Sunday, July 15, 2012

மூன்றாம் உலகப் போர் - புத்தக வெளியீடு

வைரமுத்து விகடனில் தொடராக எழுதிய ‘மூன்றாம் உலகப் போர்’ 13 ஜூலை 2012 அன்று மாலை 6 மணிக்கு காமராசர் அரங்கில் புத்தகமாக வெளியானது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி புத்தகத்தை வெளியிட, எழுத்தாளர் ஜெயகாந்தன் முதல் படியை பெற்றுக்கொண்டார். நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துரை வழங்கினார்.

ஒரு புத்தகத்துக்கான வெளியீடு என்ற வகையில் இதைவிட பிரம்மாண்டமான, சிறப்பான வெளியீடு இருந்திருக்க முடியாது. வைரமுத்துவின் தரப்பிலிருந்து ஏற்பாடுகள் பிரமிக்கத்தக்கவகையில் இருந்தன.

விழாவில் கலந்துகொண்ட பிரமுகர்கள் அவரவர் துறையில் முன்னோடிகள். கேள்விக்கு இடமே இல்லாத வகையில் சிறப்பான சாதனை புரிந்தவர்கள். விழா நடப்பதற்கு முன்பிருந்தே முன்னேற்பாடுகள், முன்விளம்பரம் ஆகியவை பிரமாதமாக இருந்தன. தெருவில் தொடர்ந்து சுவரொட்டிகளைக் காண முடிந்தது. மூன்று வாரங்களாக வெவ்வேறு போஸ்டர்கள் படிப்படியாகத் தகவலைக் கூட்டிக்கொண்டே வந்து, ஆர்வத்தை அதிகரித்தன. இறுதி சில நாள்களில் பல இடங்களில் விளம்பரப் பலகைகளும் தென்பட்டன.

புத்தக வெளியீட்டுக்கு இரண்டு நாள்களுக்குமுன் தி ஹிந்துவில் ஒரு விரிவான பேட்டி இருந்தது. ஒரு நாள் முன்னதாக தினமணியில் புத்தகத்தின் முன்னுரையாக வைரமுத்து எழுதியிருந்தது வெளியானது. பிற பத்திரிகைகளை நான் புரட்டிப் பார்க்கவில்லை.

நிகழ்ச்சி நடக்கும் காமராசர் அரங்கில் மொத்த இருக்கைகள் 2,000-க்குச் சற்று குறைவு. ஆனால் 5.50-க்கு நான் உள்ளே நுழைந்தபோதே 2,000-க்கும் மேற்பட்டோர் நெருக்கு அடித்துக்கொண்டு நின்றனர். இதில் பலர் வைரமுத்துவின் வாசகர்கள் என்றாலும், கருணாநிதியைக் காண விரும்பிய திமுகவினர், நடிகர் கமல்ஹாசனின் அன்புக்குரிய ரசிகர்கள் ஆகியோரும் போட்டி போட்டுக்கொண்டு நெருக்கியடித்தனர்.

முதல் சில வரிசைகளில் திமுக மத்திய மந்திரிகள், ஸ்டாலின், முன்னாள் மாநில மந்திரிகள் பலர், முன்னாள் மேயர் சுப்பிரமணியன் ஆகியோருடன் காங்கிரஸ் கட்சியினர், பாஜகவின் இல.கணேசன் ஆகியோரும் தென்பட்டனர்.

நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்தது. தமிழக மேடை, அதுவும் முக்கியமாக அரசியல் வாடை கலந்த மேடை என்றாலே மேடையில் உள்ளோரை உச்சபட்சமாக, எதுகை மோனையில் புகழ்வது வாடிக்கையாகிவிட்டது. இந்த துரதிர்ஷ்டமான வழக்கம் ஒரு காலத்தில் மாறக்கூடும் என்று நம்புவோம்.

புத்தகத்தை வெளியிட்டு, வேண்டிய புகைப்படங்கள் எடுக்க அனுமதித்தபின், பத்து வாசகர்கள் ஆளுக்கு ஒரோர் நிமிடம் கதையைப் பற்றிப் பேசுவார்கள் என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார்கள். ஓரிருவர் தவிர மிகுதி அனைவரும் நன்றாகவே பேசினார்கள். அதன் இறுதி வாசகராக விஜய் டிவி ‘நீயா நானா’ கோபிநாத் தோன்றி ஆச்சரியப்படுத்தினார்.

நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துரையைத் தொடங்கினார். மிகச் சுருக்கமான பேச்சு. ஆனால் நான் எதிர்பார்த்த பஞ்ச் அதில் இல்லை. அடுத்து பேசிய ஜெயகாந்தன் எழுத்தாளர்கள் பயமுறுத்துவதை விடுத்து வாசகர்களுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் எழுதவேண்டும் என்று சொன்னது எனக்கு ஆச்சரியம் தந்தது. மேலும் புவி சூடேற்றம் என்ற கருத்தை ஜெயகாந்தன் நம்பவில்லைபோல இருந்தது அவரது சில வாசகங்கள்.

கருணாநிதி மிக விரிவாக எழுதி அச்சிட்டு எடுத்துவந்திருந்த 32 பக்க ஆய்வுரையைப் படித்தார். அவரது பேச்சுகளைத் தயாரித்துக் கொடுக்க ஆட்கள் இருப்பார்கள் என்றாலும் அதில் அவரது பங்களிப்பு பெருமளவு இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அச்சடித்த அந்தக் கையேடு பலருக்கு வழங்கப்பட்டிருந்தது. அது இணையத்தில் விரைவில் காணப்படலாம். நிறையத் தகவல்கள் இருந்தாலும் ஒரு கதையை ஓர் அ-புதினத்தை ஆராயும் முறையிலா ஆராயவேண்டும் என்று தோன்றியது. பக்கம் பக்கமாக அவர் படித்தது இறுதியில் ஓரளவு ஆயாசத்தை எனக்கு ஏற்படுத்தியது. பிறருக்கு எப்படியோ. ஆனால் மிகுந்த உழைப்பு அந்த உரையில் இருந்தது என்பதை ஏற்கவேண்டும். சம்பிரதாயமாக, ‘இந்தப் புத்தகம் சிறந்தது, வாங்கிப் பயனடையுங்கள்’ என்ற மாதிரி இல்லாமல் இருந்தது சந்தோஷம்.

வைரமுத்துவின் உரை எப்போதும்போல ஆணித்தரமாக, சிறப்பாக இருந்தது. ஒரு புத்தகத்தைச் சிறப்பாக வெளியிட்ட திருப்தியும் அந்தப் பேச்சில் இருந்தது. ‘வெற்றித் தமிழர் பேரவை’ என்ற அவரது வாசகர் பேரவையினர்மீதான பெருமிதமும் வெளிப்பட்டது. வைரமுத்துவுக்கு இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகப் பெரிய வாசகர் கூட்டம் இருக்கிறது. அதில் சிலர் இந்த விழாவுக்கென வந்திருந்தனர். பல இளைஞர்கள் ‘மூன்றாம் உலகப் போர் / வைரமுத்து’ என்று எழுதியிருந்த டி-சட்டைகளை அணிந்து சுற்றியபடி இருந்தனர்.

விழா முடிந்தபின், வாசலில் புத்தகம் விற்பனை செய்யப்பட்டது. ரூ. 300 விலையான புத்தகம் ரூ. 250-க்குக் கொடுக்கப்பட்டது. மொத்தம் 1,000 புத்தகங்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டு, அனைத்தும் விற்றுப்போயினவாம். மேற்கொண்டு வாங்க விரும்பியவர்களை கடைகளுக்கு அனுப்பவேண்டியிருந்ததாம்.

இந்தப் புத்தகங்களை விநியோகிக்கும் இரண்டு நிறுவனங்களில் எங்களது நிறுவனமும் ஒன்று. (மற்றொன்று திருமகள் நிலையம்.) இப்புத்தகம் பெரும் எண்ணிக்கையில் விற்கும் என்று எதிர்பார்க்கிறோம். ப்ரீ-ஆர்டர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்துள்ளன.

புத்தகம் விகடனில் வெளியானபோது எத்தனை லட்சம் வாசகர்கள் இந்தக் கதையைப் படித்து வந்தார்களோ, அத்தனை லட்சம் பேர் இப்போது புத்தக வடிவிலும் படிப்பார்கள் என்று நம்புகிறேன்.

புத்தகத்தை வாங்க: இணையத்தில்
போன்மூலம்: 94459-01234 (அ) 9445-979797

2 comments:

  1. நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது நீங்கள் அனுப்பிய ஒரு வார்த்தை ட்வீட் இந்தப் பதிவுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன் :-)

    ஸ்ரீகாந்த்

    ReplyDelete
  2. When you wrote about the book release function, you could have written the salient features of the book as well. Even if you haven't got an opportunity to read the book, certainly you would have learnt something about the book from the speeches at the function. I'm not sure if it's about Global Warming, if it is then it's a scientific subject. I'm not sure how well vairamuthu did justice to the topic as he doesn't seem to have the background to gain insight into the details and make the readers informed of this very important issue. If someone like you write a book on such topics, it would certainly be greatly beneficial to general public. I recently read some historty books & 'AnandaVikatan Questions & Answers' of Madan and to my horror I found so many mistakes, and the analysis was terrible. I found, the references Madan had cited were all Books authored by our indian university professors and many of us have no illusion whatsoever about the quality of them let alone their books. I wish & hope Vairamuthu's work (which seems to be on very critical subject)is not like the "university" "professor"'s works. Dr. Badri you and I think only you in your profession have the background, expertise, and the resources to author such books and educate the masses about the many critical scientific issues that impact our day to day life. Thanks.

    ReplyDelete