Tuesday, July 08, 2014

ரயில் நிலையங்களைப் பராமரிப்பது குறித்து

ரயில்களையும் ரயில் நிலையங்களையும் பராமரிப்பது அவ்வளவு கடினமான காரியம் அல்ல. இதற்குச் செலவும் அதிகம் பிடிக்காது. நம்முடைய மனநிலை மாறவேண்டும். அவ்வளவுதான்.

முதலில் எல்லா வண்டிகளிலும் கழிப்பறைகள் திறந்தவையாக இருக்கக்கூடாது. கழிவுகளை ஒன்று சேர்த்து, ஒரு டாங்கில் போய் விழுமாறு செய்து, இறுதி நிலையத்தில் அவற்றைத் தனி வண்டிகொண்டு அப்புறப்படுத்தினால் போதும். பெருநகரங்களில் கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புடன் பொருத்தி, கழிவுகளை வெளியேற்றலாம். சிறு நகரங்களில் அம்மாதிரியான கட்டமைப்பு வரும்வரையில் கழிவகற்றி வண்டிகள் கொண்டு அப்புறப்படுத்தலாம்.

எல்லா ரயில் நிலையங்களிலும் பணம் கொடுத்துப் பயன்படுத்தும் கழிப்பறைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். இந்திய மக்களுக்குக் கழிப்பறைகளைப் பயன்படுத்தத் தெரியாது. ஏனெனில் பெரும்பாலானோர் வீடுகளில் கழிப்பறைகளே கிடையாது. இருப்போர் வீட்டிலும் பலர் அதனைப் பயன்படுத்துவதில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் அவற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில்லை.

எனவே கழிப்பறைகளைக் கட்டிவைத்தாலே அவற்றை நம் மக்கள் சுத்தமாகப் பயன்படுத்துவார்கள் என்று நான் நம்பவில்லை. கட்டிவைப்பதுடன் நில்லாமல், அவற்றைப் பணியாளர்களைக் கொண்டு சுத்தப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். என்றாவது ஒருநாள் மக்கள் கழிப்பறையைச் சுத்தமாகப் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையை நாம் இழந்துவிடக்கூடாது.

எச்சில் துப்புவது, கையில் உள்ள குப்பைகளைக் கீழே போடுவது, அகலப் பரப்பி உட்கார்ந்துகொண்டு புளியோதரையையும் பிரியாணியையும் பிரித்து, கீழெல்லாம் சிந்தி, சாப்பிட்டு, அங்கேயை கை கழுவி, வாய் கொப்பளித்து, ஏவ் என்று பெரும் ஏப்பம் விட்டு, அப்படியே ஒரு அழுக்குத் துண்டை விரித்து, சற்றே சாய்ந்து உறங்கும் மக்கள் நாம். தட்டுமுட்டுச் சாமான்கள் ஒரு பக்கம், உருகி ஓடும் பனிப்பாளத்திடையே மூக்கைத் தாக்கும் மீன்கூடைகள் ஒரு பக்கம், கட்டுக்கட்டாக வார மாத இதழ்கள் ஒரு பக்கம், சாக்கில் சுற்றிய இரு சக்கர மோட்டார் வாகனங்கள் ஒரு பக்கம், இன்னுமா இவற்றைப் பயன்படுத்துகிறார்கள் என்று நம்மை அதிசயிக்கவைக்கும் தகரப் பெட்டிகள் ஒரு பக்கம் என்று நம் ஊர் ரயில் நிலையங்களுக்கும் சுத்தத்துக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாதுதான். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் தரையைக் கூட்டிக்கொண்டே இருக்கவேண்டும். துடைத்துக்கொண்டே இருக்கவேண்டும். குப்பைக்கூடைகளை மேலும் அதிகப்படுத்தவேண்டும். கண்ணில் தென்படும் குப்பைகளையெல்லாம் சுகாதார ஊழியர்கள் தொடர்ந்து எடுத்துக் குப்பைக்கூடையில் போட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அதைப் பார்த்து சில மக்களாவது வெட்கப்பட்டு, குப்பைகளைச் சரியான இடத்தில் போட நேரிடலாம்.

முதல் தேவை இதுதான். இதற்குச் செலவழித்ததுபோக, அடுத்து, கொஞ்சமாவது ரயில்களின் வேகத்தைக் கூட்டுவதற்குச் செலவழிக்கலாம். இதனால் ஏழை மக்களுக்கும் பலன், நடுத்தர வர்க்கத்தவருக்கும் பலன். வேகத்தைக் கூட்டினால் கட்டணத்தைக் கூட்டவேண்டும் என்று அவசியம் இல்லை. வேகத்தைக் கூட்டத் தடையாக இருப்பது எது என்பதைக் கண்டறிந்தால், பெரும்பாலும் அது ரயில்வே டிராக்கின் தரம் மற்றும் ஆளில்லா லெவல் கிராசிங் என்று இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இவற்றைச் சரி செய்தால் எரிபொருள் திறன் அதிகமாகி உண்மையில் செலவுகள் குறையும் என்பது என் கருத்து.

அதிவேக ரயில்களும் அவசியமே. சென்னையிலிருந்து பெங்களூரு, அங்கிருந்து மும்பை, அங்கிருந்து அகமதாபாத், அங்கிருந்து ஜெய்ப்பூர், அங்கிருந்து தில்லி, அங்கிருந்து லக்னோ, அங்கிருந்து போபால் என்று ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்தையும் இணைக்கும் அதிவேக ரயில்களால் நாட்டின் மக்கள் அனைவருமே பலன் பெறுவர். இந்த அதிவேக (நம்மூரில் அதிவேகம் என்றால் மணிக்கு 100 கிமீ, தடையில்லாமல் போனாலே போதும்!) ரயில் நெட்வொர்க்கை முழுதும் தனியார்மூலமே செய்வதுதான் சரியானது. என்னை விட்டால், ரயில் நிலையங்களையும்கூடத் தனியாரே செய்துவிடலாம் என்பேன். இந்த அதிவேக ரயில் நிலையங்கள் வழியாக எந்தத் தனியார் நிறுவனமும் ரயில்களை ஓட்டலாம். டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம். கட் ரேட் சர்வீஸா, ஃபைவ் ஸ்டார் சர்வீஸா என்று அவர்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.

அரசு, இப்போது இருக்கும் ரயில்வேயின் தரத்தை எப்படி முன்னேற்றுவது, எப்படி ரயில் வண்டிகளின் எண்ணிக்கையைக் கூட்டுவது, எப்படி பாதுகாப்பை அதிகப்படுத்துவது, எப்படி சுகாதாரத்தை உயர்த்துவது என்பதில் கவனம் செலுத்தினாலே போதும்.

6 comments:

  1. அதி வேக ரயில் நிலையங்கள்,பாதைகள் போட தனியார் நிறுவனங்கள் தயாராக இருக்கிறார்களா
    ரயில் கழிப்பறையை எப்படி மூடப்பட்ட கழிப்பறை ஆக்க முடியும் எனபது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது.பல ஆண்டுகளாக பல்வேறு ஆராய்சிகள்,முயற்சிகள் நடந்து வருகின்றன
    இரண்டு அடுக்கு ற்றைங்களில் வேண்டுமானால் மேல் அடுக்கில் கழிப்பறைகளை வைத்து விட்டு கீழ் அடுக்கில் பெரிய செப்டிக் tank ரயில் பெட்டியை வைக்கலாம்.
    தண்ணீர் தனியாக கழிவு தனியாக பிரிக்கப்பட்டு தண்ணீர் கீழே விழும் வேளையில்,விரைவாக கழிவு ஆவியாக நுண்கிருமிகளின் உதவியுடன் DRDO தயாரித்த கழிப்பறைகள் சில ரயில்களில் சோதனை முயற்சியாக வைக்கப்பட்டு உள்ளன.
    அவற்றிலும் சில நிமிடங்களுக்குள் குப்பை,சிகரெட்டே துண்டுகள் போட்டு அடைத்து கொள்ளுமாறு நம் பயணிகள் செய்து விடுகின்றனர்.
    தண்ணீருக்கு பதில் காகிதத்தை பயன்படுத்தும் முறைக்கு மாறினால் எளிதாக மூடிய கழிப்பறைகளை பயன்பாட்டில் கொண்டு வர முடியும்.
    ரயிலோ ,நம் சுற்றுப்புரமோ குப்பையை பற்றிய பயம்,விழிப்புணர்வு பெரும்பாலனோருக்கு இல்லாதது மிகவும் வருந்த வேண்டிய ஒன்று.சரியாக dispose செய்யபடாத குப்பைகளால் வரும் தீமைகளை பற்றி குடும்ப கட்டுப்பாடு விளம்பரங்களை போல 24 மணி நேரமும் தொலைக்காட்சி,ரேடியோ,பத்திரிக்கைகள் ,விளம்பர பேனர்கள், பொது சுவற்றிலும் எழுதி வைத்தால் மாற்றங்கள் வரலாம்

    ReplyDelete
  2. ANOTHER NEED OF THE HOUR INOUR RAILWAYS IS AVAILABLITY OF
    QUALITY AND HYGENIC FOODS WHEN THE TRAINS ARE ON THE MOVE. MOST OF THE PANTRY CAR FOOD ITEMS ARE NOT PALATABLE AND THEY ARE TASTELESS. WHY DON'T THEY ALLOW
    VERY POPULAR SARAVANA BHAVAN , SANGEETHA AND ANNAPOORNA TO RUN THE PANTRY CARS SO THAT WE CAN HAVE TASTY FOOD. PROBABLY BRIBERY TO RAILWAY OFFICIALS BY
    THE FOOD CONTRACTORS ARE RESPONSIBLE FOR THIIS. VIGILANCE DEPT SHOULD CONDUCT RAID IN RAILWAY OFFICIALS HOUSE TO CURB THIS MENACE.





    ReplyDelete
  3. ரயில்லில் தனியார் இப்போது வேண்டாம். அரசிடம் இருப்பதே பரவாயில்லை என்று ஆக்கிவிடுவார்கள். மிக முக்கியமாக, நீங்கள் குறிப்பிடும் படி 5 ஸ்டார் ஆசமிகளுக்கான சாதனமாகவே ரயில்கள் மாறும். காசில்லாதவன் 'கட் ரேட்' தானே சாவறான்னு போகும் மாற்றம் மட்டுமே சாத்தியமாகும்.

    நம் நாட்டில் ரயில், பேருந்து இவைகளை பற்றி என்னும்போது ஐரோபவையும் அமரிக்காவையும் கொஞ்சம் அசிட் ஊற்றி துடைத்து விட்டு சிந்திக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். நம் இலக்கு சிங்கபூர் போன்ற ரயில் பயணமாக இருக்கலாம் ஆனால் இங்கே சுவிங் கம் தடை செய்ய இயலுமா என்று யோசித்த பின் அந்த தரம் அளவு சேவையை இலக்காகுவோம். பெரும் வளர்ந்த நாடுகளில் ஒரு வருடம் காணும் மனித போக்குவரத்து இங்கே சென்னையின் சென்ட்ரலும் எக்மோரும் ஒரு தீபாவளி காணும். இதையும் கணக்கில் கொண்டு - தொடர்ந்து துடைத்து கொண்டே இருக்கும் சேவைகளையும் விருப்பம் கொள்ள வேண்டும்.

    நமது தேவை உற்பத்தியில் சில சமயம் நேரிடும் காலி சோப்பு டப்பாவை கண்டுபிடிக்க UV சாதனங்கள் அல்ல அவைகளை சுலபமாக தள்ள ஒரு man cooler fan மட்டும். அதை எங்கெங்கு சரியாக பொறுத்த வேண்டும் என்று சிந்திக்கலாம்.

    இங்கே தேவை மாற்றம் தான், பல நிலைகளிலும் மனநிலையில்.

    ReplyDelete
  4. TO AVOID ACCIDENT CAN WE TRY LASER (RED) LIGHT WHICH GIVES LIGHT UP TO 2KM , IS THAT POSSIBLEE ?

    ReplyDelete
  5. நீங்கள் சொல்லும் யோசனை கேட்க நன்றாக இருக்கிறது ஆனால் குறைந்த கூலியில் வேலைக்கு அமர்த்தப்படும் சுகாதார தொழிலாளர்கள் நீங்கள் விரும்பும் சுத்தத்திற்காக கசக்கிப் பிழியப்பட்டால் ஒழிய அது நடக்காது. குப்பைகளை போடப் போட ஒருவர் எடுத்துக் கொண்டே இருக்கலாம் ஆனால் குப்பை அள்ளும் கான்டிராக்ட் தொழிலாளர்களும் மனிதர்கள் தான்.

    ReplyDelete