Tuesday, November 01, 2011

ரங்கநாதன் தெரு கடைகளுக்கு சீல்

சென்னை, ரங்கநாதன் தெருவில் முறையற்றதாகப் பல கடைகள் இயங்கிவருகின்றன. தெரிந்தே வரம்புகளைமீறி, அதிக மாடிகள் கொண்ட கட்டடங்களைக் கட்டுவது, போவோர் வருவோருக்கான பாதையை மறித்து பொருள்களை ஏற்றி இறக்கும் வண்டிகளைக் கொண்டுவருவது, வாகன நிறுத்தங்களைச் செய்துதராது இருப்பது, தீக்கு எதிரான பாதுகாப்பு ஏதும் இல்லாதது, நெரிசல்-தள்ளுமுள்ளு (ஸ்டாம்பீட்) பிரச்னைகளிலிருந்து மக்களைக் காக்க வழிமுறைகளைச் செய்யாதிருப்பது என்று பல முறைகேடுகள்.

அவ்வப்போது சென்னை பெருநகரக் குழுமம் சீல் வைக்கிறேன் என்பார்கள். பெட்டிகள் கைமாறியோ, கோர்ட்டுக்குப் போயோ அந்தக் கெடு நகர்த்தப்படும். இப்போது சீல் வைத்திருக்கிறார்கள் கடைகளுக்கு. 25 கடைகள் என்கிறது ரிப்போர்ட்.

அந்தக் கடைகளில் வேலை செய்வோருக்கு அடுத்த மாதம் சம்பளம் கிடைக்குமா கிடைக்காதா என்பதை முன்வைக்கிறது ஹிந்து பத்திரிகையில் ஒரு கட்டுரை. இந்தமாதிரி இரக்கத்தைத் தூண்டும் விதமாகவா, திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யலில் கலப்பது தொடர்பான செய்தி எழுதப்படுகிறது? குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைக்கும் இடங்களில் இதேமாதிரியான இரக்கம் எடுபடுமா? ஐயோ பாவம் குழந்தைகள், இங்கு கிடைக்கும் பணம்கூட இல்லாமல் அவர்கள் பிச்சை எடுக்கத்தான் போகவேண்டியிருக்கும் என்று சொல்கிறோமா?

இப்படி எங்கெல்லாம் முறைகேடாக நிறுவனங்கள் இயங்குகின்றனவோ, அங்கெல்லாம் ஏழைகள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற முதல்வர்தான் தலையிடவேண்டும் என்ற கூப்பாடு எழுகிறது. இம்மாதிரியான அபத்தமான வேண்டுகோள்களுக்குத் தலைசாய்க்காமல், மிகவும் கடுமையுடனும் கண்டிப்புடனும் இவர்களிடம் நடந்துகொள்ளவேண்டும்.

சட்டம் என்றால் கிள்ளுக்கீரை என்று நடந்துகொள்கிறார்கள் இவர்கள். இவர்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கப்படவேண்டும். அப்படி நடக்குமா என்பதில் எனக்கும் பிறரைப்போலவே சந்தேகம் உள்ளது. ஏதோ சில பேட்ச் அப் நடந்து, விதவிதமான செட்டில்மெண்ட் முடிந்து, மீண்டும் பழையபடி ஜாம் ஜாம் என்று பிசினஸ் நடக்கும் என்று அனைவரும் பேசிக்கொள்கிறார்கள். இம்முறையும் அப்படியே நடந்தால் அது மிகவும் சோகமான ஒன்றாக இருக்கும்.

10 comments:

  1. Yes, that is what is expected. I live very near to this place and the reality is quite far.
    Surya

    ReplyDelete
  2. ஒரு நிறுவனத்தில் 100 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என்றால் அந்த நிறுவனத்தின் அடுக்கு மாடிக் கட்டடத்தில் அவர்கள் தங்குவதற்கென்றே இரண்டு மாடிகள் இருக்கும்.இப்படி இட் வசதி செய்து கொடுப்பதுடன் சாப்பாடும் போடப்படும். கையில் சம்பளம் என்ற பெயரில் ஏதோ கொடுப்பார்கள்.உண்மையில் இது கொத்தடிமை முறையாகும்.சென்னையில் இவ்வித ஏற்பாடு 40 ஆண்டுகளுக்கு முன்ன்ரே இருந்துள்ளது.
    இப்போது சீலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் இப்படியான முறை இருந்ததா என்பது தெரியாது. அப்படி இருந்திருக்குமானால அத் தொழிலாளர்கள் நிலைமை பரிதாபத்துக்குரிய்தே. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கூட திண்டாட வேண்டியது தான்.
    தி. நகரில் விதி மீறலகள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருவதாகும்.

    ReplyDelete
  3. சீல் வைக்காத கடைகளும் ஒன்ரும் உத்தமர்கல் இல்லை. நல்லி100,போத்தீஸ் கடைகளின் 6 மாடிகளிலும் ஒரு ஜன்னல் கூட கிடையாது. விபத்து எதாவது நடக்கும்போது உள்ளே கடவுள் இருந்தால் கூட தப்பிக்க முடியாது. சம்பளம் பற்றி பேசி தொழிலாளிகளின் போர்வையில் தப்பிக்க முறசிக்கும் இந்த முதலாளிகளுக்கு உதவும் பெரிய பத்திரிகைகள் செய்யும் உதவிகள் வரமபுமீறல் களைவிட பெரிய அக்கிரமம் முன்னாள் தீயணைப்பு படை தலவர் நடராஜன் தந்த ரிபோர்ட்டை இது வரை ஒரு தினசரி கூடவெளியிடவில்லை.
    ரமணன்

    ReplyDelete
  4. சரவாணா ஸ்ஸ்டோர்ஸில்டாய்லெட் என்பது ஒரு அழுக்கு நாலு சுவர் அறை. நடு ரோடில் சிறுநீர் கழிப்பது மாதிரிதன்!. ஒரு closet கூட கிடயாது. மறைவும் கிடையாது. அதுவும் 5-வது மாடியில் தான்.
    -மணி

    ReplyDelete
  5. உயிரையே பணயம் வைத்து ஊசி வாங்கப்போகும் அப்பாவிகள்!

    விற்பனை வரி இல்லாமல் விற்கப்படும் பொருட்களை வாங்க போட்டியிடும் தேசப்பற்று மிக்க நுகர்வோர்கள்!!

    அரசு/சட்டம் என் **** த்துக்கு சமம் என தன்னிச்சை போல செயல்படும் வியாபாரிகள்!!!

    எவ்வளவு விதி மீறலுக்கு,எவ்வளவு வாங்கலாம் என கணக்குபோடும் நேர்மையான அரசு அதிகாரிகள்!!!

    அனாவசியமாக கேள்வி எழுப்பும் நீதிமன்றங்களின் வாயை அடைக்க அவசர சட்டம் கொண்டு வரும் அதைவிட நேர்மையான முதல் அமைச்சர்கள்.!!!

    இவர்கள் கூடி தேர் இழுக்கும்வரை வரை ரங்கநாதன் தெருவில் இன்னொரு WTC tower கட்டப்பட்டால் கூட ஆச்சரியம் இல்லை!

    பொறுத்துக்கொள்ளுங்கள்.இந்த நாடகம் ஓரிரு நாட்களில் முடிந்து விடும்.அப்புறம் ஜாலியாக shopping செல்லலாம்!!

    ReplyDelete
  6. //ஏதோ சில பேட்ச் அப் நடந்து, விதவிதமான செட்டில்மெண்ட் முடிந்து, மீண்டும் பழையபடி ஜாம் ஜாம் என்று பிசினஸ் நடக்கும் என்று அனைவரும் பேசிக்கொள்கிறார்கள். இம்முறையும் அப்படியே நடந்தால் அது மிகவும் சோகமான ஒன்றாக இருக்கும்.//

    சந்தேகமில்லாமல் அப்படித்தான் நடக்கும். அது சோகமான ஒன்றாக...

    என் ஆசிரியர்களில் ஒருவர் (திரு.ஜனார்த்தனன்) எனக்குச் சொன்னார்: இறந்தது அம்மாவே என்றாலும் ஆறு மாசமோ ஒரு வருசமோ கழித்து நாம் அழப் போவதில்லை. அதனால் இன்றைக்கு ஏன் அழவேண்டும் என்று, அம்மா இறந்த அன்றைக்கும், அழமாட்டார்கள் ஞானிகள்.

    அப்படி, சோகமில்லாமல் இருப்பதே நல்லது.

    ReplyDelete
  7. அடிக்கடி இந்த மாதிரி டிராமாக்கள் அரங்கேறுகின்றன.

    ReplyDelete
  8. இது வெற்றிகரமாக நடந்தால் அடுத்தது, வீடுகளா? அப்படி போனால் சென்னை தெருக்களில் ஒன்றிரண்டு வீடுகள் மிஞ்சினால் அதிசியம் தான். சில வாரங்களுக்கு முன்பு பார்த்த நடிகர் அர்ஜூன் தோட்டம் உள்ள பகுதியில் கட்டப்பட்ட குடியேற தயாராக இருக்கும் வீடுகளுக்கு இடையே உள்ள இடைவெளி வெறும் 1 அடி தான்.காற்று/வெளிச்சம் வருமா என்று தெரியவில்லை இதற்கு எப்படி அனுமதி கிடைத்திருக்கும் என்றும் புரியவில்லை.

    ReplyDelete
  9. Badri Sir,i want to mention one point that, a common man is generally very jealous about the section of people those are earning good,ie govt employees,business people irrespective of their business,IT peoples.these reasons also contributes to the great extent for this issue.

    ReplyDelete
  10. அங்காடித் தெரு படம் பார்த்தவர்களுக்குப் புரியும். தொழிலாளர்களின் வேதனை எப்படிப்பட்டதென்று. முதலாளிகளுக்கு ஆதரவாக எழுதும் பத்திரிக்கைகள் தொழிலாளிகளை முன்வைத்து இரக்கப்பட வேண்டாம்.

    ReplyDelete