Monday, February 14, 2011

இஸ்ரோ - அந்தரீக்ஷ் - தேவாஸ்

2ஜியில் தொடங்கிய கூத்து ஓய்வதாகத் தெரியவில்லை. ஸ்பெக்ட்ரம் என்றாலே ஊழல்தான் என்று சி.ஏ.ஜி முதல் எதிர்க்கட்சிகள் வரை முடிவு செய்துவிட்டனர். கூடச் சேர்ந்து கும்மி அடிக்க ஊடகங்கள்.

முதலில் இந்த தேவாஸ் மல்ட்டிமீடியா என்ன செய்ய முயன்றது என்று புரிந்துகொள்ளப் பார்ப்போம்.

தொலைக்காட்சி சேவையை எடுத்துக்கொண்டால், முதன்முதலில் உருவானது தரை வழியாக தொலைக்காட்சி சிக்னல்களை அனுப்பும் தொழில்நுட்பம். அமெரிக்காவில் ஏ.பி.சி, என்.பி.சி, சி.பி.எஸ் என்னும் மூன்றும்தான் பிரதானமாக இந்தச் சேவையை தரைவழி டிரான்ஸ்மிட்டர்கள் மூலம் அளித்துவந்தன. (மூன்றுமே தனியார் சேவைகள்.)

ஓர் ஊரில் எஃப்.எம் வானொலி நிலையங்கள் உள்ளன என்றால் அதிகபட்சம் 25 நிலையங்கள்தான் இருக்கமுடியும். அவற்றின் சேவை சுமார் 50 கிலோமீட்டர் விஸ்தீரணத்துக்குத்தான் இருக்கும். அதையும் கொஞ்சம் தாண்டலாம்; ஆனால் சேவையின் தரம் பாதிக்கப்படும்.

தரைவழித் தொலைக்காட்சி இயங்கும் கேரியர் ஃப்ரீக்வன்ஸி ஸ்பெக்ட்ரத்தில் மிகக் குறைவான நிலையங்கள் மட்டுமே இருக்கமுடியும். பிரிட்டனில் மொத்தம் ஐந்து தரைவழித் தொலைகாட்சி நிலையங்கள் உள்ளன. பிபிசி-1, பிபிசி-2, ஐ.டி.வி, சானல் 4, சானல் 5. இதில் முதல் இரண்டும் விளம்பரம் இல்லாத, அரசு நிதியுதவி பெறும் ஸ்டேஷன்கள். மற்றவை தனியார் சேவைகள் - விளம்பரம் உண்டு.

இந்தியாவில் தரைவழித் தொலைக்காட்சிச் சேவை தூரதர்ஷன் நிலையத்துடன் தொடங்கி, அடுத்து சில மெட்ரோ மாநகரங்களில் மட்டும் தூரதர்ஷன்-2 என்பதாக இருந்தது. அதன்பிறகு அதிகரிக்கவில்லை. தனியார் யாருமே இந்தத் துறையில் அனுமதிக்கப்படவில்லை.

தரைவழித் தொலைக்காட்சியில், தொலைக்காட்சி நிலையங்கள் குறிப்பிட்ட அதிர்வெண்ணில் தங்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும். வீட்டில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள் அந்த அதிர்வெண் சிக்னலைப் பெற்று, படங்களைக் காட்டும். வேண்டுமென்றால் பல அடி உயரத்துக்கு ஆண்டெனாக்களை உருவாக்கிப் பொருத்திக்கொள்ள வேண்டியிருக்கும். மேலும் குறிப்பிட்ட ஸ்டேஷனைப் பெற ஆண்டெனாவின் திசையைக்கூட மாற்றவேண்டியிருக்கும்.

தரைவழித் தொலைக்காட்சிக்குப் பெரிய எதிர்காலம் இருக்கவில்லை. வானில் செயற்கைக்கோள்களை அனுப்பும் தொழில்நுட்பம் முன்னேற முன்னேற, கேபிள் அண்ட் சாடிலைட் (C&S) தொலைக்காட்சி முன்னுக்கு வந்தது. 

அமெரிக்காவில் கேபிள் பெரும் முன்னேற்றம் கண்டது. தொலைக்காட்சி அமைப்பையே மாற்றியது. இம்முறையில் கேபிள் ஹெட் எண்ட் எனப்படும் சில இடங்களில் செயற்கைக்கோள் சிக்னல்களை பெரிய டிஷ் ஆண்டெனா கொண்டு பெறுவார்கள். இந்த ஹெட் எண்டிலிருந்து அருகில் இருக்கும் வீடுகளுக்கு கேபிள் வடம் செல்லும். இந்த வடத்தின் வழியாக ஆரம்பத்தில் சிக்னல்கள் அனலாக் முறையில் அனுப்பப்பட்டன. இதன் தொழில்நுட்பத்துக்குள் நான் செல்லப்போவதில்லை. ஆரம்பத்தில் UHF, VHF அதிர்வெண்களில் 12 நிலையங்கள் என்று தொடங்கி, பின்னர் படிப்படியாக அனலாக் முறையிலேயே 90 நிலையங்கள் வரை கேபிள் வழியாகக் கொடுக்கமுடிந்தது.

அதன்பின் டிஜிட்டல் முறையில் கேபிள் வழியாக சிக்னல்கள் அனுப்பப்பட்டபோது பல நன்மைகள் கிடைத்தன. 200 நிலையங்களுக்குமேல் தரமுடிந்தது. வீடியோ தரம் அற்புதமாக இருந்தது. டிஜிட்டல் செட் டாப் பாக்ஸ், ஆக்சஸ் கார்ட் ஆகியவை இருக்கும் காரணத்தால், என்கிரிப்டட் வீடியோ முறைமூலம், பே பெர் வியூ போன்ற சேவைகளைத் தரமுடிந்தது. காசு கொடுத்தால்தான் பார்க்கமுடியும் போன்ற நிகழ்ச்சிகள்.

விரைவில் இதிலும் பெரும் மாற்றங்களைப் பார்க்கப்போகிறோம். செப்புக் கம்பியால் ஆன கோ-ஆக்ஸ் கேபிள்களுக்குப் பதில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் வரத்தொடங்கியுள்ளன. வீட்டுக்கு ஃபைபர் வந்தால் ஆயிரக்கணக்கான சேனல்களை அதன்வழியாக அனுப்பலாம்.

அதே நேரம் வீடியோக்கள் எல்லாமே டிஜிட்டல் கோப்புகளாக, இணையம் வழியாக வரும் நிலையும் ஏற்படத் தொடங்கியுள்ளது. எனவே ஏதோ ஒரு வகையில் வீட்டுக்கு 8 mbps இணைப்பு இருந்தால், விரும்பிய வீடியோ நிகழ்ச்சியை ஹை டெஃபினிஷன் டிவி தரத்தில் காணமுடியும்.

இதற்கிடையில் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இரண்டு சேவைகள் முன்னுக்கு வரத்தொடங்கின. ஒன்று டி.டி.எச் (DTH) எனப்படும் வீட்டுக்கு வரும் செயற்கைக்கோள் தொலைக்காட்சிச் சேவை. நியூஸ் கார்ப் நிறுவனத்தின் ரூப்பர்ட் மர்டாக் இதில் பெரிய ஆள். இவரது ஸ்கை தொலைக்காட்சிச் சேவை பிரிட்டனில் மாபெரும் டி.டி.எச் சேவை வழங்கு நிறுவனமாக உள்ளது. ஐரோப்பாவின் பல நாடுகளில் சேவைகளை அளித்துவருகிறார். அமெரிக்காவில் டைரெக்டிவி (DirecTV), டிஷ்நெட் (Dishnet) ஆகியவை இந்தச் சேவையை அளிக்க ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் மர்டாக் டைரெக்டிவியின் பங்குகளை வாங்கி அதனைத் தன் கைக்குள் கொண்டுவந்தார்; பின்னர் அதனை விற்றுவிட்டார்.

சி அண்ட் எஸ் முறையில் ஊரெங்கும் கேபிள் சர்வீஸ் தருவோர் வேண்டியிருந்தது. அவர்கள்தான் பணத்தை வசூலித்து, அதில் ஒரு பங்கை கேபிள் டிவி நிறுவனத்துக்குத் தரவேண்டியிருந்தது. இந்தியாவில் இப்போதும் சக்கைப்போடு போடும் இந்தத் துறையில் தமிழகத்தில் (சன் டிவியின்) சுமங்கலி கேபிள் விஷன் பற்றியும் அவர்களது போட்டியாளர்களுக்கு என்ன நடந்தது என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அரசியல் தொடர்புகள்மூலம் எப்படியெல்லாம் இந்தத் துறையை அடக்கி ஆளமுடியும் என்று உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

டி.டி.எச் இதில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தது. சி அண்ட் எஸ் ரிசீவர் டிஷ் ஆண்டெனா போல் அல்லாது, இந்த டி.டி.எச் ஆண்டெனாக்கள் மிகச் சிறியவை. வீட்டில் நேரடியாக மாட்டிக்கொள்ளலாம். தெருவில் குழி தோண்டி கேபிள் பதிக்கவேண்டியதில்லை. முழுவதும் டிஜிட்டல். தரமான வீடியோ. கட்டணத்தை வசூலிக்க இடைத்தரகர்கள் வேண்டியதில்லை. கிரெடிட் கார்டு வழியாக நேரடியாகக் கட்டணத்தைச் செலுத்தமுடியும். வீடு மாறினால் டிஷ் ஆண்டெனாவைக் கையோடு எடுத்துக்கொண்டு செல்லலாம். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் நிகழ்ச்சிகள் தெரியும்.

கேபிள் அண்ட் சாடிலைட்டும் சரி, டி.டி.எச்சும் சரி, இஸ்ரோ அனுப்பியுள்ள இன்சாட் செயற்கைக்கோள்களில் டிரான்ஸ்பாண்டர்களை லீஸ் செய்து அதன்மூலமாகவே நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கின்றன.

இன்று இந்தியாவில் ஆறு நிறுவனங்கள் டி.டி.எச் சேவையை தருகின்றன. தூரதர்ஷன், டிஷ் டிவி, சன் டைரெக்ட், டாடா ஸ்கை, ரிலையன்ஸ் பிக், ஏர்டெல்.

அமெரிக்காவில் டைரெக்டிவியும் டிஷ்நெட்டும் டி.டி.எச் சேவை வழியாக இண்டெர்நெட் இணைப்பும்கூடத் தருகிறார்கள். இந்தியாவில் யாரும் இன்னமும் இதனைச் செய்யவில்லை.

மற்றொரு சேவை வேர்ல்ட்ஸ்பேஸ் என்ற சாடிலைட் ரேடியோ சேவை. இந்த நிறுவனம் சிறு டிஷ் ஆண்டெனா மூலம், செயற்கைக்கோள் வழியாக நேரடியாக வீட்டுக்கு ரேடியோ சேவைகளைத் தந்தது. ஒரு கட்டத்தில் இலவசமாக இருந்த இந்தச் சேவை கட்டணச் சேவையாக ஆனபோது நான் இதனை நிறுத்திவிட்டேன். உலக அளவில் வேர்ல்ட்ஸ்பேஸ் நிறுவனம் திவால் ஆனது. அதன் இந்தியக் கிளை மட்டும் தொடர்ந்து இயங்கி வந்தது; இப்போது இருக்கிறதா இல்லையா என்று பார்க்கவேண்டும்.

அமெரிக்காவில் Xm, சிரியஸ் என்று இரு நிறுவனங்கள் இந்தச் சேவையை அளித்தன. பிறகு இரண்டும் தாக்குப் பிடிக்கமுடியாமல் இணைந்து ஒரே நிறுவனமாக ஆகின. இது தவிர இன்று அமெரிக்காவில் வேறு நிறுவனங்கள் இதுபோன்ற சேவையை அளிக்கலாம்; நான் முழுவதுமாக தேடிப் பார்க்கவில்லை. என் ஞாபகத்தில் இருப்பதை மட்டும் எழுதுகிறேன்.

சாடிலைட் டிஷ் ஆண்டெனா 1.5-2.0 மீட்டர் விட்டம் கொண்டது. டி.டி.எச் டிஷ் ஆண்டெனா 30-35 செண்டிமீட்டர் விட்டத்துக்கு உட்பட்டது. சாடிலைட் ரேடியோ ஆண்டெனா வெறும் 10-12 செண்டிமீட்டர் விட்டம் கொண்டது.

*

தேவாஸ் மல்ட்டிமீடியா என்ற நிறுவனம் இதே தொழில்நுட்ப வரிசையில் கைக்குள் அடங்கக்கூடிய ஒரு ஆண்டெனாவையும் ரிசீவரையும் உருவாக்கியதாகச் சொல்கிறது. இந்த ஆண்டெனாவை வெட்டவெளியில் கிழக்கு பார்த்தோ, மேற்கு பார்த்தோ வைக்கவேண்டிய அவசியம் எல்லாம் இல்லை என்கிறது.

இந்த ஆண்டெனா/ரிசீவரைக் கொண்டு பிராட்பேண்ட் சேவையை அளிக்க முடிவெடுத்த தேவாஸ், இதற்காக இஸ்ரோவை அணுகியது. இஸ்ரோவின் வணிக அமைப்பான அந்தரீக்ஷ் மூலமாக ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அதன்படி, இஸ்ரோ இரண்டு செயற்கைக்கோள்களை வானுக்கு அனுப்பும். அந்தச் செயற்கைக்கோள்களின் டிரான்ஸ்பாண்டர்களை இஸ்ரோ தேவாஸுக்கு லீஸுக்குத் தரும். அந்த டிரான்ஸ்பாண்டர்கள் மூலம் வீடுகளுக்கு தேவாஸ் இணைய இணைப்பு தரும்.

நிலம் - ரியல் எஸ்டேட் - என்பதற்கு ஒரே விலை எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. சென்னையில் போட் கிளப் பகுதியில் ஒரு சதுர அடி 50,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் இருக்கலாம். ஆனால் சென்னையில் பிற மையப் பகுதிகளில் சதுர அடிக்கு ரூ. 10,000 ஆகும். தாம்பரம், ஆவடி தாண்டிச் செல்லும்போது சதுர அடிக்கு 1,000 முதல் 3,000 ரூபாய்தான் ஆகும். கும்பகோணம் பக்கம் உள்ள கோடாலிக் கருப்பூர் கிராமத்தில் சதுர அடி 25 ரூபாய்?

சி.ஏ.ஜிக்கு யாராவது இதை எடுத்துச் சொன்னால் தேவலாம். 3ஜி ஸ்பெக்ட்ரம் மெகா ஹெர்ட்ஸுக்கு இன்ன விலை என்றால் 2ஜியும் அதே என்று ஒரு கணக்கை எடுத்து வைத்தார்கள். அரசு என்பது பணம் பண்ணும் இயந்திரம் என்ற கருத்தை முன்வைத்து எல்லோரும் கூச்சல் போட்டதால் நாளைக்கு சாதாரண மொபைல் போன் கட்டணம் கன்னாபின்னாவென்று எகிறப்போகிறது. 3ஜி என்பது இப்போதே மக்களுக்கு எட்டாக்கனியாகத்தான் உள்ளது.

டி.டி.எச் சேவையை இன்னமும் சி.ஏ.ஜி தோண்டிப்பார்க்கவில்லை. தோண்டும்போது அங்கும் 500,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகச் சொல்லும். உண்மையில் இந்தியாவில் ஐந்து வணிக நிறுவனங்கள் மட்டும்தான் இந்தச் சேவையைக் கொடுக்க இன்று முன்வந்துள்ளன. (ஆறாவது தூரதர்ஷன். இதில் தூரதர்ஷன் சுத்தமாக ஒரு பைசா சம்பாதிக்கவில்லை; எல்லாம் நஷ்டம்தான்.) இதில் டிஷ்நெட், சன் டைரெக்ட், டாடா ஸ்கை ஓரளவுக்கு முன்னணியில் உள்ளன. ஏகப்பட்ட பணம் கையில் இருக்கும் ஏர்டெல்லும், நிறையக் கடனில் இருக்கும் ரிலையன்ஸும் கொஞ்சம் தடுமாற்றத்துடன்தான் இந்தத் துறையில் வளர்கின்றன.

தேவாஸ் மல்ட்டிமீடியா இயங்க இருக்கும் துறையில் இரண்டாவதாக ஓர் ஆளையும் காணோம். இதற்குள் அந்த ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் விடு, 200,000 கோடி ரூபாய் ஏமாற்றல், லஞ்சம், ஊழல் என்று எல்லோரும் சத்தம் போட ஆரம்பித்தாயிற்று. இதில் ஊழல் இருப்பதாகவோ, ஏமாற்றல் இருப்பதாகவோ என் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனால் கூச்சலுக்கு பயந்து அரசு இப்போது இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யப்போவதாகச் சொல்கிறது. தொடர்ந்து தேவாஸ் நிச்சயமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கமுடியும். அரசுகள் ஒப்பந்தங்களை நடத்தும் லட்சணம் படுமோசம்.

இப்போது என்ன செய்யலாம்? இந்த டிரான்ஸ்பாண்டரில் வேண்டிய அதிர்வெண் பரவலை தேவாஸ் மல்ட்டிமீடியாவுக்கு ஒப்பந்தப்படி தந்து, அதற்கான கட்டணத்தை ஒப்பந்தம் என்ன சொல்கிறதோ அதன்படி பெற்றுக்கொள்ளலாம். தேவாஸ் இணையச் சேவையை மக்களுக்குத் தரட்டும். அடுத்த சில ஆண்டுகளில் மேலும் ஓரிரு நிறுவனங்கள் இதே சாடிலைட் தொழில்நுட்பத்தின் மூலம் இணையச் சேவையைத் தர முயற்சி செய்யலாம். அவர்களுக்கும் அதே கட்டணத்தில் டிரான்ஸ்பாடர்களை அரசு தரட்டும். இவர்கள் அனைவருக்கும் திரும்பிய பக்கமெல்லாம் போட்டி இருக்கும் - வைமேக்ஸ், ஃபைபர், ஏடிஎஸ்எல் என லட்சம் வழிமுறைகள். இதில் தேவாஸுக்கு எந்தவிதத்திலும் பெரிய ஆதாயம் இருக்கப்போவதில்லை. ஆறு வருடங்களுக்குப்பின், ஏகப்பட்ட நிறுவனங்கள் இந்தத் துறையில் நுழைய முன்வந்தால் அப்போது ஏலம் விட்டால் போகிறது? (அப்போதுகூட நான் ஏலம் விடமாட்டேன்!)

அதற்குள் 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தொகையை வைத்து, அய்யோ போய்விட்டது 200,000 கோடி என்று சி.ஏ.ஜி சொல்ல, ஹிந்து பிசினஸ்லைன் அதை ஸ்கூப் என்று வெளியிட, அதன் விளைவால் பாதிக்கப்படப்போவது நாம் அனைவரும் என்பதை ஏன் நாம் பார்க்கத் தவறுகிறோம்? எதற்கெடுத்தாலும் அதிகக் கட்டணம் வசூலிக்கும் extortionist ஆகவா நாம் நம் அரசை மாற்றவேண்டும்?

தொழில்முனையும் தன்மையை ஊக்குவிக்க ஓர் அரசு பலவிதமான தொழில்நுட்பங்களை நாட்டில் புகுத்த ஆதரவு தரவேண்டும். அதன் விளைவாக தரமான புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு, நாட்டில் பல சேவைகள், குறைந்த கட்டணத்தில் பெருகும். அதன் விளைவாக பல நிறுவனங்களும் லாபம் சம்பாதிக்கும். அதுதான் ஓர் அரசுக்கு வேண்டியது. அந்த லாபத்தில் ஒரு பகுதி வரியாக அரசுக்கு வரும். ஆனால் அதற்கு பதில் தொழிலை ஆரம்பிக்கவே முடியாத அளவுக்குக் கட்டணம், வரி, உரிமத் தொகை, ஏலம் என்று பயமுறுத்தி தொழில்துறையை அழிக்கப் பார்க்கிறது அரசு. அப்படி அரசு செய்யாவிட்டால் அதனைச் செய்யத் தூண்டுகிறது சி.ஏ.ஜி. இதுதான் சாக்கு என்று தூபம் போடுகின்றன ஊடகங்கள். எதிர்க்கட்சிகளுக்கு இதனால் ஏகப்பட்ட சந்தோஷம்.

யாருக்கு நஷ்டம்?

[Customary disclaimer: ஊழல் எந்தவிதத்தில் நடந்தாலும் நான் அதனை ஆதரிக்கவில்லை. ஆ.இராசா வழக்கு உள்பட. தேவாஸ் விஷயத்தில் எங்கு ஊழல் நடந்துள்ளது என்று எனக்குப் புரியவில்லை. அரசுக்கு எந்தவிதத்திலும் நஷ்டம் இல்லை - 2ஜியிலும் சரி, இங்கும் சரி என்பதே இப்போதும் என் கருத்து.]

38 comments:

  1. தொழில்முனையும் தன்மையை ஊக்குவிக்க ஓர் அரசு பலவிதமான தொழில்நுட்பங்களை நாட்டில் புகுத்த ஆதரவு தரவேண்டும். அதன் விளைவாக தரமான புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு, நாட்டில் பல சேவைகள், குறைந்த கட்டணத்தில் பெருகும். அதன் விளைவாக பல நிறுவனங்களும் லாபம் சம்பாதிக்கும். அதுதான் ஓர் அரசுக்கு வேண்டியது. அந்த லாபத்தில் ஒரு பகுதி வரியாக அரசுக்கு வரும். ஆனால் அதற்கு பதில் தொழிலை ஆரம்பிக்கவே முடியாத அளவுக்குக் கட்டணம், வரி, உரிமத் தொகை, ஏலம் என்று பயமுறுத்தி தொழில்துறையை அழிக்கப் பார்க்கிறது அரசு. அப்படி அரசு செய்யாவிட்டால் அதனைச் செய்யத் தூண்டுகிறது சி.ஏ.ஜி. இதுதான் சாக்கு என்று தூபம் போடுகின்றன ஊடகங்கள். எதிர்க்கட்சிகளுக்கு இதனால் ஏகப்பட்ட சந்தோஷம்...... SUPERB

    ReplyDelete
  2. Please read this also

    http://truetamilans.blogspot.com/2011/02/2-4.html

    ReplyDelete
  3. இந்த டிரான்ஸ்பாண்டரில் வேண்டிய அதிர்வெண் பரவலை தேவாஸ் மல்ட்டிமீடியாவுக்கு ஒப்பந்தப்படி தந்து, அதற்கான கட்டணத்தை ஒப்பந்தம் என்ன சொல்கிறதோ அதன்படி பெற்றுக்கொள்லலாம்
    ------------------------------------------------
    கூடவே இந்த நிறுவனம்,மக்களுக்கு என்ன விலையில்,(அதிக பட்ச விலை) சேவையை தர வேண்டும் எனவும் நிர்ணயிக்க வேண்டும்.
    அல்லது,ஒரு வின்-வின் முறையிலான ஏல முறையை பயன்படுத்த வேண்டும்(not like beauty contest).niruvanam,evvalau kattanthil vendumaanaalum sevaiyai alikkalaam.pottiyil,kattanam kuraiyum. இவ்வகையில்,niruvanamum லாபமிழக்க வாய்ப்பில்லை-அரசும் லாபமிழக்க வாய்ப்பில்லை.மக்களுக்கும்,குறைந்த கட்டணத்தில் சேவை கிடைக்கும்.

    ReplyDelete
  4. Sir,
    Request you to please update us on the process followed in USA,UK,Singapore,China,etc,(auction/arbitrary allocation) and whether it proved better or worse for them.
    Thanks.

    ReplyDelete
  5. //3ஜி ஸ்பெக்ட்ரம் மெகா ஹெர்ட்ஸுக்கு இன்ன விலை என்றால் 2ஜியும் அதே என்று ஒரு கணக்கை எடுத்து வைத்தார்கள். அரசு என்பது பணம் பண்ணும் இயந்திரம் என்ற கருத்தை முன்வைத்து எல்லோரும் கூச்சல் போட்டதால் நாளைக்கு சாதாரண மொபைல் போன் கட்டணம் கன்னாபின்னாவென்று எகிறப்போகிறது. 3ஜி என்பது இப்போதே மக்களுக்கு எட்டாக்கனியாகத்தான் உள்ளது.//


    உங்க கருத்து S பேண்ட் க்கு வேணுமுன பொருந்தலாம். ஆனா 2G ல நடந்தது வேறு.. நான் 100RS ஒரு பொருள governmnet கிட்ட வாங்கி, 2000rs உங்களுக்கு வித்தா.... நீங்க என்ன 150ka விப்பிங்க...?!! இதுதான் நடந்தது 2G இல்--

    Swan Telecom வாங்குனது Rs 1537 கோடிக்கு sold 45% of its company stack(45% of 1537 = 691 crore) at huge profit (Rs 4200 crore ) to Emirates Telecommunications Corporation (Etisalat) after buying licensing ..... அப்ப Etisalat என்ன 614 crore க்கு லாபம் வெச்சு விப்பான இல்லை Rs 4200 crore லாபம் வெச்சு விப்பானா....

    ReplyDelete
  6. Badri,

    1. Worldspace - I didnt know they gave the service for free. I had it for a few years. They are gone now.

    2. The loss may not be 200,000 Cr but when BSNL/MTNL paid 18K+ Cr for getting 20 MHz on the S-Band why Devas+Antrix folks were given 70 MHz for 1K Cr.? Please throw some light

    Thanks,
    Murali.

    ReplyDelete
  7. Badri,
    You sound like supporter of this cause. The main outcry is not a loss but the way in which this deal was decided and handed out to ex-employees of ISRO. Imagine, in-order to write a blog, if you have to be ex-employee of google??
    rgds/Surya

    ReplyDelete
  8. பத்ரி அவர்களே,
    நீங்கள் ஊடகம் பார்த்தாலும் 2ஜி அளவிற்கு எஸ் பாண்ட் பற்றி கவலைப் படவில்லை. பொதுமக்களும் அப்படியே என்று தோன்றுகிறது. CAG தன் கடமையைச் செய்கிறது. இதில் மேலும் ப்ரச்சினை என்னவென்றால் டேவாஸ் முதலாளி ஒரு முன்னாள் ISRO சம்பந்தப்பட்டவர். ஆக பெருமளவு ஊழல் இல்லை என்றாலும் favoritism என்ற ஒரு சார்பு இருக்கலாம் அல்லவா?
    அரசு விசாரிக்கட்டும். குறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கட்டும். முன்பே அரசோடு பேசி டேவாஸ் ஒரு MOU sign செய்து விட்டு தகுந்த அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இதைப் பற்றி தகவல் கொடுத்திருந்தால் இது போன்ற குழப்பம் இருந்திருக்காது....என நம்புகிறேன்.

    கணேஷ்.

    ReplyDelete
  9. ஒரு மாணவன் தேர்வுக்குத் தென்னை மரம் பற்றிப் படித்துக் கொண்டு சென்றானாம். ஆனால் பசு மாடு பற்றி எழுதச் சொல்லி விட்டார்களாம். தென்னை மரம் பற்றி இரண்டு பக்கங்களுக்கு தெரிந்ததையெல்லாம் எழுதிவிட்டு, "இப்பேற்பட்ட பெருமைகள் கொண்ட தென்னை மரத்தில் பசு மாட்டைக் கட்டுவார்கள்" என்று எழுதினானாம்.

    அதுபோல, S-bandக்கும் மற்ற அலை வரிசைகளுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கும் போதும் 2G அலைக்கற்றை ஊழல் ஒரு பெரிய குற்றமல்ல என்ற புளித்துப் போன பல்லவியைப் பாடுகிறீர்கள்.

    ReplyDelete
  10. CAG did not estimate 2Lakh crore loss in s-band deal. It had clarified on that.

    If everything about S-band deal is fine,
    why cant the govt/isro issue a white paper and clear all doubts?

    So you are saying, that the Opposition is stupid, media is stupid
    But Kapil Sibal, Raja, Karuna and Congress are fit to rule this country?

    Vaazgha Valamudan!
    Balaji

    ReplyDelete
  11. “The CAG's report dissects technicalities. The recommendations which flow from it are impractical and will further impede the reform process,” இவ்வாறு சொல்லப்பட்டது ஐந்து வருடங்களுக்கு முன்னர். மும்பை செண்டார் ஹோட்டல் விற்பனையில், அரசுக்கு பெருமளவு நட்டம் ஏற்ப்பட்டுள்ளதாக கொடுக்கப்பட்ட ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையினைப் பற்றிய சம்பந்தப்பட்ட அமைச்சரான அருண் ஷோரியின் கருத்து.

    ஸ்பெக்ட்ரம் விடயத்தில் யாரும் தண்டிக்கப்படப் போகிறார்களோ இல்லையோ, CAG அறிக்கைகளுக்கு அளவுக்கதிகமாக முக்கியத்துவம் கொடுப்பது ஷோரி அச்சப்பட்ட “will further impede reform process" என்பது உண்மையாகப் போகிறது!

    ReplyDelete
  12. இதுக்கு ஒரு வ‌ழி இருக்கு. உங்க‌ளை மாதிரி அறிவே இல்லாம‌ல் ஜீவித்து அறிவு ஜீவி என்ற‌ மாக்க‌ளையெல்லாம் கைது செய்து உள்ளே வைத்து வெளுத்தால் வெளியே வ‌ந்து இதில் ஊழ‌ல் ந‌ட‌ந்த‌துன்னா எனக்கு தோன்ற‌து ஓய் னு சொல்லுவிங்க‌னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  13. அருண் மற்றும் பிறர்: டி.டி.எச் சேவை அளிப்பதில் ஏலம் ஏதும் நடைபெறவில்லை. அனைத்து நிறுவனங்களும் 72 மெகாஹெர்ட்ஸுக்கு ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் கூடக் கொடுப்பதில்லை. இவர்களிடம் 3ஜி ஏலத் தொகையைக் கொடுக்கச் சொல்லிக் கேட்டால் போண்டி ஆகிவிடுவார்கள். அதேபோலத்தான் என் கருத்தில் எஸ் பாண்ட் ஸ்பெக்ட்ரமும்.

    3ஜி, 4ஜி ஏலங்கள் எல்லாமே சிக்கலானவை. அவை கைக்கு நிறையப் பணத்தைக் கொடுத்தாலும் மக்களுக்கான சேவையை அளிக்கப்போவதில்லை என்றுதான் தோன்றுகிறது. பிரிட்டனில் 3ஜி ஏலத்தின் விளைவாக எந்த கம்பெனியும் அந்தச் சேவையில் இதுவரையில் லாபத்தைப் பார்க்கவில்லை என்று என் புத்தகத்தில் எண்ணிக்கையுடன் விளக்கியுள்ளேன்.

    ***

    ‘திடீரென ஸ்பெக்ட்ரம் விலை ஏறிவிட்டது; எனவே ஒப்பந்தம் ரத்து’ என்று சொல்வது சட்டத்துக்குப் புறம்பானது. தேவாஸ் லஞ்சம் கொடுத்து, ஆட்களை மயக்கி, ஏமாற்றி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது, அதனால் இஸ்ரோவுக்கு நஷ்டம் என்று நிரூபித்தால்தான் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யமுடியும்.

    4ஜி ஏலத்தில் பிராட்பேண்ட் உரிமத்துக்கு நிறையப் பணம் ஏலத்தில் கிடைத்துள்ளது. (சுமார் 10,000 கோடிக்கு மேல்.) தேவாஸ் மல்ட்டிமீடியாவுக்கே தரையில் நெட்வொர்க் தேவை என்கிறார்கள். அதற்குத் தனியாக வசூல் செய்துகொண்டால் போதும்.

    எனக்கென்னவோ, தேவாஸ் பேசாமல் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு இந்தியாமேல் ஜியோஸ்டெஷனரி சாடிலைட் இரண்டை லாஞ்ச் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது! அதற்கான அனுமதியை இந்திய அரசிடம் பெற்றிருக்கலாம்! அது சீப்பாகவும் பிரச்னை இல்லாமலும் முடிந்திருக்கக்கூடும்!

    ReplyDelete
  14. இந்த மாதிரி புது விஷயங்களில் அரசுத்
    தரப்பில் செயல்பாடுகள் transparency கொஞ்சம் இருந்தால் மக்களுக்கு சந்தேகம் தோன்றாது.-
    தியாகராஜன்

    ReplyDelete
  15. Dear Badri,

    I would be thankful if you could clarify the following:

    Your stand is that in 2G spectrum case,the Govt could not have incurred a loss of 1.7 lakh crores of rupees and that the sale could not have been at a higher price since it would not put the new buyers in a level platform that of the first buyers in 1998-99.

    Now why the ministry did not resort to auctioning instead of first first served principle.After all the buyer knows better than anybody else about the best price at which it can be bought isn't it?

    Thanks

    ReplyDelete
  16. பத்ரி,
    திரும்பத் திரும்ப நீங்கள் ஊழல் நடக்கவில்லை என்றே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.

    நீங்கள் கரண் தாபர் டெவில்ஸ் அட்வகேட்டில் அருண் ஷூரியின் பேட்டியைப் பார்க்கவேண்டும். அது சி.என்.என் ஐ.பி.என் வலைத்தளத்தில் காணக்கிடைக்கிறது.

    அதன் டிரான்ஸ்கிரிப்ட்
    http://ibnlive.in.com/news/bjp-not-interested-in-pursuing-2g-case-shourie/143118-37-64.html

    ReplyDelete
  17. You are telling government did not make loss in 2G sale. The 1.76 Lakh crore is a hypothetical estimate and not real number. Fine. we all agree.

    But, some company made more than half of the said amount by selling licences to Etisat and uninor. What about that money ? And Aandimuthu Raja the then Telecom minister, facilitated it by advancing the deadline. Why don't you ponder some thought on this and enlighten our miserable understanding of the whole issue ?

    ReplyDelete
  18. If Anons at least leave a 'handle' (some nickname) I can address them better. On Unitech and Swan making profits, I have explained this several times before. Unitech has not made any profits. 'Flipped for profit' is a wrong understanding, repeated by almost everyone. Telenor subscribed to new shares in Uninor. That is all! In case of Etisalat-Swan also, except for a dodgy 380 cr deal to someone (whether it went to Raja needs to be verified by CBI), no one has made profit.

    *

    Unlike what many keep repeating, I have never stated that there is no corruption in this deal. To repeat for the 100th time,

    (a) I do not believe there is any loss to the Govt.
    (b) First come first served for 2G is not a bad idea. (One needs clear, transparent models when tie happens.)
    (c) In general, auction to jack up the prices for fundamental infrastructure is a very bad idea. 3G/4G auction is bad.
    (d) If corruption has happened, it is not at a loss to the exchequer, but a loss to the competitor. That is, Swan getting it ahead of S-Tel is a loss to S-Tel. Unitech getting ahead of someone else is a loss to this someone else. That is also unacceptable and those responsible for mess-up in the procedure (including Raja) must be prosecuted.

    ====

    Should 3G have been auctioned? No. There are other methods.

    I will write separately on this. I will however write only one thing here.

    1. No private player has won presence all over India for 3G. They are all there only in some circles. Only BSNL/MTNL combine is present across the whole of India. (This is not a good thing.)
    2. Only one (Reliance - Mukesh Ambani) has won National 4G license. (Again not a good thing from a customer standpoint.)

    Government has made 70,000 cr. But people are the losers.

    ReplyDelete
  19. CBI prosecuting Raja is all fine. He has made enough of a confusion in the procedures and there may be solid evidence for him having accepted bribes (or so CBI thinks anyway). However, CBI cannot and should not claim that there is loss to the exchequer! They will find it impossible to prove. I think they should simply stick to the bribery aspect, criminal and fraudulent attempt to subvert the system to benefit one individual (ahead of another!) and complete the case.

    ReplyDelete
  20. Devas - Antrix deal cancelled, I suppose. There will be legal battles. Govt. should find better approach to dealing with contracts.

    If people believe that someone (or many) in ISRO have colluded with Devas, then their names should be outed. There should be a trail shown that the agreement was entered into only through cheating. That will be grounds for cancelling the contract.

    However, saying that market situation has changed in spectrum pricing and hence the deal is being cancelled is a wrong precedence. Neither individuals nor Government can cancel a contract entered into in good faith, by citing changed market conditions. The whole idea of the contract is to guard against changes in market conditions.

    Government had enough leverage in their hands to force Devas to pay up more for the terrestrial network. The payment for satellite transponders seemed very fair compared to DTH pricing and the accepted SATCOM policy.

    We should aim to become a nation of 'law abiders' and not 'law violators'!

    ReplyDelete
  21. //எனக்கென்னவோ, தேவாஸ் பேசாமல் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு இந்தியாமேல் ஜியோஸ்டெஷனரி சாடிலைட் இரண்டை லாஞ்ச் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது! அதற்கான அனுமதியை இந்திய அரசிடம் பெற்றிருக்கலாம்! அது சீப்பாகவும் பிரச்னை இல்லாமலும் முடிந்திருக்கக்கூடும்! //
    இதுதான் சரி இதை எவனும் கண்டுக்க மாட்டான் ஆனால் முன்னாள் இச்ரோ விண் ஆய்வாளர் devas நிறுவனத்தை உருவாக்கி பின் அரசுடன் ஒப்பந்தம் செய்து பின் multination companyகளுக்கு ஷேர்களை விற்று அதன் முலம் multination companyகள் உள்ளே நுழைவதும் தான் 2ஜீ யை ஒப்பிட வழிவகுக்கின்றது

    ReplyDelete
  22. This is regarding 2G

    1.Auction may be a bad idea and "first come first" may be a very good idea. What about "first come first" model with a pricing in 2007 based based on 2001 inflation rate. You have no suspicions ?

    2. Would you advocate the same principle in all other aspects of public life which aids ppl in general. What i mean is
    a) No mining rights for oil companies so that people get cheap fuels and hence cheap commodities
    b) Free tax for hospitals and doctors so that they serve the ppl cheap(I believe this is already their and you know the cost of health care)
    c) I still don't understand how competition has improved the standard(quality) of education. Definitely there is an increase in the number of colleges and hence the number or rich who own a college(s).
    d) One thing is for sure. Price of Rice is fixed and ppl get rice for Rs 1. And i dont have to say anything about the quality of that rice or the state of the farmers.
    e) No mining rights for any of the ores so that mining companies can provide us with cheap steel, iron etc. This will reduce the construction cost largely.

    My point is no company/entrepreneur is going to offer anything cheap to the comman man. If it goes to Govt atleast he/she will get a Free TV/Land or Rs.150 via NREGA.

    Last but not the least, i am sure i am not going to get any answer similar to my comments posted in your previous blogs :)

    ReplyDelete
  23. ok, badri, you have left one thing unanswered.
    Why did Aandimuthu Raja advance the deadline ? Surely some one benefited from this. may be not Uninor, Swan or Etisat.

    If i were a telecom minister, i would definitely take a cut for doing this mess up. I am sure Aandimuthu Raja did that. If this is not corruption then what is ?

    Aandimuthu Raja used his power as a minister and did not allow fair play. For doing so he has taken a percentage for himself, his party grand daddy and perhaps given a share to queen bee to keep the impotent drone PM quite.

    ReplyDelete
  24. Sriram: I will answer all your questions one by one. I will take a day, go through all your comments and questions, answer all of them in one place and post here.

    ===

    Last Anon: A. Raja certainly made a mess of the procedures. It has been pointed out by the CAG and that is one aspect of the CAG report I fully agree with. He could have taken bribe for doing the same. (CBI will have solid evidence of this, I do not.) He should be tried for the same and given appropriate punishment. It is certainly not fair play. I agree with you.

    I have never said anything otherwise by the way.

    Prime Minister must certainly take the blame for having not looked into this earlier. In fact, I am of the view that Manmohan Singh should resign right away for a whole bunch of reasons, one of which is the mounting corruption during his rule.

    ReplyDelete
  25. Hi,
    I think you lost yourself by the way while answering all the question. The first post you told that Government not lost anything by giving first come first basis. Now you are saying that Raja could have taken bribe for doing this. Why you blabber like this. That bribe could be the definite income for Government. Are they fool enough to pay hefty sum to others for development purpose of Raja and DMK family for nothing?Then How Hell you say that this kind of reply Like S.V Sekar. All bribes by Government official are definetely the Government Money only. I certainly disagree with the people to convince you technically so that you accept this is Scam. I never do this. Because is merely waste of knowledge I am saying. I dont think you dont know this already. YOu may have your own committments I agree. But person was having reputation(?) like this should not indulge this kind of activities.

    ReplyDelete
  26. அன்புள்ள ராஜரத்தினம்: ஆர்.டி.ஓ ஆபீஸில் லைசன்ஸ் வாங்க நீங்கள் தரும் லஞ்சம், அரசுக்கான வருமானமா? அதை அரசு இழந்ததா?

    எல்லா லஞ்சங்களும் அரசுக்கான வருமானம் அல்ல.

    ஆனால் அதே நேரம், டிராஃபிக் வயலேஷனில் ஃபைன் கட்டுவதைத் தவிர்க்க நீங்கள் வெட்டும் ஐம்பது ரூபாயில், அரசு உண்மையில் இழப்பது அதைவிட அதிகமான பணத்தை.

    அதாவது பல நேரங்களில் உங்கள் அவசரத்துக்காக, உங்கள் வேகத்துக்காக அரசு உங்களுக்கு நியாயமாகச் செய்யும் காரியத்துக்கு, அரசின் நியாயக் கட்டணத்தையும் கட்டி மேற்கொண்டு அரசு ஊழியருக்கு லஞ்சம் தருவது ஒரு வகை. இதில் அரசுக்கு எந்த நஷ்டமும் இல்லை; அரசு ஊழியருக்கு லாபம். உங்களுக்கு மட்டும்தான் நஷ்டம்.

    அடுத்த வகையில், அரசின் பார்வையில் வரிசையில் இருக்கும் பலரில் வரிசையில் முந்த நீங்கள் தரும் லஞ்சம். இந்த வகையில் அரசுக்கு நஷ்டம் இல்லை. உங்களுக்கு ‘நஷ்டம்’ என்று சொல்லமுடியாது; ஏனெனில் தகுதி இன்றி நீங்கள் முன்னால் செல்கிறீர்கள். யாருக்கு நஷ்டம்? உங்களுக்குப் பின் வரிசையில் நிற்கும் அனைவருக்கும் நஷ்டம்.

    மூன்றாவது வகையில், அரசுக்குச் சேரவேண்டிய பணத்தைக் கட்டாமல் அல்லது குறைத்துக் கட்ட அரசு ஊழியர் உங்களிடம் பெறும் அன்பளிப்பு. இதில் அரசுக்கு நிச்சயம் நஷ்டம். உங்களுக்கு லாபம். அதில் ஒரு பங்கை நீங்கள் கமிஷனாக அரசு ஊழியருக்குத் தருகிறீர்கள். இதனால் நாட்டு மக்கள் அனைவருக்கும் நஷ்டம்.

    நான்காவதாக அரசின் ஒரு சொத்தைக் குறைந்த விலையில் உங்களுக்கு விற்க அல்லது உங்களுக்கு அள்ளிக்கொடுக்க அரசை முன்வரவைக்க நீங்கள் தரும் பணம். இதில் அரசுக்குக் கட்டாயம் நஷ்டம். உங்களுக்கு லாபம். இதையும் மூன்றாவது வகையுடன் சேர்க்கலாம்.

    இவை அனைத்துமே குற்றங்களே. இதில் 2ஜி எந்த வகையைச் சேர்ந்தது என்று முடிவு செய்வதில்தான் நம் இருவருக்கும் இடையில் பிணக்கு. நான் இதனை இரண்டாம் வகை லஞ்சத்தில் சேர்க்கிறேன். நீங்கள் நான்காம் வகை லஞ்சத்தில் சேர்க்கிறீர்கள்.

    ReplyDelete
  27. rsrirams -
    Part 1:

    Q1: What about the CAG reference to STel and 3G licensing as other comparisons for arriving at the figure.

    A1: STel wrote two letters and offered to pay a certain amount of money for spectrum and told the Govt. that they were underselling spectrum. One letter was sent to Raja and the other to Manmohan Singh. This is what I wrote in my book:

    செப்டம்பர் 2007-ல் எஸ்டெல் என்ற நிறுவனம் 2ஜி உரிமத்துக்காக விண்ணப்பித்திருந்தது. இந்த நிறுவனம் 5 நவம்பர் 2007-ல் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், தங்களுக்கு இந்தியா முழுமைக்குமான செல்பேசிச் சேவை உரிமம் கிடைத்தால், ஸ்பெக்ட்ரத்துக்கு என்று மேற்கொண்டு 6,000 கோடி ரூபாய் தருவதாகச் சொல்லியுள்ளனர். பிறகு தொலைதொடர்புத் துறை அமைச்சருக்கு 27 டிசம்பர் 2007-ல் எழுதிய கடிதத்தில், இந்தத் தொகயை அதிகப்படுத்தி, 13,752 கோடி ரூபாய் தருவதாகச் சொல்லியுள்ளனர். இதிலிருந்தே ஸ்பெக்ட்ரத்தின் சந்தை மதிப்பு என்ன என்று நாம் புரிந்துகொள்ள முடியும். இதனை அடிப்படையாகக் கொண்டு 2008-ல் அளிக்கப்பட்டுள்ள அனைத்து உரிமங்களையும் கணக்கிட்டால் 65,909 கோடி ரூபாய் வரவேண்டும். ஆனால் அனைத்து நிறுவனங்களும் சேர்ந்து தந்த தொகை 12,386 கோடி ரூபாய். ஆக இந்த அடிப்படையில் கணக்கிட்டால் இழப்பு 53,523 கோடி ரூபாய்.

    ...

    ... எஸ்டெல் இத்தனை தருகிறேன் என்று சொன்னதைக் கொண்டு சி.ஏ.ஜி உருவாக்கிய கணக்கு. நாடு முழுமைக்குமாக 2ஜி லைசென்ஸுக்கு 13,000 கோடி ரூபாய்க்கு மேல் தருகிறேன் என்று கடிதம் எழுதிய எஸ்டெல், 3ஜி ஏலத்திலும் பங்கு கொண்டது. அதில் எத்தனை ரூபாய் செலவு செய்தது தெரியுமா? இமாச்சல பிரதேசம், பிகார், ஒரிஸ்ஸா ஆகிய மூன்றே மூன்று வட்டங்களில் மட்டுமே ஏலத்தில் வெற்றிபெற்று, மொத்தம் அது கொடுத்தது 337.67 கோடி ரூபாய். ஏர்டெல் நிறுவனம் 13 வட்டங்களுக்குச் செலவு செய்தது 12,295 கோடி ரூபாய். தன் கையில் 13,000 கோடி இருந்திருந்தால், எஸ்டெல்தானே ஏலத்தில் முதலில் வந்திருக்கவேண்டும்? ஏன் அவ்வாறு ஆகவில்லை? இந்தத் தகவலும் சி.ஏ.ஜியிடம் உள்ளது. ஆனால் ஒரு கடிதத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்ட சி.ஏ.ஜி, இந்த நிஜத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

    =====

    Q 2: I am for knowing the full truth. Will wait for your posts on STel as i have not read your book. And will also wait for your post on 3G. As CAG report clearly says that its based on TRAI report which says 2G auction(presuming auction had taken place) prices can be assessed based on 3G auction price.

    Your view please.


    A2: I will write separately about 3G auction, the money raised and its long term impacts on 3G prices etc.

    You have raised some queries in the black money post. I will deal with them later.

    ReplyDelete
  28. rsrirams:
    Part 2:

    Your final set of questions:

    This is regarding 2G

    Q1. Auction may be a bad idea and "first come first" may be a very good idea. What about "first come first" model with a pricing in 2007 based based on 2001 inflation rate. You have no suspicions ?


    A1: I have no suspicion at all. In fact inflationary increase is of no relevance here! In my opinion, Government can even give away spectrum at Rs. 1 per MHz. However, such an amount will bring too many spurious players and the spectrum is limited. Thus, some reasonable number that pegs the bar at a height where spurious players are filtered. For example, look at the cost of ISP license. Absolutely nothing! The government can hand over as many ISP licenses as there are takers as there is no artificial shortage. No one in the right mind should even think of charging money for this. Salt making license? Again government should charge zero!

    Something being scarce is not the reason for charging a hefty extortion from that. Contrary to the popular perception, no telco is converting spectrum into money! They are converting their investment in infrastructure, their human resource and technical knowhow into money. Government should aid this process and distribute the spectrum in the best manner possible that it aids the maximum number of people in the country. The government should certainly not expect any revenue from this! Any such revenue will eventually be collected from the end users and we will be the poorer by this. It will be indirect taxation. Government revenue should come from taxation directly from the telco's profits. (And indirectly, taxation from increased income and profits of all the individuals and businesses that have benefited from telco revolution.) You may equally dismiss my idea as libertarianism. But I hold these ideas.

    Q 2. Would you advocate the same principle in all other aspects of public life which aids ppl in general. What i mean is
    a) No mining rights for oil companies so that people get cheap fuels and hence cheap commodities


    There is a difference between global commodities that are movable and saleable elsewhere and services offered within India. We can have differential mobile phone pricing in the world. But mostly not for steel, iron ore, coking coal etc. Global prices are determined by what is the production cost in each country, what is the import/export restrictions and taxes etc. I have no problems in bringing the license fee down for oil and coal and ore extraction, if the end product will go to the Indian customers. This can be achieved by a higher export duty. Then, yes.

    b) Free tax for hospitals and doctors so that they serve the ppl cheap (I believe this is already their and you know the cost of health care)

    I am not against taxation in fact. The governments should get their monies through just taxation. I am only against license and other extortionist input fees. There should be no license fee to start a hospital. If a hospital makes profit, that should be taxed.

    ReplyDelete
  29. rsrirams
    Part 3:

    c) I still don't understand how competition has improved the standard(quality) of education. Definitely there is an increase in the number of colleges and hence the number or rich who own a college(s).

    Brilliant question. There is no sensible competition in the education field. Only scoundrels can enter education field today. And I do believe that 99.999% of the people who have entered the field of education are scoundrels. By the very nature of the 'not-for-profit' structure of education in India, sensible entrepreneurs have not entered and will not enter education. Those who enter simply do not follow rules, divert money and have amassed horrible wealth. They have not provided quality education. They have cheated the public. But the demand for education is so high, we rush to these schools/colleges.

    The fault is with the government. Make it for-profit and then immediately enough good companies will enter this field and offer high quality, affordable education. Like they have done in cars, healthcare, food and other consumer durables.

    d) One thing is for sure. Price of Rice is fixed and ppl get rice for Rs 1. And i dont have to say anything about the quality of that rice or the state of the farmers.

    Again, the problem is the government. People have no choice and they get poor quality rice. The farmers are also forced by the government to sell rice/wheat to them at the procurement prices. APMC and other draconian laws should be abolished, so that farmers can actually earn decent income. This may mean higher subsidies to the poor, but that is okay as far as I am concerned. This subsidy should also be direct subsidy. (That there is a national debate on this emerging is a good thing!)

    e) No mining rights for any of the ores so that mining companies can provide us with cheap steel, iron etc. This will reduce the construction cost largely.

    See above. I have already addressed this.

    My point is no company/entrepreneur is going to offer anything cheap to the comman man. If it goes to Govt atleast he/she will get a Free TV/Land or Rs.150 via NREGA.

    Suffice it to say, I disagree. I am not a leftist. I lean more to the right on economic matters.

    ReplyDelete
  30. //Brilliant question. There is no sensible competition in the education field. Only scoundrels can enter education field today. And I do believe that 99.999% of the people who have entered the field of education are scoundrels.//

    கல்வியைத் தனியார்மயமாக்க வேண்டும் என்று பல்வேறு சந்தர்ப்பங்களிலே எழுதி வந்திருக்கிறீர்கள். அது பற்றிய ஒரு மாற்றுப் பார்வையாக இதைக் கருத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    நீங்கள் சொல்லும் free market கொள்கைக்கு நான் எதிரானவன் அல்ல. கல்வி உட்பட எந்த ஒரு சேவையிலும், தனியார் முதலீடும், ஆரோக்கியமான போட்டியும் இருந்தால் அதனால் பயனர்களுக்குத்தான் நன்மை என்று நம்புகிறேன். ஆனால், தற்போதைய சமூக அரசியற் பொருளாதாரச் சூழ்நிலை, கல்வியை, ஒரு செல்ஃபோன் கம்பனி போல, ஒரு கால் செண்டர் போல நடத்த இடம் கொடுக்குமா என்று யோசிக்க வேண்டும்.

    ஒரு சமீபத்திய உதாரணம் ஒன்றைத் தருகிறேன்.

    உலகெங்கும், clean energy மீதான கவனக்குவிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதை அறிந்திருப்பீர்கள். சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுத்தும் நுட்பங்களுக்கு மாற்று வழி கண்டுபிடிக்க, பல்லாயிரம் மிலியன் டாலர்கள் செலவு செய்யப்பட்டு வருகின்றன. நம் பயன்பாட்டில் இருக்கும் மின்சாரத்தின் பெரும்பகுதி, சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நிலக்கரி, எரிவாயு போன்றவற்றை மூலப் பொருளாகக் கொண்டே உற்பத்தி செய்யப்படுகின்றன. எளிதாகக் கிடைக்கும் காற்று, சூரிய வெப்பம் போன்றவற்றைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம் என்றாலும், அது கட்டுபடியாகாது. உதாரணமாக, நிலக்கரி மூலம் மின்சாரம்

    உற்பத்தி செய்ய, ஒரு மெகாவாட்டுக்கு தோராயமாக 5 கோடி ரூபாய் ஆகும். அதே, சோலார் பேனல்கள் அமைத்து சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க, 14 - 15 கோடி ரூபாய்கள் ஆகும். அந்த விலைக்கு, தனியாருக்கோ, அரசுக்கோ விற்க முடியாது. வேண்டுமானால், தங்கள் சுய தேவைக்கு

    தயாரித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். மூலப் பொருள் எதுவாயினும், உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தில் தர வேறுபாடு கிடையாது. ஏன் இதன் விலை அதிகம் என்றால், சூரிய சக்தி மின்சாரம் உருவாக்க, அதற்கான மூலப்பொருட்களான photo voltaic module இன் விலை அதிகம். இந்த மூலப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தி மிகவும் குறைவு. ஸ்பெயின், செருமனி போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், சீனாவில் இருந்து குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யலாம். ஆக, நம் நாட்டில், மூலப் பொருள் உற்பத்தி அதிகரித்து, மின்சாரம் தயாரிப்பதற்கான செலவு குறையும் வரை சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க முன்வரும் முதலீட்டாளர்களுக்கு சில பல சலுகைகள் அளித்து ஊக்குவிக்கலாம் என்று ஒரு நல்ல கொழுத்த ராகுகாலத்தில், முறைசாரா எரிசக்தி அமைச்சர் ஃபரூக் அப்துல்லா முடிவு செய்தார். ( 2030 ற்குள், மின்சார உற்பத்தியில் மிகப் பெரும்பகுதி சூரியசக்தி மூலமாகத்தான் கிடைக்கவேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட தேசிய சூரிய சக்தி ஆணையத்தின் ஒரு தீர்மானம் இது).

    1/3

    ReplyDelete
  31. 2/3

    இதற்காக, ஃபரூக் அப்துல்லா, ஒரு நாள் காலை, நாட்டின் முதன்மையான மின்சாரத் தயாரிப்பு நிறுவனமான தேசிய அனல் மின்சாரக் கழகத்தை ( NTPC) ஐ கலந்தாலோசித்தார். விளைவாக, ஒரு புதிய நிறுவனம், பிறந்தது. NVVN என்ற அந்த நிறுவனத்தின் நோக்கம், சூரிய சக்தி மூலமாக மின்சாரம் தயாரிக்க திட்டமிடுபவர்களைத் ஏலம் மூலமாகத் தேர்ந்தெடுத்து, அவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை குறிப்பிட்ட விலைக்கு வாங்கிக் கொள்ள ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அப்படி ஒப்பந்தம் செய்து கொண்டவர்களுக்கு, சூரிய சக்தி உற்பத்தி நிலையம் அமைக்க, அமைச்சகம் சலுகைகள் ( வரிச்சலுகைகள், குறைந்த விலையில் நிலம் நீர் போன்றவை) அளிக்கும். ஏட்டளவில் இது ஒரு அருமையான திட்டம். இந்தத் திட்டத்தை வடிமைத்தவர்கள் விட்ட சில ஓட்டைகள் காரணமாக, எதிர்பார்த்தது நடக்கவில்லை. இந்தத் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களை விட, எந்த அனுபவமும் இல்லாத சில லெட்டர் பேட் கம்பெனிகள், மின்சாரக் கொள்முதல் விலையைச் சாத்தியமே இல்லாத அளவுக்குக் குறைவாகக் குறிப்பிட்டு தேர்வு பெற்றுவிட்டனர்.

    அந்தச் சில லெட்டர்பேட் நிறுவனங்கள் quote செய்திருந்த விலைக்கு, மின்சாரம் தயாரிக்க வாய்ப்பே இல்லை ( சீன இறக்குமதியாக இருந்தாலும் கூட) இந்த நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற டாடா சோலார் (related news) உட்பட பல பெரிய நிறுவனங்கள், இந்த விலைக்கு எங்களால் வியாபாரத்தில் ஈடுபடமுடியாது என்று ஒதுங்கிக் கொண்டனர். சரி இப்பொழுது என்ன ஆகும்? ஒப்பந்தத்தைக் கையில் வைத்திருக்கும் லெட்டர் பேட் நிறுவனங்கள், அதன் மூலம் ஏதாவது காசு

    சம்பாதிக்க முடியுமா என்று பார்க்கும். ( அதற்குப் பல வழிகள் உள்ளன). அல்லது, எதுவும் செய்யாமல் சும்மா இருக்கும். அரசு எதிர்பார்த்ததில் பாதியளவு திட்டங்கள் கூட நிறைவேறாது. ஆனால், இது, ஒரு புத்திசாலி ஐஏஎஸ் அதிகாரியின் பச்சை இங்க் கையெழுத்தில் சரி செய்து விடக்கூடிய விவகாரம் தான்... என்ன வழக்கு வாய்தா என்று ஓரிரு வருடங்கள் செலவாகும். இதன் மேல்விவரவங்கள் நமக்கு இப்பொது தேவையில்லை.

    இது என்ன பொருத்தமில்லாத உதாரணம் என்று நீங்கள் நினைக்கலாம். சொல்கிறேன். சுருக்கமாக ரெண்டு விஷயங்கள்.

    ReplyDelete
  32. 3/3

    [கல்வியைப் பொறுத்தவரை, எந்த விஷயத்திலே, எந்த அளவுக்குத் தனியார் முதலீடு தேவை என்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரியாதால், நானும் பொத்தாம் பொதுவாகச் சொல்கிறேன். நீங்கள் விளக்கமாக எழுதினால், நானும் விளக்கமாக என் கருத்தைச் சொல்கிறேன். பாரா பாராவா எழுத கஷ்டமா இருக்கு... இனிமே புல்லட் பாய்ண்ட்டுதான்]

    1) அரசு, இலவசமாக ஒரு விண்ணப்படிவத்தையோ சலுகையையோ கொடுக்க முன்வரும் போதே, அது என்ன, ஏது என்று தெரியாமலே, எனக்கு ஒண்ணு, உனக்கு ஒண்ணு என்று வாங்கிப் பதுக்கி, செயற்கையான ஒரு டிமாண்டை உருவாக்குவதில் நாம் வல்லவர்கள் என்ற உண்மையை நாம்

    முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது இருக்கிற scoundrel களை இயக்குவது எது? பேராசை.அந்தப் பேராசை தனியார் நிறுவனங்களுக்கு இருக்காது என்று எந்த ஆதாரமும் கிடையாது. rural cirle இலே இயக்கமாட்டோம் என்று சண்டி செய்யும் டெலிகாம் கம்பெனிகளையும், பஸ்ரூட் முதலாளிகளையும் இன்ன பிற சேவைகளையும் நினைவில் கொள்ளவும். என்ன, இப்பொழுது, சட்டத்தை மீறிச் செய்யும் தவறுகளை, சட்டத்தின் பாதுகாப்புடன் செய்யப் போகிறார்கள்.

    2) கல்வி போன்ற, ஒரு தலைமுறையின் தலைஎழுத்தை நிர்ணயம் செய்யக் கூடிய விஷயத்தில், தனியார் முதலீட்டை அனுமதிக்குமுன்பு மிக தொலைநோக்குடன் பகுத்தாய்ந்து, அதை லாபம் என்ற ஒரே நோக்குடைய ( இது தவறல்ல) ruthless முதலாளிகள் எப்படியெல்லாம் misuse செய்வார்கள் என்று extrapolate செய்து, rollback செய்ய முடியாத படிக்கு ஆடிட்டர்களும் கன்சல்டண்ட்டுகள் என்னவெல்லாம் ஐடியா கொடுப்பார்கள் என்று தீர்க்கதரிசனத்துடன் சிந்தித்து , மாணவர்களுக்கு நன்மை தரக்கூடிய ஒரு செயல் திட்டத்தை யோசிக்கவோ வரைவு செய்யவோ தேவைப்படும் மூளை இந்தியாவிலே ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கும், ஒரு அரசியல்வாதிக்கும் இல்லை என்பது என் முடிவு.

    சுருக்கமாக, 'dont fix it if it aint broke'.

    ReplyDelete
  33. Badri,

    Thanks for your answers. While i could understand your thinking, i have some reservations as it may suit only an idealistic society. While total leftist ideology is bad for the country, that is the one that provides the checks and balance to the society otherwise dominated by power/money hungry rich business men.

    Will write again why i feel a pure capitalistic society is bad for a country like India which is devoid of ethics and also my opinion on 2G based on your opinion/answers.

    ReplyDelete
  34. //
    Will write again why i feel a pure capitalistic society is bad for a country like India which is devoid of ethics and also my opinion on 2G based on your opinion/answers.
    //

    No country in this world is full of ethics.
    For now it is suffice to say, India has become such an un ethical place purely because of decades of socialism, Socialism, Socialism, Socialism, Socialism, Socialism, Socialism, Socialism, Socialism and Socialism.

    ReplyDelete
  35. உதாரணத்துக்கு, கிழக்கு ஒரு மிகப்பெரிய நிறுவனம்னு வெச்சுப்போம் .... அதுல வேல பாக்குற நாலு மேனேஜருங்க ஒரு ஐடியாவ உருப்போட்டு, நாங்க வெளில போயி ஒரு புது கம்பெனி ஆரம்பிச்சு இந்த ப்ரப்போசல உள்ல அனுப்புறோம் ..... உள்ல இருக்குற கூட்டு மானேஜர்கிட்ட , பத்ரிக்குத் தெரியாம எங்களுக்கு ஆர்டரக் குடுத்துறுங்க .... வர்ர லாபத்துல ஆளுக்குப் பாதின்னு பிளான் போட்டா ... பரவாயில்ல மக்களுக்கு எங்க புத்தகம் கொறஞ்ச வெலையில கெடச்சா போதும் ... மத்தபடி கம்பெனிக்குள்ள என்ன கூதல் நடந்தாலும் அது ஊழல் கெடையாதுன்னு பாராட்டுப் பத்திரம் வாசிப்பீங்களா பத்ரி???

    ReplyDelete
  36. பத்ரி அசால்ட்டா காசு சம்பாதிப்பது எப்படின்னு ஒரு புக்கு போடறாருன்னு வெச்சுப்போம் ... ஆனால் 100 காப்பிதான் போடுறாரு.... 2001ல புக் வெளியானப்ப இது என்னாடா புக்கு இதுன்னு புக் ஷாப்காரனெல்லாம் கொஞ்சம் வாங்கி கொஞ்சம் தள்ளி நிற்க, சரி மக்களுக்கு நம்ம புக்கோட மகிமை தெரியல, கொஞ்சம் வெலைய கொறச்சு ,100 ரூபாய்க்கு அய்யா வாங்க அம்மா வாங்க போனா வராது பொழுது சாய்ஞ்சா கெடைக்காது 100 காப்பிதான் மொதல்ல வற்றவுங்க வந்து வாங்கிட்டுப் போங்கனு பத்ரியோட ஜெனரல் மேனேஜர் (பத்ரியோட அனுமதியோட) விக்கறாரு. சில புக் ஷாப் காரவுகளும் சரின்னு வாங்குறாய்ங்க ....புக்க வாங்கினவனுக்கெல்லாம் அடிக்குது ஜாக்பாட் ... மக்களோட ஆதரவுல, டிமான்டுல , வாங்குன புக் ஷாப்காரனெல்லாம் கோடீஸ்வரன் ஆகுறான்.....மக்களுக்கு புக்கோட மகிம தெரிய வருது... ஆனா அடிச்ச மொத எடிஷன் தீந்து போச்சு .... ஆறு வருசம் கழிச்சு பழைய மேனேஜர் ரிசைன் பண்ணிட்டு போனப்புறம், புது மேனேஜர் வர்ராரு ... அவரு திரும்பியும் அதே புக்க ரெண்டாவது எடிசன் போடுறாரு .... புக் ஷாப் காரங்களுக்கெல்லாம் பொன்வாத்து புக்கு திருப்பி மார்க்கெட்டுக்கு வருதுன்னு கொண்டாட்டம் .... எல்லாம் அவனவன் ஒரு புக்குக்கு ஒரு லச்சம் வரைக்கும் குடுக்க ரெடியா இருக்குறப்ப, நம்ம புது மேனேஜர் பத்ரிட்ட மேட்டர சொல்லாம அதே 100 ரூபாய்க்குதான் விப்பேன் ... இது பழைய மேனேஜர் வெச்ச வெலதான்...அப்பத்தான் பாமரனுக்கும் புக்கோட உபயோகம் சீப்பா கெடைக்கும்னு ஒரு டயலாக் வுட்டு .... அதுவும் ஏலம்லாம் போடாம மொதல்ல வற்றவுங்களுக்குத்தான் குடுப்பேன் ... அதுவும் பழைய மேனேஜர் செஞ்சதுதான் .. அப்பிடீன்னு சொல்லிட்டு திடீர்னு புக்கு வாங்க கடைசித் தேதிய மாத்திட்டு இன்னைக்கு ஈவினிங் 4 மணிக்குள்ள வற்றவனுக்குத்தான் புக்குன்னு சொல்றாரு ... இந்த மேட்டர முன்னாடியே தெரிஞ்சுக்கிட்ட மேணேஜரோட ஆபீஸ் கூட்டுற ரெண்டு அல்லக்கைங்க டபார்னு செக்கோட வந்து நாங்களும் புக் ஷாப் வெச்சுருக்கோம், இந்தா பாத்தியா லெட்டர்பேடுனு சல்லிசா 100 ரூபாய்க்கு புக்க வாங்கிட்டுப் போயிடறாங்க ....வாங்கிட்டுப் போன வெளக்கெண்ணை சும்மா இருக்கானா .... அவன் 100 ரூபாய் புக்குல பாதிப் பக்கத்த பக்கதூருல ஒரு ரவுடிப்பய நடத்துற புக் ஷாப்புக்கு அம்பதாயிரத்துக்கு வித்துட்டுப் போரான் ..... வந்த அம்பதாயிரத்துல பத்ரியோட புது மேனஜருக்கு ஒரு 40,000 வேற வழியில செட்டில் பண்ணுறான் (புது மேனேஜர் அவரோட சொந்த பந்தத்துக்கெல்லாம் செட்டில் செய்யுறாரு) ...... ஆக மொத்தம் பத்ரிக்கு வர வேண்டிய ஒரு கோடி ரூபாயும் வரல .... இல்ல அந்த அல்லக்கை வித்த ரேட்டான 50 ஆயிரமும் வரல ..... மேனஜரும் நல்லா காசு பாத்திட்டான் .... அல்லக்கைகளும் காசு பாத்துட்டாங்க ... அல்லக்கைகளிடம் 50ஆயிரத்துக்கு புக்க வாங்கின சோமாறியும் ஒன்னும் பாமரனுக்கு 2 ரூபாய்க்கு புக்க தரப் போறதில்ல ... அப்பிடியே செஞ்சாலும், 2 ரூபாய்க்கே குடுத்தாலும் , மக்களோட டிமான்டுல எப்பிடியும் போட்ட பணத்த எடுக்கத்தான் போறான்........ மொத்ததுல ஒங்க புது மானேஜர சீட்டக் கிழிச்சு உள்ள அனுப்புவீங்களா இல்ல இவன் ரொம்ப நல்லவன், தப்பே நடக்கல, அவன் நல்லதுக்குத்தான் செஞ்சான்னு அவனுக்கு சர்ட்டிப்பிகேட் குடுத்து கிழக்கோட வைஸ்-பிரசிடென்ட்டா புரமோசன் குடுப்பீங்களா பத்ரி ?????

    ReplyDelete
  37. I don't think selling spectrum in an auction would increase the price for consumers. In a competitive market price is equal to marginal cost. The price a firm pays for spectrum is a fixed cost and it would not have any impact on the marginal cost. In other words, whether a firm pays Rs 0 or Rs 100000000000000 for spectrum would have no effect on the price consumers pay for mobile services. The revenue to the government from spectrum auction would just reduce the profit margins of telecommunication companies.

    In the U.S although spectrum has been auctioned since 1994 the tariff for cellular services keeps coming down. The consumer price index for wireless phone services has come down from 100 in Dec, 1997(base year) to 60.572 in Jan,2011.

    Bharath Arunachalam

    ReplyDelete
  38. பத்ரி, ஊழல் தவிர, crony capitalism என்கிற சமாச்சாரம் உண்டே... இஸ்ரோ அப்படிப்பட்ட வகைதான்னு சொல்லனும். இதுவும் தவறுதான்.

    ReplyDelete