Thursday, February 18, 2016

கல்வியை யார் தரவேண்டும்? விவாதம். 21 பிப் 2016

வரும் ஞாயிறு மாலை 4.00 மணிக்கு கோடம்பாக்கம் சினி சிட்டி ஹோட்டலில் லோக்சத்தா கட்சியின் தமிழ்நாட்டுக் கிளை ஏற்பாடு செய்திருக்கும் ஒரு விவாதத்தில் கலந்துகொள்கிறேன். கல்வி என்பது அரசின் கையில் மட்டுமே இருக்கவேண்டுமா, கல்வியில் தனியாரின் பங்கு என்ன போன்றவை விவாதப் பொருளாக இருக்கும். அனைவரும் பங்கேற்கலாம்.


Friday, February 12, 2016

ஊழலை ஒழிக்கவே முடியாதா?

நேற்று இரவு புதிய தலைமுறை ‘நேர்படப் பேசு’ விவாதத்தில் கலந்துகொண்டேன். அருணன், சுப.வீ, சுபகுணராஜன் ஆகியோர் பிறர். தலைப்பு ‘50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழகம் செழித்துள்ளதா, சீரழிந்துள்ளதா?’ என்பது.


இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் போய்வந்திருக்கிறேன் என்று சொல்லமாட்டேன். ஆனால் பல மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறேன். பொதுவான பார்வையில், பிற எந்த மாநிலத்தையும்விட தமிழகம் சிறப்பான நிலையில்தான் இருக்கிறது. பரவலான நகரமயமாக்கம், கல்வியிலும் தொழில்களிலும் உள்ள வளர்ச்சி, மாநில தனிநபர் மொத்த உற்பத்தி, அதிகாரப் பரவலாக்கம், சாலைகள், போக்குவரத்து வசதி, பொதுவிநியோகக் கட்டமைப்பு, மருத்துவ வசதி என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக, அஇஅதிமுக இரண்டு கட்சிகளுக்கும் இந்த வளர்ச்சியில் கட்டாயம் பங்குண்டு. இந்த வளர்ச்சிக்கு அடிபோட்ட காங்கிரஸ் ஆட்சியின் கடைசி ஆண்டுகளும் இதற்கு ஒரு காரணம்.

1990-களுக்குமுன் வேலை வாய்ப்பு தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆனால் உலகமயமாக்கல் கொடுத்த வாய்ப்பைப் பிற மாநிலங்களைவிடத் தமிழகம் ஆரத்தழுவி ஏற்றுக்கொண்டது. தனியார் பொறியியல் கல்லூரிகளின் வளர்ச்சி காரணமாக நிறைய ஐடி பொறியாளர்கள் உருவாகினர். டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற பெரும் ஐடி நிறுவனங்கள் தமிழகத்தையும் தமிழ்ப் பொறியாளர்களையும் நம்பின. நான்கு சக்கர வாகன உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டது. இதனால் பல உபதொழில்கள் தமிழகத்தில் உருவாயின. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கல்லூரிக்குச் செல்வோர் விகிதம் அதிகமாக இருக்கிறது. குறைந்தபட்சம் தொலைநிலைக் கல்வி வழியாகவாவது பட்டம் வாங்கிவிடவேண்டும் என்று பலர் படிக்கிறார்கள்.

ஆனால் இவற்றைக் கொண்டு நாம் மகிழ்ச்சி அடைந்துவிட முடியுமா? வளர்ச்சியுடன் கூடவே நம்முடைய எதிர்பார்ப்புகளும் அதிகரித்துக்கொண்டேதானே இருக்கிறது? வெறும் தூரதர்ஷன் போதும் என்று இருக்க விரும்புகிறோமா? 100 தமிழ் சானல்களாவது வேண்டும் என்று விரும்புகிறோம் அல்லவா? அதுபோலத்தான்.

வளர்ந்த நாடுகளில் உள்ள வசதி வாய்ப்புகளைக் கணக்கில் எடுத்துப் பாருங்கள். ஒழுங்குபடுத்தபட்ட நகர அமைப்புமுறை, சீரான சாலைகள், கட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து நிர்வாகம், பலவிதமான பொதுப்போக்குவரத்து வசதிகள், வீடுகளுக்குத் தரமான 24x7 மின்சாரம், குடிநீர், பூங்காக்கள், நூலகங்கள் இவையெல்லாம் தமிழகத்தில் சாத்தியமில்லையா?

தரமான அரசுக் கல்விநிலையங்கள், தகுதியின் அடிப்படையில் (இட ஒதுக்கீட்டுக்கு உட்பட்டு) தேர்ந்தெடுக்கப்படும் பேராசிரியர்கள், கல்வித்துறையில் ஆழ்ந்த முத்திரை பதித்த துணைவேந்தர்கள் - இவற்றை நாம் ஏன் தமிழகத்தில் எதிர்பார்க்கக்கூடாது?

ஒழுங்காகக் கட்டுப்படுத்தபட்ட தனியார் கல்விநிலையங்கள், தரமற்ற கல்வி நிலையங்களை இழுத்துமூடுவது அல்லது கடுமையான அபராதம் விதிப்பது, சீரான கட்டண நிர்ணயம், கேபிடேஷன் கட்டணம் வாங்குவதைத் தடுப்பது ஆகியவை ஏன் தமிழகத்தில் சாத்தியமில்லை?

மின் உற்பத்தியில் நாம் ஏன் இவ்வளவு பின்தங்கியுள்ளோம்? ஏன் திமுகவும் அஇஅதிமுகவும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டே இருக்கின்றனர்? ஏன் மக்களின் நியாயமான தேவைகளை அரசால் பூர்த்தி செய்ய முடியவில்லை?

மக்களால் இடைத்தரகர்களைத் தாண்டி நேரடியாக அரசை அணுக முடிகிறதா? தங்களுக்கான சேவைகளை சரியான கட்டணம் கொடுத்துப் பூர்த்தி செய்துகொள்ள முடிகிறதா? ஏன் இவை இங்கே சாத்தியமாவதில்லை?

*

நம் வாழ்க்கைத்தரம் மேலும் உயராமல் இருப்பதற்கும் நம் மக்களுக்கான வசதி வாய்ப்புகள் வேண்டிய அளவு கிடைக்காமல் இருப்பதற்கும் மிக முக்கியமாண காரணம் ஊழல். இந்த ஊழலை சாதாரணமான ஒன்று என்று புறந்தள்ளிவிட முடியாது. இதில் என்ன சோகம் என்றால், திமுகவும் அஇஅதிமுகவும் மிக வசதியாக இதுகுறித்து விவாதத்தில் ஈடுபடவே மறுக்கிறார்கள். ஊழலை ஒழிக்கவே முடியாது; எந்த மாநிலத்தில்தான் ஊழல் இல்லை; மத்தியில் இல்லாத ஊழலா; ஊழல் என்பது ஒருவிதமான அதிகாரப் பகிர்வுதான் போன்ற பல சுவாரசியமான பதில்கள் வருகின்றன.

இன்னொரு வகையான பதில், மக்கள் நலக் கூட்டணி மட்டும் ஊழல் செய்யாமல் இருந்துவிடப் போகிறார்களா? அவர்களுக்கும் வாப்பு வந்தால் ஊழல் செய்யத்தான் போகிறார்கள் என்பது.

நிச்சயமாக இன்னார் ஊழல் செய்ய மாட்டார் என்று முன்கூட்டியே சொல்லிவிட முடியாது. ஆனால் திமுகவும் அஇஅதிமுகவும் ஊழல் செய்யாமல் இருக்க மாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். ஊழல் குறித்து எந்த உத்தரவாதத்தையும் அவர்கள் தரத் தயங்குகிறார்கள். திமுக அதிமுகவின் ஊழலைச் சாடும். அதிமுக, திமுகவின் ஊழலைச் சாடும். அவ்வளவுதான்.

ஊழலைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும் என்பது இன்றைய கட்டாயம். இதை முன்வைக்கும் கட்சிகளை, கூட்டணியையே நாம் ஆதரிக்கவேண்டும். கொள்கைகளில் மாறுபாடு இருந்தால் விவாதிக்கலாம். மாற்றிக்கொள்ளலாம் அல்லது அவர்களை மாற்றவைக்கலாம். ஊழல்குறித்து விவாதிக்க எதுவுமே இல்லை. மக்கள் பணத்தை மடைமாற்றுவதற்கான மோசமான வழிமுறை இந்த ஊழல். கடந்த ஐம்பதாண்டுகளில் பல்கிப் பெருகி, விரிந்து, இன்று ஊழல் தொடாத இடமே இல்லை என்ற நிலையை அடைந்துவிட்டோம். இந்த ஊழல்தான் நாம் தொடவேண்டிய உயரங்களை நம்மைத் தொடவிடாமல் செய்கிறது. இந்த ஊழல்தான் அரசு அதிகாரிகள் மனிதத்தன்மையை இழக்கச் செய்கிறது. இதுதான் தரமற்ற சேவையை மக்களுக்குத் தர அதிகாரிகளையும், ஒப்பந்தக்காரர்களையும், அரசியல்வாதிகளையும் தூண்டுகிறது. இதுதான் இளைஞர்களை நம்பிக்கை இழக்கச் செய்கிறது. தங்கள் பிழைப்புக்காக மோசமான வழிகளைத் தேடச் செய்கிறது.

*

Past record என்பதன் அடிப்படையில் மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் இப்போதுதான் இப்படிப்பட்ட ஒரு கூட்டணியை உருவாக்குகிறார்கள். அதன் தலைவர்களை நம்ப முடியுமா? அவர்கள் தங்கள் நேர்மையை மட்டுமே முன்வைத்து இந்தத் தேர்தலில் இறங்கியுள்ளனர், ஆதாயத்தை முன்வைத்தல்ல என்பது என் கருத்து. ஊழலை ஒழிப்பதன் அவசியத்தைப் பேசுவதற்காகவாவது இந்தக் கூட்டணிக்கு வாக்களிக்கவேண்டும். மக்கள் வளத்தைக் காப்பதுகுறித்துப் பேசுவதற்காகவது இந்தக் கூட்டணிக்கு வாக்களிக்கவேண்டும்.

இப்போது நாம் இந்தச் செயலைச் செய்யாவிட்டால், ஊழல் எதிர்ப்பின்பின் அணி சேராவிட்டால், வருங்காலச் சந்ததியினர் ஊழலற்ற சமுதாயம் சாத்தியமே இல்லை என்று கருதிவிடுவார்கள்.

Thursday, February 11, 2016

ஆரியம் குறித்த மூன்று புத்தகங்கள்

இது தமிழ்நாட்டு அரசியல் விவகாரம் கிடையாது:-) இரண்டு புத்தகங்களைப் படித்து முடித்துவிட்டேன். மூன்றாவது படித்துக்கொண்டிருக்கிறேன். மூன்றையும் முடிந்தபின்னரே இவைகுறித்து எழுதவேண்டும் என்றிருந்தேன். அதற்கான முன்னெச்சரிக்கைப் பதிவு:
  1. Aryans and British India, Thomas R. Trautmann: ஆரியர்கள் என்ற இன/மொழிக்குடும்பத்தவர் குறித்த கருத்தாக்கம் எவ்வாறு கிழக்கிந்திய கம்பெனி, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாகி வளர்ந்தது என்பது குறித்த முழுமையான பதிவு.
  2. The Quest for the Origins of Vedic Culture: The Indo-Aryan Migration Debate, Edwin Bryant: கிழக்கிந்திய கம்பெனியின் வில்லியம் ஜோன்ஸ் சமஸ்கிருதம், பாரசீகம், லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளுக்கிடையேயான ஒற்றுமையைப் புரிந்துகொண்டதிலிருந்து ஆரம்பிக்கும் மொழியியல் துறையில் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் குறித்து இதுகாறும் நிகழ்ந்துள்ள ஆராய்ச்சிகள், இந்தோ-ஐரோப்பிய மொழிகள் பரவியிருக்கும் பகுதியில் நிகழ்ந்துள்ள அகழ்வாய்வுகள், இந்தியாவில் ஆரியம் தொடர்பாக நிலவும் விவாதங்கள், அரசியல் பிரச்னைகள் என்ற பலவற்றையும் அலசி ஆராய்ந்து, தன் முடிவு என்று எதையும் சொல்லாமல் பின்புலங்களை மட்டும் விளக்கிச் சென்றிருக்கும் மிக அற்புதமான புத்தகம். இதில் பேசப்பட்டிருக்கும் பல விஷயங்களைப் புரிந்துகொள்ள எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இந்தப் புத்தகத்தைப் படித்ததில் ஒரு நன்மை, நான் தீவிரமாக சமஸ்கிருத மொழி கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன் என்பதுதான்.
  3. The Roots of Hinduism: The Early Aryans and the Indus Civilization, Asko Parpola. இன்னும் பாதிப் புத்தகம் பாக்கி இருக்கிறது. பிரையண்ட் நடுவோடு சொல்லிச் செல்வதற்கு மாற்றாக பர்ப்போலா அடித்து விளையாடுகிறார். அருகிலேயே நின்று பார்த்தவர்போல இப்படித்தான் நடந்தது, அப்படித்தான் நடந்தது என்று சொல்கிறார். அவருக்குத் துளிக்கூடச் சந்தேகமே இல்லை! 

முதலில் முக்கியமானது மேலே சொல்லப்பட்டிருக்கும் அனைவரும் அறிஞர்கள். கல்லூரிப் பேராசிரியர்கள். ஆராய்ச்சி இதழ்களில் எழுதுவதோடு நிற்காமல், சாதாரணர்களும் புரிந்துகொள்ளவேண்டும் என்று முனைந்து பாபுலர் புத்தகங்களும் எழுதுகிறார்கள். அதனால்தான் அமெச்சூர் ஆசாமிகளான நமக்கும் கொஞ்சம் தெரிந்துகொள்ளக் கிடைக்கிறது.

இரண்டாவது, ஆரியம் குறித்த பிரச்னை அவ்வளவு எளிதானதல்ல என்பது. இது பல ஆயிரம் அறிஞர்கள் வேலை செய்துகொண்டிருக்கும் துறை. அதில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் மிக மிகக் குறைவானவர்கள். அவர்களில் பலரும் உண்மையில் அறிஞர்கள் இல்லை, அரைவேக்காடுகளே. இதுபற்றி ஓரளவு விஷயஞானம்கூடத் தமிழகக் கல்வி நிலையங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. Philology என்ற துறையில் கல்வி கற்பிக்கும், ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்கள் கண்ணுக்குத் தென்படும் தூரத்தில் இந்தியாவில் இருப்பதாகவே தெரியவில்லை. இந்தியாவில் அரசியல் சமூக வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதெல்லாம் பெரும்பாலும் அந்நிய நாட்டு அறிஞர்களே.

மூன்றாவது, இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் பரவியிருந்த பகுதிகளில் மிக விரிவான அகழ்வாய்வுகள் நடந்துள்ளன. கண்டுபிடிப்புகள் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் பலவற்றைக் குறித்து பிரையண்ட், பர்ப்போலா புத்தகங்களில்தான் நான் முதலாவதாகக் கேள்விப்படுகிறேன். நம் வரலாற்றுப் புத்தகங்கள் எல்லாமே வேஸ்ட். நாம் மேலோட்டமான சில விஷயங்களை முற்றுமுழுதான முடிவுகளாக நம் பாடப் புத்தகங்களில் போதித்துக்கொண்டிருக்கிறோம்.

இப்போதைக்கு இது போதும். முடிந்தவரை இந்தப் புத்தகங்களைப் பற்றி பின்னர் எழுதப் பார்க்கிறேன்.

Wednesday, February 10, 2016

ஏன் ஆதரிக்கவேண்டும் மக்கள் நலக் கூட்டணியை?

1967-ல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டபின் இன்றுவரை தமிழகத்தை திமுகவும் அஇஅதிமுகவும் மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கின்றன. இவ்விரு கட்சிகளும் ஒரேபோல்வன என்று நான் சொல்ல வரவில்லை. நிச்சயமாக இரண்டில் தற்போதைக்கு மிக மோசமானது அஇஅதிமுகதான் என்று நினைக்கிறேன். கடந்த ஆறு தேர்தல்களில் இவ்விரு கட்சிகளுக்கும் மாறிமாறி வாக்களித்துவந்திருக்கிறோம். அவ்வகையில் இம்முறை திமுகதான் வெற்றிபெறவேண்டும். ஆனால் நிலைமை வெகுவாக மாறியுள்ளது என்று நான் நினைக்கிறேன்.

கடந்த தேர்தல்களின்போது பிற சிறு கட்சிகளெல்லாம் திமுக, அஇஅதிமுக இருவரில் எவருடன் சேர்வது என்பதில்தான் குறியாக இருந்தனர். கூட்டணி உடன்படிக்கைகள் வெகு சீக்கிரமாக நடந்தேறிவிடும். பேரம் சரியாகப் படியாதபோது சில கட்சிகள் கோபம்கொண்டு தனித்து நிற்பது வழக்கம், அல்லது தேர்தலையே புறக்கணிப்பதும் நடக்கும். 2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்புவரை விஜயகாந்தின் தேமுதிக மட்டும்தான் திமுக, அஇஅதிமுக இரண்டையும் விட்டு விலகி தனித்து நின்று தங்கள் வாக்குகளைப் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வந்தது. ஆனால் அதுவும் 2011-ல் அஇஅதிமுகவுடன் கூட்டு சேர்ந்ததுடன் அழிந்துபோனது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, மதிமுக, பாமகவுடனான கூட்டணியால் தேமுதிகவுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. அஇஅதிமுகவின் அதிரடி அரசியலுக்கு தேமுதிக தன் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரையும் இழந்தது.

இந்நிலையில்தான் மதிமுக, விசி, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் என நால்வரும் திமுகவுடனும் அஇஅதிமுகவுடனும் கூட்டணி அமைப்பது தங்கள் கட்சிகளுக்கு ஈமச்சடங்கு செய்வதற்கு ஒப்பானது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டன. இவ்விரு பெரும் கட்சிகளுடனும் கூட்டணி அமைப்பதால் தத்தம் கட்சிகளை வளர்க்க முடியாது என்பது மட்டுமல்ல; ஆட்சியில் எவ்விதத்திலும் பங்கு கிடையாது; கூடவே அரசின் திட்டங்களில் எந்தவிதத்திலும் தாக்கம் செலுத்தமுடியாது. ஒப்புக்குச் சப்பாணியாக இருக்கலாம். கிடைக்கும் ஓரிரு எம்.எல்.ஏ இடங்களை வைத்துக்கொண்டு அது தரும் வசதிகளை அனுபவித்துக்கொண்டு மகிழ்ச்சியோடு இருக்கலாம்; அவ்வளவுதான்.

பாமகவும் இதனைப் புரிந்துகொண்டது என்றாலும், அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர் என்ற பரப்புரையில் இறங்கி பிற சிறு கட்சிகளிடமிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தது. மேலும் விசி-பாமக விரிசல், வெளிப்படையான தலித் எதிர்நிலைப் பிரசாரம் ஆகியவை அக்கட்சிக்கான ஆதரவுத் தளத்தைக் குறுக்கியது.

மக்கள் நலக் கூட்டணியின் தற்போதைய நான்கு கட்சிகளுக்கும் ஒருவிதத்தில் முன்னோடி தேமுதிகதான். ஆனால் இன்றுவரை தேமுதிக குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. தேமுதிக, தமாக இரண்டும் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்திருந்தால் உண்மையிலேயே மிகப்பெரிய எதிர்ப்பு சக்தியை தமிழகத்தில் உருவாக்கியிருக்க முடியும். மக்கள் நலக் கூட்டணியினர் இதனை உருவாக்கப் பெரிதும் முயன்றார்கள். ஒத்துழைக்க மறுத்தது விஜயகாந்த்தும் வாசனும்தான்.

***

தமிழகத்தில் ஊழலை ஆரம்பித்துவைத்தது கருணாநிதி என்றால் அதைப் பெரிதும் வளர்த்தது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவுமே. கடந்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதா செய்த மாபெரும் சாதனை ஊழலை முழுமைப்படுத்தி, மையப்படுத்தி, ஒழுங்குபடுத்தியது. அதாவது முன்பெல்லாம் லஞ்சம் கொடுக்காமல் சில செயல்கள் நடக்கலாம். இடையிடையே பலர் காசு பார்க்கலாம், சில அமைச்சர்கள், செயலர்கள் காசு வாங்காமலும் சில செயல்களைச் செய்யலாம். ஆனால் தற்போதைய ஜெயலலிதா ஆட்சியில், ஒவ்வொரு துறையிலும் ஊழல் ஒழுங்குபடுத்தப்பட்டு, எந்தெந்தச் செயல்களுக்கு எவ்வளவு வாங்கவேண்டும் என்று ரேட் கார்ட் நிர்ணயிக்கப்பட்டு, இதிலிருந்து சிறிதும் வழுவாமல் செயல்படவேண்டும் என்று ஆணை விதிக்கப்பட்டு, சேர்க்கப்பட்ட பணம் எப்படிப் பிரித்துக்கொள்ளப்படவேண்டும் என்றும் வழிமுறை தரப்பட்டிருக்கிறது. இது தமிழகம் கண்ட மாபெரும் புதுமை.

அஇஅதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, எம்.எல்.ஏ பதவியிலிருந்து விலகிய பழ.கருப்பையா இதைச் சுட்டிக்காட்டினார். ஆனால் ஊடக நேர்காணல்களில் யாரும் அவரிடம் இதுகுறித்துக் கேள்விகள் கேட்கவே இல்லை. அவரைக் குடைந்து மட்டம் தட்டுவதிலேயே நேரம் போய்விட்டது. ஊழல் மலிந்த தேசம் என்பதைத் தாண்டி, ஊழலால் நெறிப்படுத்தப்பட்ட ஆட்சிமுறை, வாழ்க்கைமுறை என்று ஆகியிருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பொதுமக்கள் உணரவில்லை.

கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு பைசாகூட லஞ்சம் தராது ஆரம்பிக்கப்பட்ட பள்ளிக்கூடம் என்று எதுவும் இல்லை. ஒரு பைசாகூட லஞ்சம் தராது வாங்கப்பட்ட பொது நூலக ஆணை என்று எதுவும் இல்லை. ஒரு பைசாகூட லஞ்சம் பெறாது தரப்பட்ட சாலை போடும் ஒப்பந்தம் என்று எதுவும் இல்லை. ஒரு பைசாகூட லஞ்சம் பெறாது நியமிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் என்று எவரும் இல்லை. ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு ஒப்பந்தத்திலும், ஒவ்வொரு நியமனத்திலும் இலக்கு வைத்து அமைச்சர்கள்முதல் அதிகாரிகள்வரை விரட்டப்பட்டிருக்கின்றனர். முதல்வருக்கு எதிராகச் சொத்துக் குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்தபோதே இதுதான் நம் மாநிலத்தில் நடந்துகொண்டிருந்தது.

அஇஅதிமுக தோற்கடிக்கப்படவேண்டும் என்பதில் துளிக்கூட மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

***

அப்படியென்றால் திமுகவுக்கு வாக்களிக்கலாமே என்ற இயல்பான கேள்வி எழுகிறது. அப்படித்தானே இதற்குமுன்புவரை செயல்பட்டுக்கொண்டிருந்தோம்? இந்தக் கட்சிமீது கோபம் என்றால் அந்தக் கட்சிக்கும், அந்தக் கட்சிமீது கோபம் என்றால் இந்தக் கட்சிக்கும் வாக்களிப்பதுதானே நடைமுறை? கிட்டத்தட்ட இரு கட்சி ஜனநாயகம்தானே தமிழகத்தில் நடந்துகொண்டிருந்தது?

கவனமாகப் பார்த்தால் கடந்த பத்தாண்டுகளில் திமுக என்னும் கட்சி சுருங்கிக்கொண்டிருக்கிறது என்பது புரியவரும். சென்றமுறை திமுக ஆட்சியில் இருந்தபோது அது தனிப்பட்ட முறையில் பெரும்பான்மையைப் பெறவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவளிப்பதைக் காரணம் காட்டி, கூட்டணி ஆட்சி இல்லாமலேயே தமிழகத்தில் காங்கிரஸின் ஆதரவில் திமுக ஆட்சி நடத்தியது. 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக எந்த அளவுக்குப் பலவீனமாக ஆகியுள்ளது என்பது மேலும் தெரியவந்தது.

ஆனாலும் இந்தப் பலவீனத்தை வெளிக்காட்டாமல், தாங்கள் தனித்து ஆட்சியைப் பிடிப்போம், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றே திமுக தலைமை பேசியது. அஇஅதிமுக ஊழல் செய்கிறது என்றால் அதைத் தூக்கி எறிந்துவிட்டு திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த அனைத்துக் கட்சிகளும் தாமாக முன்வந்து உதவவேண்டும் என்று இறுமாப்புடன் எதிர்பார்த்தது திமுக. தன் பலத்தை அதிகமாக மதிப்பிட்டு, பிற கட்சிகளைக் கேவலமாகப் பார்த்ததன் விளைவுதான் மக்கள் நலக் கூட்டணி உருவானது. இன்றுவரை மக்கள் நலக் கூட்டணியை ‘அஇஅதிமுக பி டீம்’, ‘ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கியவர்கள்’ என்று தூற்றுவது மட்டும்தான் திமுகவின் எதிர்வினையாக இருந்துவருகிறது.

மதிமுக, விசி, கம்யூனிஸ்டுக் கட்சிகள் திமுகவிடமிருந்து விலகி நிற்க வலுவான காரணங்கள் உள்ளன. ஆனால் மக்களாகிய நாம் திமுகவிடமிருந்து விலகி நிற்கக் காரணங்கள் உள்ளனவா?

திமுக இதுவரை பயணித்துவந்த பாதையிலிருந்து மாறி வேறுமாதிரியான ஆட்சியை அளிக்கும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் நமக்கு இதுவரையில் கிட்டவில்லை. எப்போதெல்லாம் தாம் ஆட்சியில் இருக்கிறோமோ அப்போது தமிழகத்துக்கு நன்மை செய்வதாகவும் அஇஅதிமுக ஆட்சிக்கு வரும்போது தமிழகத்துக்குத் தீமை செய்வதாகவும் சொல்வது திமுகவினரின் வாடிக்கை. அப்படியானால் ஏன் மக்கள் ஒவ்வொரு முறையும் திமுகவை ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்துள்ளனர்? ஏன் அஇஅதிமுகவுக்கு அள்ளிக் கொடுத்திருக்கின்றனர்?

திமுகவின் தலைமை உண்மையில் யார் கையில் உள்ளது? கருணாநிதியின் பங்களிப்பு எதிர்காலத்தில் என்னவாக இருக்கும்? ஏன் ஸ்டாலினுக்கு அந்தக் கட்சி முழுமையான கட்டுப்பாட்டைத் தரவில்லை? திமுகமீதான ஊழல் குற்றச்சாட்டுகள், நில அபகரிப்பு வழக்குகள் உண்மையில்லை, பொய்யாகப் புனையப்பட்டவை என்பதை மக்கள் நம்பத் தயாராக இல்லை. புதிய ஆட்சியில் இம்மாதிரியான ஊழல்கள் தொடரா என்பதற்கான சான்றுகளும் இல்லை. புதிய சிந்தனை, தமிழகத்தை மேலெடுத்துச் செல்ல புதிய திட்டங்கள் என்று எவையும் திமுகவிடமிருந்து வருவதாகத் தெரியவில்லை. ஒரு பெரிய கட்சி என்பதற்காகவே வாக்குகள் தாமாகவே அவர்களுக்கு வந்து சேர்ந்துவிடும் என்ற அவர்களுடைய தன்னம்பிக்கை நமக்கு ஆச்சரியத்தையே தருகிறது.

***

பாமகவின் அன்புமணியின் பேச்சில் தெரியும் தெளிவும் சிந்தனையும் எனக்குப் பிடித்துள்ளது. ஆனால் அந்தக் கட்சி தனித்து நிற்பதாலும் அதன் கடந்த சில ஆண்டுகளின் சாதிய நோக்காலும் பெரும் பின்னடைவைச் சந்திக்கும். இந்தத் தேர்தலில் பாமக அதிகம் சாதிக்க முடியாது. காங்கிரஸ் பெரும்பாலும் திமுக கூட்டணிக்குச் செல்லும். பாஜக பெரும்பாலும் தனியாக ஒரு கூட்டணியை ஏற்படுத்தும் அல்லது தனித்து நிற்கும் என்று தோன்றுகிறது. மேலும் பாஜக, காங்கிரஸ் இருவருமே தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை. அதற்கான சிந்தனையும் இவர்களிடம் இல்லை; பலமும் இல்லை. தேமுதிக, தன் நிலையைத் தெளிவாக்காமல், எங்கே ஆதாயம் அதிகம் கிடைக்கும் என்று பார்த்துக்கொண்டிருப்பதாலேயே தற்போதைக்கு நிராகரிக்கவேண்டிய கட்சியாக உள்ளது.

***

விலக்கவேண்டியவர்கள் அனைவரையும் விலக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சி நிற்பது மக்கள் நலக் கூட்டணி மட்டுமே. இக்கூட்டணியில் இருப்போர் எல்லோரும் உத்தமமா என்று கேட்கலாம். கடந்த காலங்களில் திமுக, அஇஅதிமுக இருவருடனும் மாறிமாறிக் கூட்டணி வைத்தவர்கள்தானே இவர்கள், அப்போது தெரியவில்லையா திமுக, அஇஅதிமுகவினரின் ஊழல்பற்றி என்று கேட்கலாம். பாஜகவின் மதவாதம் பற்றிப் பேசுபவர்கள், மதிமுக அவர்களுடன் கூட்டணியில் இருந்ததே என்றும் குற்றம் சாட்டலாம். அந்தவகையில் தமிழகத்தில் எந்தக் கட்சிக்குமே ஒருவர் வாக்களிக்க முடியாது. இருக்கும் வாய்ப்புகளில் எது சிறப்பானது என்பதைப் பரிசீலித்து வாக்களிப்பதே சரியானதாக இருக்கும்.

அவ்வகையில் இப்போதைக்கு என் கண்ணில் படுவது மக்கள் நலக் கூட்டணி மட்டுமே. அதன் உறுப்புக் கட்சிகளில் பலவற்றின் நிலைப்பாடுகளுடன் நமக்குத் தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லாமல் போகலாம். உதாரணமாக, கம்யூனிஸ்டுகளின் பொருளாதாரக் கொள்கை எனக்கு ஏற்புடையது கிடையாது. ஆனால் இப்படிப் பார்த்துக்கொண்டே போனால் ‘நோட்டா அல்லது வீட்டோடு கிட’ என்பதுதான் பதிலாக வரும்.

மக்கள் நலக் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு உண்டா? ஜெயித்தால் யார் முதல்வர் ஆவார் போன்ற கேள்விகளை சிலர் கேட்கிறார்கள். மக்கள் நலக் கூட்டணியைப் பொருத்தமட்டில் முழுப் பெரும்பான்மையுடன் ஜெயிக்கவேண்டும் என்பதுகூட அவசியமில்லை. அர்விந்த் கெஜ்ரிவால் தில்லியில் செய்ததுபோல, திமுக, அஇஅதிமுக இருவருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் இருந்து, மக்கள் நலக் கூட்டணிக்குக் கணிசமான இடங்கள் கிடைத்தாலே போதும். பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக கெஜ்ரிவாலை காங்கிரஸ் ஆதரித்ததுபோல, திமுக, அஇஅதிமுக இரண்டில் ஒரு கட்சி மக்கள் நலக் கூட்டணி தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கலாம். குறைந்தபட்சம், தேர்தலுக்குப்பின் மக்கள் நலக் கூட்டணி ஆதரவுடன்தான் யாராக இருந்தாலும் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டால் அதுவே மக்கள் நலக் கூட்டணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.

***

மக்கள் நலக் கூட்டணியும் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் ஒன்றா என்று நீங்கள் கேட்கலாம். ஆம் ஆத்மி என்பது ஒற்றைக் கட்சி. மக்கள் நலக் கூட்டணி என்பது தற்போதைக்கு நான்கு கட்சிகள் அடங்கிய ஒரு கூட்டணி. இவர்கள் நால்வரும் தேர்தலுக்குப் பிறகு (அல்லது தேர்தலுக்கு முன்னமேகூட) பிரிந்துபோய்விட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? பிரிந்து திமுக அல்லது அஇஅதிமுக ஆகியோரிடம் விலை போய்விட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

மிக நியாயமான கேள்விகள். இங்கு trust, personal integrity ஆகியவற்றைத்தான் நாம் அலசிப் பார்க்கவேண்டும். வேறு எந்தக் குறைகள் இருந்தாலும் நம்பிக்கை, தனிநபர் நாணயம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், வைகோ ஆகியோரை நான் நம்பத் தயாராக இருக்கிறேன்.

இவர்கள் ஒரு கூட்டாக, ஒரே அணியாக தங்கள் குழுவை தேர்தலுக்குப் பின்னான பேச்சுவார்த்தைகளிலும் முன்வைப்பார்கள் என்று நம்புகிறேன். அப்போது தனிநபர் ஆதாயங்களைப் பற்றிச் சிந்திக்காமல் தங்கள் கூட்டணியின் நலனையும் மாநிலத்தின் நலனையும் மட்டுமே முன்வைப்பார்கள் என்று நம்புகிறேன். தேர்தலுக்குப்பின் திமுக அல்லது அஇஅதிமுக ஆகியோருடன் கூட்டணி ஏற்படுத்தி ஆட்சி நடத்தவேண்டிவந்தால் குறைந்தபட்சச் செயல் திட்டத்தின் அடிப்படையில் அது இருக்குமாறும், தனிநபர் துதிக்காக அரசின் பணம் விரயமாவதைத் தடுக்குமாறும், ஊழலற்ற ஆட்சி அமையுமாறும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

என் நம்பிக்கை நிறைவேறுமா, வீண்போகுமா என்று தெரியாது. ஆனால் ஏதோவொரு நம்பிக்கையை முன்வைத்துத்தான் இந்தத் தேர்தலில் நாம் வாக்களிக்கவேண்டியிருக்கிறது. முக்கியமாக திமுக, அஇஅதிமுக ஆகியோர் பெறக்கூடிய இடங்களை வெகுவாகக் குறைத்து, மக்கள் நலக் கூட்டணி பெறக்கூடிய இடங்களை அதிகரித்தால் மட்டுமே இதுபோன்ற ஒரு நிலையை, அதாவது முழுப் பெரும்பான்மை இல்லாது குறைந்தபட்சச் செய்லதிட்டத்தின் அடிப்படையிலான, ஊழலற்ற ஒரு கூட்டணி ஆட்சியை ஏற்படுத்துவதை, அடைய முடியும்.

எனவேதான் மக்கள் நலக் கூட்டணிக்கு நாம் வாக்களிக்கவேண்டும்.

மந்தை வாக்காளர்கள் - அதாவது கட்சியின் அனுதாபிகள் - திமுக அல்லது அஇஅதிமுக ஆகிய தத்தம் கட்சிகளுக்கு வாக்களிக்கப்போகிறார்கள். அவர்களை மாற்றுவது இந்தப் பதிவின் நோக்கமல்ல. யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாமல் குழம்பும் நடுநிலை வாக்காளர்களை நோக்கியே இந்தப் பதிவு.

வாக்குகள் வீணாகப்போய்விடக்கூடாது என்ற அபத்தமான ஒரு கருத்தாக்கம் தமிழகத்தில் நிலவுகிறது. அதாவது நாம் ஒருவருக்கு வாக்களிக்க, அவர் தோற்றுப்போய்விட்டால் நாம் நம் வாக்கை வீணாக்கிவிட்டோம் என்று நினைக்கும் மனநிலை. ஜெயிப்பவருக்கே நம் வாக்கு போகவேண்டும் என்ற மனநிலை.

இது மிக மிக அபத்தமானது. யார் ஜெயிக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அவர்களை நோக்கி நாம் செலுத்தும் எந்த வாக்கும் வீணாவதில்லை. நாம் வாக்குச் சாவடிக்குப் போய் வாக்களிக்காவிட்டாலும்கூட யாரோ ஒருவர் ஜெயிக்கத்தான் போகிறார். யாரோ ஒருவர் முதல்வராகப் போகிறார். ஆனால் நாம் எதிர்பார்க்கும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முற்படாமல் வீட்டிலேயே இருப்பது அல்லது இவர் கட்டாயம் ஜெயித்துவிடுவார் என்ற ஒரு வேட்பாளருக்கு வாக்களிப்பது - இவைதான் நாம் செய்யும் பெரும் தவறுகள். உபயோகமற்ற ஒருவருக்கு வாக்களிப்பது நம்மை எந்தவிதத்திலும் பெருமைப்படுத்தாது. நீங்கள் வாக்களித்து ஜெயிக்கவைத்த ஒருவர்தான் அஇஅதிமுக இந்த அளவுக்கு ஊழல் செய்யக் காரணமாக இருந்திருக்கிறார். இது நம்மைச் சிறுமைப்படுத்தத்தான் வேண்டும். எனவே நாம் வாக்களிக்கப்போகும் ஒருவர் தேர்தலில் ஜெயிக்கப்போகிறாரா அல்லது தோற்கப்போகிறாரா என்பதைப் பற்றி நாம் கவலைப்படவேண்டாம். நாம் விரும்பும் கூட்டணியை ஜெயிக்கவைக்க இன்னும் எத்தனை பேரை நம் தரப்புக்கு மாற்றுவது என்று சிந்தியுங்கள்.

***

இம்முறை நம் வாக்கு மக்கள் நலக் கூட்டணிக்குப் போகட்டும். தமிழகம் நல்ல மாற்றத்தைச் சந்திக்க உதவுவோம்.