Friday, April 08, 2011

அண்ணா ஹஸாரே + (ஜன்) லோக்பால் மசோதா

ஹஸாரே மரியாதைக்குரியவர். மஹாராஷ்டிரத்தில் அவர் நிறைய சாதித்திருக்கிறார். அவர் வசிக்கும் பகுதியில் தவித்த வாய்க்குகூடத் தண்ணீர் தர நீர் இல்லாத காலம் இருந்தது. அந்த இடத்தை முற்றிலுமாக மாற்றி, மழைநீர் சேமிப்பை முன்னெடுத்து, வேண்டிய அளவுக்கு நீர் கிடைக்கச் செய்தார். ஊழலை எதிர்த்துப் பல போராட்டங்கள், பல உண்ணாவிரதங்கள். அரசுகளை மாற்றக்கூடிய வல்லமை பெற்றவர். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்துவதில் பாடு பட்டவர்.

இப்போது ஊழலை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கியுள்ளார். லோக்பால் என்ற Ombudsman பதவியை உருவாக்கி, அதன்மூலம் மத்தியில் ஆளும் வர்க்கத்தினர் - அரசியல்வாதிகள், அதிகாரிகள் - செய்யும் ஊழலைத் தடுத்து நிறுத்த பல ஆண்டுகளாகவே முயர்சிகள் நடந்துவந்துள்ளன. ஆனால் தேர்தல் சீர்திருத்தம்போலவே ஆட்சியாளர்கள் இந்தச் சீர்திருத்தம் வரவிடாமல் எத்தனையோ எத்து வேலைகளைச் செய்தனர். இன்றுவரை மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால் அதைவிட மோசம், அந்த மசோதாவே வெறும் சோதா. லோக்பால் ஒரு டம்மி பீஸாக மட்டுமே இருப்பார்.

லோக்பால் என்ற ஓர் அமைப்பின்மூலம் ஊழலைப் பெரிதும் குறைக்கலாம் என்று நினைத்துவந்த ஆர்வலர்கள் - அண்ணா ஹஸாரே போன்றவர்கள் - விரக்தி அடைந்தது நியாயமே. எனவே இவர்களாகவே ‘ஜன் லோக்பால் மசோதா’ என்ற சட்ட முன்வரைவை உருவாக்கினர். நிச்சயமாக இதனை அரசு ஏற்காது என்பது தெரிந்ததே. அதேதான் நடந்தது. அதற்குமேல் அரசும் சரி, ஹஸாரே அண்ட் கோவும் சரி, சந்திக்கக்கூட முடியவில்லை. தாளமுடியாத விரக்தியில்தான் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் அனுப்பிவிட்டு அண்ணா ஹஸாரே உண்ணாவிரதத்தில் இறங்கினார். இன்று ஊடகங்கள் அனைத்தும் அவர் பக்கம். இளைஞர்கள் பலரும் அவர் பக்கம். பொதுமக்கள் பலரும் அவர் பக்கம். சென்னையிலும்கூட மெரீனாவில் மக்கள் அமைதியாக ஹஸாரேவுக்கு ஆதரவு தந்து கூடுகிறார்கள். தக்கர் பாபா பள்ளியில் திரள்கிறார்கள். அங்கு சென்று எட்டிப்பார்த்துவிட்டு வந்துதான் இதனை எழுதுகிறேன். பிரச்னை முடியும்வரை மக்கள் போராட்டமும் அமைதியான வழியில் தொடரும் என்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்.

*

இப்போது விஷயத்துக்கு வருவோம். அரசின் சட்ட முன்வரைவு படுமோசமானது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஹஸாரே அண்ட் கோ சட்ட முன்வரைவிலும் ஏற்கமுடியாத பல அம்சங்கள் உள்ளன. ஒரு நல்ல காரியத்துக்காகப் போராடும்போது சிக்கலே இல்லாத முன்வரைவைத்தான் நாம் முன்வைக்கவேண்டும். மேலும் அரசில் உள்ளவர்களையும் நம் பக்கம் இழுத்துக்கொள்ளவேண்டும். அதற்கு நாம் கொஞ்சம் வளைந்துகொடுத்துத்தான் ஆகவேண்டும்.

அரசில் உள்ளவர்கள் நம்பிக்கையற்றவர்கள் என்று சொல்லிக்கொண்டு அவர்களையே நாம் விரும்பும் சட்ட மசோதாவை எப்படி ஏற்கவைப்பது? அவர்கள் நம்பிக்கை அற்றவர்கள்தான். ஆனாலும் நம் போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முன்னேறிச் செல்லவேண்டும்.

இப்போது ஜன் லோக்பால் மசோதா வரைவில் உள்ள குறைகளாக நான் கருதுவதைப் பார்ப்போம்:

1. லோக்பாலுக்கு போலீஸ் அந்தஸ்து வேண்டும் என்று ஹஸாரே வரைவு கேட்கிறது. அதாவது ஒருவர்மீது குற்றம் சாட்டி, கைது செய்து, அவர்கள்மீது வழக்கு தொடுப்பது. இப்போதைக்கு இந்தியாவில் இரண்டு அமைப்புகளிடம்தான் இந்த அதிகாரம் உள்ளது. ஒன்று: மாநில காவல்துறைகள். இரண்டாவது: மத்திய சிபிஐ. (தீவிரவாதக் குற்றங்களைத் தடுக்க தேசிய போலீஸ் அமைப்பு ஒன்று வேண்டும் என்ற கருத்து உள்ளது; அது வந்தால் அதற்கும் போலீஸ் அந்தஸ்து இருக்கும்.) லோக்பால் மூன்றாவது அமைப்பாக ஆகும். இது சிக்கல் மிகுந்தது என்று நான் கருதுகிறேன்.

அடுத்து, சிபிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு அங்கிருந்து நகர்த்தப்பட்டு லோக்பால் அடியில் வரவேண்டும் என்பது. இப்படிச் செய்தால்தான் ஊழலைத் தடுக்கமுடியும் என்று சொல்கிறார்கள். ஆனால் இன்று உச்ச நீதிமன்றத்தின் பணிகளை எடுத்துக்கொள்ளுங்கள். நீதிமன்றம் சிபிஐ அமைப்பை வேண்டிய நேரத்தில் அழைத்து, அவர்களைக் கொண்டு வழக்குகளைப் பதிவு செய்கிறது. வழக்கைக் கண்காணிக்கும் உரிமையைத் தானே கையில் எடுத்துக்கொள்கிறது. இதுபோன்ற ஊழல் வழக்குகள் என்றால் அரசுகள் அதில் இயங்காதபோது உச்ச நீதிமன்றத்திடம் செல்வதற்கு பதிலாக லோக்பால் அமைப்பிடம் செல்லலாம் என்று வைத்துக்கொள்வோம். அப்போது லோக்பால் அமைப்புக்கு போலீஸ் அதிகாரம் என்பது தேவையில்லை. அது சிபிஐ-ஐ அழைத்து வழக்கு பதிவு செய்யச் சொல்லி, வழக்கை விசாரித்து, தீர்ப்பளிக்கலாம். லோக்பால் அளிக்கும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கக்கூடிய அதிகாரம் இருக்கவேண்டும். இந்த நாட்டில் உச்ச நீதிமன்றத்துக்கு மேற்பட்ட நீதி அமைப்பு இருக்கக்கூடாது.

2. லோக்பால் எதனைக் கண்காணிக்கவேண்டும்? ரேஷன் கார்டு கிடைக்கவில்லை என்றால், பாஸ்போர்ட் கிடைக்கவில்லை என்றால், போலீஸ் வழக்குப் பதிவு செய்ய மறுக்கிறது என்றால், லோக் ஆயுக்தா (மாநில அளவில் லோக்பாலுக்கு இணையான அமைப்பு) அல்லது லோக்பாலிடம் முறையிடலாம் என்று என்டிடிவி தளத்தில் போட்டிருக்கிறார்கள். இது பைத்தியக்காரத்தனமாகப் படுகிறது. நாட்டில் எல்லா அமைப்புகளுமே உடைந்துபோய்விட்டதாகவும் தனி மனிதனுக்கு ரேஷன் கார்டு வாங்கித்தரத்தான் அண்ணா ஹஸாரே உண்ணாவிரதம் இருக்கிறார் என்பதாகவும் இந்தக் கதை போகிறது. சாதாரண ஊழல் குற்றங்களை எதிர்கொள்ள Prevention of Corruption Act உள்ளது. இதனைச் செய்ய, லோக்பால் தேவை இல்லை. நமக்குத் தேவை உள்ளூர் அளவில் வலுவான என்.ஜி.ஓ அமைப்புகள். ஒவ்வொருவரும் ரேஷன் கார்டு கிடைக்கவில்லை என்று லோக்பாலிடமோ லோக் ஆயுக்தாவிடமோ சென்றால், அத்தோடு அவர்களது பணி முடிவுற்றது என்று வைத்துக்கொள்ளலாம். வேலைப் பளு தாங்கமுடியாமல் அவர்கள் ஓடிவிடுவார்கள்.

அமைச்சர்கள், முதல்வர், பிரதமர், எம்.எல்.ஏ/எம்/எல்.சி, எம்.பி ஆகியோர், ஐ.ஏ.எஸ் அலுவலர்கள், காவல்துறை உயரதிகாரிகள் (ஐ.பி.எஸ்) ஆகியோர்மீதான ஊழல் வழக்குகளை மட்டும்தான் லோக்பால் / லோக் ஆயுக்தா எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த வழக்குகளை நடத்த இவர்கள் யாரிடமும் மேற்கொண்டு அனுமதி பெறவேண்டியதில்லை. பொய் வழக்குகளாக இருப்பின் வழக்கு போட்டவர்மீது கடுமையான நிதி அபராதம் விதிக்கப்படவேண்டும். லோக்பால், தானாகவே (suo motu) வழக்கை எடுத்துக்கொண்டு விசாரணையில் ஈடுபட அனுமதி வேண்டும். ஆனால் இந்த வழக்கு நடைபெறும்போது சம்பந்தப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்படக்கூடாது. வழக்கின் முடிவின்படிதான் தண்டனை தரப்படுதல் ஆகியவை நடைபெறவேண்டும். மேலும் லோக்பால் வழக்கு நடத்துகிறது என்பதாலேயே அவர் பதவி விலகவேண்டும் என்றெல்லாம் கேட்கக்கூடாது. (அதெல்லாம் தார்மீக அடிப்படையில் வேண்டுமானால் நடக்கலாம். ஆனால் சட்டபூர்வமாக அப்படிக் கேட்பது நியாயமாக இருக்காது.)

3. நீதித்துறை மீதான லோக்பால் அதிகாரம். இதனை நான் ஏற்கமாட்டேன். நீதித்துறை தன்னைத் தானேதான் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும். உச்ச நீதிமன்றத்துக்கு, அதற்குக் கீழுள்ள நீதிமன்றங்களை முழுமையாகச் சரிபடுத்தும் அதிகாரம் ஏற்கெனவே உள்ளது. வேண்டுமென்றால் அதனை மேலும் வலுப்படுத்தலாம். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை விசாரித்து நீக்கும் உரிமை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான ஒரு சிறு குழுவுக்கு இருக்கவேண்டும். (இங்கும் சட்ட மாற்றங்கள் தேவை.). உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிமீதான குற்றச்சாட்டை விசாரித்து அவரைப் பதவியிலிருந்து விலக்கவேண்டுமா என்பதை முடிவுசெய்ய நாடாளுமன்றத்துக்கு மட்டும்தான் அதிகாரம் தரப்படவேண்டும். அதையும் செயல்படுத்துவது ஜனாதிபதியாகவே மட்டுமே இருக்கவேண்டும். எந்த நிலையிலும் நீதித்துறையை லோக்பாலின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவே கூடாது.

4. லோக்பாலை யார் தேர்ந்தெடுப்பது என்பதில் ஜன் லோக்பால் மசோதா சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். இதில் சீஃப் எலெக்‌ஷன் கமிஷனர், ஆடிட்டர் ஜெனரல், சர்வதேச விருதுகள் வாங்கியோர் எல்லாம் இருக்கவேண்டும் என்று கேட்பது அபத்தம். அப்படி இருந்தால்தான் லோக்பால் நியாயமாக இருப்பார் என்று சொல்வது பேத்தல். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் இருவரும் ஒருமனதாக யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர் லோக்பால் ஆவார். இவரை நியமிப்பது ஜனாதிபதி. நீக்குவது இம்பீச்மெண்ட் வாயிலாக. இவரது தகுதியைப் பற்றி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் (சிவிசி மாதிரி!). உச்ச நீதிமன்றம் இவரது நியமனத்தைச் செல்லாது என்று சொன்னால் இவர் போகவேண்டும். ஆக, இவர் எந்தவிதத்தில் பார்த்தாலும் உச்ச நீதிமன்றத்தின்கீழ் இருக்கவேண்டுமே தவிர இவர்கீழ் உச்ச நீதிமன்றம் இருக்கக்கூடாது.

5. யார் லோக்பாலாக இருக்கலாம்? ஜன லோக்பால் மசோதா, 10 பேர் கொண்ட இந்தக் குழுவில், நான்கு பேர் சட்டப் பின்னணியுடனும் (அவர்கள் நீதிபதியாக இருந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என்கிறது) மீதிப் பேர் எந்தப் பின்னணியிலும் இருக்கலாம் என்றும் சொல்கிறது. நான் ஏற்கமாட்டேன். இவர்கள் ஓய்வுபெற்ற நீதிபதிகளாகவோ அல்லது பணியில் இருக்கும் நீதிபதிகளாகவோ மட்டும்தான் இருக்கவேண்டும். இது ஒரு சட்டப் பணி. சட்டம் முழுமையாகத் தெரிந்திருக்கவேண்டும். எவிடென்ஸ் ஆக்ட் பற்றியும் பிரிவென்ஷன் ஆஃப் கரப்ஷன் பற்றியும் ரெப்ரசெண்டேஷன் ஆஃப் பீப்பிள்ஸ் ஆக்ட் பற்றியும், பல்வேறு ஊழல் வழக்குகள் பற்றியும் முழுமையாகத் தெரிந்திருக்கவேண்டும். சும்மா ஆலமரத்தின்கீழ் நடக்கும் கட்டப் பஞ்சாயத்து வேலை அல்ல இது. நல்ல, தரமான, நியாயமான நீதிபதிகள்தான் இந்தப் பணியைச் செய்யவேண்டும்.

நீதிபதிகள் கெட்டவர்கள் என்ற எண்ணம் இருந்தால், அதை எப்படிச் சுத்தம் செய்வது என்ற வேலையில் இறங்கவேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது, அதில் அரசியல்வாதிகள் எப்படி ஈடுபடவேண்டும் என்ற மசோதாவைச் சரிசெய்யவேண்டுமே தவிர, லோக்பால் எல்லாவற்றையும் சுத்தமாக்கிவிடுவார் என்று அவர் கையில் துடைப்பக் கட்டையைத் தரும் வேலையைத் தவிர்க்கவேண்டும்.

***

இன்னும் தனித்தனி பாயிண்டுகளை எடுத்து அலசலாம். ஆனால் அடிப்படையில் ஹஸாரேவின் போராட்டம் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. வரைவுதான் மாற்றப்படவேண்டும். அப்படி ஒரு வரைவை உருவாக்க அமைக்கப்படும் குழுவில் மக்கள் பிரதிநிதிகள் இருக்கவேண்டும், குழுவின் தலைமைப் பொறுப்பு ஹஸாரேவுக்குத் தரப்படவேண்டும் என்றெல்லாம் அர்விந்த் கேஜ்ரிவால் போன்றோர் கேட்பது தவறு. சட்டம் இயற்றும் உரிமை அரசுக்கு மட்டுமே உண்டு. அது நமக்கு விரும்பிய சட்டமாக இருக்கவேண்டும் என்று கேட்கும் உரிமை நமக்கு உண்டு. நமக்கு ஏற்புடையதல்லாத சட்டத்தை அரசு தேர்வடையச் செய்வதை எதிர்க்கும் உரிமை நமக்கு உண்டு. நாம் விரும்பிய ஷரத்துகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள வற்புறுத்தவைக்கும் உரிமை உண்டு. ஆனால் அந்தச் சட்டத்தை நானே தயாரித்துத் தருவேன், நீ சும்மா ஒப்புக்கு ரப்பர் ஸ்டாம்ப் போடு என்று சொல்ல உரிமை இல்லை. அப்படியென்றால், தேர்தலில் நில், ஜெயித்து வந்து அதனைச் செய் என்றுதான் நாம் தன்னார்வலர்களிடம் சொல்லவேண்டும்.

முதலில் சட்ட முன்வரைவை அனைத்து மக்களையும் (என்னையும் சேர்த்து) ஏற்றுக்கொள்ள ஜனநாயக முறையில் ஹஸாரே அண்ட் கோ முயற்சி செய்யவேண்டும். அதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்ய அவர்கள் முன்வரவேண்டும்.

27 comments:

  1. Sir,
    Some of these are nice points,which will be welcome by the sub-committee to finalise the draft.I urge you to submit these to the sub-committee,Insha Allah,when it gets formed.
    As you know,the struggle has been on forming the sub-committee.And is there anything wrong in having a sub-committee with experienced practisioners of law like judges,lawyers,ias officers?

    ReplyDelete
  2. அன்னா ஹசாரேவின் சட்ட வரைவு பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் குறித்த உங்கள் அச்சம் தேவையற்றது.

    இந்தியாவில் கூறப்படும் எந்தவொரு தீர்ப்பு அல்லது உத்தரவினை எதிர்த்தும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு (Special Leave to Appeal) செய்ய முடியும். அரசியலமைப்பு சட்டத்தால் உச்ச நீதிமன்றத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த அதிகாரம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கூறு (Basic Feature). எனவே உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிகாரத்தை நாடாளுமன்றத்தின் அறுதிப் பெரும்பான்மை நினைத்தால் கூட மாற்ற முடியுமா என்பது சந்தேகமாக இருக்கையில், அரசியலமைப்பு சட்ட பிரிவிற்கு எதிராக ஒரு சட்டம் இயற்றப்பட்டால், அடுத்த வினாடியே அது தள்ளுபடி செய்யப்படும்.

    உச்ச நீதிமன்றத்தில் கூட மேல்முறையீடு செய்ய முடியாது என்று கூறினால், அந்த உத்தரவினை எதிர்த்து எளிதில் உயர்நீதிமன்றத்தில் நீதிப் பேராணை மனு (Writ Petition) தாக்கல் செய்ய இயலும்.

    ReplyDelete
  3. சட்ட வரைவுக்குழுவிற்கு அன்னா ஹசாரேவை தலைவராக்குவதில் தவறில்லை. சட்டவரைவை யார் வேண்டுமென்றாலும் தயாரிக்காலாம். அதனை மசோதாவாக தாக்கல் செய்வது அரசு அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஆனால் சட்டமாக இயற்றுவது நாடாளுமன்றத்தால் மட்டுமே இயலும். இந்த சட்டத்தை இயற்றித்தான் ஆக வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்த இயலாது.

    அடுத்து உச்ச நீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய இப்போது உள்ள முறையை மாற்றுவதும் நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்படாது. இன்று நீதிபதிகள் தவறு செய்கின்றார்கள் என்பதை வைத்துக் கொண்டு, அவர்களை பதவி நீக்கம் செய்ய சட்டம் கொண்டு வருவது, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பறிப்பதாகும். அதனால் விளையக்கூடிய தீமைகள்தான் அதிகம்

    ReplyDelete
  4. இறுதியாக, ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்களால் ஊதிப் பெருதாக்கப்படுவது போல, லோக்பால் ஒன்றும் ஊழலுக்கு எதிரான சர்வரோக நிவாரணி அல்ல!

    இப்படி ஒரு அமைப்பையும், நேர்மையான அதிகாரிகளை பழி வாங்க ஒரு கருவியாக துஷ்பிரயோகம் செய்ய இயலும்.

    சிறு வயதில் தேவதைகள் வந்து நமது ஹோம் வொர்க்கை செய்து விட்டுப் போய்விட மாட்டார்களா என்று எதிர்பார்ப்பது போலவும், தற்பொழுது வெளிகிரக வாசிகள் வந்துவிட மாட்டார்களா, நமது எனர்ஜி தேவையெல்லாம் தீர்ந்து விடாதா என்று எதிர்பார்ப்பது போலவும், இது ஒரு எதிர்பார்ப்பு! அவ்வளவுதான்!!

    ReplyDelete
  5. //உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிமீதான குற்றச்சாட்டை விசாரித்து அவரைப் பதவியிலிருந்து விலக்கவேண்டுமா என்பதை முடிவுசெய்ய நாடாளுமன்றத்துக்கு மட்டும்தான் அதிகாரம் தரப்படவேண்டும். அதையும் செயல்படுத்துவது ஜனாதிபதியாகவே மட்டுமே இருக்கவேண்டும். எந்த நிலையிலும் நீதித்துறையை லோக்பாலின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவே கூடாது.
    //
    இப்ப மட்டும் என்ன? ஜனாதிபதி ஆளும் கட்சிகாரர், ஆளுங்கட்சிக்கு சாதகாம இல்லை என்றால் அடுத்த தேர்தலில் அவர் கிடையாது தானே? (அதானே உண்மை). குற்றம் செய்த தலைமை நீதிபதியை விசாரித்து நடவடிக்கை எடுப்பது யார்? (ஜனாதிபதின்னு சொல்லாதிங்க :-) )

    ஜன் லோக்பால் மசோதா படி சீஃப் எலெக்‌ஷன் கமிஷனர், ஆடிட்டர் ஜெனரல், சர்வதேச விருதுகள் வாங்கியோர் எல்லாம் இருக்கவேண்டும் என்று கேட்பது எப்படி அபத்தம் ஆகும்? இது போன்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள் இருந்தால் அமைப்பு தவறாக நடக்காது என்று நம்பலாம் அல்லவா?

    ReplyDelete
  6. \\10 பேர் கொண்ட இந்தக் குழுவில், நான்கு பேர் சட்டப் பின்னணியுடனும் (அவர்கள் நீதிபதியாக இருந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என்கிறது) மீதிப் பேர் எந்தப் பின்னணியிலும் இருக்கலாம் என்றும் சொல்கிறது. நான் ஏற்கமாட்டேன். இவர்கள் ஓய்வுபெற்ற நீதிபதிகளாகவோ அல்லது பணியில் இருக்கும் நீதிபதிகளாகவோ மட்டும்தான் இருக்கவேண்டும். இது ஒரு சட்டப் பணி. சட்டம் முழுமையாகத் தெரிந்திருக்கவேண்டும்.\\

    10 ல் 4 பேர் சட்டம் தெரிந்தவர்களாக இருக்கவேண்டியதில்லை என்பது தவறில்லை. 6 பேர் சட்டக்காரர்கள். சட்டத்துறையுடன் தொடர்பில்லாதவர்கள் இருந்தால் தான் நல்லது.

    ReplyDelete
  7. \\நீதிபதிகள் கெட்டவர்கள் என்ற எண்ணம் இருந்தால், \\ உண்மையில் நிறைய நீதிபதிகள் சந்தர்பம் வாய்த்தால் ஊழல் செய்பவர்கள் தான்.

    முன்னால் தலைமை நீதிபதி கேஜி பெரிய இடத்து உதாரணம். சார் நிலை நீதிமன்றத்துக்கு போயிருங்கறீங்க தானே? 10 ல் 3 மோசம் என்றாலும் இதன் பாதிப்பு மிக மிக அதிகம். தவறான தீர்ப்பால் ஒருவன் வாழ்க்கையே பாதிக்கப்படுகிறது அல்லவா?
    உயர், உச்ச நீதிமன்றம் போக வசதி?

    இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். நீக்கு போக்கு தேவை தான். ஆனால் சிலவற்றில் உறுதியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லாமே நீர்த்து போயிடும்.

    --------
    ஒருவர் சிக்கிம் மாநிலத்தில் இருந்து 90% வாக்கு வாங்கி வெற்றி பெறுகிறார் என்று கொள்வோம். இவர் சுயேச்சை அல்லது அம்மாநிலத்தில் மட்டுமே உள்ள கட்சியை சேர்ந்தவர். அவரால் மட்டும் நாட்டில் பெரிய மாறுதலை (நல்லதாக இருந்தாலும்) கொண்டு வரமுடியாதல்லவா? எனக்கு அதிபர் முறையா அல்ல பிரதமர் முறையா அல்ல கலந்ததா எது சரியான தீர்வு என்று தெரியவில்லை. எனவே ஜெயித்து வந்து அதனைச் செய் என்று சொல்வது விதண்டாவாதத்திற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். முதல்ல பிரதமர் 6 மாதத்திற்குள் (மக்களவை உறுப்பினர் இல்லையென்றால்) தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என இருக்கவேண்டும்.

    ReplyDelete
  8. அன்புள்ள பத்ரி,

    பிரிட்டனில் லஞ்சம் Proceeds of Crime Act 2002 படி, பணச் சலவை (money laundering) கிரிமினல் குற்றமாகும்.

    அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் ஆகியோர் Politically Exposed Persons-PEP என்ற இனத்தில் வகைப்படுத்தப்படுகிறார்கள்.

    இவர்கள் பெறும் லஞ்சம் கிரிமினல் சொத்தாகக் கருதப்பட்டு இந்தச் சட்டப்படி குற்றமாகிறது.

    PEP உட்பட பணச் சலவையில் ஈடுபட்ட எல்லோருக்கும் தண்டனை விதிக்க Financial Services Authority (FSA)வுக்கு வானளாவிய அதிகாரம் உண்டு.

    FSA பணச் சலவை குற்றத்துக்காக அரசியல்வாதி, அரசு ஊழியர்களைக் கைது செய்ய முடியும். அது மட்டுமில்லை. அந்த மாதிரியான குற்றத்தில் எந்த அரசியல்வாதியாவது ஈடுபடுவது தெரியவந்தும் அதைக் குறித்துப் புகார் செய்யாமல் இருந்தால் (வங்கிக் கணக்கைத் திறந்து பணச் சலவைக்கு வழிவகுக்கும் வங்கி ஊழியர்கள் உட்பட), 5 வருடம் அவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்க இந்த அமைப்புக்கு அதிகாரம் உண்டு.

    லோக்பால் அப்படி ஒரு தன்னாட்சி நிறுவனமாக இருக்கலாம் தானே?

    பணச் ச்லவை குறித்து விவரமாக கட்டுரை எழுத் ஆவல். நேரமின்மை. இஸ்லாமிய வங்கியியல் கட்டுரைத் தொடருக்குக் கிடைத்த எதிர்மறை வரவேற்பு இவை கையைப் பின்னால் இழுக்க வைக்கின்றன. :-)

    ReplyDelete
  9. அன்பார்ந்த இரா.முருகன்,
    தங்களது இஸ்லாமிய வங்கித்தொடரைப் பற்றி தற்பொழுதுதான் அறிந்தேன். முதலாம் பகுதி மட்டுமே கிடைக்கிறது. முழுத் தொடருக்குமான சுட்டி தர முடியுமா?

    ReplyDelete
  10. பிரபு: http://www.tamilpaper.net/?cat=273 என்ற இடத்தில் கீழிருந்து மேலாக இரா.முருகனின் இஸ்லாமிய வங்கி பற்றிய அனைத்துப் பகுதிகளும் கிடைக்கும்.

    ReplyDelete
  11. எல்லா சமூகப் போராட்டங்களிலும் கோரிக்கைகள் நெளிய வைப்பது மாதிரி இருப்பது தவிர்க்கமுடியாது. இதெல்லாம் சாத்தியப்படுமா என்று யோசித்தால் கோரிக்கைகளை வைக்க முடியாது. (அதற்காக பொறுப்பற்ற கோரிக்கைகளை முன் வைத்தால் அது blackmailing க்குச் சமம்).போராடுபவர்களின் பலத்தைப் பொறுத்தே நல்ல கோரிக்கைகள் blackmail ஆகவும், blackmails நியாயமான கோரிக்கைகள் ஆகவும் முத்திரை குததப்படுவதுண்டு. ஊழலுக்கு எதிரான அண்ணாவின் போராட்டம் இந்தியப் பிரச்னைகளை ஒரிரவில் தீர்க்காதுதான். ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் போல, மக்களாட்சியின் மீது நம்பிக்கையை வலுவாக்கும். It is a wonderful example to understand how the social activists get into the toughest negotiating table.

    ReplyDelete
  12. தற்போதைய ஜனநாயக முறை மைனாரிடிகள் ஆட்சி (அதாவது 20 % மக்களின் பிரதிநிதி கட்சி ஆட்சி செய்ய ) ஏதுவாக உள்ளது. உண்மை பிரதிநிதி ஜனநாயக முறை வரும் வரை இது போன்ற சிவில் சொசைட்டி தமாஷ்கள் அரங்கேறி வரத்தான் செய்யும்

    அது சரி . காங்கிரஸ் பார்க்காத கமிட்டிகளா?

    ReplyDelete
  13. I would have had faith in the Anna Hazare fast if he had made action on the Shunglu Committee the pivot of his crusade and fast in Delhi, and not made the personally honest Prime Minister the target of his rage. The fact that this very live issue of high level corruption in the capital – which still reverberates in world capitals – did not even occur to him or his associates should be evidence enough of an unspoken agenda and an illegitimate target. It reminds one of Sherlock Holmes’ quintessential query – but why didn’t the dog bark?

    In conclusion, I must say I cannot agree with the main object of Anna Hazare’s fast –to elevate a select coterie as national super cop and super judge, as a national daily put it so aptly.

    I robustly condemn the idea that Magsaysay Award-winning Indians should figure in the Lokpal selection panel. This stinks of an American hand. Without casting aspersions on any individual, it bears stating that the Magsaysay Award is funded by the Rockefeller Foundation, though it is named after late Philippine leader Ramon Magsaysay.

    As the Rockefeller family has vast business interests all over the globe and doubtless also in India, we shall never know what kind of private networking could take place in government and bureaucracy via its favoured persons, to further Rockefeller interests. Recently we saw US insurance corporate-cum-philanthropist Warren Buffet visiting India and Government pushing to raise FDI in insurance from 26% to 51%! Bill and Melinda Gates were also here – peddling vaccines of unknown quality and of course the detestable GM seeds.

    http://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=1716

    ReplyDelete
  14. வேர்ல்டு கப்புக்கும், ஐபிஎல்லுக்கும் நடுவில் இண்டர்வெல்லில் பாப்கார்ன் தின்பது போல் ஹசாரே போராட்டம் டீ.வியில் நடந்துமுடிந்தது சந்தோசமே...நம்ம டைம் பாஸ்.

    அருந்ததி ராய், ஷொகத் குரு, அப்புசல் குரு போன்ற தேச பக்தர்களுக்காக போராடிய பூசன் தந்தை மகன் கூட்டு(க்களவாணி) அணி செய்யும் லொள்ளுகள் தாங்க முடியவில்லை. இவர்களுக்கு என்றைக்கு ஆப்பு விழப்போகிறதோ!

    ராஜதுரை சொல்வது போல் மக்களின் ஏக்கம்/எதிர்பார்ப்புகளுக்கு வடிகாலாக இந்த போராட்டம் அமைந்தது தான் அதன் வெற்றியே. இந்த போராட்டத்தால் ஊழல் ஒன்றும் அழிந்துவிடவில்லையே.

    மக்களுக்கு இந்த ஏக்கம்/எதிர்பார்ப்பை வளர்த்துவிட்டது இந்த காங்கிரஸ் அரசு தான். இது பதவி ஏற்றதிலிருந்து NAC போன்ற சூப்பர் பார்லிமெண்டைப் போட்டு பிரதமைர ரப்பர் ஸ்டாம்பு ஆக்கியதிலிருந்து இப்படிப்பட்ட ஜனநாயக விரோத மனப்பான்மையை விதைத்திருக்கிறது.

    மிடில் கிளாஸ் இண்டர்நெட்டில் புரட்சி செய்யும் மாவோக்கள், சே குவேராக்களுக்கு தாங்களால் குழுவாக வோட்டு போட்டு தங்கள் நலன்களை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை என்ற கையாலாகாத் தனத்தை எண்ணி ஏங்கியதன் விளைவு தான் இந்த ஹசாரே போராட்டத்துக்கு வலைப்பதிவுகளில், ஃபேஸ்புக், ஆர்குட் போன்ற குழுமங்களில் வரவேற்பு கிடைத்தது.


    கடைசியில் நடந்தது என்ன ? ஒரு கமிட்டி. போராட்டம் முடிந்தது. மக்கள் சென்னை சூப்பர் கிங்க்ஸுக்கு கைதட்டப் போயாச்சு. ஊழல் அழிஞ்சுபோச்சு!! இது தானா உங்க காந்தியவழிப் போராட்டம்.

    நமது ஆங்கில மீடியாக்கள் எதையாவது போட்டு புழகாங்கிதம் அடைகிறது என்றால் அதில் இந்திய தேசிய நலன் சுத்தமாக இல்லை என்ற Golden rule மறுபடியும் நிரூபிக்கப்பட்டுள்ளது தவிற இந்த போராட்டத்தால் எந்த நல்ல விசயமும் நடக்கவில்லை.

    ReplyDelete
  15. வஜ்ரா போன்றவர்களின் ஆதங்கம் புரிகின்றது. But the rules and methods of social mobilization are changing. It doesn’t mean that Mao and Che become irrelevant. New methods of mobilization has just emerged and added in the armory

    ReplyDelete
  16. Badri, Can we expect a book on this - from NHM? அண்ணா ஹஸாரே + (ஜன்) லோக்பால் மசோதா- Pros and Cons?

    ReplyDelete
  17. ரெங்கசாமி ஐயா, எனக்கு இருப்பது ஆதங்கம் இல்லை. ஆத்திரம் தான். இடதுசாரி என்று தங்களை வர்ணித்துக்கொள்ளும் மேற்கத்தியக் கைக்கூலிக் கூட்டம் இப்படி வெகுஜன மனநிலைக்கு ஏற்ப போராட்டம் வகுக்கும் போது பிரதான எதிர்கட்சியான பா.ஜ.க என்ன கிழித்துக்கொண்டிருக்கிறது என்பது தான்.

    ReplyDelete
  18. Great article. Appreciate all the corrections(enhancements) made in this.
    A common thought from me.
    Completely erasing corruption in India gives first trouble to a common man; its toughest for a common man to follow all the rules without corruption than making his work to be done by giving 50, 100 extra in RTOs, Traffic Cops, Taluk Offices, Police Stations, Railway stations.

    ReplyDelete
  19. Thoughtful post and several points are valid.

    ReplyDelete
  20. Jan Lokpal titanic is heading in the direction of the Social Justice iceberg

    ReplyDelete
  21. See how this shrinks from #1 http://is.gd/cQcyOv to #2 http://is.gd/uVafJW - given the legislative proposal has been around for decades.

    ReplyDelete
  22. http://allafrica.com/stories/201104180172.html

    இப்பொழுது செக்குலர் செம்மல்கள் கென்யாவை புறக்கணிப்பார்களோ ?

    ReplyDelete
  23. http://www.lokpalbillconsultation.org/

    ReplyDelete
  24. அரசியல்வாதிகல் மக்கலால் தெர்ந்து எடுக்கபடுகிரார்கல், தெர்ந்து எடுத்தபின், மக்கலுகாக முலுமையகவும், உன்மையகவும், நெர்மையகவும், இருப்பது இல்லை, அந்த பதவியில் கிடைகும் லாபமும், லஞ்ச்சமும், அவர்கலை மாட்ரிவிடுகிரது, மேலும் சட்டதில்லுல ஒட்டைகலால் எலிதாக, தப்பிது கொல்கிரார்கல், அண்ணா ஹஸாரே கொண்டு வந்துல்ல ஜன் லோக்பால் மசோதாவால் மட்டுமெ உழல் செய்யும் சமுக விரொதிகல் கொஞமாவது பயந்து நாட்டுகாக உழைபார்கல். உழல் செய்பவவகல் தான் கன்டிபாக இதை எதிர்பார்கல்........

    ReplyDelete
  25. இந்த நாடும், நாடு மக்களும் நாசமாய் போகட்டும் !!!

    ReplyDelete