Friday, May 17, 2013

ஸ்பாட் ஃபிக்சிங்

சென்ற பதிவைப் படித்துவிடுங்கள்.

பெட்டிங்/கேம்ப்ளிங் (சூதாட்டம்) வேறு. மேட்ச் ஃபிக்சிங் வேறு.

பணத்துக்காக மேட்ச் ஃபிக்சிங் செய்ததாக முதலில் மாட்டிக்கொண்ட பெரிய கிரிக்கெட் வீரர், தென்னாப்பிரிக்க கேப்டனாக இருந்த ஹன்சி குரோன்யே. அவர்தான் முதன்முதலில் மேட்ச் ஃபிக்சிங் செய்தார் என்று நினைக்கக்கூடாது. அவர்தான் முதலில் மாட்டிக்கொண்டவர்.

ஆனால் அப்போதுதான் இது குறித்து பல தகவல்கள் வெளியே தெரிய ஆரம்பித்தன. அன்றிலிருந்து நேற்று மாட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள்வரை தங்கள் திறமையை அதிகரித்துக்கொண்டே போயிருக்கிறார்கள்.

இந்தியா, பாகிஸ்தான் நாட்டு விளையாட்டு வீரர்கள் மேட்ச் ஃபிக்சிங்கில் அதிகமாகத் தொடர்பு உடையவர்களாகத் தெரிகிறார்கள். நம் நாட்டு விழுமியங்கள் மோசமாகிக்கொண்டே போவதன் அறிகுறிதான் இது. பாகிஸ்தானை விட்டுவிடுவோம். இந்தியாவில் கிரிக்கெட்டில் எக்கச்சக்கமான பணம் கிடைக்கிறது. ஆனாலும் ஈசியாக ஒரு பந்தை ஒரு குறிப்பிட்ட மாதிரி போட்டால், 60 லட்சம் ரூபாய் என்றால் கசக்கவா செய்யும் என்று விளையாட்டு வீரர்களுக்குத் தோன்ற, அவர்கள் கெட்ட காரியத்தில் ஈடுபடுகிறார்கள்.

பணத்தை வழிபாடு செய்யும் நாட்டில் அர்ச்சகர் முதல் அரசியல்வாதி வரை ஊழல் செய்யும்போது விளையாட்டு வீரனுக்கு மட்டும் என்ன குறை?

***

மேட்ச் ஃபிக்சிங்கில் ஆரம்பத்தில், ஆட்டத்தின் போக்கை மாற்றுவதன்மூலம் பணம் கை மாறியது. இதிலும் கொள்கையற்ற இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் அதிகமாக இடம் பெற்றனர். ஆனால் ஹன்ஸி குரோன்யே, ஆட்ட முடிவுகளில் தான் கைவைக்க விரும்பவில்லை, வேண்டுமென்றால் மேட்ச் ஃபிக்சிங்குக்கு பதில் ஸ்பாட் ஃபிக்சிங் செய்துகொள்ளலாம் என்று இந்தத் துறையின் முன்னோடியாக இருந்தார் என்று நினைக்க நிறையச் சான்றுகள் உள்ளன. (ஹன்சி குரோன்யே விஷயத்தை ஆராய, தென்னாப்பிரிக்கா கிங்ஸ் கமிஷன் என்ற ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்தின் அறிக்கை எனக்குக் கிடைத்தது. அதனை நாங்கள் கிரிக்கின்ஃபோ மூலம் வெளியிடுவதாக இருந்தோம். பின்னர் அந்த ஆணை மறைக்கப்பட்டது. பின்னர் சில மாதங்கள் கழித்து ஒரு மாதிரியான ஆகாய விபத்தில் குரோன்யே மரணம் அடைந்தார்.)

மேட்ச் ஃபிக்சிங் செய்யவேண்டுமானால் நிச்சயமாக கேப்டன் அல்லது மிக முக்கியமான சீனியர் வீரர்கள் ஆதரவு தேவை. கேப்டனுக்கு எதிராக ஒரு கொத்து வீரர்கள் கலகம் செய்து மேட்ச் ஃபிக்ஸ் செய்வது கடினம். குரோன்யே, அசாருத்தீன், சலீம் மாலிக், சல்மான் பட் ஆகியோர்மீதான குற்றச்சாட்டுகளை இந்த அடிப்படையில் பாருங்கள். கிரிக்கெட் ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் பொதுவாக கேப்டன் சொன்னதைச் செய்வதற்குத்தான் இருக்கிறார்கள்.

மாறாக ஸ்பாட் ஃபிக்சிங் என்பதை எந்தக் கழுதையும் செய்யலாம். மன்னிக்கவும், பௌலிங் கழுதைகளுக்குத்தான் இது சாத்தியம். அவர்கள்தான் தங்கள் சில நிகழ்வுகளைத் தாங்களே தீர்மானிக்கிறார்கள். பேட்ஸ்மேன், பந்துவீச்சாளரின் பந்துக்கு ரியாக்ட் செய்கிறார். ஃபீல்டர், பேஸ்மேனின் அடிக்கு ரியாக்ட் செய்கிறார். பந்துவீச்சாளர் நினைத்தால் வைட் போடலாம், நோ பால் போடலாம். லாலிபாப் போட்டு சிக்ஸ் கொடுக்கலாம்.

குரோன்யே, சில இளம் விளையாட்டுவீரர்களை வைத்துக்கொண்டு இந்த சித்து விளையாட்டுகளை ஆரம்பித்தார். யார் முதல் ஓவர் போடுவார்கள் என்பதிலிருந்து, எந்த ஓவரில் எத்தனை வைட், நோ பால், ரன்கள் கொடுக்கப்படும் ஆகியவற்றை குரோன்யே தீர்மானித்தார். நிறையப் பணம் சம்பாதித்தார். கடைசியில் அவமானப்பட்டு செத்துப்போனார்.

அடுத்த கட்டமாக, கேப்டனைத் தொடுவதில் நிறையப் பிரச்னைகள் உள்ளன என்பதைப் புரிந்துகொண்ட ஃபிக்சர்கள், ஸ்ரீசாந்த் போன்ற குழந்தைகளைப் பிடித்துக்கொண்டனர்போலும். சென்ற ஐ.பி.எல்லில் அம்பயர்களை வைத்து சில காரியங்களைச் செய்ய ஃபிக்சர்கள் திட்டமிட்டதை இந்தியா டிவி அமப்லப்படுத்த, மூன்று அம்பயர்கள் தடை செய்யப்பட்டனர். இம்முறை மூன்று விளையாட்டு வீரர்கள்.

ஐ.பி.எல் போன்ற ஆடுகளத்தில், எக்கச்சக்க அர்த்தமில்லாத விளையாட்டுகள் நடைபெறும்போது சைடில் கொஞ்சம் பணம் பார்க்கலாம் என்று சில இளைஞர்களுக்குத் தோன்றுகிறது. இவர்கள் பொதுவாக யார் என்று பாருங்கள். இனி மீண்டும் சர்வதேச அணியில் விளையாடச் சாத்தியம் இல்லாதவர்கள் அல்லது எக்காலத்திலும் இந்திய அணிக்குள் நுழையச் சாத்தியம் இல்லாதவர்கள். மார்க்கெட் போன நடிகை, சகலவித பணம் சம்பாதிக்கும் வேலைகளிலும் இறங்குவதைப்போலத்தான் இது.

***

ஐ.பி.எல்லே ஒரு சூதாட்டம், இதில் சீனு மாமாவும் முகேஷ் பாயும் ஆட்டத்தின் போக்கைத் தீர்மானிக்கிறார்கள் என்பதாகச் சொல்லப்படுவதை நான் நம்பவில்லை. இங்கே பல சுழல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. சீனு மாமாவோ முகேஷ் பாயோ உத்தமர்கள் இல்லை. ஆனால் இந்தச் சில்லறை விஷயத்தில் ஈடுபட்டு அசிங்கப்படுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். அவர்கள் விளையாடும் தொழில்துறை இன்னமும் பெரியது; மேட்ச் ஃபிக்சிங் பணத்தைப் போல பல ஆயிரம் மடங்கு பெரியது.

ஆனால் ஸ்ரீசாந்தோ இன்னபிறரோ, இப்படி தாங்கள் மாட்டிக்கொண்டு அசிங்கப்படுவோம் என்று நினைத்திருக்க மாட்டார்கள். குற்றம் செய்யும் அனைவருமே துரதிர்ஷ்டவசமாக இப்படியே நினைக்கிறார்கள் என்பதுதான் சோகம். (இப்போது இவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதே தவிர, இவர்கள் இன்னமும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு சொல்லப்படவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக்கொள்கிறேன்.)

இன்று ஹலோ எஃப்.எம் திருச்சி நிலையத்துக்குப் பேட்டி கொடுத்தபோது, கிரிக்கெட்டையே நிறுத்திவிடவேண்டும் என்பதாகச் சிலர் கோரிக்கை வைப்பதாக நிகழ்ச்சியை நடத்துபவர் சொன்னார். அது அபத்தம் என்று என் கருத்தைச் சொன்னேன். நான் பெரும்பாலும் ஐ.பி.எல் பார்ப்பதில்லை. கிரிக்கின்ஃபோ தளத்தில் பாயிண்ட்ஸ் டேபிள் பார்ப்பதோடு சரி. ஐ.பி.எல்மீது அவ்வளவு ஈர்ப்பு ஒன்றும் இல்லை. இதில் நடக்கும் சில்லறைத் தவறுகளுக்காக ஓர் ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக நிறுத்தச்சொல்வது நம் நாட்டில்தான் நடக்கும். அப்படியே உணர்ச்சிவசப்பட்டுக் கொட்டிவிடுவோம்.

இறுதியாக, உறுதியாக... ஐ.பி.எல் மாதிரி உள்ளூர் பஜனை ஆட்டங்கள் இருக்கும்வரை மேட்ச் ஃபிக்சிங் கட்டாயம் தொடரும். ஏனெனில் சட்டபூர்வம் அல்லாத சூதாட்டம் தொடரும். அதைச் செய்பவர்கள் சட்டத்துக்குப் புறம்பாகப் பணம் ஈட்ட முயற்சி செய்வார்கள். இதனை நிறுத்துவது கடினம். அதற்கு மிகவும் மெனக்கிடவேண்டும். பிசிசிஐக்கு அதற்கான விருப்பமும் ஆர்வமும் இல்லை.

4 comments:

  1. /******பணத்துக்காக மேட்ச் ஃபிக்சிங் செய்ததாக முதலில் மாட்டிக்கொண்ட பெரிய கிரிக்கெட் வீரர், தென்னாப்பிரிக்க கேப்டனாக இருந்த ஹன்சி குரோன்யே. அவர்தான் முதன்முதலில் மேட்ச் ஃபிக்சிங் செய்தார் என்று நினைக்கக்கூடாது. அவர்தான் முதலில் மாட்டிக்கொண்டவர்.****/
    Like it :) :) :)

    ReplyDelete
  2. எனக்கு வரும் முதல் இரண்டு பந்துகளில் ரன் எதுவும் எடுக்கமாட்டேன். மூன்றாவது பந்தை கிரீசை விட்டு வெளியே வந்து விளையாடுவேன். நான் இரண்டாவது ரன் ஓட நேரிட்டால் கிரீசில் பேட்டை வைக்காமல் (ஒன் ஷார்ட்டாக) ஓடுவேன்.

    நான் பீல்ட் செய்யும்போது பந்தை வலது காலால் தடுப்பேன். இரண்டாவது முறை இடது கையால் தட்டிவிடுவேன்.

    பவுலர் பந்து போடா ஓடி வரும்போது (அம்பயராக ) அவரது ஐந்தாவது பந்தை நிறுத்தச்சொல்லி மறுபடியும் ஓடி வர சொல்வேன்.

    ReplyDelete
  3. மேனேஜர் இன்று லேட்டாக் வருவார் என்ன பெட் கட்டறே என்று ஆபீசில் சக ஊழியர்கள் பந்தயம் கட்டுவது உண்டு.எதன் மீது வேண்டுமானாலும் பெட் கட்ட முடியும்.
    இங்கிலாந்து சூதாட்டத்துக்குப் பெயர் போன நாடு. அங்கு சூதாட்டம் சட்ட பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.தெருவுக்குத் தெரு பெட்டிங் ஷாப்புகள் உண்டு.
    திருமணமாகி விட்ட கும்கிதேவிக்கு பெண் குழ்ந்தை பிறக்குமா ஆண் குழந்தை பிறக்குமா என்று கூட நீங்கள் பெட் கட்டலாம்.
    இந்தியாவில் குதிரைப் பந்தயம் தவிர, மற்றதன் மீது சூதாட்டம் அதாவது பெட் கட்டுவது அனுமதிக்கப்படவில்லை.
    ஐந்து நாள் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளின் போக்கு மீது பெட் கட்டுவதற்கு வாய்ப்பு குறைவு.ஆனால் 20 ஓவர் ஆட்டம் என்பது விறுவிறுப்பானது நிமிஷத்துக்கு நிமிஷம் நிலைமை மாறும். ஆகவே பெட் கட்டுவதற்கு வாய்ப்பு அதிகம்.
    இந்திய அரசு சூதாட்டத்தை அனுமதிக்கவில்லை என்றாலும் வெளி நாடுகளில் ஐ.பி.எல் ஆட்டங்கள் மீது நிறையவே பெட் கட்டப்பட்டு ஏராளமான பணம கைமாறுகிறது.இதை இந்திய அரசினால் அல்லது கிரிக்கெட் வாரியத்தால் தடுக்க இயலாது.
    ஐ பி எல் போட்டிகளில் பங்கு பெறுவர்கள் இந்த பெட்டிங் கும்பலுக்கு உடந்தையாக இருந்து அதற்கேற்ப தங்கள் ஆட்டத்தில் மாறுதல் செய்யும் போது தான் பிரச்சினை வருகிறது.
    மூன்று ஆட்டக்காரர்கள் அதாவது பந்து விச்சாளர்கள் இப்ப்டி பெட்டிங் கும்பலுக்கு இசைவாக நடந்து கொண்டதாக் இப்போது சொல்லப்படுகிறது.
    முன்னர் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடப்பட்ட போது 11 அல்லது 15 விளையாட்டு வீரர்களைக் கண்காணித்து அவர்கள் தவறு செய்யாமல் தடுக்க முடிந்தது.
    ஆமா; இன்று ஐ பி எல் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் எண்ணிக்கை 200 க்கு மேல் இருக்கும். இவர்கள் மீது கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிப்பு செலுத்த இயலாது.
    இப்போது நடந்ததாகக் கூறப்படும் தில்லுமுல்லு போலீஸ் மூலம் தான் வெளியே வந்ததே தவிர, கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இதைக் கண்டுபிடிக்கவில்லை.
    அந்த அளவில் எதிர்காலத்தில் இப்படியான தில்லுமுல்லுகள் நடைபெறுவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. காரணம், போலீசாருக்கு எவ்வளவோ வேலை இருக்க வருகிற ஆண்டுகளில் நடைபெறுகின்ற போட்டிகளில் எந்த கிரிக்கெட் வீரர் யாரை சந்தித்தார் என்ன பேசினார் என்று இதே வேலையாக 200 கிரிக்கெட் வீரர்களையும் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது.
    ஆகவே ஐ பி எல் போன்ற ஆட்டங்களை நடத்துவதை அடியோடு கைவிட வேண்டும். அல்லது இப்போட்டிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இழந்து அவர்களின் புறக்கணிப்பு விளைவாக இவ்விதப் போட்டிகள் தானாக நிற்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. "இதில் நடக்கும் சில்லறைத் தவறுகளுக்காக ஓர் ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக நிறுத்தச்சொல்வது நம் நாட்டில்தான் நடக்கும். அப்படியே உணர்ச்சிவசப்பட்டுக் கொட்டிவிடுவோம்."
      Specifically for people like you who at the drop of the hat want a ban on everything

      Delete