Thursday, May 07, 2015

அதிரணசண்ட மண்டபத்தின் மூன்றாவது கல்வெட்டு

நேற்று மாலை, முனைவர் நாகசாமியின் வீட்டின் வாகன நிறுத்திமிடத் தளத்தில் கோபு மாமல்லபுரத்தைப் பற்றி அருமையானதொரு சொற்பொழிவை நிகழ்த்தினார். நாகசாமி, அறிமுக உரை, முடிவுரையை வழங்கி, மாமல்லபுரத்தின் அனைத்துச் சின்னங்களும் ராஜசிம்மன் காலத்தில் உருவானவையே என்ற தன் கோட்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சொல்லப்போனால் அது மேலும் உறுதியாகியுள்ளது என்றார்.


சில வாரங்களுக்குமுன் கோபுவின் உந்துதலினால் அவருடன் பேரா. சுவாமிநாதன், சிவா ஆகியோருடன் நானும் மெட்ராஸ் லிடரரி சொசைட்டி என்ற நூலகத்துக்குச் சென்றிருந்தோம். சென்னையின் மிகப் பழமையான நூலகம் இது. கல்லூரிச் சாலையில் சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கு எதிராக உள்ள டிபிஐ வளாகத்தில் உள்ள பழைமையான கட்டடம் ஒன்றில் இந்த நூலகம் இயங்கிவருகிறது.

இந்நூலகத்தில் 18, 19-ம் நூற்றாண்டுகளில் அச்சான மிக அருமையான பழைய புத்தகங்கள் சில உள்ளன. அவற்றில் சிலவற்றை நூலகத்தினர் லாமினேட் செய்து சிறப்பாகப் பாதுகாத்துவருகின்றனர். ஆனால் வருந்தத்தக்க முறையில் நூலகத்தின் பிற பகுதிகள் புழுதி படிந்து, பல பழைமையான புத்தகங்கள் மடிந்துவருகின்றன. புரவலர்கள் இல்லாததால் இந்நிலை.

நியூட்டனின் பிரின்சிபியா மேத்தமேடிகா முதல் எடிஷன், ஏசியாடிக் சொசைட்டியின் வெளியீடுகள் சில என்று கோபு கொண்டுவர, அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்படி கோபு உருவி எடுத்துக் காண்பித்த ஒரு புத்தகம்தான் The Seven Pagodas on the Coromandel Coast, Descriptive and Historical Papers என்ற கேப்டன் எம்.டபிள்யூ. கார் தொகுத்த ஒரு புத்தகம். [கூகிள் புக்ஸில் கிடைக்கிறது - ஆனால் பல பக்கங்கள், முக்கியமாக பாபிங்டனின் கட்டுரையில் பெரும் பகுதி கிடைப்பதில்லை] 1869-ல் வெளியானது. [சற்றுமுன் ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ் மறுபதிப்பு செய்திருக்கும் இந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியை வாங்கினேன். இப்போது புத்தகம் அச்சில் இல்லை. ஆறு பிரதிகள்தான் மிச்சம் இருக்கின்றன.] அதுவரையில் மாமல்லபுரம் பற்றி வந்திருந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொகுத்து, மிக அற்புதமான வரைபடங்களைச் சேர்த்துப் பதிப்பிக்கப்பட்ட புத்தகம். மிக அகலமான பக்கங்கள். பக்கங்களைப் பிரித்தால் ஒரு மேஜை முழுவதுமாகப் பரவியிருக்கும்படியான அளவிலான புத்தகம்.

அதில் ஒவ்வொரு பக்கமாகத் திருப்பிக்கொண்டிருக்கும்போது கோபு திடீரென துள்ளிக் குதித்தார். சாளுவன்குப்பத்தில் புலிக்குகை மற்றும் அதிரணசண்ட மண்டபம் என்ற இரண்டு பல்லவச் சின்னங்கள் உள்ளன. அதிரணசண்ட மண்டபத்தில் மிகவும் சுவாரசியமான விஷயம், அதில் ஒரு நீண்ட சமஸ்கிருத சுலோகம் இரண்டு பக்கமும் பொறிக்கப்பட்டிருக்கும். ஒரு பக்கம் பல்லவ கிரந்த எழுத்துகளில் இருக்கும். மற்றொரு பக்கம் நாகரியில் இருக்கும். இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே சுலோகம் (சிறு சிறு மாற்றங்கள் மட்டுமே). ஆனால் இரண்டு வெவ்வேறு எழுத்துகளில் எழுதப்பட்டது.

ஆனால் கார் புத்தகத்தில் இந்தக் குறிப்பிட்ட பக்கத்தில் காட்டப்பட்ட வரைபடத்தில் மூன்று கல்வெட்டுகளுக்கான அச்சுகள் இருந்தன.

An Account of the Sculptures and Inscriptions at Mahamalaipur; illustrated by Plates. By Benjamin Guy Babington, M.B, F.R.S, Sec. R.A.S என்பதுதான் இந்தக் கட்டுரை.

கணேச ரதத்திலும் தர்மராஜ மண்டபத்திலும் உள்ள கல்வெட்டுகளை பாபிங்டன் தானே பார்த்து, பிறருடைய உதவியுடன் படித்து அவற்றைப் பற்றி எழுதியிருக்கிறார். அதைத் தொடர்ந்து டி ஹாவில்லாண்ட் என்பவர் பாபிங்க்டனுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், மாமல்லபுரத்துக்கு வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஓரிடத்தில் உள்ள குகைக்கோவில் ஒன்றில் மூன்று கல்வெட்டுகள் இருப்பதாகவும் அவற்றின் படங்கள் இவை என்றும் மூன்று படங்களை அனுப்பியுள்ளார்.

இந்த மூன்று படங்களையும் பாபிங்டன் தன் கட்டுரையில் இணைத்திருந்தார். (1828-ல் படிக்கப்பட்டு, 1830-ல் ராயல் ஏஷியாடிக் சொசைட்டி ஆராய்ச்சி இதழில் வெளியானது.) அந்தக் கட்டுரை அப்படியே காரின் புத்தகத்தில் (1869-ல்) பதிப்பாகியிருந்தது. அந்தப் பக்கம்தான் கோபுவைத் துள்ளி எழ வைத்தது.


பாபிங்டனுக்குப் பின் இன்றுவரையில் மாமல்லபுரத்தை ஏகப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கடந்த 185 ஆண்டுகளில் ஆராய்ந்துள்ளனர். ஆனால் அனைவருமே அதிரணசண்ட மண்டபத்தில் இரண்டு கல்வெட்டுகள்தான் இருப்பதாகச் சொல்கின்றனர். ஹுல்ஷ், துப்ரே முதல் என்.எஸ்.ராமசாமி, நாகசாமி, மைக்கல் லாக்வுட், கிஃப்ட் சிரோமணி என்று அனைவரும் குறிப்பிடுவது இரண்டு கல்வெட்டுகளை மட்டுமே. இன்று நாம் சென்று பார்த்தால் அங்கே இருப்பது இரண்டு கல்வெட்டுகள்தான்.

மூன்றாவதாக ஒரு கல்வெட்டு இருந்ததா?

இருந்திருக்கவேண்டும். ஏனெனில் டி ஹாவில்லாண்ட் வரைந்து, பாபிங்டன் இணைத்திருக்கும், கார் கொடுத்திருக்கும் படம் இன்று நமக்குக் காணக் கிடைத்துள்ளது. (மெட்ராஸ் லிடரரி சொசைட்டி + கோபுவுக்கு நன்றி.) ஆனால் இது பாபிங்டனுக்குப் பின்னான ஆய்வாளர்கள் கண்ணில் ஏன் சிக்கவில்லை.

அதைவிட முக்கியமான கேள்வி, இன்று அந்தக் கல்வெட்டு எங்கே?

பல்லவ கிரந்தம் - அதிரணசண்ட மண்டபம்
நாகரி - அதிரணசண்ட மண்டபம்
மூன்றாவது - இதுவும் நாகரி - ஆனால் எங்கே இருக்கிறது?
கர்னல் காலின் மெக்கன்ஸியின் மாமல்லபுர வரைபடம் ஒன்றும் காரின் புத்தகத்தில் உள்ளது. அதில் மெக்கன்ஸி மிகத் தெளிவாக அதிரணசண்ட மண்டபத்தில் மூன்று இடங்களில் கல்வெட்டுகள் இருப்பதைக் குறிப்பிடுகிறார். இரண்டு இப்போது இருக்கும் கல்வெட்டுகளுடன் ஒத்துப்போகிறது. மூன்றாவதாக அவர் மண்டபத்தில் நட்டநடுவில் கல்வெட்டு ஒன்று இருப்பதாகக் காட்டுகிறார். அது எங்கே போனது என்று தெரியவில்லை.

அது தவிர, அதிரணசண்ட மண்டபம் இருக்கும் சாளுவன்குப்பத்துக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையில் இரண்டு சோழர் கால தமிழ்க் கல்வெட்டுகள் இருப்பதாக ஜார்ஜ் மாஹோன் குறிப்பிட்டிருக்கிறார். (Guide to Sculptures Excavations and Other Remarkable Objects at Mamallaipur generally known to Europeans as the 'Seven Pagodas' by the Late Lieutenant John Braddock of Madras Establishment with additional notes by Rev William Taylor and supplementary information by Walter Elliot compiled by Rev George Mahon AM, Garrison Chaplain, Fort St George.) இந்தக் கட்டுரையும் காரின் புத்தகத்தில் வருகிறது. இந்தக் கல்வெட்டுகள் இருக்கக்கூடிய இடம் என்று சொல்லப்பட்ட இடத்தில் ஏதோ கல்வெட்டுகள் இருப்பதுபோல மெக்கன்ஸியின் வரைபடமும் குறிக்கிறது. கோபு சென்று தேடியபோது இந்தியத் தொல்லியல் துறையின் குறிப்புக்கல் ஒன்று அங்கே நடப்பட்டிருக்கிறது. அருகில் ஒரு பெரிய பாறை இருக்கிறது. ஆனால் அடிஹ்ல் கல்வெட்டு ஒன்றும் காணோம். அந்தக் கல்வெட்டுகளின் படி காருடைய புத்தகத்தில் (ஜார்ஜ் மாஹோன் வழியாக) கிடைக்கிறது.

குறைந்தபட்சம் இந்த இரண்டு கல்வெட்டுகள் - அதிரணசண்ட மண்டபத்தின் மூன்றாவது சமஸ்கிருதக் கல்வெட்டு, சாளுவன்குப்பத்துக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே உள்ள ஒரு தமிழ்க் கல்வெட்டு இரண்டையும் மீண்டும் கண்டுபிடிப்பது அவசியமாகிறது.

நேற்றைய பேச்சின்போது, மாமல்லபுரம் தொடர்பான ஆரம்பகாலக் கண்டுபிடிப்புகள், தவறுகள், தவறுகள் திருத்தப்பட்டமை, பின்னர் கல்வெட்டுகள் மற்றும் சின்னங்களை ஆராய்வதன்மூலம் உருவாக்கப்பட்ட கோட்பாடுகள் ஆகியவை பற்றி கோபு விளக்கினார். அதன்பின் காருடைய புத்தகத்தைப் பார்த்ததற்குப் பிறகு மாமல்லபுரம் சென்று தான் தேடிய சில விஷயங்கள், கணேச ரதத்தில் உள்ள கல்வெட்டின் அடிப்பாகத்தில் எழுத்துகளின்கீழே கணேச ரதம் போன்ற ஒரு கோவிலின் வடிவமும் செதுக்கப்பட்டிருந்தது (இது காருடைய புத்தகத்தில் உள்ளது) - இது பொதுவாக யார் கண்ணிலும் பட்டதில்லை ஆகியவற்றைப் பற்றியும் பேசினார்.


முனைவர் நாகசாமி பேசும்போது, ஸ்டைல், புள்ளிவிவர ஆராய்ச்சி ஆகியவை மூலம் மாமல்லபுரத்தில் உள்ள சின்னங்கள் பல்வேறு காலகட்டத்தில், பல்வேறு அரசர்களின்கீழ் உருவானவை என்று சொல்வதெல்லாம் சரியல்ல என்றார். இதைப்பற்றி அவர் 1964-ல் எழுதிய கட்டுரை இன்றுவரை சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. கட்டுமானக் கோவில்களை உருவாக்கவதற்குத்தான் காலம் பிடிக்கும். தஞ்சையின் பெரிய கோவிலைக் கட்டுவித்தது யார் என்று நூறு ஆண்டுகளுக்கு முன் யாருக்கும் தெரியவில்லை. அதன்பின் அதன் அடிக் கட்டுமான கல்வெட்டு ஒன்றில் ராஜராஜன், நான்தான் இந்தக் கோவிலைக் கட்டுவித்தேன் என்று எழுதினேன். அத்துடன் அது குறித்த சர்ச்சைகள் ஓய்ந்தன. அதேபோல மாமல்லபுரத்தைப் பொருத்தவரையில் ராஜசிம்மன் மிகத் தெளிவாக தான்தான் அதிரணசண்ட மண்டபத்தையும் தர்மராஜ மண்டபத்தையும் கணேச ரதத்தையும் கட்டினேன் என்று எழுதியிருக்கிறான். அது ஒன்றே பிரமாணம். வேறு எதையும் ஏற்கத் தேவையில்லை என்றார்.

கைலாசநாதர் கோவிலை எடுத்துக்கொண்டால் சுற்றியுள்ள சந்நிதிகளில் இரண்டு வெவ்வேறு எழுத்துகளில் (ஒவ்வொன்றிலும் இரண்டு எழுத்துருவில்) மொத்தம் நான்கு வெவ்வேறு ஸ்டைலில் தன் விருதுப் பெயர்களை எழுதியிருக்கிறான். அதேபோல அதிரணசண்ட மண்டபத்தில் கிரந்தத்தில் ஒன்றாகவும் இருவேறு நாகரி முறையில் இரண்டாகவும் மொத்தம் மூன்று கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறான். இது அவனுடைய தன்மை - ஏனெனில் அவன் அத்யந்த காமன். எனவே ஐந்து வெவ்வேறு விதமான ரதங்களை ஒரே இடத்தில் உருவாக்க முனைத்திருக்கிறான். முற்றிலும் வெவ்வேறு விதமான அமைப்புகள் கொண்ட மண்டபங்களையும் கட்டுமானக் கோவில்களையும் திறந்தவெளி புடைப்புச் சிற்பங்களையும் படைக்க முற்பட்டிருக்கிறான். இவையெல்லாம் ஒருவனுடைய ஆயுள் காலத்தில் சாத்தியமே. எனவே தன் கோட்பாடு மேலும் உறுதியாகியிருக்கிறது என்றார் நாகசாமி.

கோபு தொழில்முறை தொல்லியலாளராக இல்லாவிட்டாலும் பல்லவ கிரத்த எழுத்துகளைக் கற்று, கல்வெட்டுகளைப் படிக்கும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றிருப்பதைப் பாராட்டிய நாகசாமி, தொல்லியல் என்பது தொழில்முறையாளர்களுக்கு மட்டுமல்ல, ஆர்வலர்கள் அனைவருமே தொல்லியலாளர்களாக ஆகவேண்டும் என்றார். பிறகு இறுதியாக, மாமல்லபுரம் பற்றிய சர்ச்சை தொடர்வது நல்லதுதான், அதுதான் நம்மை மாமல்லபுரத்தைத் தொடர்ந்து சென்று பார்ப்பதற்கும் ஆராய்வதற்கும் வழிகோலும் என்றார். யார் மாமல்லபுரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படவேண்டாம், அங்கே உள்ள சிற்பங்களை ரசிப்பதற்கு. உடனடியாகச் சென்று ரசித்துவிடுங்கள், ஏனெனில் 20 வருடங்களில் அங்கு ஒன்றுமே இல்லாமல் போய்விடும் என்றும் சொன்னார். 1960-களில் அங்கே அவை இருந்த அழகுக்கும் இப்போது இருக்கும் நிலைக்குமான வித்தியாசத்தைச் சொல்லும்போது வருந்தினார்.

இந்தப் புதிய இரண்டு கல்வெட்டுகள் பற்றிப் பேசும்போது, மெக்கன்ஸி எழுதிய ஒரிஜினல் கட்டுரையைத் தேடுவதற்காக லண்டன் நூலகத்துக்கு எழுதியிருப்பதாகச் சொன்னார். இந்தியத் தொல்லியல் துறை இந்த இரண்டு கல்வெட்டுகளையும் தேடிக் கண்டுபிடிக்க முயற்சி செய்யவேண்டும், அது ஒன்றும் செலவு எடுக்காதது என்றும் சொன்னார்.

***

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் குறித்த மாபெரும் ஆவணப்படுத்தல் திட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கோபுவை ராஜசிம்மனின் ஆவி பீடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். கைலாசநாதர் கோவிலில் காணப்படும் ராஜசிம்மனின் ஓவிய கிரந்த எழுத்துகளை கோபு தன் சட்டைகளில் எம்பிராய்டரி செய்து போட்டுக்கொள்கிறார். அதன் காரணமாகவே கனவிலும் புத்தக ரூபத்திலும் ராஜசிம்மனின் ஆவி கோபுவைச் சில வழிகளில் இட்டுச் செல்கிறது. அவர் மேலும் பல பல்லவச் சுவடுகளைத் தேடிப் பிடிக்க வாழ்த்துகிறேன்.

7 comments:

  1. வாழ்க அவர்தம் பணி.நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யம் மழை.

    ReplyDelete
  2. Excellent piece and a fund of info.

    ReplyDelete
  3. தனி நபர்கள் இவ்வளவு செய்கிறார்கள். தொல்லியல்துறை என்னதான் செய்கிறது?
    சரவணன்

    ReplyDelete
  4. Excellent informations Bhadri!! - Dhivakar

    ReplyDelete
  5. /* The Seven Pagodas on the Coromandel Coast, Descriptive and Historical Papers என்ற கேப்டன் எம்.டபிள்யூ. கார் தொகுத்த ஒரு புத்தகம். [கூகிள் புக்ஸில் கிடைக்கிறது - ஆனால் பல பக்கங்கள், முக்கியமாக பாபிங்டனின் கட்டுரையில் பெரும் பகுதி கிடைப்பதில்லை] 1869-ல் வெளியானது.*/

    அய்யா பத்ரி, என்னிடம் இப்புத்தகம் இருக்கிறது - முழுமையான பெஞ்சமின் கய் பேபிங்டன் அவர்களின் கட்டுரையுடன். அழகான கோட்டுச் சித்திரங்களுடன்! அவசரத்துக்கு வேண்டுமானால், ஸ்கேன் செய்து நாளை அனுப்புகிறேன். தேவையென்றால், கேட்கவும்.

    நன்றி.

    ReplyDelete
  6. You can also read the complete book here (Google version has this book in preview mode, so some pages may be missing):

    http://dli.gov.in/scripts/FullindexDefault.htm?path1=/data6/upload/0143/231&first=1&last=312&barcode=99999990009072

    ReplyDelete
  7. ஜூன் 12 - ஞாயிறு அன்று கோவை ஆர்த்ரா ஹாலில் "அருவி" நிகழ்வில்...
    காஞ்சி கைலாசநாதர் ஆலயம் குறித்த கோபு அவர்களின் "அரன முறுவல்" காணொளிக் காட்சி-உடன் கூடிய உரையாடலை கேட்டேன்.

    அழகியல் பதிவு! அற்புத முயற்சி! நல்வாழ்த்துக்கள்..!

    ReplyDelete