Saturday, December 10, 2011

கருப்பாயி என்கிற நூர்ஜஹான்

அன்வர் பாலசிங்கம் எழுதி கலங்கைப் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தக் கதையை நேற்று இரவு படித்து முடித்தேன். சிறிய புத்தகம். தொண்ணூற்றி சொச்சம் பக்கங்கள்.

கதை எழுதும் வடிவம் அவருக்குச் சிக்கவில்லை. மொழிக்குழப்பம், நீண்ட, தேவையில்லாத வசனங்கள் பல இடங்களில். இந்தச் சின்னப் புத்தகத்திலுமே அலுப்பூட்டக்கூடியமாதிரி மீண்டும் மீண்டும் வரும் பேட்டர்ன்.

எனவே அதில் உள்ள கருத்தை மட்டும் எடுத்துப் பார்ப்போம். கதை ஒரு முக்கியமான சமூக நிகழ்வை முன்வைத்து அதற்குத் தீர்வு கிடைக்குமா என்ற கேள்வியை கேட்கிறது.

1981-ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டைக்கு அருகில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில், தேவர் சாதியினரின் அடக்குமுறையைத் தொடர்ந்து எதிர்கொண்டுவந்த பல பள்ளர் குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்துக்கு மாறின. அதைத்தான் கதைக்களனாக எடுத்துக்கொண்டுள்ளார் ஆசிரியர். அவருமே அப்படி மதம் மாறி அந்தச் சமூகத்தில் வாழும் ஒருவரோ என்று நினைக்கிறேன். அப்படித்தான் என்றோ, இல்லை என்றோ புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

கதையில் மீனாட்சிபுரம், காமாட்சிபுரம் என்ற பெயரில் வருகிறது.

இஸ்லாத்துக்கு மதம் மாறியபிறகும் சாதிப் பிரிவினை அப்படியே உள்ளது என்றும், “நவ் முஸ்லிம்கள்” என்ற பெயரில் அவர்கள் விலக்கிவைக்கப்படுகிறார்கள் என்றும் 40 வயதைக் கடந்தபின்னும் அவர்களுடைய பெண்களுக்குத் திருமணம் ஆவதில்லை, ஏனெனில் அவர்களைப் பெண்ணெடுக்க அருகில் உள்ள கிராமங்களிலிருந்து பிற ஆண் முஸ்லிம்கள் வருவதில்லை என்றும், இதன் காரணமாக ஏற்படும் நெருக்கடியில் சில வயதான, திருமணமாகாத பெண்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்றும் ஒரு பிரச்னையைக் கதை முன்வைக்கிறது.

மதம் மாற பள்ளர்கள் முடிவெடுத்ததும் ஓடிவந்து அவர்களை வரவேற்று உதவிய மைய நீரோட்ட முஸ்லிம் சமூகம், மற்றபடி அவர்களுடன் கொண்டுகொடுத்து உறவு வைத்துக்கொள்வதில்லை என்றும் இரட்டைக் குவளைமுறை அவர்களுக்கு எதிராக பிற முஸ்லிம்களாலேயே கைகொள்ளப்படுகிறது என்றும், அத்துட்ன ‘பிரியாணிக்காக மதம் மாறினார்கள்’ என்ற இழிச்சொல்லும் வேறு இந்துக்களிடமிருந்து வருகிறது என்றும் ஆசிரியர் சொல்கிறார். அப்படி இருக்கும்போது மதம் மாறுவதன் அர்த்தம் என்ன? Between a rock and a hard place என்பார்களே, அதுபோன்ற நிலைமை இவர்களுக்கு. கிராமச் சமூகத்தில் ஆதிக்க இந்துச் சாதிகளால் துன்பம். இதெல்லாம் போய்விடும் என்று மதம் மாறினாலோ, உள்ளதும் போச்சுடா என்ற நிலைமை. ஒரு பக்கம், பெற்றுவந்த இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளும் கிடையாது. கட்டிக்கொள்ளப் பையன்கள் கிடைக்கமாட்டார்கள். பிற “பாரம்பரிய” முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்படாத சூழல். இழிசாதி என்ற பட்டப்பெயருடன், இப்போது பிரியாணிக்கு மதம் மாறினவன் என்ற இழிசொல்லும் சேர்ந்துகொள்கிறது. இத்துடன் ரகசிய போலீஸ் வேறு வந்து, சவூதி அரேபியா போனாயா, யார் உன்னை அங்கே அழைத்தது, யார் இந்த ட்ரிப்புக்கு ஃபைனான்ஸ், அங்கே என்ன செய்தாய் என்று ‘தீவிரவாதியோ?’ என்ற சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது.

40 வயதாகியும் மணம் ஆகவில்லையே என்பதைவிட அதனால் தன் தந்தை தினம் தினம் மனமுடைந்து சாகிறாரே என்ற வருத்தத்தால் உயிர் மாய்த்துக்கொண்ட கருப்பாயியாக இருந்து நூர்ஜஹானாக மாறிய பெண் எழுதிவைக்கும் நீண்ட தற்கொலைக் கடிதத்திலிருந்து தொடங்கும் கதை, இறுதி வரியில், அந்த மக்கள் தாம் மாறிய முஸ்லிம் சமுதாயத்திலேயே தொடர்ந்து இருப்பார்களா அல்லது மீண்டும் மதத்தை மாற்றிக்கொள்ளப்போகிறார்களா என்ற சந்தேகத்துடன் முடிக்கிறது.
“எ ...மம்முது பள்ளிக்கு வாரியாத்தா என்று சொன்னதும் மொத்த ஜமாத்தும் அவரைப் பின் தொடர்ந்ததா? இல்லை அங்கேயே நின்றுவிட்டதா?”
இந்தக் கதை கேட்கும் கேள்விகள் ஏராளம். தென் தமிழ்நாட்டின் கிராமங்களில் இன்றும் தொடரும் சாதிய அடக்குமுறை. முக்கியமாக தேவர் - பள்ளர் சிக்கல். அதிலிருந்து வெளியேற முடியாத இறுக்கமான சூழல். மதமாற்றம் ஒரு தீர்வாக முன்வைக்கப்படுதல். ஆனால் அது தீர்வே அல்ல என்பது முப்பதாண்டுகளுக்குப் பின்னர்தான் கண்டுபிடிக்கப்படுதல். இப்போது என்னதான் செய்வது?

என்னதான் செய்வது?

***

கருப்பாயி என்கிற நூர்ஜஹான்: நாவல், அன்வர் பாலசிங்கம், கலங்கைப் பதிப்பகம்-யாதுமாகிப் பதிப்பகம், செங்கோட்டை, திருநெல்வேலி.
புதுக் காலணித் தெரு, கலங்காத கண்டி, பூலான்குடியிருப்பு அஞ்சல், செங்கோட்டை தாலுகா, திருநெல்வேலி 627813, தொலைபேசி எண்கள் 94458-01247, 97914-98999, பக்கங்கள் 102, விலை ரூ. 100.

15 comments:

  1. It is true that there are divisions among muslims particularly in north india.there are three major categories although they are not like castes.for example a surname ansari indicates that (s)he is from a 'upper caste' muslim family.
    muslim dalits does it sound odd or impossible.do a google or read articles by yoginder sikand and others to know how fragmented muslim society is.twocircles.net has some articles on this.but dont expect your maruthans and other lefties to talk about this.

    in fact in other south asian countries too discrimination on lines similar to castes persists.these are well known facts to anyone who has cared to know about the society and polity in south asia.just because these are not discussed in tamil that does not mean they dont exist. but the fact is how many of those who write in tamil on anything and everything ever bothered to acquire knowledge that would be available by taking 101 course, on what they write.

    ReplyDelete
  2. சாதிய அடக்குமுறை என்பது பல நூறு ஆண்டு பாரம்பரியம் கொண்டது.. முப்பது ஆண்டுகளில் அதற்கான தீர்வின் பலனை அனுபவித்துவிட முடியுமா?

    ReplyDelete
  3. /// என்னதான் செய்வது? ///

    முதலில், மதம் மாறியவர்களுக்கும் இட ஒதுக்கீடு தொடரும் என சட்டத்திருத்தம் கொண்டுவரவாம். மதம் மாறினாலும் அவர்கள் வாழ்நிலை மாறிவிடவில்லை என்று தெளிவாகத் தெரிவதால் இதுவே நியாயமாக இருக்கும்.

    சரவணன்

    ReplyDelete
  4. கோவத்தால் மதம் மாற கூடாது.முதலாளித்துவ கொள்கையின்படி highest bidder /negotiated benefits பின் சென்றால் இந்த குழப்பம் இல்லை.மதத்தால் வரும் பிரயோசனங்கள் என்ன என்று பார்த்து மாறினால் நன்மை தான்.அதுவும் பெரிய அளவில் நடக்க வேண்டும்.
    பிரிவினையின் போது பாகிஸ்தானில் விடப்பட்ட ஹிந்துக்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவர்கள் தான்.அவர்களில் பெரும்பான்மையோனோர் இஸ்லாத்திற்கு மாறி அங்கு வாழ்ந்து வருகின்றனர்.அங்கு இந்த பிரட்சினைகள் கிடையாது.இங்கு கிறுத்துவராக மாறிய தலித்துகள் பெண்/மாப்பிள்ளை கிடைக்காமல் கஷ்டபடுவது கிடையாது.மகாராஷ்ட்ரத்தில் இருந்தால் புத்த மதத்திற்கு மாற வேண்டும்,வட கிழக்கு,தென் மாநிலங்களில் கிருத்துவத்திற்கு மாறினால் பலன்கள் அதிகம்.மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ள சாதிகளில் கூட இந்த பிரச்சினை உண்டு.
    கிறுத்துவராக மாறிய தலித்,தேவர்,வன்னியர்,நாடார்,பரதவர் போன்றோர் அதே சாதியை சார்ந்த ஹிந்து குடும்பங்களில் பெண் எடுப்பதும்,கொடுப்பதும் சாதரணமாக நடைபெறும் விஷயங்கள்.
    திடீரென்று பார்சியாக(குறைவாக உள்ள குழுவுக்கு) மதம் மாறினால் எங்கே பெண்/மாப்பிள்ளை கிடைக்கும். ஒரு தலைமுறைக்கு முன் மாறியவர்/படித்தவர்/பணக்காரராய் ஆனவர், இப்போது மாறியவரை விட உயர்ந்தவர் என்ற நினைப்பு எல்லா குழுக்களிடமும் உண்டு.
    ஆங்கிலோ இந்தியர்கள் ஆண்,பெண் கிடைக்காமல் கச்டபடுவதில்லை.அவர்களில் காதல் திருமணங்களுக்கு எதிர்ப்பு இல்லை.நன்கு படித்த,நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு பெண் கிடைப்பதில் கஷ்டம் கிடையாது.படிப்பு,வேலை இல்லை என்றால் இன்று எல்லா சமூகங்களிலும் இந்த பிரச்சினை உள்ளது.

    ReplyDelete
  5. //முதலில், மதம் மாறியவர்களுக்கும் இட ஒதுக்கீடு தொடரும் என சட்டத்திருத்தம் கொண்டுவரவாம். மதம் மாறினாலும் அவர்கள் வாழ்நிலை மாறிவிடவில்லை என்று தெளிவாகத் தெரிவதால் இதுவே நியாயமாக இருக்கும்.//

    எப்படி.. தொடர்ந்து அடக்குமுறையை அவிழ்த்துவிட்டு வரும் தேவர்களுக்கும் சேர்த்து மதம்மாறிகளுக்கும் தருவதா நியாயம்?

    ஒடுக்கப்பட்டோருக்கு இடஒதுக்கீடு என்பதினால் 60 வருடத்தில் என்ன சாதித்துவிட்டோம்? ஒடுக்கப்பட்ட சாதியினர் சிலர் பொருளாதாரத்தில் முன்னோறிவிட்டனர். ஆனால் சாதி அமைப்பு இன்னமும் இறுக்கமாகிவிட்டது. இட ஒதுக்கீட்டு அடிப்படையில் இன்னொரு வளர்ச்சி திட்டமா அல்லது சாதி ஒழிப்பு முயற்சியா? சாதி ஒழிப்பு எனில் அது படுதோல்விதான்!

    ReplyDelete
  6. இன் இழிவு தீர இஸ்லாமே வழி என்று பெரியார் சொன்னதாக பிரச்சாரம் செய்யும் அ.மார்க்ஸ்,தலித்முரசு போன்றவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் அவர் அப்படியெல்லாம் எதுவும் இல்லை,மதம் மாறியவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று பேசுவார்கள் அல்லது இப்படி ஒரு புத்தகம் வந்ததே தெரியாது, தெரிந்தாலும் அது இந்த்துவ சதி என்று சொல்வார்கள்.இந்து மத விரோதிகளான மருதன்,முத்துகிருஷ்ணன் போன்றவர்களும்,பெரியார் தி.கவினரும் இப்படியெல்லாம் இருக்கிறது என்பதை பொருட்படுத்தாமல் இந்து விரோத பிரச்சாரம் செய்வார்கள்.

    ReplyDelete
  7. //கிறுத்துவராக மாறிய தலித்,தேவர்,வன்னியர்,நாடார்,பரதவர் போன்றோர் அதே சாதியை சார்ந்த ஹிந்து குடும்பங்களில் பெண் எடுப்பதும்,கொடுப்பதும் சாதரணமாக நடைபெறும் விஷயங்கள்.//

    கிருத்துவ மதத்திற்கு மாறினால் பெண்/மாப்பிள்ளை கிடைக்கிறது என்பது சரிதான். ஆனால் அப்போதும் சாதி அடிப்படையிலேதான் பெண் கிடைக்கும், 'தாழ்ந்த' சாதி பெண்ணை(அல்லது ஆணை) காதல் செய்யக்கூடாது என்றெல்லாம் இருக்கும்போது மதம் மாறுவதால் என்ன பயன்? சாதி ஒழிய மதம் மாறுங்கள் என்பதெல்லாம் வெறும் பேச்சுதானே? வட மாநிங்களில் முஸ்லிம்களிடையேயும் சாதி அடக்குமுறை உண்டு.

    ReplyDelete
  8. அட பரவால்லையே, சாதின்னு பிரச்சனை பத்தி பேச தொடங்கினாலே பிராமணியம், பார்பனியம்னு தானே தொடங்குவாங்க, மத்த மதத்துகாரனை பத்தியும் தைரியமா எழுதறாங்களே.

    ReplyDelete
  9. முகம்மது அலிThu Dec 15, 07:11:00 PM GMT+5:30

    தமிழ்நாட்டில் இருக்கும் முஸ்லீம்கள் வடக்கிந்திய முஸ்லீம் குடும்பங்களை போலவே தீவிர ஜாதி பற்றாளர்கள். தங்கள் ஜாதிக்குள் மட்டுமே திருமணம் புரிவார்கள். சையதுகள் சைய்துகளை மட்டுமே மணம் புரிய வேண்டும் என்பது இஸ்லாமிய விதி. இது காஃப்ஃபா என்ற விதிமுறையில் வரும். மரைக்காயர்கள் ராவுத்தர்கள் லெப்பைகள் மட்டுமே தங்களுக்குள் மணம் புரிந்துகொள்கிறார்கள். உருது பேசும் தமிழ் முஸ்லீம் உருது பேசும் தமிழ் முஸ்லீமைத்தான் மணந்துகொள்வார்(பட்டாணிகள் போன்றோர்). நாசுவ முஸ்லீம்கள் நாசுவ முஸ்லீமைத்தான் மணந்துகொள்ள முடியும். இது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது என்று கருத வேண்டாம். வடக்கில் இந்துக்களை விட முஸ்லீம்களிடம் ஜாதி உணர்வு அதிகம். கேட்க ஆச்சரியமாக இருந்தாலும் அதுவே உண்மை. வடக்கில் தங்கள் ஜாதி பெயரோடுதான் எல்லா முஸ்லீம்களும் அறியப்படுகிறார்கள். இது வடக்கிந்தியா, பாகிஸ்தான் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் முழுமைக்கும்.
    அது மட்டுமல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாத்தை தழுவிய ஈரானிலும் தங்கள் குலப்பெருமை பேசுவது இன்றும் காணக்கிடைக்கிறது. அது மட்டுமல்ல, குரைய்ஷிகள் உயர்ந்தவர்கள் அன்சாரிகள் தாழ்ந்த ஜாதி என்பதால் அன்சாரிகளிடம் நபிகளுக்கு பிறகு அரசுப்பதவி செல்லவில்லை.
    அல் அக்தும் என்ற தாழ்த்தப்பட்ட அரபுகள் அரபிய தீபகற்பத்திலேயே உள்ளார்கள்.
    தமிழ்நாட்டில் பிரச்சாரத்தின் காரணமாக, பெரியாருக்கு கிடைத்த தவறான செய்திகளின் காரணமாக, இஸ்லாம் சாதிக்கு எதிரானது என்ற கருத்து பரவியிருக்கிறது. அரேபியாவிலேயே மேல்குலம் கீழ்குலம் என்ற கருத்துகள் இருக்கும்போது தமிழ்நாட்டில் எபப்டி அது இஸ்லாத்துக்கு எதிரானதாக ஆகும்? அரபியாவில் தாழ்குலத்தை சேர்ந்த ஆண் உயர்குலத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தால், அதுதெரியவந்தால், அது கட்டாயவிவாகரத்துக்கு வழிகோலும். (மேல்ஜாதி ஆண் கீழ்ஜாதி பெண்னை திருமணம் செய்யலாம். அது செல்லும்)
    மரைக்காயர்கள் தங்களை மேல்குடி அரபுகள் என்றேகருதுகிறார்கள். வெளியே சொல்வதில்லை என்றாலும், மரைக்காயர்களிடம் சற்று பேசிப்பாருங்கள்.
    இவ்வாறு தலித்துகளை முஸ்லீமாக ஆக்குவதற்கு தீவிர எதிர்ப்பு பரம்பரை முஸ்லீம்களிடம் இருப்பது உங்களுக்கு தெரியும். பிஜே, ஜவஹிருல்லாஹ் போன்றவர்கள் மட்டுமே வஹாபிய கருத்து காரணமாக அதிகாரப்பரவல் நோக்கி மதம் மாற்றுவதை ஊக்குவிக்கிறார்கள். பாரம்பரிய முஸ்லீம்களிடம் இவர்களுக்கு எதிர்ப்பு இருக்கிறது. அதனால்தான் இவர்கள் தனியாக தேர்தலில் நின்றால் முஸ்லீம் பெரும்பான்மை தொகுதிகளில் கூட ஒரு சீட்டு கூட கிடைப்பதில்லை.

    ReplyDelete
  10. மதம் மாறியவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்றால், அந்த மதக்குள்ளாகவே இன்னொரு தனி தாழ்த்தப்பட்ட ஜாதி உருவாகும்.

    ReplyDelete
  11. கருப்பாயி என்கிற நூர்ஜஹான் நாவல் மறுப்பு P.சிராஜுதீன்
    www.scribd.com/siraj2025

    ReplyDelete
  12. Conversion to other religion is not the solution, stand in the same and fight against problem and try to come out the problem through the education , economic and sociology activities,So conversion is not the solution.

    ReplyDelete
  13. http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/27556-2014-12-22-05-41-53

    ReplyDelete
  14. கருப்பாயி என்ற நூர்ஜஹான் நாவல் ஆசிரியருடன் நேருக்கு நேர், கள ஆய்வுகளின் தொகுப்பு

    ReplyDelete