Sunday, December 28, 2003

சங்கம்: மாலன், வைரமுத்து சந்திப்பு

ஏதோ ஒரு பட்சி சொன்னது இந்த வருட சாஹித்ய அகாதெமி பரிசு பெற்ற 'கள்ளிக்காட்டு இதிகாச'த்தின் ஆசிரியர் வைரமுத்துவுடன்தான் , இன்றைய சன் நியூஸ் சங்கம் சந்திப்பு இருக்குமென்று.

இரா.முருகன் ராயர்காபிகிளப்பில் தன் ஆலப்புழை பயணம் பற்றி 'எழுத்துக்காரனின் டயரிக்குறிப்புகள்' என்று ஒரு பயணக்குறிப்பு வரைகையில் (அற்புதமான கட்டுரை இது), தான் ஒரு மலையாளத் தொலைக்காட்சியில் பார்த்த எழுத்தாளரின் நேர்முகம் ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார்:
"நிகழ்ச்சி முடிந்து இன்னொரு மலையாளச் சானல். மலையாள எழுத்தாளர் சாரா ஜோசஃப் கூட அபிமுக சம்பாஷணம். சின்னச் சின்ன மலையாள நகரங்களும், வீடுகளும், பள்ளிகளுமாகத் திரையில் நகர்கின்றன. எல்லாம் சாரா வாழும், வாழ்ந்த, புழங்கிய இடங்கள். ஒவ்வொரு காட்சி வரும்போதும் தன்னுடைய எந்தப்படைப்பில் அந்த இடமும், அவிடத்து மனிதர்களும் வருகிறார்கள் என்று விவரிக்கிறார் சாரா. பேட்டி கண்டவர், எழுத்தாளர் எழுதிய படைப்புகளை எல்லாம் படித்தவர் என்பதால் மேலும் கருத்துப் பரிமாற்றம் நிகழ இயல்பாக வழிசெய்தபடிக்குப் பேட்டியைத் தொடர்கிறார்."
முருகன் மாலனிடமும் போனவாரம் இதைப்பற்றிப் பேசினார். மாலன் உடனடியாக இதனை இந்த வாரப் பேட்டியில் செயல்படுத்தியிருக்கிறார் என்று தோன்றுகிறது!

நிகழ்ச்சி தொடக்கத்தில் வைரமுத்து வைகை நதியணைக்கு அருகிலிருந்து பேசுகிறார். "சிலருக்கு தந்தையைப் புதைத்த நினைப்பிருக்கும், சிலருக்கு தாயைப் புதைத்த நினைப்பிருக்கும், எனக்கு தாய் மண்ணைப் புதைத்த நினைப்பு" என்று கம்பீரமான குரலில் மனம் கலங்கப் பேசும் திறன் அவருக்கு மட்டுமே. கள்ளிக்காட்டு இதிகாசம் - வைகை அணை கட்டுவதற்காக பதினெட்டு கிராமங்களின் மக்களை இடம்பெயர்க்கச் செய்த கருவிலிருந்து உருவாகிறது. அப்படி கண்ணில் நீர் பொங்க இடம்பெயர்ந்த ஒரு தாயின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்த நாலரை வயதுச் சிறுவன் வைரமுத்துவின் காவியம்தான் சாஹித்ய அகாதெமியினால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தக் கதைச் சித்திரம்.

"பல பேர்களின் வாழ்வில் நிகழ்ந்ததை ஒருங்கிணைத்து பேயத்தேவன் என்ற ஒருவனின் குடும்பத்தில் நிகழ்ந்ததாகச் சொன்ன ஒன்றை மட்டும்தான் நான் செய்தேன்" என்று அடக்கத்துடன் சொன்ன வைரமுத்து, அந்த இடப்பெயர்வில் பங்குபெற்ற இருபது பேர்களுடன் இரண்டு நாள் முழுக்கத் தங்கியிருந்து அவர்களது கதை முழுவதையும் கேட்டறிந்து, அதனைத் தன்னுடைய குடும்பத்தில் நிகழ்ந்ததுடன் இணைத்துச் செய்திருக்கிறார் இந்தக் கதையை. "இது முழுக்க முழுக்கக் கற்பனையும் அல்ல" என்கிறார்.

மாலன் நச்சென்று "மண் பேசுகிறது" என்று இந்தப் புத்தகத்துகான விமரிசனத்தை முன்வைத்தார். மண்ணில் தொடங்கி, ஆறு நிலத்தை மூழ்கடிக்குமுன்னர் அந்த மண்ணை எடுக்க முயன்று மூழ்கிப்போனவனின் கதை. வயிற்றுக்கு உணவு மட்டுமின்றி, புண்ணுக்கும் மருந்தான மண். அந்த மண்ணைத் தவிர வேறெதையும் அறியா அப்பாவி மக்களுக்கு சரியான நஷ்ட ஈடு தராத அரசின் மீதுள்ள கோபத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தினார் வைரமுத்து. வீடு கட்டுவதற்கு முன்னால் சொல்லப்படும் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தினை மேற்கோள் காட்டி - "மரங்களே, எங்களை மன்னித்து விடுங்கள், உங்களை அழித்துதான் நாங்கள் வீடுகளைக் கட்ட வேண்டும், மரத்தின் மீது கூடு கட்டியுள்ள பறவைகளே, எங்களை மன்னித்து விடுங்கள்" என்றெல்லாம் மரங்களிடமும், பறவைகளிடமும் மன்னிப்பு கேட்ட மனிதர்கள் வாழ்ந்த நாட்டில் இன்று புது நாகரிகத்தின் தேவையான அணைகளைக் கட்டும்போது அதனால் பாதிக்கப்படும் மக்களுக்குச் சரியான நீதி கிடைப்பதில்லை, அவர்கள் வசிப்பதற்கு மாற்றிடம் கிடைப்பதில்லை, நஷ்ட ஈடு சொற்பமே என்று வைரமுத்து சொன்னது மனதைத் தைத்தது. நர்மதா அணைத்திட்டம் கொண்டுவரும் அரசுகள் இன்றும்கூட அதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு சரியான ஈடு கொடுப்பதில்லை.

நிகழ்ச்சி முழுதும் ஆங்காங்கே கதையின் காட்சிக்கு இணையாக ஒரு படத்துண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இளம்பெண் வண்டியில் ஏறி ஊரை விட்டுப் போகும்போது, முகச்சவரம் செய்யும்போது கீறியதால் வந்த இரத்தம் துடைத்த பஞ்சை அந்தப்பெண் எடுத்து வைத்துக்கொள்வது என்று. அந்தக் காட்சி காண்பிக்கபடும்போது பின்னணியில் வைரமுத்துவின் குரலில் இந்தக் காட்சியை அவர் எழுதியது பற்றி, அவரது சொந்த அனுபவத்தைப் பற்றி அவர் சொல்வது என்று வெகு நேர்த்தியாக செல்லுகிறது நேர்முகம். இதுவரையில் நான் பார்த்த சங்கம் நேர்முகங்களில் நன்கு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சி இது. இது சன் டிவி போன்ற முக்கியச் சானலில் வரவேண்டியது.

விவரமான புத்தக விமரிசனம் யாராவது எழுதியிருக்கலாம். நான் இன்னமும் புத்தகத்தைப் படிக்கவில்லை. விகடனில் தொடராக வந்தபோதும் படிக்கவில்லை. அபுல் கலாம் ஆசாத்தின் கள்ளிக்காட்டு இதிகாசத்தையும், சுந்தர ராமசாமியின் சிறுகதைகளையும் ஒப்புநோக்கிய கட்டுரை இங்கே.

மாலன் - சிவ.கணேசன் சந்திப்பு

1 comment:

  1. Do you have video link of this interview ? While reading ur writing it looks like a interesting interview.

    ReplyDelete