Friday, January 27, 2012

புதுக்கோட்டை பயணம் - 3

மெய்நிகர் உலகில் இன்னும் நாம் திருமெய்யத்திலிருந்தே கிளம்பியபாடில்லை. ஆனால் மெய்யுலகிலோ, இன்னும் சில நிமிடங்களில் (காலை 5.30 மணி) நார்த்தாமலைக்குக் கிளம்பவேண்டும். காலை சூரிய உதயத்தின்போது நார்த்தாமலை விஜயாலய சோழீசுவரத்தில் இருக்கவேண்டும் என்பது திட்டம். காலை முழுதும் நார்த்தாமலை, கடம்பர் மலை. மதியம் சித்தன்னவாசல். இன்று இவை மட்டும்தான்.

இப்போது திருமெய்யத்துக்கு வருவோம்.

திருமெய்யம் சிவன் கோவில்

இரு கோவில்களில் சிவனுக்கான கோவில்தான் முதலில் குடையப்பட்டிருக்கவேண்டும் என்கிறார் பேரா. சுவாமிநாதன். விண்ணவர் கோவில் அடுத்ததுதான். குகை கிழக்கு நோக்கிய வாசலைக் கொண்டிருந்தாலும் அர்தமண்டபத்தில் ஏறினால் சிவனின் கருவறை தெற்கு நோக்கியுள்ளது. வாசலில் இரு துவாரபாலகர்கள்.

பல்லவ வாயிற்காப்போன்கள் போல் முகத்தில் அந்த அளவுக்கு அழகு இல்லை, என்றாலும் சிற்ப நேர்த்தி வெகு நன்றாகவே உள்ளது. வலதுபுறம் உள்ள வாயிற்காப்போன் ஒரு பெரும் தடியின்மீது கையை ஊன்றியபடி இருக்கிறான். சிவ துவாரபாலகர் அடையாளம் இது. அவனுடைய உருவ அளவையும் வலிமையையும் பறைசாற்றும் வகையில் அந்தத் தடியில் மூன்று சுற்றுகளில் ஒரு மலைப்பாம்பு காட்டப்படுகிறது என்று விளக்கினார் மதியழகன். தமிழ்ப் பேராசிரியர். புதுக்கோட்டை பற்றி நன்கு அறிந்தவர். சிற்பங்களில் காணப்படும் யாளிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்துவருகிறார். இதுவரையில் 28 வெவ்வேறு யாளிகளைப் பற்றி எழுதி வைத்திருப்பதாகவும் 50 ஆனவுடன் ஒரு புத்தகம் எழுதப்போவதாகவும் சொன்னார்.

பிற்காலத்தில் இந்த மலைப்பாம்பு ஒரு யானையைக் கவ்வுவதுபோலக் காண்பிக்கப்பட்டிருப்பதை நீங்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில் காணலாம். ஆக, வாயிற்காப்போன் வைத்துள்ள தடி எவ்வளவு பெரியது? மலைப்பாம்பைப் போல பல மடங்கு. மலைப்பாம்பு எவ்வளவு பெரியது? ஒரு யானையையே கவ்வி விழுங்கும் அளவுக்குப் பெரியது. அப்படியானால் அந்த வாயிற்காப்போனின் உருவ அளவு?

இடது வாயிற்காப்போன், கையில் ஆயுதம் ஏதும் இன்றி, விஸ்மய முத்திரையைக் காட்டியபடி உள்ளான். இருவரது தலைக்கவசங்களும் மாறுபட்ட வடிவுடையதாக உள்ளன.

கருவறை உள்ளே உள்ள ஆவுடையுடன் சேர்த்த சிவலிங்கம் அந்த மலையிலிருந்தே குடைந்து உருவாக்கப்பட்டது. ஆவுடையும் வட்ட வடிவானது.

லிங்கத்துக்கு நேர் எதிராக லிங்கோத்பவ மூர்த்தியைப் பார்க்கலாம். நல்ல பெரிய சிற்பம். பொதுவாக நீங்கள் சிவத் தலங்களில் பார்க்கும் லிங்கோத்பவரிலிருந்து மாறுபட்டது.

லிங்கோத்பவர் உருவம், சிவனின் அடியையும் முடியையும் தேடி விஷ்ணுவும் பிரம்மாவும் சென்ற காட்சியை விளக்குவது. யார் பெரியவர் என்று பிரமனும் விஷ்ணுவும் விவாதித்துக்கொண்டு சிவனிடம் செல்ல, அவர் யார் முதலில் தன் அடியை அல்லது முடியைக் கண்டறிகிறாரோ அவர்தான் பெரியவர் என்று சொல்ல, விஷ்ணு பன்றி உருவமாகித் தரையைத் தோண்டிக்கொண்டு செல்ல, பிரமன் அன்ன உருவில் வானில் பறந்துசெல்ல, இறுதியில் இருவருமே தோற்கின்றனர்; சிவனே பெரியவன் என்பதை உணர்கின்றனர் என்பதாகச் செல்லும் கதை. இதில் லிங்க வடிவுக்குள் சிவனின் உருவம் செதுக்கப்பட்டிருக்கும். ஆனால் முடியின் உச்சியும் காலில் அடியும் காட்டப்பட்டிருக்காது. அதே நேரம் மேல் இடது ஒரத்தில் அன்னப் பறவை, கீழ் வலது, இடது அல்லது நடுவில் ஒரு வராக உருவம் காட்டப்பட்டிருக்கும். சில இடங்களில் இதைத் தாண்டி இரு பக்கமும் பிரமனும் விஷ்ணுவும் காட்டப்பட்டிருப்பார்கள்.

ஆனால் இங்கே உள்ள லிங்கோத்பவரில் சிவனின் ஜடாமுடி நன்கு தெரியும். கால்கள் தெரியாது. சிவனின் ஆடையலங்காரம் மிக மிக அழகாக இருப்பதைக் காணலாம். லிங்கோத்பவர்களிலேயே மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட சிற்பம் இது. ஆனால் ஆகம வரையறைகள் வருவதற்குமுன் (கதைகள் உருவாவதற்குமுன்) செய்யப்பட்டதாக இது இருக்கவேண்டும் என்கிறார் சுவாமிநாதன். அதனால்தான் அன்னமும் வராகமும் காணப்படுவதில்லை. பல்லவர்களின் கலையில் கைலாசநாதர் கோவிலிலிருந்துதான் லிங்கோத்பவரை நீங்கள் காணமுடியும்.

(தொடரும்)

10 comments:

  1. திருமெய்யத்தில் என் தந்தையார் சில காலம் பணியாற்றியிருந்தார். அப்பொழுது விடுமுறைக்கு போய் வந்திருக்கிறேன். பெருமாள் கோவில் வாசலில் வலது புறத்தில் இருந்த முதல் வீட்டில்தான் அப்பாவும் பாட்டியும் இருந்தார்கள். இரு கோவில்களும் மிக நன்றாக நினைவிலிருக்கிறது. சிவன் கோவில் பட்டருடன் பக்கத்தில் பள்ளத்தூருக்கு நாடகமெல்லாம் பார்க்க போயிருக்கிறேன்.

    ஒரு விஷயம் மட்டும் ஆச்சர்யமாக இருந்தது. இரு கோவில்களும் ஒரே காலத்தில் கட்டப்பட்டிருக்குமேயானால், சிவன் கோவில் கோபுரத்தில் மட்டும் சிற்ப வேலைபாடுகளும், பெருமாள் கோவில் கோபுரம் மொழுக்கட்டீயெனவும் ஏன் காட்சியளிக்கிறது? அதுவும் ஆகம முறைப்படித்தானா?

    ReplyDelete
    Replies
    1. இரு கோவில்களும் ஒரே காலத்தில் வெட்டப்படவில்லை. ஆனால் பின்னாள்களில் கட்டுமானம் எழுப்பப்பட்டது ஒரே நேரத்திலாக இருக்கலாம். கோபுரம் பெரிதாகக் கட்டப்பட்டது நாயக்கர் காலத்தில்தான்.

      நான் கோபுரத்தை விரிவாகப் பார்க்கவில்லை. ஆரம்ப காலக் கோவில்கள் எவற்றிலும் கோபுரங்கள் சிறியவையாகத்தான் இருக்கும். ஏனெனில் கடவுள் இருக்கும் கருவறைக்கு மேல் உள்ள விமானம்தான் பெரிதாக இருக்கவேண்டும்; எங்கிருந்து பார்த்தாலும் தெரியவேண்டும் என்பது மரபாக இருந்தது. பின்னர் நாயக்கர் காலத்தில்தான் விமானத்தையே மறைக்கும் அளவுக்கு மாபெரும் கோபுரங்கள் கட்டப்பட ஆரம்பித்தன.

      (சிவன் கோவிலுக்கு குருக்கள்தான்! விஷ்ணு கோவிலுக்குத்தான் பட்டர்! :-)

      Delete
    2. // சிவன் கோவிலுக்கு குருக்கள்தான்! விஷ்ணு கோவிலுக்குத்தான் பட்டர் //

      இல்லை பத்ரி. மதுரை மீனாட்சியம்மன் கோவில் அர்ச்சகர்கள் எல்லாரும் பட்டர்கள்தான். பட்டர்மார் தெருவே உண்டு கோவில் அருகே.

      திருமெய்யத்தைப் பொறுத்தவரை, சிவன் கோவில், விஷ்ணு கோவில் இரண்டும் அருகருகே இருக்கும். சிவன் கோவில் கோபுரங்களில் ஏகப்பட்ட சிற்பங்கள் இருக்கும். பெருமாள் கோவில் கோபுரத்தில் சிற்பங்களே கிடையாது. இது ஏதோ சைவ வைணவ சம்பிரதாய வேறுபாடுகள் என்று நினத்துக் கொண்டிருந்தேன். அதுதான் அந்தக் கேள்வி.

      Delete
    3. முன்ன்மே ஒரு கமெண்ட் போட்டிருந்தேன். மாடரேஷனில் இருக்கும். சிவன் கோவில் அர்ச்சகர்களை 'பட்டர்' என்று சொல்வது கிடையாது என்று நீங்கள் சொன்னதற்கு பதிலாக இன்னொரு குறிப்பு...

      ----------------------
      சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் திருக்கடவூர் ஒன்றாகும். இங்குள்ள அம்பாளின் அழகில் தன்னை மறந்து அமாவாசை தினத்தை பௌர்ணமி என்று சொல்லி அரச கோபத்திற்கு ஆளாகி அபிராமி அந்தாதி பாடி முழுமதியை வானத்தில் காட்டி அரசனை மெய்சிலிர்க்க வைத்த அபிராம பட்டர் அவதரித்த தலம் இதுவாகும்.
      ----------------------
      குருக்கள் - தமிழ் பெயர். 'பட்டர்' என்பது வடக்கிலிருந்து வந்த பெயராக இருக்கலாம். இதற்கும் சைவ / வைணவ வேறுபாடுகளுக்கும் சம்பந்தம் கிடையாது.

      Delete
  2. how i wish I could have made this trip with you all - I felt somewhat unsure about my fitness

    ReplyDelete
  3. நல்ல பதிவு நன்றி பத்ரி

    திருமயம் பள்ளி கொண்ட பெருமாள் ஆசியாவிலேயே நீளம் அதிகம் கொண்ட இரண்டாவது பெருமாள்.

    மூலவர் சத்தியகிரீஸ்வரரின் கண்கள் நம்மை நேராக விழித்துப் பார்ப்பது போன்ற தோற்றத்தைத் தரும்

    தாயார் - உஜ்ஜீவனத் தாயார்.

    மலைக் கோட்டையில் உள்ளது மிக ஆழமான சுனை.

    கோட்டையில் பெரிய, இருளும் வவ்வாலும் மிகுந்த, சுரங்கப் பாதைகள் உண்டு.

    ஊமைத்துரை ஒளீந்திருந்த கோட்டை இது. அவன் வழிபாடு செய்வதற்கு ஒரு லிங்கமும் ஸ்தாபித்திருக்கிறான். அதைக் காண ஏணி மேல் ஏறிச் செல்ல வேண்டும்.

    ”திரு” மையம் கொண்டதால் திரு மையம் என்றும், சத்தியம் காக்க பெருமாள் திருஅவதாரம் செய்ததால் “திரு மெய்யம்” என்றும் கூறப்படுகிறது. இன்று மருவி ”திருமயம்” ஆகி விட்டது.

    தீரர் சத்தியமூர்த்தி, அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் டாக்டர் சாந்தா ஆகியோர் பிறந்த/வாழ்ந்த ஊர்.

    சிவன் ஆலயத்தில் மகேந்திரவர்ம பல்லவன் கல்வெட்டு உள்ளது.

    ReplyDelete
  4. இது பற்றிய சில படங்களும் தகவல்களும் இங்கே...

    http://senkottaisriram.blogspot.com/2008/04/thirumayam-near-pudukkoottai-tamil-nadu.html

    ReplyDelete
  5. பத்ரி...இந்தக் குழுவில் சேருவது எப்படி? அறக்கட்டளை மாதிரியா? உறுப்பினர் சேர்க்கை ஏதேனும் இருந்தால் நானும் என் சகதர்மிணியும் சேர ஆசைப்படுகிறோம்.

    ReplyDelete
  6. //பத்ரி...இந்தக் குழுவில் சேருவது எப்படி? அறக்கட்டளை மாதிரியா? உறுப்பினர் சேர்க்கை ஏதேனும் இருந்தால் நானும் என் சகதர்மிணியும் சேர ஆசைப்படுகிறோம்.//

    Identical request from me too.

    ReplyDelete
    Replies
    1. இந்தக் குழுவில் சேர்வது எளிது. உறுப்பினர் கட்டணம் எதும் இல்லை. யார் வேண்டுமானாலும் சேரலாம். ஒவ்வொரு மாதம் முதல் சனிக்கிழமை சென்னை, தி.நகர், வெங்கட்நாராயணா சாலையில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளி வளாகம், வினோபா அரங்கில் மாலை 5.30 மணிக்கு ஒரு கூட்டத்தை நிகழ்த்துகிறோம்.

      உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால் அதனை எங்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்வோம். உங்களுக்கு தொடர்ந்து தகவல்கள் வந்தபடி இருக்கும். புதிதாக ஒரு யாத்திரை செல்வது தொடர்பான தகவல் உங்களுக்குக் கிடைத்து, அதில் நீங்கள் கலந்துகொள்ள விரும்பினால் அந்த யாத்திரியை முன்னெடுத்துச் செல்லும் ஒருவருடன் நீங்கள் தொடர்புகொண்டு சேர்ந்துகொள்ளும் விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்ளலாம்.

      பொதுவாக 40 பேர் வரை இந்த யாத்திரைகளில் கலந்துகொள்ளலாம். எனவே first come, first served.

      ஆனால் மற்றுமொரு முக்கியமான நிபந்தனை உள்ளது. இது வெறும் ‘இன்பச் சுற்றுலா’ கிடையாது. இதில் வருவோர் (குழந்தைகள் தவிர்த்து) அனைவரும் கட்டாயமாக கொடுக்கப்படும் தகவல் புத்தகத்தைப் படித்து, நாங்கள் நடத்தும் அனைத்துக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு, பிரசெண்டேஷன்கள் செய்யவேண்டும். அப்படிச் செய்ய விருப்பம் இல்லாதோர் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள்.

      ஒவ்வொரு யாத்திரைக்கும் என்ன செலவாகிறதோ அதனை, வருவோர் அனைவரும் சமமாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். அவ்வளவுதான்.

      Delete