Friday, December 30, 2011

2011: மன்மோகன் சிங்

என்ன ஒரு வீழ்ச்சி! மெத்தப் படித்தவர். 1990-களில் இந்தியா அழிவின் விளிம்பில் இருந்தபோது பொருளாதாரச் சீர்திருத்தங்களால் காத்தவர். இடதுசாரிகளுக்கு மட்டும் இவர், சர்வதேச நிதியத்தின் கையாள், அமெரிக்க உளவாளி, இந்தியாவை விற்கும் கயவன்.

ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.

நியாயமானவர் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் முதுகெலும்பே இல்லாமல், நாளுக்கு நாள் அவமானப்பட்டுக்கொண்டு, ஏன் இன்னமும் சோனியாவைக் காக்க முற்படுகிறார்? ஊழலில் தோய்ந்த அமைச்சரவை, யாரும் இவரது அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதில்லை, பெயரளவுக்கு ஒரு பிரதமர். உலகம் மதிக்கிறது, சொந்த நாட்டில் மட்டும் மதிப்பில்லை.

2ஜி, காமன்வெல்த், ஆதர்ஷ் விவகாரங்களுக்குப் பிறகு, இவர் பேசாமல் பஞ்சாபில் கோதுமை நடப் போயிருக்கலாம். தினம் தினம் அசிங்கப்படுகிறார். லோக்பால் சட்ட விவாதங்களின்போது பாஜகவினர் அசிங்க அசிங்கமாக இவரைப் பற்றிப் பேசுகிறார்கள். கோபமே கொள்ளாது உட்கார்ந்திருக்கிறார். கோபித்துத்தான் என்ன பயன்? ராகுல் காந்தியே பார்த்துக்கொள்ளட்டும் என்று போய்விடலாம்.

வேண்டாம் சார்! பேசாமல் வீட்டுக்குப் போய், நாலைந்து எகனாமிக்ஸ் பாடப் புத்தகம் எழுதுங்கள். இந்த பாலிடிக்ஸில் புகுந்து புறப்பட உங்களுக்குத் தெரியவில்லை. அதையெல்லாம் பிரணவ்டாவிடம் விட்டுவிடுங்கள்.

2011: சுப்ரமணியன் சுவாமி

தெஹெல்காவில் இவரைப் பற்றி நீண்ட ஒரு கட்டுரை வந்துள்ளது. வாசியுங்கள்.

2ஜி ஊழல் வழக்கில் தனியாளாக நின்று நீதிமன்றத்தில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் சர்ச்சையான மனிதர். ஏன், எதற்கு இவர் ஒரு வழக்கைக் கையில் எடுத்துக்கொள்கிறார் என்பதில் எனக்கு நிறையச் சந்தேகங்கள் உள்ளன. ஆனால் விடாக்கண்டர். அரசியல் உலகில் உள்ள அசிங்கங்கள் பெரும்பாலாம் பலருக்கும் தெரிந்திருக்கும் என்றாலும் அவற்றைப் பிடித்துக்கொண்டு நீதிமன்றம் வரை சென்று தொடர்ந்து வழக்காடுபவர்கள் இவரைப்போல யாருமே இல்லை. திமுகவை - ராசாவை, கனிமொழியை - மட்டுமின்றி, காங்கிரஸின் சிதம்பரத்தையும் அடுத்து ராபர்ட் வாத்ரா, சோனியா காந்தி இருவரையும் ஒரு கை பார்த்துவிடுகிறேன் என்று சூளுரைத்திருக்கும் இவரும் 2011-ல் இந்தியர்களின் மனம் கவர்ந்தவராகிறார்.

அண்ணா ஹசாரேவுக்கு எந்த அளவுக்கு எதிர்ப்பு இருக்கிறதோ அதைவிட அதிகமான எதிர்ப்பு இவர்மீது இருக்கிறது. அதுவும் தமிழ்நாட்டில் அதிகம். விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர், பார்ப்பனர் என்பதுவேறு சேர்த்தி.

2ஜி விவகாரத்தில் ஏதோ சரியில்லை என்று முதலில் கண்டுபிடித்தது சில பத்திரிகையாளர்கள்தாம். அதனை முக்கிய எதிர்க்கட்சியான பாஜக எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்று ரூம் போட்டு யோசிப்பதற்கு முன்னதாகவே களத்தில் குதித்து தனக்கான போராக மாற்றிக்கொண்டவர் சுவாமி. மாபெரும் சந்தர்ப்பவாதி. மாபெரும் போராளி.

இந்தியாவை ஊழலிலிருந்து காக்கவந்த மாமனிதர் என்பதாகத்தான் ட்விட்டரில் இவருடைய ஆர்வலர்கள் பேசிக்கொள்கிறார்கள். அதில் எனக்குச் சம்மதம் இல்லை. சுவாமியின் முதல் குறி அரசியல் ஆதாயம்தான். அதனால்தான் கருணாநிதி, ஜெயலலிதா இருவர்மீதும் ஊழல் வழக்குகள் போட்டுக்கொண்டே ஜெயலலிதாவுடன் சமரசம் பேசுகிறார். சோனியாவுடன் சேர்ந்துகொண்டு பாஜகவைக் குழிபறித்துத் தள்ளிவிட்டு, இப்போது சோனியாவை ஒழித்துக்கட்டிவிடுவதாகப் போராடுகிறார். ராஜிவ் காந்தி தன் உற்ற நண்பர் என்று சொல்லியவர், அப்போது கையில் எடுக்காத போஃபோர்ஸ் பணப் பட்டுவாடா + ஸ்விஸ் வங்கிக் கணக்குப் பிரச்னையை இப்போது பேசுகிறார்.

ஆனாலும், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இவரும் முக்கியக் கண்ணியே. பிறரால் செய்யமுடியாத பலவற்றை இவரால் செய்யமுடியும். பயமே இன்றி ஆட்சியில் இருப்போரை இவரால் தனியொரு மனிதனாக எதிர்கொள்ள முடியும். மாறி மாறி ஆளுனர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் கடிதங்கள் எழுதி, முதல்வர்கள், மந்திரிகள்மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்த முடியும். நீதிமன்றங்களில் தாமாகவே வழக்காடி நீதிபதிகளை ஏற்கவைக்க முடியும்.

அதுவரையில் இவர், இவருடைய எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமே.

Thursday, December 29, 2011

உடையும் இந்தியா?

இரு அறிவிப்புகள்.

முதலாவது, ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள ‘உடையும் இந்தியா: ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும்’ என்ற புத்தகத்துக்கான அறிமுக விழா, ஜனவரி 3, 2012 அன்று தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்தில் மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது. இதனை நடத்துபவர்கள் தமிழ் ஹிந்து அமைப்பினர். புத்தகத்தை நான் அறிமுகம் செய்கிறேன். பின்னர் பேரா. சாமி தியாகராஜன், எழுத்தாளர் ஜோ டி குரூஸ், கிருஷ்ண பறையனார், இந்திய தொல்லியல் துறையில் பணியாற்றிய தியாக. சத்தியமூர்த்தி, கல்வெட்டாளர் எஸ். இராமச்சந்திரன், பாஜகவின் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் பேசுகிறார்கள். அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்.


இரண்டாவது, திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருப்பது. ஃபேஸ்புக்கில் நான் பார்த்தது இது:
அண்மையில், ஆர்.எஸ்.எஸ்., இந்துத்வா மதவெறி சக்திகளின் ஆரிய- திராவிடப் புரட்டுகளும் - அந்நியத் தலையீடுகளும் என்ற தலைப்பில் உடையும் இந்தியா என்ற இரண்டு இந்து மத பார்ப்பனப் பிரச்சாரர்களால் எழுதப்பட்டு, வெளிவந்துள்ள நூலுக்கு மறுப்புரை அளிக்கும் புரட்டு என்ற புரட்டினை புட்டு வைக்க உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? என்ற தலைப்பில், ஓர் ஆய்வரங்கம் 2012 சனவரி 8.9 ஆகிய நாள்களில் நடைபெறவிருக்கிறது! பெரியார் திடலில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். - திராவிடர் கழகம்
புத்தகத்தை வாங்க

Wednesday, December 28, 2011

2011: அண்ணா ஹசாரே

சந்தேகத்துக்கு இடமே இல்லாமல், 2011-ல் அதிகம் பேசப்பட்ட இந்தியர், இந்தியாமீது அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியவர் அண்ணா ஹசாரேதான்.

ஜன லோக்பால் என்ற மசோதா முன்வரைவை முன்வைத்து ஹசாரேவும் அவருடைய குழுவினரும் பெரும் போராட்டங்களைச் செய்தார்கள். அதன் காரணமாக அரசியல் கட்சிகள் லோக்பால் மசோதாவைக் கையில் எடுக்கவேண்டியதாயிற்று. லோக்பால் என்பது ஊழலை எதிர்க்க ஓர் அமைப்பு. அரசியல்வாதிகள் தாங்களாகவே இதனைச் செய்திருக்கா மாட்டார்கள். அண்ணா ஹசாரேவின் தொடர் உண்ணாவிரத மிரட்டல்களால்தான் இத்தனை வேகமாக அரசு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தது. முதலில் அரசு கொண்டுவந்த டுபாக்கூர் மசோதா, பின் கொஞ்சம் அதிகமான பலத்துடன் நேற்று கொண்டுவரப்பட்டு, சாதாரணச் சட்டமாக (அரசியலமைப்புச் சட்டத் திருத்தமாக இல்லாமல்) மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலங்கள் அவையில் என்ன ஆகும் என்பது இன்று தெரிந்துவிடும்.

அண்ணா ஒரு காந்தியா? அண்ணா ஒரு ஏமாற்றுப் பேர்வழியா? அண்ணா வெறும் முகமூடியா? பின்னிருந்து இயக்குவது யார்? கேஜ்ரிவால், கிரண் பேடி, பிரஷாந்த் பூஷன்/ஷாந்தி பூஷன் ஆகியோர் எப்படிப்பட்டவர்கள்? இந்த இயக்கத்தின்பின் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு என்ன? இப்படி எத்தனை எத்தனையோ கேள்விகள்.

வெறும் மத்தியவர்க்கப் பிரஜைகள்தான் அண்ணாவைப் போற்றுகிறார்கள், உழைக்கும் வர்க்கத்தவர் அல்லர்; பாருங்கள், மும்பையில் உண்ணாவிரத மைதானத்துக்கு யாருமே வரவில்லை என்கிறார்கள் சிலர். 74 வயதாகும் அண்ணாவின் உடல்நிலை தொடர் உண்ணாவிரதங்களாலும் ஊர் சுற்றுவதாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜன் லோக்பால் என்பது சர்வத்துக்குமான ஒரே அருமருந்து என்று ஊழலுக்கு எதிரான போராட்டத்தைக் குறுக்கிவிடுகிறார் இவர் என்பது ஒரு குற்றச்சாட்டு. அரசுக்கு மேலாக ஒரு சூப்பர் அரசமைப்பைக் கொண்டுவர முயற்சித்து அரசியலமைப்புச் சட்டத்தையே கேலிக்கு உள்ளாக்குகிறார் இவர் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட ஒரே அமைப்பான நாடாளுமன்றத்தைக் கேலி செய்கிறார், அவமதிக்கிறார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு.

இவர் வெறும் ஒரு பண்ணையார்தான்; ராலேகான் சித்தியில் கீழ்ச்சாதியினருக்கும் இன்னும் உரிமைகள் கிடையாது; குடிக்க முற்பட்டவர்களை தூணில் கட்டிவைத்து பெல்ட் எடுத்து விளாசியவர்தான் இவர்; இதோ நாங்கள் நேரடியாகவே அந்த ஊருக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிட்டோம்; அது ஒன்றும் பூலோக சொர்க்கம் இல்லை... என்பவர்கள் இருக்கிறார்கள்.

இந்தக் குற்றச்சாட்டுகளையெல்லாம் கடந்து, அவருடைய சில திருவாய் மலர்தல்களையெல்லாம் தாண்டி, 2011-ல் பெருவாரியான இந்தியர்களின் மனத்தைத் தொட்ட மனிதர் அண்ணா ஹசாரேதான் என்பதை நான் உறுதியாகச் சொல்லமுடியும்.

ஏனென்றால், அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல் என்பதை நீக்கமுடியும் என்ற நம்பிக்கையை பெருவாரியான இந்தியர்கள் மனத்தில் கொண்டுவந்துள்ளார். உண்மையிலேயே இது முடியுமா, சாத்தியமா என்பது அடுத்த கேள்வி. ஆனால் இதுநாள்வரையில், ஊழல் என்பது நம்மோடே இருக்கும் ஒன்று, அதை அசைத்துக்கூடப் பார்க்கமுடியாது என்றுதான் நாம் நம்பிவந்திருக்கிறோம். அப்படி, காந்தி காலத்தில் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை என்பதை பெருவாரியான மக்களால் நம்பமுடியவில்லையோ, அப்படி. எப்படி காந்தி விடுதலை பற்றிய நம்பிக்கை கொடுத்தாரோ, அப்படி ஹசாரே ஊழலை ஒழிக்கமுடியும் என்று ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார். அவருடைய வழிமுறை எப்படி இருந்தாலும், நாம் நம் சொந்த வழிமுறை மூலமாவது ஊழலை எதிர்கொள்ளலாம். நாமே ஊழலில் ஈடுபட்டிருப்பவர்களாக இருந்தாலும்கூட.

Monday, December 26, 2011

ரகுநாதாப்யுதயமு - ஸ்வர்ணமால்யா (ஒலிப்பதிவு)

தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011


27 டிசம்பர் 2011 அன்று நிறைவு நாளில், ஸ்வர்ணமால்யா, தஞ்சையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி நடத்திய நாயக்க மன்னரான ரகுநாத நாயக்கரின் வாழ்க்கையை விவரிக்கிறார். ரகுநாத நாயக்கரின் மகன் விஜயராகவ நாயக்கர் தெலுங்கில் யக்ஷகானமாக எழுதியதுதான் ரகுநாதப்யுதயமு.

முனைவர் பாலுசாமி, நாயக்கர் கலை பற்றி ஒரு முன்னுரை தருகிறார்.



ஸ்வர்ணமால்யா இசை-நாட்டிய-நாடகமாகவும் பேச்சாகவும் ரகுநாதாப்யுதயுமு-வை வழங்குகிறார்.

Sunday, December 25, 2011

கங்கைகொண்ட சோழபுரம் - குடவாயில் பாலசுப்ரமணியன் (ஒலிப்பதிவு)

தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011


சோழர் கலை பற்றிய அறிமுக உரை

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியனின் உரை:

Saturday, December 24, 2011

இந்திய புனிதக் கலை - உமாபதி (ஒலிப்பதிவு)

தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011


ஸ்தபதி கே.பி. உமாபதி ஆசார்யா, கோயில் கட்டுதல், சிலை செதுக்குதல், உலோகத்தில் திருமேனி செய்தல் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர். கீழே அவர் உருவாக்கிய கஜசம்ஹாரமூர்த்தி உருவத்தைக் காணலாம்.


இந்திய புனிதக் கலை பாரம்பரியம் பற்றி ஜெயச்சந்திரனின் அறிமுக உரை.



தொடர்ந்து, ஸ்தபதி உமாபதி ஆசார்யாவின் உரை.

Friday, December 23, 2011

அருச்சுனன் தபசு - பாலுசாமி (ஒலிப்பதிவு)


24 டிசம்பர் 2011, பேராசிரியர் சா. பாலுசாமி, ‘அருச்சுனன் தபசு: மாமல்லபுரம் சிற்பம் பற்றிய புதிய பார்வை’ என்ற தலைப்பில் பேசியதன் ஒலிப்பதிவு, இரண்டு பகுதிகளாக. முதல் பகுதியில் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் புடைப்புச் சிற்பங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிப் பேசுகிறார். அடுத்த பகுதியில் பேராசிரியர் பாலுசாமி அருச்சுனன் தபசு புடைப்புச் சிற்பத்தை முன்வைத்துத் தன் பேச்சைத் தருகிறார்.



குறுந்தொகை - ஜெயமோகன் (ஒலிப்பதிவு)

தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011


23 டிசம்பர் 2011 அன்று ஜெயமோகன் ஆற்றிய ‘குறுந்தொகை, தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்’ என்ற உரையின் ஒலிப்பதிவு.

கிழக்கு பாட்காஸ்ட்: திராவிட இயக்க வரலாறு (பாகம் 3)

அண்ணா பற்றி. புத்தகத்தை வாங்க ஒன்று | இரண்டு


Wednesday, December 21, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: முல்லைப் பெரியாறு விவாதம்

ஊரோடி வீரகுமார், தேனியில் விவசாயம் செய்பவர். கிழக்கு பதிப்பகத்துக்காக விவசாயம் பற்றி சில புத்தகங்களை எழுதியுள்ளார். முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது இன்றைய அப்டேட் சேர்த்து, அடுத்த வாரம் முதல் கிடைக்கும்.

அவருடன் பேசுவதை ஒளிப்பதிவு செய்ய அவர் ஒப்புக்கொள்ளவில்லை. பயம் ஏதும் இல்லை, ஆனால் தன் முகம் வெளியே தெரிவதை தான் விரும்புவதில்லை என்றார். ஒலிப்பதிவுக் கருவியின் தரம் + சுற்றுப்புறச் சத்தம் சேர்ந்து சுமாராகத்தான் வந்துள்ளது. புத்தகத்தை வாங்க.



கிழக்கு பாட்காஸ்ட்: திராவிட இயக்க வரலாறு (பாகம் 1)

சென்ற ஆண்டு வெளியான ‘திராவிட இயக்க வரலாறு’ - இரு தொகுதிகளாக வெளியான புத்தகம் பற்றிய உரையாடல். முதல் தொகுதி பற்றிய உரையாடல் மூன்று பாகங்களாக வெளியாகிறது. முதல் பாகத்தில் நீதிக் கட்சி உருவாவது. இரண்டாவதில் பெரியார். மூன்றாவது அண்ணா; அவர் கட்சி ஜெயிப்பது, அண்ணாவின் இறப்பு ஆகியவை வரையில். புத்தகத்தை வாங்க ஒன்று | இரண்டு

கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா, இன்னபிறர் இனி மெதுவாக வருவார்கள்.



Thursday, December 15, 2011

தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011

‘தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை’ என்ற பதிவுசெய்யப்பட்ட ஒரு அறக்கட்டளையை நாங்கள் நடத்திவருகிறோம். நான் அதில் ஓர் அறங்காவலன். பேராசிரியர் சுவாமிநாதன் அறக்கட்டளையின் தலைவர். பாரம்பரியம் என்று நாங்கள் பார்ப்பது இலக்கியம், சிற்பம், ஓவியம், கோவில் கட்டுமானம், இசை, நாட்டியம் போன்றவை.

மாதாமாதம் முதல் சனிக்கிழமை அன்று பாரம்பரியம் தொடர்பாக ஓர் உரையை நடத்துவோம். இதுவரை நடத்தியுள்ள அனைத்து நிகழ்வுகள் பற்றியும் அதில் சுமார் 80%-க்கும் மேற்பட்டவற்றின் முழு ஒளிப்பதிவுகளையும் நீங்கள் இங்கே காணலாம்.

இதுதவிர, விருப்பம் உள்ள சுமார் 20-25 பேர் சேர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை பாரம்பரிய இடங்களுக்குப் போய் நான்கைந்து நாட்கள் தங்கியிருந்து தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்களைப் பற்றி ஆர்வமாகக் கற்போம். இங்கு போவதற்குமுன் ஓரிரு மாதங்கள் அந்த இடம் தொடர்பானவற்றைப் பற்றிப் படிப்போம். பேசுவோம். விவாதிப்போம். இவ்வாறு மகாபலிபுரம், அஜந்தா/எல்லோரா ஆகிய இடங்களுக்குக் கடந்த இரண்டாண்டுகளில் சென்றுவந்துள்ளோம். வரும் ஜனவரி மாதம், புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இடங்களைச் சுற்றிவரப்போகிறோம்.

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் சென்னையில் இசை கேட்பதற்காகக் கூடும் மாபெரும் மக்கள் திரளிடம் எப்படி இசை தவிர பிற பாரம்பரிய விஷயங்களை அறிமுகம் செய்வது என்று ஒருமுறை பேச்சு வந்தது. இசையை விரும்புவோர், பிறவற்றை விரும்பவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் முயற்சி செய்வதில் என்ன தவறு? அதில் ஆரம்பித்ததுதான் ‘பாரம்பரியக் கச்சேரி 2011’. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் இதனை நடத்த உள்ளோம்.

இந்த ஆண்டு நிகழ்வு கீழே:

23 டிசம்பர் 2011 - எழுத்தாளர் ஜெயமோகன் - குறுந்தொகை: தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்
24 டிசம்பர் 2011 - பேராசிரியர் சா. பாலுசாமி - அருச்சுனன் தபசு: மாமல்லபுரம் சிற்பம் பற்றிய புதிய பார்வை
25 டிசம்பர் 2011 - ஸ்தபதி கே.பி. உமாபதி ஆசார்யா - இந்திய புனிதக் கலைப் பாரம்பரியம்
26 டிசம்பர் 2011 - முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் - கங்கைகொண்ட சோழபுரம்: வரலாறும் கலையும்
27 டிசம்பர் 2011 - நடனக் கலைஞர் ஸ்வர்ணமால்யா கணேஷ் - ரகுநாத நாயக்கரின் வாழ்க்கை - யக்ஷகானம்

அனைத்து நிகழ்வுகளும் நடக்கும் இடம்: ராகசுதா அரங்கம், மைலாப்பூர் (நாகேஸ்வர ராவ் பூங்கா அருகில்). 150 பேர் வரைதான் உட்கார முடியும். தினமும் காலை 10.00 முதல் 12.00 மணி வரை. அனுமதி இலவசம்.

***

நிகழ்ச்சிகளை முடிவு செய்யும்போது, இரண்டு குறுக்குவெட்டுகளைப் பார்த்தோம். ஒன்று வரலாற்றில் ஒரு விரிந்த வெளி இருக்கவேண்டும். மற்றொன்று, பல கலைகளோடு தொடர்புடையதாக இருக்கவேண்டும்.

அப்படித்தான் இங்கே சங்க காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம் என்று காலம் நகர்ந்துவருவதை நீங்கள் பார்க்கலாம். அதேபோல, இலக்கியம், சிற்பம், ஓவியம், கோவில் கட்டுமானம், பாடல் இயற்றுதல், நடனம் என அனைத்து கலைகளையும் பார்க்கலாம். சுவாரசியமான பேச்சாளர்களாகவும் வேண்டும். வெகுஜனங்கள் ரசிக்கக்கூடியதாக இருக்கவேண்டும்.

ரகுநாத நாயக்கரை எடுத்துக்கொள்ளுங்கள். இவர் நாயக்க மன்னர்களில் மிக முக்கியமானவர். பாடல் இயற்றுவார். பாடுவார். வீணை வாசிப்பார். பல மொழிகளை அறிந்தவர். தஞ்சையிலிருந்து ஆட்சி செய்தார். தெலுங்கு பேசும் அரசர்கள். இவருடைய மகன், தன் தந்தையின் வாழ்க்கையை யக்ஷகானமாக தெலுங்கில் பாடியுள்ளார். அதிலிருந்து அக்காலத் தஞ்சையின் வரலாறு பற்றி நாம் என்ன தெரிந்துகொள்ள முடியும் என்று ஸ்வர்ணமால்யா தமிழில் பேசுவார், பாடுவார், அபிநயம் புரிவார்.

குறுந்தொகை, சங்க இலக்கியத்திலேயே மிகவும் சுவை வாய்ந்தது. அதுதான் பிற சங்க நூல்களையெல்லாம்விடப் பழமையானதும்கூட என்கிறார்கள். ஆனால் அதுதான் பிற சங்கத் தொகைகளையெல்லாம்விட மிகச் சிறப்பானதும். குறுந்தொகை பற்றியும் தமிழ்க் கவிமரபு பற்றியும் ஜெயமோகன் பேச உள்ளார்.

பேராசிரியர் பாலுசாமி, சென்னை கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த்துறையில் இருப்பவர். ஆனால் வரலாறுதான் அவருக்கு விருப்பமான துறை என்று நினைக்கிறேன். நாயக்கர் கலை பற்றிதான் அவருடைய முனைவர் பட்ட ஆராய்ச்சியே. மாமல்லபுரத்தின் சிற்பங்கள் பற்றி அவர் விவரிப்பது தாளமுடியாத ஆச்சரியத்தைத் தரும். அந்தந்தச் சிற்பங்களுக்குமுன் அவர் நின்றுகொண்டு பேசினால், அங்கிருந்து நகரவே உங்களுக்கு மனம் வராது. அருச்சுனன் தபசு பற்றி அவர் ஏற்கெனவே தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டலை சார்பாகப் பேசியுள்ளார். பிற இடங்களிலும் பேசியுள்ளார். காலச்சுவடு வாயிலாகப் புத்தகமும் வெளியாகியுள்ளது. ஆனால் மேலும் விரிவான ஒரு கூட்டத்தின்முன் இதனைப் பேச மீண்டும் அவரை அழைத்திருக்கிறோம்.

குடவாயில் பாலசுப்ரமணியன், தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் கியூரேட்டராக இருந்து ஓய்வு பெற்றவர். வரலாற்றாளர். கல்வெட்டாளர். ஏகப்பட்ட கல்வெட்டுகள், சிலைகள், காசுகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து அவை யாருடையவை, அவற்றில் என்னென்ன சொல்லப்பட்டிருக்கின்றன என்பதையெல்லாம் வரலாற்று நோக்கில் வெளியிட்டுள்ளவர். தஞ்சைப் பெரிய கோவில் பற்றிய இவருடைய புத்தகம் முக்கியமானது. இவர் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் வரலாறையும் கங்கைப் படையெடுப்பையும் ராஜேந்திர சோழனுடைய வாழ்க்கையையும் தொடுவதோடு, அந்தக் கோவிலில் உள்ள சிற்பங்கள், பிற கட்டுமானங்கள், அங்குள்ள கல்வெட்டுகள், பிற்காலக் கொடைகள் என பலவற்றைப் பற்றியும் விரிவாகப் பேசப்போகிறார்.

இன்னொரு பேச்சைத் தரப்போவது ஸ்தபதி உமாபதி ஆசார்யா. இவர் விஸ்வகர்மா குடும்பத்தைச் சேர்ந்தவர். பரம்பரை பரம்பரையாகக் கோவில் கட்டுதல், சிலை வடித்தல் ஆகியவைதான் இவர்களுடைய தொழில். இன்றைய எஞ்சினியர்கள் வியக்கும் வண்ணம் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் சமைக்கப்பட்ட பல கோவில்கள் தமிழகம் முழுவதும் உள்ளன. இவற்றை இந்த ஸ்தபதிகள் எப்படிக் கட்ட ஆரம்பிப்பார்கள்? எம்மாதிரியான பயிற்சி பெற்றவர்கள் இவர்கள்? ஒரு சிலையை வடிப்பதற்குமுன் என்ன செய்வார்கள்? எந்த மாதிரியைக் கொண்டு இவற்றை உருவாக்குவார்கள்? இதுபோன்ற பல கேள்விகளுக்கெல்லாம் இந்தப் பேச்சில் விடை கிடைக்கலாம்.

***

ஒவ்வொரு பேச்சும் சுமார் 90 நிமிடங்கள். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், 15 நிமிடத்துக்கு ஒரு சிறு அறிமுக உரை இருக்கும். இதனை வேறு ஒருவர் வழங்குவார். பல்லவர் கலை, சோழர் கலை, சங்க இலக்கியம், நாட்டியம், இப்படி அன்றன்றைய டாபிக் சார்ந்து மிகச் சிறியதோர் அறிமுகமாக இது இருக்கும்.

இந்த நிகழ்ச்சி பற்றி உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள்.

இது தொடர்பாக தனிப்பட்ட நபர்களது நன்கொடைகளை வரவேற்கிறோம். நன்கொடை தர விரும்புபவர்கள் என்னைத் தொடர்புகொள்ளலாம். (மொபைல்: 98840-66566). ஏதேனும் நிறுவனம் இந்நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர்ஷிப் தர விரும்பினாலும் என்னைத் தொடர்புகொள்ளுங்கள்.

தொடர்புள்ள ஜெயமோகனின் பதிவு

Saturday, December 10, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: இந்தியா உடையுமா? (பாகம் 3)

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள உடையும் இந்தியா: ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் என்ற புத்தகத்தை முன்வைத்து, இந்தியா எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் எவையெவை என்று ஓர் அலசல். புத்தக ஆசிரியர் அரவிந்தன் நீலகண்டனுடன்.



கருப்பாயி என்கிற நூர்ஜஹான்

அன்வர் பாலசிங்கம் எழுதி கலங்கைப் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தக் கதையை நேற்று இரவு படித்து முடித்தேன். சிறிய புத்தகம். தொண்ணூற்றி சொச்சம் பக்கங்கள்.

கதை எழுதும் வடிவம் அவருக்குச் சிக்கவில்லை. மொழிக்குழப்பம், நீண்ட, தேவையில்லாத வசனங்கள் பல இடங்களில். இந்தச் சின்னப் புத்தகத்திலுமே அலுப்பூட்டக்கூடியமாதிரி மீண்டும் மீண்டும் வரும் பேட்டர்ன்.

எனவே அதில் உள்ள கருத்தை மட்டும் எடுத்துப் பார்ப்போம். கதை ஒரு முக்கியமான சமூக நிகழ்வை முன்வைத்து அதற்குத் தீர்வு கிடைக்குமா என்ற கேள்வியை கேட்கிறது.

1981-ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டைக்கு அருகில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில், தேவர் சாதியினரின் அடக்குமுறையைத் தொடர்ந்து எதிர்கொண்டுவந்த பல பள்ளர் குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்துக்கு மாறின. அதைத்தான் கதைக்களனாக எடுத்துக்கொண்டுள்ளார் ஆசிரியர். அவருமே அப்படி மதம் மாறி அந்தச் சமூகத்தில் வாழும் ஒருவரோ என்று நினைக்கிறேன். அப்படித்தான் என்றோ, இல்லை என்றோ புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

கதையில் மீனாட்சிபுரம், காமாட்சிபுரம் என்ற பெயரில் வருகிறது.

இஸ்லாத்துக்கு மதம் மாறியபிறகும் சாதிப் பிரிவினை அப்படியே உள்ளது என்றும், “நவ் முஸ்லிம்கள்” என்ற பெயரில் அவர்கள் விலக்கிவைக்கப்படுகிறார்கள் என்றும் 40 வயதைக் கடந்தபின்னும் அவர்களுடைய பெண்களுக்குத் திருமணம் ஆவதில்லை, ஏனெனில் அவர்களைப் பெண்ணெடுக்க அருகில் உள்ள கிராமங்களிலிருந்து பிற ஆண் முஸ்லிம்கள் வருவதில்லை என்றும், இதன் காரணமாக ஏற்படும் நெருக்கடியில் சில வயதான, திருமணமாகாத பெண்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்றும் ஒரு பிரச்னையைக் கதை முன்வைக்கிறது.

மதம் மாற பள்ளர்கள் முடிவெடுத்ததும் ஓடிவந்து அவர்களை வரவேற்று உதவிய மைய நீரோட்ட முஸ்லிம் சமூகம், மற்றபடி அவர்களுடன் கொண்டுகொடுத்து உறவு வைத்துக்கொள்வதில்லை என்றும் இரட்டைக் குவளைமுறை அவர்களுக்கு எதிராக பிற முஸ்லிம்களாலேயே கைகொள்ளப்படுகிறது என்றும், அத்துட்ன ‘பிரியாணிக்காக மதம் மாறினார்கள்’ என்ற இழிச்சொல்லும் வேறு இந்துக்களிடமிருந்து வருகிறது என்றும் ஆசிரியர் சொல்கிறார். அப்படி இருக்கும்போது மதம் மாறுவதன் அர்த்தம் என்ன? Between a rock and a hard place என்பார்களே, அதுபோன்ற நிலைமை இவர்களுக்கு. கிராமச் சமூகத்தில் ஆதிக்க இந்துச் சாதிகளால் துன்பம். இதெல்லாம் போய்விடும் என்று மதம் மாறினாலோ, உள்ளதும் போச்சுடா என்ற நிலைமை. ஒரு பக்கம், பெற்றுவந்த இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளும் கிடையாது. கட்டிக்கொள்ளப் பையன்கள் கிடைக்கமாட்டார்கள். பிற “பாரம்பரிய” முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்படாத சூழல். இழிசாதி என்ற பட்டப்பெயருடன், இப்போது பிரியாணிக்கு மதம் மாறினவன் என்ற இழிசொல்லும் சேர்ந்துகொள்கிறது. இத்துடன் ரகசிய போலீஸ் வேறு வந்து, சவூதி அரேபியா போனாயா, யார் உன்னை அங்கே அழைத்தது, யார் இந்த ட்ரிப்புக்கு ஃபைனான்ஸ், அங்கே என்ன செய்தாய் என்று ‘தீவிரவாதியோ?’ என்ற சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது.

40 வயதாகியும் மணம் ஆகவில்லையே என்பதைவிட அதனால் தன் தந்தை தினம் தினம் மனமுடைந்து சாகிறாரே என்ற வருத்தத்தால் உயிர் மாய்த்துக்கொண்ட கருப்பாயியாக இருந்து நூர்ஜஹானாக மாறிய பெண் எழுதிவைக்கும் நீண்ட தற்கொலைக் கடிதத்திலிருந்து தொடங்கும் கதை, இறுதி வரியில், அந்த மக்கள் தாம் மாறிய முஸ்லிம் சமுதாயத்திலேயே தொடர்ந்து இருப்பார்களா அல்லது மீண்டும் மதத்தை மாற்றிக்கொள்ளப்போகிறார்களா என்ற சந்தேகத்துடன் முடிக்கிறது.
“எ ...மம்முது பள்ளிக்கு வாரியாத்தா என்று சொன்னதும் மொத்த ஜமாத்தும் அவரைப் பின் தொடர்ந்ததா? இல்லை அங்கேயே நின்றுவிட்டதா?”
இந்தக் கதை கேட்கும் கேள்விகள் ஏராளம். தென் தமிழ்நாட்டின் கிராமங்களில் இன்றும் தொடரும் சாதிய அடக்குமுறை. முக்கியமாக தேவர் - பள்ளர் சிக்கல். அதிலிருந்து வெளியேற முடியாத இறுக்கமான சூழல். மதமாற்றம் ஒரு தீர்வாக முன்வைக்கப்படுதல். ஆனால் அது தீர்வே அல்ல என்பது முப்பதாண்டுகளுக்குப் பின்னர்தான் கண்டுபிடிக்கப்படுதல். இப்போது என்னதான் செய்வது?

என்னதான் செய்வது?

***

கருப்பாயி என்கிற நூர்ஜஹான்: நாவல், அன்வர் பாலசிங்கம், கலங்கைப் பதிப்பகம்-யாதுமாகிப் பதிப்பகம், செங்கோட்டை, திருநெல்வேலி.
புதுக் காலணித் தெரு, கலங்காத கண்டி, பூலான்குடியிருப்பு அஞ்சல், செங்கோட்டை தாலுகா, திருநெல்வேலி 627813, தொலைபேசி எண்கள் 94458-01247, 97914-98999, பக்கங்கள் 102, விலை ரூ. 100.

Friday, December 09, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: இந்தியா உடையுமா? (பாகம் 2)

கிறிஸ்தவ மதமாற்றம் குறித்து, உடையும் இந்தியா: ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் என்ற புத்தகத்தை முன்வைத்து அரவிந்தன் நீலகண்டனுடன் நான் உரையாடுகிறேன்.



Thursday, December 08, 2011

முல்லைப் பெரியாறு பிரச்னை

இந்தியாவில் இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லாப் பிரச்னைகளும் இறுதியில் வன்முறையில்தான் போய் முடியும். ஏனெனில் மாநில அரசியலை மட்டும் முன்வைப்போர் மட்டுமல்ல, தேசியக் கட்சிகளின் உள்ளூர் கிளைகளும் அதே மாதிரியான ஸ்டேட்ஸ்மன்ஷிப் இல்லாத வாக்குவங்கி அரசியலை மட்டுமே முன்வைக்கக்கூடியவை.

எப்போது நீதிமன்றங்கள், ஆர்பிட்ரேஷன், பிரதமரின் தலையீடு ஆகியவை வேலை செய்யவில்லையோ, எப்போது மாநிலங்கள் தத்தம் சட்டமன்றங்களைக் கூட்டி உச்ச நீதிமன்ற ஆணையைச் செயல்படுத்தாத முறையில் சட்டங்களை இயற்றுகிறார்களோ, அப்போதே இதுபோன்ற பிரச்னைகளுக்கு நியாயமான தீர்ப்புகள் இல்லை என்பதாகிவிட்டது.

இது கர்நாடகம்-தமிழகம், தமிழகம்-கேரளம், பஞ்சாப்-ஹரியானா-ராஜஸ்தானம், மகாராஷ்டிரம்-ஆந்திரா-கர்நாடகம் என்று பல்வேறு இடங்களிலான நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னையை மட்டுமல்ல, மகாராஷ்டிரம்-கர்நாடகம், கர்நாடகம்-கேரளம், கேரளம்-தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகள் தொடர்பாகவும் மொழிப் பெரும்பான்மையினர்/சிறுபான்மையினர் தொடர்பாகவும் நிகழும் பிரச்னைகளையும் உள்ளடக்கியது.

முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரளா பக்கம் தவறு, தமிழகம் பக்கம்தான் நியாயம் என்று அதனை விரித்துப் பேசுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. மாறாக, நீங்கள் கேரளத்தவராக இருந்து (மலையாளியோ, இல்லை தமிழரோ அல்லது வட நாட்டவரோ), கேரளத் தரப்பு நியாயமற்றது என்று நினைத்தால் என்ன செய்வீர்கள் என்பது பற்றியதுதான் என் சிந்தனை. அதுவும் நீங்கள் சாதாரண ஆசாமியாக இல்லாமல் ஒரு கலைஞராக, எழுத்தாளராக, அரசியல்வாதியாக இருந்து, கேரளா முல்லை பெரியாறு பிரச்னையில் எங்கெல்லாம் தவறு இழைத்திருக்கிறது என்பதை அருகிலிருந்து பார்த்தவராக இருந்தால் என்ன செய்வீர்கள்? என்ன செய்துள்ளீர்கள்?

கேரளத்தில் மாற்றுக் கருத்துக்கான இடம் இன்று இல்லவே இல்லையா? கேரள இதழ்களைப் படிப்போர் இதுபற்றிக் கருத்து சொல்லமுடியுமா?

கிழக்கு பாட்காஸ்ட்: இந்தியா உடையுமா? (பாகம் 1)

இந்தியாவைச் சூழ்ந்திருக்கும் அபாயங்கள் எவையெவை? ராஜிவ் மல்ஹோத்ராவும் அரவிந்தன் நீலகண்டனும் எழுதியிருக்கும் உடையும் இந்தியா: ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் என்ற புத்தகத்தை முன்வைத்து அரவிந்தன் நீலகண்டன் என்னுடன் உரையாடுகிறார். மொத்தம் மூன்று பாகங்களாகச் செல்லும் நீண்ட உரையாடல் இது. முதல் பாகத்தில் ஆரிய, திராவிடம் ஆகியவை எவ்வாறு இனவாதச் சிந்தனைகளாக ஆகின, ஆரியப் படையெடுப்பு என்பது உண்மையா, திராவிடர்கள் யார், லெமூரியா கண்டம் இருந்ததா, விவிலியத் தொன்மங்களின் அடிப்படையில் காலனிய அறிஞர்கள் இந்தியாவை எப்படிப் பார்த்தனர், எல்லிஸ், கால்டுவெல், பர்ரோ, எமினோ, போப், தேவநேயப் பாவாணர், பெரியார், அண்ணா போன்ற பலரையும் இதில் ஒரு பார்வை பார்க்கிறோம்.

அந்நிய நேரடி முதலீடு - 3/n

எவ்விதத்தில் ஒரு தொழிலில் முதலீடு வருகிறது?
  1. சொந்தக் காசு.
  2. குடும்பத்தவரிடம் பங்குப் பணமாகப் பெறுவது. இதற்கு லாபத்தில் ஒரு கட்டத்தில் பங்கு தரவேண்டும்.
  3. வெளியாரிடமிருந்து கடன் வாங்குவது. இது தனி நபர்களாக இருக்கலாம், வங்கிகளாக இருக்கலாம். வாங்கிய பணத்துக்கேற்ப, தொழிலில் லாபம் வருகிறதோ, இல்லையோ, வட்டி கட்டிக்கொண்டே இருக்கவேண்டும்
  4. ரிஸ்க் முதலீடு. நம் தொழிலின் தன்மை அறிந்து, அதில் உள்ள சாதக பாதகங்களைப் புரிந்துகொண்டு, இதில் முதலீடு செய்யப்படும் பணம் திரும்பக் கிடைக்காமலேயே போகும் என்பதை முழுதும் உணர்ந்துகொண்டு தனி நபர்களோ, நிதி நிறுவனங்களோ அந்தத் தொழிலில் முதலீடு செய்யும் பங்குத் தொகை. ஈக்விட்டி என்ற பெயரால் அறியப்படுவது.
இந்தியாவில் ரிஸ்க் முதலீடுகள், அதுவும் நம் உறவினர் அல்லது சாதி இல்லாதோரின் தொழிலில் போடப்படும் ரிஸ்க் முதலீடுகள் ஜீரோ என்றே சொல்லிவிடலாம். நம்மிடம் வென்ச்சர் கேபிடல் பின்னணியே கிடையாது. ஒரு கட்டத்தில் பெரும் ஜோக்காக ஒவ்வொரு மாநில அரசும் ஒரு வென்ச்சர் கேபிடல் நிறுவனத்தை ஆரம்பித்தது. அதைக்கொண்டு அவை உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை. எப்போது அவற்றை இழுத்து மூடினார்கள் என்றும் ஞாபகம் இல்லை. மத்திய அரசின் சில அமைப்புகள் இன்றும்கூட இதுபோல் வென்ச்சர் கேபிடல் வேலைகளைச் செய்கின்றன. உதாரணமாக NRDC என்ற அமைப்பு. NRDC முதலீடு செய்திருக்கும் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில், NRDC சார்பில் நான் இயக்குனராக உள்ளேன். ஆனால் தான் முதலீடு செய்திருக்கும் அந்த கம்பெனி பற்றி NRDC பெரிதாகக் கவலைப்படுவதே இல்லை. இந்த ஆட்டிட்யூடை வைத்துக்கொண்டு வென்ச்சர் கேபிடலில் என்ன சாதிக்க முடியும்?

அந்நிய வென்ச்சர் கேபிடல் கம்பெனிகள் இந்தியாவில் காலூன்றத் தொடங்கியதும்தான் இந்தத் துறை பற்றிய உண்மையான புரிதல் நம் நாட்டுக்கு வந்தது. இந்தியர்கள் பலர் அமெரிக்காவில் அந்நாட்டு வென்ச்சர் கேபிடல் கம்பெனிகளில் வேலை செய்தனர். அவர்கள் இந்தியா வந்து அப்படிப்பட்ட கம்பெனிகளைத் தொடங்கினர். கடந்த இருபதாண்டு காலத்தில் செல்வம் சேர்த்த இந்தியர்கள் சிலர் வென்ச்சர் கேபிடல்/பிரைவேட் ஈக்விடி அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் இவை போதா. இப்படி உருவாக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் அந்நிய முதலை அடிப்படையாகக் கொண்டிருந்தால், அவற்றால் சில துறைகளில் முதலீடு செய்யவே முடியாது. சில துறைகளில் ஓரளவுக்குத்தான் முதலீடு செய்யமுடியும்.

வெறும் ஐடியாக்களிலும் ஆட்கள்மீதும் முதலீடு செய்யும்போதுதான் புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில்துறைகள், புதிய சேவைகள் தோன்றுகின்றன. இந்த முதலீடு ரிஸ்க் முதலீடாக மட்டுமே இருக்கமுடியும். ஏனெனில் பத்துக்கு ஒன்பது அழிந்துதான் போகும். ஆனால் இத்தனை அழிவைத் தாண்டியும் மிச்சமுள்ள இந்த அமைப்புகள்தான் நவீன மனித சமுதாயத்தைப் பெருமளவு முன்னேற்றிச் செல்பவையாக இருக்கும். அது மின்சாரம், எலெக்ட்ரிக் பல்ப், கார், பைக், கம்ப்யூட்டர், கூகிள் என்று எதுவாக இருந்தாலும் சரி.

இப்போது உங்களுக்குத் தெரியும் ஏன் இவையெல்லாமே எங்கோ வெளி நாடுகளில் மட்டுமே உருவாகின்றன என்பது. ஏனெனில் இவற்றை இந்தியாவில் உருவாக்கத் தேவையான முதலீட்டு முறை கிடையாது. இந்தியர்கள் பின்தங்கிய நிலையில் இல்லை. இந்திய முதலீட்டு அமைப்புகள் மட்டும்தான் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. அந்த முதலீட்டு அமைப்பைத்தான் மாற்றவேண்டும். அதற்கு இந்திய கேபிடல், அந்நிய கேபிடல் இரண்டையும் லாபத்தையும் ரிஸ்க்கையும் நோக்கிச் செலுத்துவதற்கான அனைத்துத் தடைகளையும் உடைக்கவேண்டும்.

உண்மையான கேபிடலிசம் என்பது இதுதான். முதலீடு, கூரிய சிந்தனை, உழைப்பாளிகள் ஆகிய அனைவரையும் ஒன்று சேர்த்து நியாயமான லாபத்தை நோக்கிச் செலுத்தும் ஓர் அமைப்பு. அந்த அமைப்பில் குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் அந்த அமைப்பு ஒன்றுதான் இன்றைய அனைத்து வளர்ச்சிக்குமே காரணம். இந்த கேபிடலிச அமைப்பு மட்டும் இல்லையென்றால் நமக்கு இன்று எந்த வசதி வாய்ப்புமே இருந்திருக்காது. சாலைகள் இருக்காது; கல்வி நிலையங்கள் இருக்காது; உணவுப் பற்றாக்குறை மட்டுமே இருக்கும்; வியாதிகளுக்கு விடிவு கிடையாது; கேளிக்கை கிடையாது; ஓய்வு கிடையாது; சுக வாழ்வு கிடையாது.

முதல், உழைப்பு, பொருள்கள், சேவை ஆகியவற்றை எவ்விதத் தடையுமின்றி பயணிக்க வைத்தால் என்னென்ன பிரச்னைகள் வரும் என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்துவிடுவோம். நான் ஒட்டுமொத்தமான தடையற்ற நிலையைக் கோரவில்லை. அதில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அடுத்து வரும் பகுதிகளில் இவற்றை அலசுவோம்.

Friday, December 02, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: ஐரோம் ஷர்மிளா, மணிப்பூரின் இரும்புப் பெண்மணி

கிழக்கு பாட்காஸ்ட்டில் இன்று, நானும் மருதனும் ஐரோம் ஷர்மிளா பற்றிப் பேசுகிறோம். தீப்தி பிரியா மெஹ்ரோத்ரா ஆங்கிலத்தில் எழுதி, ஜெ.ராம்கி தமிழில் மொழிபெயர்த்து, கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ஐரோம் ஷர்மிளா: மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என்ற புத்தகத்தை இங்கே வாங்கலாம்.



Thursday, December 01, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு (2)

நேற்று இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு பாகம் 1 பற்றி நானும் பிரசன்னாவும் பேசினோம். இன்று அதன் தொடர்ச்சியாக, பாகம் 2 பற்றிப் பேசியுள்ளோம். அதன் வீடியோ இங்கே:


Wednesday, November 30, 2011

அந்நிய நேரடி முதலீடு - 2/n

உற்பத்தியாளர் - சி & எஃப் - மொத்த விற்பனையாளர் - சில்லறை விற்பனையாளர் - நுகர்வோர் என்ற இந்த மாபெரும் சங்கிலி, நவீன வணிக யுத்தி. பாரம்பரியமாகப் பொருள்கள் உருவாக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்ததிலிருந்து மாற்றம் பெற்ற ஒன்று. ஆனால், மேல்நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது என்று சொல்லமாட்டேன்.

ஒரு காலத்தில் இந்தியாவும் சீனாவும் மாபெரும் உற்பத்தி நிலையங்களாகச் செயல்பட்டன. இந்தியர்கள்போல பருத்தித் துணி நூற்று, அதில் சாயம் சேர்த்து, டிசைன்களைச் செய்யும் நுட்பம் உலகில் எங்கும் இருக்கவில்லை. அதனால்தான் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியும் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியும் இந்தியா வந்து அந்தத் துணிகளை வாங்கிச் சென்றன. பின் நிலைமை மாறியது.

தொழில்நுட்பம், வணிகத் திறன், முதலீடு, சந்தை ஆகிய நான்கும் சரியாக அமைந்தால்தான் அங்கே லாபம் சாத்தியமாகும். இன்று மிகச் சில துறைகள் தவிர்த்து, தொழில்நுட்பத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். ராக்கெட் தொழில்நுட்பம், அணுத் தொழில்நுட்பம் மற்றும் சில அதி உயர் நுட்பங்கள் தாண்டி அனைத்தும் இன்று இந்தியாவில் ஓரளவுக்கு இருக்கின்றன என்று சொல்லலாம். ஆனால் 1990-களுக்கு முந்திவரை இந்தியாவில் சொந்தமாக கார்கள் தயாரிக்கத் திறன் கிடையாது. இரு சக்கர மோட்டார் வாகனங்கள் தயாரிப்பிலும் சரியான திறன் கிடையாது. அதனால்தான் தொழில்நுட்ப உறவுகளை ஏற்படுத்திக்கொண்டோம். மாருதி சுசுகி, டிவிஎஸ் சுசுகி, ஹீரோ ஹோண்டா, இப்படி.

ஆனால் இன்று நம் கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு உலகின் பல மூலைகளிலிருந்தும் வேண்டிய தொழில்நுட்பத்தை வாங்கிக்கொள்ளலாம்.

அடுத்து வணிகத் திறன். இதுவும் ஒன்றும் பெரிய விஷயமல்ல. நம் நாட்டிலேயே கடந்த மூன்று பத்தாண்டுகளில் விற்பனைத் திறன் படைத்த பல எக்சிகியூட்டிவ்கள் உருவாகியுள்ளனர். விளம்பர ஏஜென்சிகள் (பெரும்பாலும் அந்நிய நாட்டு நிறுவனங்களின் கிளைகள்!) உருவாகியுள்ளன.

இப்போது முதலீட்டுக்கு வருவோம்.

இந்தியாவில் எக்கச்சக்கமாகப் பணம் இருக்கிறது. ஆனால் எல்லாம் புளிப் பானைக்குள் வைக்கப்பட்டிருக்கும் பணம். இந்தியர்கள் ரிஸ்க் எடுக்கும் முதலீடுகளில் தம் பணத்தைப் போடுவதே இல்லை. அதற்கான பாரம்பரியம் வெகு சில சாதிக் குழுக்களில் மட்டுமே இருந்தது. தமிழ் பதிப்புலகம் பெரும்பாலும் செட்டியார்களின் கைகளிலேயே இன்றும் இருப்பது ஏன்? அவர்கள்தான் அதில் முதலீடு செய்யத் தயாராக இருந்தார்கள்.

ஏழை பாழைகள் எல்லாம் தம் பணத்தைக் கொண்டு பெரும் முதலீடு ஒன்றில் இறக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. பணம் படைத்தவர்களைப் பற்றித்தான் என் கருத்தே. மாறாக, 16-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே இங்கிலாந்தவர்களும் டச்சுக்காரர்களும் ஜாயிண்ட் ஸ்டாக் கம்பெனிகளை உருவாக்கி, பணத்தை முதலீடு செய்து, பெரும் வணிகத்தில் இறங்கினார்கள். தொழில்முனைய விரும்பும் எவருக்கும் அந்தப் பணம் கிடைத்தது. இந்தியாவில் பார்சிகள், செட்டியார்கள், மார்வாடிகள், குஜராத்தி மேமோன்கள் போன்ற சில சாதிக் குழுக்களிடையே மட்டும்தான் இது சாத்தியமானதாக இருந்தது.

இந்தியாவில் சுதந்தரத்துக்குப் பிறகு 1990-கள் வரை, பணம் படைத்தவர்கள் மட்டுமே நிறுவனங்களை உருவாக்க முடிந்தது. அவர்களுக்கு ஞானம் உள்ளதா என்பதெல்லாம் முக்கியமில்லை. விஷயம் தெரிந்த நான்கைந்து பேரை அடிமை வேலையாளாகக் குறைந்த சம்பளத்துக்கு வைத்துக்கொண்டால் போதும்.

இது பெரியளவில் மாறத் தொடங்கியதே 1990-களின் பிற்பகுதியில்தான். அமெரிக்காவின் சிலிகான் வேலியை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே வென்ச்சர் கேபிடல் பணம் 1970-களிலிருந்து வெள்ளமெனப் பாய்ந்தது. புத்துணர்ச்சி மிக்க இளைஞர்கள், தம் ஐடியாக்களை மட்டுமே முன்வைத்து, முதலீட்டாளர்களின் ரிஸ்க் கேபிடலை எடுத்துக்கொண்டு பல புதிய கம்பெனிகளை உருவாக்கினார்கள். 10-க்கு 9 தோற்றுப்போயின. ஆனால் வெற்றி பெற்ற ஒவ்வொன்றும் மாபெரும் நிறுவனமாக ஆனது.

இன்று இந்தியர்கள் அஞ்சி நடுங்கும் வால்மார்ட்டோ டிஸ்னியோ கோககோலாவோ சிறுவாட்டுப் பணத்தால் வளர்ந்துவிடவில்லை. முதலீட்டாளர்களின் ரிஸ்க் முதலீட்டால்தான் வளர்ந்தன.

இதனை மேலும் புரிந்துகொள்ள முதலீடுகளைப் பற்றிய முழுமையான புரிதல் முதலில் அவசியம். அடுத்து அதனைப் பார்ப்போம்.

அந்நிய நேரடி முதலீடு - 1/n

இந்தியாவில் பெரும்பாலான விவாதங்களை ஒரு தரப்பு படுவேகமாகக் கடத்திக்கொண்டு போய்விடுகிறது. எதிர்த் தரப்பு தன் வாதத்தை வைப்பதற்கு முன்னால் முதல் தரப்பு மாபெரும் குண்டுகளைத் தூக்கிப் போட்டுவிடும். எதிர்த் தரப்பால் செய்யக்கூடிய ஒரே விஷயம், பதுங்கு குழிக்குள் டபார் என்று பாய்ந்து ஒளிந்துகொள்வது மட்டுமே.

கூடங்குளத்தை எடுத்துக்கொண்டால், அணுக் கதிர்வீச்சில் கோடி பேர் சாவார்கள், நாடே நிர்மூலமாகிவிடும் என்று ஒரு தரப்பு சொல்லிவிட்டால், எதிர்த் தரப்பு காலி. இல்லை, நடக்காது என்றால் எப்படி என்று நிரூபி என்பார்கள். அணு மின்சாரத்தின் நன்மைகள் பற்றியெல்லாம் பேச இங்கு இடமே கிடையாது. முதல் தரப்பின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலேயே காலம் கழிந்துவிடும். முல்லைப் பெரியாறு என்றால் ஒரு தரப்பு, 35 லட்சம் மக்களின் உயிரே போய்விடும் என்று ஆரம்பிக்கும். பதில் பேசுவதற்குள் சினிமா காண்பித்து, அணை 3-டியில் உடைந்து, மக்கள் நீரில் மிதந்துகொண்டிருப்பார்கள்.

இப்போது சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு. 40 லட்சம் மக்களை அல்லது 4 கோடி மக்களை அழிக்கப்போகிறது அணு குண்டு. எப்படி என்பதெல்லாம் கவலையில்லை. விவசாயிகள் ஒழிந்தார்கள். எதிர்ப்பேச்சு இல்லை. அண்ணாச்சி கடைகள் காலி. ம்ஹூம், என்ன பதில் சொல்வது?

எனவே நான் என் கருத்துப் போரை ஆரம்பித்துவிட்டேன். தமிழ்பேப்பரில் நான் எழுதிய கட்டுரை இதோ. ஆனால் அது போதாது. பல தெளிவுகள் தேவை. எனவே இந்த நீண்ட தொடர் உரையாடலில் தினமும் கொஞ்சமாவது எழுதப்போகிறேன்.

முதலில் ரீடெய்ல் டிரேடிங் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம்.

உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையே யாராவது இருக்கவேண்டும். பெரும்பாலான உற்பத்தியாளர்கள் நேரடியாக நுகர்வோரை அணுகத் தெரியாதவர்கள் அல்லது அணுக விரும்பாதவர்கள். மேலும் நுகர்வோரை அணுக, அதற்கான கட்டுமானம் தேவை. அந்தக் கட்டுமானத்தைத்தான் மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும், ஸ்டாக்கிஸ்டுகளும் வழங்குகிறார்கள்.

மொத்த வியாபாரி பெரும்பாலும் நேரடியாக நுகர்வோருக்கு விற்கமாட்டார். அவரிடமிருந்து பெரும்பாலும் சில்லறை வியாபாரிகள்தான் வாங்குவார்கள். பின் அவர்கள் நுகர்வோருக்கு நேரடியாக விற்பார்கள். இதில் C&F agents (carrying & forwarding) என்று சிலர் இருப்பார்கள். இவர்கள் பொருள்களைக் கிடங்குகளில் வைத்திருப்போர் மட்டுமே. உற்பத்தியாளரே மொத்த அல்லது சில்லறை வியாபாரிகளைப் பிடித்து, அவர்களிடம் பொருள்களை விற்றுவிட்டு, சி&எஃப் எஜெண்டிடம் சொல்லி, யாருக்கு அனுப்பவேண்டுமோ அவர்களுக்கு அனுப்பச் சொல்லிவிடுவார். பொருள்களை வைத்திருந்து, அனுப்புவதற்கு இவர்களுக்கு ஒரு கட்டணம் தரப்படும்.

இந்தக் கட்டுமானம் இல்லாமல் இன்று இந்தியாவில் பெரும்பாலும் எந்தப் பொருளுமே விற்பனைக்கு வருவதில்லை என்று சொல்லிவிடலாம். இதில் எவையெல்லாம் அடங்கும்?
  1. காய்கறி, பழம்
  2. அரிசி, பருப்பு, உப்பு, மிளகாய் வற்றல் போன்ற மளிகை சாமான்கள்
  3. குளியல் சோப், இத்யாதிகள்
  4. மர, இரும்புச் சாமான்கள், பாத்திரம் போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள்
  5. மின்னணுப் பொருள்கள் (டிவி, ஃப்ரிட்ஜ், கம்ப்யூட்டர்...)
  6. புத்தகங்கள்
  7. மியூசிக் குறுந்தட்டுகள், டிவிடிகள்
ஐடியா கிட்டத்தட்டப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த மாதிரியிலிருந்து சில வேறுபாடுகளும் உள்ளன.

1. பாரம்பரியச் சந்தை முறை: கிராமங்களில் இன்றும் இது தொடர்கிறது. காய்கறி, மளிகைப் பொருள்கள், சில கைவினைப் பொருள்கள் ஆகியவை உற்பத்தியாளர்களாலேயே சந்தைக்கு (உழவர் சந்தை, கிராமச் சந்தை) கொண்டுவரப்பட்டு, நுகர்வோருக்கும் ஏஜெண்டுகளுக்கும் நேரடியாக விற்கப்படுகின்றன.

2. நேரடி விற்பனை முறை: எந்த இடைத்தரகரும் இல்லாமல், இணையம் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும், நேரடி விற்பனையாளர் மூலமாகவும் நுகர்வோருக்கு விற்பனை செய்வது. டெல் கம்ப்யூட்டர்கள், யுரேகா ஃபோர்ப்ஸ் வேக்கும் கிளீனர், அக்வா கார்ட் வாட்டர் ஃபில்ட்டர் போன்றவை.

3. கம்பெனி ஷோரூம்/ஏஜென்சி: இரு சக்கர, நான்கு சக்கர வண்டிகள் விற்பனைச் செயல்பாடு இப்படித்தான் நடக்கிறது. உற்பத்தியாளர் நேரடியாக தன் ஏஜென்சிகளை சிலருக்கு மட்டும் கொடுக்கிறார். சரக்கை நேராக அங்கே அனுப்புகிறார். இதெல்லாம் பெரும்பாலும் அதிக விலை கொண்ட பொருள்களுக்கு மட்டுமே கட்டுப்படியாகும். இந்த ஷோரூம்களில் சில காட்சிப் பொருள்கள் மட்டும் இருக்கின்றன. புக்கிங் செய்ததும், சில நாள்கள் கழித்து, வேண்டிய பொருள்கள் ஷோரூமுக்கு வந்து பின் நுகர்வோருக்குப் போகின்றன. இங்கு, விற்பனைக்குப் பிறகான சேவை முக்கியமாகிறது.

(கொஞ்சம் கொஞ்சமாகத் தொடரும்)

கிழக்கு பாட்காஸ்ட்: இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு (1)

ராமச்சந்திர குஹாவின் இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு (பாகம் 1), புத்தகத்தைப் பற்றி இன்றைய பாட்காஸ்டில் நானும் பிரசன்னாவும் பேசுகிறோம்.

இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றிய பாட்காஸ்ட் நாளை வெளியாகும்.



Tuesday, November 29, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: ஜெயமோகனின் அண்ணா ஹசாரே

நேற்றைய காஷ்மீர் பாட்காஸ்டுக்குப் பிறகு இன்று இன்னும் கொஞ்சம் தொழில்நுட்ப முன்னேற்றம். இன்று நானும் பிரசன்னாவும் ஜெயமோகனின் அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம் என்ற புத்தகத்தைப் பற்றிப் பேசியிருக்கிறோம். அதன் வீடியோ இங்கே:




நாளை வேறு ஒரு வீடியோவுடன் சந்திக்கிறோம். இன்னும் பல தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன்.

Monday, November 28, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: காஷ்மீர் - முதல் யுத்தம்

கிழக்கு பதிப்பகத்தின் சில புத்தகங்களைப் பற்றிய சில உரையாடல்களை வீடியோ பாட்காஸ்டாக வெளியிட இருக்கிறோம். அந்த வரிசையில், இப்போது அச்சுக்குச் சென்றுள்ள காஷ்மீர் - முதல் யுத்தம் என்ற புத்தகம் பற்றிய பாட்காஸ்ட் இதோ.


Friday, November 25, 2011

விக்கிமீடியா காமன்ஸ் பரிசுப் போட்டி

கடந்த சில தினங்களாக விக்கிமீடியா காமன்ஸ் தளத்தில் அசையும், அசையாப் படங்கள், ஒலிக்கோப்புகள் ஆகியவற்றைச் சேர்ப்பதற்கான ஒரு போட்டி நடந்துவருகிறது.

முதல் பரிசு $200, இரண்டாம் பரிசு $100, மூன்றாம் பரிசு $50. சில ஆறுதல் பரிசுகளும் உண்டு. முழு விவரம் இங்கே.

தமிழ்-தமிழர் குறித்த புகைப்படங்கள், அசைபடங்கள், நிலப்படங்கள், வரைபடங்கள், ஒலிக்கோப்புகள், நிகழ்பட/காணொளிகள் என எவற்றை வேண்டுமானாலும் விக்கிமீடியா காமன்ஸ் விதிகளுக்கு உட்பட்டு சமர்ப்பிக்கலாம்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவின் ஓர் அம்சம்தான் விக்கிமீடியா காமன்ஸ். எந்த அளவுக்கு எழுத்தால் ஆன விளக்கங்கள் முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியம் வரைபடங்கள், போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவை. இன்று அனைவரும் நம் கையில் மொபைல் கேமரா ஒன்றை வைத்திருக்கிறோம். அவற்றைக் கொண்டு மிக முக்கியமான ஆவணங்களை நாம் உருவாக்கலாம். எழுதுவதுகூடக் கடினமானது. ஆனால் படம் பிடிப்பது கடினமல்ல. இந்தப் படங்களால் என்ன நன்மை என்று நினைத்துவிடாதீர்கள். உங்கள் ஊர் தேர்த் திருவிழா, இயற்கைக் காட்சி, விலங்குகள், பறவைகள், பயிர்கள், செடிகொடிமரங்கள், ஆடு, மாடு, முக்கியமான மனிதர்கள் (எழுத்தாளர்கள், நடிகர்கள், கலைத்துறையினர், அரசியல்வாதிகள், தொழில்துறைத் தலைவர்கள்), மேப்கள், விளக்கப் படங்கள் எனப் பல நமக்குத் தேவையாக உள்ளன.

பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவியல் அல்லது கணிதப் பாடம் நடத்தும்போது எழுத்தோடு சேர்த்து கூடத் தரும் விளக்கப்படம் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அறிவீர்கள். இவற்றைக்கூட நீங்கள் தரமாகத் தயாரித்து சரியான ஃபார்மட்டில் விக்கிமீடியா காமன்ஸில் சேர்க்கலாம்.

பரிசைத் தாண்டி, நம் பங்களிப்பால் எத்தனை ஆயிரம் மாணவர்களும் சாதாரண மக்களும் அறிவைப் பெறப் போகிறார்கள் என்பதைச் சிந்தியுங்கள்.

Sunday, November 20, 2011

விக்கி கான்ஃபரன்ஸ் இந்தியா ஜூரி விருதுகள்

விக்கி இந்தியா மாநாடு சற்றுமுன் நிறைவுபெற்றது. ஒவ்வொரு இந்திக் மொழி விக்கிபீடியாவிலும் அதிகப் பங்களிப்பு செய்தவர்கள் பாராட்டப்பட்டனர். இறுதியில் ஜூரி விருதுகள் என்று மூன்று கொடுத்தார்கள். முதலாக செங்கைப் பொதுவன்.


இவரை நான் முதலில் பார்த்தது, மத்திய செம்மொழி தமிழ் நிறுவனத்தில். தமிழ் எப்படி எழுதுவது என்று அவர் கேட்டு, என்.எச்.எம் ரைட்டரை நிறுவச் சொல்லிக்கொடுத்தேன். இவருக்கு வயது 76. கைகள் நிற்காமல் ஆடிக்கொண்டே இருக்கும். தம்ளரைப் பிடித்துக்கொள்ள முடியாது. அவருக்குத் தேநீர் கொடுக்கும்போது, இரு கைகளுக்கு இடையில் கைக்குட்டையைப் பிடித்துக்கொண்டு அதற்கிடையில் தேநீர்க் கோப்பையைப் பிடித்துக்கொண்டுதான் குடிப்பார். உணவு உண்ணும்போது அவருடைய மனைவி உதவினால்தான் அவரால் உண்ணமுடியும்.

அப்படிப்பட்டவர் எப்படி விக்கிபீடியாவுக்குப் பங்களிக்கிறார் என்பது ஆச்சரியமே.

அடுத்து விருது பெற்றவர், அனிருத் என்ற ஹிந்தி விக்கிபீடியா பங்களிப்பாளர். இவர் கண் பார்வையற்றவர்.


இவர் ஹிந்தி விக்கிபீடியாவுக்கு இதுவரையில் பங்களித்திருப்போரில் ஏழாவது இடத்திலும், இப்போது பங்களிப்போரில் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார் என்றார்கள். மிகுந்த ஆச்சரியம்தான்!

விக்கி கான்ஃபரன்ஸ் இந்தியா (படங்கள்)

இப்போது நடந்துகொண்டிருக்கும் அரங்கும் மும்பை பல்கலைக்கழகக் கட்டடங்களும்.







மும்பை மைதானத்தில் கிரிக்கெட்

இன்று காலை, சில நிமிடங்களுக்குமுன் எடுத்தது. மும்பை பல்கலைக்கழகம் (ஃபோர்ட்) எதிராக உள்ள மைதானம்.






Friday, November 18, 2011

கல்வி உரிமை என்ற பெயரால் - 4

5. கல்வி வாய்ப்பை நம் பிள்ளைகளுக்கு அதிகமாக வழங்கவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்?

முதலில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவேண்டும். அதற்கான ஒரு வெள்ளை அறிக்கையையும் நாம் பார்ப்பதில்லை. தன் குப்பைகளைப் பற்றிக் கவலைப்படாத ஓர் அரசுதான் தனியார் கல்வி நிறுவனங்களைத் தண்டிக்கப் பார்க்கிறது. தம் பள்ளிகளை சாக்கடையாக வைத்திருக்கும் ஓர் அரசு, அதனைச் சீர் செய்ய ஒரு துரும்பையும் கிள்ளிப் போடுவதில்லை. புதிதாக அரசு, பள்ளிகளை உருவாக்கவேண்டாம். இருக்கும் பள்ளிகளை சீரும் சிறப்புமாக வைத்தாலே, நல்ல கல்வியை வழங்கமுடியும். இதற்குப் பணமும் தேவை, மனமும் தேவை. ஆனால் ஊழல் மலிந்த அரசுத் துறையால் இதனைச் சாதிக்க முடியும் என்று நான் நம்பவில்லை.

என்ன செய்யலாம்?

அமெரிக்காவில் இருக்கும் சார்ட்டர் பள்ளிகளைப் போல நாம் உருவாக்கலாம். இவை தனியார் பள்ளிகள் அல்ல என்பதைக் கருத்தில் கொள்ளவும். இவை பொதுப் பணத்தில் இயங்கும் பொதுப் பள்ளிகள். ஒரு பள்ளியை நிர்வகிக்க ஐந்து அல்லது பத்தாண்டுகள் மட்டுமே ஒரு குறிப்பிட்ட லாப நோக்கில்லாத அமைப்பிடம் கொடுக்கவேண்டும். அந்தப் பள்ளி குறிப்பிட்ட இலக்குகளை அடையவேண்டும். தன்னிச்சையாக ஆசிரியர் மாற்றம், நியமனத்தில் ஊழல் போன்றவற்றையெல்லாம் செய்ய முடியாது. முடிந்தவரை அந்தந்தப் பகுதிகளில் உள்ள, அந்தந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களைக் கொண்ட ஒரு கூட்டுறவுச் சங்கத்திடம் பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பைத் தரலாம். மிகச் சிறந்த ஆசிரியர்கள் அடங்கிய கூட்டமைப்பிடம் பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பைத் தரலாம். என்.ஜி.ஓக்களிடம் இந்தப் பொறுப்பைத் தரலாம். அரசுக்கு ஒரு தலைவலி குறையும். அதே நேரம் கொடுத்த காசுக்கு அதிக மகசூல் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ளலாம்.

இரண்டாவதாக, தனியார் பள்ளிகளை அதிகமாக்கவேண்டும். அதற்கு சட்டத்தில் மாறுதல்களைக் கொண்டுவரவேண்டும். நாம் தொடர்ந்து சொல்லி வருவதைப்போல கல்வித்துறையில் லாபம் சம்பாதிப்பதில் தவறு இல்லை என்ற மாறுதலைக் கொண்டுவந்தால், நிஜமாகவே நல்லவகையில் கல்வி அளித்து அதிலிருந்து லாபம் சம்பாதிக்க விரும்பும் நேர்மையான தொழில்முனைவோர் பலரும் கல்வித்துறைக்கு வருவார்கள். இன்று கல்வித்துறையில் உள்ள தனியார் அனைவரும் அநியாய வழிகளில், சட்டத்துக்குப் புறம்பான வழிகளில்தான் பணத்தை ‘அள்ளுகிறார்கள்’. ஆனால் கொள்கை அளவில்கூட இந்த லாபம்+கல்வி என்பதை யாரும் பரிசீலிப்பதில்லை.

6. ஆங்கிலம் + தமிழ்: இன்று ஆங்கிலக் கல்விமீதான மோகத்துக்குக் குறைவே இல்லை. இனி குறையப்போவதும் இல்லை. இதன் விளைவு, மானவர்களுக்கு இரண்டு மொழிகளும் ஒழுங்காகச் சொல்லித் தரப்படுவதில்லை. அவர்களால் தமிழிலும் எழுத முடிவதில்லை, ஆங்கிலத்திலும் எழுத முடிவதில்லை. தமிழ் வழிப் பள்ளிகளில் மாணவர்கள் குறைந்தபட்சம் நல்ல தமிழில் எழுதப்பட்டதை மனப்பாடம் செய்து சிறப்பாக ஒப்பிக்கவாவது செய்கிறார்கள் (நானே நேரில் பார்த்திருக்கிறேன்). ஆனால் ஆங்கிலப் பள்ளிகள் பெரும்பாலானவற்றில் ஆசிரியர்களின் ஆங்கிலமே தாங்க முடிவதில்லை. இதில் மாணவர்களை என்ன சொல்வது?

முத்துக்குமரன் கமிட்டி கொடுத்த சமச்சீர் கல்வி அறிக்கையில் இரு மொழிகளுக்கும் செலவிடப்படவேண்டிய நேரம் அதிகம். ஆனால் எந்தப் பள்ளியும் இன்று அதனை விரும்புவதில்லை. தமிழிடமிருந்து நேரத்தைத் திருடி, அறிவியல், கணிதம் நடத்தவே அவர்கள் முற்படுகிறார்கள். மொழியின் புரிதலின்றி, பிறவெல்லாம் வீணே என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை.

ஆனால், இந்தக் குழப்பத்துக்கு எப்படி விடை காண்பது என்று தெரியாமல் குழம்புகிறேன்.

(முற்றும்)

கல்வி உரிமை என்ற பெயரால் - 3

மொத்தத்தில், என் பார்வையில் பல பிரச்னைகள் தென்படுகின்றன.

1. பொதுமக்கள் அரசுப் பள்ளிகள்மீதான நம்பிக்கையை இழந்து பல காலம் ஆகிறது. இதற்கு நாம் பொதுமக்களைக் குற்றம் சொல்லிப் பிரயோசனமில்லை. பிரச்னை அரசுப் பள்ளிகளை நடத்தும் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுடையது.

2. அரசுப் பள்ளிகளுக்கு என மிக அதிகமாகச் செலவிடப்படுகிறது. ஆனால் இந்தச் செலவில் மிகப் பெரும்பான்மை ஆசிரியர் ஊதியத்தில் போய்விடுகிறது. அருகில் உள்ள எந்த அரசுப் பள்ளியையும் சென்று பார்வையிடுங்கள். மோசமான கட்டடம், போதிய வசதிகள் இல்லாமை, நல்ல குடிநீர் இல்லாமை, கழிப்பறைகள் சரியாக இல்லாமை போன்றவைதான் கண்ணில் படுகின்றன.

3. தனியார் பள்ளிகள் உசத்தியில்லை. ஆனால் நிச்சயமாக அடிப்படைக் கட்டுமானங்கள் அங்கே இந்த அளவு மோசமில்லை. தனியார் பள்ளிகளை மூன்றாகப் பிரிக்கலாம். நல்ல, போதிய இடம் + நிறையக் கட்டணம் வாங்கும், நல்ல ஆசிரியர்களைக் கொண்டிருக்கும் வசதியான பள்ளிகள். போதிய இடம் இல்லாத, சுமார் கட்டணம் வசூலிக்கும், சுமாரான ஆசிரியர்களைக் கொண்ட பள்ளிகள். மூன்றாவதாக, மோசமான ஆசிரியர்களைக் கொண்ட, மக்களை ஏமாற்றும் பள்ளிகள். முதல் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதையே பெரும்பாலானோர் விரும்புவர். ஆனால் அதற்கான கட்டணத்தை எல்லோராலும் செலுத்தமுடியாது. அங்குதான் கல்வி உரிமைச் சட்டம் சில ஏழைகளுக்காவது உதவும். அரசுப் பள்ளிகளில் படிப்பதைவிட, இரண்டாம் நிலைப் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதுகூடத் தேவலாம். ஆனால் மூன்றாம் நிலை தனியார் பள்ளிகளில் படிப்பதைவிட அரசுப் பள்ளிகளில் படிக்கலாம்.

இன்றைய தேதியில் ஓரளவு விவரம் அறிந்த பெற்றோர் தம் பிள்ளைகள் ஆங்கில மீடியத்தில் படிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது துரதிர்ஷ்டவசமானது, ஆனால் மாற்ற முடியாத ஒன்று. இதனால்தான், மோசமான மூன்றாம்தர ஆங்கில மீடிய தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதே மேல் என்று பெற்றோர்கள் முடிவெடுத்திருக்கக்கூடும். இதனை மாற்ற ஒரே வழி அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதே.

4. கல்வி உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளைக் கடுமையாக நெருக்கும் என்பது என் கருத்து. தனியார் பள்ளிகள் செய்வது சரியா, தவறா என்ற கேள்வி தனியாக விவாதிக்கப்பட்டவேண்டியது. முதலில் கட்டணங்களைக் கட்டுப்படுத்துவது என்ற முறையில் ஏற்கெனவே தனியார் பள்ளிகள் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. அடுத்து, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் இத்தனைப் பள்ளிகளும் தம் கட்டுமானத்தை அதிகரிக்கவேண்டும். அதற்கான பணம் அவர்களிடம் கட்டாயம் இல்லை. இதில் பல பள்ளிகள், சரியான இடவசதி இல்லாத காரணத்தால் மூடப்படவேண்டும். உண்மையில் இந்தப் பள்ளிகள் ஆரம்பிப்பதற்கே அனுமதி தந்திருக்கக்கூடாது. இவற்றை மூடவேண்டுமானால் அரசு எந்த மாதிரியான மாற்று ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்பதை யோசித்திருக்கிறதா என்று தெரியவில்லை. அடுத்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலானோர் சரியான தகுதிச் சான்றிதழ் பெற்றவர்கள் இல்லை. இவர்கள் அனைவரும் பி.எட் அல்லது இணையான படிப்பை முடித்து, தகுதித் தேர்வு ஒன்றை எழுதி அதற்கான சான்றிதழ் பெறவேண்டும். இது குறிப்பிட்ட காலத்துக்குள் நடக்கக்கூடிய காரியமாக எனக்குத் தெரியவில்லை. அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களுமே இதில் தடுமாறப் போகிறார்கள்.

உதாரணத்துக்கு, முதல் CTET தேர்வில் இந்தியா முழுவதிலுமாகத் தேர்வு எழுதியவர்களில் 12% பேர்தான் பாஸ் செய்திருக்கிறார்கள். நம் ஆசிரியர்களுக்கு தேர்வு வைக்கத்தான் தெரியுமே தவிர, தேர்வு எழுதி பாஸ் செய்யத் தகுதி இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் நம் ஆசிரியர்கள் பலரும், CTET அல்லது TNTET என்ற தேர்வு தம்மை வந்து தாக்கப்போகிறது என்று தெரிந்தால் கலங்கிப் போய்விடுவார்கள். நிச்சயமாகப் போராட்டம் வெடிக்கும் என்றே கணிக்கிறேன்.

இடையில் சமச்சீரா, இல்லையா என்ற ஸ்பெஷல் பிரச்னை தமிழகத்தில் மட்டும் எழுந்தது.

இதற்கு மேலாக, 25% ஒதுக்கீட்டை நிர்வகித்து, அதில் குழப்பம் ஏற்படாமல் பள்ளியை நடத்தி, அரசு இந்த 25% மாணவர்களின் கட்டணத்தை எப்போது தருகிறதோ அப்போது பெற்றுக்கொண்டு, அதற்கு யார் யாருக்கு எத்தனை வெட்டவேண்டுமோ அதை வெட்டி...

கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் ஒரு தனியார் பள்ளியைக் கட்டி நிர்வகிக்க மாட்டேன்! எனக்கு வேண்டாம் இந்தத் தலைவேதனை.

(தொடரும்)

கல்வி உரிமை என்ற பெயரால் - 2

இப்போது சில கேள்விகளுக்கு வருவோம்.

1. அரசுப் பள்ளிகள் மோசமானவை; தனியார் பள்ளிகள் சிறப்பானவை என்பதால்தான் மக்கள் அவற்றில் சேர அலைமோதுகிறார்கள். ஆனால் தனியார் பள்ளிகளின் கட்டணம் மிக அதிகமாக இருப்பதால் ஏழைகளால் இது முடிவதில்லை. எனவே இந்தச் சட்டம் அந்தச் சமத்துவத்தைக் கொண்டுவருகிறது.

இந்த விவாதத்தை கஜேந்திரபாபுவும் கருணாகரனும் ஏற்றுக்கொள்ளவில்லை. அரசுப் பள்ளிகள் மோசம் என்று சொல்லக்கூடாது. தனியார் பள்ளிகள் சிறப்பானவை என்றும் சொல்லக்கூடாது. ஆனால் இட ஒதுக்கீடும் வேண்டும். ஏன் என்றால் அது அவர்களுடைய சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டியாம். ஆனால் தனியார் பள்ளிகளில் சேர மக்கள் ஏன் அலைமோதுகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல அவர்கள் விரும்பாமல் டாட்ஜ் செய்துவிட்டனர்.

2. தனியார் பள்ளிகளில் மக்கள் சேர விரும்புவதன் காரணம் அங்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கிறார்கள் என்பதுதானே? அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் சரியாகச் சொல்லித் தரப்படுவதில்லையே.

கஜேந்திரபாபு உடனடியாக, ‘ஆங்கிலம் தேவையே இல்லை’ என்று சொல்லிவிட்டார். ‘ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான். மொழி என்பதற்கும் அறிவு என்பதற்கும் தொடர்பில்லை’ என்று சரியாகவே சொன்னார். ஆனால் மக்கள் ஏன் ஆங்கிலப் பள்ளிகளை விரும்புகிறார்கள் என்பதைப் பற்றிப் பேசாமல் மறுபடி ஒரு டாட்ஜ். ஆங்கிலம் தேவையே இல்லை என்றால், ஏன் ஆங்கில மீடியத்தில் பாடம் சொல்லித்தரும் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு வேண்டும் என்று வற்புறுத்தல்?

3. அரசுப் பள்ளிகளில் கட்டுமானம் மோசமாக இருக்கிறது. டாய்லட் வசதி சரியில்லை. வகுப்புகள் சரியில்லை. உட்கார பெஞ்சு இல்லை. கரும்பலகை பல்லிளிக்கிறது... ஆனால் தனியார் பள்ளிகள் உடனடியாகத் தங்களுடைய கட்டுமானத்தை உலகத் தரத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டுமாம்.

அரசுப் பள்ளிகள்மீது அரசு எக்கச்சக்கமாகச் செலவழிக்கும் பணம் எங்கே போகிறது? அதுபற்றி எந்த விவாதமும் இல்லை. ஆனால் தனியார் பள்ளிகள் மிக உயர்ந்த தரத்திலான கட்டுமானத்தை உடனே உருவாக்கவேண்டுமாம். ஆனால் தனியார் பள்ளிகளின் கட்டணம் கட்டுப்படுத்தப்பட வேண்டுமாம். இது எப்படி ஒரே நேரத்தில் சாத்தியம்?

4. அரசுப் பள்ளிகள்மீது அரசு மேற்கொண்டு செலவழித்து அவற்றை உயர்தரத்துக்குக் கொண்டுசெல்லாமல் தனியார் பள்ளிகளில் மேலே சொன்ன முறையில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு எதற்குப் பணம் செலவழிக்கவேண்டும் - என்று சிலர் கேட்பதை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முன்வைத்தார்.

உடனேயே, அந்த மாதிரிக் கேட்பவர்கள் எல்லாம் ஏழைகளுக்கு எதிரானவர்கள் என்ற கோஷத்தை கஜேந்திரபாபு எழுப்பினார். கல்வி உரிமைச் சட்ட மசோதாவின் ஆரம்பக் காலத்திலிருந்தே இப்படிச் சிலர் சொல்லிவருவதாகவும், அவர்களெல்லாம் ஏழை மக்கள் நல்ல கல்வியைப் பெற்றுவிடக்கூடாது என்பதில் குறியாக இருப்பவர்கள் என்றும் அவர் கருத்தை வைத்தார்.

5. இப்படி குலுக்கல் முறையில் சேர்க்கப்படும் மாணவர்கள் பிற மாணவர்களுடன் படிப்பில் சமமாக இருக்கமுடியுமா அல்லது மிகவும் திண்டாடுவார்களா என்பது அடுத்த கல்வி.

இதை மறுத்த கருணாகரன் சொன்னது: ‘மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில்தானே சேரப்போகிறார்கள்; பின் என்ன பிரச்னை?’

அதாவது மாணவர்கள் எல்லாம் வெறும் ஆசிரியர்களின் முயற்சியாலேயே அனைத்தையும் படித்துத் தெரிந்துகொள்கிறார்கள் என்பது இதன் உட்கருத்து. ஆனால் உண்மையில் நடப்பதே வேறு. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அவரவர் பெற்றோர்தான் அதிக அளவு படிப்பில் பங்களிக்கின்றனர். அப்படிச் செய்யமுடியாத பெற்றோர்களின் குழந்தைகள் நிஜமாகவே திணறுகின்றன. அவர்கள் ட்யூஷன் வகுப்புகளுக்குத் துரத்தப்படுகின்றனர். அங்கே சிலர் பிழைக்கின்றனர். எனவே ஆசிரியர்களை மட்டுமே நம்பி அனுப்பப்படும் பிள்ளைகள் வகுப்பில் பெரும்பாலும் பின்தங்கியவர்களாகவே இருப்பார்கள். சென்சிடிவிடி இல்லாத ஆசிரியர்கள் இந்தப் பிள்ளைகளை அசிங்கமாகத் திட்டிப் பேசுவார்கள். அவர்கள் செய்வது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆனால் இவையெல்லாம் நடக்கப்போகின்றன. இவற்றை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்?

6. குலுக்கலுக்கு யார் தகுதியானவர்? பொருளாதாரரீதியிலா அல்லது இங்கு சாதிரீதியான இட ஒதுக்கீடு உண்டா?

தமிழகத்தில் எது நடந்தாலும் அடிப்படையில் சாதிரீதியிலான இட ஒதுக்கீடு இருந்தே ஆகவேண்டும். எனவே இங்கும். ஆனால் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளில் இவை தெளிவாக இல்லை என்றார் ஒருவர். இல்லையில்லை, மிகத் தெளிவாக இருக்கிறது என்றார் இன்னொருவர்.

(அப்படியானால் நிச்சயம் தெளிவாக இல்லை என்றே எடுத்துக்கொள்ளவேண்டும்!)

(தொடரும்)

கல்வி உரிமை என்ற பெயரால் - 1

நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘நேர்படப் பேசு’ நிகழ்ச்சியில் Right To Education சட்டத்தின் விதிகளை தமிழக அரசு, அரசிதழில் (கெஜட்) வெளியிட்டது தொடர்பான ஒரு விவாதம் நடைபெற்றது. பிரின்ஸ் கஜேந்திரபாபு, கருணாகரன், விஜயன் ஆகியோர் பங்குபெற்றனர். இதில் பிரின்ஸ் கஜேந்திரபாபு ‘கல்வி ஆலோசகர்’ என்ற பெயரில் அறியப்படுபவர். பொதுவாக இவர் பங்கெடுத்துள்ள அனைத்துத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிரான ஒரு நிலையை எடுப்பவர். கருணாகரன் - எனக்குப் பரிச்சயம் இல்லாதவர். இடதுசாரிப் பார்வை கொண்டவராகத் தெரிந்தார். விஜயன் என்பவர் தனியார் பள்ளிகளின் ஏதோ ஓர் அமைப்பின் நிர்வாகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். எனவே இவரே ஒரு தனியார் பள்ளியை நடத்துபவர் என்று நினைக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியைப் பற்றிய விமரிசனம் என்பதைக் காட்டிலும் இந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு சில விஷயங்களை ஆராய முற்படுகிறேன்.

அதற்குமுன், இந்தச் சட்டம் மக்களுக்கு என்ன உரிமையைத் தர முற்படுகிறது என்று மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்.

இந்தச் சட்டம் தனியார் பள்ளிக்கூடங்களைக் கட்டுப்படுத்துகிறது. மக்களுக்கு, குறிப்பாக, ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சில உரிமைகளைக் கொடுக்கிறது. இனிமேல் தனியார் பள்ளிகள், ஒன்றாம் வகுப்பில் தாம் உள்ளே எடுத்துக்கொள்ளும் எண்ணிக்கையில் 25%-ஐ ஒதுக்கீடு செய்யவேண்டும். இந்த 25% இடங்களில் அந்தப் பள்ளியின் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏழை/பிற்படுத்தப்பட்ட மக்கள் லாட்டரி முறையில் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும். ஒவ்வொரு தனியார் பள்ளியும் கட்டாயமாக இதனைச் செய்தாகவேண்டும். அத்துடன் ஒவ்வொரு தனியார் பள்ளியும் தம் உள்கட்டுமானத்தை ஒரு குறிப்பிட்ட தரத்துக்கு உயர்த்தவேண்டும். அப்பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் குறைந்தபட்சம் ஆசிரியப் பயிற்சிச் சான்றிதழ், பி.எட் அல்லது இணையான படிப்பைப் படித்திருக்கவேண்டும். அத்துடன் CTET அல்லது TNTET போன்ற மத்திய/மாநில தகுதித் தேர்வு ஒன்றை எழுதி 50%-க்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றுத் தேறியிருக்கவேண்டும்.

இதுதான் சாரம் என்று வைத்துக்கொள்வோம். இதற்குமேல், தமிழக அரசின் சட்டங்களான சமச்சீர் கல்விச் சட்டம், கட்டண நிர்ணயச் சட்டம் போன்றவையும் பொருந்தும்.

எந்தப் பள்ளியைத் தேர்ந்தெடுப்பது என்ற உரிமை மாணவருக்கு (எனவே பெற்றோருக்கு) உண்டு. குலுக்கலில் அவர் பெயர் பதிவாகிவிடும். ஒரு பள்ளி ஒதுக்கியுள்ள இடங்கள் 10 என்றால், 10-க்கும் மேற்பட்டோர் இந்தக் குலுக்கல் முறையில் அந்தப் பள்ளியில் சேர விருப்பம் தெரிவித்திருந்தால், குலுக்கலில் முதலில் வரும் 10 பேர்கள் மட்டுமே அந்தப் பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள். மீதிப் பேர் வழக்கம்போல காசு கொடுத்துத் தனியார் பள்ளிகளில் அல்லது காசு கொடுக்காமல் அரசுப் பள்ளியில் சேரவேண்டியதுதான்.

(தொடரும்)

Thursday, November 17, 2011

கேப்டன் கோபிநாத்தின் - வானமே எல்லை - புத்தக வெளியீடு

நேற்று மாலை, ஸ்பென்ஸர் பிளாசா லாண்ட்மார்க் புத்தகக் கடையில் கேப்டன் கோபிநாத்தின் 'Simply Fly' என்ற புத்தகத்தின் தமிழாக்கம் “வானமே எல்லை” வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் முழு வீடியோ கீழே:

புத்தகத்தை வாங்க 


Wednesday, November 16, 2011

பெங்களூரு புத்தகக் கண்காட்சி: 18-27 நவம்பர் 2011

இந்த ஆண்டு பெங்களூரு புத்தகக் கண்காட்சி, 18 நவம்பர் முதல் 27 நவம்பர் வரை நடக்கிறது. கிழக்கு பதிப்பகம் இதில் கலந்துகொள்கிறது.

கடை எண்கள்: 124, 125, 126

இடம்:

பேலஸ் மைதானம்
காயத்ரி விஹார் (மேக்ரி சர்க்கிள் அருகில்)
பெல்லாரி ரோடு
பெங்களூரு

தொடர்புக்கு:

காளிபாண்டியன், 95000-45608


முன்பதிவு:

சாரு நிவேதிதாவின் ‘எக்ஸைல் ’ நாவலுக்கு முன்பதிவு செய்துகொள்ள இங்கே பணம் செலுத்தலாம். புத்தகம் வெளியாகும் அன்று உங்களுக்குத் தபாலில் கிடைக்கும்.

ஹெலிகாப்டரில் பிறந்தநாள் - கேப்டன் கோபிநாத்

[இன்று வெளியாக இருக்கும் கேப்டன் கோபிநாத்தின் ‘வானமே எல்லை’ புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி - சுருக்கப்பட்டது. புத்தக வெளியீடு நிகழ்ச்சி ஸ்பென்சர் பிளாஸா லாண்ட்மார்க் புத்தகக் கடையில் புதன்கிழமை, 16-11-2011 அன்று, மாலை 6.30 மணிக்கு நடக்கும். அனைவரும் வருக.]

எனக்கு வரும் எல்லாத் தொலைபேசி அழைப்புகளையும் நான் பெரிதும் மதிப்பேன். புதிய அழைப்பு என்றால், புதிய மனிதருடனான அறிமுகம் என்று அர்த்தம். ஒருநாள் காவ்யா என்ற இளம் பெண் தொலைபேசியில் பேசினார். ஹெலிகாப்டருக்கு வாடகை எவ்வளவு என்று கேட்டார். பறக்கும் நேரத்தையும் காத்திருக்கும் நேரத்தையும் பொருத்தது என்றேன். சுமார் மூன்று மணி நேரப் பயணம் என்றால் ஒரு லட்சத்திலிருந்து ஒன்றரை லட்சம் ஆகும் என்று சொன்னேன். அதைக் கேட்டதும் அவருடைய குரலில் ஒரு சோகம் கவ்வியதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

மிகவும் தயக்கத்துடன், அரை மணி நேரத்துக்குக் கிடைக்காதா என்று கேட்டார். அரை மணி நேரத்துக்கு என்றாலும் முழு நாளையும் அதற்கென ஒதுக்கத்தான் வேண்டியிருக்கும். சரி எங்கு போகவேண்டும் என்று கேட்டேன். கூர்க் என்றார். அப்படியானால், கூர்குக்குப் போக வரும் செலவையும் அவரே கொடுக்க வேண்டியிருக்குமே என்றேன். அந்தப் பெண்ணுக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது.

அந்தப் பெண்ணைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது. அவர் படிக்கிறாரா? எங்காவது வேலை பார்க்கிறாரா? எதற்காக ஹெலிகாப்டர் தேவைப்படுகிறது? அந்தப் பணத்தை எப்படிக் கொடுப்பார்? அந்தப் பெண் சொன்ன கதையைக் கேட்டதும் நெகிழ்ந்து போய்விட்டேன். அந்தப் பெண், தன் அப்பாவின் அறுபதாவது பிறந்த நாளுக்கு அவருக்கு ஓர் இன்ப அதிர்ச்சி தர விரும்புகிறாராம். ஹெலிகாப்டரில் அப்பாவைப் பறக்கவைக்க விரும்புகிறாராம்.

காவ்யா சிறு பெண்ணாக இருந்தபோது ஒரு நாள் அவருடைய அப்பா மிகவும் உற்சாகத்துடன் வீட்டுக்கு வந்தாராம். என்ன விஷயம் என்று கேட்டபோது, நான் இன்று ஹெலிகாப்டரில் வந்தேனே என்று குழந்தைபோல் குதூகலித்தாராம். என்ன விஷயம் என்றால், அவரும் முதலமைச்சர் குண்டு ராவும் நண்பர்களாம். எதேச்சையாக இருவரும் சந்தித்திருக்கிறார்கள். அவர் தன் ஹெலிகாப்டரில் காவ்யாவின் அப்பாவை அழைத்துவந்திருக்கிறார். அதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்த காவ்யாவின் அப்பா சிறிது நேரம் கழித்து ஏக்கப் பெருமூச்சுடன் சொல்லியிருக்கிறார்: ‘இது என் முதல் ஹெலிகாப்டர் பயணம் மட்டுமல்ல. இதுவே கடைசியாகவும் இருக்கும்.’

அப்பா அப்படிச் சொன்னது காவ்யாவின் மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அன்றே தன் அப்பாவை எப்படியாவது மறுபடியும் ஹெலிகாப்டரில் பறக்க வைக்கவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார். அன்று தொடங்கி, தனக்குக் கிடைக்கும் காசு அனைத்தையும் சேமித்து வந்திருக்கிறார். இப்போது அவருடைய அப்பாவுக்கு அறுபதாவது வயது நெருங்கிவிட்டிருக்கிறது. பிறந்த நாள் பரிசாக ஹெலிகாப்டர் பயணத்தை ஏற்பாடு செய்யத்தான் என்னிடம் வந்திருக்கிறார்.

அந்தப் பெண்ணுக்கு எப்படியும் உதவ வேண்டும் என்று தீர்மானித்தேன். கூர்கில் மடிகேரி என்ற ஊரில் அவர்கள் வசித்துவந்தார்கள். மடிகேரிக்கு ஹெலிகாப்டரைக் கொண்டுபோய் அப்பாவை அசத்தவேண்டும்; அங்கிருந்து அவரை பெங்களூருக்கு ஹெலிகாப்டரில் பறக்க வைக்கவேண்டும் என்பதுதான் அந்தப் பெண்ணின் ஆசை. ஒரு மணி நேரப் பயணத்துக்கு எவ்வளவு வாடகை என்பதைச் சொன்னேன். பயண நேரம் எவ்வளவு என்பதையும் சொன்னேன்.

‘ஒன்று, அவரை பெங்களூருக்குக் கொண்டுவரலாம். அல்லது வெறுமனே பத்து இருபது நிமிடங்கள் வானில் பறக்க வைக்கலாம். எது என்பதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். மொத்த வாடகையில் ஐம்பது சதவிகிதம் தள்ளுபடி தருகிறேன்’ என்று சொன்னேன். நான் சொன்ன தொகை அவரைப் பொருத்தவரை அப்போதும் மிகவும் அதிகமாக இருந்திருக்கிறது. இருந்தும் உறுதியாக, ‘இன்னும் ஒரு வருடத்துக்குள் அந்தப் பணத்தை எப்படியும் சேமித்துவிடுவேன். அதன் பிறகு உங்களை வந்து பார்க்கிறேன்’ என்று சொன்னார். அதன் பிறகு வேறு வேலைகளில் ஈடுபடலானேன். அவரை மறந்தேவிட்டேன்.

சிறிது காலம் கழித்து திடீரென்று ஒரு பெண்ணிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. என்னைத் தெரிகிறதா என்று கேட்டார். முதலில், எனக்கு யார் என்று தெரியவில்லை. ‘நான்தான் காவ்யா! என் அப்பாவுக்காக ஹெலிகாப்டர் வேண்டும் என்று கேட்டிருந்தேனே?’ என்று நினைவுபடுத்தினார்.

நாங்கள் பேசிப் பல மாதங்கள் ஆகிவிட்டிருந்தன. காவ்யாவுக்குத் திருமணம் ஆகிவிட்டிருந்தது. அவருடைய கணவரும் மாமனாரின் ஆசையை நிறைவேற்றித் தர முன்வந்திருந்தார். காவ்யாவிடம் சொன்னேன்: ‘இதோ பார். மடிகேரிக்கு ஹெலிகாப்டரில் போய் இறங்கிக்கொள். வாருங்கள், சும்மா வெளியே போய்விட்டு வருவோம் என்று உன் அப்பாவை வாசலுக்கு அழைத்து வா. காரிலோ அல்லது ஆட்டோவிலோ எங்கோ போகக் கூப்பிடுகிறாள் என்று நினைத்து வருவார். வாசலில் இருக்கும் ஹெலிகாப்டரைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சியில் மூழ்குவார். எங்களுடைய சிறிய பரிசாக உங்களை காவிரி ஆற்றின் மேலாகப் பறக்கவைக்கிறோம்’ என்று சொன்னேன்.

காவ்யாவுக்கு அந்த யோசனை பிடித்திருந்தது.

காவ்யாவின் அம்மாவிடமும் சகோதரியிடமும் இந்தத் திட்டத்தைச் சொல்லி ரகசியமாக வைத்துக்கொள்ளச் சொன்னோம். அவர்களும் பயண ஏற்பாடுகளை அப்பாவுக்குத் தெரியாமல் செய்தனர். காவ்யாவும் அவருடைய கணவரும் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் மடிகேரிக்குப் போய் நின்றார்கள். அப்பாவை வாசலுக்கு அழைத்து வந்தார்கள். வாசலில் நிற்கும் ஹெலிகாப்டரைப் பார்த்ததும் கிட்டத்தட்ட அவருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது என்று சிரித்தபடியே பின்னர் சொன்னார் காவ்யா. நடு வானில் கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். காவிரி மேலாகப் பறந்தார்கள்.

கூர்கில் இருப்பவர்களுக்கு காவிரி ஒரு புனித நதி. அதை வலம் வந்து அந்தப் பிறந்த நாளைக் கொண்டாடினார்கள். யாருமே வாழ்வில் அப்படி ஒரு பிறந்த நாளைக் கொண்டாடியிருக்க முடியாது. நாங்கள் வெறும் ஒரு ஹெலிகாப்டர் கம்பெனி நடத்தவில்லை என்ற மன நிறைவு அடைந்த தருணங்களில் அதுவும் ஒன்று.

புத்தகத்தை வாங்க

Tuesday, November 15, 2011

பங்களாதேசப் போர் - கேப்டன் கோபிநாத்

[நாளை வெளியாக இருக்கும் கேப்டன் கோபிநாத்தின் ‘வானமே எல்லை’ புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி - சுருக்கப்பட்டது. புத்தக வெளியீடு நிகழ்ச்சி ஸ்பென்சர் பிளாஸா லாண்ட்மார்க் புத்தகக் கடையில் புதன்கிழமை, 16-11-2011 அன்று, மாலை 6.30 மணிக்கு நடக்கும். அனைவரும் வருக.]

1971 செப்டெம்பர்-அக்டோபரில் ஆர்ட்டிலரி பள்ளியில் நான் இருந்தபோது பங்களாதேச விடுதலைப் போராட்டம் ஆரம்பித்தது. பயிற்சி பாதியில் நிறுத்தப்பட்டு சிக்கிம் மாநிலத்துக்கு அனுப்பப்பட்டேன்.

தேவ்லாலியில் இருந்து பாக்தோக்ராவுக்கு ரயிலில் போனேன். பிறகு அங்கிருந்து காங்டாக்குக்கு ஜீப்பில் போனேன். முதலில் சீன எல்லையில் எங்கள் படை முகாம் இட்டிருந்தது. பிறகு அங்கிருந்து காங்டாக்குக்கு இடம் மாறியிருந்தது. போருக்குத் தயாராகும்படி உத்தரவுகள் தரப்பட்டன. எங்கும் ஒரே பதட்டம், பரபரப்பு.

உண்மையில் கிழக்கு பாகிஸ்தானில் அப்போது நடந்தது ஓர் உள்நாட்டுப் போர்தான். பாகிஸ்தான் ராணுவம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையால் ஏராளமான அப்பாவிகள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்து குவிந்தனர். சுமார் ஒரு கோடி பேர் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் குடியேறினர். இந்திய ராணுவமும் பாகிஸ்தான் ராணுவத்தை அகற்றுவதற்கு, முக்தி வாஹினி என்ற அமைப்புக்கு தேவையான ராணுவப் பயிற்சியைத் தந்துவந்தது.

முதல் கட்டத் தாக்குதலுக்குப் பிறகு நம் படைகள் மின்னல்போல் ஊடுருவின. எதிரிகள் சுதாரிக்க நேரம் கொடுக்கக்கூடாது என்பதே எங்களுடைய இலக்கு.

கிழக்கு பாகிஸ்தானின் ஆறுகள், நீரோடைகள்மீது கட்டப்பட்டிருக்கும் பாலங்களைத் தகர்ப்பதன் மூலம் எதிரிகளுக்குப் பொருட்கள் கிடைப்பதைத் தடுப்பதே எங்கள் நோக்கம். இதன்மூலம் பாகிஸ்தானிய படைப்பிரிவு ஒவ்வொன்றும் தனிமைப்படுத்தப்பட்டது. முதலில் தீவிரமாகத் தாக்கியவர்கள், விரைவிலேயே தப்பி ஓடவேண்டிய நிலை வந்துவிட்டது. அவர்களுடைய தோல்விக்கு முக்கியக் காரணம் தார்மிக வலிமை இல்லாது போனதுதான். உள்ளூர் மக்களிடமிருந்து அவர்களுக்குத் துளிக்கூட ஆதரவில்லை. ஆனால், நம் ராணுவத்துக்கோ, கிழக்கு பாகிஸ்தான் மக்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.

நான் பீரங்கிப் பிரிவில் இருந்தேன். இரவும் பகலும் விடாமல் சுட்டபடி முன்னேறிக்கொண்டிருந்தோம். ஒரே ஒரு முறை எதிரியை வெகு அருகில் சந்திக்க வேண்டிவந்தது. பாகிஸ்தான் படையினர் நாங்கள் இருந்த பகுதிக்குள் ஊடுருவியிருக்கும் தகவலை எங்கள் கமாண்டர் மேஜர் பாக்கர் சிங் சொன்னார். என் படைப்பிரிவுதான் எளிதில் தாக்குதலுக்கு ஆளாகும் நிலையில் இருந்தது. சிறிது காலத்துக்கு முன்புதான் பாகிஸ்தானிய வீரர்கள் நிறையக் கண்ணிவெடிகளை வழியில் பதித்து வைத்திருந்தனர். நம் வீரர்கள் சிலர் அதில் மாட்டி இறந்திருந்தனர். ஆயுதங்களும் சிதைந்துபோயிருந்தன.

அக்டோபர் மாதவாக்கில் கிழக்கு பாகிஸ்தானுக்குள் நுழைந்தோம். பிரதான போர் இரண்டு வாரங்கள் மட்டுமே நீடித்தது. பாகிஸ்தானின் முக்கியப் படையைச் சுற்றி வளைத்தோம். ஜெனரல் மானேக்‌ஷா, பாகிஸ்தான் வீரர்களுடன் ரேடியோவில் பேசினார். அவர்களைச் சரணடைய வற்புறுத்தினார்.

பாகிஸ்தான் ராணுவம் எல்லாப் பக்கங்களிலும் வளைக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய மன தைரியம் முற்றாகக் குலைந்துபோயிருந்தது. நாங்கள் மட்டும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டிருந்தால் நவீன வரலாற்றிலேயே மிக மோசமான ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியிருக்கும்.

சரணடையும் படலம் வந்தது. திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிபோல் அது இருந்தது. கிழக்கு பாகிஸ்தானில் இருந்த பாகிஸ்தானின் ராணுவ கமாண்டர், தன் படைகளுடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் சரணடைய வைக்கப்பட்டார். அவர்கள் வசம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சரணடைந்த வீரர்களை இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்த போர்க் கைதிகள் முகாம்களுக்கு அனுப்பினோம். உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய சரணடைவு நிகழ்ச்சி அது. சுமார் ஒரு லட்சம் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தார்கள்.

பங்களாதேசம் என்று பெயர் மாற்றம் பெற்ற அந்த நாட்டிலிருந்து அதன் பிறகு நாங்கள் வெளியேறினோம். என்னுடைய படைப் பிரிவு சிக்கிமுக்குப் போனது. தினஜ்பூர், ரங்பூர் வழியாக சிக்கிம் வரையிலான பாதையில் மக்கள் எங்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். ‘இந்திரா காந்தி வாழ்க! இந்திய ராணுவம் வாழ்க! மானேக்‌ஷா வாழ்க!’ என்று மக்கள் தெருக்களில் இறங்கி உற்சாகத்துடன் கோஷங்கள் போட்டார்கள்.

நகரங்கள், ஊர்கள், ஏன் சிறு கிராமங்களில்கூட சுதந்தரத்தை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். விவசாயிகள், சாதாரண மக்கள், கல்லூரிப் பெண்கள், குழந்தைகள் என எல்லாரும் மாலை மரியாதையுடன் எங்களை வரவேற்றனர். நட்பின் அடையாளமாக எங்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.

புத்தகத்தை வாங்க

Monday, November 14, 2011

ஜாஃபர்கான்பேட்டை மாணவர்களுடன் சந்திப்பு

இன்று குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு சென்னை பள்ளிகள் என்று இப்போது அழைக்கப்படும் மாநகராட்சிப் பள்ளிகள் அனைத்திலும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அதில் ஜாஃபர்கான்பேட்டை பள்ளிக்கு நான் சென்றிருந்தேன். சியோசா (CIOSA) அமைப்பின் பிரசன்னாவும் ‘நம்ம சென்னை’ (முன்னாள் காலச்சுவடு) அரவிந்தனும் அழைத்ததன்பேரில் அங்கு சென்றிருந்தேன். ஜெயா டிவியின் ஆசிரியர் குழுவில் இருக்கும் சிவலிங்கமும் அங்கே இருந்தார். இவருக்கு இந்தப் பள்ளியுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதை அவர் பேசும்போது அறிந்துகொண்டேன். பள்ளியின் தலைமையாசிரியர் முனியன், பிற ஆசிரியர்கள் அன்புடன் வரவேற்றனர்.

நான் செல்லும்போது ஒரு மாணவி ஜவாஹர்லால் நேருவின் வாழ்க்கையை விவரித்துக்கொண்டிருந்தார். பின்னர் சிவலிங்கம் பேசினார். தொடர்ந்து நானும் பேசினேன். இடையே பள்ளியின் தலைமையாசிரியரும் பேசினார். வீடியோ கீழே:




சென்னை பள்ளி மாணவர்கள் சந்திக்கும் சவால்கள், பிற ஆங்கில மீடிய, தனியார் பள்ளிகளின் மாணவர்கள் சந்திக்கும் சவால்களிலிருந்து முற்றிலும் வேறானவை. குடும்பச் சூழல், பெற்றோர்களின் படிப்பு, பெற்றோர்கள் வீட்டுக்குக் கொண்டுவரும் வருமானம், வாழிடத்தில் உள்ள வசதிகள் ஆகிய அனைத்துக் குறைபாடுகளையும் மீறி, நன்கு படித்து, நல்ல மதிப்பெண் பெற்று, நல்ல பழக்கங்களுடன் வெளியேறி, நல்ல வேலையைப் பெற்று, நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டிய நிலையில் அம்மாணவர்கள் உள்ளனர். சிறிது சறுக்கினாலும் சிஸ்டம் அவர்களை வெளியே தள்ளவே முயல்கிறது. இவற்றையெல்லாம் மீறி, மாரிச்செல்வம்போல இந்த மாணவர்கள் சாதனை செய்யவேண்டும்.

இதற்கு நாம் எவ்வகையில் பங்களிக்கலாம் என்பதுதான் நம்முன் இருக்கும் கேள்வியே.

ஏர் டெக்கான் கேப்டன் கோபிநாத்தின் புத்தக வெளியீடு

கேப்டன் கோபிநாத் ஆங்கிலத்தில் எழுதி வெளியான சுயசரிதை நூல் Simply Fly.

கிழக்கு பதிப்பகம் இந்நூலின் தமிழாக்கத்தை வெளியிடுகிறது, வானமே எல்லை என்ற தலைப்பில். இந்தப் புத்தகம் தயாராகிச் சில மாதங்கள் ஆகியிருந்தாலும், கோபிநாத்தே புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்பதால் புத்தகத்தை அச்சிடாது இருந்தோம். வரும் புதன் கிழமை, சென்னை ஸ்பென்சர் பிளாஸாவில்,  மாலை 6.30 மணிக்கு, கேப்டன் கோபிநாத் முன்னிலையில் யுனிவெர்செல் செல்பேசி விற்பனைச் சங்கிலி உரிமையாளர் சதீஷ் பாபு புத்தகத்தை வெளியிட, ட்ரைஜின் டெக்னாலஜிஸ் ல்மிடெட் நிறுவனத்தில் சேர்மன் ஆர். கணபதி புத்தகத்தைப் பெற்றுக்கொள்கிறார். அவர்கள் இருவரும் பேசுவார்கள். அதன்பின் கேப்டன் கோபிநாத்தும் தன் வாழ்க்கைப் பயணம் பற்றிப் பேசுவார்.

கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை மிக சுவாரசியமானது. நாளையும் மறுநாளும் அவரது புத்தகத்திலிருந்து சில பகுதிகளை எடுத்து என் பதிவில் போடுகிறேன். (புத்தகத்தை வாங்க...)


*** ஏர் டெக்கான்-தான் இந்தியாவின் முதல் மலிவுக் கட்டண விமானச் சேவை நிறுவனம். விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் நிறுவனம் ஏர் டெக்கானை வாங்கி, அதனை கிங்ஃபிஷர் ரெட் என்று பெயர் மாற்றி, சமீபத்தில் இழுத்து மூடிவிட்டது. இப்போது மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமே, தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அரசின் நிதியுதவி தேடிச் சென்றுள்ளது.

*** கோபிநாத்தின் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான டெக்கான் 360 (http://deccan360.in/) என்பதும் நிதி நெருக்கடியில் உள்ளது.

Sunday, November 13, 2011

ரஜினியின் பன்ச் தந்திரம் - ராஜ் டிவியில்

இன்றுமுதல் ரஜினியின் பன்ச் வசனங்கள் - தொழிலுக்கு வாழ்க்கைக்கும் - ராஜ் டிவியில் தொடராக ஆரம்பிக்கிறது. முதல் மூன்று எபிசோட் ஞாயிறு காலை 12 மணிக்குத் தொடங்கி வெளியாகும். இந்த கர்ட்டன் ரெய்சருக்கு அடுத்து ஷோ ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை அன்று வெளியாகும் என்று அறிகிறேன். இந்த நிகழ்ச்சி, பி.சி.பாலசுப்ரமணியன், ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் எழுதி கிழக்கு பதிப்பகம் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ள புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. (புத்தகத்தை வாங்க: தமிழில் | ஆங்கிலத்தில்)