Friday, August 06, 2010

வேலூர் புத்தகக் கண்காட்சி: 28 ஆக - 5 செப்

பல முக்கியமான நகரங்களில் புத்தகக் கண்காட்சி நடப்பது பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். சென்னைக்குப் பிறகு, மதுரையிலும் பதிப்பாளர்கள் சங்கமான பபாஸி கண்காட்சி நடத்துகிறது (இந்த ஆண்டு செப் 2 முதல் மதுரையில்). கோவையில் கொஞ்சம் தடங்கல்கள் இருந்தாலும் இனி வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நடக்கும் என்று தெரிகிறது.

ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் கடந்த சில வருடங்களாக அமர்க்களமாக நடந்துவருகிறது புத்தகக் காட்சி. (இப்போது நடந்துகொண்டிருக்கிறது.) திருச்சி ஒரு சோகம். இதுவரையில் அந்த ஊருக்கு ஏற்ற பிரம்மாண்டமான புத்தகக் கண்காட்சி நடைபெறவில்லை.

இப்போது கிடைத்துள்ள நல்ல செய்தி, வேலூர் வாசகர் பேரவையும் ஆழி அறக்கட்டளையும் சேர்ந்து வேலூரில் முதல் முறையாக ஒரு மாபெரும் புத்தகக் கண்காட்சியைத் திட்டமிட்டுள்ளார்கள். வேலூர் கோட்டை மைதானத்தில் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கி 5 செப்டெம்பர் வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்தும் அரசுத் துறைகள் தரப்பிலிருந்தும் மிகப் பெரிய ஆதரவு கிடைத்துள்ளதாகச் சொல்கிறார் ஆழி பதிப்பகத்தின் செந்தில்நாதன். அவர்தான் இந்தப் புத்தகக் கண்காட்சியின் ஏற்பாடுகளை முன்னின்று நடத்துகிறார்.

சமீப காலங்களில் ஒரு நிலையான ஏற்பாடாக ஆகியிருக்கும், பாரதி புத்தகாலயம் முன்னின்று நடத்தும் திருப்பூர் புத்தகக் கண்காட்சியையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அதேபோல ரோடரி கிளப் ஆரம்பித்திருக்கும் தஞ்சாவூர் புத்தகக் கண்காட்சியும் தொடர்ந்து நடந்து பெரிய அளவுக்குச் செல்லமுடியும் என்று தோன்றுகிறது.

வேலூர் மற்றும் அருகில் உள்ள மாவட்ட மக்கள், வேலூர் புத்தகக் கண்காட்சியை மாபெரும் வெற்றியாக மாற்றுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

2 comments:

  1. தகவலுக்கு நன்றி. அவசியம் ​செல்வேன். ​பெங்களூரிலிருந்து ​செல்ல நினைக்கும் அன்பர்கள் எனக்குத் ​தெரியப்படுத்தவும். நாம் ஒரு குழுவாகச் ​செல்லலாம். gopica@gmail.com

    ReplyDelete
  2. good news reg the bookfair at vellore surely our group will visit and buy many book

    ReplyDelete