Monday, May 28, 2018

தொழிற்சாலைகள், சூழல் கேடு, உள்ளூர் மக்கள்

தொழில் வளர்ச்சியை மட்டுமே முன்வைக்கும் பலரும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தொழில் வளர்ச்சிக்கு எதிரான போராட்டமாகப் பார்க்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டால், அல்லது தமிழகத்திலிருந்து துரத்தப்பட்டால், அதன் காரணமாகத் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கருதுகிறார்கள்.

சூழல் கேட்டை முன்வைத்து இன்று தமிழகத்தில் நான்கு பெரும் பிரச்னைகள் பேசப்படுகின்றன. அவை (1) காவிரிப் படுகை ஹைட்ரோகார்பன் மண்டலம் (2) கூடங்குளம் (3) தேனி நியூட்ரினோ (4) ஸ்டெர்லைட். இதில் ஸ்டெர்லைட் மிகக் கோரமான சில சம்பவங்களுக்குப் பிறகு இழுத்து மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் சில ரசாயன, உலோக உற்பத்தித் தொழில்கள்மீதும் கடும் அழுத்தம் சுமத்தப்படும்.

இந்தப் பிரச்னைகளின் அடிநாதமாக நான் பார்ப்பது, சூழல் கேட்டை மட்டுமல்ல. இந்தத் தொழிற்சாலைகள் அல்லது பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்படும்போது அப்பகுதி மக்கள் எந்தவிதத்திலும் பங்காளிகளாகச் சேர்க்கப்படுவதே இல்லை. இது நிலம் கையக்கப்படுத்துதல் அல்லது குறைகேட்பு என்பதைத் தாண்டிய ஒன்று.

குறைத்த சர்ச்சைக்குரியது என்பதனால், தேனி நியூட்ரினோ ஆய்வகத்தை எடுத்துக்கொள்வோம். சிலபல பொய்க்கதைகளைத் தாண்டி, உண்மையிலேயே இந்தத் திட்டத்தால் பொதுமக்களுக்குப் பெரிய பிரச்னை ஏதும் இல்லை; சிறிய சில பிரச்னைகள் நிச்சயமாக இருக்கும். நிலம் கையகப்படுத்தக்கூட வேண்டியதில்லை. நீர் ஆதாரம் எவ்வகையிலும் பாதிக்கப்படாது. பாரம்பரிய காட்டு மேய்ச்சல் உரிமை பாதிக்கப்படுமா? அரசு இதற்கான உறுதிமொழிகளைக் கொடுத்துவிடலாம். அதற்குமேல்? அதற்குமேல் இந்தப் பகுதி மக்களுக்கு இந்த மாபெரும் பல நூறு கோடி ரூபாய்த் திட்டத்தால் ஒரு நன்மையும் இல்லை. அறிவியலுக்கான பொது நன்மை என்று அரசு பேசுகிறது. பெருந்தீமை விளையலாம் என்று போராட்டக்காரர்கள் பேசுகிறார்கள்.

நீங்கள் சராசரி, ஏழைப் பொதுமக்கள் என்றால் என்ன சொல்வீர்கள்? அரசை நம்பமாட்டீர்கள். ஏனெனில் இதுநாள்வரை அரசு நம்பகத்தன்மையோடு நடந்துகொண்டதில்லை. மக்களை மதித்ததில்லை. அதிகாரத் திமிர் கொண்ட ஐஏஎஸ் அலுவலர்களும் ஐபிஎஸ் அலுவலர்களும் ஏழை மக்களை எத்திவிட்டுச் செல்பவர்கள். இங்குதான் அமைப்பு சறுக்குகிறது.

அறிவியல் வளர்ச்சியினால் என்ன நன்மை என்பதெல்லாம் கிடக்கட்டும். வேறு என்ன புதிய நன்மைகளை இந்தப் பகுதி மக்களுக்கு ஒருவர் செய்யமுடியும்? ஐம்பது கிமீ விஸ்தீரணத்தில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் சுத்தமான குடிநீரைக் குழாயில் தர முடியுமா? அந்தப் பகுதி மக்கள் வியக்கும் வகையில் அற்புதமான மருத்துவமனை ஒன்றை நிறுவி, டெர்ஷியரி கேர் வரை இலவசமாகச் செய்துதர முடியுமா? நான்கைந்து உயர்தரப் பள்ளிக்கூடங்களை நிறுவி அப்பகுதிக் குழந்தைகள் அனைவரையும் தூக்கி உயர்த்தமுடியுமா?

இதையெல்லாம் செய்துதரவேண்டியது அரசு அல்லவா என்று சொல்லி நியூட்ரினோ ஆய்வக அறிஞர்கள் தப்பித்துப் போய்விட முடியாது. இந்தப் பலநூறு கோடி ரூபாய்த் திட்டத்தால் அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு பியூன் வேலைகூடக் கிடைக்கப்போவதில்லை என்னும்போது அம்மக்கள் எப்படி உங்கள் திட்டத்தில் பங்குதாரர் ஆவார்கள்?

சரி, இதையெல்லாம் ஸ்டெர்லைட் செய்துகொடுத்திருந்தால் இம்மாதிரியான ஒரு வெறுப்பைச் சம்பாதிக்காமல் இருந்திருப்பார்களா? முதலில் இதனை ஸ்டெர்லைட் நினைத்துக்கூடப் பார்த்ததாகத் தெரியவில்லை. ஏதேனும் பிரச்னை வந்தால் ஆளும் கட்சிக்கு அள்ளிக்கொடுத்தால் முடிந்தது என்ற பழைய மாதிரியை மட்டுமே மனத்தில் வைத்து நடந்துகொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

ஸ்டெர்லைட், வெறுமனே கொஞ்சம் நிலத்தையும் துறைமுகத்தையும் மட்டும் மனத்தில் வைத்து ஆலையை நடத்தியுள்ளது. இனியும் இது சாத்தியமில்லை. ஒவ்வோர் ஆலையும் அப்பகுதி மக்களுடைய பங்களிப்போடு, அம்மக்கள் விரும்பும் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதோடு, சூழல் கேட்டைக் கடுமையாகக் குறைப்பதற்கான முதலீடுகளோடும்தான் இனி தமிழகத்தில் செயல்பட முடியும். அல்லது குறுகிய காலத்திற்கு, இந்த அளவுக்கு நாட்டின் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர வேண்டியிருக்கும். ஆனால் இன்னும் சில வருடங்களில் அந்த மாநிலங்களிலும் பிரச்னைகள் வரலாம். இப்படி மாநிலம் மாநிலமாக ஓடிச் செல்வதற்குபதிலாக, ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுடன் நியாயமான ஒப்பந்தத்தில் ஈடுபடலாம். சூழலியல் கேடுகள் நேராமல் என்ன செய்யப்போகிறோம் என்று நியாயமாக, அவர்கள் மொழியில் விளக்குவது. இங்கே நம்பகத்தன்மை மிக மிக முக்கியம். அதன் தொடர்ச்சி, எதிர்த்துப் பேசுபவர்களை நியாயமாக எதிர்கொண்டு தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது. இரண்டாவது, அப்பகுதி மக்களின் நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்வது. அப்பகுதி மக்களைப் பங்காளிகளாக ஆக்குவது.

கூடங்குளம் இதில் எதையுமே செய்யவில்லை. குறைந்தபட்சம் சுற்றியுள்ள மக்களுக்கு தமிழில் அச்சடித்த துண்டுச்சீட்டுகூடத் தரவில்லை. மேலிடத்திலிருந்து முடிவு செய்துவிட்டோம், உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ - என்பதுதான் அவர்கள் கருத்தாக இருந்தது, இருக்கிறது. காவிரிப் படுகை ஹைட்ரோகார்பன் திட்டமும் இப்படிப்பட்டதாகத்தான் இருக்கிறது.


ஸ்டெர்லைட்டுக்கு விழுந்த அடி, பிற ஆலை முதலாளிகளை இனியாவது விழித்தெழச் செய்யவேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் அரசியல் கட்சிகளுக்கும் கையூட்டு அளிப்பதற்குபதிலாக சூழல் கேட்டைத் தாங்களாகவே முன்வந்து குறைக்க, நீக்க முயற்சிகளை மேற்கொள்வது, சுற்றியுள்ள மக்களோடு தொடர்ந்து பேசுவது, அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்தில் பங்கேற்பது, அதற்காகக் கணிசமான அளவு பணத்தை முதலீடு செய்வது போன்றவை மூலமாக மட்டுமே நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் ஆலைகளைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

நான் அறிந்த ஞாநி

[ஞாநி குறித்த என் நினைவுகளை திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளி தொகுத்த ஓர் இதழுக்காக எழுதியிருந்தேன். இங்கே உங்கள் பார்வைக்கு. மேலும் சில விஷயங்களை எழுத நினைத்தேன். ஆனால் வார்த்தைக் கணக்கு நீண்டுவிடும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொண்டுவிட்டேன்.]

ஞாநி சங்கரனை ஒரு பத்தி எழுத்தாளராக நான் படித்துவந்திருக்கிறேன். அவர் தீம்தரிகிட இதழை மீண்டும் 2000-க்குப் பிறகு கொண்டுவரத் தொடங்கியபோது அவ்விதழுக்கு சந்தாதாரராக இருந்தேன். அதன்மூலம் ஞாநியின் பல்வேறு கருத்துகளைப் படித்திருக்கிறேன்.

அவருடனான பரிச்சயம் என்பது 2007-ல்தான் ஏற்பட்டது. அப்போது ஞாநி விகடன் இதழில் ‘ஓ பக்கங்கள்’ என்ற கருத்துத் தொடரை எழுதிவந்தார். அக்காலகட்டத்தில்தான் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு அமெரிக்க அரசுடன் அணுசக்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. வாஜ்பாய் காலத்தில், 1998-ல், இந்தியா பொக்ரான் அணுகுண்டுச் சோதனை நிகழ்த்தியதால் அமெரிக்காவும் பிற அணுசக்தி நாடுகளும் இந்தியாவை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தியிருந்தன. இந்தியாமீது சில தொழில்நுட்பத் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் சில ஆண்டுகளிலேயே இந்தியாவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு அமெரிக்கா இந்தியாவுடன் அமைதிக்கான அணுத் தொழில்நுட்ப உறவை ஏற்படுத்திக்கொள்ள முன்வந்தது. இந்த ஒப்பந்தத்துக்கு 123 ஒப்பந்தம் என்று பெயர்.

ஞாநி, அணுத் தொழில்நுட்பத்துக்கு எதிரானவர். எனவே அவர் 123 ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தார். அப்போது நான் தமிழில் வலைப்பதிவுகள் எழுதிவந்தேன். நான் அணுத் தொழில்நுட்பத்துக்கு ஆதரவானவன். இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது, இந்தியாவுக்கு நன்மை பயக்கக்கூடியது என்பது என் கருத்து. ஞாநியின் விகடன் பத்தியில் உள்ள குறைபாடுகள் குறித்து என் வலைப்பதிவில் தொடர்ந்து எழுதத்தொடங்கினேன். ஞாநி, என் கருத்துக்கு மாற்றுக் கருத்துகள் எழுதினார். அதுதான் எங்கள் நட்பின் தொடக்கம் என்று நினைக்கிறேன். 123 ஒப்பந்தம் குறித்த என் கருத்துகளையெல்லாம் தொகுத்து பின்னர் நான் ஒரு சிறு நூலாகவும் வெளியிட்டேன்.

ஞாநி, கேணி என்ற அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளை அவர் வீட்டின் பின்கொல்லையில் இருந்த வெட்டவெளியில் பேச அழைத்தார். அக்கூட்டங்களுக்கு நான் சிலமுறை சென்றிருக்கிறேன். நானும் அக்கூட்டத்தில் ஒருமுறை பதிப்புத் தொழில் குறித்துப் பேசியிருக்கிறேன். அந்தச் சந்திப்புகளின்போது கூடும் கூட்டம் எனக்குப் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. 200-250 பேர், பெரும்பாலும் இளைஞர்கள், கூடிவிடுவர். ஒரு நிகழ்ச்சியை நடத்துவதில் எனக்கு இருக்கும் சிரமமே, கூட்டம் சேர்ப்பதுதான். ஞாநிக்காகக் கூடும் கூட்டத்தை நான் பொறாமையுடனேயே பார்த்திருக்கிறேன்.

ஞாநியின் நாடகங்கள், புனைகதைகள் என்னை அவ்வளவாக ஈர்த்ததில்லை. அவருடைய பத்தி எழுத்தும் தொலைக்காட்சி உரையாடல்களும் நேரடிச் சந்திப்புமே எனக்கு முக்கியமானவையாக இருந்திருக்கின்றன. ஞாநியின் பொருளாதாரக் கருத்துகள் எனக்கு நேர் எதிரானவை. ஆனால் அவர் எப்போதுமே உரையாடத் தயாராக இருந்தார். முக்கியமாக, எதிர்க்கருத்து இருப்போருடன் உரையாடத் தயாராக இருந்தார். இளைஞர்களுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார். அவருடைய வீட்டுக்கு நான் செல்லும்போது அங்கே எப்போதும் ஓர் இளைஞர் கூட்டம், அல்லது குறைந்தபட்சம் ஓரிரு இளைஞராவது இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர் தனியாக இருந்து நான் பார்த்ததே இல்லை.

தமிழகத்தில் செய்தித் தொலைக்காட்சி வடிவம் பெரும் மாற்றம் பெற்றது ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோதுதான். தொலைக்காட்சி விவாதங்கள் என்னும் புதியவகை நிகழ்ச்சிகள் அப்போது அறிமுகமாகின. அதில் கலந்துகொள்ள நான் தொடர்ந்து அழைக்கப்பட்டேன். காலை நேர நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் ஞாநியும் நானும்தான் இணைந்து பங்கேற்போம். எங்கள் இருவருடைய கருத்துகளும் நேர் எதிராக இருக்கும் என்பதால். ஆனால் இருவருக்கும் உள்ள பரஸ்பர மரியாதை காரணமாக நாங்கள் குரலை உயர்த்தி ஒருவரை ஒருவர் ஒருமுறைகூடக் கடுமையாகப் பேசியதில்லை. அதே சமயம் கருத்துகளை மிகக் கடுமையாக மறுத்துப் பேசியிருக்கிறோம். பல்வேறு தொலைக்காட்சிகளையும் சேர்த்து குறைந்தது நூறு முறையாவது நாங்கள் இருவரும் மட்டும் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் இருக்கும் என்று ஊகிக்கிறேன்.

ஞாநியின் பரிந்துரையால்தான் நான் எஸ்.ஆர்.வி பள்ளி மாணவர்களுடன் உரையாட அழைக்கப்பட்டேன். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் மாணவர்களுக்கான அறிவியல் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி இன்றளவும் அதில் ஈடுபட்டுவருகிறேன். எஸ்.ஆர்.வி பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி முதல்வர், பள்ளிச் செயலர் ஆகியோருடனான என் இன்றளவுக்குமான உறவுக்கு அடித்தளமிட்டவர் ஞாநியே. மாதம் ஒருமுறை எஸ்.ஆர்.வி பள்ளிக்கு வரும்போது ஞாநியும் அங்கே இருப்பார். இந்தச் சந்திப்புகளின்போது பள்ளிக்கல்வி குறித்து நிறையப் பேசியிருக்கிறோம்.

ஞாநிக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. அவர் உடல் கடுமையாக மோசமடையும்; பின்னர் முன்னேறும். இவை அனைத்துக்கும் இடையிலும் தொடர்ந்து அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குகொண்டார். பத்திகளை எழுதினார். கூட்டங்களில் கலந்துகொண்டார். பேசினார். தன் கருத்துகளைச் சமரசமின்றி வெளியிட்டுவந்தார். பல்வேறு உடல்நிலைப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கும்போது அவரிடமிருந்து எந்தவிதத்திலும் பச்சாதாபம் வெளிவராது. மிகத் தெளிவான அறிவியல் பார்வையில் தன் கோளாறுகளை விவாதிப்பார். உப்பில்லாமல் உண்ணும் உணவுக் கட்டுப்பாட்டுக்குத் தான் பழகியது எப்படி என்று சிறிதும் வருத்தம் இன்றி விளக்கிச் சொல்வார்.

வாரம் இரண்டு அல்லது மூன்று முறை டயாலிசிஸ் செய்துகொள்ளவேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. அதுகுறித்துப் பேசும்போது தொடர்ந்து பல மணி நேரம் படுக்கையிலேயே இருக்கவேண்டும் என்று ஒருமுறை சொன்னார். அப்போதுதான் நான் கிண்டில் கருவியில் புத்தகம் படிக்க அந்த நேரத்தைப் பயன்படுத்தலாம் என்று யோசனை சொன்னேன். ஒரு கிண்டில் கருவியை அவருக்கு வாங்கியும் கொடுத்தேன். அதன்பின் அவர் கிண்டிலில், தான் படிக்கும் புத்தகங்கள் குறித்து எனக்குக் குறிப்புகள் அனுப்புவார். சில புத்தகங்களைக் குறிப்பிட்டு அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்கலாமே என்பார்.

தன்னுடைய புத்தகங்கள் அனைத்தும் மின்புத்தகங்களாக வரவேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்கான தொழில்முறை உறவுகளை அவருக்கு நான் ஏற்படுத்திக்கொடுத்தேன். அவருடைய ஒரு புத்தகத்தை நான் சிறிதுகாலம் பதிப்பித்திருக்கிறேன்.

நான் அவருடைய நெருங்கிய நண்பன் என்று சொல்லமாட்டேன். அவருடைய குடும்ப வாழ்க்கை குறித்தோ, அவருடைய விருப்பங்கள் குறித்தோ, போராட்டங்கள் குறித்தோ எனக்கு அதிகம் தெரியாது. எங்களுடையது தொழில்முறையிலான ஓர் உறவு மட்டுமே.

ஞாநி தேர்தல் அரசியலிலும் இறங்கினார். ஆம் ஆத்மி கட்சி சார்பாக ஆலந்தூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் ஞாநி களமிறங்கி, தோற்றுப்போனார். அப்போதைய அவருடைய அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதச் சொல்லி நான் கேட்டிருந்தேன். அவர் அதைக் கடைசிவரை எழுதினாரா என்று தெரியாது. பின்னர் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது நானும் ஞாநியும் ‘மக்கள் நலக் கூட்டணி’ என்ற அமைப்பை ஆதரித்தோம். தொலைக்காட்சிகளில் இந்தக் கூட்டணியை ஆதரித்துப் பேசினோம். இக்கூட்டணியும் படுதோல்வி அடைந்தது.

ஞாநி, தீவிர பெரியாரியர். சாதி மதங்களுக்கு எதிரானவர். இடதுசாரிக் கோட்பாடுகளால் உந்தப்பட்டவர். சூழலியல் ஆதரவாளர். மூட நம்பிக்கைகளைக் கடுமையாக எதிர்த்தவர். சடங்குகளை மறுத்தவர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர். “முற்போக்கு” என்ற அடைமொழிக்கு உரித்தானவர். கடுமையான பிடிவாதக்காரர். சமரசங்கள் செய்துகொள்ளாதவர். தான் நம்பிய கருத்துகளை உயர்த்திப் பிடிக்க, பொருளாதார இழப்புகளைத் தாங்கிக்கொள்ளத் தயங்காதவர். ஆனாலும், என்னதான் பெரியார் கருத்தை அவர் தூக்கிப் பிடித்தாலும், தமிழ்நாட்டுக்கே உரிய நாகரிகத்தின்படி, அவரைத் திட்டவேண்டும் என்றால் அவரை நோக்கி “பார்ப்பனர்” என்ற வசைச்சொல்லை அவரது எதிரிகள் பயன்படுத்தத் தவறியதில்லை.


ஞாநி இறந்தது எனக்கு அதிர்ச்சிதான். அவர் தன் உடலைச் சரியாகக் கவனித்துக்கொள்ளவில்லை என்பது உண்மைதான். ஆனால் மருத்துவ வளர்ச்சி இன்று இருக்கும் நிலையில் அவரது வாழ்வு இன்னும் சில ஆண்டுகளாவது நீடித்திருக்கலாம். அவரது இழப்பு தமிழ் ஊடகத்துறைக்குப் பெரும் பாதிப்பு என்று உறுதியாகச் சொல்லமுடியும். இறுதியாக அவர் தினமலர் குழுமத்துக்காக பட்டம் என்ற மாணவர் இதழை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்திருந்தார். அந்தவிதத்தில் மாணவர் சமுதாயத்துக்கும் அவருடைய மறைவு பேரிழப்பே.

Thursday, May 24, 2018

ஐஐடி ஜேஇஇ தேர்வுமுறையும் வரிசையெண்ணும்

சென்ற பதிவில் ஜேஇஇ தேர்வு எழுதியது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதில் இவ்வாறு எழுதியிருந்தேன்:

//ஆச்சரியமான முறையில் ஜேஇஇ கணிதத் தேர்வில் வெறும் 15 மதிப்பெண்களுக்கு மட்டும் எழுதியும் எனக்கு ஆல் இந்தியா ரேங்க் 469 கிடைத்திருந்தது.//

இதுகுறித்துச் சிலர் விளக்கம் கேட்டிருந்தனர்.

இன்றைய ஜேஇஇயில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது மெயின்ஸ் என்றும் அட்வான்ஸ்ட் என்றும் இரண்டு நிலையில் தேர்வுகள் நடக்கின்றன. இதில் ரேங்க் - வரிசையெண் - தருவதற்கு சில புள்ளியியல் வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போதைய அட்வான்ஸ்ட் தேர்வு இரண்டு பகுதிகளாக, ஒவ்வொன்றும் மூன்று மணிநேரங்கள் நடக்கிறது. ஒவ்வொன்றிலும் கணிதம், இயற்பியல், வேதியியல் கேள்விகள் கலந்து கலந்து வருகின்றன. ஆனால் 80களில் நான் எழுதியபோது இரண்டு நிலைகளில் தேர்வு கிடையாது. மொத்தம் நான்கு தாள்கள். அதில் ஆங்கிலம் ஒன்று. அதனைக் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். மற்றவை கணிதம், இயற்பியல், வேதியியல். ஒவ்வொன்றும் மூன்று மணி நேரத் தனித்தனித் தேர்வுகள்.

தனித்தனியான தேர்வில் ஒவ்வொன்றும் வெவ்வேறு கடினத்தன்மையில் இருக்கும். இதில் நீங்கள் பெறும் மதிப்பெண்களை அப்படியே கூட்டி 300க்கு இத்தனை மதிப்பெண் என்று சொல்லமாட்டர்கள். மாறாக, ஒவ்வொரு தாளிலும் சராசரி (ஆவரேஜ்), திட்டவிலக்கம் (ஸ்டாண்டர்ட் டீவியேஷன்) ஆகியவற்றைக் கணக்கில் எடுத்து, நார்மலைசேஷன் என்பதை செய்வார்கள்.

உதாரணமாக, கணிதம் மிக மிகக் கடினமான தாள் என்று வைத்துக்கொள்வோம். அதில் சராசரியே 8 மதிப்பெண்கள்தான் என்று வைத்துக்கொள்வோம். அதில் மிக அதிக மதிப்பெண்ணே 42தான் என்றும் வைத்துக்கொள்வோம். இயற்பியலில் சராசரி 46 மதிப்பெண், மிக அதிக மதிப்பெண் 78 என்று வைத்துக்கொள்வோம். இரண்டு தாள்களிலும் பெறும் மதிப்பெண்ணை அப்படியே கூட்டினால் வருவது ஒரு மாணவரின் சரியான தரத்தைக் காண்பிக்காது. மேலும் இந்த தாள்களில் கட்-ஆஃப் அதாவது பாஸ் மார்க் என்பது 35 என்றெல்லாம் இருக்காது. ஒவ்வோர் ஆண்டும், ஒவ்வொரு தாளிலும் சராசரி, விலக்கம் இரண்டையும் அடிப்படையாக வைத்து, அந்தத் தாளில் பாஸ் எவ்வளவு என்பதைத் தீர்மானிப்பதோடு, அந்தத் தாளில் அனைவரும் பெற்றுள்ள மதிப்பெண்களை சராசரி 0, விலக்கம் 1 என்று வருமாறு நார்மலைஸ் செய்வார்கள்

இப்படி ஒவ்வொரு தாளிலும் செய்தபின், மாணவர் மூன்று தாள்களிலும் பெற்றுள்ள நார்மலைஸ்ட் மதிப்பெண்களைக் கூட்டி, அவற்றின் அடிப்படையில் வரிசையெண் தருவார்கள்.

இதில் என்ன ஆதாயம்? மிகக் கடினமான தாளில் சராசரிக்குக் கொஞ்சம் மேலே வாங்கினாலும் டீவியேஷன் அதிகமாக இருந்தால், நார்மலைஸ்ட் மதிப்பெண் நன்கு அதிகரிக்கும். ஜேஇஇ 1987-ல் கணிதத்தில் எனக்கு அப்படித்தான் நடந்திருக்கவேண்டும். அந்த ஆண்டு நான் கணிதத்தில் 13 மார்க் வாங்கியதாக வைத்துக்கொள்வோம். சராசரி அந்த ஆண்டு 10-க்கும் கீழாக இருந்திருக்கலாம். டீவியேஷனும் மிக அதிகமானதாக இருந்திருக்கலாம். எனவே நார்மலைசேஷனில் கணிதத்தில் எனக்குக் கணிசமான வெயிட்டேஜ் கிடைத்திருக்கும். இது தரவரிசையில் என் ரேங்கை அதிகமாக ஆக்கியிருக்கவேண்டும்.

இதெல்லாம் என் ஊகங்கள்


இன்று மெயின்ஸ் தேர்வில், ஒருவித கலந்துகட்டிய நார்மலைசேஷன் நடக்கிறது. அதில் போர்ட் எக்ஸாம் பெர்சண்டைல் எல்லாம் எடுத்துக்கொள்கிறார்கள். தேர்வில் பெற்ற சதவிகிதம், மெயின்ஸில் கிடைத்த பெர்சண்டைல், அவரவர் போர்ட் எக்ஸாமில் கிடைத்த பெர்சண்டைல் மூன்றையும் வைத்து ஒரு ஸ்கோரை உருவாக்கி, அதன் அடிப்படையில் மெயின்ஸ் ரேங்க் வருகிறது. அடுத்து அட்வான்ஸ்ட் தேர்வில் தனி ரேங்க். அதில் ஏதேனும் நார்மலைசேஷன் உள்ளதா என்று எனக்குத் தெரியாது