Monday, February 28, 2011

கிழக்கு மொட்டை மாடி: இந்திய வானியல்

மார்ச் 3-ம் தேதி, வியாழக்கிழமை, இந்திய வானியல் வரலாறு பற்றிய கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் நடைபெறுகிறது.

* வானியல் துறை இந்தியாவில் எப்போது தோன்றியது?
* தோற்றுவித்தவர்கள் யார்?
* இந்திய வானியலின் அடிப்படைக் கருத்துகள் என்ன?
* வேத ஜோதிடம் மெய்யா, பொய்யா?

வானியலின் அறிவியல் பின்னணியை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் எளிமையாக விளக்க இருக்கிறார் டாக்டர் த.வி. வெங்கடேஸ்வரன். இவர் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விக்யான் பிரசார் என்ற தன்னாட்சி அமைப்பில் அறிவியலாளராகப் பணியாற்றுகிறார்.

இடம்: கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடி, எல்டாம்ஸ் ரோடு, சென்னை - 18
நாள்: 3 மார்ச் 2011, வியாழக்கிழமை
நேரம்: மாலை 6.30 மணி

கல்வித்துறையில் கணினிநுட்பம்

எஸ்.எஸ்.என் எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் ஏற்பாடு செய்யப்பட்ட TEDxSSN ஒரு நாள் நிகழ்வில் நான் கலந்துகொண்டு பேசியதன் வீடியோ:

நொறுங்கும் ஆரியப் படையெடுப்புக் கோட்பாடு

கிரேக்க நாட்டிலிருந்து தற்போது சென்னையில் இருக்கும் நிக்கோலாஸ் கஸானாஸ் என்ற இந்தியவியல் பேராசிரியர், சனிக்கிழமை (26 பிப்ரவரி 2011) அன்று ஐஐடி சென்னையில் பேசினார். மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவில் நுழைந்து கங்கைச் சமவெளிக்குப் பரவி, பூர்வகுடி இந்தியர்களை ஆக்ரமித்தனர்; அவர்களது நூல்தான் வேதங்கள் என்று ஒரு கோட்பாடு உள்ளது. மொஹஞ்சதாரோ, ஹாரப்பா நாகரிகத்தினரையும் இந்த குதிரை மேல் ஏறிப் போர்புரியும் ஆர்யர்கள்தான் அழித்தனர் என்றும் இந்தக் கோட்பாடு நீட்டிக்கிறது.

இவற்றை மறுத்து, இவற்றுக்கு மாறான ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறார் நிக்கோலாஸ் கஸானாஸ். ஆரிய-திராவிடப் பகை குறித்து எதையும் இவர் பேசுவதில்லை அல்லது முன்வைப்பதில்லை. மாறாக, வேதங்களை யார் இயற்றினரோ, வேதிக் அல்லது வேதமொழி எனப்படும் சமஸ்கிருதத்துக்கும் முந்தைய பழமையான மொழியை யார் பேசினரோ அவர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் என்றும், அவர்கள் வெளியிலிருந்து இந்தியாவுக்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை; மாறாக அவர்கள் இந்தியாவிலிருந்துதான் வெளியே வடமேற்கு மற்றும் வடகிழக்குத் திசைகளில் போயிருக்கவேண்டும் என்பதும் இவரது வாதம். அந்தப் பேச்சின் வீடியோவைக் கீழே பார்க்கலாம். கேள்வி பதில் பகுதியும் இணைந்தது.

Tuesday, February 22, 2011

மாமல்லபுரம் காஃபி டேபிள் புத்தகம் தமிழில்

சில மாதங்களுக்குமுன் Mahabalipuram - Unfinished Poetry in Stone என்ற ஆங்கில காஃபி டேபிள் புத்தகம் ஒன்று வெளியானது. புகைப்படக் கலை நிபுணர் அசோக் கிருஷ்ணசுவாமியின் ஆர்கே கிராபிக்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டது. பேராசிரியர் சுவாமிநாதன் எழுதி, அசோக்கின் புகைப்படங்களுடன் இந்தப் புத்தகம் மாமல்லபுரத்தை உங்கள் வீட்டின் முன்னறைக்கே கொண்டுவருகிறது. நீங்கள் மாமல்லபுரம் நேரில் சென்றாலும் காணமுடியாத சிற்பங்களையும் (உதாரணம்: தர்மராஜ ரதத்தின் முதலாம், இரண்டாம் நிலைகளில் உள்ள படங்கள்) உங்களிடம் கொண்டுவருகிறது இந்தப் புத்தகம்.

இதன் விலை ரூ. 2,500/-

தமிழில் இதுபோன்ற புத்தகங்கள் கிடைப்பதில்லையே என்ற குறையைப் போக்க, தமிழ் மொழிபெயர்ப்பில் இந்தப் புத்தகத்தை ஆர்கே கிராபிக்ஸுடன் சேர்ந்து கிழக்கு பதிப்பகம் கொண்டுவந்துள்ளது. விலை ரூ. 995/- மட்டுமே. 168 பக்கங்கள், ஆர்ட் பேப்பர், கெட்டி அட்டை. சுவாமிநாதனின் எழுத்தை தமிழுக்குக் கொண்டுவந்திருப்பவர் கே.ஆர்.ஏ. நரசய்யா.

மாமல்லபுரம் காஃபி டேபிள் புத்தகத்தை வாங்க

கோவில் கட்டும் கலை எப்படி ஆரம்பித்திருக்கும், மகேந்திரவர்மன் தமிழகத்தில் உருவாக்கிய கல்லில் செதுக்கிய கோவில்கள், மகேந்திரனின் வழித்தோன்றல்கள் மாமல்லபுரத்துக்கு வந்து என்ன செய்தனர் ஆகியவற்றை அறிமுகம் செய்யும் இந்தப் புத்தகம், விளக்கமாக மாமல்லையில் காணப்படும் கீழ்க்கண்டவற்றைப் பற்றிப் பேசுகிறது:
  • குடைவரைக் கோவில்கள்
  • ஒற்றைக் கல் கோவில்கள்
  • கட்டுமானக் கோவில்கள்
  • திறந்தவெளி புடைப்புச் சிற்பத் தொகுதிகள்
  • என்னவென்றே வகைப்படுத்த முடியாத பல்லவப் புதுமைகள்
அத்துடன் மாமல்லையில் உள்ள வெப்பமண்டல, வறண்ட, பசுமைமாறாக் காடுகள் பற்றியும் அங்குள்ள தாவரங்கள் பற்றியும் படங்களுடன் விளக்கங்களைத் தருகிறது இந்தப் புத்தகம். கூடவே கோவில் கட்டுமானம் மற்றும் சிற்பக் கலையில் பயன்படுத்தப்படும் சொற்கள், அவற்றுக்கான பொருள்கள் ஆகியவற்றைச் சில கோட்டோவியங்களுடன் விளக்குகிறது அருஞ்சொற்பொருள் பகுதி.

தமிழகத்தின் மிகச் சிறந்த கலைத்தலமாக, யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக இருக்கும் இந்த இடத்தின் மேன்மையை முழுதாக உணர, ரூ. 995/- கொடுத்து இந்தப் புத்தகத்தை வாங்குங்கள்.

Monday, February 21, 2011

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாறு

தெரு கிரிக்கெட் விளையாடும் சிறுவன் தொடங்கி தெண்டுல்கர் வரை அத்தனை பேருக்கும் ஒரே கனவுதான். உலகக்கோப்பை. அதை மட்டும் வென்றுவிட்டால் போதும்; உலகத்தையே வென்றதற்குச் சமம்.

1975 தொடங்கி இன்று வரையிலான உலகக்கோப்பைப் போட்டிகளின் புள்ளிவிவரத் தொகுப்பு மட்டுமல்ல; உங்களை சிலிர்க்க வைத்த, பிரமிக்க வைத்த, பெருமை கொள்ளவைத்த அத்தனைத் தருணங்களையும் வரலாற்றுப் பதிவாக மறு உருவாக்கம் செய்கிறது இந்தப்புத்தகம்.

நடந்துமுடிந்த போட்டிகளை மீண்டும் ஒருமுறை வர்ணித்து, சுவாரசியம் குறையாமல் எழுதுவது சுலபமான விஷயம் அல்ல. தீவிர கிரிக்கெட் ரசிகரான நூலாசிரியர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி ரசித்து ரசித்து எழுதியிருப்பதை நீங்கள் சிரித்துச் சிரித்துப் படிக்கலாம்.

நேற்றுவரை டிவியையும் டிவிடியையும் வைத்து உலகக்-கோப்பைப் போட்டிகளை நினைவூட்டி ரசித்த நீங்கள், இனி புத்தகம் மூலமாகவும் ரசிக்கப்போகிறீர்கள். புதிய அனுபவத்துக்குத் தயாராகுங்கள்!


Enjoy Cricket World Cup 2011.

உலோகம். தமிழகமெங்கும். பாதி விலையில்!

சென்னை புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகனின் உலோகம் நாவல் அதிவேகமாக விற்பனை ஆகியது. மிகக் குறைந்த பிரதிகளே (600) அச்சிட்டிருந்தோம். அதன் விலை ரூ. 100 என்று இருந்தது. அனைத்தும் புத்தகக் கண்காட்சியிலேயே விற்றுவிட்டன. கடைகளுக்குப் போகவே இல்லை.

இதன் விற்பனை வேகத்தைப் பார்த்து, இந்தப் புத்தகத்தை 5,000 பிரதிகள் அச்சிட்டுள்ளோம். விலையையும் ரூ. 50 என்று குறைத்துள்ளோம். அதே தாள், அதே தரம். விலை மட்டும்தான் பாதிக்குப் பாதி! ஏற்கெனவே தமிழகம் எங்கும் உள்ள கடைகளிலிருந்து மொத்தம் 5,000 பிரதிகளுக்குமாக ஆர்டர்கள் வந்துவிட்டன. அடுத்த நான்கு நாட்களுக்குள் பிரதிகள் அனைத்துக் கடைகளுக்கும் அனுப்பப்பட்டுவிடும். புத்தகக் கடைகள்முதல் தெருமுனைக் கடைகள்வரை எங்கும் கிடைக்கும். ஒரே மாதத்தில் 5,000-மும் விற்றுவிடும் என்கிறார்கள் எங்கள் விற்பனைத் துறையினர்.

பின்னர் விலை ஏறலாம். எனவே இந்த விலைக்கு இந்தப் புத்தகத்தை வாங்கவேண்டும் என்றால் இப்போதே கடைகளை அணுகி, புத்தகத்தை முன்பதிவு செய்து வாங்கிவிடுங்கள்.

புத்தகத்தை இணையத்தில் வாங்க
.

வேலூரில் தாய்மொழி தினக் கருத்தரங்கம்

நேற்று வேலூரில் நடந்த கருத்தரங்கில் பேசியோரில் நால்வருடைய முழு வீடியோ இங்கே:

சோம வள்ளியப்பன்



முனைவர் அரணமுறுவல்



பத்ரி சேஷாத்ரி



பேரா. கல்விமணி

கிழக்கு அதிரடி விற்பனை பிப்ரவரி கடைசி வரை நீட்டிப்பு

மைலாப்பூரிலும் தி.நகரிலும் நடந்துகொண்டிருக்கும் கிழக்கு கிளியரன்ஸ் சேல் இன்னும் சில நாள்களுக்கு மட்டும் நீட்டிக்கப்படுகிறது.

பிப்ரவரி மாத இறுதி வரை (28 வரை) இந்தக் குறைந்தவிலைப் புத்தக விற்பனை நடக்கும்.

இடம் பற்றிய விவரங்களுக்கு என் முந்தைய பதிவைப் பாருங்கள்.

Saturday, February 19, 2011

உலக ‘தாய்மொழி தின’ விழா 2011

பிப்ரவரி 21-ம் தேதி தாய்மொழி தினத்தைக் கொண்டாடும் விழா என்பதால் வேலூர் வாசகர் பேரவையும் வி.ஐ.டி பல்கலைக்கழகமும் இணைந்து வேலூரில் இரண்டு நாள் விழாவைக் கொண்டாடுகிறது. இதில் பிப்ரவரி 20 அன்று ‘நாம் வளர தமிழ் வளர்ப்போம்’ என்ற கருத்தரங்கு நடைபெறுகிறது. இந்தக் கருத்தரங்கில் நானும் கலந்துகொள்கிறேன். கருத்தரங்கு நடக்கும் இடம்: டாக்டர் சென்னா ரெட்டி கருத்தரங்கக் கூடம், வி.ஐ.டி பல்கலைக்கழகம், வேலூர். நிகழ்வு ஆரம்பிக்கும் நேரம்: மாலை 3.00 மணி.

தலைப்புகளும் பேசுவோரும்:

தெய்வத்தமிழ்: திருமதி மா.கவிதா (அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருத்தணி)
கல்வித்தமிழ்: பேராசிரியர் பா. கல்விமணி
பசுமைத்தமிழ்: திரு சு. தியோடர் பாஸ்கரன்
ஆட்சித்தமிழ்: முனைவர் அரணமுறுவல் (செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனம்)
கணித்தமிழ்: பத்ரி சேஷாத்ரி
வணிகத்தமிழ்: திரு சோம.வள்ளியப்பன்
ஊடகத்தமிழ்: திரு சுசி. திருஞானம் (புன்னகை கல்வி மாத இதழ்)

Monday, February 14, 2011

இஸ்ரோ - அந்தரீக்ஷ் - தேவாஸ்

2ஜியில் தொடங்கிய கூத்து ஓய்வதாகத் தெரியவில்லை. ஸ்பெக்ட்ரம் என்றாலே ஊழல்தான் என்று சி.ஏ.ஜி முதல் எதிர்க்கட்சிகள் வரை முடிவு செய்துவிட்டனர். கூடச் சேர்ந்து கும்மி அடிக்க ஊடகங்கள்.

முதலில் இந்த தேவாஸ் மல்ட்டிமீடியா என்ன செய்ய முயன்றது என்று புரிந்துகொள்ளப் பார்ப்போம்.

தொலைக்காட்சி சேவையை எடுத்துக்கொண்டால், முதன்முதலில் உருவானது தரை வழியாக தொலைக்காட்சி சிக்னல்களை அனுப்பும் தொழில்நுட்பம். அமெரிக்காவில் ஏ.பி.சி, என்.பி.சி, சி.பி.எஸ் என்னும் மூன்றும்தான் பிரதானமாக இந்தச் சேவையை தரைவழி டிரான்ஸ்மிட்டர்கள் மூலம் அளித்துவந்தன. (மூன்றுமே தனியார் சேவைகள்.)

ஓர் ஊரில் எஃப்.எம் வானொலி நிலையங்கள் உள்ளன என்றால் அதிகபட்சம் 25 நிலையங்கள்தான் இருக்கமுடியும். அவற்றின் சேவை சுமார் 50 கிலோமீட்டர் விஸ்தீரணத்துக்குத்தான் இருக்கும். அதையும் கொஞ்சம் தாண்டலாம்; ஆனால் சேவையின் தரம் பாதிக்கப்படும்.

தரைவழித் தொலைக்காட்சி இயங்கும் கேரியர் ஃப்ரீக்வன்ஸி ஸ்பெக்ட்ரத்தில் மிகக் குறைவான நிலையங்கள் மட்டுமே இருக்கமுடியும். பிரிட்டனில் மொத்தம் ஐந்து தரைவழித் தொலைகாட்சி நிலையங்கள் உள்ளன. பிபிசி-1, பிபிசி-2, ஐ.டி.வி, சானல் 4, சானல் 5. இதில் முதல் இரண்டும் விளம்பரம் இல்லாத, அரசு நிதியுதவி பெறும் ஸ்டேஷன்கள். மற்றவை தனியார் சேவைகள் - விளம்பரம் உண்டு.

இந்தியாவில் தரைவழித் தொலைக்காட்சிச் சேவை தூரதர்ஷன் நிலையத்துடன் தொடங்கி, அடுத்து சில மெட்ரோ மாநகரங்களில் மட்டும் தூரதர்ஷன்-2 என்பதாக இருந்தது. அதன்பிறகு அதிகரிக்கவில்லை. தனியார் யாருமே இந்தத் துறையில் அனுமதிக்கப்படவில்லை.

தரைவழித் தொலைக்காட்சியில், தொலைக்காட்சி நிலையங்கள் குறிப்பிட்ட அதிர்வெண்ணில் தங்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும். வீட்டில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள் அந்த அதிர்வெண் சிக்னலைப் பெற்று, படங்களைக் காட்டும். வேண்டுமென்றால் பல அடி உயரத்துக்கு ஆண்டெனாக்களை உருவாக்கிப் பொருத்திக்கொள்ள வேண்டியிருக்கும். மேலும் குறிப்பிட்ட ஸ்டேஷனைப் பெற ஆண்டெனாவின் திசையைக்கூட மாற்றவேண்டியிருக்கும்.

தரைவழித் தொலைக்காட்சிக்குப் பெரிய எதிர்காலம் இருக்கவில்லை. வானில் செயற்கைக்கோள்களை அனுப்பும் தொழில்நுட்பம் முன்னேற முன்னேற, கேபிள் அண்ட் சாடிலைட் (C&S) தொலைக்காட்சி முன்னுக்கு வந்தது. 

அமெரிக்காவில் கேபிள் பெரும் முன்னேற்றம் கண்டது. தொலைக்காட்சி அமைப்பையே மாற்றியது. இம்முறையில் கேபிள் ஹெட் எண்ட் எனப்படும் சில இடங்களில் செயற்கைக்கோள் சிக்னல்களை பெரிய டிஷ் ஆண்டெனா கொண்டு பெறுவார்கள். இந்த ஹெட் எண்டிலிருந்து அருகில் இருக்கும் வீடுகளுக்கு கேபிள் வடம் செல்லும். இந்த வடத்தின் வழியாக ஆரம்பத்தில் சிக்னல்கள் அனலாக் முறையில் அனுப்பப்பட்டன. இதன் தொழில்நுட்பத்துக்குள் நான் செல்லப்போவதில்லை. ஆரம்பத்தில் UHF, VHF அதிர்வெண்களில் 12 நிலையங்கள் என்று தொடங்கி, பின்னர் படிப்படியாக அனலாக் முறையிலேயே 90 நிலையங்கள் வரை கேபிள் வழியாகக் கொடுக்கமுடிந்தது.

அதன்பின் டிஜிட்டல் முறையில் கேபிள் வழியாக சிக்னல்கள் அனுப்பப்பட்டபோது பல நன்மைகள் கிடைத்தன. 200 நிலையங்களுக்குமேல் தரமுடிந்தது. வீடியோ தரம் அற்புதமாக இருந்தது. டிஜிட்டல் செட் டாப் பாக்ஸ், ஆக்சஸ் கார்ட் ஆகியவை இருக்கும் காரணத்தால், என்கிரிப்டட் வீடியோ முறைமூலம், பே பெர் வியூ போன்ற சேவைகளைத் தரமுடிந்தது. காசு கொடுத்தால்தான் பார்க்கமுடியும் போன்ற நிகழ்ச்சிகள்.

விரைவில் இதிலும் பெரும் மாற்றங்களைப் பார்க்கப்போகிறோம். செப்புக் கம்பியால் ஆன கோ-ஆக்ஸ் கேபிள்களுக்குப் பதில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் வரத்தொடங்கியுள்ளன. வீட்டுக்கு ஃபைபர் வந்தால் ஆயிரக்கணக்கான சேனல்களை அதன்வழியாக அனுப்பலாம்.

அதே நேரம் வீடியோக்கள் எல்லாமே டிஜிட்டல் கோப்புகளாக, இணையம் வழியாக வரும் நிலையும் ஏற்படத் தொடங்கியுள்ளது. எனவே ஏதோ ஒரு வகையில் வீட்டுக்கு 8 mbps இணைப்பு இருந்தால், விரும்பிய வீடியோ நிகழ்ச்சியை ஹை டெஃபினிஷன் டிவி தரத்தில் காணமுடியும்.

இதற்கிடையில் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இரண்டு சேவைகள் முன்னுக்கு வரத்தொடங்கின. ஒன்று டி.டி.எச் (DTH) எனப்படும் வீட்டுக்கு வரும் செயற்கைக்கோள் தொலைக்காட்சிச் சேவை. நியூஸ் கார்ப் நிறுவனத்தின் ரூப்பர்ட் மர்டாக் இதில் பெரிய ஆள். இவரது ஸ்கை தொலைக்காட்சிச் சேவை பிரிட்டனில் மாபெரும் டி.டி.எச் சேவை வழங்கு நிறுவனமாக உள்ளது. ஐரோப்பாவின் பல நாடுகளில் சேவைகளை அளித்துவருகிறார். அமெரிக்காவில் டைரெக்டிவி (DirecTV), டிஷ்நெட் (Dishnet) ஆகியவை இந்தச் சேவையை அளிக்க ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் மர்டாக் டைரெக்டிவியின் பங்குகளை வாங்கி அதனைத் தன் கைக்குள் கொண்டுவந்தார்; பின்னர் அதனை விற்றுவிட்டார்.

சி அண்ட் எஸ் முறையில் ஊரெங்கும் கேபிள் சர்வீஸ் தருவோர் வேண்டியிருந்தது. அவர்கள்தான் பணத்தை வசூலித்து, அதில் ஒரு பங்கை கேபிள் டிவி நிறுவனத்துக்குத் தரவேண்டியிருந்தது. இந்தியாவில் இப்போதும் சக்கைப்போடு போடும் இந்தத் துறையில் தமிழகத்தில் (சன் டிவியின்) சுமங்கலி கேபிள் விஷன் பற்றியும் அவர்களது போட்டியாளர்களுக்கு என்ன நடந்தது என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அரசியல் தொடர்புகள்மூலம் எப்படியெல்லாம் இந்தத் துறையை அடக்கி ஆளமுடியும் என்று உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

டி.டி.எச் இதில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தது. சி அண்ட் எஸ் ரிசீவர் டிஷ் ஆண்டெனா போல் அல்லாது, இந்த டி.டி.எச் ஆண்டெனாக்கள் மிகச் சிறியவை. வீட்டில் நேரடியாக மாட்டிக்கொள்ளலாம். தெருவில் குழி தோண்டி கேபிள் பதிக்கவேண்டியதில்லை. முழுவதும் டிஜிட்டல். தரமான வீடியோ. கட்டணத்தை வசூலிக்க இடைத்தரகர்கள் வேண்டியதில்லை. கிரெடிட் கார்டு வழியாக நேரடியாகக் கட்டணத்தைச் செலுத்தமுடியும். வீடு மாறினால் டிஷ் ஆண்டெனாவைக் கையோடு எடுத்துக்கொண்டு செல்லலாம். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் நிகழ்ச்சிகள் தெரியும்.

கேபிள் அண்ட் சாடிலைட்டும் சரி, டி.டி.எச்சும் சரி, இஸ்ரோ அனுப்பியுள்ள இன்சாட் செயற்கைக்கோள்களில் டிரான்ஸ்பாண்டர்களை லீஸ் செய்து அதன்மூலமாகவே நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கின்றன.

இன்று இந்தியாவில் ஆறு நிறுவனங்கள் டி.டி.எச் சேவையை தருகின்றன. தூரதர்ஷன், டிஷ் டிவி, சன் டைரெக்ட், டாடா ஸ்கை, ரிலையன்ஸ் பிக், ஏர்டெல்.

அமெரிக்காவில் டைரெக்டிவியும் டிஷ்நெட்டும் டி.டி.எச் சேவை வழியாக இண்டெர்நெட் இணைப்பும்கூடத் தருகிறார்கள். இந்தியாவில் யாரும் இன்னமும் இதனைச் செய்யவில்லை.

மற்றொரு சேவை வேர்ல்ட்ஸ்பேஸ் என்ற சாடிலைட் ரேடியோ சேவை. இந்த நிறுவனம் சிறு டிஷ் ஆண்டெனா மூலம், செயற்கைக்கோள் வழியாக நேரடியாக வீட்டுக்கு ரேடியோ சேவைகளைத் தந்தது. ஒரு கட்டத்தில் இலவசமாக இருந்த இந்தச் சேவை கட்டணச் சேவையாக ஆனபோது நான் இதனை நிறுத்திவிட்டேன். உலக அளவில் வேர்ல்ட்ஸ்பேஸ் நிறுவனம் திவால் ஆனது. அதன் இந்தியக் கிளை மட்டும் தொடர்ந்து இயங்கி வந்தது; இப்போது இருக்கிறதா இல்லையா என்று பார்க்கவேண்டும்.

அமெரிக்காவில் Xm, சிரியஸ் என்று இரு நிறுவனங்கள் இந்தச் சேவையை அளித்தன. பிறகு இரண்டும் தாக்குப் பிடிக்கமுடியாமல் இணைந்து ஒரே நிறுவனமாக ஆகின. இது தவிர இன்று அமெரிக்காவில் வேறு நிறுவனங்கள் இதுபோன்ற சேவையை அளிக்கலாம்; நான் முழுவதுமாக தேடிப் பார்க்கவில்லை. என் ஞாபகத்தில் இருப்பதை மட்டும் எழுதுகிறேன்.

சாடிலைட் டிஷ் ஆண்டெனா 1.5-2.0 மீட்டர் விட்டம் கொண்டது. டி.டி.எச் டிஷ் ஆண்டெனா 30-35 செண்டிமீட்டர் விட்டத்துக்கு உட்பட்டது. சாடிலைட் ரேடியோ ஆண்டெனா வெறும் 10-12 செண்டிமீட்டர் விட்டம் கொண்டது.

*

தேவாஸ் மல்ட்டிமீடியா என்ற நிறுவனம் இதே தொழில்நுட்ப வரிசையில் கைக்குள் அடங்கக்கூடிய ஒரு ஆண்டெனாவையும் ரிசீவரையும் உருவாக்கியதாகச் சொல்கிறது. இந்த ஆண்டெனாவை வெட்டவெளியில் கிழக்கு பார்த்தோ, மேற்கு பார்த்தோ வைக்கவேண்டிய அவசியம் எல்லாம் இல்லை என்கிறது.

இந்த ஆண்டெனா/ரிசீவரைக் கொண்டு பிராட்பேண்ட் சேவையை அளிக்க முடிவெடுத்த தேவாஸ், இதற்காக இஸ்ரோவை அணுகியது. இஸ்ரோவின் வணிக அமைப்பான அந்தரீக்ஷ் மூலமாக ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அதன்படி, இஸ்ரோ இரண்டு செயற்கைக்கோள்களை வானுக்கு அனுப்பும். அந்தச் செயற்கைக்கோள்களின் டிரான்ஸ்பாண்டர்களை இஸ்ரோ தேவாஸுக்கு லீஸுக்குத் தரும். அந்த டிரான்ஸ்பாண்டர்கள் மூலம் வீடுகளுக்கு தேவாஸ் இணைய இணைப்பு தரும்.

நிலம் - ரியல் எஸ்டேட் - என்பதற்கு ஒரே விலை எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. சென்னையில் போட் கிளப் பகுதியில் ஒரு சதுர அடி 50,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் இருக்கலாம். ஆனால் சென்னையில் பிற மையப் பகுதிகளில் சதுர அடிக்கு ரூ. 10,000 ஆகும். தாம்பரம், ஆவடி தாண்டிச் செல்லும்போது சதுர அடிக்கு 1,000 முதல் 3,000 ரூபாய்தான் ஆகும். கும்பகோணம் பக்கம் உள்ள கோடாலிக் கருப்பூர் கிராமத்தில் சதுர அடி 25 ரூபாய்?

சி.ஏ.ஜிக்கு யாராவது இதை எடுத்துச் சொன்னால் தேவலாம். 3ஜி ஸ்பெக்ட்ரம் மெகா ஹெர்ட்ஸுக்கு இன்ன விலை என்றால் 2ஜியும் அதே என்று ஒரு கணக்கை எடுத்து வைத்தார்கள். அரசு என்பது பணம் பண்ணும் இயந்திரம் என்ற கருத்தை முன்வைத்து எல்லோரும் கூச்சல் போட்டதால் நாளைக்கு சாதாரண மொபைல் போன் கட்டணம் கன்னாபின்னாவென்று எகிறப்போகிறது. 3ஜி என்பது இப்போதே மக்களுக்கு எட்டாக்கனியாகத்தான் உள்ளது.

டி.டி.எச் சேவையை இன்னமும் சி.ஏ.ஜி தோண்டிப்பார்க்கவில்லை. தோண்டும்போது அங்கும் 500,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகச் சொல்லும். உண்மையில் இந்தியாவில் ஐந்து வணிக நிறுவனங்கள் மட்டும்தான் இந்தச் சேவையைக் கொடுக்க இன்று முன்வந்துள்ளன. (ஆறாவது தூரதர்ஷன். இதில் தூரதர்ஷன் சுத்தமாக ஒரு பைசா சம்பாதிக்கவில்லை; எல்லாம் நஷ்டம்தான்.) இதில் டிஷ்நெட், சன் டைரெக்ட், டாடா ஸ்கை ஓரளவுக்கு முன்னணியில் உள்ளன. ஏகப்பட்ட பணம் கையில் இருக்கும் ஏர்டெல்லும், நிறையக் கடனில் இருக்கும் ரிலையன்ஸும் கொஞ்சம் தடுமாற்றத்துடன்தான் இந்தத் துறையில் வளர்கின்றன.

தேவாஸ் மல்ட்டிமீடியா இயங்க இருக்கும் துறையில் இரண்டாவதாக ஓர் ஆளையும் காணோம். இதற்குள் அந்த ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் விடு, 200,000 கோடி ரூபாய் ஏமாற்றல், லஞ்சம், ஊழல் என்று எல்லோரும் சத்தம் போட ஆரம்பித்தாயிற்று. இதில் ஊழல் இருப்பதாகவோ, ஏமாற்றல் இருப்பதாகவோ என் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனால் கூச்சலுக்கு பயந்து அரசு இப்போது இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யப்போவதாகச் சொல்கிறது. தொடர்ந்து தேவாஸ் நிச்சயமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கமுடியும். அரசுகள் ஒப்பந்தங்களை நடத்தும் லட்சணம் படுமோசம்.

இப்போது என்ன செய்யலாம்? இந்த டிரான்ஸ்பாண்டரில் வேண்டிய அதிர்வெண் பரவலை தேவாஸ் மல்ட்டிமீடியாவுக்கு ஒப்பந்தப்படி தந்து, அதற்கான கட்டணத்தை ஒப்பந்தம் என்ன சொல்கிறதோ அதன்படி பெற்றுக்கொள்ளலாம். தேவாஸ் இணையச் சேவையை மக்களுக்குத் தரட்டும். அடுத்த சில ஆண்டுகளில் மேலும் ஓரிரு நிறுவனங்கள் இதே சாடிலைட் தொழில்நுட்பத்தின் மூலம் இணையச் சேவையைத் தர முயற்சி செய்யலாம். அவர்களுக்கும் அதே கட்டணத்தில் டிரான்ஸ்பாடர்களை அரசு தரட்டும். இவர்கள் அனைவருக்கும் திரும்பிய பக்கமெல்லாம் போட்டி இருக்கும் - வைமேக்ஸ், ஃபைபர், ஏடிஎஸ்எல் என லட்சம் வழிமுறைகள். இதில் தேவாஸுக்கு எந்தவிதத்திலும் பெரிய ஆதாயம் இருக்கப்போவதில்லை. ஆறு வருடங்களுக்குப்பின், ஏகப்பட்ட நிறுவனங்கள் இந்தத் துறையில் நுழைய முன்வந்தால் அப்போது ஏலம் விட்டால் போகிறது? (அப்போதுகூட நான் ஏலம் விடமாட்டேன்!)

அதற்குள் 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தொகையை வைத்து, அய்யோ போய்விட்டது 200,000 கோடி என்று சி.ஏ.ஜி சொல்ல, ஹிந்து பிசினஸ்லைன் அதை ஸ்கூப் என்று வெளியிட, அதன் விளைவால் பாதிக்கப்படப்போவது நாம் அனைவரும் என்பதை ஏன் நாம் பார்க்கத் தவறுகிறோம்? எதற்கெடுத்தாலும் அதிகக் கட்டணம் வசூலிக்கும் extortionist ஆகவா நாம் நம் அரசை மாற்றவேண்டும்?

தொழில்முனையும் தன்மையை ஊக்குவிக்க ஓர் அரசு பலவிதமான தொழில்நுட்பங்களை நாட்டில் புகுத்த ஆதரவு தரவேண்டும். அதன் விளைவாக தரமான புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு, நாட்டில் பல சேவைகள், குறைந்த கட்டணத்தில் பெருகும். அதன் விளைவாக பல நிறுவனங்களும் லாபம் சம்பாதிக்கும். அதுதான் ஓர் அரசுக்கு வேண்டியது. அந்த லாபத்தில் ஒரு பகுதி வரியாக அரசுக்கு வரும். ஆனால் அதற்கு பதில் தொழிலை ஆரம்பிக்கவே முடியாத அளவுக்குக் கட்டணம், வரி, உரிமத் தொகை, ஏலம் என்று பயமுறுத்தி தொழில்துறையை அழிக்கப் பார்க்கிறது அரசு. அப்படி அரசு செய்யாவிட்டால் அதனைச் செய்யத் தூண்டுகிறது சி.ஏ.ஜி. இதுதான் சாக்கு என்று தூபம் போடுகின்றன ஊடகங்கள். எதிர்க்கட்சிகளுக்கு இதனால் ஏகப்பட்ட சந்தோஷம்.

யாருக்கு நஷ்டம்?

[Customary disclaimer: ஊழல் எந்தவிதத்தில் நடந்தாலும் நான் அதனை ஆதரிக்கவில்லை. ஆ.இராசா வழக்கு உள்பட. தேவாஸ் விஷயத்தில் எங்கு ஊழல் நடந்துள்ளது என்று எனக்குப் புரியவில்லை. அரசுக்கு எந்தவிதத்திலும் நஷ்டம் இல்லை - 2ஜியிலும் சரி, இங்கும் சரி என்பதே இப்போதும் என் கருத்து.]

Monday, February 07, 2011

அஜந்தா - ஒரு படப் பார்வை

குதிரை லாட வடிவில் 29 குகைகள் - சைத்தியங்களும் விகாரங்களும். கீழே வாகோரா ஆறு



ஒரு விகாரம். ஒரு மாமல்லபுரம் குகைக்கோவிலுடன் ஒப்பிட்டால் பல மடங்கு பெரியது! விகாரம் என்றால் உள்ளே புத்த பிக்குகள் வசிக்கும் இடம். நடுவில் ஒரு மண்டபம். வாசலுக்கு நேராக உள்ளே புத்தருக்கு ஒரு சந்நிதி. சுற்றிலும் அறைகள். அங்குதான் பிக்குகள் வசிப்பர். மண்டபத்தில் அமர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்வர்.



அஜந்தா என்றாலே ஓவியங்கள்தானே. விஸ்வாந்தர ஜாதகத்திலிருந்து ஒரு காட்சி.



புத்தரின் வாழ்க்கை, ஜாதகக் கதைகள், அவதானங்கள், இல்லாவிட்டால் இருக்கவே இருக்கின்றன பூக்கள், கொடிகள், வளைவுகள், வண்ணங்கள்.



நாக அரசனும் மனைவியும். புடைப்புச் சிற்பங்களுக்கும் அஜந்தாவில் குறைவில்லை.



விகாரத்தின் வாசலிலிருந்து உள்ளே பார்த்தால் தெரியும் புத்தர் சிலை. கையில் உள்ள முத்திரைகளைக் கவனியுங்கள். ஒரு விகாரத்தில் உள்ள புத்தர் சிலையைப் போன்றதே பிற அனைத்து விகாரங்களிலும்.



சுவரில் காணும் இடங்களிலெல்லாம் புத்தர். கைதான் கொஞ்சம் பெரிது!



மகா பரிநிர்வாணம். கௌதம புத்தரின் இறுதி நிலை.



விகாரங்கள் புத்த பிக்குகள் வசிக்க என்றால், சைத்தியங்கள்தான் புத்தருக்கான கோவில்கள்.



சைத்தியத்தின் உள்ளே வணக்குத்துக்குரிய புத்தர். ஹீனயான காலத்தில் புத்தருக்கு உருவம் கிடையாது. பின்னர் மகாயான காலத்தில் உருவம் வந்துவிட்டது.



தரையிலிருந்து கூரை உச்சியைத் தொடும் ஸ்தூபி. சைத்தியத்தின் உள்ளே.





அஜந்தாவை விளக்குவது எளிதான காரியமல்ல. அதனை நான் இங்கு செய்யப்போவதும் இல்லை. பல புத்தகங்களைப் படித்து, விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டு, பின்னர் நேரில் போய் சில நாள்களாவது தங்கிப் பார்ப்பதுதான் அஜந்தாவுக்கு நாம் அளிக்கும் மரியாதை.

ஒவ்வொரு விகாரத்தின் உள்ளும் காணப்படும் ஓவியங்களைப் படம் பிடிக்க மிக உயர்வான கேமராவும், தேர்ந்த படம் பிடிப்பவரும் வேண்டும். என்னிடம் அப்படிப்பட்ட கேமரா கிடையாது.

சுருக்கமாகச் சொல்வதானால், அஜந்தா என்பது இந்தியக் கலை வெளிப்பாட்டின் உச்சம். தமிழகத்தில் மாமல்லபுரம், பல்லவர்களின் பிற படைப்புகள், சோழர்களின் கோவில்கள், குறிப்பாக தஞ்சை பிரகதீசுவரர், கங்கை கொண்ட சோழபுரம், பாண்டிய நாட்டின் வெட்டுவான்கோவில், பாண்டியர்கள் உருவாக்கிய சித்தன்னவாசல், புதுக்கோட்டையின் பல பிற கோவில்கள், நாமக்கல் குகைகள் என்று பல உள்ளன. கர்நாடகத்தில் சாளுக்கியர்களின், ஹோய்சாலர்களின் சாதனைகள் உள்ளன. ஆனால் மகாராஷ்டிரத்தில் உள்ள அஜந்தாவும் எல்லோராவும் தனித்தன்மை கொண்டவை. அவற்றுக்கு இணை இந்தியாவிலேயே இல்லை.

அஜந்தா அனுபவம் பற்றி பின்னர் முழுமையாக எழுதுகிறேன்.

தேகம் ஆன்லைன் விற்பனை

நியூ ஹொரைஸன் மீடியாவின் புத்தகங்களை மட்டும்தான் முதலில் எங்கள் மின்வணிகத் தளத்தில் விற்பனை செய்துவந்தோம். கடந்த நான்கைந்து மாதங்களாக காலச்சுவடு, தமிழினி, உயிர்மை தொடங்கி வேறு சில பதிப்பகங்களின் புத்தகங்களை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளோம். மின்வணிக விற்பனை என்பது ஒரு பெரும் கடையில் நடக்கும் விற்பனையைவிடக் குறைவுதான். ஆனால் வரும் சில மாதங்களில் இந்த விற்பனையை அதிகரிக்கச் சில திட்டங்களைத் தீட்டியுள்ளோம்.

கடந்த மாதத்தில் (ஜனவரி 2011), எங்கள் மின்வணிகத் தளத்தில் மிக அதிகமாக விற்பனை ஆன புத்தகம் (அனைத்துப் பதிப்பாளர், எழுத்தாளர்களையும் சேர்த்து), சாரு நிவேதிதாவின் தேகம் நாவல்.

இது ஒரு தகவலுக்காக மட்டுமே. இனி வரும் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் முதல் ஐந்து இடங்களில் உள்ள புத்தகங்கள் எவை எவை என்பதைத் தவறாமல் குறிப்பிட உள்ளேன். மேலும் பல பதிப்பாளர்களின் புத்தகங்களையும் (அவர்கள் அனுமதியுடன்) எங்கள் மின்வணிகத் தளத்தில் சேர்க்கும் வேலை இந்த மாதம் நடைபெறும்.

கிழக்கு பதிப்பகம் வழங்கும் அதிரடி புத்தகத் திருவிழா

நினைத்து பார்க்கமுடியாத விலையில், ரூபாய் 5 தொடங்கி கிழக்கு, பிராடிஜி, வரம், நலம் புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. வரலாறு, வாழ்க்கை, அரசியல், புதினம், வர்த்தகம், சுய முன்னேற்றம், அறிவியல், மொழிபெயர்ப்பு என்று பல துறைகளைச் சேர்ந்த நூல்கள் கண்காட்சியில் கிடைக்கும்.
 
சில புத்தகங்களுக்கு 80% வரை (ஆம், எண்பது சதவிகிதம் வரை!) தள்ளுபடி உள்ளது.

இடம் 1:
 
மைலாப்பூர் குளம் எதிரில்.
 
தொலைபேசி எண் : 9500045643

இடம் 2:
 
L.R. சுவாமி ஹால்
சிவா விஷ்ணு கோயில் எதிரில்
சங்கர பாண்டியன் ஸ்டோர் அருகில்
தி. நகர்,சென்னை
 
தொலைபேசி எண் : 9500045608

தேதி: 

பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 13 வரை.

Saturday, February 05, 2011

யூத நோபல், நாஸி நோபல்

[நான்கு மாத இடைவெளிக்குப்பின் மீண்டும் அம்ருதா மாத இதழில் எழுத ஆரம்பித்துள்ளேன். பிப்ரவரி 2011 இதழில் வெளியான கட்டுரை இது.]

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம், அறிவியல் துறைக்கு மிகுந்த ஊக்கம் தருவதாக இருந்தது. அந்த ஒரு நூற்றாண்டில்தான் நாம் மிகப்பெரும் அறிவியல் பாய்ச்சலைச் செய்தோம். அதன் ஆரம்பக் கட்டங்களில் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்தவர்கள் ஜெர்மனி நாட்டினர். அறிவியலில் மட்டுமல்ல, கணிதம், தத்துவம், இசை, ஓரளவுக்கு இலக்கியம் என அனைத்திலும் அற்புதமான பங்களிப்பைச் செய்தனர். இப்படிப்பட்ட சாதனையுடன்தான் இரு மோசமான உலகப் போர்களை ஆரம்பித்த, எண்ணற்ற யூதர்களைக் கொன்ற அவலங்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

எப்படி ஒரு நாடு மிகச் சிறந்த அறிவியல் அல்லது கணிதப் பாரம்பரியத்தை உருவாக்குகிறது என்று பார்த்தால், அதற்கு ஒரு குறிப்பிட்ட ஆரம்பப் புள்ளி இருக்கும். மிகச் சிறந்த ஒருவர் தோன்றுவார். அவர் மாபெரும் மேதையாக இருப்பார். எங்கிருந்தோ, எப்படியோ தனக்கு முன் நிகழ்த்தப்பட்ட அனைத்துச் சாதனைகளையும் கற்றுத் தேர்ந்துவிடுவார். ஆனால் அவர் தன் வேலையுண்டு, தானுண்டு என்று இருந்துவிட மாட்டார். முதலில் பிஎச்.டி போன்ற பட்டத்தை எளிதாகப் பெறுவார். முனைவர் பட்டம் பெற்றதும், பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணிக்குச் சேர்வார். தன் கற்பிக்கும் திறமையால் அடுத்த தலைமுறை மாணவர்களை உயரத்துக்குக் கொண்டுசெல்வார். அவரிடம் படித்த மாணவர்கள் அருகில் உள்ள கல்வி நிலையங்களில் வேலைக்குச் சேர்வார்கள். அவர்கள், மேலும் சிறந்த மாணவர்களை உருவாக்குவார்கள். இப்படியே அந்த நாட்டில் அந்தத் துறை உச்சத்துக்குச் செல்லும். அது பிற துறைகள்மீதும் தாக்கத்தைச் செலுத்தும்.

பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஜெர்மனியில் தலைசிறந்த கணிதவியலாளர்கள் சிலர் தோன்றினர். இதன் தொடக்கமே கார்ல் பிரெடெரிக் கவுஸ் (1777-1855). கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் கவுஸுக்கு ஒப்பான அல்லது கவுஸைத் தாண்டிச் சென்ற கணித மேதை யாருமே இல்லை என்று சந்தேகத்துக்கு இடமின்றிச் சொல்லிவிடலாம். இவரது தனிப்பட்ட கணிதச் சாதனைகள் ஒன்றுமே இல்லை என்ற அளவுக்கு இவர் உருவாக்கிய மாணவர்களையும் அவர்கள் உருவாக்கிய மாணவர்களையும் சொல்லிவிடலாம். கவுஸிடம் படித்த மாணவர்களிலிருந்து சுருக்கமான பட்டியல் இது: பிரெடெரிக் பெஸ்ஸெல், ரிச்சர்ட் டெடகைண்ட், பெர்ன்ஹார்ட் ரீமான், மாரிஸ் கேண்டார், குஸ்தாவ் கிர்க்காஃப், எர்னஸ்ட் கும்மர், யோஹான் டிரிச்லே, அகஸ்ட் மோபியஸ். இது ஏதோ புரியாத அன்னியப் பெயர்களாகத் தோன்றும். ஆனால் இந்தக் கட்டுரையில் இவர்களது கணித/அறிவியல் சாதனைகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தால் இடம் போதாது. இன்று பி.எஸ்சி, எம்.எஸ்சி கணிதம், இயற்பியல் படிப்பவர்கள் இந்தப் பெயர்களைத் தாண்டாமல் செல்லமுடியாது. அடுத்த மாதக் கட்டுரையில் கவுஸும் அவருடைய மாணவர்களும் என்ன செய்தார்கள் என்று விவரிக்கிறேன்.

இந்தக் கணிதச் சாதனைகள்மீதுதான் இருபதாம் நூற்றாண்டில் ஜெர்மனியின் இயல்பியல் சாதனைகள் கட்டப்பட்டன. அதனைத் தொடங்கிவைத்தவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்த மேக்ஸ் பிளாங்க் (1858-1947). கவுஸைப் போலவே, பிளாங்க் அதி அற்புதமான சாதனைகளை இயல்பியலில் செய்தார். அத்துடன் புதிய தலைமுறை விஞ்ஞானிகள் பலரையும் உருவாக்கினார். எல்லாவற்றுக்கும் மேலாக, ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை முடிந்தவரை ஜெர்மனியிலேயே வைத்திருக்க முயற்சி செய்து, அதில் பெருமளவு வெற்றியும் கண்டார்.

இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப்போவது மேக்ஸ் பிளாங்க், பிலிப் லெனார்ட், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆகியோரைப் பற்றியும் அவர்களுக்கு இடையில் இருந்த அன்பையும் வெறுப்பையும் பற்றி. இந்த மூவருமே இயல்பியலுக்கான நோபல் பரிசு வாங்கியவர்கள். இந்த மூவரில் ஐன்ஸ்டைன் மட்டும்தான் யூதர். மற்ற இருவரும் ஹிட்லர் அண்ட் கோ சொன்னபடி ‘ஆரிய’ இனத்தைச் சேர்ந்தவர்கள்.

கவுஸின் மாணவர் குஸ்தாவ் கிர்க்காஃப் பற்றி மேலே குறிப்பிட்டிருந்தேன். 8-ம், 9-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் புத்தகத்தில் மின்சாரம் பற்றிப் படிக்கும்போது கிர்க்காஃபின் சுற்று (Kirchoff's circuit) என்பதைப் படித்திருப்பீர்கள். இந்தக் கிர்க்காஃபிடம்தான் பிளாங்க் படித்தார். தனது முனைவர் பட்டத்துக்கான ஆய்வறிக்கையை இவர் வெப்ப இயக்கவியல் (தெர்மோடயனமிக்ஸ்) துறையில் செய்தார். பின்னர் பெர்லின் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார்.

இந்த உலகம், உலகத்தில் உள்ள பொருள்கள் ஆகியவை எப்படி உருவாகியுள்ளன? அவை தொடர்ச்சியானவையா (continuum) அல்லது துண்டு துண்டுகளால் ஆனவையா (discrete) என்பது ஒரு முக்கியமான தத்துவார்த்தக் கேள்வி. இந்தக் கேள்வியை மேலும் நீட்டித்து, உலகில் நாம் உணரும், பார்க்கும் எதுவுமே தொடர்ச்சியா அல்லது துண்டுதுண்டா என்ற கேள்வியை முன்வைக்கலாம்.

உதாரணமாக, கடைக்குச் செல்கிறீர்கள். ஒரு மீட்டர் கயிறு வேண்டும் என்று கேட்கிறீர்கள். கடைக்காரர் வெட்டித்தருகிறார். ஒரு மில்லிமீட்டர் கயிறு அல்லது நூல் வேண்டும் என்றால் அவரால் அவ்வளவு சரியாக வெட்டித்தரமுடியாது. ஒரு மில்லிமீட்டர் என்பது சிறிய ஒரு துணுக்கு. ஆனால், சரியான கருவிகளைக் கொண்டு இதனையும் சாதிக்கலாம். சரி, ஒரு மைக்ரோமீட்டர் (அதாவது மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு) அளவுக்கு என்றால்? அதனையும் ஒருவிதத்தில் செய்துவிடலாம். ஒரு நானோமீட்டர் (மைக்ரோமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு) என்றால்? பிரச்னையை நெருங்கிவிட்டீர்கள் என்று பொருள். ஏனெனில் இப்போது அணு ஒன்றின் அகலத்துக்கு வந்துவிட்டீர்கள். ஓர் அணுவின் அகலம் என்பது 0.1 நானோமீட்டர் முதல் 0.5 நானோமீட்டர். பருத்தியால் ஆன துணி என்றால் அதில் உள்ள ஒரு மூலக்கூறின் அகலம் கிட்டத்தட்ட 5-6 நானோமீட்டராக இருக்கலாம். சரி, ஏதோ ஒரு வகையில் இதனைக்கூடச் சாதித்துவிடலாம்.

ஆனால் ஒரு பிகோமீட்டர் (நானோமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு) அளவுக்கு எனக்கு ஒரு துண்டு கொடுங்கள் என்று நீங்கள் கேட்டால் யாராலும் இதனைக் கொடுக்கமுடியாது! ஏனெனில், உலகில் இருக்கும் மிகச் சிறிய பொருளே நானோமீட்டர் அளவு கொண்டது. அதனைப் பாதியாகவெல்லாம் வெட்டமுடியாது. அது சிதைந்துபோய்விடும். இதைவிடச் சிறியது என்றால் அது அணுவின் உள்ளே இருக்கும் எலெக்ட்ரான் (மின்னணு). ஆனால் அதன் அகலத்தையெல்லாம் சோதனை செய்து கண்டுபிடிக்கமுடியாது. அந்தச் சிறிய அளவில் இருக்கும் எதுவும் பிழைக்காது. அது அருகில் உள்ள வேறு எந்தப் பொருளிலாவது ஒட்டிக்கொண்டுவிடும். ஆக, இந்த உலகில் மிகச் சிறிய நீள, அகலம் எது என்றால் அது நானோமீட்டர் கணக்கில்தான் இருக்கும்.

இதேபோல எடையையும் சொல்லலாம். உங்களிடம் நிறையக் காசு இருந்தால், ஒரு கிலோ வெங்காயம் வாங்கலாம். ஒரு கிராம் தங்கம் வாங்கலாம். இப்படியே மைக்ரோகிராம் அளவுக்கு எதையாவது வாங்கலாம். இன்னும் இன்னும் குறைவான எடைக்குப் பொருள்களைப் பிரிக்கமுடியும். உலகிலேயே எடை மிகக் குறைவாக உள்ள ஹைட்ரஜன் அணுவின் எடை 1.6735x10-27 கிலோகிராம். அதாவது மிக மிகச் சிறிய ஓர் எடை. இதற்கும் கீழே என்றால் ஓர் எலெக்ட்ரானின் எடை 9.109x10-31 கிலோகிராம். இதற்குக் கீழ் எல்லாம் நீங்கள் கேட்டாலும் கிடைக்காது. எலெக்ட்ரானைத் துண்டாக உடைக்கவெல்லாம் முடியாது.

ஆற்றல் என்பதும் இப்படித்தான் என்ற ஞானம் திடீரென்று பிளாங்குக்கு ஏற்பட்டது. அவர் மின்காந்த அலைகளைக் கொண்டு பல பரிசோதனைகளைச் செய்து வந்தார். ஒவ்வொரு விதமான மின்காந்த அலைகளிலும் எந்தமாதிரியான ஆற்றல் உள்ளது என்பதை ஆராய்ந்தார். மின்காந்த அலைகள் என்பவை நாம் தினம் தினம் பயன்படுத்துபவைதான். வீட்டில் தொலைக்காட்சியின் சானல்களை மாற்றப் பயன்படுத்தும் ரிமோட், மைக்ரோவேவ் அவன், ரேடியோப் பெட்டி, செல்பேசி என அனைத்துமே மின்காந்த அலைகளால் இயங்குபவை. மின்காந்த அலைகள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட பண்பு அவற்றின் அதிர்வெண் எனப்படுவது. ஒரு மின்காந்த அலையில் உள்ள ஆற்றல், அதன் அதிர்வெண்ணுடன் தொடர்புகொண்டது என்பதை பிளாங்க் கண்டுபிடித்தார். அதன் விளைவாக, அவர் கண்டுபிடித்ததுதான் அபாரமான ஒரு கருத்து. அதாவது ஆற்றல் என்பதற்கும் எடை, நீள அகலம் போல ஒரு குறைந்தபட்ச அளவு ஒன்று உள்ளது. அதைவிடக் குறைவான அளவில் ஆற்றல் துண்டைக் கொடுக்க முடியாது. இந்தக் குறைந்த ஆற்றல் துண்டைத்தான் பிளாங்க் ‘குவாண்டா’ என்றார். ‘துண்டு’ என்பதாகத்தான் நாம் இதனைத் தமிழில் ஒருமாதிரி மொழிபெயர்த்தாகவேண்டும்.

இந்தக் கருத்து வெளியானது 1900-ல். இந்தக் கருத்து அறிவியல் உலகில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தது. பிற்காலத்தில் குவாண்டம் மெக்கானிக்ஸ் என்ற துறைக்கே ஒருவிதத்தில் இதுதான் வித்திட்டது. இந்தக் கண்டுபிடிப்புக்காக மேக்ஸ் பிளாங்குக்கு 1918-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கினார்கள்.

பிலிப் லெனார்ட், ஜெர்மானியப் பெற்றோருக்கு ஹங்கேரியில் பிறந்தவர். முனைவர் பட்டம் பெற்றது ஜெர்மனியில். அங்கேயே வேலையும் செய்ய ஆரம்பித்தார். மின்சாரத்தைப் பாய்ச்சும்போது உலோகங்களிலிருந்து மின்னணுக்கள் வெளியாகும். இதனை கேதோட் கதிர்கள் என்போம். இது தொடர்பான பல கண்டுபிடிப்புகளை லெனார்ட் நிகழ்த்தியிருந்தார். அதற்காக இவருக்கு 1905-ம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதாவது மேக்ஸ் பிளாங்க் நோபல் பரிசு வாங்குவதற்கு முன்னரேயே லெனார்டுக்கு நோபல் கிடைத்திருந்தது. கேதோட் கதிர்கள் தொடர்பான ஆராய்ச்சியின்போதுதான் ஒளி அலைகள் (அவையும் மின்காந்த அலைகளே) ஒரு சில பொருள்களின் (முக்கியமாக உலோகங்களின்) மேற்பரப்பில் படும்போது அந்தப் பரப்பிலிருந்து மின்னணுக்கள் வெளிப்படுகின்றன என்பதை இவர் கண்டுபிடித்தார்.

இதைத்தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எடுத்துக்கொண்டு மேற்கொண்டு ஆராய முற்பட்டார். 1905-ல் ஐன்ஸ்டைனுக்கு அகடமிக்ஸ் சார்ந்து ஒரு வேலை இல்லை. சுவிட்சர்லாந்தின் காப்புரிமை வழங்கும் அலுவலகத்தில் ஓர் எழுத்தராக வேலை செய்துவந்தார் அவர். ஆனால் 1905-ல் ஆராய்ச்சி இதழ் ஒன்றில் அவர் வரிசையாக நான்கு கட்டுரைகளை வெளியிட்டு, இயல்பியல் உலகையே அதிரச் செய்தார்.

அதில் ஒன்றுதான் லெனார்ட் கண்டுபிடித்த ஒளி அலைகள் மின்னணுக்களை வெளிப்படுத்தும் நிகழ்வை ஆராய்ந்தது. லெனார்டின் கண்டுபிடிப்பையும் மேக்ஸ் பிளாங்கின் கண்டுபிடிப்பையும் ஒன்றாகப் பார்த்த ஐன்ஸ்டைன், ஒளி அலைகள் ஆற்றல் துணுக்குகளாக (ஃபோடான்) பரவுகின்றன என்றார். இந்த ஆற்றல் துண்டுகள் ஒரு பரப்பின்மீது மோதும்போது, அதனிடம் உள்ள ஆற்றல் மேற்பரப்பில் உள்ள ஒரு மின்னணுவுக்கு மாறுகிறது. உடனே மின்னணு அந்தப் பரப்பிலிருந்து பிய்த்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட வேகத்தில் வெளியேறுகிறது.

இந்தக் கருதுகோளின் அடிப்படையில்தான் ஐன்ஸ்டைனுக்கு 1921-ல் நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. அவர் செய்த வேறு எத்தனையோ விஷயங்களுக்காக ஐன்ஸ்டைனுக்கு நோபல் கொடுத்திருக்கலாம். உதாரணத்துக்கு, ஐன்ஸ்டைனின் சார்பியல் கொள்கை அந்தக் காலத்தில் சர்ச்சைகளுக்கு உள்ளானதாக இருந்தது. எனவே அதனைவிடுத்து, ஒளிமின் விளைவை ஐன்ஸ்டைன் விளக்கியதற்காக நோபல் பரிசைக் கொடுத்தனர்.

இது பிலிப் லெனார்டுக்குப் பொறுக்கவில்லை. அவர் ஏற்கெனவே 1905-லேயே நோபல் பெற்றிருந்தாலும், ஒளிமின் விளைவே தானே கண்டுபிடித்ததாகவும் அதனைத் தான் முழுமையாக விளக்கிவிட்டதாகவும் நினைத்துக்கொண்டிருந்தார். அதன் பரிசு வேறு ஒருவனுக்கு, அதுவும் ஒரு யூதனுக்குப் போய்ச் சேர்ந்தது அவருக்குக் கோபத்தை அளித்தது.

இதற்கிடையில் மேக்ஸ் பிளாங்க், ஐன்ஸ்டைனை ஜெர்மனிக்கு அழைத்து வந்திருந்தார். மிக அதிகச் சம்பளம் கொடுத்து அவருக்கு ஒரு நல்ல வேலையை வாங்கித் தந்திருந்தார். ஜெர்மனியில் ஐன்ஸ்டைன் இருந்த காலகட்டத்தில்தான் அவர் சார்பியல் தத்துவத்தை மேலும் விரிவாக்கி விளக்க முற்பட்டிருந்தார். ஏற்கெனவே 1905, 1906 ஆண்டுகளில் அவர் சிறப்புச் சார்பியல் தத்துவம் என்பதை விவரித்திருந்தார். அதனை மேலும் விரிவாக்கி, பொதுச் சார்பியல் தத்துவத்தையும் பின்னர் 1915-ல் வெளியிட்டிருந்தார்.

ஆனால் லெனார்ட் போன்ற பல ஜெர்மன் விஞ்ஞானிகள் ஐன்ஸ்டைனின் தத்துவத்தை ஏற்கவில்லை. சாதாரணமாக, அறிவியலுக்குள்ளாக இருக்கவேண்டிய தர்க்கம் வேறு தளங்களுக்குப் பரவியது. முதலாம் உலகப்போரைத் தொடங்கி, மிக வேகமாக வெற்றிப்பாதையில் சென்றுகொண்டிருந்த ஜெர்மனி, பின்னர் பிரிட்டன், பிரான்ஸின் எதிர்த் தாக்குதலைச் சமாளிக்கமுடியாமல் தோற்றுப்போனது. ஜெர்மனியின் அரசர் பதவியைத் துறந்தார். ஜெர்மனிமீது கடுமையான அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் ஜெர்மனியின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

ஜெர்மனியின் அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம் யூதர்களே என்ற யூத வெறுப்பு அந்நாட்டில் பரவியது. அடால்ஃப் ஹிட்லரின் கட்சி இதனை எங்கும் பரப்பியது. அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிறுசிறு கூட்டணி அரசுகள் கவிழ, ஹிட்லர் ஆட்சியைப் பிடித்தார்.

ஹிட்லரின் ஆட்சியின்கீழ், லெனார்ட் போன்றவர்கள் யூத வெறுப்பை அறிவியலுக்குள் கொண்டுவந்தனர். ஐன்ஸ்டைன் போன்றவர்கள் ஜெர்மனியின் இளைஞர்களைத் தவறான பாதைக்குக் கொண்டுசெல்லவே சார்பியல் தத்துவம் போன்ற குப்பைகளை முன்வைக்கிறார் என்றார் லெனார்ட். ஊரெங்கும் கூட்டங்களைக் கூட்டி, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து ஐன்ஸ்டைனைத் தாக்கினார். ஐன்ஸ்டைன் இவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

மேக்ஸ் பிளாங்க் இந்த நிகழ்வுகளால் மனம் வருந்தினார். ஆனால் அவரால் என்ன செய்யமுடியும்? ஜெர்மனியே நாஸிகளால் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் அவர் மீண்டும் மீண்டும் ஐன்ஸ்டைனை ஜெர்மனியிலேயே இருக்குமாறு கெஞ்சிக்கொண்டிருந்தார். எல்லாம் சரியாகிவிடும் என்று சமாதானம் செய்தபடி இருந்தார்.

ஒரு கட்டத்தில் ஐன்ஸ்டைனுக்கு தன் உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என்பது தெரிந்துவிட்டது. எண்ணற்ற யூத விஞ்ஞானிகள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்; கைது செய்யப்பட்டனர். ஐன்ஸ்டைனின் உலகப் பிரபலம் காரணமாகவே அவர் அதுவரையில் விட்டுவைக்கப்பட்டார். 1933-ல் அமெரிக்காவில் சில சொற்பொழிவுகள் தருவதற்காக ஐன்ஸ்டைன் சென்றிருந்தார். அப்போது ஹிட்லர், யூதர்கள் பல்கலைக்கழகங்களிலும் பிற அரசு உத்தியோகங்களிலும் வேலை செய்யத் தடை விதித்து ஓர் அரசாணையை வெளியிட்டார். அதைக் கேள்விப்பட்ட ஐன்ஸ்டைன், அமெரிக்காவிலேயே தங்கிவிட்டார். வாழ்க்கை முழுதும் போரை வெறுத்த, அகிம்சையை ஆதரித்த ஒருவராகவே ஐன்ஸ்டைன் இருந்தார். அதனால்தான் மகாத்மா காந்தியை அவர் ஆராதித்தார்.

மேக்ஸ் பிளாங்கின் மூன்றாவது மகன் எர்வின் பிளாங்க், ஹிட்லரைக் கொல்லச் சதி செய்து, அதில் சிக்கி, 1945-ல் நாஸிகளால் கொல்லப்பட்டார். மனம் உடைந்த பிளாங்க் இரண்டு ஆண்டுகள் கழித்து, 1947-ல் மரணமடைந்தார். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்றுவிட, நேச நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஜெர்மனியில், 1945-ல் பிலிப் லெனார்ட் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். லெனார்டும், 1947-ல் இறந்துபோனார்.

இன்று அறிவியல் உலகம், மேக்ஸ் பிளாங்கையும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனையும் மட்டும்தான் ஞாபகத்தில் வைத்துள்ளது.