Sunday, January 08, 2012

பாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்

1950-களில் குஷ்வந்த் சிங் எழுதிய ஆங்கில நாவல் இது. இதன் தமிழாக்கம் (ராமன் ராஜா) இப்போது கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ளது.

நாடு இந்தியா, பாகிஸ்தான் என்று இரு தேசங்களாகப் பிரிக்கப்படுகிறது. இங்கிருந்து முஸ்லிம்கள் பாகிஸ்தான் நோக்கிச் செல்கிறார்கள். அங்கிருந்து இந்துக்களும் சீக்கியர்களும் இந்தப் பக்கம் வருகிறார்கள்.

இது மிகவும் துயரமான ஒரு செயல்தான். வீட்டையும், நிலத்தையும், பொருள்களையும் விட்டுவிட்டு, வாழ்ந்த இடத்திலிருந்து வேரோடு பிடுங்கப்பட்டு பல ஆயிரம் மைல் கிடைத்த வாகனங்களில் ஏறி, நடந்து, திண்டாடி இடம் பெயர்வது கோரமான ஒரு விஷயம்.

ஆனால் இத்துடன் சேர்ந்துகொள்கிறது படுகொலைத் தாக்குதல். அது இரு பக்கங்களிலிருந்தும் நடக்கிறது. ஒரு தாக்குதல் மிகைப்படுத்தப்பட்டு, மற்றொரு கூட்டத்தினரை ‘நாமெல்லாம் ஆண் பிள்ளைகளா, மறுதாக்குதல் நடத்துவோம்’ என்று செய்யவைக்கிறது.

இப்படிப்பட்ட களத்தை எடுத்துக்கொண்டுள்ள குஷ்வந்த் சிங், எல்லையில் இருக்கும் ஓர் அமைதியான கிராமத்தில் கதையை அமைக்கிறார். அந்த சீக்கியப் பெரும்பான்மை கிராமத்தில் சில இந்துக்கள் உள்ளனர். ஒரு முஸ்லிம் குடும்பமும் உள்ளது. தாயாய், பிள்ளையாய், சகோதரர்களாய்ப் பழகியவர்கள் மனம் எப்படி விகாரமடைந்து மாறுகிறது என்பதுதான் கதை. இதில் காதல் கொஞ்சம், கம்யூனிசம் கொஞ்சம்.

ஒரு நாள், பாகிஸ்தானிலிருந்து வரும் ஒரு ரயில் அந்தக் கிராமத்தில் நிற்கும்போது அதிலிருந்து கொட்டுகின்றன இந்து, சீக்கியப் பிணங்கள். பதிலுக்குப் பழிவாங்க முடிவெடுக்கிறார்கள் அந்த கிராமத்தவர்.

பாகிஸ்தான் போகும் ஒரு ரயிலில் முஸ்லிம் அகதிகள் செல்லப்போகிறார்கள். அவர்கள் உயிருடன் செல்வார்களா?

1 comment:

  1. புகைப்படங்களுடன் கூடிய புத்தகமா? (ஆங்கிலத்தில் வந்தது போன்றே?)

    ReplyDelete