Saturday, January 07, 2012

வலைவிரிக்கும் இந்துத்துவம்

உத்தரப் பிரதேசத் தேர்தல்கள் நெருங்கிவிட்டன. அங்கே நான்கு கட்சிகள் களத்தில் நிற்கின்றன. பாரதிய ஜனதா கட்சி, இந்து மத மீட்பை முன்வைத்து மக்களைத் தன்பின் வரச் செய்யப் பார்க்கிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, தலித் மக்களை ஒன்றுதிரட்டப் பார்க்கிறது. சமாஜ்வாதி கட்சி, பிற்பட்ட சாதியினர் சிலரைத் தன் பின் இழுக்கப் பார்க்கிறது. காங்கிரஸுக்குத் தெளிவான திட்டம் ஏதும் இல்லை.

கட்சி, சாதி, மதம். இந்த மூன்றும் எப்படி இணைகின்றன?

பத்ரி நாராயண் திவாரியின் புத்தகம் இதனை ஆராய்கிறது. முக்கியமாக பாஜகவின் செயல்திட்டத்தைச் சற்று விரிவாகவே ஆராய்கிறது. கூடவே பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள் எப்படித் தங்கள் ஆட்டத்தை விளையாடுகின்றனர் என்பது பற்றியும் ஒரு புரிதல் கிடைக்கிறது.

குறிப்பிட்ட சமூகக் குழுக்கள், பெருஞ்செயல் புரிந்த தம் சமூக நாயகர்கள் சிலரைப் போற்றிப் பாராட்டுகிறார்கள். அவர்களுக்குச் சிலைகளும் கோவில்களும்கூட உள்ளன. அவர்கள்மீது தொன்மக் கதைகள் உள்ளன. இந்தக் கதைகளுக்கு மதச்சாயம் பூசி, இவர்களை இந்து சமுதாயத்தை ரட்சிக்க முஸ்லிம்களுக்கு எதிராகப் போராடியவர்கள் என்றோ, அல்லது ராமரின் அவதாரம் என்றோ ஏதோ ஒருவகையில் கதைகளைத் திரித்து, அந்தக் குறிப்பிட்ட சமுதாயத்தைத் தம் வசம் இழுக்கப் பார்க்கிறது பாஜக. இதன் விளைவாக இந்தக் குறிப்பிட்ட சமூகக் குழுக்களை முஸ்லிம்களுக்கு எதிரானவர்களாகச் சித்திரித்து, மத நல்லிணக்கத்தைக் குலைக்கவும் செய்கிறார்கள். மற்றொரு பக்கம், தலித் சாதிகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல், அவர்களை இந்து மதக் காவலர்களாக மட்டும் சித்திரித்து, அவர்கள் நோக்கமே எப்போதாவது மதக் கலவரம் ஏற்பட்டால், அப்போது முதல் வரிசையில் நின்று இந்துக்கள் சார்பாகச் சண்டை போடுவதுதான் என்பதுபோன்ற கதையாடலை உருவாக்குகிறார்கள்.

சுமார் ஒரு நூற்றாண்டுக்குமுன், இந்தச் சாதிகளுக்கான புராணங்களை உருவாக்குவதில் ஆரிய சமாஜம் எவ்வாறு ஈடுபட்டது என்பதைப் பற்றியும் மேலோட்டமான தகவல்கள் இந்தப் புத்தகத்தில் கிடைக்கிறது.

ஒரே பாஜக தலைவர், மேல்சாதி மக்களிடம் தேர்தல் பிரசாரம் செய்யும்போது என்ன வாக்குறுதிகளைத் தருகிறார், அதுவே தலித் சாதிகளிடம் பேசும்போது எப்படி மாற்றம் அடைகிறது என்பதைப் பின்தொடர்ந்து விவரிக்கிறார் ஆசிரியர்.

மாயாவதியின் சிலை அரசியல் பற்றித்தான் நாம் செய்தித்தாள்களில் படிக்கிறோம். ஆனால் உத்தரப் பிரதேச சிலை அரசியலில் மாயாவதி மட்டும் அல்ல, ஏகலைவன், சுஹால் தேவ் என்று எண்ணற்றோர் உள்ளனர்.

தமிழக அரசியலுக்கும் உத்தரப் பிரதேச அரசியலுக்கும் மாபெரும் வித்தியாசங்கள் உள்ளன. எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்த நூல் இது. சரவணனின் மொழிபெயர்ப்பு படிக்க மிக எளிதாக உள்ளது.

1 comment:

  1. The publication in English mentions the name of the author as Badri Narayan.In Tamil why Tiwari has been added.Perhaps you thought that readers would think that Badri Narayan is brother of Badri Seshadri :)

    ReplyDelete