Friday, December 13, 2013

மணி ரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல்

சென்னை புத்தகக் கண்காட்சியின்போது வெளியாக உள்ள புத்தகம் இது. பரத்வாஜ் ரங்கன் ஆங்கிலத்தில் எழுதி பெங்குவின் வெளியிட்ட இந்தப் புத்தகம் இப்போது அரவிந்த் சச்சிதானந்தத்தின் மொழிபெயர்ப்பில் கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியாகிறது.

*

டைம்ஸ் வெளியிட்ட மிகச் சிறந்த 100 திரைப்படங்கள் பட்டியலில் நாயகன் இடம்பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானை உலகுக்கு அறிமுகப்படுத்தியது, ரோஜா. இந்த இரு படங்கள் மட்டுமல்ல, மணி ரத்னம் இயக்கிய 19 பிற படங்களும் ஒவ்வொரு வகையில் வெவ்வேறு காரணங்களுக்காகத் தனித்தன்மையுடன் திகழ்கின்றன.

இருந்தும் மணி ரத்னம் குறித்து நமக்கு அதிகம் தெரியாது என்பதே ஆச்சரியமளிக்கும் உண்மை. இந்தப் படங்களை அவர் எப்படிக் கற்பனை செய்தார்? காட்சியமைப்புகள் குறித்து எப்படிச் சிந்தித்தார்? சினிமாவுக்குமுன் அவர் வாழ்க்கை எப்படி இருந்தது?

முதல்முறையாக மணி ரத்னம் தன்னைப் பற்றியும் தன் படங்கள் பற்றியும் மனம் திறந்து விரிவாக இந்தப் புத்தகத்தில் உரையாடியிருக்கிறார். பரத்வாஜ் ரங்கனின் அற்புதமான முயற்சியால் இது சாத்தியமாகியிருக்கிறது. அதிகம் பேசாதவர் என்று அறியப்பட்ட மணி ரத்னத்திடம் ஆழகாகவும், வெளிப்படையாகவும், காரசாரமாகவும் கேள்விகள் கேட்டு சரளமாக உரையாட வைத்திருக்கிறார் பரத்வாஜ் ரங்கன்.

அக்னிநட்சத்திரத்தில் காணப்படும் நகர்ப்புற உறவுச் சிக்கல்கள், பம்பாயின் தேசியவாதம், அஞ்சலி இயக்கப்பட்ட விதம், ஒளியமைப்பில் செய்த புதுமைகள், இளையராஜா, ரஹ்மான் இருவருடைய மாறுபட்ட பாணிகள், நாயகன் படத்துக்கு கமல் ஹாசன் கொடுத்த புதிய பரிமாணங்கள், ராவணன் படத்தின் பின்னணி என்று சுவாரஸ்யமான பல விஷயங்கள் இதில் உள்ளன. பாலு மகேந்திரா, பி.சி.ஸ்ரீராம், தோட்டா தரணி, வைரமுத்து, குல்சார் போன்ற திறமைசாலிகளுடனான இனிய நினைவலைகளும் இடம்பெற்றிருக்கின்றன.
போஸ்டர்கள், திரைக்கதைப் பக்கங்கள், படங்கள் ஆகியவற்றுடன் வெளிவரும் இந்தப் புத்தகம் தீவிர திரைப்பட ரசிகர்களுக்கும் சாமானிய வாசகர்களுக்கும் நல்லதொரு விருந்தை அளிக்கிறது.

*

பரத்வாஜ் ரங்கன்

தேசிய விருது பெற்ற திரை விமர்சகர். ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழின் துணை ஆசிரியர். ‘ஓப்பன்’, ‘தெஹல்கா’, ‘பிப்லியோ’, ‘அவுட்லுக்’, ‘கேரவான்’ போன்ற தேசிய இதழ்களில் திரைப்படங்கள், இசை, ஓவியம், புத்தகங்கள், பயணம், நகைச்சுவை போன்றவை பற்றி இவர் எழுதியவை இடம்பெற்றுள்ளன. தமிழ் ரொமாண்டிக் காமெடித் திரைப்படமான ‘காதல் 2 கல்யாணம்’ திரைப்படத்தின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவர். சென்னையில் இருக்கும் ‘ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்’ கல்லூரியில் திரைப்படம் பற்றி வகுப்புகள் எடுத்துவருகிறார்.

*

அரவிந்த் சச்சிதானந்தம்

மெட்ராஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பொறியியல் பட்டம் பெற்று, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றியவர். தற்போது முழு நேரப் படைப்பாளியாக இயங்கிக்கொண்டிருக்கிறார். இவரது கதைகளும் கட்டுரைகளும், பல்வேறு இதழ்களிலும் தளங்களிலும் வெளியாகியுள்ளன. தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி வரும் இவர், குறும்படங்களையும், கார்ப்பரேட் வீடியோக்களையும் உருவாக்கியிருக்கிறார்.

4 comments:

  1. I missed this post. Hence asked for query on the translation author of this book in twitter. BTW, i did not see your tweets on blog post published. Are n't they coming or i missed them.

    ReplyDelete
    Replies
    1. You have missed my tweets. There were at least two tweets on this.

      Delete
  2. விலை? பட்ஜெட் போடணும்... அதான்...:)

    ReplyDelete
  3. I'm a Telugu and great fan of Mani sir. Sir, you did a great job by traslating it into Tamil.

    ReplyDelete