Friday, April 15, 2011

ஏப்ரல் 13 தேர்தல்

சென்னையில் நான் வாக்களிக்கும் மூன்றாவது சட்டமன்றத் தேர்தல் இது. (இருமுறை நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்களித்துள்ளேன்.) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வந்ததும் இந்தக் காலகட்டத்தில்தான். அதற்குமுன் ஸ்ரீரங்கத்தில் வாக்குச்சீட்டு வாயிலாக வாக்களித்துள்ளேன்.

இந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களையும் சேர்த்துப் பார்க்கும்போது இம்முறை ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் தெரிந்தது.

1. ஊடகப் பிரசாரம்: அய்யா டிவிக்களும் அம்மா டிவியும் மாறி மாறி ஞாபகம் வருதே என்று பிணங்களைக் காண்பித்து ஓட்டுகளை வாங்கப் பார்த்தனர். கூடவே காங்கிரஸ் டிவி (வசந்த், மெகா), கேப்டன், இமயம், தமிழன், விண் என்று பலவும் அரசியல் அதிரடி நிகழ்ச்சிகளைக் காண்பித்தனர். ஆனால் பொதுவில் பார்க்கும்போது ‘நடுநிலை’ இமயம் டிவியின் தேர்தல் களம் சிறப்பாக இருந்தது. (சுதாங்கன் என்னையும் அழைத்தது ஒரு காரணமாக இருக்கலாம்:-) தவிர்த்துவிட்டுப் பார்த்தால், போரடித்தது.

2. இணையப் பிரசாரம்: கட்சி அனுதாபிகள் தத்தம் வலைப்பதிவுகளிலும் பஸ், ஃபேஸ்புக் என்றும் வாக்கு வேடை நடத்தினார்களே ஒழிய, நான் நினைத்த அளவு கட்சிகள் இணையத்தை ஸ்வீகரிக்கவில்லை. இது வருத்தமே. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் இணையம் பெரும் இடத்தைப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

3. தெருப் பிரசாரம்: நரேஷ் குப்தா இதனை விளக்கினார். இது தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான செயல்பாட்டால் அல்ல. The Tamil Nadu Open Places (Prevention of Disfigurement) Act, 1959, as amended vide Act of 1992 என்று ஒரு சட்டம் உள்ளது. இந்தச் சட்டங்கள் இதுநாள்வரை மீறப்பட்டு வந்துள்ளது. ஆனால் இப்போது கடுமையாகப் பின்பற்றப்படுவதால், ஏனோ இன்றுதான் தேர்தல் தன்னிச்சையாக இதனைச் செயல்படுத்துவதுபோல உள்ளது. ஆனால் உண்மையில் இந்தச் சட்டத்தை இயற்றியது தமிழக சட்டமன்றமே! மொத்தத்தில் பலர் தேர்தலே நடைபெற்றதுபோலத் தெரியவில்லை என்றனர். இப்போதைய நடைமுறை சிறப்பானது என்பதே என் எண்ணம்.

4. வாக்களிக்க ஆர்வம்: ‘எல்லாருமே திருடர்கள்தான்!’ என்று புலம்பிக்கொண்டு வாக்களிக்காமல் வீட்டிலேயே அதிகம் பேர் உட்கார்ந்திருப்பது வாடிக்கை. ஆனால் இந்தத் தேர்தலில் அதிகமானோர் வாக்களிக்க முன்வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியானது. இனி வரும் தேர்தல்களிலும் கிட்டத்தட்ட 80% வாக்குப்பதிவு இருந்தால் பிரமாதமாக இருக்கும்.

5. 49-ஓ: இம்முறை தேர்தல் ஆணையம் அருமையாகச் செய்திருந்தது. எல்லா வாக்குச் சாவடிகளிலும் 49-ஓ குறித்த போஸ்டர்கள் இருந்தன. இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிலர் இந்த முறையைப் பின்பற்றியுள்ளனர் என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. எனக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்களே சுமார் 4 பேர் 49-ஓ பயன்படுத்தினர். இதனால் என்ன புரட்சி சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் தேர்தலுக்குத் தேர்தல் 49-ஓ எண்ணிக்கையும் இனி கவனிக்கப்படும். அது கணிசமாக ஆகும்போது கட்சிகளின் செயல்பாடும் மாறத்தொடங்கும்.

*

இந்தத் தேர்தலில் யார் ஜெயித்தாலும் சரி, தேர்தலை மக்கள் அணுகும் முறையில் மாற்றங்கள் தென்படுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. தேர்தலை அரசியல் கட்சிகள் அணுகும் முறையில்தான் அடுத்து மாற்றங்கள் தேவைப்படும்.

15 comments:

  1. ஒரு தொகுதியில் எத்தனை பேர் 49-ஓ போட்டார்கள் என்று தேர்தல் முடிவின் போது சொல்வார்களா ?

    எனக்குத் தெரிந்தவரை இல்லை. அதை RTI போட்டு தான் வெளிக்கொணற முடியும் என்கிற சூழ்நிலை நிலவுகிறது.

    ReplyDelete
  2. "49-ஓ: இம்முறை தேர்தல் ஆணையம் அருமையாகச் செய்திருந்தது. எல்லா வாக்குச் சாவடிகளிலும் 49-ஓ குறித்த போஸ்டர்கள் இருந்தன. இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிலர் இந்த முறையைப் பின்பற்றியுள்ளனர் என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன."

    என்ன சொதப்பறீங்க. இந்து பேப்பர் லெட்டெர்ஸ் டு த எடிட்டரில் எல்லாரும் தாங்கள் எவ்வாறு 49-0 போடுவதிலிருந்து தடுக்கப்பட்டனர் அல்லது எப்படி அந்த பூத் அலுவலருக்கு 49-0 பற்றித் தெரியவில்லை, மேலும் 17A எது எனத் தெரியாமல் மறுக்கப்பட்டனர் என கதை கதையாக லெட்டர் எழுதியுள்ளனர். எல்லாரும் பொய் சொல்றாங்களா? 14 & 15 இரண்டு நாள் பேப்பரும் படிங்க. சென்னை நகரில் சில முக்கிய ஏரியாக்களில் நீங்க சொன்ன மாதிரி போஸ்டர் இருந்திருக்கலாம். ஆனால் அது மானில பிரதிபலிப்பு அல்ல.

    ReplyDelete
  3. /-- எனக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்களே சுமார் 4 பேர் 49-ஓ பயன்படுத்தினர். --/

    பத்ரி, என்னுடைய கிராமத்தில் நானும் 49' ஒ பயன்படுத்தினேன். பூத்தில் இருந்த நண்பர்கள் மூலம் ஊருக்கே தெரிந்து எல்லோரும் என்னை வித்தியாசமாகப் பார்க்கின்றனர். ரகசியமாக பதிவு செய்யுமாறு இதுவும் இருந்தால், எண்ணிக்கை அதிகமாகும் என்றே தோன்றுகிறது.

    பலருக்கும் இதைப் பதிவு செய்ய ஆசை இருக்கிறது. என்றாலும் தயங்குகிறார்கள். அதற்கான காரணத்தை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.

    பி கு: நான் தைரியசாலியில்லை என்பதையும் உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன். வேறு காரணம் என்னவாக இருக்கும். சல்லடை போட்டு சலிப்பதால் பெரிய குப்பைகளைத் தானே பிரிக்கமுடிகிறது. சில்லறைக் குப்பைகள் மணலோடு மணலாக இரண்டரக் கலந்துள்ளது. புரிகிறதுதானே.

    ReplyDelete
  4. ||என்ன சொதப்பறீங்க. இந்து பேப்பர் லெட்டெர்ஸ் டு த எடிட்டரில் எல்லாரும் தாங்கள் எவ்வாறு 49-0 போடுவதிலிருந்து தடுக்கப்பட்டனர் அல்லது எப்படி அந்த பூத் அலுவலருக்கு 49-0 பற்றித் தெரியவில்லை, மேலும் 17A எது எனத் தெரியாமல் மறுக்கப்பட்டனர் என கதை கதையாக லெட்டர் எழுதியுள்ளனர். ||

    கரெக்ட்.
    பத்ரி நீங்கள் பொது நீரோட்டத்திலிருந்து விலகிக் கொண்டீர்கள் போலிருக்கிறது ! :))
    பல வாக்குச் சாவடிகளில் 49ஓ பற்றிய தெளிவு வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு சரியான விதத்தில் இல்லை என்று புகார் வந்திருக்கிறது.

    மேலும் இந்த தேர்தலில் மொத்தம் 1489 49 ஓ விழுந்திருக்கிறது என்று செய்திகள் வந்திருக்கிறது.இதற்கெல்லாம் அரசியல் கட்சிகள் லவலேசமும் சங்கடப் பட வாய்ப்பில்லை.
    49ஓ'க்களின் எண்ணிக்கை லட்சங்களில் கூடும் போதுதான் அரசியல் கட்சிகளுக்குப் பயம் வரும்.

    மேலும் இந்த தேர்தலில் ஏதும் மொத்தமாக மாறி விட்டாற் போன்ற தொனியில் எழுதியிருக்கிறீர்கள்.
    நடந்த ஒரே நல்ல விதயம் அதிக எண்ணிக்கையினாலான வாக்கு சதவிகிதம்.இதற்கு ஆளும் கட்சியின் குடும்பப் நடவடிக்கைப் பெருமை" அல்லது ஆணையத்தின் கிடுக்கிப் பிடியை மீறி கடைசி இரு நாட்களில் இரவுகளில் நடந்து பணப் பிரயோகம் இதில் எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்..

    ஆணையத்தின் கெடுபிடிக்குக் காரணம் மத்திய காங்கிரஸின் திமுகவுக்கு எதிரான உள்ளடி வேலையில் ஒன்று என்ற ஊகமும் நிலவுகிறது.குரேஷி காங்கிரஸ் முன்னிறுத்திய ஆணையர் என்பதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்..

    இதே கெடுபிடு வரும் தேர்தல்களிலும் இருந்தால் அப்போது நிலவரம் உண்மையில் மாறுகிறது என்று நம்ப ஆரம்பிக்கலாம்..

    ஏனெனில் இந்திய சூழலில் சகாயங்'களும் பிரவீண்குமார்'களும் ரேர் ஸ்பீஷஸ்'ஆக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்,குறைந்த பட்சம் இன்றைய சூழலில் இதுதான் உண்மை.

    ReplyDelete
  5. பத்ரி, உங்கள் சொந்த ஊர் ஸ்ரீரங்கமா ?

    ReplyDelete
  6. இப்போதுதான் செய்தி பார்த்தேன்..
    49 ஓ 24 ஆயிரத்துச் சொச்சம் விழுந்திருக்கிறதாம்...

    முன்னர் எழுதியது தவறான தகவல்.வருத்தங்கள்.

    சென்னையில் மட்டும் மூவாயிரத்துச் சொச்சம்..
    திருவாரூரில் 59.
    ரிஷிவந்தியத்தில் 0.
    :))

    ReplyDelete
  7. 49-ஓ சில ஆயிரங்களில் விழுவதையே நான் வெற்றியாகப் பார்க்கிறேன். அடுத்த இரண்டு தேர்தல்களில் இது கட்டாயமாக லட்சங்களில் இருக்கும். தேர்தல் ஆணையம் பயிற்சியின்போது 49-ஓ பற்றித் தெளிவாக தேர்தல் அலுவலர்களுக்கு வகுப்பெடுக்கிறார்கள். ஆனால் நாம்தான் வகுப்பில் எதையுமே கவனித்துப் பழக்கமில்லாதவர்கள் ஆயிற்றே.

    மாநிலம் முழுமைக்கும் லட்சக்கணக்கில் 49-ஓ, ஏதோ ஒரு தொகுதியில் வெற்றி இடைவெளியைவிட அதிகமான 49-ஓ என்று ஆகும்போதுதான் சில கட்சிகள் சற்றே சிந்திக்கத் தொடங்கும். இந்த 49-ஓ காரர்களை எப்படி அணுகலாம், அவர்களிடம் என்ன பேசலாம் என்று யோசிக்கத் தொடங்கும்.

    மாற்றம் என்பது ஒரே நாளில் நடப்பதல்ல.

    *

    இந்தத் தேர்தலில் 49-ஓ மட்டும்தான் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் சொல்லவில்லை. அதுவும்கூடத்தான். பிரசாரம் வெறும் கோஷங்களைத் தாண்டி தேர்தல் அறிக்கை என்பதை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. அடுத்து தேர்தல் அறிக்கை என்பதை மேலும் செப்பனிட்டு, தேர்தல் அறிக்கை = வெற்றிபெற்ற அரசின் கொள்கை என்றாக்கி, அந்தக் கொள்கைகள் சரியானபடி நிறைவேற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் நிலைக்கு மக்கள் முன்னேறுவார்கள்.

    ReplyDelete
  8. கிருஷ்ணா: இன்று 49-ஓ போடப் பயப்படுபவர்கள் வெகு சீக்கிரமே அந்த பயத்தை விட்டுவிடுவார்கள் என்பது என் நம்பிக்கை. முதலில் நகர்ப்புறங்களில்தான் இது சாத்தியமாகும். மெதுவாகத்தான் கிராமப்புறங்களில்.

    ReplyDelete
  9. I too had the same experience of Sri.Krishna Prabhu met; My booth NO:is 139, and in the heart of the Chennai City at IAS Officerrs Associationo COmplex at Roypettah High Road; The 5 poling Officers who were on duty there were have no Idea about the 49-O formalities and exposed me to the public and even to the Political Agents who were working there; I have already sent a detailed e.Mail on the elction day itself to Idlyvadai

    Suppaman

    ReplyDelete
  10. நான் 1950 முதல் தேர்தல்களைப் பார்த்திருக்கிறேன். டெல்லியில் இருந்தபோது அணிமையில் காலமான அர்ஜுன் சிங் அவர்கள் நான் இருந்த மூன்றுமாடிக் குடியிருப்புக்குப் படியேறி வந்து ஆதரவு கோரியது நினைவுக்கு வருகிறது. ஏப்ரல் 13 தேர்தலில், சென்னையில் எங்கள் வீட்டுக்குக் (கீழ்தளம்) வந்தது சில பொடியன்களும், கட்டுமான வேலையில் பணியாற்றும் சில வயதான பெண்மணிகளும் தான்.
    பணம் பாதாளம் மட்டும் பாயவில்லை. இடையிலே நின்று ஓய்ந்து விட்டது.
    வாக்குச்சாவடியில் காவல்துறையினர் புன்சிரிப்புடன் பணியாற்றினர். பெரிசுகளாகிய எங்களைக் க்யூ வரிசையில் நிற்கவைக்காது உள்ளே அழைத்துச் சென்று பேருதவி புரிந்தனர்.
    இவையெல்லாம் மாற்றங்கள் தானே!

    ReplyDelete
  11. Suppaman: I noticed the posters pasted on the walls by the election commission. My wife exercised 49-O. (I didn't. I voted for a specific party candidate.) I helped my wife to exercise 49-O. The polling agents inside noticed, but they had no problems with it. One of the polling officers was confused and suggested that a form be filled up. I explained that it was not necessary.

    In my opinion, at least in the cities, there is no pressure in openly declaring that you have exercised 49-O. It is true that in the current model, when you exercise 49-O, the polling officers and polling agents get to know of this. There are, after all, 10 people sitting inside that room!

    Did any of the polling agents threaten you? If that happens, we need to take this up more seriously and take preventive action.

    ReplyDelete
  12. Dear Sri.Badri Sir
    Thank you,
    While people are thinking about 49-O,I feel, this is the best time to get the button in the machine for 49-O, which is kept still pending before the supreme court since the last long 7 Years.
    Suppamani

    ReplyDelete
  13. அறிவன் & பத்ரி ,
    I came across this comment on the vikatan site. I feel this is closer to the real picture.
    I quote the comment,

    "24,591 பேர் வாக்களித்துள்ளனர் - I am so sorry for those who believe this figure as correct one. In many polling booths, some voters did not press the buttons properly.
    At the end, the total votes in the EVM were not tallying with the voter list register. That means there was shortage in the total polls in the evm machines. To tally it, some votes were added to 49-0.
    It happened in many booths. 49-0 can be introduced in the evm machine itself. Button 1 or button 16 can be exclusively alloted in the EVM uniformly, and the remaining can be alloted to the candidates." \End quote

    It may be that the number of votes under 49-0 is in some thousands this time. Still, the actual figure might not be the one that is officially quoted. It appears that what Naresh Gupta said about the EC educating the polling officials about 49-0 does not seem to have been carried out properly by the EC.
    The spate of complaints by many voters that could not exercise 49-0 is an indication that the EC has to do its job more thoroughly in the future.

    ReplyDelete
  14. பத்ரி & அறிவன்

    இந்த ஜோகோ ஷீட்டைப் பார்க்கவும்:
    https://public.sheet.zoho.com/public/gmbsenthil_26/tamil
    -----------
    ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு சதவீதம் ஒட்டு பதிவாகியுள்ளது, ஆண், பெண், 49ஓ மூன்றும் பட்டியலிடப்படுள்ளது.
    ஞாநி கூட கிழக்கு மொட்டை மாடி கூட்டத்தில் ஆதங்கப்பட்டிருந்தார் -'49ஓ போட்டவர்கள் எண்ணிக்கை, தேர்தல் நாளன்று வெளியிடப்பட்டால்தான் உண்டு; இல்லையென்றால விவரம் கிடைப்பது மிகவும் சிரமம்' என்று.
    இந்த முறை இந்த விவரங்கள் வெளியாகியிருப்பது குறித்து நிச்சயம் நாம் தேர்தல் கமிஷனுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் (@zohosheet டீமுக்கும் :-))

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    ReplyDelete
  15. After a while, no BP shoot-up post from you :D
    I agree, agree, totally agree with the contents of the post from the title to the final fullstop. Really thrilled to see a 80% turnout and the 49-0 in thousands (not that I support 49-O, the very thought that people are coming forward to take up a bit laborious way of "voting")

    ReplyDelete