Friday, November 18, 2011

கல்வி உரிமை என்ற பெயரால் - 1

நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘நேர்படப் பேசு’ நிகழ்ச்சியில் Right To Education சட்டத்தின் விதிகளை தமிழக அரசு, அரசிதழில் (கெஜட்) வெளியிட்டது தொடர்பான ஒரு விவாதம் நடைபெற்றது. பிரின்ஸ் கஜேந்திரபாபு, கருணாகரன், விஜயன் ஆகியோர் பங்குபெற்றனர். இதில் பிரின்ஸ் கஜேந்திரபாபு ‘கல்வி ஆலோசகர்’ என்ற பெயரில் அறியப்படுபவர். பொதுவாக இவர் பங்கெடுத்துள்ள அனைத்துத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிரான ஒரு நிலையை எடுப்பவர். கருணாகரன் - எனக்குப் பரிச்சயம் இல்லாதவர். இடதுசாரிப் பார்வை கொண்டவராகத் தெரிந்தார். விஜயன் என்பவர் தனியார் பள்ளிகளின் ஏதோ ஓர் அமைப்பின் நிர்வாகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். எனவே இவரே ஒரு தனியார் பள்ளியை நடத்துபவர் என்று நினைக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியைப் பற்றிய விமரிசனம் என்பதைக் காட்டிலும் இந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு சில விஷயங்களை ஆராய முற்படுகிறேன்.

அதற்குமுன், இந்தச் சட்டம் மக்களுக்கு என்ன உரிமையைத் தர முற்படுகிறது என்று மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்.

இந்தச் சட்டம் தனியார் பள்ளிக்கூடங்களைக் கட்டுப்படுத்துகிறது. மக்களுக்கு, குறிப்பாக, ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சில உரிமைகளைக் கொடுக்கிறது. இனிமேல் தனியார் பள்ளிகள், ஒன்றாம் வகுப்பில் தாம் உள்ளே எடுத்துக்கொள்ளும் எண்ணிக்கையில் 25%-ஐ ஒதுக்கீடு செய்யவேண்டும். இந்த 25% இடங்களில் அந்தப் பள்ளியின் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏழை/பிற்படுத்தப்பட்ட மக்கள் லாட்டரி முறையில் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும். ஒவ்வொரு தனியார் பள்ளியும் கட்டாயமாக இதனைச் செய்தாகவேண்டும். அத்துடன் ஒவ்வொரு தனியார் பள்ளியும் தம் உள்கட்டுமானத்தை ஒரு குறிப்பிட்ட தரத்துக்கு உயர்த்தவேண்டும். அப்பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் குறைந்தபட்சம் ஆசிரியப் பயிற்சிச் சான்றிதழ், பி.எட் அல்லது இணையான படிப்பைப் படித்திருக்கவேண்டும். அத்துடன் CTET அல்லது TNTET போன்ற மத்திய/மாநில தகுதித் தேர்வு ஒன்றை எழுதி 50%-க்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றுத் தேறியிருக்கவேண்டும்.

இதுதான் சாரம் என்று வைத்துக்கொள்வோம். இதற்குமேல், தமிழக அரசின் சட்டங்களான சமச்சீர் கல்விச் சட்டம், கட்டண நிர்ணயச் சட்டம் போன்றவையும் பொருந்தும்.

எந்தப் பள்ளியைத் தேர்ந்தெடுப்பது என்ற உரிமை மாணவருக்கு (எனவே பெற்றோருக்கு) உண்டு. குலுக்கலில் அவர் பெயர் பதிவாகிவிடும். ஒரு பள்ளி ஒதுக்கியுள்ள இடங்கள் 10 என்றால், 10-க்கும் மேற்பட்டோர் இந்தக் குலுக்கல் முறையில் அந்தப் பள்ளியில் சேர விருப்பம் தெரிவித்திருந்தால், குலுக்கலில் முதலில் வரும் 10 பேர்கள் மட்டுமே அந்தப் பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள். மீதிப் பேர் வழக்கம்போல காசு கொடுத்துத் தனியார் பள்ளிகளில் அல்லது காசு கொடுக்காமல் அரசுப் பள்ளியில் சேரவேண்டியதுதான்.

(தொடரும்)

1 comment:

  1. /// விஜயன் என்பவர் தனியார் பள்ளிகளின் ஏதோ ஓர் அமைப்பின் நிர்வாகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். எனவே இவரே ஒரு தனியார் பள்ளியை நடத்துபவர் என்று நினைக்கிறேன்.///

    N. Vijayan is a powerful personality in Matriculation Schools' Assn. He is the principal & correspondent of Zion School Tambaram (Selaiyur). If you have any idea of entering school textbooks market, you have to be in his good books!

    ReplyDelete