Wednesday, January 22, 2014

எழுத்தாளரின் உரிமைகள்

(உரிமை = Rights; உரிமம் = license என்ற பொருளில் பயன்படுத்துகிறேன்.)

நேற்று கோவையில் தமிழ்ப் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்திருந்த தாயகம் கடந்த தமிழ் என்ற மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். அதில் தொழில்நுட்பம் குறித்தான ஓர் அமர்வில் கவிஞர், முனைவர் சேரன் தலைமை தாங்க, எஸ்.ஆர்.எம் துணைவேந்தர் பேரா. பொன்னவைக்கோ, முத்து நெடுமாறன், நான், திருமூர்த்தி ரங்கநாதன் ஆகியோர் பேசினோம்.

திருமூர்த்தியும் நானும் மின் புத்தகங்கள் குறித்துப் பேசியிருந்தோம். இளைய அப்துல்லா அதுகுறித்துப் பல கேள்விகள் கேட்டார். அவை குறித்து அமர்வின் இறுதியில் பதில் அளிக்க நேரம் இருக்கவில்லை. இவற்றைப் பல பதிவுகளாக என் வலைப்பதிவில் எழுதுவதாகச் சொன்னேன்.

விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒலி/ஒளிபரப்பும் உரிமை, அவற்றின் வணிக சாத்தியங்கள் ஆகியவை குறித்து எனக்கு நிறைய அனுபவம் உண்டு. வணிக சாத்தியங்கள் அதிகமாக, அதிகமாக, புதுப்புது உரிமைகளை ஏற்படுத்தி அவற்றைச் சொத்தாக ஆக்குவது நிகழ்கிறது. அப்போது ஏற்கெனவே ஏகபோக உரிமைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் பலரும் பலமான எதிர்ப்புச் சக்திகளாக உருவாகி, புதுமைகளைத் தடுக்க முனைவதுண்டு. இவை இரண்டுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் இறுதியாக உரிமைகள் கூர்மையான வடிவத்தை அடையும்.

ஒரு கட்டத்தில் கிரிக்கெட் ஆட்டத்தைப் பொருத்தமட்டில், கேபிள் & சாடிலைட் உரிமைதான் மிக அதிகப் பணத்தைத் தந்தது. வானொலி ஒலிபரப்பிலிருந்து குறைவான பணம். வேறு பண வாய்ப்புகள் ஏதும் இருக்கவில்லை. கேபிள் & சாடிலைட் உரிமை, நாடு அல்லது பிராந்திய அளவில் பிரிக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் தரைவழி (terrestrial) தொலைக்காட்சி உரிமை தனியாகப் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது (அல்லது இந்தியாவில் சட்டம் இயற்றுவதன்மூலம் தூரதர்ஷனால் அபகரிக்கப்பட்டது). இன்றும் கேபிள் & சாடிலைட் உரிமைதான் அதிகமான பணத்தைத் தருகிறது. ஆனால் விளம்பரம் இல்லாத டிடிஎச் ஹை-டெஃப் ஒளிபரப்பு, இணைய பே-பெர்-வியூ ஒளிபரப்பு, விளம்பரங்கள் அடங்கிய இணைய இலவச ஒளிபரப்பு என்றெல்லாம் புதிய வழிகளில் வருமானம் வரத் தொடங்கியுள்ளது.

திரைப்பட உரிமைகள் குறித்து பல சினிமாத்துறை நண்பர்களிடம் பேசியிருக்கிறேன். தியேட்டர் விநியோகம்தான் இன்றும் மிகப் பெரிய வருமானம் தரும் துறை. அடுத்ததாக, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை. விஷ்வரூபம் படம்தான் தமிழில் டிடிஎச் பற்றிப் பேசி புரிதலைச் சற்றே மாற்றியுள்ளது. இணையம் அல்லது டிடிஎச் வழியாகப் புதுப் படத்தை வீட்டுக்கே கொண்டுவருவது விரைவில் நடக்கும். அதிக வருமானம் கொடுத்தாலும் தியேட்டர் விநியோகஸ்தர்கள் பிரிந்து கிடப்பதால், அவர்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் பணத்தைச் சம்பாதித்து முடிக்கும்வரை, வேறு வழிகளில் படத்தைக் காண்பித்துவிடாதீர்கள் என்பது மட்டும்தான். ஆனால் தொலைக்காட்சி உரிமையை வாங்குபவர்கள் கைக்குக் கிடைத்ததையெல்லாம் எழுதி வாங்கிக்கொண்டுவிடுகிறார்கள். வெகுசில சினிமா தயாரிப்பாளர்கள் மட்டுமே உரிமைகளைச் சரியாகப் பிரித்து எதைத் தாம் கையில் வைத்திருப்பது, எதை விற்பது என்று தீர்மானித்து அதற்கு ஏற்றாற்போல் நடந்துகொள்கிறார்கள்.

எழுத்தாளர்கள் (அதுவும், தமிழ் எழுத்தாளர்கள்) இவைகுறித்தெல்லாம் அதிகம் கவலைப்பட்டதில்லை. இதுவரை. ராயல்டி பெறுவதற்கே கஷ்டப்படும்போது...

ஆனால் இங்கும் இப்போது வாய்ப்புகள் நிறைய வரப்போகின்றன.

எழுத்தாளர் எழுதும் எதற்குமான காப்புரிமை (Copyright) அவரிடமே இருக்கிறது. இது ஒரு பதிப்பாளரிடம் போய் சில எடிட்டோரியலாகச் சில மாற்றங்களை அடைந்தாலும்கூட இறுதி வடிவத்துக்கான காப்புரிமையும் அற உரிமையும் (Moral rights) எழுத்தாளரைச் சார்ந்தது. காப்புரிமை என்பதைப் பிறருக்கு விற்கலாம். பிறர் பெயரில் எழுதிவைக்கலாம். ஆனால் அற உரிமை பணம் சார்ந்தது அல்ல. அது எழுத்தாளரிடம் எப்போதும் இருக்கும். அற உரிமை என்பது இந்த எழுத்து இவருடையது என்று குறிக்கப்பெறுவது. அந்த எழுத்தை எழுத்தாளரின் அனுமதி இன்றி மாற்ற முடியாது. அந்த எழுத்தை முற்றிலும் சிதைத்து அல்லது ஒரு பாத்திரத்தின் குணாதிசயத்தை மாற்றி அதே எழுத்தாளரின் பெயரில், அவரது அனுமதி இன்றி வெளியிட முடியாது. காப்புரிமையை ஓர் எழுத்தாளர் இன்னொருவருக்கு விற்றபின்னாலும், தன் எழுத்து எந்தவிதத்திலும் மாற்றப்படாமல் இருக்க அற உரிமையைப் பயன்படுத்தி வழக்கு தொடுக்கலாம்.

காப்புரிமையை விற்கலாம். அதற்கான பணத்தைப் பெற்றுக்கொண்டுவிட்டு. அல்லது பணமே வேண்டாம் என்று ஒருவர் உரிமையைத் துறக்கலாம். அனைத்துக்கு சட்டபூர்வமான இடமுண்டு.

பொதுவாக ஒரு மாத, வார இதழில் அல்லது தினசரியில் உங்களிடமிருந்து ஒரு கட்டுரை, கதை, கவிதை கேட்கிறார்கள் என்றால் அதனை எடிட் செய்து பதிப்பிக்கும் உரிமையை அவர்கள் கோருகிறார்கள். அதை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அதுதான் அடிநாதம். அதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். இந்த இதழ்கள் படைப்புகளைக் கோரும்போது முன்னதாக உங்களிடம் எழுத்துமுறையில் ஒப்பந்தம் கோருவதில்லை. பெரும்பாலும் வாய் வார்த்தை அல்லது இப்போதெல்லாம் மின்னஞ்சலும்கூட இருக்கலாம். இந்தப் பேச்சுவார்த்தை நடக்கும்போது ஒரு சிலர்தான் சன்மானம் எவ்வளவு என்பதைச் சொல்வார்கள். அல்லது பழக்கம் காரணமாக (சென்ற கட்டுரைக்கு ரூ. 500 கொடுத்தால், இந்தக் கட்டுரைக்கும் கிட்டத்தட்ட அதே வரலாம் என்று நீங்கள் நினைத்துக்கொள்ளலாம்) நமக்கு எவ்வளவு கிடைக்கலாம் என்பதை நீங்கள் அனுமானித்துக்கொள்ளலாம். நீங்கள் முன்னதாகப் பேசிக்கொள்ளவில்லை என்றால் பணம் தரப்படவில்லை என்றால் நீங்கள் புகார் சொல்ல முடியாது. கூடாது.

ஆனாலும் நீங்கள் எழுதிய படைப்புக்கு (அதன் எடிட் செய்யப்பட்ட வடிவம், எடிட் செய்யப்படாத முதல் வரைவு என இரண்டையும் சேர்த்து) நீங்கள்தான் காப்புரிமைதாரர். தெளிவான கடிதத்தில் படைப்பின் காப்புரிமை தங்கள் இதழுக்கு எழுதி வாங்கிக்கொள்ளப்படுகிறது என்று அந்த இதழ் சொல்லி, அதை நீங்கள் ஒப்புக்கொண்டு கையெழுத்து இட்டிருந்தால் ஒழிய, அந்த இதழ் உங்கள் எழுத்துக்கு உரிமை கோரமுடியாது. இந்தியக் காப்புரிமைச் சட்டம் இதில் தெளிவாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட இதழில் ஏழாம் பக்கத்தில் சின்னதாக ஏதோ எழுதியிருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். அவர்களுக்கு நீங்கள் எழுத்துபூர்வமாகக் கையெழுத்திட்டுத் தரவில்லை என்றால் காப்புரிமை உங்களிடம்தான். இவை அனைத்தும் இணைய இதழுக்கு எழுதித்தருவதற்கும் பொருந்தும்.

மேலும் நீங்கள் புனைப்பெயரில் எழுதியது, பெயரிலியாக (அனானிமஸாக) எழுதியது என அனைத்துக்கும் அற உரிமையும் காப்புரிமையும் உங்களிடம்தான். வேறு யாராவது உங்கள் உரிமையை தங்களுடையது என்று சாதித்தால், புனைப்பெயரிலோ பெயரிலியாகவோ எழுதியது நீங்கள்தான் என்பதை நிரூபிக்கவேண்டியது உங்கள் பொறுப்பு.

அடுத்து, ஓர் இதழுக்கு நீங்கள் எழுதிக் கொடுத்தது, காலாகாலம் திரும்பத் திரும்பப் பதிப்பதற்கான உரிமை அல்ல. ஒருமுறை பதிப்பதற்கு மட்டுமே. மீண்டும் மீண்டும் பதிப்பிக்கவேண்டும் என்று ஓர் இதழ் நினைத்தால் அவர்கள் அதற்குரிய ஒப்பந்தத்தை எழுத்தாளரான உங்களிடம் பெற்றுக்கொள்ளவேண்டும். அதேபோல தங்களுடைய இதழில் வெளியாகியுள்ள கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக, குறுவட்டாக, அல்லது வேறு எந்த வடிவிலுமாக வெளியிடவேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடம் முன் அனுமதி பெறவேண்டும். பல பத்திரிகைகள் இதனைச் செய்வதில்லை. உங்கள் காப்புரிமை இவ்வாறாக பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் சம்பந்தப்பட்ட பத்திரிகையிடம் புகார் செய்து இழப்பீடு கேட்கலாம்.

புத்தக எழுத்தாளராக, நீங்கள் உங்கள் பதிப்பாளரிடம் முறையாக ஒப்பந்தம் போட்டுக்கொள்வது நல்லது. இதைச் செய்யாமல் பின்னால் பணம் கிடைக்கவில்லை என்றெல்லாம் சொல்லிப் புலம்பினால் முழுத்தவறும் எழுத்தாளரான உங்கள்மீதுதான். ஆனாலும் ஒப்பந்தம் ஏதும் இல்லாவிட்டாலும், அற உரிமையும் காப்புரிமையும் உங்களிடம்தான். இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின்படி படைப்பாளியான நீங்கள் உங்கள் காப்புரிமையை எங்கும் நிறுவவேண்டியது இல்லை. நீங்கள் எழுதி முடித்ததுமே காப்புரிமை அந்தக் கணத்திலேயே உங்கள் கைக்கு வந்துவிடுகிறது.

நீங்கள் ஒரு பதிப்பாளருக்கு குறுகிய கால வணிக உரிமையை மட்டும்தான் பொதுவாக அளிக்கிறீர்கள். அது குறிப்பிட்ட வடிவில் குறிப்பிட்ட காலத்துக்குப் பதிப்பிக்கும் ஏகபோக உரிமை. பதிப்பாளர்கள் ஒப்புக்கொண்டால் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனத்துக்கு ஒரே புத்தகத்தைப் பதிப்பிக்கும் உரிமையைக் கொடுக்கலாம். சுஜாதாவின் ஒரே புத்தகங்களை கிழக்கு பதிப்பகமும் திருமகள் நிலையமும் வெளியிடுகின்றன. அவற்றின் சில தொகுப்பு வடிவங்களை உயிர்மை பதிப்பகம் வெளியிடுகிறது. திருமகள் நிலையத்தின் ஒப்பந்தம் குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் கிழக்கு பதிப்பகத்துக்கும் எழுத்தாளர் சுஜாதாவின் மனைவிக்கும் இடையேயான ஒப்பந்தத்தில் எங்களுக்குத் தரப்பட்ட புத்தகங்களை எங்களைத் தவிர திருமகள் நிலையம் (மட்டும்) பதிப்பிக்கும் என்று மிகத் தெளிவாக எழுதிக் கையெழுத்திட்டுள்ளோம்.

பொதுவாக எங்கள் ஒப்பந்தம் அனைத்திலும் ஒப்பந்தக் காலம், ஆரம்பிக்கும் தேதி இரண்டும் தெளிவாக இருக்கும். ராயல்டி என்பது எப்படி வழங்கப்படும் (எத்தனை சதவிகிதம், கணக்கிடுதல் எப்படி நடக்கும், ஆடிட்டிங் உரிமை) என்பதும் தெளிவாக இருக்கும்.

காப்புரிமை உங்களிடம் இருக்கும்பட்சத்தில், எழுத்துபூர்வமாக காலம் முழுதும் (perpetual) என்று நீங்கள் எழுதிக்கொடுக்காதவரை, பதிப்புரிமையை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அதே நேரம், காலம் வரையறை செய்யப்பட்ட ஒப்பந்தம் இருந்தால், அது முடிவதற்குள் பதிப்பாளர் உங்களுக்குப் பதிப்புரிமையைத் திரும்ப வழங்கத் தேவையில்லை. கூடவே, எங்கள் ஒப்பந்தங்களில், பதிப்புக் காலம் முடிந்தபின்னும் அதுவரையில் அச்சடித்துக் கிடங்கில் இருக்கும் புத்தகங்கள் தீரும்வரை அவற்றை விற்போம் என்றும் எழுதி வாங்கிக்கொள்கிறோம். மீண்டும் அச்சடிக்க மாட்டோமே தவிர, கையில் இருக்கும் பிரதிகளை விற்கும் உரிமை எங்களுக்கு உண்டு என்பதை உறுதி செய்துகொள்கிறோம்.

அடுத்ததாக மொழிமாற்றல் உரிமை. பொதுவாக எங்கள் ஒப்பந்தங்கள் அனைத்திலும், பிற மொழிகளுக்கு மாற்றும் உரிமையையும் சேர்த்தே வாங்குகிறோம். அது பிடிக்காதவர்கள் அதனை மட்டும் நீக்குமாறு கோரலாம். அதனை நாங்கள் ஏற்க மறுக்கலாம். அல்லது ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம். இதுவரை எங்களின் சில புத்தகங்களை பிற இந்திய மொழிகளுக்கும் ஆங்கிலத்துக்கும் மாற்றும் உரிமையை விற்று கிடைக்கும் பணத்தை நாங்களும் எழுத்தாளர்களும் பகிர்ந்துகொண்டிருக்கிறோம். (அதிகமான மொழிமாற்றல்கள் சொக்கனின் புத்தகங்களில்தான் நிகழ்ந்துள்ளது.) இங்கும் எந்த விகிதத்தில் வருமானம் பகிரப்படும் என்பதைத் தெளிவாக ஒப்பந்தத்தில் எழுதிவிடுகிறோம்.

அதே நேரம், ஓர் எழுத்தாளர் தானாகவே தனிப்பட்ட முறையில் மொழிமாற்றிப் பதிப்பிக்க விரும்புகிறார் என்றால், நாங்கள் உடனடியாக அவருடைய ஒப்பந்தக் கட்டுகளிலிருந்து அவரை விடுவித்து சம்பந்தப்பட்ட உரிமையை அவருக்கே தந்துவிடுகிறோம். பொதுவாக இவையெல்லாம் குறைந்த வருவாய் தரக்கூடியவையாக இருப்பதால் யாரும் அதிகமாகச் சண்டை பிடிப்பதில்லை.

ஒலிப்புத்தக உரிமை அடுத்து. இதனைத் தனியாகவே எழுதி வாங்குகிறோம். அச்சுப் புத்தக உரிமை ஒருவருக்குத் தரப்படுகிறது என்றாலே பிற உரிமைகளும் அவருக்கே தரப்படவேண்டும் என்பதில்லை.

இப்போதைக்கு இறுதியாக மின்புத்தகப் பதிப்புரிமை. இதுதான் அடுத்த சில ஆண்டுகளில் மிக முக்கியமானதாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. மேலே சொன்ன மொழிமாற்றல் உரிமை அல்லது ஒலிப்புத்தக உரிமை ஆகியவற்றில் மிக அதிகமான வருமானம் வரும் என்று நான் நம்பவில்லை. ஆனால் மின்புத்தகப் பதிப்புரிமையை நல்ல பணமாக மாற்ற முடியும் என்று நான் நினைக்கிறேன். ஏற்கெனவே எங்களிடம் புத்தகங்களின் அச்சுப் பதிப்புரிமையைத் தந்திருப்போர் அனைவரிடமும் மின்புத்தகப் பதிப்புரிமையையும் எழுத்துப்பூர்வமாகப் பெற்றிருக்கிறோம். அவர்கள் யாரேனும் மின்புத்தகப் பதிப்புரிமையைத் திரும்பக் கேட்டால், அச்சுப் பதிப்புரிமையையும் திரும்பக் கொடுத்துவிடுவோம். ஏனெனில் மின்பதிப்பில்தான் லாப சாத்தியங்கள் அதிகம் உள்ளன. அச்சுரிமை கழுத்தில் கட்டிய கல்போலத்தான். மேலும் சொல்லப்போனால், 2014-ல் நான் பதிப்பிக்க நினைக்கும் பெரும்பாலான புத்தகங்களுக்கான மின்பதிப்பு உரிமையை மட்டும்தான் பெற்றுக்கொள்ளப்போகிறேன். அச்சுப் பதிப்பு உரிமையை அந்த ஆசிரியரிடமே பெரும்பாலும் கொடுத்துவிடுவதாக முடிவுசெய்துள்ளேன்.

அப்படியானால் ஓர் எழுத்தாளர் என்ன செய்யவேண்டும்? அவர் தன்னுடைய பதிப்பாளரிடம் அச்சுப் பதிப்புரிமை குறித்துப் பேசும்போது, மின்பதிப்பு குறித்த அவருடைய திறன் என்ன, குறிப்பிட்ட காலத்துக்குள் மின்பதிப்பைக் கொண்டுவரக்கூடிய திறன் அவரிடம் இருக்கிறதா என்பதை விசாரித்துத் தெரிந்துகொள்ளவேண்டும். அவ்வாறு மின்பதிப்பைக் கொண்டுவரக்கூடிய திறன் அவரிடம் இல்லை என்றால், அந்தப் புத்தகத்தின் மின் பதிப்புரிமையை எழுத்தாளர் தானே தக்கவைத்துக்கொள்வதுதான் சிறந்த வழி.

அடுத்ததாக, அச்சுப் பதிப்புபோல் இல்லாமல், ஆரம்பக்கட்டத்தில் மின்பதிப்புரிமையைப் பற்றி யோசிக்கும்போது அதனை ஏகபோகமாக இல்லாமல் non-exclusive முறையில் பதிப்பாளருக்குத் தருவது குறித்தும் யோசிக்கவேண்டும். ஏனெனில் ஆரம்பகட்டத்தில் யாருடைய தொழில்நுட்பம் சரியாக இயங்கப்போகிறது, யாரால் அதிகபட்ச வருமானத்தைக் கொண்டுவந்து தரமுடியும் என்ற தெளிவு இல்லை என்றால், உரிமைகளைத் தானே கையில் வைத்துக்கொண்டு, ஒருசிலருக்கு non-exclusive உரிமங்களை அளித்துச் சோதித்துப் பார்க்கலாம். பல நேரங்களில் மின்பதிப்பு platforms எல்லாம் வெறும் விநியோக அமைப்புகளே.

இங்கே இரண்டு சற்றே முரண்படக்கூடிய கருத்துகளை நான் முன்வைப்பதாகச் சிலர் கருதலாம். முடிந்தவரை விளக்கப் பார்க்கிறேன்.

(அ) ஓர் எழுத்தாளர், முற்றிலும் தயாரான முழு இறுதி வடிவப் புத்தகத்தைத் தயாரிப்பவர் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய படைப்பைப் பொருத்தமட்டில் ஒரு பதிப்பாளர் அந்தப் புத்தகத்துக்கு உள்ளடக்கம் என்ற அளவில் வேறு எந்தப் பங்கையும் செய்யப்போவதில்லை. அப்படிப்பட்ட நிலையில் அந்த எழுத்தாளர் முடிந்தவரை தன் உரிமைகளைத் தானே தக்கவைத்துக்கொண்டு, எவ்வகை உரிமைகளையெல்லாம் வணிகமாக ஆக்க முடியுமோ அவற்றைச் சரியாகச் செய்யக்கூடிய நிறுவனங்களுடன் சரியான ஒப்பந்தங்களை எழுதிக்கொள்ளவேண்டும்.

(ஆ) ஓர் எழுத்தாளருக்கு எடிடிங்ரீதியிலும் புத்தக வடிவமைப்புரீதியிலும் நிறையப் பங்களிப்பு தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது பதிப்பாளர் தன் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு அவற்றை வழங்குகிறார். அப்போது அந்தப் பதிப்பாளர் எந்தெந்த உரிமைகளையெல்லாம் தான் கோரப்போகிறேன் என்பதை முன்கூட்டியே சொல்லிவிடவேண்டும்; ஓப்பந்த வரைவையும் கொடுத்துவிடவேண்டும். இதற்கு ஒப்புக்கொண்டால்தான் மேற்கொண்டு அந்தப் பிரதியில் பதிப்பாளர் கைவைக்கப்போகிறார்.

மிக நீண்டுவிட்ட பதிவு இது. சுருக்கமாக இங்கே:
  1. எழுத்தாளராக நீங்கள் உங்கள் பதிப்பாளரிடம் ஒரு காகிதத்தில் அனைத்து ஷரத்துகளையும் எழுதிக் கையெழுத்து இட்டுவிடுங்கள். பின்னர் பிரச்னைகள் வருவதை இது பெரும்பாலும் தவிர்க்கும்.
  2. உங்கள் எழுத்துக்கான காப்புரிமையும் அற உரிமையும் உங்களுடையதே. நீங்கள் பயந்து நடுங்கவேண்டாம்.
  3. பதிப்புரிமையை நன்றாகப் பிரித்து அச்சுப் பதிப்புரிமை, மின் பதிப்புரிமை, மொழிமாற்றல் உரிமை, ஒலிப்புத்தக உரிமை, கதையாக இருந்தால் சினிமா ஆக்கும் உரிமை, புதினமல்லா எழுத்தாக இருந்தால் ஆவணப்படம் எடுக்கும் உரிமை என்று தனித்தனியாக ஷரத்துகளை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இவற்றில் எவற்றையெல்லாம் உங்களுடைய பதிப்பாளரால் இன்றைக்கு வணிகமாக்க முடியாதோ அவற்றை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். எவற்றைப் பணமாக இன்றைக்கு ஆக்க முடியுமோ அவற்றை மட்டும் பதிப்பாளருக்குத் தாருங்கள். ஒரு பதிப்பாளரால் முடியாதவற்றை இன்னொருவரிடம் தரப்போவதாக முடிவுசெய்து அதனை முன்னதாகவே உங்கள் முதன்மைப் பதிப்பாளரிடம் பேசிவிடுங்கள்.
  4. ஒவ்வொரு உரிமையையும் விற்கும்போது ஒப்பந்த காலம், ராயல்டி போன்ற அனைத்தையும் மிகத் தெளிவாக எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.
  5. உங்கள் பதிப்பாளரின் கணக்கை ஆடிட் செய்யும் உரிமையைக் கோரிப் பெறுங்கள். 1,000 அல்லது 5,000 பிரதிகள் விற்பனை ஆகியுள்ளது என்று அவர் சொல்வதை நீங்கள் அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. இதனால் நீங்கள் அவரை நம்புவதில்லை என்று இல்லை. நம்பிக்கையை உறுதி செய்வதற்காகவே இது. இந்த உரிமை இருக்கிறது என்பதாலேயே நீங்கள் தினம் தினம் உங்கள் புத்தகம் சம்பந்தப்பட்ட கணக்குகளைப் பார்த்துக்கொண்டிருப்பதில்லை. (எங்கள் எழுத்தாளர்கள் அனைவருக்கும் இந்த உரிமையை நாங்கள் வழங்கியுள்ளோம்.)

20 comments:

  1. நல்ல பதிவு நன்றி பத்ரி.

    காப்புரிமை தொடர்பான நீண்ட பல அம்சங்களக் கொண்ட இப்பதிவு, அனைத்து படைப்பாளிகளும் படித்து புரிந்துகொள்வது அவசியம்.

    1. கிரிக்கெட்டும் காப்புரிமையும் : இந்தியாவின் முக்கியமான காப்புரிமை வழக்குகள் கிரிகெட் சம்மந்தப்பட்டவை. அனைவருக்கும் அணுக்கம் உறுதிசெய்ய தூர்தர்ஷனுக்கு கட்டாய தரைவழி தொலைக்காட்சி உரிமம், கிரிகெட் ஸ்கோர் செய்தியா? / தனிச்சொத்தா? போன்ற முக்கிய காப்புரிமை விவாதங்கள் நடக்க கிரிக்கெட் முக்கிய காரணம்.

    2. திரைப்படங்களின் இணைய உரிமை : இணையத்திற்கு தனியாக உரிமைகள் வழங்கப்படாததால் குழப்பங்கள் தொடர்கின்றன. அண்மையில் ராஜ் வீடியோ விஷனின் யூட்யூப் கணக்கு காப்புரிமை மீறலுக்காக முடக்கப்பட்டது. 450 முழு நீள திரைப்படங்கள், 10000 காணொலிகள் கொண்ட கணக்கு. இந்திய அளவில் இது தான் பெரிய முடக்கம் என நினைக்கிறேன். ஹிந்தி படங்கள் யூட்யூபில் அதிகார பூர்வமாக வெளிவருவதில்லை போல் இருக்கிறது. கூகிள் ப்ளே திரைப்படங்களில் அவை வணிகமயமாக்கப்பட்டுள்ளன. தமிழிலோ தொலைகாட்சிகளும், தயாரிப்பு நிறுவனங்களும் பதிவேற்றம் செய்து வருகின்றன. இது ஒரு நாள் பஞ்சாயத்து ஆகப்போகுது.

    3. அறம் சார்ந்த உரிமைகளைப் (Moral rights) பற்றி உள்ளடக்கியமைக்கு மிக்க நன்றி. பெரும்பாலரால் அறியப்படாதது இது. ஒரே ஒர் கூடுதல் தகவல். உங்களது அறம் சார்ந்த உரிமை என்னுடைய பகடி உரிமையை (Parody rights) பாதிக்காது. பலர் லொள்ளு சபா காலத்தில் அறியாமையில் குமுறியதுண்டு.

    4. கதையாக இருந்தால் சினிமா ஆக்கும் உரிமை: இந்திய காப்புரிமைச் சட்டத்தின் கீழ் உறுமாற்று / வழியாக்க (transformations/derivatives) விளக்கங்கள் சாம்பல் துறைகள். ஆகையால் தான் திரைப்படங்களில் மற்ற மொழிகளிலிருந்து தாராளமாக சுடுகிறார்கள். கேட்டால் inspiration.

    இவ்வொன்றும், காப்புரிமையின் இன்னும் பல பரிமாணங்களும் இக்கட்டுரை நீளத்திற்கு எழுதலாம், இறையருள் இருந்தால் எழுதுகிறேன்.

    ReplyDelete
  2. மிகவும் முக்கியமான/ தெளிவான விளக்கம், பத்ரி.

    நன்றி

    ReplyDelete
  3. Very informative and useful for budding writers. In fact I would say it's the old folks that need to be aware of these. Or else we would only find the publisher and the writers abusing each other on social media like what's happening now. Ignorance is not bliss. I'm happy that Kizhakku is bringing in the much needed professionalism and transparency in vernacular writing industry.

    ReplyDelete
  4. தன் படைப்பின் அச்சுப்பதிப்புரிமையை ஒரு குறிப்பிட்ட பதிப்பாளருக்குக் கொடுத்திருக்கும்நிலையில், அதே படைப்பின் மின்வடிவத்தை - PDF/EPUB - அப்படைப்பாளர் இணையத்தில் காசில்லாமல் தரவிறக்கத் தருவது சட்டப்படிச் செல்லுபடியாகிற அவரது உரிமையா? அச்சுப்பதிப்பாளரின் விற்பனையை அது குறைக்கவாய்ப்புள்ளதால் அப்பதிப்பாளர் அதை எதிர்க்கச் சட்டத்தில் வழியுண்டா?

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஒரு பதிப்பாளரிடம் அச்சுப் பதிப்புக்கு மட்டும் உரிமம் தரும்போது, அதன் வேறு வடிவங்களை (ஒலிப்புத்தகம், மின்புத்தகம்) பிரருக்குத் தரப்போகிறோம் என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிடுதல் நலம். அதனை அச்சுப் பதிப்பாளர் ஏற்காமல் போகலாம்; அல்லது ஏற்கலாம். அதே நேரம் மின்பதிப்பில் அல்லது வேறு வழியில் அதே புத்தகம் இலவசமாகத் தரப்படக்கூடாது என்பதை அச்சுப் பதிப்பாளர் எதிர்பார்த்து அதனையும் ஒரு ஷரத்தாகத் தன்னுடைய ஒப்பந்தத்தில் சேர்க்கலாம். ஒப்பந்தத்துக்கு உள்ளாகத்தான் சட்டபூர்வமான வழிமுறைகள் இருக்கும். ஒப்பந்தமே இல்லாவிட்டால்தான் பிரச்னையே.

      Delete
  5. தாங்கள் எழுதியுள்ள விஷயங்கள் Magna carta for writers.. எழுத்தாளர்கள் பலருக்கும் தாங்கள் கூறிய விஷயங்களில் பலவும் தெரிந்திராது. எழுத்தாளரிடம் ஆசை வார்த்தை பேசி அவரிடமே பணத்தை வாங்கிக் கொண்டு புத்தகங்களை வெளியிடுகின்ற நிலைமை இன்னமும் நீடிக்கிறது.
    நீங்கள அனாவசியமாக எழுத்தாளர்களைத் தூண்டி விடுகிறீர்கள் என்று மற்ற பதிப்பகத்தார் உங்களிடம் சண்டைக்கு வந்தாலும் வியப்பில்லை.
    வருங்காலத்தில் மின்வடிவ நூல்களுக்கு கிராக்கி அதிகரிக்கலாம். வெளி நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு அது பெரிய வரப் பிரசாதமாக இருக்கும்.
    அச்சு வடிவிலான புத்தகம் என்றால் ஒரு பதிப்பகத்தார் 10 எழுத்தாளர்களின் புத்தகங்களை அச்சிட்டால் அவற்றை சேமித்து வைக்கப் பெரிய குடோன் தேவைப்படும்.அப்புத்தகங்களை அச்சிடுவதற்குப் பேப்பர் வாங்கிய செலவு, அச்சுக்கூலி, அட்டைகளுக்கான செலவு, குடோன் வாடகை, குடோன் காவல்காரர் என பல வகைகளில் செலவு உண்டு.போட்ட பண்ம் முடங்கிக் கிடக்கும். முதலில் வட்டி தேறணும் என்ற பிரச்சினை உண்டு.
    மின்வடிவப் புத்தகங்களில் அந்த வகையிலான செலவு அனைத்தும் மிச்சம். ஆகவே எழுத்தாளருக்கான ராயலிடி அதே பத்து சதவிகிதமாகத் தான் இருக்குமா? அதை 20 சதவிகிதமாக உயர்த்தினால் பதிப்பகத்தாருக்குப் பாதிப்பு இருக்க வாய்ப்பு உண்டா?

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் மின்புத்தகங்களுக்கு ராயல்டியை 20% என்றுதான் நிர்ணயித்துள்ளோம். அதே நேரம், மின்புத்தகத்தின் கவர் பிரைஸ் குறைவாக இருக்கும். எங்கள் இப்போதைய யோசனையின்படி, அச்சில் புத்தகம் ரூ. 100 என்று இருந்தால் மின்புத்தகத்தின் விலை ரூ. 50 என்றுதான் இருக்கும்.

      Delete
    2. அமேசான், பார்ன்ஸ் & நோபிள் போன்றவை வெளியிடும் மின் புத்தகங்களின் விலை அச்சுப் புத்தகத்துக்கு சமமாக, அதைவிட அதிகமாகக் கூட இருக்கிறது. அச்சைவிட மின்வடிவில் கூடுதல் வசதிகள் இருக்கின்றன என்பதால் இது சரியே. தமிழில் குறைவாக விலை வைப்பது, இந்த கான்செப்ட் இங்கு புதியது, படிக்கும் கருவிகளும் அதிகம் பரவலாகவில்லை என்பதால் இருக்கலாம்.

      சரவணன்

      Delete
  6. மிக விரிவாகவும் வெளிப்படையாகவும் இருக்கும் பதிவு. நன்றிகள்... என் போன்ற எழுத்து முயல்வோர்க்குப் பெரும் உதவியாக இருக்கும் பதிவு இது. தமிழ்ப் பதிப்புலகம் தொழில்நுட்பம் அளிக்கும் சாத்தியங்களை இன்னும் முழுமையாகக் கிரகித்துக் கொள்ளவில்லையோ என்று சில சமயம் யோசித்திருக்கிறேன். மின் புத்தகங்கள் பற்றிய உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது. அதிக லாபமும் மிகக் குறைந்த பதிப்புச் செலவும் இருப்பதால் பலருடைய அறிமுகங்களுக்கும் மின் புத்தகங்கள் கை கொடுக்கும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  7. //உங்கள் எழுத்துக்கான காப்புரிமையும் அற உரிமையும் உங்களுடையதே. நீங்கள் பயந்து நடுங்கவேண்டாம்.//

    இது ஒப்பந்தத்தை பொறுத்தே அமையும்.

    சூடான செய்தி : இந்தி இசையுலகில் திரையிசைப் பாடகர்களுக்கு தனி ராயல்டி தராமல் டிமிக்கி கொடுப்பதற்காக ஒலிப்பதிப்பு நிறுவனங்கள் போடும் ஒப்பந்தங்கள் சட்டவிரோதமானவை என்று பாடகர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கின்றார்கள். ராயல்டியில்லா காப்புரிமையை மிக மிக சிலரே விரும்புவர்.

    ReplyDelete
    Replies
    1. சினிமாப் பாடல்களைப் பொருத்தமட்டில் அதில் வேறு சில குழப்பங்கள் உள்ளன. அதுகுறித்துப் பேச இது இடம் இல்லை என்பதால் நான் பேசவில்லை. பொதுவாக திரைப்பாடல்களில் பலரது பங்களிப்பு உள்ளது. இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடுபவர்கள். இவர்கள்தான் படைப்பாளிகள் என்ற வரையறைக்குள் வருவார்கள். தவிர சவுண்ட் எஞ்சினியர், இசைப்பவர்கள் ஆகியோரை விட்டுவிடுகிறேன். ஆனால் படத்தின் புரட்யூசர் இவர்கள் அனைவருக்கும் “அதிகமான” தொகையைக் கொடுத்து ஒட்டுமொத்தமாக பாடலின் காப்புரிமையை எழுதி வாங்கிவிடுகிறார். இதை எதிர்க்க முகாந்திரங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் அப்படிச் செய்யும்போது அந்தப் பாடலுக்கு புரட்யூசர் தரும் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள இவர்கள் அனைவரும் தயாராக இருக்கவேண்டும். மேலும் இந்தப் பாடலுக்குப் பிற இடங்களிலிருந்து வரும் வருமானத்தை எப்படிப் பங்கிடுவது என்பதில் பாடகர்கள், பாடலாசிரியர், இசையமைப்பாளர் ஆகியோருக்கிடையே ஓர் ஒப்பந்தம் உருவாகவேண்டும். என்னைக் கேட்டால் இதனை எளிமைப்படுத்தி இப்படிச் செய்யலாம். வெளி வருமானத்தில் (அதாவது அந்தப் பாடல் இடம்பெறும் சினிமாவின் நேரடி வருமானத்தை விடுத்து, வானொலி, இசைத்தட்டு ஆகியவற்றிலிருந்து வரும் வருமானத்தில்) புரட்யூசர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர்கள் ஆகியோருக்கு ஆளுக்கு 25% பங்கு இருக்குமாறு செய்யலாம். அதேபோல பாடல் காட்சி தொலைக்காட்சிகளிலும் இணையத்திலும் ஒளிபரப்பாகும்போது வரும் வருமானத்தில் இயக்குனர், நாட்டிய நாயகர்கள், கொரியோகிராஃபர் ஆகியோருக்கும் சேர்த்துப் பங்கு தரலாம்! ஆனால் இது மிகவும் குழப்பமான ஒரு நிலையையே நோக்கிச் செல்லும். இதுகுறித்துப் பேச எனக்கு அதிகம் தெரியாது என்பதால் இப்போதைக்கு விட்டுவிடுகிறேன்.

      Delete
    2. //ஆனால் படத்தின் புரட்யூசர் இவர்கள் அனைவருக்கும் “அதிகமான” தொகையைக் கொடுத்து ஒட்டுமொத்தமாக பாடலின் காப்புரிமையை எழுதி வாங்கிவிடுகிறார்//

      இது பதிப்புத்துறையில் நட்க்கிறது என்று சொல்லவில்லை, ஆனால் நடக்கலாம். ஆகையால் தான் தங்களின் 1 வரிச்சுருக்கத்திற்கு "ஒப்பந்தத்தை பொறுத்தே அமையும்" என்று கூறினேன். நல்ல பதிவின் நோக்கத்தை ஒரு சரியில்லா சுருக்கம் கெடுக்ககூடாது என்பதே என் நோக்கம்.

      ஒப்பந்தங்களின் வளைவு சுளிவுகளை சுட்டிக்காட்டவே இந்தி பாடகர் செய்தி. மற்றபடி இசைக்கு / பாடகர்களுக்கு காப்புரிமை / ராயல்டி போன்றவற்றை பேச இது சரியான தளம் இல்லை என்றாலும் தங்களின் கருத்திற்கு நன்றி. வானோலி நேயரான என்னைப்பொருத்தவரை பாடகர்களின் 'தனி ராயல்டி' இரட்டை ராயல்டிக்கு சமம். அதனையும் வேறு தருணத்தில் பேச வேண்டும். நன்றி

      Delete
  8. ஒரு நல்ல செய்திப் பூர்வமான பதிவு- நன்றி. மின் புத்தகங்களைப் பற்றி தங்களின் எண்ணங்களையும், கருத்துக்களையும் எங்கேனும் பதித்திருக்கிறார்களா- அறிய ஆசை. தங்கள் மின்னஞ்சல் கிடைக்குமா- இந்தத் தலைப்பில் மேலும் உரையாட

    ReplyDelete
    Replies
    1. மின்புத்தகங்கள் குறித்து நான் தொடர்ந்து எழுதிவருகிறேன். என் தமிழ், ஆங்கில வலைப்பதிவுகளைத் தேடிப் பாருங்கள். தவிர பத்திரிகைகளில், மாநாடுகளில் இதுகுறித்துப் பேசியும் எழுதியும் வருகிறேன். என் மின்னஞ்சல் இந்தத் தளத்தின் மேல் பட்டையிலேயே கொட்டை எழுத்தில் உள்ளது.

      Delete
  9. சில சமயங்களில் பழைய படத்தின் பெயருடன் புதிய திரைப்படம் வருகிறது (வேறு கதையுடன்). அதற்கு அனுமதி வாங்க வேண்டுமா? இதேபோல பிரபலமான ஒரு புத்தகத்தின் தலைப்பை மட்டும் (உதாரணம் பொன்னியின் செல்வன் அல்லது நைலான் கயிறு) வேறு ஒரு புத்தகத்துக்கு வைக்க முடியுமா? இதற்கு அந்த எழுத்தாளர் சம்மதித்தாலும் பதிப்பாளர் விரும்பாமல் இருக்கலாம்.

    சரவணன்

    ReplyDelete
    Replies
    1. ஒரு படைப்பின் தலைப்பு 'வணிகக் குறியீடு'(trademark) என பதிவு செய்யப் படாமல் இருந்தால் அனுமதியின்றி யார் வேண்டுமானாலும் வெளியிடலாம். காப்புரிமை மட்டுமே தானாக ஒரு படைப்பாளிக்கு அளிக்கப்படுகிறது. வணிகக் குறியீடு என்பது அரசிடம் விண்ணப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

      பதிவு செய்யப்பட்ட குறியீடாயின் அதன் உரிமையாளரிடமிருந்து சொத்து பரிமாற்றம் போல் குறியீட்டின் உரிமை மாற்றம் செய்யப்டவேண்டும்.

      சினிமாத்துறையில் சங்கங்கள் வாயிலாக இப்பிரச்சனை முடிவு செய்யப்படுகிறது. அதனால், விஸ்வரூபம் - 2 என்று கமல் வணிகக் குறியீடு செய்யாமலே, சங்கத்தில் பதிவு செய்தால் போதும். அவர் மட்டும் அந்த தலைப்பில் தான் வெளியிட முடியும். ஆனால் வணிகக் குறியீடு பதிவு செய்யாமல் இருப்பின் நான் 'விஸ்வரூபம் - 2' என்ற தலைப்பில் இணையத்தில் வெளியிட்டால் அதைத் தடுக்க முடியாது.

      Delete
  10. மிகவும் நல்ல பதிவு. எழுத்தாளர் ஆகும் ஆர்வம் கொண்டவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு என்று என் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்திருக்கிறேன்.

    ஒரு கேள்வி: மின் நூல்களாக வெளியிடுவது என்று முடிவு செய்துவிட்டால் எதற்காக உள்நாட்டில் ஒரு பதிப்பாளரைத் தேடிக் கொண்டிருக்க வேண்டும், சுயமாகவே வெளியிட்டு விடலாமே ? http://www.lulu.com/ போன்ற இணைய தளங்கள் (இவர்களை உலகளாவிய பதிப்பாளர்கள் என்று கருதலாம்) ஆப்பிள், ஆண்டிராய்டு சந்தைகளில் அவர்களே வெளியிட்டு விடுகிறார்களே. இப்போது உள்ளூர் பதிப்பகத்துக்கு வர வேண்டிய காரணம் என்ன ?

    லுலு போன்றோரிடம் மின் நூலாக வெளியிட்டுவிட்டு, சொந்தச் செலவில் நூறு நூல்களை அச்சிட்டுக் கொண்டு, உடுமலை, ப்லிப்கார்ட் போன்ற தளங்கள் தளங்கள் மூலம் இந்தியாவில் விற்றுக் கொள்ளலாமே !? இங்கு பதிப்பாளர் என்பவரால் ஆசிரியருக்கு என்ன வகையான இலாபம் கிடைக்கப் பெறும் ? (தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்தான் கேட்கிறேன். பதிப்பாளர்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை)
    பிகு: உங்கள் மின்னஞ்சல் முகவரியை தேடுவதற்கு வசதியாக, பக்கவாட்டில் உள்ள "புத்தகம் வாங்குங்க!", "புத்தக விமர்சனம்" போன்றவற்றோடு ஒரு தனி பகுதியாக வெளியிட்டால் வசதியாக இருக்கும். உங்களுடைய தலைப்புப் பட்டையில் உள்ளது படமாக உள்ளது. அது நகலெடுத்து ஓட்ட (copypaste) செய்ய ஏதுவாக இல்லை.

    ReplyDelete
  11. இ-புக்கை மின் புத்தகம் எனப் பெயர்ப்பது சரியன்று. எலக்ட்ரிக் புத்தகம் என்றால்தான் மின் புத்தகம் எனச் சொல்ல முடியும். இ-வேஸ்ட் என்பதை மின் கழிவு எனச் சொன்னால் என்னாகும் என யோசித்துப் பாருங்கள். இங்கு நாம் பேசுவது எலக்ட்ரானிக் புத்தகம் பற்றி. அப்படியானால் இதனை எப்படி அழைக்கலாம்? ஏற்கெனவே நமது தமிழ்வழி அறிவியல் பாடப் புத்தகங்களில் எலக்ட்ரான் என்பதை மின்னணு என்கிறார்கள். அந்த அடிப்படையில் இமெயிலை மின்னணு அஞ்சல் எனலாம். மின்னணு என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் ஒரு துகளுக்கான பெயருடன் அணு என்னும் சொல் இணைவது பொருத்தமானதல்ல என நினைக்கிறேன். எனவேதான் நான் எனது காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் புத்தகத்தில் எலக்ட்ரான் என்பதை மின்மம் என்று மொழிபெயர்த்தேன். அந்த அடிப்படையில் இமெயிலை மின்ம அஞ்ல் எனலாம். ஆங்கிலத்தில் கூட எனக்கென்னவோ இமெயில் என்பது சரியாகப் படவில்லை. அதனை டிஜிட்டல் மெயில் எனச் சொல்வதே பொருத்தமாக இருக்கும். இப்படியே டி-புக், டி-காமர்ஸ் எனச் சொல்லிச் செல்லலாம். எலக்ட்ரானிக் காமர்ஸ் எனக் கூறினால் எலக்ட்ரானிக் பண்டங்களுக்கான வணிகம் எனும் பொருளும் கிடைக்கிறது. அந்த வகையில் தமிழிலும் மின்ம அஞ்சல் என்பதற்குப் பதிலாக இலக்க அஞ்சல் எனக் கூறலாம். இப்படியே இலக்க நூல், இலக்கக் கழிவு, இலக்க வணிகம் எனக் கூறிச் செல்லலாம். ஆனால் மின் புத்தகம் எனக் கூறினால் அது மின்சாரம் தொடர்பாகப் பேசும் புத்தகம் என்றுதான் புரிந்து கொள்ள முடியும். நன்றி - நலங்கிள்ளி (9840418421)

    ReplyDelete
  12. Will you spend the rest of your life in translating or discovering !! ?? !!

    ReplyDelete
  13. வருடங்களாக ஸ்டேட்மெண்ட் மட்டும் அனுப்பி விட்டு செக் அனுப்பாத பதிப்பகத்தாரை என்ன செய்யலாம் என்று சட்டம் கூறுகின்றது?

    ReplyDelete