Monday, May 28, 2018

நான் அறிந்த ஞாநி

[ஞாநி குறித்த என் நினைவுகளை திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளி தொகுத்த ஓர் இதழுக்காக எழுதியிருந்தேன். இங்கே உங்கள் பார்வைக்கு. மேலும் சில விஷயங்களை எழுத நினைத்தேன். ஆனால் வார்த்தைக் கணக்கு நீண்டுவிடும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொண்டுவிட்டேன்.]

ஞாநி சங்கரனை ஒரு பத்தி எழுத்தாளராக நான் படித்துவந்திருக்கிறேன். அவர் தீம்தரிகிட இதழை மீண்டும் 2000-க்குப் பிறகு கொண்டுவரத் தொடங்கியபோது அவ்விதழுக்கு சந்தாதாரராக இருந்தேன். அதன்மூலம் ஞாநியின் பல்வேறு கருத்துகளைப் படித்திருக்கிறேன்.

அவருடனான பரிச்சயம் என்பது 2007-ல்தான் ஏற்பட்டது. அப்போது ஞாநி விகடன் இதழில் ‘ஓ பக்கங்கள்’ என்ற கருத்துத் தொடரை எழுதிவந்தார். அக்காலகட்டத்தில்தான் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு அமெரிக்க அரசுடன் அணுசக்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. வாஜ்பாய் காலத்தில், 1998-ல், இந்தியா பொக்ரான் அணுகுண்டுச் சோதனை நிகழ்த்தியதால் அமெரிக்காவும் பிற அணுசக்தி நாடுகளும் இந்தியாவை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தியிருந்தன. இந்தியாமீது சில தொழில்நுட்பத் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் சில ஆண்டுகளிலேயே இந்தியாவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு அமெரிக்கா இந்தியாவுடன் அமைதிக்கான அணுத் தொழில்நுட்ப உறவை ஏற்படுத்திக்கொள்ள முன்வந்தது. இந்த ஒப்பந்தத்துக்கு 123 ஒப்பந்தம் என்று பெயர்.

ஞாநி, அணுத் தொழில்நுட்பத்துக்கு எதிரானவர். எனவே அவர் 123 ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தார். அப்போது நான் தமிழில் வலைப்பதிவுகள் எழுதிவந்தேன். நான் அணுத் தொழில்நுட்பத்துக்கு ஆதரவானவன். இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது, இந்தியாவுக்கு நன்மை பயக்கக்கூடியது என்பது என் கருத்து. ஞாநியின் விகடன் பத்தியில் உள்ள குறைபாடுகள் குறித்து என் வலைப்பதிவில் தொடர்ந்து எழுதத்தொடங்கினேன். ஞாநி, என் கருத்துக்கு மாற்றுக் கருத்துகள் எழுதினார். அதுதான் எங்கள் நட்பின் தொடக்கம் என்று நினைக்கிறேன். 123 ஒப்பந்தம் குறித்த என் கருத்துகளையெல்லாம் தொகுத்து பின்னர் நான் ஒரு சிறு நூலாகவும் வெளியிட்டேன்.

ஞாநி, கேணி என்ற அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளை அவர் வீட்டின் பின்கொல்லையில் இருந்த வெட்டவெளியில் பேச அழைத்தார். அக்கூட்டங்களுக்கு நான் சிலமுறை சென்றிருக்கிறேன். நானும் அக்கூட்டத்தில் ஒருமுறை பதிப்புத் தொழில் குறித்துப் பேசியிருக்கிறேன். அந்தச் சந்திப்புகளின்போது கூடும் கூட்டம் எனக்குப் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. 200-250 பேர், பெரும்பாலும் இளைஞர்கள், கூடிவிடுவர். ஒரு நிகழ்ச்சியை நடத்துவதில் எனக்கு இருக்கும் சிரமமே, கூட்டம் சேர்ப்பதுதான். ஞாநிக்காகக் கூடும் கூட்டத்தை நான் பொறாமையுடனேயே பார்த்திருக்கிறேன்.

ஞாநியின் நாடகங்கள், புனைகதைகள் என்னை அவ்வளவாக ஈர்த்ததில்லை. அவருடைய பத்தி எழுத்தும் தொலைக்காட்சி உரையாடல்களும் நேரடிச் சந்திப்புமே எனக்கு முக்கியமானவையாக இருந்திருக்கின்றன. ஞாநியின் பொருளாதாரக் கருத்துகள் எனக்கு நேர் எதிரானவை. ஆனால் அவர் எப்போதுமே உரையாடத் தயாராக இருந்தார். முக்கியமாக, எதிர்க்கருத்து இருப்போருடன் உரையாடத் தயாராக இருந்தார். இளைஞர்களுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார். அவருடைய வீட்டுக்கு நான் செல்லும்போது அங்கே எப்போதும் ஓர் இளைஞர் கூட்டம், அல்லது குறைந்தபட்சம் ஓரிரு இளைஞராவது இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர் தனியாக இருந்து நான் பார்த்ததே இல்லை.

தமிழகத்தில் செய்தித் தொலைக்காட்சி வடிவம் பெரும் மாற்றம் பெற்றது ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோதுதான். தொலைக்காட்சி விவாதங்கள் என்னும் புதியவகை நிகழ்ச்சிகள் அப்போது அறிமுகமாகின. அதில் கலந்துகொள்ள நான் தொடர்ந்து அழைக்கப்பட்டேன். காலை நேர நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் ஞாநியும் நானும்தான் இணைந்து பங்கேற்போம். எங்கள் இருவருடைய கருத்துகளும் நேர் எதிராக இருக்கும் என்பதால். ஆனால் இருவருக்கும் உள்ள பரஸ்பர மரியாதை காரணமாக நாங்கள் குரலை உயர்த்தி ஒருவரை ஒருவர் ஒருமுறைகூடக் கடுமையாகப் பேசியதில்லை. அதே சமயம் கருத்துகளை மிகக் கடுமையாக மறுத்துப் பேசியிருக்கிறோம். பல்வேறு தொலைக்காட்சிகளையும் சேர்த்து குறைந்தது நூறு முறையாவது நாங்கள் இருவரும் மட்டும் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் இருக்கும் என்று ஊகிக்கிறேன்.

ஞாநியின் பரிந்துரையால்தான் நான் எஸ்.ஆர்.வி பள்ளி மாணவர்களுடன் உரையாட அழைக்கப்பட்டேன். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் மாணவர்களுக்கான அறிவியல் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி இன்றளவும் அதில் ஈடுபட்டுவருகிறேன். எஸ்.ஆர்.வி பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி முதல்வர், பள்ளிச் செயலர் ஆகியோருடனான என் இன்றளவுக்குமான உறவுக்கு அடித்தளமிட்டவர் ஞாநியே. மாதம் ஒருமுறை எஸ்.ஆர்.வி பள்ளிக்கு வரும்போது ஞாநியும் அங்கே இருப்பார். இந்தச் சந்திப்புகளின்போது பள்ளிக்கல்வி குறித்து நிறையப் பேசியிருக்கிறோம்.

ஞாநிக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. அவர் உடல் கடுமையாக மோசமடையும்; பின்னர் முன்னேறும். இவை அனைத்துக்கும் இடையிலும் தொடர்ந்து அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குகொண்டார். பத்திகளை எழுதினார். கூட்டங்களில் கலந்துகொண்டார். பேசினார். தன் கருத்துகளைச் சமரசமின்றி வெளியிட்டுவந்தார். பல்வேறு உடல்நிலைப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கும்போது அவரிடமிருந்து எந்தவிதத்திலும் பச்சாதாபம் வெளிவராது. மிகத் தெளிவான அறிவியல் பார்வையில் தன் கோளாறுகளை விவாதிப்பார். உப்பில்லாமல் உண்ணும் உணவுக் கட்டுப்பாட்டுக்குத் தான் பழகியது எப்படி என்று சிறிதும் வருத்தம் இன்றி விளக்கிச் சொல்வார்.

வாரம் இரண்டு அல்லது மூன்று முறை டயாலிசிஸ் செய்துகொள்ளவேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. அதுகுறித்துப் பேசும்போது தொடர்ந்து பல மணி நேரம் படுக்கையிலேயே இருக்கவேண்டும் என்று ஒருமுறை சொன்னார். அப்போதுதான் நான் கிண்டில் கருவியில் புத்தகம் படிக்க அந்த நேரத்தைப் பயன்படுத்தலாம் என்று யோசனை சொன்னேன். ஒரு கிண்டில் கருவியை அவருக்கு வாங்கியும் கொடுத்தேன். அதன்பின் அவர் கிண்டிலில், தான் படிக்கும் புத்தகங்கள் குறித்து எனக்குக் குறிப்புகள் அனுப்புவார். சில புத்தகங்களைக் குறிப்பிட்டு அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்கலாமே என்பார்.

தன்னுடைய புத்தகங்கள் அனைத்தும் மின்புத்தகங்களாக வரவேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்கான தொழில்முறை உறவுகளை அவருக்கு நான் ஏற்படுத்திக்கொடுத்தேன். அவருடைய ஒரு புத்தகத்தை நான் சிறிதுகாலம் பதிப்பித்திருக்கிறேன்.

நான் அவருடைய நெருங்கிய நண்பன் என்று சொல்லமாட்டேன். அவருடைய குடும்ப வாழ்க்கை குறித்தோ, அவருடைய விருப்பங்கள் குறித்தோ, போராட்டங்கள் குறித்தோ எனக்கு அதிகம் தெரியாது. எங்களுடையது தொழில்முறையிலான ஓர் உறவு மட்டுமே.

ஞாநி தேர்தல் அரசியலிலும் இறங்கினார். ஆம் ஆத்மி கட்சி சார்பாக ஆலந்தூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் ஞாநி களமிறங்கி, தோற்றுப்போனார். அப்போதைய அவருடைய அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதச் சொல்லி நான் கேட்டிருந்தேன். அவர் அதைக் கடைசிவரை எழுதினாரா என்று தெரியாது. பின்னர் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது நானும் ஞாநியும் ‘மக்கள் நலக் கூட்டணி’ என்ற அமைப்பை ஆதரித்தோம். தொலைக்காட்சிகளில் இந்தக் கூட்டணியை ஆதரித்துப் பேசினோம். இக்கூட்டணியும் படுதோல்வி அடைந்தது.

ஞாநி, தீவிர பெரியாரியர். சாதி மதங்களுக்கு எதிரானவர். இடதுசாரிக் கோட்பாடுகளால் உந்தப்பட்டவர். சூழலியல் ஆதரவாளர். மூட நம்பிக்கைகளைக் கடுமையாக எதிர்த்தவர். சடங்குகளை மறுத்தவர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர். “முற்போக்கு” என்ற அடைமொழிக்கு உரித்தானவர். கடுமையான பிடிவாதக்காரர். சமரசங்கள் செய்துகொள்ளாதவர். தான் நம்பிய கருத்துகளை உயர்த்திப் பிடிக்க, பொருளாதார இழப்புகளைத் தாங்கிக்கொள்ளத் தயங்காதவர். ஆனாலும், என்னதான் பெரியார் கருத்தை அவர் தூக்கிப் பிடித்தாலும், தமிழ்நாட்டுக்கே உரிய நாகரிகத்தின்படி, அவரைத் திட்டவேண்டும் என்றால் அவரை நோக்கி “பார்ப்பனர்” என்ற வசைச்சொல்லை அவரது எதிரிகள் பயன்படுத்தத் தவறியதில்லை.


ஞாநி இறந்தது எனக்கு அதிர்ச்சிதான். அவர் தன் உடலைச் சரியாகக் கவனித்துக்கொள்ளவில்லை என்பது உண்மைதான். ஆனால் மருத்துவ வளர்ச்சி இன்று இருக்கும் நிலையில் அவரது வாழ்வு இன்னும் சில ஆண்டுகளாவது நீடித்திருக்கலாம். அவரது இழப்பு தமிழ் ஊடகத்துறைக்குப் பெரும் பாதிப்பு என்று உறுதியாகச் சொல்லமுடியும். இறுதியாக அவர் தினமலர் குழுமத்துக்காக பட்டம் என்ற மாணவர் இதழை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்திருந்தார். அந்தவிதத்தில் மாணவர் சமுதாயத்துக்கும் அவருடைய மறைவு பேரிழப்பே.

3 comments:

  1. // “பார்ப்பனர்” என்ற வசைச்சொல்லை // Is it?

    ReplyDelete
  2. ஆம் கோடீஸ்வரன் துரைசாமி ஓ பக்கங்கள் எழுதிய காலகட்டத்தில் கூட்டம் போட்டு வசைபாடி தீர்த்தனர்.

    ReplyDelete
  3. பத்ரி ( பாஜகவை ஆதரித்து கொண்டே
    ஏன் மக்கள் நல கூ .ஆதரிக்கனும்
    ) பத்ரி ஒரு வலது சாரி அவர் ஏன் இடதுசாரி ஆதரிக்கனும்...இந்த பித்தலாட்டடம் பொய் ,என்ன விடை சொல்வார் பத்ரி எதையும் சமாளிக்க முயலும் பத்ரி ஆத்ம சுத்தியுடன் நேர்மையுடன் பேச தெரியாது...

    ReplyDelete