Friday, May 17, 2013

பெட்டிங் - மேட்ச் ஃபிக்சிங் குறித்து

2004-ம் ஆண்டு, தமிழோவியம் இணையத்தளத்துக்காக இரண்டு கட்டுரைகளை இது தொடர்பாக எழுதியிருந்தேன். பெரும்பாலானோர் பெட்டிங், மேட்ச் ஃபிக்சிங் இரண்டையும் குழப்பிக்கொள்கிறார்கள். இந்த இரு கட்டுரைகளும் (சேர்த்து ஒன்றாகக் கீழே) இந்தக் குழப்பத்தை ஓரளவு நிவர்த்தி செய்யும். (கொஞ்சம் இலக்கண எடிட்டிங் செய்யப்பட்டது, சில தவறுகள் சரிசெய்யப்பட்டுள்ளன.) அடுத்த பதிவில் ஸ்பாட் ஃபிக்சிங் பற்றிக் கொஞ்சமாக எழுதுகிறேன்.

===

கிரிக்கெட் பெட்டிங் பற்றி
29 ஏப்ரல் 2004

உங்களைச் சூதாடிகளாக மாற்றுவதல்ல என் நோக்கம். கிரிக்கெட் பெட்டிங் - கிரிக்கெட் சூதாட்டம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். பலருக்கு அப்படியென்றால் என்ன என்ற முழு விவரமும் தெரியாது. ஆனாலும் ஏதோ கெட்டது, இதனால்தான் கிரிக்கெட் ஆட்டத்தில் எதையுமே நம்ப முடிவதில்லை என்றதொரு எண்ணம் உண்டு. பலர் கிரிக்கெட் சூதாட்டத்தையும் [தமிழில் சூது என்ற சொல்லுக்கே பாண்டவர்களால் மிகக் கெட்ட பெயர்!], கள்ளத்தனமாகக் காசு வாங்கிக் கொண்டு ஆட்டக்காரர்களே ஆட்டத்தின் முடிவுகளையோ, நிகழ்வுகளையோ மாற்றுவதையும் ஒன்று என்றுகூட நினைத்துவிடுகிறார்கள். முந்தையது 'betting' அல்லது 'gambling' ஆகும். பிந்தையது 'match fixing' எனப்படும் குற்றமாகும்.
 
உலகில் பல நாடுகளிலும், அங்கீகரிக்கப்பட்ட சூதாட்டக் கடைகளில் சூதாடுவது சட்டப்படி குற்றமல்ல. இந்தியாவில்கூட குதிரைப் பந்தயங்களின்மீது சூதாடலாம். குதிரைப் பந்தயங்களின் முடிவுகளின்மீது மட்டும்தான் சட்டப்படி இந்தியாவில் சூதாட அனுமதி உண்டு. மற்ற விளையாட்டுகள், பந்தயங்களின் முடிவுகள், நிகழ்வுகள் ஆகியவற்றின்மேல் எந்த நிறுவனமோ, தனியாரோ பிறர் சூதாட வகை செய்ய முடியாது. ஆனாலும் இந்தியாவில் தடை செய்ய முடியாத அளவுக்கு கிரிக்கெட்மீது சூதாட்டம் நடைபெறுகிறது.

இந்தியாவில்கூட (குதிரைப் பந்தயம் தவிர்த்த பிற நிகழ்ச்சிகள்மீது) சூதாட்டத்தை நடத்துபவர்கள்மீதுதான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று நினைக்கிறேன். சூதாடுபவர்கள்மீது என்ன வகையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரியவில்லை. செய்தித்தாள்களில் வரும் செய்திகளைப் பார்க்கும்போது சூதாட்டத்தை நடத்துபவர்கள்தான் கைது செய்யப்படுகிறார்கள். இப்படிச் சூதாட்டத்தை நடத்துபவர்களின் பெயர் bookmakers அல்லது சுருக்கமாக புக்கி (bookie).
பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட பல சூதாட்ட நிறுவனங்கள் பல்வேறு விளையாட்டு மற்றும் அரசியல் நிகழ்வுகளின்மீது odds வழங்குகின்றன. இவையெல்லாம் தனியார் அல்லு அரநிறுவனங்கள். அரசினால் கட்டுப்படுத்தப்படுபவை. இந்த நாடுகளில்தான் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டே கிரிக்கெட் பந்தயங்களிலும் சூதாட்டம் நிகழ்கிறது. இணையத்தின் வீச்சு அதிகரிக்க ஆரம்பித்ததும் இந்த நாட்டில் உள்ள சூதாட்ட நிறுவனங்கள், இணையம் வழியாக உலகின் பல இடங்களில் உள்ளவர்களையும் சூதாட்ட உறுப்பினர்களாக்க முயல்கின்றன.
சூதாட்டம் சரியா, தவறா என்ற நீதிபோதனைகளில் நான் ஈடுபடப்போவதில்லை. ஆனால் கிரிக்கெட் பற்றிய (சட்டத்ுக்கு உட்பட்ட) சூதாட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிவுபூர்வமாக நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நிலையிலிருந்து எழுதப்பட்டதே இந்த வாரக் கட்டுரை. சூதாட்ட விதிகள் எல்லாப் போட்டிகளுக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி என்றாலும் இங்கு கிரிக்கெட்டிலிருந்தே எடுத்துக்காட்டுகளைக் கொடுத்ுள்ளன்.
இரண்டு வகையான சூதாட்டம் உண்டு: (1) fixed-odds சூதாட்டம் (2) spread betting.

உங்களில் பலர் 'நிகழ்தகவு' (Probability Theory) என்னும் கணிதப் பாடத்தைப் படித்திருக்கலாம். அதாவது ஒரு நிகழ்வு நடக்க என்ன நிகழ்தகவு (odds அல்லது probability)? ஒரு ரூபாய் நாணயத்தைத் தூக்கிப் போட்டுபூவா? தலையா?’ பார்த்தால் பூ விழ என்ன நிகழ்தகவு? 1/2. அதாவது நல்ல ஒரு ரூபாய் நாணயத்தை (ஒரு பக்கம் பூ, மறு பக்கம் தலை, எந்தப் பக்கமும் தேய்க்கப்படாமல் சாதாரணமாக இருக்கும் ஒரு நாணயம்) பல்லாயிரக்கணக்கான முறை தூக்கிப்போட்டு நிகழ்வுகளைக் குறித்துக்கண்டு, எத்தனை முறை பூ விழுந்துள்ளது என்று பார்த்தால் கிட்டத்தட்ட 1/2 என்று வந்திருக்கும். ஆனால் இரண்டு முறை தூக்கிப் போட்டால் அதில் ஒன்றாவது பூவாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. இரண்டு முறையுமே தலையாக இருக்கலாம். பலமுறை செய்தால்தான் இந்த நிகழ்தகவுக்கு அருகில் விடை இருக்கும்.

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒருநாள் போட்டி விளையாடப் போகிறது என்று வைத்துக்கொள்வோம். யார் ஜெயிப்பார்கள் என்று உறுதியாகக் கூற முடியுமா? இரு அணிகளிலும் உள்ள வீரர்களின் திறமையைக் கணிக்கவேண்டும், அவர்கள் விளையாடும் ஆடுகளத்தின் தன்மையைப் பார்க்கவேண்டும். அன்றைய தினத்தில் வீரர்களின் form எப்படியிருக்கிறது என்று பார்க்கவேண்டும். மழை வருமா, பந்து swing ஆகுமா, பார்வையாளர்கள் யாருக்கு அதிக ஆதரவு கொடுப்பார்கள், யார் டாஸில் ஜெயிப்பார்கள், டாஸில் ஜெயித்தவர் முதலில் என்ன செய்யப்போகிறார் என்றெல்லாம் பார்க்கவேண்டும்! அப்படிப் பார்த்தாலும் யாரிடமும் எந்தவொரு magic formula-வும் கிடையாது யார் ஜெயிப்பார்கள் என்று கண்டுபிடிக்க. ஆனாலும் ஓரளவுக்கு யூகிக்கலாம்.
புக்கி என்பவர் இப்படி ஒரு யூகத்தில்தான் யார் ஜெயிக்க அதிக வாய்ப்பு என்று முடிவு செய்வார். அவ்வாறு முடிவு செய்தவுடன் ஓர் அணிக்கான odds-ஐ வெளியிடுவார். உதாரணத்ுக்கு செப்டம்பரில் நடக்கவிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையில் அதிகபட்ச ஜெயிக்கும் வாய்ப்பு ஆஸ்திரேலிய அணிக்கு என்று முடிவு செய்துள்ள bet365 நிறுவனம், ஆஸ்திரேலியா ஜெயிக்க odds 5/4 என்கிறது. அப்படியென்றால் என்ன? நீங்களும் ஆஸ்திரேலியா ஜெயிக்கும் என்று முடிவு செய்து ரூ. 20-ஐ ஆஸ்திரேலியா மீது கட்டுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆஸ்திரேலியா ஜெயித்து விட்டால் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய பணம் ரூ. 20*(5/4) = ரூ. 25. அதாவது நீங்கள் வைத்த பணம் திரும்பிக் கிடைப்பதோடு, கூடூ. 5-ம் கிடைக்கிறு. ஆனால் இந்தியா ஜெயித்துவிட்டால் நீங்கள் கட்டிய பணம் போய்விடும்.

இதே போட்டியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் ஜெயிக்க இரண்டாவது இடத்தில் இருப்பதாக bet365 நினைக்கிறது. அதனால் அவர்களுக்கு odds ஆக 11/2 என்று கொடுத்துள்ளது. இந்தியாமேல் ரூ. 20 கட்டி, இந்தியா வென்றால் உங்களுக்குக் கிடைப்பது ரூ. 110. இப்படியாக யாருக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்று புக்கி நினைக்கிறாரோ, அந்த அணிக்குக் குறைந்த odds கொடுப்பார். யாருக்கு வெற்றி வாய்ப்பே இல்லை என்று நினைக்கிறாரோ, அதற்கு மிக அதிக odds கொடுப்பார். எடுத்துக்காட்டாக இதே போட்டியில் ஜிம்பாப்வே ஜெயிக்க odds 100/1, கென்யாவுக்கு 250/1, பங்களாதேசத்துக்கு 1000/1, யு.எஸ்.ஏ வுக்கு 2500/1 ! நீங்கள் யு.எஸ்.ஏ அணியின் மேல் ரூ. 10 கட்டினால், தப்பித்தவறிப்போய் அந்த அணியும் வென்றுவிட்டால் உங்களுக்குக் கிடைப்பது ரூ. 25,000. இப்படியாக 1983 உலகக்கோப்பையில் இந்தியாமீது பணம் கட்டியிருந்தவர்கள் வாரிக் குமித்திருப்பார்கள்.

இம்மாதிரியான பெட்டிங்கைத்தான் fixed odds என்கிறோம். அதாவது ஆட்டம் தொடங்குமுன்னரே, போட்டி முடியுமுன்னரே odds கிடைக்கிறது. இந்த odds மாறுவதில்லை. இதன்மூலம் தோற்றால் எவ்வளவு தோற்போம், ஜெயித்தால் எவ்வளவு ஜெயிப்போம் என்பது பணம் கட்டும்போதே தெரிகிறது. ஓர் ஆட்டத்ுக்கான பெட்டிங் என்றால் பெட்டிங் நிறுவனம் ஆட்டம் ஆரம்பிக்குமுன்னரே பணம் பெற்றுக்கொள்வதை நிறுத்திவிடவேண்டும். ஓர் ஆட்டத்தொடருக்கான odds என்றால் அந்த ஆட்டத்தொடர் தொடங்குமுன்னரே நிறுத்திவிடும்.

சரி, நிச்சயம் ஆஸ்திரேலியாதான் ஜெயிக்கும் என்று நினைத்து எல்லோரும் ஆஸ்திரேலியாமேல் பணம் கட்டிக்கொண்டே இருந்தால் என்னாவது? புக்கிக்கு பயம் வந்துவிடும் அல்லவா? ஆஸ்திரேலியா ஜெயித்தால் பெட் வைத்தவர்களுக்கு எக்கச்சக்கமாகப் பணம் பட்டுவாடா செய்யவேண்டியிருக்குமே? புக்கி ஓரளவுக்குமேல் புது பெட்களை வேண்டாம் என்று சொல்லிவிடலாம். மேலும் மற்ற நாடுகளின் oddsஐ இன்னமும் கவர்ச்சியாக மாற்றலாம். எல்லோரும் ஆஸ்திரேலியாமீதே பணம் கட்டுகிறார்கள் என்றால் இந்தியாவின் oddsஐ 11/2 இலிருந்து 100/1 என்று ஆக்கலாம். அதைப்பார்த்துவிட்டு பலர், ‘ஆகா... இந்தியா வெல்லச் சிறிதாவது வாய்ப்பு இருக்குமே, அதில் பணம் போட்டால் அதிகமாகக் கிடைக்குமே!’ என்று இந்தியாமபணம் போட ஆரம்பிப்பார்கள்.

புக்கி என்பவர் எப்பதுமே பணத்தை தோற்கப்போவதில்லை. ஜெயிப்பதும் தோற்பதும் பொதுமக்கள்தான்!

பெட்டிங் இந்த இடத்தில்தான் பங்குச்சந்தையை (share market) விட்டு விலகுகிறது. பங்குச்சந்தையிலும் கிட்டத்தட்ட ஒருமாதிரி பெட்டிங்தான் நடக்கிறது. ஆனால் இது zero sum game கிடையாது. பெட்டிங்கை எடுத்துக்கொண்டால் ஒரு அணி வென்றால் மற்ற அணிகள் தோற்றுத்தான் ஆகவேண்டும். வெல்லும் அணியின்மேல் பணம் கட்டியவர்கள் தவிர மற்ற அனைவரும் பணத்தை இழக்கத்தான் வேண்டும். பங்குச்சந்தையிலோ, நாம் முதலீடு செய்யும் பணம் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது. நாம் பணம் போட்டிருந்த பங்குகள் நமக்கு டிவிடெண்ட் வருமானத்தையும் ஊக்கப் பங்குகளையும் கொடுக்கலாம்.

தீவிரமாக ஒரு விளையாட்டைப் பின்பற்றும் ரசிகர்கள் பலரும், பிரிட்டனில் விளையாட்டுகளின்மீது சூதாடுகிறார்கள். ஆனால் அளவோடு, இதை ஒருவித விளையாட்டாகவே எண்ணிச் செயல்படுகிறார்கள்.

அடுத்த வாரம் spread betting பற்றியும், மற்ற வித சூதாட்டங்கள் பற்றியும் பார்ப்போம்.
 
கிரிக்கெட் பெட்டிங் - தொடர்ச்சி
6 மே 2004
 
சென்ற வாரம் fixed odds betting பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் spread betting பற்றிப் பார்ப்போம். ஒரு குறிப்பிட்ட முடிவின்மீது சூதாடுவது என்று பார்த்தால் மிகக் குறைந்த வழிகளே உள்ளன. ஒரு குறிப்பிட்ட போட்டியில் யார் ஜெயிப்பார், போட்டித்தொடரை யார் வெல்வார், ஒரு போட்டித்தொடரில் யார் அதிக ஓட்டங்களை எடுப்பார், அதிக விக்கெட்டுகளை எடுப்பார் - இவ்வளவுதான் முடியும். ஆனால் கிரிக்கெட் போன்ற ஆட்டத்தில் ஆயிரக்கணக்கான மாறக்கூடிய எண்கள் உள்ளன. அவற்றின்மீது எப்படி சூதாடுவது?

உதாரணமாக ஓர் அணியின் டோட்டல் ஸ்கோர் எவ்வளவு இருக்கும் என்ற கேள்வி எழலாம். இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒருநாள் போட்டி ஒன்றில் விளையாடுகின்றன. அதில் முதலில் மட்டையெடுத்ு ஆடும் இந்தியா எத்தனை ரன்கள் எடுக்கும்? புக்கி ஒருவர் இந்தியா 250-260 ஓட்டங்களுக்குள் எடுக்கும் என்கிறார். நீங்கள் இந்தியா 300-ஐ சர்வசாதாரணமாக எடுக்கும் என்று நினைக்கிறீர்கள். உங்கள் நண்பர் இந்தியா 210-ஐத் தாண்டாது என்று எண்ணுகிறார். இப்படியாக ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் 20 பேரை எடுத்தால் ஆளுக்கு ஒரு எண்ணைச் சொல்லுவார்கள். இதற்காக வடிவமைக்கப்பட்டதுதான் spread betting. இதற்கு bet hilo என்று பெயர்.
ஒரு நிகழ்வின் வீச்சை புக்கி கொடுக்க, சூதாடுபவர் அந்த வீச்சு (spread) சரியல்ல என்று நினைத்தால், அந்த நிகழ்வின் எண்ணிக்கை அதிகமா, குறைவா என்று நினைத்து அதற்குத் தகுந்தாற்போல் 'வாங்கலாம்', 'விற்கலாம்'. அதாவது கொடுக்கப்பட்டுள்ள வீச்சு '250-260' என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் இந்தியா 260-ஐத் தாண்டும் என்று எண்ணுகிறீர்கள். அப்படியானால் ஒரு தொகையை (ரூ. 1 என்று வைத்துக்கொள்வோம்) வைத்து 'வாங்குவீர்கள்' (buy). 260-க்குமேல் எத்தனை ரன்கள் அடித்தாலும் உங்களுக்கு லாபாக ரூ. (X-260)*1 கிடைக்கும். ஆனால் 260-ஐத் தொடாமல் கீழே இருந்தால் நங்கள் கட்டிய தொகையை இழந்துவிடுவர்கள். அதேபோல் உங்கள் நண்பர் (210ஐத் தாண்டாது என்று நினைப்பவர்) ரூ. 1 ஐ வைத்து 'விற்பார்' (sell). இந்தியா 220 ஓட்டங்கள் எடுத்தால், நீங்கள் 1*(260-220) = ரூ. 40ஐ இழந்திருப்பீர்கள். உங்கள் நண்பர் 1*(250-220) = ரூ. 30-ஐ ஜெயித்திருப்பார்.

இந்தியா 250 ஓட்டங்களுக்குக் கீழாக எடுக்கும் என்று நங்கள் நினைத்தால் ஒரு குறிப்பிட்ட தொகையை 'விற்பீர்கள்' (sell). ஒருவரே ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்கான வீச்சுக்கு வாங்கவும் விற்கவும் செய்யலாம். ஓர் ஆட்டம் நடந்துகொண்டே இருக்கும்போது உங்களுக்கே வெவ்வேறு எண்ணங்கள் தோன்றும். டெண்டுல்கரும், சேவாகும் அடித்து நொறுக்கும்போது 340 வரும் என்று தோன்றும். அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் விழுந்ததும் 230-ஐத் தொடுமோ என்று பயம் வரும். யுவராஜும் திராவிடும் ஒவ்வொரு ரன்னகச் சேர்க்கும்போது நிச்சயம் 270 வந்துவிடும் என்று தோன்றும். ஒரு ரன் அவுட், உடனே நிலைமை மாறும். இப்படியாகத்தான் அவ்வப்பொழுது புக்கியிடமிருந்து கிடைக்கும் spread-உம் மாறுபடும். அதற்குத் தகுந்தாற்போல சூதாடுபவர் ஒருவர் அவ்வப்போது கிடைக்கும் spread-ஐ விற்றோ, வாங்கிக்கொண்டோ இருப்பார்.

சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் சூதாட்டங்கள் எல்லாம் அதிகபட்சம் இந்த spread betting முறையில்தான் நடக்கின்றன என்று அறிகிறேன். இதில்தான் ஆட்டத்தை 'fix' செய்வதற்கும் அதிக வாய்ப்புகள். ஹன்சி குரோன்யே தன் வாக்குமூலத்தில் இதுமாதிரியான fixing-இல்தான் தான் ஈடுபட்டதாகச் சொன்னார்.
ஆனால் பிரிட்டன் போன்ற நாடுகளில் இப்படிப்பட்ட spread betting நிறுவனங்கள் அரசினால் கட்டுப்படுத்தப்பட்டு இயங்குகின்றன. பிரிட்டனின் FSA எனப்படும் Financial Services Authority (இந்தியாவில் SEBI, அமெரிக்காவில் SEC போன்ற) பங்குச்சந்தை மற்றும் இதர பண சம்பந்தப்பட்ட தரகர்கள், நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் வாரியம்தான் spread betting நிறுவனங்களையும் கட்டுப்படுத்துகிறது.

கிரிக்கெட்டில், ஓர் அணியில் எண்ணிக்கையைத் தவிர பல்லாயிரக்கணக்கான நிகழ்வுகளுக்கு spread தரலாம். ஒரு போட்டித்தொடரில் டெண்டுல்கர் மொத்தமாக எத்தனை ரன்கள் அடிப்பார், ஓர் அணி எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் ஒரு போட்டியை ஜெயிக்கும், இர அணி விக்கெட்கீப்பர்களும் சேர்ந்து எத்தனை ரன்கள் எடுப்பர்... என்று என்ன எண்ணிக்கையை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு ஒரு புக்கி அதற்கு ஒர spread கொடுக்கலாம்.

இதைப்பார்க்கும்போது, அடடா, புக்கி என்று ஒருவர் எதற்கு, நானும், என் பக்கத்து சீட் நண்பனும் எங்களுக்குள்ளேயே பெட் வைத்துக்கொள்வோமே என்று தோன்றும். நான் ஜெயித்தால் அவன் எனக்கு லன்ச் வாங்கிக் கொடுக்கவேண்டும், தோற்றால் நான் அவனுக்கு. இதையே P2P பெட்டிங் சந்தைகள் இணையம் வழியாக நடத்த வகை செய்கின்றன. இது கிட்டத்தட்ட Ebay-யில் நடப்பதைப் போன்றது. கண்ணுக்குத் தெரியாத இரண்டு பேர் ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தின் ஒரு குறிப்பிட்ட நிகழ்வின்மீது பெட்டிங் வைத்துக் கொள்ளலாம்.




 பெட்டிங் பற்றி ஓரளவுக்கு பார்த்தோம். சில முக்கியமான தகவல்கள் இப்பது.

  1. இந்தக் கட்டுரைகளில் மூலம் நான் யாரையும் கிரிக்கெட்டில் சூதாடுங்கள் என்று சொல்வதாக நினைக்கக்கூடாது.
  2. நான் வேலை பார்க்கும் நிறுவனம் - Wisden Cricinfo அனுமதிக்கப்பட்ட ஒருசில பெட்டிங் நிறுவனங்களிடமிருந்து விளம்பரங்களைப் பெறுவதன்மூலம் பொருள் ஈட்டுகிறது.
  3. இணையம் வழியாகச் சூதாடுவதை உங்கள் நாட்டின் அரசாங்கம் நேரடிச் சட்டம் அல்லது வெளிப்படையான directives மூலமாகத் தடை செய்திருக்கலாம். உதாரணத்துக்கு இந்தியாவில் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் இணையச் சூதாட்டக் கடைகளில் பணம் போட முயன்றால் உங்கள் கிரெடிட் கார்டு வங்கி அதனை அனுமதிக்காது. இந்தியாவின் ரிசர்வ் வங்கி, ஒவ்வொரு கிரெடிட் கார்டு நிறுவனத்திடமும் அன்னியச் செலாவணி தருவதைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் இதை நிலைநாட்டுகிறது.
  4. சூதாடுவது சில மதங்களின் கோட்பாடுகளுக்கும் விழுமியங்களுக்கும் எதிரானதாக இருக்கலாம்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம். 

3 comments:

  1. உள்ளே வெளியே என்று பல தலைமுறைகளாக மங்காத்தா ஆடும் தமிழனுக்கு fixed odds betting ,spread betting புரியாது என்ற எண்ணமா
    உள்ளே வெளியே தான் fixed odds betting
    முதல் வரும் கார்ட் ச்பேடா ,டியமொண்டா,ஆர்டினா,கிளாவெரா என்று வைக்கும் பெட் spread பெட்டிங்.
    கடைகோடி தமிழன் வரை ஆடும் மங்காத்தா betting செய்வதற்காகவே உருவான ஆட்டம்.அதில் அவன் இன்னும் பல பெயரிடப்படாத betting களையும் கண்டு பிடித்த பெருமைக்குரியவன்.
    முதல் ஐந்து கார்டில் வெற்றி இருக்காது என்று spread பெட்டிங் இன் பரிமாணங்களை கடலளவு உயர்த்திய இனம் தமிழினம்
    இந்த கார்டில் வெற்றி என்று சொல்லி ஜாக்பாட் அடிப்பவன் தமிழன்
    பெட்டிங் செய்பவர்களில் யார் அதிக முறை வெற்றி பெறுவார்கள் என்று பெட்டிங் செய்பவர்கள் மேலேயே பெட்டிங் கிட்டும் இனத்திற்கே பெட்டிங் பற்றி விளக்கமா

    ReplyDelete
  2. ஷேர் மார்க்கெட்டிர்க்கும் மங்காத்தாவுக்கும் மிக அதிக அளவில் ஒற்றுமை உண்டு.வித்தியாசங்கள் கண்டுபிடிப்பது தான் கடினம்.
    ஒவ்வொரு கார்டும் ஏற ஏற கட்டப்படும் பணமும் அதிகமாகும்.கில்லாடி ஆட்டக்காரன் வாங்கும் ஷேர்களை அனைவரும் வாங்குவது போல இங்கும் கில்லாடி கட்டும் பக்கத்தில் சாய்பவர்கள் பலர் உண்டு.
    இன்றைய ஷேர் மார்கெட் போல இங்கு அனைவரும் நேரடியாக ஆடலாம்.புக்கி என்ற இடைதரகருக்கு வேலை கிடையாது.தன்னுடைய ஆட்டத்தை பாதியில் குறைந்த விலைக்கு,அல்லது அதிக விலைக்கு இன்னொரு ஆட்டக்காரனுக்கு விற்று விட்டு விலகி விடலாம். ஆட்டத்தின் பாதியில் குறைந்த அல்லது அதிக விலை (வாங்கும் ஆட்டகாரனின் ராசி @செண்டிமெண்ட் பொறுத்து )கொடுத்து வாங்கி ஆட்டத்தில் இறங்கலாம்

    ReplyDelete
  3. லீனஸ்.லிSun May 19, 12:03:00 AM GMT+5:30

    Whether BCCI comes within the ambit of ‘State’?

    In M/S Zee Telefilms Ltd. & Anr vs Union Of India, A five-Judge constitution bench, comprising Justice N Santosh Hegde, Justice S N Variava, Justice B P Singh, Justice H K Sema and Justice S B Sinha, gave this landmark ruling while dismissing a writ petition filed by Zee Telefilms Ltd seeking relief against the Board for alleged arbitrary cancellation of its bid for telecast rights of all cricket matches played in India for a period of four years.

    The ruling was given by a 3:2 majority. While Justice Hegde, Justice Singh and Justice Sema held that the BCCI is not a State and dismissed Zee's petition, Justice Variava and Justice Sinha held that the Board is a State within the meaning of Article 12 of the Constitution. Zee had argued that the BCCI in India is a 'State' as it selects the Indian team and was given de facto recognition by the Union Government to carry out the functions, and requested the court to scrutinize its action of cancelling the bid for telecast under writ authority. Justice Hegde, writing the majority judgment, observed that the Government of India had not passed any law authorising the BCCI to select the Indian team, and the control exercised by it over the regulating body for cricket, at best, could be termed as regulatory, which is not enough to declare BCCI as a 'State

    மேற்படி தீர்ப்பின்படி BCCI இந்திய அரசியலமைப்பு சட்டம் சரத்து 12ல் கண்ட ‘அரசு’ எனும் பதத்தில் அடங்காது. ஒருவேளை BCCI அரசு’ எனும் பதத்தில் அடங்கும் என்று தீர்ப்பு அளிக்கபட்டிருந்தால் இன்று கிரிகெட்டில் நடக்கும் அவலங்களை களைய பிசிசிஐ மீது உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருக்கமுடியும். தீர்ப்புகள் எப்போதுமே மாற்றங்களுக்கு உட்பட்டவை. பொறுத்திருந்து பார்போம்.

    ReplyDelete