Monday, June 04, 2018

ஓப்பியப் போர்கள்

இங்கிலாந்து கிழக்கிந்தியக் கம்பெனி, மிளகு போன்ற மசாலாப் பொருட்களை வாங்க இந்தியா வந்தது. துணிமணிகளின் தரத்தைப் பார்த்து அதையும் வாங்கித் தன் நாட்டில் விற்றுவந்தது. கொஞ்சமாக கர்நாடக நவாபுகளின் பங்காளிச் சண்டைக்குள் புகுந்தது. வங்கத்தில் முகலாய ஆட்சி ஆட்டம் கண்டபோது அதிலும் தலையிட்டது. மொத்தத்தில் வர்த்தக வருமானத்தைவிட வரி வருமானம் கணிசமாக இருந்தது.

கிழக்கிந்தியக் கம்பெனி, சீனாவிலிருந்து தேயிலையையும் பட்டையும் இறக்குமதி செய்தது. ஆனால் அந்நாட்டு மக்களுக்கு விற்க கம்பெனியிடம் ஏதும் பொருட்கள் இல்லை. தங்கத்தை மட்டும்தான் அவர்கள் கேட்டனர். ஆனால் இங்கிலாந்து, பிரான்சுடன் நீண்டகாலப் போரில் ஈடுபட்டிருந்தது. தன் நாட்டுத் தங்கத்தையெல்லாம் தேநீருக்குத் தாரை வார்க்க அரசு தயாராக இல்லை. ஆனால் அதே நேரம், நாட்டு மக்களெல்லாம் தேநீர் பருகி சந்தோஷமாக இருந்தனர். தேநீர் இனி கிடையாது என்று சொல்லியிருந்தால் புரட்சியேகூட வெடித்திருக்கலாம்.

எனவே வேறு வழியின்றி, சர்வதேச போதைக் கடத்தல் கும்பலாக ஆவதே மேல் என்ற முடிவுக்கு வந்தது கிழக்கிந்தியக் கம்பெனி. சீனாவில் குறிப்பிட்ட அளவிலான மக்கள் அபின் அல்லது ஓப்பியத்துக்கு அடிமையாகி இருந்தனர். இந்தச் சரக்கு இந்தியாவிலிருந்தும் துருக்கியிலிருந்தும் அவர்களுக்குக் கிடைத்துக்கொண்டிருந்தது. இந்தியாவில் பிகாரில்தான் உத்தமமான சரக்கு கிடைத்தது. காசிப்பகுதியில் சுமாரான சரக்குதான். துருக்கி சரக்கும் அவ்வளவு சிலாக்கியமானதில்லை. பிகார் சரக்கோ, சீனர்களுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது.

கம்பெனி, ஓப்பியக் கொள்முதல் மற்றும் ஏற்றுமதிக்கு ஏகபோக உரிமை கொண்டாடியது. நம் ஜாம்ஷெட்ஜி டாட்டா போன்ற பல்வேறு வணிகர்கள்மூலம் உள்ளூரில் கொள்முதல் செய்து, இங்கிலாந்து வணிகர்களைக் கொண்டு சீனாவில் கள்ளத்தனமாக விநியோகம் செய்ய ஆரம்பித்தது.

ஏன் கள்ளத்தனமாக? சீனப் பேரரசர், தன் நாட்டு மக்கள் ஓப்பியத்தில் மூழ்கி உயிரிழப்பதை விரும்பவில்லை. எனவே ஓப்பியம் விற்பது மரண தண்டனைக்குரிய குற்றம் என்று சொல்லிவிட்டார். ஆனால் கம்பெனிக்கோ வேறு வழியில்லை. ஓப்பியம் விற்ற காசில்தான் தேயிலை வாங்கவேண்டும்.

கம்பெனியின் கண்காணிப்பில் ஓப்பிய வருமானம் பிரமாதமாக இருந்தது. ஒரு கட்டத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருமானத்தில் மிகப் பெரும் பகுதி ஓப்பியத்திலிருந்தே வந்தது. ஆனால் இந்த லாபத்துக்குப் பலரும் பலவிதமான விலைகளைக் கொடுக்கவேண்டியிருந்தது.

பிகார் விவசாயிகள் கஞ்சாச் செடிகளை மட்டுமே பயிரிடவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். அவர்களுக்கு முன்பணம் கொடுக்கப்பட்டு அவர்கள் நிரந்தரக் கடனில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்பட்டது.

சீனாவின் கஞ்சா தேவையை உணர்ந்த பலர், மராத்தியர்களின் ஆளுகையில் இருந்த மால்வா பகுதியில் கஞ்சா பயிரிட்டு சீனாவுக்குக் கொண்டுசென்றனர். கம்பெனி, மராத்தியர்கள்மீது போரிட்டு அவர்களைத் தோற்கடிக்க இதுவும் ஒரு காரணம். மால்வா பகுதி கைவசம் வந்ததும் இங்கு பல வழிமுறைகளைக் கையாண்டு ஓப்பிய விற்பனையை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது கம்பெனி.

இதன் விளைவாக, மிக அதிக அளவுக்கு சரக்கு கைவசம் வந்தது. அனைத்தையும் சீனாவில் விற்பனை செய்ய முற்பட்டதில் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஒரு பெட்டிக்கான லாபம் குறைந்தாலும் வால்யூம் விற்பனை காரணமாக கம்பெனிக்குப் பணம் வந்துகொண்டே இருந்தது.

சீனப் பேரரசரின் ஒரு மகன் ஓப்பியப் பயன்பாட்டால் உயிர் துறக்க, வெகுண்ட பேரரசர், லின் என்ற அதிகாரியை அனுப்பி ஆங்கிலேயர்களின் ஓப்பிய வியாபாரத்தை அழிக்கக் கட்டளையிட்டார். லின் அதிரடியாக ஆங்கிலேய வணிகர்களிடமிருந்து ஓப்பியப் பெட்டிகளைக் கைப்பற்றி, அதில் உப்பைக் கொட்டிக் கடலில் எறிந்து நாசமாக்கிவிட்டார்.

உடனே ஆங்கிலேய வணிகர்கள் தாய்நாட்டிற்கு ஓலை அனுப்பினர். தங்களுடைய பொருள்களைச் சீனர்கள் அழித்துவிட்டார்கள் என்றும், சுதந்தர வர்த்தகத்துக்கு சீனப் பேரரசு எதிராக இருக்கிறது என்றும் அதில் புகார் கூறியிருந்தனர்.

தான் செய்வது மகா கேவலமான விஷயம் என்றாலும், எக்கச்சக்கமான பணம் புழங்குவதாலும், இந்த ஓப்பிய விற்பனை இல்லை என்றால் தன் நாட்டு மக்களுக்குத் தேநீர் குடிக்கக் கிடைக்காது என்பதாலும், கிழக்கிந்தியக் கம்பெனியே ஒட்டுமொத்தமாக திவால் ஆகிவிடும் என்பதாலும் பிரிட்டன் அதிரடியாகக் களத்தில் இறங்கியது. தன் போர்க்கப்பல்களை சீனக் கடற்கரைக்கு அனுப்பியது.

சீனாவின் கப்பல்கள் எல்லாம் உதவாக்கரை. அவர்களுடைய படைகளே அந்தக் காலத்தில் கொஞ்சம் ஜோக் வகைதான். எனவே பிரிட்டிஷ் படைகள் எளிதாகச் சீனப் படைகளை உதைத்து நொறுக்கின. அடுத்தடுத்த இரண்டு சண்டைகளுக்குப் பிறகு சீனா வேறு வழியின்றிப் பணிந்து ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி, அதிகாரி லின் அழித்த ஓப்பியத்துக்கு நிகரான பணம் ஆங்கிலேய வணிகர்களுக்கு ஈடாகத் தரப்படும். மேலும் பிரிட்டனிலிருந்து கஷ்டப்பட்டு கப்பலை ஓட்டிக்கொண்டுவந்து சண்டை செய்த செலவும் ஈடு செய்யப்படும். ஓப்பிய வர்த்தகத்தைத் தடையின்றிச் செய்ய உதவியாக ஹாங் காங் என்ற தீவு நீண்டகால லீஸுக்கு பிரிட்டனுக்கு அளிக்கப்படும்.

இப்படியாக பிரிட்டன் இந்த உலகில் நீதியை நிலை நாட்டிய கதையைப் பலர் விரிவாக எழுதியுள்ளனர். உங்களிடம் கிண்டில் அன்லிமிடெட் இருந்தால் பிரையன் இங்க்லிஸ் எழுதிய இந்தப்புத்தகத்தை நீங்கள் இலவசமாகவே படிக்கலாம். 

2 comments:

  1. பொன்.முத்துக்குமார்Tue Jun 05, 02:09:00 AM GMT+5:30

    // இப்படியாக பிரிட்டன் இந்த உலகில் நீதியை நிலை நாட்டிய கதையைப் பலர் விரிவாக எழுதியுள்ளனர். //

    LMAO.

    ReplyDelete
  2. You can also read a Novel titled 'TAIPAN' by James Clavell. same thing given as a story.

    ReplyDelete