Monday, October 03, 2011

வீடு மாற்றம்

சென்னையின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு வீடு மாற்றியுள்ளேன். புது இடம் பழைய இடத்தைவிடத் திருப்தியாக உள்ளது. பல காரணங்களுக்காக.

பழைய இடத்தில் நம்மைத் தேடி எந்தக் கடைக்காரரும் வரமாட்டார். நாம்தான் தேடித் தேடிச் சென்று வேலைகளைச் செய்துகொள்ளவேண்டும். இங்கு வந்து சேர்ந்த முதல் நாளுக்குள் பால் வாங்கித்தரும் அம்மாவும் பேப்பர்காரரும் வந்து விவரங்கள் பேசிக்கொண்டு உடனடியாகச் சேவையை ஆரம்பித்துவிட்டனர். இது என்ன பெரிய விஷயம்; எல்லா இடங்களிலும் இப்படித்தான் நடக்கும் என்று விட்டுவிட்டேன். அடுத்து சுத்திகரிக்கப்ட்ட குடிநீர். அடுத்து அரிசிக்காரர். என்ன மாதிரியான அரிசி, எத்தனை கிலோ என்று கேட்டுவிட்டு, அடுத்த நாள் காலை அனுப்புவதாகச் சொல்லிச் சென்றார். வீடு கூட்டிப் பெருக்கித் துடைக்க உடனடியாக ஒருவர் கிடைத்தார். சுற்றி காய்கறிக் கடை எங்கே, சூப்பர்மார்க்கெட் எங்கே, மருந்துக்கடை எங்கே, அவசரம் என்றால் டாக்டர் எங்கே உள்ளார் என்று ஒரு நடை நடந்துவிட்டு வந்ததில் எல்லோருமே பத்து நிமிட நடைக்குள்ளாக உள்ளனர். அதே இடத்துக்குள்ளாக ஹார்ட்வேர் கடை, ஸ்டேஷனரி கடை, இட்லிக் கடை எல்லாம்.

நடக்கவேண்டிய வேலைகள் - கார்பொரேட் சமாசாரங்களான ஏர்டெல் இணைப்பு மாற்றம், எஸ்.சி.வி கேபிள் கனெக்‌ஷன் ஆகியவை மட்டுமே. புறவேலைகளைவிட வீட்டுக்குள் நடக்கவேண்டிய வேலைகள்தான் பாக்கி.

பத்து நிமிட நடையில் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள்கூட ஒரு சூப்பர்மார்க்கெட்டில் கிடைக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

9 comments:

  1. எந்த இடம் ?

    சென்னை தானா ?

    ReplyDelete
  2. இதிலிருந்து நாம் அறிய வேண்டியதுயாதேனில் 2016ல் பத்ரி சேஷாத்ரி தேர்தலில் நிற்பது உறுதியாகிவிட்டது:)

    ReplyDelete
  3. ராமதுரை எழுதியது
    வீட்டைக் கட்டிப் பார் என்று ஒரு பழமொழி உண்டு. புதிதாக வீடு கட்டுவதில் எவ்வளவோ பிரச்சினைகள் உண்டு என்பது அதன் பொருள்.வீட்டை மாற்றிப் பார் என்று நாம் புது மொழியையும் சேர்த்துக் கொள்ளலாம்.தவிர, வீடுகள் விஷயத்தில் ராசி என்பதும் உண்டு. சிலருக்கு இதில் நல்ல ராசி உண்டு.எந்த ஏரியாவில் எந்த வீட்டுக்கும் மாறினாலும் எல்லாம் அனுகூலமாகவே இருக்கும்.வீடு விஷயத்தில் ராசி இருந்தால் நமது அன்றாட வாழ்க்கையில் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்து விடும். நான் பிரும்மச்சார்ரியாக இருந்த காலத்திலிருந்து எனக்கு வீடு விஷயத்தில் நல்ல ராசி.அடிக்கடி வீடு மாறுபவர்களுக்கு மற்ற எல்லாப் பிரச்சினைகளைக் காட்டிலும் அட்ரஸ் மாற்றம்தான் பெரிய பிரச்சினை.
    ராமதுரை

    ReplyDelete
  4. சென்னைதான். கிண்டி. வண்டிக்காரன் தெரு.

    ReplyDelete
  5. நாங்கள் 2 மாதத்துக்கு முன் வீடு மாறினோம். ஏரியாவில் எல்லாம் இருக்கிறது - ஏடிஎம் தவிர.

    சரவணன்

    ReplyDelete
  6. பத்ரி,

    இது உங்களுக்கு தெரியுமா?

    www.dinamani.com
    26 Feb 2010 12:28:41 AM IST

    Last Updated :

    திருவள்ளூர், பிப். 25: திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட வண்டிக்காரன் தெருவில் 20 நாள்களாக நடைபெற்ற புதை சாக்கடையை மறைத்து அதன் மேல் நகராட்சி நிர்வாகம் சார்பில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் புதை சாக்கடை எங்கே என திருவள்ளூர் நகர மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    ÷திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளுக்கும் சேர்த்து ரூ.35 கோடி செலவில் புதை சாக்கடை திட்டப் பணிகள் 2009-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் பல பகுதியில் புதை சாக்கடைப் பணிகள் முடிந்து விட்ட நிலையிலும் அப்பணியை மேற்கொண்டு வரும் குடிநீர் வடிகால் வாரியத்தினர். அப்பகுதிகளை முறையாக பள்ளம் மூடாமலும், வீடுகளின் இணைப்புக்கு குழாய்களை புதைக்காமலும் விட்டுள்ளனர்.

    ÷இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் திருவள்ளூர் பஸ் நிலையம் அருகில் உள்ள வண்டிக்காரன் தெருவில் புதை சாக்கடைப் பணி தொடங்கப்பட்டு கடந்த வாரம் வரை பள்ளங்கள் மூடப்படாமல் விடப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் வசித்து வந்த மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் திடீரென இரவு நேரத்தில் வண்டிக்காரன் தெருவில் நகராட்சி நிர்வாகம் சார்பில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.

    ÷நகராட்சி முழுவதும் பல பகுதிகளில் பணி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்று வரை நடக்க கூட முடியாத அளவுக்கு பள்ளங்கள் மூடப்படாமல் உள்ள நிலையில் பல இடங்கள் உள்ளன.

    இந்நிலையில் சில மாதங்களாக புதை சாக்கடைப் பணி நடைபெறுகிறது என பலகை வைத்து நன்றாக இருந்த சிமென்ட் சாலையை தோண்டி புதை சாக்கடைப் பணியை தொடங்கி அது முழுமைப் பெறாத நிலையில் திடீரென சிமென்ட் சாலை போடப்பட்டது அப்பகுதி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ÷புதை சாக்கடையை திறந்து சுத்தம் செய்யும் மேன் ஹோல் எனப்படும் திறப்பு வட்டம் கூட வெளியில் தெரியாத வகையில் உயரமாக போடப்பட்ட சிமென்ட் சாலையால் மக்கள் புதை சாக்கடை எங்கே என்ற குழப்பத்தில் உள்ளனர்.

    ÷இது குறித்து நகராட்சி ஆணையர் முத்துராமேஸ்வரனை கேட்டபோது, புதை சாக்கடைத் திட்டம் முடிவடைந்த பகுதிகள் குறித்து குடிநீர் வடிகால் வாரியத்தினரிடம் பட்டிய கேட்டு அதன் படி மீண்டும் நகராட்சி முழுவதும் சாலைகளை சீரமைக்க உள்ளோம்.

    முதல் கட்டமாக எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் செலவில் வண்டிக்காரன் தெருவில் சாலை அமைத்துள்ளோம்.

    ÷அதில் சாக்கடையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் திறப்பு வட்டம் குறிந்து அந்த தெருவில் உள்ள சுவர்களில் எண்கள் மூலம் அடையாளம் வைத்துள்ளோம். மேலும் மேன் ஹோலின் மீது அடையாளத்துக்காக இரண்டு செங்கல்லை வைத்து சிமென்ட் சாலை அமைத்துள்ளோம். அதை வைத்து பிற்காலத்தில் வரும் அதிகாரிகள் மேன் ஹோலை தெரிந்துக் கொள்வர். ஆகையால் மீண்டும் சிமென்ட் சாலையை தோண்ட வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

    ÷ நெடுஞ்சாலைத் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நேதாஜி சாலை, மோதிலால் தெரு ஆகிய தெருக்களில் புதை சாக்கடைப் பணி தொடங்கப்பட உள்ள நிலையில் தற்போது நெடுஞ்சாலைத் துறையினரால் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளதும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

    குமார்

    ReplyDelete