Monday, December 25, 2017

பாஜக எவ்வாறு ஜெயிக்கிறது?

குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் தேர்தல் முடிந்து, இரண்டிலும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இதுவரையில் இல்லாத அளவு நாட்டில் 16 மாநிலங்களில் பாஜக நேரடியாக அல்லது கூட்டணியாக ஆட்சி நடத்துகிறது. 3 மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோழமைக் கட்சிகள் ஆட்சி நடத்துகின்றன. மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக 2014-ல் ஆட்சியைப் பிடித்தது. இவை அனைத்தும் வெறும் மூன்றே ஆண்டுகளில் சாத்தியம் ஆகியிருக்கிறது.

இதோ, பாஜக காலி, இந்தத் தேர்தலோடு கதை முடிந்தது என்று எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் எக்காளமிட்டுக்கொண்டிருக்க, பாஜகவோ மேலும் ஒரு மாநிலத்தைக் கைப்பற்றுகிறது. சில இடங்களில் பாஜகவால் ஜெயிக்க முடிவதில்லைதான். ஆனால் வெகு சில இடங்களில் மட்டுமே.

எனில், இந்த வெற்றிகள் எப்படிச் சாத்தியமாகின்றன? 2014 மக்களவைத் தேர்தல் தொடங்கி, மஹாராஷ்டிரம், ஹரியானா, ஜம்மு & காஷ்மிர், ஜார்க்கண்ட், அசாம், உத்தரப் பிரதேஷ், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர், குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெற்றி எப்படிச் சாத்தியமானது? அதே நேரம் தில்லி, பிகார், பஞ்சாப் ஆகிய இடங்களில் தோல்வியையும் கண்டுள்ளது பாஜக. (பிகாரில் பின்னர் கூட்டணி மாறி இன்று பாஜக கூட்டணிதான் ஆட்சியில் உள்ளது.) இதற்கு என்ன காரணங்கள் இருக்க முடியும்?

இவற்றை ஆராயும் இரண்டு புத்தகங்களைக் கடந்த வாரம் படித்து முடித்தேன். ஒன்று: How the BJP wins: Inside India’s Greatest Election Machine. இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையாளர் பிரஷாந்த் ஜா எழுதி ஜக்கர்நாட் பதிப்பகம் வெளியிட்ட புத்தகம். இரண்டாவது: The Last Battle of Saraighat: The Story of the BJP’s Rise in the North-East. பாஜக அனுதாபிகளும் தேர்தல் களத்தில் பாஜகவின் செயல்திட்டங்களை வடிவமைப்போருமான ரஜத் சேத்தி, ஷுப்ரஸ்தா ஆகியோர் எழுதிய புத்தகம். பெங்குவின் வெளியீடு.

முதலாவது புத்தகம், எளிமையாகப் படிக்கக்கூடியது. நல்ல எடிட்டிங். இரண்டாவது மிகச் சுமாராக எழுதப்பட்டது. வளவளவென்று செல்கிறது. மோசமான எடிட்டிங். ஆனால் சில உள்விஷயங்களை நுணுக்கமாக அளிப்பதால், முக்கியமானதாகிறது.

முக்கியமான கருத்துகளை இப்படிச் சொல்லிவிடலாம்:

1.     அமித் ஷா தலைமையில் பாஜக வலுவான தேர்தல் இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. அடிப்படைக் கட்டமைப்பு இல்லாத மாநிலங்களிலும்கூட பாஜகவால் வெகு விரைவில் இந்த இயந்திரத்தைக் கொண்டு வேலை செய்ய முடிந்திருக்கிறது.
2.     ஆர்.எஸ்.எஸ்ஸின் உழைப்பும் ஆள் பலமும் பாஜகவுக்கு மிக மிக முக்கியம்.
3.     ஒவ்வொரு மாநிலத்திலும், விரிவானதொரு சாதிக் கூட்டமைப்பை பாஜகவால் உருவாக்க முடிந்திருக்கிறது. இதுநாள்வரையில் தேர்தல் அரசியலால் பலன் அடையாத பிற்படுத்தப்பட்ட, தலித் சாதியினரை ஒருங்கிணைத்து அவர்களுக்குச் சரியான இடங்களைக் கொடுப்பதன்மூலம் இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெறுவதோடு, உயர் சாதியினரின் வாக்குகளையும் தக்கவைத்துக்கொள்வதில் பாஜக பெரும் வெற்றி அடைந்திருக்கிறது.
4.     முஸ்லிம்களுக்கு எதிரான  (நிஜ மற்றும் பொய்) பிரசாரங்களின்மூலம் போலரைசேஷனை ஏற்படுத்தி, இந்து வாக்குகளை ஒருமுகப்படுத்துவதில் பாஜக வெற்றி அடைந்துள்ளது.
5.     ஜம்மு காஷ்மிர், அசாம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களைப் பொருத்தமட்டில் ராம் மாதவின் தலைமையில் பெரும் வெற்றிகள் குவிந்துள்ளன. (நரேந்திர மோதி, அமித் ஷா பெயர்களுக்கு அடுத்து இரு புத்தகங்களும் முக்கியமாகக் குறிப்பிடும் பெயர் ராம் மாதவ்.)
6.     பணம் திரட்டுவதிலிருந்து, சரியாகச் செலவழிப்பதிலிருந்து, மையப்படுத்தப்பட்ட முறையில் தேர்தலை நடத்துவதுவரை, அமித் ஷாவின் தலைமையில் பாஜக, தேர்தல் நிர்வாகத்தில் புதிய சகாப்தத்தைப் படைத்துள்ளனர்.
7.     ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு நோக்கங்கள் கொண்ட குழுக்களை ஓரணியில் திரட்டுவது, எளிமையான கோஷங்களை மக்கள்முன் கொண்டுசெல்வது, எதிர்க்கட்சிகளை உடைப்பது அல்லது அவர்கள் ஓரணியில் திரளாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்வது என்று சகலவிதமான செயல்திட்டங்களையும் பாஜக செயல்படுத்துகிறது. வெற்றி ஒன்றுமட்டுமே நோக்கம்.
8.     எல்லாவற்றுக்கும் மேலாக, நரேந்திர மோதி என்ற ஒற்றை நபரின் செல்வாக்கு, அவருடைய பிரசார பலம், மக்கள் அவர்மீது கொண்டிருக்கும் மாபெரும் நம்பிக்கை. இதற்கு இணையாக தற்போதைக்கு இந்தியாவில் யாருமே கிடையாது.

இப்படி இருந்தும் தில்லி, பிகார் தோல்விகள் எப்படி நிகழ்ந்தன. பிரஷாந்த் ஜா அவற்றை ஓரளவுக்கு ஆய்வு செய்கிறார். லாலு யாதவ், நிதீஷ் குமார் ஜோடி எவ்வாறு பாஜகவை அதன் ஆட்டத்தை வைத்தே தோற்கடித்தது என்ற அத்தியாயம் மிக முக்கியமானது. இந்த இரு புத்தகங்களும் எழுதப்பட்டபிறகுதான் குஜராத், இமாச்சலப் பிரதேசத் தேர்தல்கள் நடைபெற்றன.

***

கட்சிகள் தேர்தல்களை அணுகும் முறையில் பாஜக பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதனைப் புரிந்துகொள்ளாமல் பாஜகவை வீழ்த்துவது கடினம். ‘என்னதான் இருந்தாலும் ஆர்.கே.நகரில் 1500+ வாக்குகள்தானே பாஜக பெற்றது’ என்று பேசுவோர் தவறிழைக்கின்றனர்.

என் கணிப்பில் நான்கு மாநிலங்களில்தான் பாஜக அடுத்து வரும் பத்தாண்டுகளில் ஆட்சியைப் பிடிக்க மிகவும் கஷ்டப்படும். அவை கேரளம், தமிழகம், வங்கம் மற்றும் தெலங்கானா. இந்த மாநிலங்களிலும்கூட சிறிது சிறிதாக பாஜக வளர்ந்துகொண்டுதான் இருக்கும். மற்ற மாநிலங்களில், ஒன்று பாஜக ஆளும் கட்சியாக இருக்கும் அல்லது முதன்மை எதிர்க்கட்சியாக இருக்கும் அல்லது அதன் தோழமைக் கட்சி ஆட்சியில் இருக்கும்.

அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்தால் பாஜக பின்பற்றும் உத்திகள் சில ஏற்க முடியாதவையாக இருக்கும். மிக முக்கியமாகச் சொல்வதானால் மதத்தின் பெயராலான போலரைசேஷன். ஆனால் அவர்கள் பார்வையில் இது ஒன்றுதான் அசாம் போன்ற 30% முஸ்லிம்கள் உள்ள மாநிலத்திலோ அல்லது உத்தரப் பிரதேசம் போன்ற 20%+ முஸ்லிம்கள் உள்ள மாநிலத்திலோ வெற்றி தரக்கூடிய ஒரே வழிமுறை. இவற்றைச் செய்யும் அதே நேரம், பாஜகவால் ஜம்மு காஷ்மிரில் பிடிபி போன்ற கட்சியுடன் கூட்டணி ஆட்சியை நடத்த முடிகிறது. வடகிழக்கில் கிறிஸ்தவர்கள் அதிகம் இருக்கும் சிறு மாநிலங்களில் ‘பாரதிய ஜீசஸ் பார்ட்டி’ என்றுகூட பாஜக அறிமுகப்படுத்தப்பட்டு இடங்களைப் பிடிக்கிறது!

ஒவ்வொரு முறை ஒரு மாநிலத்துக்குத் தேர்தல் நடக்கும்போதும் ஊடகங்கள் பாஜகவின் தோல்வியை எதிர்பார்த்துத் தீர்ப்புகளை முன்னதாகவே எழுதுகின்றன. அத்துடன் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அப்படிச் செய்துவிடும், இப்படிச் செய்துவிடும், மோதி இத்தோடு காலி என்றும் ஆரூடம் எழுதுகின்றன. கேட்டால் வாஜ்பாயின் ‘இந்தியா ஒளிர்கிறது’ பிரசாரத்தை உதாரணமாகச் சொல்கிறார்கள். அப்போதைய பாஜகவுக்கும் இப்போதைய பாஜகவுக்கும் என்ன வித்தியாசம், களத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஒருசில ஊடகவியலாளர்களாவது புரிந்துவைத்திருக்கிறார்கள். புத்தகமாக எழுதவும் செய்கிறார்கள். இத்தனைக்கும் பிரஷாந்த் ஜா, பாஜகவுக்கு எதிரான மனநிலை கொண்டவர் என்பது புத்தகத்தைப் படிக்கும்போதே தெரிகிறது.

-->
பாஜக நிச்சயமாக அடுத்துவரும் பல தேர்தல்களில் தோற்கத்தான் செய்யும். குஜராத்போலத் தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. ஆனால் மிகவும் நெகிழ்வுடன் தன்னை மாற்றியமைத்து, புதிய கூட்டணிகளை ஏற்படுத்திக்கொண்டு, பிரசாரத் தொனியை மாற்றிக்கொண்டு, கடுமையான களப்பணியின்மூலம் பாஜக தோல்விகளைவிட அதிக விகிதத்தில் வெற்றிகளைப் பெறும் என்பது புலனாகிறது. குறைந்தபட்சம் அடுத்த பத்தாண்டுகளில்.

Tuesday, December 12, 2017

பாபர் மசூதி இடிப்பும் இந்திய அரசியல் மாற்றமும்!

நான் எழுதிய கட்டுரை, மின்னம்பலம் இணைய இதழில் வெளியானது.

===

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு அதற்கு நூறாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்துவந்தது. ஆங்கிலேய ஆட்சியின்போது தீர்க்க முடியாத வழக்கு இன்றுவரை தீர்க்க முடியாததாகவே இருக்கிறது.

1886இல் ஃபைஸாபாத் மாவட்ட நீதிபதி கர்னல் சேமியர் என்பவர், “இந்துக்களுக்குப் புனிதமான ஓர் இடத்தில் மசூதி ஒன்று கட்டப்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. ஆனால், நிகழ்வு 356 ஆண்டுகளுக்கு முன் நடந்திருப்பதால் காலம் கடந்துவிட்டது. இன்று கோரிக்கைகளுக்குச் செவி சாய்ப்பது கடினம்” என்று தீர்ப்பு எழுதினார். 2010இல் அலகாபாத் உயர் நீதிமன்றம், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்து இரண்டு பகுதிகளை இந்துக்களுக்கும் மீதிப் பகுதியை சன்னி வக்ப் வாரியத்துக்கும் தருவதாகத் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் அது இந்துக்களையும் திருப்திப்படுத்தப் போவதில்லை, முஸ்லிம்களையும் திருப்திப்படுத்தப்போவதில்லை.

இதற்குக் காரணம், விஸ்வ இந்து பரிஷத், பாரதிய ஜனதா அமைப்பினர் ஒரு பெரும் இயக்கமாக மசூதி அமைந்திருந்த இடத்துக்குச் சென்று, 1992 டிசம்பர் 6 அன்று அதைச் சட்டத்துக்குப் புறம்பாக இடித்துத் தள்ளியதே. வெறும் சட்டப் போராட்டமாக இருந்த சிக்கல், நாடு தழுவிய மதப் போராட்டமாக மாறியது இந்தப் புள்ளியில்தான்.

வழிபாட்டுத் தலங்களும் வரலாறும்

எட்டாம் நூற்றாண்டிலிருந்து இந்தியாமீது இஸ்லாமியப் படையெடுப்புகள் பல நிகழ்ந்திருக்கின்றன. அந்தப் படையெடுப்புகளின்போதும், தொடர்ந்த இஸ்லாமிய ஆட்சிகளின் கீழும் எண்ணற்ற இந்துக் கோயில்கள் இடித்துத் தள்ளப்பட்டிருக்கின்றன. இந்துக் கோயில்களின் இடிமானங்களைக் கொண்டு மசூதிகள் கட்டப்பட்டிருக்கின்றன. இவற்றை டெல்லி முதற்கொண்டு இந்தியா முழுமையிலும் காணலாம். காசி, மதுரா போன்ற இந்துக்களின் முக்கியமான சில வழிபாட்டிடங்களில் கோயிலின் பகுதிகளிலேயே மசூதிகளை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வலுக்கட்டாயமாக அமைத்தனர். இவை வடஇந்தியாவில் மட்டுமல்ல, தமிழகத்திலும் இருப்பதைக் காணலாம். பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பல்லாவரம் குடைவரைக்கோயில் இன்றும் ஓர் இஸ்லாமிய வழிபாட்டிடமாக உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி வருவதற்குமுன், நியாயமான சட்டத்தின் ஆட்சி என்ற கருதுகோள் நம்மிடம் இல்லை. வலுவான அரசன் முடிவு செய்வதுதான் சட்டம். அதன் விளைவாகத்தான் பிறருடைய வழிபாட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. ஆங்கிலேயர்கள் சட்டத்தின் ஆட்சி என்பதை முன்வைத்த பின்னர்கூட அயோத்தி ராமர் கோயில் பிரச்னை தீர்க்க முடியாததாக இருந்தது. 

பேச்சுவார்த்தைகள்மூலம் இரு மதத்தாரும் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளுதல் மட்டுமே ஒரே தீர்வு. ஆனால், விஸ்வ இந்து பரிஷத்தும் பாரதிய ஜனதாவும் அயோத்தி விஷயத்தில் இது நடக்காமல் பார்த்துக்கொண்டனர்.

இது நிச்சயமாக பாரதிய ஜனதாவுக்கு நன்மை அளித்தது. இன்று தனிப் பெரும்பான்மையில் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்கும் பல மாநிலங்களில் அவர்கள் ஆட்சியில் இருப்பதற்குமான அடித்தளம் ‘இந்துப் புத்தெழுச்சி’ என்பதாகும். இந்துப் புத்தெழுச்சி, அயோத்தி ராமஜன்ம பூமி இயக்கத்தின்மீது கட்டமைக்கப்பட்டது. அதற்கு பாபர் மசூதியை இடிப்பது அவசியமானது.

மசூதி முதல் மாட்டிறைச்சி வரை

பாரதிய ஜனதா கட்சிக்கு நன்மை அளித்த இந்த நிகழ்வு இந்திய நாட்டுக்கு என்ன செய்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம். சாதிப் பிரச்னைகள் பெரும்பாலும் ஒரு கிராமம் என்பதிலிருந்து அதிகபட்சம் ஒரு மாவட்டம் என்ற அளவைத் தாண்டாது அடங்கிவிடும். ஆனால் இந்து -முஸ்லிம் பிரச்னை என்பது நாடு தழுவிய அளவில் பரவக்கூடியது.

அயோத்தி மசூதி இடிப்பு இந்தியா முழுவதும் மதக் கலவரங்களை ஏற்படுத்தியது. முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் பாபர் மசூதி என்பது குறிப்பிடத்தகுந்த புனிதத் தலம் ஒன்றும் கிடையாது. ஆனால், ஒரு வன்முறைக் கும்பல், சட்டத்தைப் பற்றியோ நீதிமன்றங்களைப் பற்றியோ கவலைப்படாது ஒரு கட்டடத்தை அடித்து நொறுக்கும் என்றால் முஸ்லிம்களாகிய தங்களுக்கு இந்த நாட்டில் சட்டத்தால் எந்தப் பாதுகாப்பும் கிடையாது என்பதை முஸ்லிம்கள் அன்று உணர்ந்தார்கள். அது அவர்களைப் பெரும் கவலைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது.
பல நகரங்களில் அவர்கள் தன்னிச்சையாகத் தெருவில் குழுமினார்கள். அவ்வாறு குழுமியவர்களுக்கு எதிராக இந்துப் புத்தெழுச்சிக்காரர்களும் குழுமினார்கள். விளைவு, கடுமையான எதிரெதிர் தாக்குதல்கள், வணிக நிறுவனங்கள் எரிக்கப்படுதல், கல்வீச்சு, காவல்துறைத் தாக்குதல், கொலை, பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்.

தேசப் பிரிவினைக்குப்பிறகு நிகழ்ந்த மிகப் பெரிய இந்து - முஸ்லிம் வன்முறை இதுதான். இதன் அடுத்த கட்ட நிகழ்வுகள் யாராலுமே தடுக்க முடியாதவையாக அமைந்தன. மும்பை குண்டுவெடிப்புகள், தொடர்ந்து மும்பையில் நிகழ்ந்த இந்து - முஸ்லிம் வன்முறைகள், சிமி போன்ற இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புகள் உருவாகி நாட்டில் பல பகுதிகளிலும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது, குஜராத்தில் கரசேவகர்கள் ரயில் எரிப்பு, தொடர்ந்து குஜராத் முழுவதும் நிகழ்ந்த இந்து - முஸ்லிம் வன்முறை என்று தொடர்ச் சங்கிலிப் பிரச்னைகளாக நிகழ்ந்தன. இன்று வடமாநிலங்களில் நடக்கும் பசு இறைச்சி தொடர்பான தாக்குதல்கள், லவ் ஜிகாத் என்ற பெயரிலான இந்து - முஸ்லிம் காதல் திருமணங்கள்மீதான தாக்குதல்கள் போன்றவற்றையும் பாபர் மசூதி இடிப்பின் அடிப்படையிலேயே பார்க்க வேண்டும்.

இந்தியச் சுதந்திரம்தொட்டே காஷ்மீர் பிரச்னை கனன்றுகொண்டிருக்கிறது. காஷ்மீர் பகுதி எரிமலையாக இருப்பதற்குத் தேவையான அனைத்தையும் பாகிஸ்தானும் செய்துகொண்டிருக்கிறது. காஷ்மீரின் அரசியல் கட்சிகளும் மக்களை மதிக்காமல் தேர்தலில் ஊழல்களைச் செய்ததன்மூலம் அந்நியப்பட்டுப் போனார்கள். ஆஃப்கனிஸ்தானத்தின் ஜிஹாதி போராளிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ இவை அனைத்தும் காரணமாக இருந்தன. கூடவே பாபர் மசூதி இடிப்பும் சேர்ந்துகொண்டது. இந்தியாவுடன் இருந்தால் முஸ்லிம்களாகிய நமக்கு நியாயம் கிடைக்காது என்பதற்கான பல காரணங்களில் பாபர் மசூதி இடிப்பும் ஒன்றாகியது.

மதம் அரசியலின் மையமாகும் அபாயம்

பாபர் மசூதி இடிப்புக்கு முன்பு இந்திய அரசியலில் மதம் ஒரு பெரிய இடத்தை வகிக்கவில்லை. பெரும் அரசியல் கட்சிகள் எவையுமே இந்துக்களைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும், உள்ளூரப் பல கருத்துகளைக் கொண்டிருந்தாலும், வெளிப்படையாக மேடையில் எதையும் பேச மாட்டார்கள். ஆனால், பாபர் மசூதி இடிப்பினால் மிகப் பெரும் அரசியல் லாபங்களைப் பெற்ற பாரதிய ஜனதா, தொடர்ந்து இந்துக்களை ஒருமுகப்படுத்துவதன் மூலமும், அவர்களுக்கு முஸ்லிம்கள் எதிரிகள் என்பதைக் கட்டமைப்பதன் மூலமும் தம்முடைய செல்வாக்கை அதிகரித்துக்கொள்ளலாம் என்றே இயங்குகிறது. இதன் விளைவு என்னவாக இருக்கும்? பிற பெரிய கட்சிகளும் இந்துமைய அரசியலை நோக்கி நகரக்கூடும். இதன் விளைவாக மதச்சார்பற்ற இந்திய அரசியல், மதமைய அரசியலாகும் வாய்ப்பு உள்ளது. இது இந்தியாவின் அமைதிக்குப் பெரும் ஊறு விளைவிக்கும்.

இன்றைய தலைமுறையினர் பலருக்கும் பாபர் மசூதி இடிப்பு நினைவில் இருக்காது அல்லது மிகவும் மங்கலாக இருக்கும். நாளடைவில் இது வெறும் ஒரு வரலாற்றுச் செய்தியாக மட்டுமே இருக்கும். ஆனால், என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்மீது இந்த நிகழ்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் அப்போது அமெரிக்காவின் ஒரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவனாக இருந்தேன். பாபர் மசூதி இடிப்பு சரியானதே என்பதே என் உடனடி எண்ணமாக இருந்தது. சட்டம் இந்துக்களுக்கு நியாயம் வழங்காதபோது, வலுக்கட்டாயமாக நியாயத்தை எடுத்துக்கொள்வது தவறல்ல என்று நினைத்தேன். முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பிலிருந்து இந்து வழிபாட்டிடங்கள் அனைத்தும் சட்டபூர்வமாகவோ, அப்படி முடியாவிட்டால் முரட்டுத்தனமாகவோ திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கருதினேன்.

இன்று என் கருத்து மாறியுள்ளது. வலுக்கட்டாயமோ, வன்முறையோ எந்த விதத்திலும் தீர்வாகாது என்றே கருதுகிறேன். இவை தொடர் சங்கிலி வன்முறையாகச் சுழன்றபடி, சூறாவளிபோலத் தன் சக்தியை அதிகரித்தபடி, தன் பாதையில் தென்படும் எண்ணற்ற அப்பாவிகளைச் சூறையாடிவிடும். இதற்கான சான்று பாபர் மசூதி இடிப்பும் தொடர்ந்த, இன்றும் தொடரும், வன்முறைகளும். குறுங்குழு மனப்பான்மையிலிருந்து விசாலமானதொரு பார்வையை நோக்கிச் செல்வதற்கு நமக்குப் பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கிறது. ஆனால், மதப் பிளவுகளோ மிக விரைவில் நம்மை வன்முறை நிறைந்த, அமைதியற்ற பழைய குறுங்குழு வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றுவிடும். அந்த வகையில் பாபர் மசூதி இடிப்பு நமக்குப் பெரும் பாடமாக அமைகிறது.

Thursday, November 23, 2017

Empire of the stars - புத்தக அறிமுகம்

ஶ்ரீனிவாச ராமானுஜனின் வாழ்க்கை வரலாறு நமக்கு எப்படித் தெரிய வந்திருக்கிறது? இன்று இரண்டு சினிமாக்கள் வந்துவிட்டன. ஒன்று உள்ளூர்ப் படம். இன்னொன்று உலகப் படம். தமிழில் ரகமி (டி.வி.ரங்கசுவாமி) ஒரு வாழ்க்கை வரலாற்று நூலை எழுதினார். நான்கூட சிறுவர்களுக்காக ஒரு குட்டி நூல் எழுதியிருக்கிறேன். ஆனால் ராபர்ட் கனிகல் என்ற ஓர் அமெரிக்கர் எழுதிய The man who knew infinity: A life of the genius Ramanujan என்ற நூல்தான் அதாரிடேடிவ் வாழ்க்கை வரலாறு என்று சொல்ல முடியும். அதற்கான கள ஆய்வு என்பது அப்படிப்பட்டது. முதலில் சம்பந்தப்பட்ட நபர் குறித்து என்னவெல்லாம் புத்தகமாக, கட்டுரைகளாக, ஆவணப்படங்களாக வந்திருக்கின்றனவோ அனைத்தையும் முழுமையாகப் படிக்கவேண்டும், பார்க்கவேண்டும். அந்த நபருடைய உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று அனைவரையும் விரிவாகப் பேட்டி கண்டு, அவருடைய வாழ்க்கையை முழுதாகப் படம் பிடித்துவிடவேண்டும். அவர் அறிவியல்/கணித நிபுணர் என்றால் அந்தத் துறை சார்ந்த நிபுணத்துவம் வேண்டும், அல்லது துறை சார்ந்த புரிதலை ஓரளவுக்காவது ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அவருடைய கண்டுபிடிப்புகள் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தவை, அவருடைய துறையில் உள்ள பிறர் யார், யார், அவர்கள் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று விரிவாக ஆராய்ந்து புரிந்துகொள்ளவேண்டும். சம்பந்தப்பட்ட நபரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள், அவர் எழுதியுள்ள புத்தகங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முடிந்தால் மேலும் விசேஷம்.

இவற்றையெல்லாம் செய்தபின், சேர்த்துவைத்திருக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சுவைபட எழுதவேண்டும். நம்முடைய வாசகர்களுக்குப் புரியும்விதத்தில் எழுதவேண்டும். இது அகடமிக் புத்தகம் அல்ல, ஒரு மாஸ் மார்க்கெட் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் என்பதைப் புரிந்துகொண்டு எழுதவேண்டும்.

ராமானுஜனின் வாழ்க்கையைப் பற்றி எழுதும்போது ராபர்ட் கனீகல் அமெரிக்கர்களுக்கு இந்தியாவைப் பற்றியும் தமிழ்நாட்டைப் பற்றியும் விளக்கவேண்டியிருந்தது. ஐயங்கார்கள், அவர்கள் எம்மாதிரி நாமம் போட்டுக்கொள்வார்கள், குடுமி வைத்திருப்பார்கள், ஆடை அணிந்திருப்பார்கள், சுதந்தரத்துக்கு முந்தைய இந்தியா எப்படியாக இருந்தது, நம்முடைய கோவில்கள் எப்படிப்பட்டவை என்றெல்லாம் பேக்கிரவுண்ட் விஷயங்களைப் பற்றி எழுதவேண்டும். அப்படியே காட்சி மாறுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இங்கிலாந்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி காலேஜ், அங்கே உள்ள பேராசிரியர்கள் நடந்துகொள்ளும் விதம், முதல் உலகப்போர், அக்காலத்தைய பிரிட்டனில் மக்கள் பட்ட கஷ்டங்கள், புரியாத இடத்தில் ஆசார பிராமணரான ராமானுஜன் எப்படி வாழ்க்கை நடத்தவேண்டி வந்தது என்பதை வார்த்தைகளில் வடிக்கவேண்டும்.

இன்றைய நிகழ்ச்சி சந்திரசேகரைப் பற்றியது. ஆனால் நான் ராமானுஜனைப் பற்றிக் குறிப்பிடக் காரணம், ராபர்ட் கனீகல் எழுதிய வாழ்க்கை வரலாற்றின் முக்கியத்துவத்தை முன்வைப்பதுதான். நான் பல அறிவியலாளர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்துள்ளேன். வால்ட்டர் ஐசக்சன் எழுதியுள்ள ஐன்ஶ்டைனின் வாழ்க்கை வரலாறு மிக முக்கியமானது, மிக விரிவானது. அந்த அளவுக்கு ஐசக்சனுக்குத் தகவல்கள் கொட்டிக்கிடந்தன. ஆனால் கனீகல் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் தகவல்களைச் சேகரிக்கவேண்டியிருந்தது.

ஆர்தர் ஐ. மில்லர் - இந்த “ஐ” மிக முக்கியம் - ஏனெனில் நமக்கு ஆர்தர் மில்லர் என்ற “டெத் ஆஃப் எ சேல்ஸ்மேன்” போன்ற நாடகங்களை எழுதிய நாடகாசிரியரை நன்கு தெரியும் - இப்போது நாம் பேசுவது அவரல்லர், இன்னொருவர், அதனால் ஐ என்ற மிடில் இனிஷியல் - இவர் எம்.ஐ.டியில் இயற்பியலில் பிஎச்டி செய்தவர். ஆனால் இப்போது ஹிஸ்டரி அண்ட் பிலாசபி ஆ சயன்ஸ் என்ற துறையில் பேராசிரியராக இருக்கிறார். கனீகல்கூட எஞ்சினியரிங் படித்தவர். பல புத்தகங்களை எழுதியபின் எம்.ஐ.டியில் அறிவியல் எழுதுதல் என்ற துறையை உருவாக்கி அதில் பேராசிரியராகச் சில ஆண்டுகள் இருந்தார். பாருங்கள், அந்த நாடுகளில் எப்படியெல்லாம் பல்கலைக்கழகத் துறைகளை உருவாக்குகிறார்கள் என்று. இந்த மில்லர் எழுதிய புத்தகம்தான் Empire of the stars: Chandra, Eddington and the quest for Black holes என்பது.

கனீகலுக்கு ராமானுஜன் யார் என்று தெரியாது. ஒரு பதிப்பாளர் கனீகலைத் தேடிப் பிடித்து அவர் ராமானுஜனைப் பற்றி ஒரு புத்தகம் எழுதுவாரா என்று ஏஜெண்ட் மூலமாக வினவுகிறார். சரி, ஆசாமி யார் என்று பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்று கனீகல் ராமானுஜன் பற்றிய தன் ஆராய்ச்சியை ஆரம்பிக்கிறார். ஆனால் மில்லர் அப்படியல்லர். அவர் மாணவப்பருவத்திலேயே ஆர்தர் எடிங்க்டனுடைய புத்தககங்களைப் படித்து, அதன் காரணமாக அறிவியல் துறையில் நுழைந்தவர். ஆஸ்ட்ரோபிசிக்ஸ் துறையை நன்கு அறிந்தவர். சந்திராவின் அகடமிக் புத்தகங்களைப் படித்தவர். சந்திரா பற்றித் தெரிந்தவர். 83 வயதான சந்திராவை மில்லர் சிகாகோவில் சந்திக்கிறார். அப்போது எடிங்க்டன் பற்றி சந்திராவிடம் கேட்கிறார். அந்த வயதிலும் சந்திராவின் முகம் மாறுகிறது. அத்துடன் சந்திரா அதுபற்றி மேற்கொண்டு பேச விரும்பவில்லை. இருவரும் மீண்டும் சந்திப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் அது நடப்பதற்கு முன்பாகவே சந்திரா இறந்துவிடுகிறார். அதன்பின் உருவானதுதான் இந்த வாழ்க்கை வரலாறு.

ராமானுஜன் என்றால் உடனே நினைவுக்கு வருவது கேம்பிரிட்ஜின் ஹார்டி. ராமானுஜனை அரவணைத்து, அவருடைய திறமைகளைப் புரிந்துகொண்டு அவரை கேம்பிரிட்ஜ் வரவழைத்து, அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர். தான் செய்த மிகச் சிறந்த செயல் ராமானுஜன், லிட்டில்வுட் ஆகியோருடன் சேர்ந்து ஆராய்ச்சி செய்ததுதான் என்று பெருந்தன்மையுடன் (அது உண்மையும்கூட) சொன்னவர்! ஹார்டி இல்லையேல் ராமானுஜன் இத்தனை உயரங்களைத் தொட்டிருக்க முடியாது. அதற்கு முற்றிலும் மாறானது எடிங்க்டன் - சந்திரா உறவு. சந்திராவின் வாழ்க்கை சீரழியக் காரணமாக இருந்தவர் எடிங்க்டன் என்பது பெரும் சோகம்.

இத்தனைக்கும் சந்திரா, ராமானுஜன் போல, சாதாரணமான குடும்பத்திலிருந்து வந்தவர் அல்லர். சந்திராவின் சித்தப்பா சர். சிவி ராமன். ராமனுடைய அண்ணா சுப்பிரமணிய ஐயரின் முதல் மகன்தான் சந்திரசேகர். சுப்ரமணியன், ராமன் இருவருமே கணிதம், அறிவியல் என்று படித்தாலும் மிடில் கிளாஸ் பார்ப்பனக் குடும்பத்தின் சாவதான உணர்வின் அடிப்படையில் கணக்காளர் வேலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள் அல்லது அதை நோக்கி அவர்களுடைய தந்தையாரால் தள்ளப்படுகிறார்கள். இவர்களுடைய தந்தை சந்திரசேகரோ கணிதமும் இயற்பியலும் கற்றுத்தரும் கல்லூரிப் பேராசிரியர்! அகடமிக் துறையில் வெட்டி முறிப்பதைவிட சிவில் சர்வீஸில் சேர்ந்து சௌகரியமான வாழ்க்கை வாழ்வது சிறந்தது என்பது அவர்கள் சித்தாந்தம். இன்றுகூடப் பாருங்கள், அடிப்படை அறிவியல், கணிதமா அல்லது ஐஐடி எஞ்சினியரிங்கா என்றால் என்ன முடிவை எடுக்கிறார்கள் என்று சொல்லுங்கள்.

ஆனால் ராமன் வித்தியாசமானவர். கல்கத்தாவில் கணக்காளராக இருந்துகொண்டே பல்கலைக்கழகத்தில் பகுதிநேர ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பல்கலைக்கழகத்திலேயே வேலை கிடைத்ததும் அதிக சம்பளம் தரும் கணக்காளர் வேலையை விட்டுவிட்டு இயற்பியல் ஆராய்ச்சிக்குள் நுழைந்துவிட்டார். பின்னர் நோபல் பரிசையும் பெற்றார். ராமன் பெற்ற பெருமை, ராமனின் மோசமான குணம் இரண்டும் சேர்ந்து சுப்ரமணியம் குடும்பத்தில் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தியது. தன் மகன் சந்திரா மிகப் பெரும் இடத்தை அடையவேண்டும், ராமனைவிடப் பெரிய இடத்தை அடையவேண்டும் என்று சுப்ரமணிய ஐயரும் அவருடைய மனைவி சீதாலக்ஷ்மியும் விரும்பினர். ஆனால் ராமனின் தயவு இல்லாமல் இது நடக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய விருப்பம். என்ன நடந்தாலும் சித்தப்பாவிடம் மட்டும் ஆலோசனை கேட்காதே என்பதுதான் தாயின் விருப்பமாக இருந்தது!

ஆனாலும் ராமன்தான் சந்திராவின் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட திசையில் செல்லக் காரணமாக இருந்துவிட்டார். ஆர்தர் எடிங்க்டனின் The Internal Constitution of the Stars என்ற புத்தகத்தை பள்ளிச் சிறுவன் சந்திராவுக்கு ராமன் அன்பளிப்பாகக் கொடுத்தார். அந்தப் புத்தகம் சந்திராவை அப்போதுதான் வளர்ந்துவந்துகொண்டிருக்கும் ஆஸ்ட்ரோபிசிக்ஸ் துறைக்கு அறிமுகப்படுத்தியது. சந்திராவின் ஹீரோவும் வில்லனுமான எடிங்க்டனையும்கூட அவருக்கு இந்தப் புத்தகம் அறிமுகம் செய்துகொடுத்தது.

ராமனைப் போலவே சந்திராவும் சென்னை மாநிலக் கல்லூரியில் (பிரசிடென்சி காலேஜில்) இயற்பியலில் தங்கப் பதக்கம் பெற்றார். அங்குள்ள ஆசிரியர்களுக்கு ராமன்போலவே சந்திராவும் எங்கோ உயரங்களுக்குச் செல்லப்போகிறார் என்பதில் சந்தேகமே இருக்கவில்லை. மிகப்பெரிய விஞ்ஞானிகள் சென்னை வந்து பிரசிடென்சி கல்லூரியில் பேசப்போகிறார்கள் என்றால் சந்திராவைத்தான் அவர்கள் நம்பியிருந்தனர். சந்திராதான் அந்த விஞ்ஞானிகளையும் அவர்களுடைய ஆராய்ச்சிகளையும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கவேண்டும்! கல்லூரியில் ஆர்னால்ட் சாமர்ஃபீல்ட் என்ற ஜெர்மன் விஞ்ஞானி வந்து பேசியிருந்தார். அவர் தங்கியிருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டு அவரைச் சந்திக்கப் போய்விட்டார் சந்திரா. சாமர்ஃபீல்டும் இளைஞன், மாணவன் என்றெல்லாம் நினைக்காமல் அவரிடம் தன் ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் கொடுத்து, அவர் எந்தத் துறையில் ஆராய்ச்சி செய்தல் நலம் என்று அறிவுரை வழங்கினார். பின்னர் ஜெர்மனியின் இளம் விஞ்ஞானியும் குவாண்டம் மெக்கானிக்ஸ் துறையின் பிதாமகர்களில் ஒருவருமான ஹெய்சன்பர்க் பிரசிடென்சி கல்லூரிக்கு வந்தபோது அவரையும் குவாண்டம் மெக்கானிக்ஸையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திப் பேசியதே சந்திராதான். ஹெய்சன்பர்க் சென்னையில் இருந்த காலம் முழுதும் அவருடன் சுற்றி இயற்பியல் பற்றிப் பேசுவதற்கான வாய்ப்பு சந்திராவுக்குக் கிடைத்தது.

ராமானுஜன் கேம்பிரிட்ஜ் செல்ல சென்னையையே புரட்டிப்போடவேண்டி இருந்தது. ஏனெனில் ராமானுஜனுக்கு ஒரு காலேஜ் டிகிரிகூடக் கிடையாது. சந்திராவோ கல்லூரி டாப்பர். அறிவியல் சஞ்சிகைகளில் கட்டுரைகள் வெளிவரத் தொடங்கியிருந்தன. கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஃபௌலர் என்பவர் “வெள்ளைக் குள்ளன்” (வைட் ட்வார்ஃப்) நட்சத்திரங்கள் பற்றி எழுதிய ஒரு கட்டுரையைப் பார்த்த சந்திரா, சாமர்ஃபீல்டிடம் தான் கற்றுக்கொண்டதையும் சேர்த்து தன் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். தன் மேற்படிப்புக்கு ஏற்ற இடம் கேம்பிரிட்ஜ்தான் என்று அவர் இந்தக் கட்டத்திலேயே முடிவு செய்துவிட்டார். அதற்கேற்ப தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரையை அவர் ஃபௌலருக்கு அனுப்பினார். ஃபௌலர் சில மாற்றங்களைக் குறிப்பிட அவற்றைச் செய்து சந்திரா ஃபௌலருக்கு அனுப்ப அது Proceedings of Royal Society இதழில் வெளியானது. இதை ராமானுஜனுடன் ஒப்பிடுங்கள். ராமானுஜன் என்ன எழுதுகிறார் என்பதைப் புரிந்துகொள்வதே பல பேராசிரியர்களுக்குச் சிரமமாக இருந்தது. ஆனால் சந்திராவோ விஞ்ஞானிகளுக்குப் புரியும் வகையிலான கட்டுரைகளை எழுதினார். எனவே கேம்பிரிட்ஜிலிருந்து அவருக்கு மேற்படிப்புக்கான உதவித்தொகை பெறுவதில் சிக்கல் இருக்கவில்லை.

1930-ம் ஆண்டு, இருபது வயதை முடிக்காத நிலையில் கேம்பிரிட்ஜ் செல்லக் கப்பல் ஏறினார் சந்திரா. அவருடைய தாய் மரணப் படுக்கையில் இருந்தார். “ராமானுஜன் கணிதத்துக்கு என்ன செய்தாரோ அதனை நீ இயற்பியலுக்குச் செய்வாய் என்று நான் நம்புகிறேன்” என்று ராமன் சந்திராவுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அது அந்தக் கப்பல் பயணத்தின்போதே நிகழ்ந்தது. அதாவது தன் பிஎச்டி ஆராய்ச்சியை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, தன் ஆராய்ச்சி வாழ்வின் மிக முக்கியமான கண்டுபிடிப்பை சந்திரா அந்தக் கப்பல் பயணத்தின்போது செய்துமுடித்திருந்தார்.

ஆர்தர் எடிங்க்டன் நட்சத்திரங்கள் பற்றிய தன்னுடைய புத்தகத்தில் ஒரு முக்கியமாண கேள்வியை எழுப்பியிருந்தார். ஒரு நட்சத்திரத்துக்குள் என்ன நடக்கிறது என்பது பற்றிய முழுமையான புரிதல் இல்லாத காலகட்டம் அது. இன்று நமக்கு அது நன்றாகவே தெரியும். ஹைட்ரஜன் அணுக்கள் நான்கு அணுச்சேர்க்கை மூலம் ஒன்று சேர்ந்து ஒரு ஹீலியம் அணுவை உருவாக்குகின்றன. இது நிகழும்போது கொஞ்சம் நிறை அழிக்கப்படுகிறது. அது E=Mc2 என்னும் சமன்பாட்டின்படி ஆற்றலாக மாறுகிறது. ஒரு நட்சத்திரத்தில் எக்கச்சக்கமான பொருண்மை - நிறை - இருப்பதால் ஈர்ப்பின் காரணமாக அது நசுங்கத் தொடங்குகிறது. ஆனால் அதே நேரம் அணுச்சேர்க்கை காரணமாக உருவாகும் ஆற்றல் வெப்பமாகவும் ஒளியாகவும் வெளியேறுவதனால் வாயுக்கள் விரிவடையத் தொடங்குகின்றன. ஈர்ப்பின் நசுக்குதலும் வெப்பத்தின் விரிவடைதலும் ஒரு கட்டத்தில் சமநிலையை அடைகின்றன. ஆனால், என்றொ ஒருநாள் அணுச்சேர்க்கை முடிந்துபோகும். அந்த நேரத்தில் அந்த நட்சத்திரத்துக்கு என்னவாகும்? அதன் வெப்பநிலை குறைய ஆரம்பிக்கும். இப்போது ஈர்ப்பு அதிகமாகி நட்சத்திரம் சுருங்க ஆரம்பிக்கும்.

ஃபௌலர், குவாண்டம் மெக்கானிக்ஸை அடிப்படையாக வைத்து எலக்ட்ரான் டீஜெனரசி என்ற கொள்கையை முன்வைத்தார். ஒரு “செத்த” நட்சத்திரம் சுருங்கிக்கொண்டே வந்தால் ஒரு கட்டத்தில் அதன் மையத்தில் எலக்ட்ரான்கள் குழுமத் தொடங்கும். Pauli’s Exclusion Principle அடிப்படையில் எலெக்ட்ரான்களை ஓரளவுக்குமேல் நசுக்க முடியாது. அப்போது வெப்பநிலை விரிவாக்கம் என்பது நடைபெறாவிட்டாலும்கூட எலக்ட்ரான்கள் ஒன்றுசேர்ந்து ஈர்ப்பினால் தாம் நசுக்கப்படுவதை எதிர்த்து இறுகிய பாறைபோல ஆகிவிடும் என்றார் ஃபௌலர். கப்பல் பயணத்தின்போது இதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்த சந்திரா, மையத்தை நோக்கிச் செல்லும் எலக்ட்ரான்கள் எந்த வேகத்தில் இருக்கும் என்று கணக்கிட்டார். கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் பாதி வேகத்தில் அவை செல்லும் என்று கணக்கு சொன்னது! ஆஹா, அப்படியானால் ஐன்ஶ்டைனின் சிறப்புச் சார்பியல் கொள்கையைப் புகுத்தியாகவேண்டுமே? ஈர்ப்பினால் நசுக்கப்படும் எலக்ட்ரான்கள் அத்துணை வேகத்தில் செல்லா என்றே ஃபௌலர் நினைத்திருந்தார். ஆனால் அது தவறு என்று சந்திரா புரிந்துகொண்டார். சிறப்புச் சார்பியல் சமன்பாடுகளைச் சேர்த்து கணக்குப் போட ஆரம்பித்தார். ஆனால் கப்பல் பயணத்தின்போது செய்யக்கூடிய எளிதான கணக்கல்ல இது. சில குத்துமதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு முடிவுக்கு வந்தார் சந்திரா. வெள்ளைக் குள்ளன் நட்சத்திரத்தின் நிறைக்கு ஒரு எல்லை உண்டு என்பதுதான் அது. அதாவது ஒரு உயிருள்ள நட்சத்திரம் வெள்ளை குள்ளனாக ஆகவேண்டும் என்றால் அதன் நிறை ஒரு எல்லைக்குள் இருந்தாகவேண்டும்.

கேம்பிரிட்ஜ் சென்று ஃபௌலரிடம் தன் முடிவை சந்திரா காண்பித்தார். ஃபௌலருக்கு அதில் பெரிய ஆர்வம் இருக்கவில்லை. மில்ன் என்பவரிடம் இதைக் குறித்துப் பேசச் சொன்னார். மில்ன், ஸ்டோனர் ஆகியோர் இதே திசையில் யோசித்துக்கொண்டிருந்தனர். அவர்களும் சிறப்புச் சார்பியல் கொள்கையைப் புகுத்தி சில கணக்குகளைப் போட்டிருந்தனர். ஆனால் சந்திராதான் சரியான மாதிரியை உருவாக்கியிருந்தார். மில்னும் சந்திராவின் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டவில்லை. பின்னர் சந்திரா எடிங்க்டனைச் சந்தித்தார். ஆர்வத்துடன் தன் மாதிரியைக் காட்டினார். எடிங்க்டன் ஒன்றும் சொல்லவில்லை. இடையில் கோப்பன்ஹேகன் சென்ற சந்திரா அங்கே குவாண்டம் மெக்கானிக்ஸ் துறையில் ஆராய்ச்சிகளைச் செய்துகொண்டிருந்த போர், ஹெய்சன்பர்க் போன்றோருடன் சில மாதங்களைக் கழித்தார். ஆனால் அவர்களுக்கு ஆஸ்ட்ரோபிசிக்ஸ் துறையில் எந்த விருப்பமும் இருக்கவில்லை. கேம்பிரிட்ஜ் திரும்பிய சந்திரா மிகச் சாதாரணமான சில ஆராய்ச்சிகளைச் செய்து அதன் அடிப்படையில் பிஎச்டி பரீட்சையைக் கடந்தார். அடுத்து என்ன செய்யவேண்டும்? சந்திராவின் தந்தை அவரை இந்தியா திரும்பிவருமாறு சொல்லிக்கொண்டிருந்தார். சந்திராவுக்கோ இந்தியா போனால் ஆராய்ச்சிக்கான வாய்ப்பு அதிகம் இருக்காது என்று தோன்றியது. மேலும் ராமனின் நிழலில் இருக்கவேண்டியிருக்கும். ராமனுக்கோ சந்திரா ஆஸ்ட்ரோபிசிக்ஸில் ஆராய்ச்சி செய்வது பிடிக்கவில்லை. அது நிஜமான பிசிக்ஸே அல்ல என்று ராமன் கருதினார். அதை வெளிப்படுத்தவும் செய்தார். இதற்கிடையில் சந்திரா Fellow of Royal Society என்று தெரிந்தெடுக்கப்பட்டார். அப்படியானால் அவர் கேம்பிரிட்ஜில் தங்கியபடி ஆராய்ச்சிகள் செய்துகொண்டே இருக்கலாம். அவருக்கு மாதாமாதம் சம்பளம் கிடைத்துவிடும்.

இதன்பிறகுதான் சந்திராவுக்கு மிக மோசமான அனுபவம் கிடைத்தது. 1935-ல் ராயல் சொசைட்டியின் சந்திப்பின்போது சந்திரா தன்னுடைய முக்கியமான முடிவை முன்வைத்தார். ஒரு குறிப்பிட்ட நிறை எல்லைக்குக் கீழ் நிறை கொண்ட நட்சத்திரங்கள்தாம் வெள்ளைக் குள்ளனாகும் சாத்தியங்கள் உண்டு. இந்த எல்லைக்கு மேல் நிறை கொண்ட நட்சத்திரங்கள் நிச்சயமாக வெள்ளைக் குள்ளனாக ஆகமுடியாது. என்னவாக ஆகும் என்பதைச் சொல்வது கடினம். அந்த நேரத்தில் கருந்துளை என்ற கருத்து உருவாக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் சந்திரா அந்தக் கருத்து வெளிப்படும்விதமாக, ஒரு நட்சத்திரம் கிட்டத்தட்ட ஜீரோ அளவுக்குச் சுருங்கிவிடும் என்று காண்பித்தார். சந்திரா பேசி முடித்ததும் எடிங்க்டன் எழுந்து தன் பேச்சைத் தொடங்கினார். 25 வயதான சந்திரா பேசியது அனைத்தும் பிதற்றல் என்றார். இயற்கை இம்மாதிரியான கிறுக்குத்தனங்களை அனுமதிக்காது என்றார். சந்திரா தன் தரப்பு நியாயத்தை முன்வைக்க எழுந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சந்திராவின் ஆராய்ச்சிகளை ஆதரித்துப் பேச பெரிய ஆட்கள் யாரும் முன்வரவில்லை. சந்திராவின் ஆராய்ச்சி வாழ்க்கையும் கண்ணியமும் பெருத்த அடிக்கு உள்ளாயின.

நல்லவேளையாக கேம்பிரிட்ஜுக்கு வெளியே துறை வல்லுனர்கள் சந்திராவின் ஆராய்ச்சியை மதித்தனர். அமெரிக்காவுக்கு வந்து பேசும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியலுக்கு என்று தனியாக ஒரு இடம் தொடங்கப்பட இருந்தது. அமெரிக்கா 1935-ல் வான் இயற்பியலில் பின்தங்கியிருந்தது. எனவே உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளை வரவழைத்து முன்னேறிச் செல்லவேண்டும் என்ற பெரும் வேட்கை அவர்களிடம் இருந்தது. சந்திராவுக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் வேலை தந்தது; சிகாகோ பல்கலைக்கழகமும் வேலை தந்தது. சந்திரா சிகாகோ பல்கலைக்கழக வேலையை எடுத்துக்கொண்டார்.

இதற்கிடையில் சந்திராவின் தந்தைக்கு மிகப்பெரும் மனவருத்தம். சந்திரா இந்தியா திரும்பிவந்து வேலை செய்யவில்லையே என்று. பின்னர் பல ஆண்டுகள் கழித்து சந்திரா அமெரிக்கக் குடியுரிமை பெற்றுக்கொண்டபோது சந்திராவின் தந்தை அவருடன் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டார்.

எடிங்க்டன் - சந்திரா மோதல் பற்றிப் பேசியபடி சந்திராவின் தனி வாழ்க்கையை மறந்துவிட்டோமே. சந்திராவின் கூடப் படித்த பெண் லலிதா துரைசாமி. லலிதாவின் தாய் சாவித்ரி, தந்தை துரைசாமி. லலிதாவின் தாயுடைய சகோதரி சுப்புலக்ஷ்மி, நமக்கு அதிகம் தெரிந்தவர். சிஸ்டர் சுப்புலக்ஷ்மி. சிறுவயதுக் கல்யாணம், சிறுவயது விதவை என்றாலும் மேலே படிக்கவைக்கப்பட்டு பட்டம் பெற்று பெண்களின் முன்னேற்றத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். சென்னையில் பெண்கள் கல்லூரி வருவதற்கு முதன்மை முயற்சிகளை எடுத்தவர். அதன் விளைவுதான் ராணி மேரி கல்லூரி. எனவே லலிதா கல்லூரிக்குச் சென்று படித்தது பெரிய விஷயம் அல்ல. சந்திராவும், அதே வகுப்பில் பிசிக்ஸ் படித்த லலிதாவும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். ஆனால் கேம்பிரிட்ஜ் சென்றவுடன் சந்திராவின் முழுக்கவனமும் ஆராய்ச்சியிலேதான் இருந்தது.

அமெரிக்காவில் வேலை கிடைத்ததும் சந்திரா செய்த முதல் காரியம் சென்னை வந்து, தந்தையை ஏற்கச் செய்து, லலிதாவைத் திருமணம் செய்துகொண்டதுதான். சிகாகோ சென்ற இருவரும் அங்கே தம் வாழ்க்கையைத் தொடங்கினர். லலிதா கருவுற்றார், ஆனால் கரு கலைந்துபோனது. அதன்பின் அவர்களுக்குக் குழந்தை பிறக்கும் வாய்ப்பே இல்லாமல் போனது. லலிதா இறுதிவரை தன் வாழ்க்கையை சந்திராவுக்கு என்றே அர்ப்பணித்துக்கொண்டார்.

சந்திரா தன் வாழ்நாளின் இறுதிவரையில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணி புரிந்தார். முதல் 20 ஆண்டுகள் சிகாகோ பல்கலைக்கழகத்தின் யெர்கிஸ் அப்சர்வேட்டரியிலும் அதன்பின் அதன் இயற்பியல் துறையிலும் தன்னை ஆழ்த்திக்கொண்டார்.

எடிங்க்டன் பிரச்னைக்குப்பிறகு வெள்ளைக் குள்ளன், கருந்துளை ஆகியவை பற்றி அதிகம் பேசாத சந்திரா தன் ஆராய்ச்சிக்கென்ற குறிப்பிட்ட ஒரு துறையை எடுத்துக்கொள்வார். ஐந்திலிருந்து பத்தாண்டுகள் அதில் இயங்குவார். அதன்பின் அந்தத் துறையில் ஒரு காத்திரமான புத்தகத்தை எழுதுவார். அத்துடன் அந்தத் துறையை விட்டுவிட்டு அடுத்த துறையைக் கையில் எடுப்பார். அவருடைய புத்தகங்கள் அனைத்தும் கிளாசிக் வகையைச் சேர்ந்தவை.

1939 - An Introduction to the Study of Stellar Structure
1942 -
Principles of Stellar Dynamics
1950 - Radiative Transfer
1960 - Plasma Physics
1969 - Ellipsoidal Figures of Equilibrium
1983 - The Mathematical Theory of Black Holes
1995 - Newton's Principia for the Common Reader

கருந்துளைகள் பற்றி அவர் மீண்டும் எழுதவந்தது, பிரச்னைகள் எல்லாம் அடங்கிய 1980களில். தன் வாழ்நாளின் இறுதியில் அவர் நியூட்டனின் பிரின்சிபியா புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டார். நியூட்டன் பற்றி சிறப்புப் பேச்சு ஒன்றைத் தருவதற்கான முன்னேற்பாடுகளின்போது பிரின்சிபியா புத்தகத்தைப் பார்வையிட்ட அவர், அந்தப் புத்தகத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

1983-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு சந்திராவுக்குத் தரப்பட்டது. அப்போது அவர் வயது 73! காலம் கடந்து தரப்பட்ட பரிசு என்று அனைவருமே ஏற்றுக்கொண்டார்கள். 1968-ல் இந்தியாவின் உயரிய விருதான பத்மவிபூஷன் அவருக்குத் தரப்பட்டது.

மில்லர் எழுதியுள்ள வாழ்க்கை வரலாறு, கனீகல் எழுதிய வாழ்க்கை வரலாற்றைவிட ஒருபடி குறைவானது என்பது என் கருத்து. மில்லர் அறிவியலை அதிகமாக வைக்கிறார். சில அத்தியாயங்கள் சாதாரணர்கள் படிப்புக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. கனீகல் மிகுந்த கவனத்துடன் எழுதுவார். கணிதம் புரியவில்லை என்று யாரும் புத்தகத்தைத் தூக்கிப் போட்டுவிடக்கூடாதே என்ற பயம் புத்தகம் முழுவதிலும் காணலாம். ஐசக்சனின் ஐன்ஶ்டைன் வாழ்க்கையிலும் இந்த கவனத்தைக் காணலாம். மேலும் மில்லர், கனீகல் அளவுக்கு இந்தியாவில் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். கனீகலுக்கு அந்த சுதந்தரமும் செலவுக்கான பணமும் இருந்தது என்று நினைக்கிறேன். அதன்காரணமாக மில்லருடைய புத்தகத்தில் சந்திராவின் தனி வாழ்க்கை குறைவாகவே வெளிப்படுகிறது.

நம் நினைவுகளில் ராமானுஜன் பெரிதாக எழுந்து நிற்கிறார். ராமன் பற்றியும் நமக்கு நிறையத் தெரியும். ஆனால் சந்திரா பற்றி மிகக் குறைவானவர்களுக்கே தெரியும். அந்தவிதத்தில் மில்லர் நமக்கு மிகப்பெரும் நன்மையைச் செய்திருக்கிறார்.

இன்னொரு வருத்தமான விஷயம், இந்த வெளிநாட்டவர் இல்லாவிட்டால் நம்மால் ராமானுஜனைப் பற்றியோ சந்திராவைப் பற்றியோ இவ்வளவுதூரம் தெரிந்துகொண்டிருக்க முடியாது. என்னவொரு அநியாயம்! ஏன், ராமன்குறித்து இந்த அளவுக்கு விரிவான வாழ்க்கை வரலாறு நம்மிடம் கிடையாது. ஹோமி பாபா குறித்தோ, மேக்நாத் சாஹா குறித்தோ, சத்யேந்திரனாத் போஸ் குறித்தோ, ஜகதீஷ் சந்திர போஸ் குறித்தோ, ஜி.என்.ராமச்சந்திரன் குறித்தோ நம்மிடம் விரிவான பதிவுகள் கிடையாது. மிகச் சுமாரான புத்தகங்கள்தான்.


கையில் பணம் இருக்கும் பெரும் இந்திய தனவந்தவர்கள் செய்யக்கூடிய ஒரே நல்ல காரியம் அமெரிக்க எழுத்தாளர்களைப் பிடித்து, கணிசமான பணத்தைக் கொடுத்து மேற்சொன்ன இந்திய அறிவியலாளர்களைப் பற்றி விரிவான வாழ்க்கை வரலாறுகளை எழுதச் செய்வதுதான். அவர்களுக்கு வாய்த்திருக்கும் திறமை நம்மிடம் இப்போது இல்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.