருக்கும் என்று ஒரு கருத்து வந்தது. பல்வேறு முக்கியமான நிகழ்வுகள் பல சனிக்கிழமைகளில் நடப்பதால், மாதத்தின் கடைசி சனிக்கிழமை என்று மாற்றிவிடலாம் என்றும் எண்ணியுள்ளோம். அதைப்பற்றி அடுத்து தகவல் தெரிவிக்கிறோம்.

Wednesday, June 02, 2010

மதி கார்ட்டூன்ஸ் வெளியீடு பற்றி முரசொலி

1.6.2010 தேதியிட்ட முரசொலி இதழில் மதி கார்ட்டூன்ஸ் புத்தக வெளியிடு பற்றியும் மதியின் கார்ட்டூன்கள் பற்றியும் நீண்ட செய்தி வெளியாகியுள்ளது.

அதன் பட வடிவம் கீழே.


மதி கார்ட்டூன்ஸ் நிகழ்ச்சி, வீடியோ தொகுப்பு

மதி கார்ட்டூன்ஸ் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை சுமார் 30 நிமிடங்களாகத் தொகுத்து, அதை மூன்று துண்டுகளாக்கிக் கொடுத்துள்ளேன்.





Tuesday, June 01, 2010

ஜூன் 5: தமிழ் பாரம்பரியம் - எஜ்ஜி உமாமஹேஷுடன் சந்திப்பு

ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு தமிழ் பாரம்பரியக் குழுமம், கலாசாரம் சார்ந்த ஒரு உரை நிகழ்ச்சியை நடத்திவருகிறது. நடக்கும் இடம்: தக்கர் பாபா வித்யாலயா, வெங்கட்நாராயணா ரோடு, தி.நகர்.

ஜூன் 5 அன்று, எஜ்ஜி உமாமஹேஷுடன் யுகமாயினி ஆசிரியர் சித்தன் கலந்துரையாடுவார். மிக வித்தியாசமான வாழ்க்கை முறை கொண்டவர் எஜ்ஜி. அவரது தளத்தில் அவரைப் பற்றிய பல தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். இந்த உரையாடலில் முக்கியமாக (1) வடகிழக்கு இந்தியாவில் எஜ்ஜி பயணம் செய்தபோது பெற்ற அனுபவம் (2) பணம் பணம் என்று அலைவது பற்றி (3) குழந்தைகளை சீரழிப்பவர்கள் பெற்றோர்களும் ஆசிரியர்களுமே ஆகிய விஷயங்களை இவர் தொட்டுச் செல்வார்.

ஜூன் 6: இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் வெளியீடு

ராமு எண்டோமெண்ட்ஸும் கிழக்கு பதிப்பகமும் இணைந்து இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதைத் தொகுப்பை ஜூன் 6 அன்று வெளியிடுகிறார்கள். இரு தொகுதிகள், சுமார் 1100 பக்கங்களுக்கு மேல்.

நாள்: 6 ஜூன் 2010
நேரம்: காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை
இடம்: டேக் மையம் (TAG Centre) - சங்கரா ஹாலுக்கு எதிரில், டி.டி.கே சாலை, ஆழ்வார்பேட்டை

டேக் மையத்தின் ஆர்.டி.சாரி வெளியிட, நடிகர் சிவகுமார் பிரதியைப் பெற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். கதைகளில் சிலவற்றை திருப்பூர் கிருஷ்ணன், சுஜாதா விஜயராகவன், குடந்தை கீதப்பிரியன், ராமசாமி சுதர்சன் ஆகியோர் படிக்கிறார்கள். பிறகு இந்திரா பார்த்தசாரதியின் ஏற்புரை.

நிகழ்ச்சிக்கு வர விரும்புபவர்கள் முன்கூட்டியே பிரசன்னாவை மின்னஞ்சலிலோ (haranprasanna@nhm.in) அல்லது தொலைபேசியிலோ (95000-45611) தொடர்புகொள்ளவும். அழைப்பிதழுடன் வருபவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.

8.30 முதல் காலை உணவு. காலை உணவு முடிந்ததும் 9.30-க்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கும். அதன்பின் நிகழ்ச்சி முடியும்வரை அரங்கின் கதவுகள் திறக்கப்படா. எனவே நிகழ்ச்சிக்கு வரப் பதிவு செய்திருப்பவர்கள் முன்கூட்டியே வந்துவிடவும். பிறகு அனுமதிக்கப்படவில்லை என்று வருத்தப்படாதீர்கள். நன்றி.

இந்திரா பார்த்தசாரதி படைப்புகள்

ஜூன் 5: புத்தகம் போடலாம் வாங்க!

ஜூன் 3, தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை உலகத் தமிழ்ப் பதிப்பாளர் தினமாகக் கொண்டாட முடிவெடுத்துள்ள கௌரா இலக்கிய மன்றமும் முத்தமிழ்க் கலைப் பண்பாட்டு மையமும் இணைந்து ஜூன் 5 அன்று திருச்சியில் தமிழ்ப் பதிப்பாளர் தினக் கருத்தரங்கு ஒன்றை நடத்துகிறார்கள்.

இடம்: திருச்சி கலையரங்கம், மேல் தளம்
நேரம்: மாலை 5 மணி
தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றுபவர்: த. சவுண்டையா, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்

கருத்தரங்கில் கலந்துகொள்வோர்:

1. இன்றைய சூழலில் பதிப்பாளர்கள் எதிர்கொள்ளும் நல்வாய்ப்புகள் - கவிதா பதிப்பகம் சேது சொக்கலிங்கம்
2. நவீன தமிழ்ப் பதிப்புலகம் எதிர்கொள்ளும் சவால்கள் - உயிர்மை பதிப்பகம் மனுஷ்யபுத்திரன்
3. நாளைய தலைமுறைக்கு பதிப்புத்துறை செய்யவேண்டியது என்ன? - கிழக்கு பதிப்பகம் பா.ராகவன்
4. பதிப்புலகில் வெற்றிபெறுவது எப்படி? - சீதை/கௌரா பதிப்பகம் ராஜசேகரன்

ஜூன் 3: சென்னை நகரெங்கும் புத்தகக் காட்சிகள்

ஜூன் 3, தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை உலகத் தமிழ்ப் புத்தகத் திருவிழாவாகக் கொண்டாட தமிழ்ப் பதிப்பாளர் சங்கம் (பபாஸி அல்ல... மற்றொரு சங்கம்) முடிவு செய்துள்ளது. இந்த நாளில் சென்னையில் ஐந்து பொது இடங்களில் ஒரு நாள் புத்தகக் கண்காட்சியை நடத்த உள்ளனர். இதற்கான அனுமதியை சென்னை மாநகராட்சியிடம் பெற்றுள்ளனர்.

இந்தக் கண்காட்சி நடக்கும் இடங்கள்:

1. எட்வர்ட் எலியட்ஸ் கடற்கரை
2. நாகேஸ்வர ராவ் பூங்கா
3. நடேசன் பூங்கா
4. பனகல் பூங்கா
5. திருவான்மியூர் மாநகராட்சிப் பூங்கா

இந்த ஐந்து இடங்களிலும் நடக்கும் கண்காட்சியிலும் கிழக்கு பதிப்பகம் பங்கேற்கும். ஒவ்வொரு இடத்திலும் எத்தனை பதிப்பகங்கள் இருக்கும் என்று சொல்லமுடியாது. எப்படியும் ஒவ்வொரு இடத்திலும் பத்துக்குக் குறைவில்லாமல் பதிப்பகங்கள் கலந்துகொள்ளும் என்று நினைக்கிறேன்.

இயேசு சபை

மதி கார்ட்டூன்ஸ் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அருட்தந்தை ஜான் லூர்து சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். மதி பாளையங்கோட்டை புனித சவேரியார் பள்ளியில் படித்தபோது அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர். இன்று காலை அவருடன் காரில் திருநெல்வேலியிலிருந்து மதுரை வரை பயணம் செய்தேன். அப்போது இயேசு சபை (ஜெசூயிட்ஸ்) பற்றிப் பேசிக்கொண்டு வந்தேன்.

1500-களில் இக்னேசியஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. ஒரு போர்வீரராக வாழ விரும்பியவர், காயம் பட்டு மருத்துவமனையில் இருந்தபோது படிக்கப் புத்தகம் கேட்டிருக்கிறார். அப்போது ‘இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை’ என்ற புத்தகம் மட்டும்தான் படிக்கக் கிடைத்துள்ளது. அந்தப் புத்தகம் அவரது வாழ்க்கையை மாற்றிவிட்டது. அதன் விளைவாக உருவானதுதான் இயேசு சபை என்ற ‘ஆர்டர்’.

இந்தியாவில் இயேசு சபைக்கு மொத்தம் 16 வட்டங்கள் உள்ளன. தமிழக வட்டத்தினர் ஐந்து கல்லூரிகளையும் 16 பள்ளிக்கூடங்களையும் நடத்துகிறார்கள். அதில் சென்னையில் இருக்கும் லயோலா கல்லூரியும் ஒன்று.

இயேசு சபையில் பாதிரியாராக யார், எப்படிச் சேருகிறார்கள் என்று ஜான் லூர்துவிடம் கேட்டேன். சுமார் 14-15 வயதில் ஓர் இளைஞருக்கு தானாகவே இது தோன்றும்... என்றார். இறை அருளால் தாங்கள் துறவி ஆகவேண்டும் என்று தோன்றும் சிறுவர்கள், தங்கள் பெற்றோரின் அனுமதியுடன் இயேசு சபையினர் நடத்தும் முகாம்களுக்கு வருவார்களாம். அங்கே நடக்கும் வழிகாட்டுதலின்படி அவர்கள் சபையில் சேருகிறார்கள். அப்போது அவர்களுக்கு ‘நோவிஸ்’ என்று பெயர். ஓராண்டு ஆங்கிலத்தில் சிறப்புப் பயிற்சி நடைபெறுகிறது. அதன்பின் அவர்கள் தொடர்ந்து தங்கள் பள்ளி இறுதிப் படிப்பை முடித்து, கல்லூரியில் சேர்ந்து தங்களுக்கான விருப்பப் பாடத்தைப் படிக்கிறார்கள்.

கல்லூரிப் பட்டம் பெற்றபிறகு அவர்கள் தங்கள் முதல் சத்தியப் பிரமாணத்தை (First Vows) எடுத்துக்கொள்கிறார்கள். அப்போது அவர்களுக்கு ‘ரீஜண்ட்’ என்று பெயர். இந்நிலையில் இவர்கள் ஏற்கெனவே துறவிகளாக (ப்ரீஸ்ட்) இருப்பொரிடம் ஜூனியராகச் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெறுகிறார்கள்.

அடுத்து இரண்டு ஆண்டுகள் தத்துவம் படிக்கிறார்கள். முன்னெல்லாம் மூன்று ஆண்டுகள் இருந்த இந்தப் படிப்பு, இப்போது இரண்டு ஆண்டுகள் மட்டும்தானாம். தத்துவத்தில் மேலை நாட்டுத் தத்துவங்களான நீட்ஷே, காந்த், ஹெகல், ஷோப்பனாவர் போன்றனவற்றுடன், இந்தியத் தத்துவங்களான வேதாந்தம், சமணம், புத்தம் ஆகியவையும் உண்டாம். அப்போது இவர்களுக்கு ‘பிலாசஃபர்’ என்று பெயர்.

அடுத்து நான்கு ஆண்டுகள் தியாலஜி - சமயவியல் படிக்கவேண்டும். இது கிறிதஸ்தவ சமய இயல். இதைப் படிக்கும்போது இவர்களுக்கு ‘தியலாஜியன்’ என்று பெயர்.

இதில் எந்தக் கட்டத்திலும் அவர்கள் வெளியேறலாம். இந்தப் படிப்பும் முடிந்தவுடன், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் துறவி (ஆர்டெயிண்ட் ப்ரீஸ்ட்) என்ற நிலையை அடையலாம். படிப்புடன், மனக்கட்டுப்பாடும் இருந்தால்தான் இந்நிலையில் அவர்களுக்கு துறவு அளிக்கப்படுகிறது. (ஏட்டளவில்... நிஜம் என்பது வேறாக இருக்கலாம்!)

அதன்பின் அவர்கள் ஏதாவது ஒரு பாரிஷில் உள்ள தேவாலயத்தில் ப்ரீஸ்ட் ஆக இருக்கலாம். அல்லது ஜெசூயிட் கல்வி நிலையங்களில் ஆசிரியராகச் செல்லலாம்.

***

இதுதான் நான் கேட்டுக்கொண்டதன் சுருக்கம். இதில் புரிதல் தவறு இருந்தால் அது என் தவறு மட்டுமே. சொன்னவரின் தவறு அல்ல. மறந்துவிடும் முன்னால் பதிவுக்காக இங்கே!

***

விளம்பரம்: வோல்ட்டேர் எழுதிய கேண்டீட் நாவலில் தென்னமெரிக்காவின் இயேசு சபைப் பாதிரியார்களை சாடு சாடு என்று சாடியிருப்பார். அந்த நாவலின் தமிழாக்கம் - நான் செய்தது - இங்கே. அதனை வாங்கிப் படித்து இன்புறுங்கள்!