எண்ணங்கள்
தமிழக வெள்ளம், பொருள்/உயிர்ச்சேதம்
கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை, அதன் தொடர்ச்சியாக வெள்ளம், அதன் தொடர்ச்சியாக பொருள், உடைமைகள் நாசம், பயிர்கள் நாசம் என்று தமிழகம் தவித்துக்கொண்டிருக்கிறது.
இம்முறை சென்னையில் அதிக மழை இல்லை. ஆனால் தென் தமிழகத்திலும் காவிரிப் படுகையிலும் நிறைய மழை. மீண்டும் கொள்ளிடம் உடைத்துக்கொள்ளுமோ என்ற பயம் - கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது முறை. பல சிற்றாறுகளில் காட்டு வெள்ளம்.
நேற்று நடந்த இரண்டு பஸ் அசம்பாவிதங்களில் 150 பேருக்கு மேல் பலி என்பது வருத்தத்தைத் தருகிறது. இந்தக் காட்டு மழையில், சிறு வாய்க்கால்கள் உடையலாம் என்ற நிலையில் அந்த பஸ்கள் அந்தப் பாதை வழியாகச் சென்றிருக்க வேண்டுமா?
இரண்டு இடங்களிலுமே ஓட்டுனர்களின் கவனக்குறைவால், எச்சரிக்கைகளையும் மீறி வண்டியை எடுத்துச் சென்றதால்தான் இந்தச் சாவுகள் நிகழ்ந்திருக்கின்றன. இதில் ஒன்று தனியார் வண்டி, மற்றொன்று அரசுப் பேருந்து.
இங்கு சன் நியூஸ் தொலைக்காட்சியின் கவரேஜைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். மனுஷ்ய புத்திரன் தன் வலைப்பதிவில்,
சென்னை மழையில் சன் டிவியின் உளவியல் வன்முறை என்ற தலைப்பில் ஒரு பதிவை எழுதியிருந்தார்.
இந்த உளவியல் வன்முறை தொடர்ந்து வருகிறது. மழையின் தீவிரம் அதிகம்தான், மழையால் பாதிப்புகளும் அதிகம்தான். ஆனால் சன் நியூஸ் எல்லாவற்றையும் இருநூறு மடங்கு உயர்த்திச் சொல்லி, அடுத்து உலகமே அழிந்துவிடப் போகிறதோ, பிரளயம் வந்துவிட்டதோ என்ற மாதிரியெல்லாம் செய்தி படிக்கிறார்கள். அத்துடன் தமிழக அரசு உஷாராக இருந்தால் இந்த அழிவையெல்லாம் தடுத்திருக்கலாம் என்பது போலச் செய்திகள். இதைவிட அநியாயம் வேறொன்றும் இருக்க முடியாது. என்ன செய்து மேலிருந்து கொட்டும் மழையைத் தடுப்பது? இந்த வரலாறு காணாத மழையில் மக்கள் அனைவருக்கும் பாதிப்பு. எல்லாவற்றுக்கும் அரசை மட்டுமே கைகாட்டுவது நியாயமில்லை.
அரசு நிவாரணம் என்று சென்னையில் நடக்கும் கூத்தில் பொதுமக்களை மட்டும்தான் குற்றம் சாட்டமுடியும். சென்னை மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆளுக்கு ரூ. 2,000, 10 கிலோ அரிசி, 1 லிட்டர் மண்ணெண்ணை என்று அரசு கொடுக்க உத்தரவிட்டது. இதை வாங்கச் சென்றபோதுதான் வியாசர்பாடியில் கூட்ட நெருக்கடியில் சிலர் இறந்தனர். வெள்ளமே இல்லாத பகுதிகளிலும் (எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலும்) பலரும் போராடி தங்களுக்கும் வெள்ள நிவாரணம் வேண்டும் என்று சண்டையிடுகின்றனர். இதற்காக இரண்டு நாள்களுக்கு முன்னர் பலர் கூட்டமாகச் சென்று ராதாகிருஷ்ணன் சாலையில் சோழா ஹோட்டல் முன் அமர்ந்து தர்ணா. அதைத் தொடர்ந்து போயஸ் தோட்டத்துக்குள் புகுந்து ரகளை செய்ய முயற்சி செய்ய, அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டிருக்கின்றனர். பின் காவல்துறை அவர்களிடம் நயமாகக் கெஞ்சி அடையாறு எங்கேயோ சென்று அங்குள்ள அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும் என்று சொல்ல, மக்கள் அனைவரும் அடையாறு சென்றிருக்கின்றனர்.
அடையாறில் உள்ள அலுவலகத்தில் அனைவரையும் ஒரு விண்ணப்பப் படிவத்தை நிரப்பச் சொல்ல, எழுத்தறிவில்லா மக்கள் (ஆமாம்!) அதைச் செய்யத் தெரியாமல் வாசலில் இதற்காகவே அமர்ந்திருக்கும் ஒருவரிடம் ஆளுக்கு ரூ. 10 கொடுத்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பியுள்ளனர். ஆனால் படிவங்களைப் பெற அதிகாரிகள் நேரடியாக வருவார்களாம். அதனால் கூட்டம் மீண்டும் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.
அவர்களை இடைமறித்த ஓர் இடைத்தரகர் ஆளுக்குக் கிடைக்கும் ரூ. 2,000 பணத்தில் ரூ. 500ஐ வெட்டினால் பணம் கிடைக்கத் தான் ஏற்பாடு செய்வதாகச் சொல்லியுள்ளார்.
இப்படி ஒவ்வோர் ஊரிலும் நிவாரணப் பணம் தேவையற்றவர்களுக்குப் போய்ச் சேருகிறது. அது தமக்கு வந்தே ஆகவேண்டும் என்பது போல மக்களும் வெட்கமில்லாமல் போராட முனைகிறார்கள். அந்தப் பணத்தில் ஒரு பங்கு இடைத்தரகர்களுக்குப் போய்ச்சேருகிறது.
குறும்படங்கள் திரையிடல் - சனிக்கிழமை
குறும்பட, 'நல்ல சினிமா' ரசிகர்களுக்கு...
நீங்கள் சென்னையில் இருந்தால் உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.
சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தின் திரையரங்கில் (ஜெமினி மேம்பாலத்துக்கு அருகில், ராணி சீதை ஹாலுக்கு அருகில்) வரும் சனிக்கிழமை, 26 நவம்பர் 2005 அன்று ஆறு குறும்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.
மாலை 3.30 மணிக்கு ஒரு காட்சி. மாலை 6.30 மணிக்கு இரண்டாவது காட்சி.
காட்சி நேரத்துக்கு 20 நிமிடங்களுக்கு முன்பாகவாவது செல்வது நல்ல இடத்தைத் தேடிப்பிடித்து நண்பர்களுடன் கூடி உட்கார்ந்து கொள்ள உதவும்.
திரையிடப்பட இருக்கும் படங்கள்:
படம் 1: கிர்னி, மராத்தி, 22 நிமிடங்கள், இயக்குனர்: உமேஷ் குல்கர்னி (FTII பூனா)
படம் 2: பர்த்டே, தமிழ், 22.40 நிமிடங்கள், இயக்குனர்: கே.முத்துக்குமார் (VIS.COM ஐஐடி மும்பை)
படம் 3: The Solitary Sandpiper, ஆங்கிலம், 22 நிமிடங்கள், இயக்குனர்: அஜிதா சுசித்ரா வீரா (FTII பூனா)
படம் 4: Distance, தமிழ்/ஆங்கிலம், 27 நிமிடங்கள், இயக்குனர்: மாமல்லன்
படம் 5: Pre Mortem, ஆங்கிலம், 22 நிமிடங்கள், இயக்குனர்: ரிக் பாசு (FTII பூனா)
படம் 6: 00:00, ஆங்கிலம், 11 நிமிடங்கள், இயக்குனர்: ரிக் பாசு (FTII பூனா)
மாலை 6.30 காட்சிக்கு வந்தால் சிறப்பு விருந்தினர் P.C.ஸ்ரீராமையும் பார்க்கலாம்.
அனுமதி இலவசம் என்கிறார்கள் அமைப்பாளர்கள். அத்தனை படங்களும் அற்புதமானவை என்றும் கேள்விப்படுகிறேன். இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள். (நான் 6.30 காட்சிக்குச் செல்லவிருக்கிறேன்.)
பூக்குட்டி - சுஜாதாவின் சிறுவர் நூல்
தேசிகன் பதிவிலிருந்து:
பூக்குட்டி !சுஜாதா விகடனில் குழந்தைகளுக்காக எழுதிய தொடரை புத்தக வடிவில் அவரே வெளியிடுகிறார்.
தேசிகன் வலைப்பதிவு வழியாகப் புத்தகம் வாங்குபவர்களுக்கு (ரூ. 90), சுஜாதா கையெழுத்திட்ட புத்தகம் கிடைக்கும்.
சிறுவர் நூல்கள் நிறையக் கொண்டுவரவேண்டும் என்று சுஜாதா சொல்லியிருக்கிறார்.
எனக்கும் ஆசைதான். பார்ப்போம்...
மீத்ரோகின் ஆவணங்கள்
இதைப்பற்றி நான் ஏற்கெனவே எழுதிய பதிவை ஒருமுறை படியுங்கள். அப்பொழுது புத்தகம் என் கைக்கு வந்திருக்கவில்லை. இப்பொழுது இரண்டு தொகுதிகளும் என் கையில் உள்ளன. இரண்டாம் தொகுதியை முதலில் படிக்க ஆரம்பித்தேன். முதலில் இந்தியா பற்றிய பகுதி, அடுத்து ஆசிய கண்டத்தின் பிற நாடுகள் பற்றி, பின் அங்கும் இங்குமாக சில பகுதிகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் முதல் தொகுதி வந்து சேர்ந்தது. உடனடியாக அதைப் படிக்க ஆரம்பித்துள்ளேன்!
நாளை நாடாளுமன்றத்தில் இந்த விஷயத்தின் மீது விவாதம் நடக்க உள்ளது. சண்டை போட, பாஜகவுக்குப் பல விஷயங்கள் கையில் உள்ளன. மீத்ரோகின், வோல்க்கர், உச்ச நீதிமன்றத்தின் பீஹார் சட்டசபைக் கலைப்பு மீதான இடைக்காலத் தீர்ப்பு, பீஹாரில் காங்கிரஸ் கூட்டணியின் படுதோல்வி - இப்படிப் பல பல.
காங்கிரஸ் கட்சி எல்லாவற்றைப் பற்றியும் பேச விரும்புகிறார்களாம், மீத்ரோகின் ஆவணங்கள் தவிர.
மீத்ரோகின் ஆவணங்கள் புதினம் போல எழுதப்படிருப்பதால் அதையெல்லாம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கூடாது என்பது சோனியா காந்தி/மன்மோகன் சிங்கின் வாதமாம். இது முழு அபத்தம்.
முதலில் மீத்ரோகின் ஆவணங்கள் புதினமாக எழுதப்படவில்லை! காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யாருமே இந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். (சொல்லப்போனால் பாஜகவினர் யாராவது படித்திருப்பார்களா என்பதும் சந்தேகமே!)
அதே சமயம் மீத்ரோகின் ஆவணங்கள் முழுமையான உண்மை என்று யாரும் சொல்லவும் முடியாது.
வாசிலி மீத்ரோகின் என்பவர் கேஜிபியில் பணியாற்றியவர். முதலில் களப்பணியில் இருந்தவர், சில காரணங்களால் ஆவணக் காப்பாளராக - தண்டனையாக - மாற்றப்பட்டிருக்கிறார். அங்கு கேஜிபி உளவாளிகள், அலுவலர்கள் அனுப்பும் தகவல் அறிக்கைகளைச் சேமித்து வைப்பது அவரது வேலை. தன் கடைசி 12 வருடங்களில் அந்த ஆவணங்களிலிருந்து பலவற்றை நேரம் கிடைக்கும்போது நகலெடுத்து வீட்டில் சேர்த்து வைத்திருக்கிறார். பின் சோவியத் யூனியன் உடைந்து ரஷ்யா + பிற நாடுகளானபோது பக்கத்து நாட்டு பிரிட்டிஷ் தூதரகத்துக்கு வந்து தஞ்சம் கோரியுள்ளார். பிரிட்டன் உளவுத்துறையினர் மீத்ரோகின் வீட்டில் இருந்த ஆவணங்களை பத்திரமாக பிரிட்டனுக்குக் கடத்திக்கொண்டு சென்றுள்ளனர்.
1992-லிருந்து பிரிட்டனின் உளவுத்துறையினர் இந்த ஆவணங்களைத் தோண்டித் துருவியுள்ளனர். அதன்மூலம் தமது நாட்டிலுள்ள சில ரஷ்ய/சோவியத் உளவாளிகளைக் கண்டுபிடித்தனர். (அதில் ஒருவர் 87 வயதான பாட்டி. அது தனிக்கதை!) 1995-ல் பிரிட்டனின் MI6, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சமகால வரலாறு பேராசிரியரான கிறிஸ்டோபர் ஆண்டிரூவை அழைத்து இந்த ஆவணங்களை வைத்து ஒரு புத்தகம் எழுதக் கேட்டனர். (ஏன்? இந்தப் புத்தகங்கள் வெளியாவதில் MI6க்கு என்ன லாபம்?) 1999-ல் மீத்ரோகின் ஆவணங்கள் முதல் தொகுதி வெளியானது. அதில் அமெரிக்கா, ஐரோப்பா பற்றிய விஷயங்கள் வெளியாகியிருந்தன. இது பல ஐரோப்பிய நாடுகளிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
பின்னர் இப்பொழுது இரண்டாவது தொகுதி வெளியாகியுள்ளது. இந்தத் தொகுதியில் அமெரிக்கா, ஐரோப்பா தவிர்த்த பிற நாடுகளில் கேஜிபி என்னென்ன செய்தனர் என்று வெளியாகியுள்ளது.
சில விஷயங்கள் முக்கியமானவை:
- கிறிஸ்டோபர் ஆண்டிரூ தனக்குக் காண்பிக்கப்பட்டதை மட்டும் வைத்து எழுதியுள்ளார்.
- அவர் எழுதியுள்ளதை பிரிட்டனின் சீக்ரெட் சர்வீஸ் தணிக்கை செய்து, தங்களுக்கு விருப்பமானவற்றை மட்டும் அனுமதித்துள்ளனர்.
ஆக, இதனைக் காரணம் காட்டியே இந்தப் புத்தகத்தை முழுமையான சாட்சியமாக ஏற்றுக்கொள்ள யாருமே மறுக்கலாம்.
அதைப்போலவே மற்றொரு விஷயம்... கேஜிபியினர் பல்வேறு நபர்களுக்கும் தனித்தனியாக எழுத்துக்குறியீடுகளை வைத்து அழைத்துள்ளனர். (இந்திரா காந்தி = VANO) இதனால் மீத்ரோகின் ஆவணங்களில் சங்கேதக் குறியீடுகள் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருமே கேஜிபி உளவாளிகள் என்று முடிவு செய்யக்கூடாது. ஆண்டிரூவும் இதையேதான் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
காங்கிரஸைப் பொருத்தவரை இந்தப் புத்தகம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்:
- இந்திரா காந்தி சோவியத் யூனியன் தூதரகத்திலிருந்து தன் கட்சிக்காகப் பணம் பெற்றார்.
The Prime Minister [Indira Gandhi] is unlikely to have paid close attention to the dubious origins of some of the funds which went into Congress's coffers. This was a matter she left largely to her principal fundraiser, Lalit Narayan Mishra, who - though she doubtless did not realize it - also accepted Soviet money. On at least one occasion a secret gift of 2 million rupees from the Politburo to Congress (R) was personally delivered after midnight by the head of Line PR in New Delhi, Leonid Shebarshin. Another million rupees were given on the same occasion to a newspaper which supported Mrs. Gandhi. Short and obese with several chins, Mishra looked the part of the corrupt politician he increasingly became. Indira Gandhi, despite her own frugal lifestyle, depended on the money he collected from a variety of sources to finance Congress (R). (பக்கங்கள் 322-323)
- காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்த பலர் கேஜிபி ஏஜெண்டுகளாக இருந்தனர். ஓர் அமைச்சர் தான் கொடுக்கவிருக்கும் தகவலுக்காக $50,000 கேட்டதாகவும் அதற்கு அப்பொழுதைய கேஜிபி தலைவர் ஆன்டிரோபோவ் (பின்னாள் சோவியத் யூனியன் தலைவர்) அத்தனை பணம் கொடுக்கமுடியாது என்றும், எக்கச்சக்கமான தகவல்கள் அவ்ர்களுக்கு வந்துகொண்டே இருக்கிறது என்றும் சொன்னதாகவும் ஒரு குறிப்பு வருகிறது.
- இந்தியாவில் அமெரிக்கத் தூதராக இருந்த பேட்ரிக் மொய்னிஹான் எழுதிய A Dangerous Place, பக்கம் 41ல் வரும் தகவலாக,
Both times the money was given [by CIA] to the Congress Party which had asked for it. Once it was given to Mrs Gandhi herself, who was then a party official.
Still, as we were no longer giving any money to her, it was understandable that she should wonder to whom we were giving it. It is not a practice to be encouraged.
இந்தக் குற்றச்சாட்டுகள் கடுமையானவை. இது மேற்கொண்டு விசாரிக்கப்படவேண்டும் என்று பாஜக கேட்பதில் நியாயமுள்ளது. காங்கிரஸ் இதைத் தட்டிக்கழிக்கக் கூடாது.
காங்கிரஸைத் தவிர CPI கட்சி தொடர்ச்சியாக சோவியத் பொலிட்புரோ கொடுக்கும் பணத்தை நிறையப் பெற்றதாக இந்தப் புத்தகம் சொல்கிறது. ஆனால் இதில் பெரிய விஷயம் ஒன்றுமில்லை. உலகத்தில் அத்தனை நாடுகளிலும் உள்ள அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சோவியத் யூனியன் அப்பொழுது பணம் கொடுத்து வந்தது. இது வேறுவிதமான பிரச்னை. இந்தியாவில் சட்டபூர்வமாக இயங்கும் ஓர் அரசியல் கட்சி வெளிநாட்டு உளவுத்துறைகளிடமிருந்து ரகசியமாகப் பணம் பெறுவது சட்டப்படி குற்றமா என்பது ஒரு விஷயம். அப்படிப்பட்ட ஒரு கட்சியை மக்கள் நம்பலாமா; அவர்களுக்கு மீண்டும் வாக்களிக்கலாமா என்று கேள்வி கேட்பது வேறு விஷயம்.
ஆனால் இந்த விவகாரத்தை "ஏதோ புனைகதைப் புத்தகம்" என்று சோனியா காந்தி சொல்வது போல அலட்சியமாக ஒதுக்கிவிடக் கூடாது. அதே சமயம் இந்தப் புத்தகத்தை மட்டுமே முன்வைத்து மேலே சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் முழுவதும் உண்மை என்றும் முடிவுகட்டிவிடக் கூடாது.
The Mitrokhin Archives II - The KGB and the World, Christopher Andrew and Vasili Mitrokhin, Allen Lane (Penguin), 2005 - UK Edition
The Sword and the Shield - The Mitrokhin Archive and the Secret History of the KGB, Christopher Andrew and Vasili Mitrokhin, Basic Books, 1999 (Paperback Edition 2001) - US Edition
மும்பை தொடர் குண்டுவெடிப்புகள்
12 மார்ச் 1993, வெள்ளிக்கிழமை அன்று மும்பையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகள் வெடித்தன. விளைவாக 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட ஆயிரம் பேர் காயமுற்றனர்.
இது நியூ யார்க், பாலி, மாட்ரிட், லண்டன், சமீபத்திய தில்லி தொடர் குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் முற்பட்டது. மேற்குறிப்பிட்ட இடங்களில் நடந்த தாக்குதல்/குண்டுவெடிப்புகளின் பின்னணியிலிருந்து வெகுவாக வித்தியாசமானதும் கூட.
தொடர் குண்டுவெடிப்புகள் உயிருக்கும் உடைமைக்கும் பெருத்த நாசத்தை ஏற்படுத்தவேண்டுமானால் அதற்கு எக்கச்சக்க திட்டமிடுதலும் செயல்படுத்துதலும் தேவை. உலகில் சில தீவிரவாத இயக்கங்களிடம்தான் இதற்கான திறமை உள்ளது. அதே நேரம் போரில் ஈடுபடாத அமைதியான ஒரு நகரில் இதையெல்லாம் செய்யவேண்டுமென்றால் உள்ளூர் தொடர்புகள் வேண்டும். வெளிநாட்டு (எதிரி நாட்டு) ஆதரவும் வேண்டும்.
டிசம்பர் 6, 1992-ல் அயோத்தியில் சங் பரிவார் குண்டர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியா முழுதும் பல இடங்களில் கலவரங்கள். மும்பையில் டிசம்பர் 1992, ஜனவரி 1993 என இரண்டு மாதங்களில் சிவ சேனை ஆதரவில் கலவரங்கள். காவல் துறையினர் பலரும் மறுபக்கம் பார்த்திருக்க கொலைவெறி தாண்டவமாடியது. கோத்ரா அளவுக்கு ஆட்சியாளர்களின் ஆதரவு இல்லையென்றாலும் அரசு இயந்திரம் முன்னேற்பாடுடன் செயல்படவில்லை. விளைவு: 250 ஹிந்துக்களும், 500க்கு மேற்பட்ட முஸ்லிம்களும் மும்பையில் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமுற்றனர். பல முஸ்லிம்களின் உடைமைகள் சூரையாடப்பட்டன. தொழில்கள் நசிந்தன.
அப்படி நசிந்த தொழில்களில் சில மும்பை நிழலுலக தாதாக்களான டைகர் மேமோன், தாவூத் இப்ராஹிம், அபு சாலேம் போன்றவர்களுடையதும்தான்.
அந்த நேரத்தில் தாவூத் இப்ராஹிம் துபாயில் வசித்து வந்தார். அதுவரையில் கடத்தல்காரனாகவும் தாதாவாகவும் மட்டுமே தன்னைப் பார்த்து வந்த தாவூதுக்கு இப்பொழுது தன்னை ஒரு முஸ்லிமாகப் பார்க்கத் தோன்றியது. கடத்தல் மன்னர்கள் பலரும் முஸ்லிம்கள்தான். தாவூதின் வலது கையான சோட்டா ராஜன், இப்பொழுது அரசியலில் குதித்திருக்கும் அருண் காவ்லி போன்ற சிலரே அந்த நேரத்தில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இந்துக்கள்.
முஸ்லிம் தாதாக்களுக்கு தூபம் போட்டது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. பிப்ரவரி 1993-ல் துபாயில் நடைபெற்ற தாதாக்கள் கூட்டத்தில் மும்பை இந்துக்களைப் பழிவாங்கவும் இந்திய அரசுக்கு ஒரு பாடம் கற்பிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தமக்கு என்ன ஆகும், தம் சகோதர முஸ்லிம்களுக்கு என்ன ஆகும் போன்ற விஷயங்களைப் பற்றி அந்த தாதாக்கள் அப்போது கவலைப்படவில்லை.
ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து, திரி, இன்னபிற வெடிகுண்டுகள் செய்யத் தேவையான பொருள்கள், ஜெலாடின் குச்சிகள், கிரெனேடுகள், எ.கே.56 ரக துப்பாக்கிகள் என்று பலவற்றையும் ஐ.எஸ்.ஐ தயாரித்து மும்பைக்கு அனுப்பியது. அதனைப் பத்திரமாகத் தரையிறக்கிப் பாதுகாப்பது டைகர் மேமோனின் வேலை. மும்பை சுங்கத்துறையில் ஏகப்பட்ட ஆள்களைத் தன் கையில் வைத்திருந்த மேமோனுக்கு அது அவ்வளவு பெரிய விஷயமில்லை.
அடுத்து பல இடங்களிலும் குண்டு வைக்கவும் கலவரங்களை ஏற்படுத்தவும் ஆள்கள் தேவை. மேமோனின் ஆள்கள்தான் பெரும்பாலானவர்கள். பிற தாதாக்கள் சிலரைக் கொடுத்துள்ளனர். 12 மார்ச் 1993 அன்று முஸ்லிம்கள் அல்லாத பகுதிகளாகப் பார்த்து ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளை உருவாக்கி வைத்தனர், மேமோனின் ஆள்கள். இதற்குத் தேவையான பயிற்சியை எடுத்துக்கொள்ள ஓர் அணி முன்னமேயே துபாய் வழியாக பாகிஸ்தான் சென்று அங்கு காடுகளில் ஐ.எஸ்.ஐ கமாண்டோக்களிடம் பயிற்சி பெற்றது.
தொடர் குண்டுவெடிப்புகள் பல இடங்களில் நாசம் விளைவிக்க டைகர் தன் குடும்பத்துடன் முதல் நாளே துபாய்க்கு எஸ்கேப் ஆகிவிடுகிறார். மும்பை காவல்துறை கொஞ்சம் கொஞ்சமாக முடிச்சுகளை அவிழ்த்து குண்டுகளை வைத்த ஒவ்வொருவராகப் பிடிக்கிறது.
டைகர் மேமோன் ஈடுபட்டுள்ளார் என்று இரண்டு நாள்களுக்குள்ளேயே தெரிந்து விடுகிறது. குண்டுகள் வைத்து வெடிக்காமல் போன ஸ்கூட்டர், வெடித்து நாசமாகிப் போன கார் ஆகியவை மேமோனின் உறவினர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட வண்டிகள். மிகுந்த வேட்டைக்குப் பிறகு டைகர் மேமோனின் தம்பி யாகூப் மேமோன் நேபாளில் மாட்டுகிறார். பின் மேமோன் குடும்பத்தவர் அனைவரும் - டைகர் தவிர - சரணடைகிறார்கள். தாவூதுக்கு வலை வீசுகிறது இந்தியா. ஆனால் பாகிஸ்தான் டைகர் மேமோனையும் தாவூத் இப்ராஹிமையும் பத்திரமாகப் பாதுகாக்கிறார்கள். கேட்டால் அப்படி யாருமே பாகிஸ்தானில் இல்லை என்று பதில் வேறு.
இதற்கிடையில் அபு சாலேம் போர்ச்சுகல் போகிறார். கடந்த வாரம் அவரையும் போராடி அங்கிருந்து இங்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்கள்.
இடையில் யார் யாரோ பெரிய ஆசாமிகளெல்ல்லாம் மாட்டினார்கள். சஞ்சய் தத் எனும் சினிமா நடிகர். (சமீபத்தில் மரணமடைந்த காங்கிரஸ் எம்.பி சுனில் தத்தின் மகன்; சுனில் தத்தின் இடத்தில் இப்பொழுது தேர்தலில் ஜெயித்திருக்கும் பிரியா தத்தின் சகோதரர்.) ஹனீஃப் காடாவாலா, சமீர் ஹிங்கோரா எனும் சினிமா தயாரிப்பாளர்கள்.
ஜெயிலிலிருந்து பெயிலில் வெளியே வந்த சிலரை திடீரென தேசபக்தரான இந்து தாதா சோட்டா ராஜன் போட்டுத்தள்ளினார். இதனால் வெகுண்ட தாவூதின் மற்றொரு கையான சோட்டா ஷகீல் ராஜனை தாய்லாந்தில் கொலை செய்ய முயற்சி செய்தார். அதில் மூன்று புல்லெட்டுகள் துளைத்தும் தப்பித்த ராஜன் தாய்லாந்து ஆஸ்பத்திரியில் இருந்து காவல்துறை கண்ணுக்கு மண்ணைத் தூவி, இப்பொழுது ஐரோப்பாவில் எங்கோ இருப்பதாகக் கேள்வி. தனக்கு மட்டும் இந்திய அரசு உதவி செய்தால் தாவூத் இப்ராஹிமைத் தன்னால் ஒழித்துக்கட்டமுடியும் என்று ராஜன் அவ்வப்போது ஊடகங்களுக்குப் பேட்டி தந்த வண்ணம் இருக்கிறார்.
நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்துகொண்டிருக்கின்றன. தீவிரவாதிகள் சிலருடன் அவர்களது சொந்தக்காரர்கள், ஒரு பாவமும் செய்யாத சில அப்பாவிகள் என்று பலரும் சேர்ந்தே மாட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு நியாயம் எப்பொழுது கிடைக்குமோ தெரியாது.
மும்பை தொடர் குண்டுவெடிப்புகளைப் பற்றி அருமையான ஓர் ஆவணத்தை எழுதியுள்ளார் மிட் டே பத்திரிக்கையாளரான ஹுசைன் ஸைதி (Hussain Zaidi).
Black Friday: The True Story of the Bombay Bomb Blasts, S. Hussain Zaidi, 2002, Penguin, 304 pages, Rs. 325 (
Fabmall)
ஒரு தீவிரவாதச் செயல் எப்படித் திட்டமிடப்பட்டது, யார் யாரெல்லாம் பங்கெடுத்தார்கள், யார் யாரெல்லாம் துணைபுரிந்தார்கள், துப்பு துலக்கியது யார், எப்படி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர், 2002-ல் புத்தகம் அச்சாகும்போது அந்த வழக்கின் நிலை என்ன என்ற பலவும் மிக எளிமையான, புரியக்கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது. அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு சினிமாவும் எடுக்கப்பட்டது. ஆனால் தடா வழக்கில் சிறையில் இருக்கும் பலரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்தப் படம் திரையிடப்படக்கூடாது என்றும் திரையிட்டால் தங்களுக்கு நீதி கிடைக்காது என்றும் வாதாடினார்கள். விளைவாக படம் தற்போது முடக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள நிதீஷ் குமார்
22 நவம்பர் 2005
அன்புள்ள நிதீஷ் குமார்,
பீஹாரின் அடுத்த முதல்வராகப் போகிறீர்கள். வாழ்த்துகள்.
உங்களது மாநிலம்தான் இந்தியாவிலேயே படு மோசமானது என்று உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அதற்கு யார் காரணம் என்று இப்பொழுது தோண்டுவது முக்கியமல்ல.
உங்கள் மாநிலத்தில் படிப்பறிவு (2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி) வெறும் 47% தான்! இந்தியாவிலேயே உங்கள் மாநிலத்தில்தான் படிப்பறிவு இவ்வளவு கீழாக உள்ளது. இன்னமும் மோசமாக, ஏழு மாவட்டங்களில் படிப்பறிவு 35% அளவே உள்ளது! மாவட்டம் மாவட்டமாக பள்ளிக்கூடங்களைக் கட்டி இலவசக் கல்விக்கு ஏற்பாடு செய்யுங்கள். தமிழகம் போன்ற மாநிலங்களில் நடப்பது போல இலவச பாடப் புத்தகங்கள், மதிய உணவு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யுங்கள். இதனால் நாளைக்கு உங்களுக்கு ஓட்டுகள் அதிகமாகக் கிடைக்குமா என்று தெரியாது. ஆனால் பத்து வருடங்கள் கழித்து பீஹார் கொஞ்சமாவது உருப்படியாகலாம்.
உங்கள் மாநிலத்தில் மொத்தமாக 83 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். ஒரு சதுர கிலோமீட்டருக்கு 881.3 பேர்கள். உத்தர பிரதேச மாநிலத்தில் உங்கள் மாநிலத்தை விட மக்கள் தொகை அதிகம் (166.2 மில்லியன்). ஆனால் அங்கும் கூட இடவசதிகளும் அதிகம். ஒரு சதுர கிலோமீட்டருக்கு 689.6 பேர்கள் மட்டும்தான். மேற்கு வங்கம் ஓரிடத்தில்தான் உங்கள் மாநிலத்தைவிட மக்கள் தொகை நெருக்கம் அதிகம் (சதுர கிலோமீட்டருக்கு 903.5 பேர்கள்). எனவே குடிநீர் வசதி, அடிப்படைச் சுகாதார வசதி ஆகிய அனைத்தையும் வழங்க மிகவும் சிரமப்படுவீர்கள். ஆனாலும் செய்துதான் ஆகவேண்டும். கடந்த 30 வருடங்களாக எந்த வளர்ச்சியையுமே காணாத மாநிலம் உங்களுடையது.
கடந்த பத்தாண்டுகளில் எந்த வளர்ச்சி இருக்கிறதோ இல்லையோ, மக்கள் தொகை வளர்ச்சியில் இந்தியாவிலே முதலிடத்தில் இருக்கிறீர்கள்! சில குட்டி வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீர் ஆகியவை தவிர்த்துப் பார்த்தால் 1991-2001 சமயத்தில் உங்கள் மாநிலத்தின் தொகை 28.4% அதிகரித்துள்ளது. இதே நேரத்தில் தமிழகத்தின் மக்கள் தொகை வளர்ச்சி 11.2%; கேரளாவின் மக்கள் தொகை வளர்ச்சி 9.4%. இதைக் கட்டுப்படுத்தினால்தான் உங்களால் ஓரளவுக்காவது அடிப்படை வசதிகளைச் செய்து தர முடியும். குடும்பத்துக்கு ஒரு குழந்தை, தவறினால் இரண்டு (கிராமப்புறங்களில்) என்று கடுமையான பிரசாரத்தை மேற்கொள்ளுங்கள். இதற்கு பெண்களுக்கு அடிப்படைக் கல்வி அவசியம். எனவே முறைசாராக் கல்வித் திட்டத்தின் மூலம் மணமான பெண்களுக்குக் கல்வி புகட்டுங்கள்.
உங்கள் மாநிலத்தில் சாலை வசதிகள் வெகு குறைவு. முக்கியமான சில ஊர்களைத் தவிர பிற இடங்களில் சரியான மருத்துவமனை வசதி இல்லை. NHAI சாலைகள் அமைக்கும் பணி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சரியாக நடந்தாலும் உங்கள் மாநிலத்தில் மட்டும்தான் படு மோசமாக உள்ளது. இதில் நடக்கும் ஊழல்களைக் கண்டுபிடித்த சத்யேந்திர துபேயை மாஃபியாவினர் கொன்றுவிட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமல்ல, மாநில நெடுஞ்சாலைகள், கிராமப்புற சாலைகள் அனைத்தும் அவசியம். அதற்கென மாநில அளவில் நிதி ஒதுக்கி, முடிந்த அளவு ஊழலைக் குறைத்து, சாலைகளைப் போடுங்கள்.
உங்கள் மாநிலத்தில் மூன்று ஆயுதம் தாங்கிய கும்பல்கள் உள்ளன. அவை அமைதியைக் குலைக்கின்றன. பெருநிலக்காரர்களின் சொந்தக் கூலிப்படையான ரன்வீர் சேனா, நக்சலைட்டுகளான CPI (ML), இது தவிர பல்வேறு விதமான லோக்கல் மாஃபியாக்கள். சென்ற வாரத்தில்தான் CPI (ML) தீவிரவாதிகள் ஜெயிலில் புகுந்து தம் தோழர்களை விடுவித்ததோடு மட்டுமல்லாமல் தம் எதிரிகளான ரன்வீர் சேனா ஆசாமிகளைக் கடத்திக்கொண்டு போனார்கள். இரு கோஷ்டிகளும் பழிக்குப் பழி என்று குதிக்கிறார்கள். இவர்களை எப்படி அடக்கப்போகிறீர்கள்? இதில் முதலில் அடக்கவேண்டியது ரன்வீர் சேனாவைத்தான் என்று நான் நினைக்கிறேன். அதனால் நக்சலைட்டுகளை விட்டுவிடுங்கள் என்று சொல்லவில்லை. அவர்களது கோபத்துக்கு அடிப்படைக் காரணங்கள் உண்டு. சிறிதாவது பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டால் அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் அவர்களுக்கு ஆதரவு குறையும்.
மாஃபியாக்களை ஒழிப்பது சுலபமல்ல. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தக் கும்பலைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். பிள்ளைகளைக் கடத்திப் பணம் பறிக்கும் கோஷ்டிகளைக் கண்ட இடத்திலே சுட உத்தரவு கொடுங்கள்.
இந்தியாவிலே உள்ள பெரிய மாநிலங்களில் உங்கள் மாநிலத்தில்தான் பொறியியல் கல்லூரிகள் மிகக்குறைவு. மொத்தமாகவே 11 பொறியியல் கல்லூரிகள்தான் உள்ளன! அதில் ஐந்து பாட்னாவில் மட்டும். 11-ல் ஒன்று பால்வளத்துறை பற்றியது. 83 மில்லியன் மக்கள்தொகை கொண்ட உங்கள் மாநிலத்துக்கு இந்த எண்ணிக்கை மிகக் குறைவு என்று நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். புதிதாகப் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க உங்கள் மாநில அரசுக்கு நிதி கையிருப்பு போதாது. எனவே தனியார் கல்லூரிகளை ஊக்குவியுங்கள். அத்துடன் அடுத்த ஐந்து வருடங்களில் வெளி மாநிலங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குங்கள்.
உங்கள் மாநிலத்தில் மாட்டுத்தீவனத்தில் ஊழல்கள் நடந்துகொண்டிருந்தபோது பிற மாநிலங்களில் கணினி, இணையம் என்று என்னென்னவோ நடந்துவிட்டது. தமிழகத்தில் ஒவ்வொரு சிற்றூரிலும்கூட இன்று இணைய வசதி உள்ளது. மொபைல் தொலைபேசி கேட்போருக்கெல்லாம் கிடைக்கிறது. உங்களால் என்ன செய்யமுடியுமோ அதனைச் செய்யுங்கள். ஆனால் இதையெல்லாவற்றையும்விட முக்கியமான ஒரு விஷயம் உள்ளது.
உங்கள் மாநிலத்தில்தான் இந்தியாவிலேயே மிகக்குறைவான தனிநபர் வருமானம் உள்ளது. இந்தியாவின் சராசரி வருமானத்தில் பாதிக்குக் குறைவாகவே பீஹாரில் உள்ள மக்களுக்குக் கிடைக்கிறது. இதனை ஒரு வருடத்திலோ, ஐந்து வருடத்திலோ சரிக்கட்ட முடியாது. இருபது வருடங்களாவது பிடிக்கும். உங்கள் மாநிலத்தில் நிறைய தொழிற்சாலைகள் வேண்டும். ஆனால் அதில் வேலை செய்ய ஆள்கள் கிடைக்க மாட்டார்கள். தனியார் யாரும் வந்து தொழிற்சாலைகளை நிறுவ மாட்டார்கள். எனவே கல்வியிலிருந்து ஆரம்பியுங்கள்.
நீங்கள் மிகவும் நேர்மையானவர் என்றும் சொந்தக்காரர்களுக்கு என்று சொத்து சேர்ப்பதில் ஈடுபடாதவர் என்றும் இன்று தொலைக்காட்சியில் காட்டினார்கள். உங்களது பெற்றோர்கள், சகோதரர்கள் சாதாரண வீட்டில் வசிப்பதைக் காட்டினார்கள். நீங்கள் நடுவண் அரசில் ரயில்வே மந்திரியாக இருந்திருக்கிறீர்கள். அப்பொழுதே ஊழல் வழியில் சொத்து சேர்க்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கும். செய்யவில்லை போல. உங்களது மந்திரி சபையில் இருக்கப்போகும் பிற மந்திரிகள் எப்படி இருப்பார்கள் என்று தெரியாது. ஊழலை முடிந்தவரை குறைத்து பொதுமக்களுக்கு வசதிகள் கிடைக்குமாறு செய்யுங்கள்.
நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். மீண்டும் என் வாழ்த்துகள்.
இப்படிக்கு,
பத்ரி சேஷாத்ரி
ஹைதராபாத், பெங்களூர் கிரிக்கெட் ஆட்டங்கள்
சென்னையில் இப்பொழுது மீண்டும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம். மழை கடுமையாக உள்ளது. நேற்றிரவு முதற்கொண்டே தெருவில் தண்ணீர் தேங்குமளவுக்கு மழை. இன்று சில பள்ளிகளுக்கு விடுமுறை.
நாளை இந்தியா - தென்னாப்பிரிக்கா மூன்றாவது கிரிக்கெட் ஒருநாள் போட்டி இருக்குமா என்பது சந்தேகமே.
முதல் இரண்டு ஆட்டங்கள் நடந்தபோதும் நான் ஊர்சுற்றும் வேலையில் இருந்துவிட்டேன். அதனால் இரண்டையும் சேர்த்து சுருக்கமாக இங்கே.
இலங்கையை 6-1 என்ற கணக்கில் ஜெயித்த இந்திய அணியும் தொடர்ந்து 19 ஒருநாள் போட்டிகளில் தோற்காமல் இருந்த தென்னாப்பிரிக்க அணியும் மோதும் ஆட்டம். இந்த ஆட்டத்தில் இந்தியா கவனமாக ஆடவேண்டும் என்ற நிலை. தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் இலங்கை வீச்சாளர்களை விட திறமை வாய்ந்தவர்கள். தென்னாப்பிரிக்க தடுப்பாளர்கள் உலகிலேயே மிகச்சிறந்த பந்து தடுப்பாளர்கள்.
இந்தியாவின் முன்னணி மட்டையாளர்கள் அனைவருமே ரன்கள் பெற்றிருந்தாலும் புதுப் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் கவனம் இருக்கவேண்டும். டாஸில் ஜெயித்த தென்னாப்பிரிக்கா அணித்தலைவர் க்ராம் ஸ்மித் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். ஷான் போலாக், மகாயா ந்டினி இருவருமே எடுத்த எடுப்பிலேயே இந்திய வீரர்களைத் திக்குமுக்காடச் செய்தனர். ஐந்து ரன்களுக்குள் முதல் மூன்று விக்கெட்டுகள் போயின. திராவிட் - நின்று விளையாட வேண்டியவர் - சற்றும் எதிர்பாராத விதமாக இறங்கி வந்து பந்தைத் தடுக்கு முயற்சி செய்து பந்தை முழுவதுமாக விட்டு ஸ்டம்பை இழந்தார். 'சூப்பர் சப்' கம்பீர் உள்ளே வந்து அதிகம் ரன் அடிக்காமல் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஆக 12வது ஓவரில் இந்தியா 35-5.
யுவராஜ் சிங்கும் இர்ஃபான் பதானும் ஜோடி சேர்ந்து மேற்கொண்டு விக்கெட் இழக்கமால் ரன்கள் சேர்த்தனர். ரன்கள் வேகமாக வரவில்லை. ஆனால் இந்தியர்களுக்கு வேறு வழியில்லை. நன்றாக விளையாடிக் கொண்டிருந்த பதான் ஆஃப் ஸ்பின்னர் போத்தாவின் பந்துவீச்சில் அவுட்டானபோது 46 ரன்கள் பெற்றிருந்தார். பதான் இந்தியாவின் முக்கியமான ஆல்ரவுண்டராக வருவார்.
யுவராஜும் தோனியும் சேர்ந்து சிறிது வேகமாக ரன்கள் சேர்த்தனர். தோனி தென்னாப்பிரிக்காவின் சிறப்பான பந்து தடுப்பால் ரன் அவுட் ஆனார். பந்துத் தடுப்பாளர்களை ஏமாற்றிவிட்டு ஒரு ரன் பெறுவது, பந்துகளை அவுட்ஃபீல்டில் அடித்துவிட்டு வேகமாக ஓடு இரண்டு ரன்கள் பெறுவது - இரண்டுமே தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சுலபமானதல்ல. ஒருவர் விடாமல் தென்னாப்பிரிக்காவின் பந்துத் தடுப்பாளர்கள் வேகமாக ஓடு பந்துகளை அழகாகத் தடுக்கிறார்கள். அதே கையுடன் பந்தைப் பொறுக்கி, விக்கெட் கீப்பருக்கு எறிகிறார்கள். பலமுறையும் ஸ்டம்பை நேராகக் குறிவைத்தே அடித்துத் தாக்குகிறார்கள். தோனிக்குப் பிறகு அகர்கர் யுவராஜுடன் ஜோடி சேர்ந்து ரன்கள் பெற்றார். இப்பொழுது ரன்கள் பெறும் வேகம் இன்னமும் அதிகமானது. ஆனாலும் 220ஐ இந்தியா எட்டுமா என்பதே சந்தேகமாக இருந்தது.
அகர்கர் அவுட்டானதும் ஹர்பஜன் வந்தார். இப்பொழுது யுவராஜ் வேகமாக அடித்து ரன்கள் சேர்த்தார். தன் சதத்தை எட்டுவதற்கு சற்று முன்னரே நொண்ட ஆரம்பித்தார். திராவிடுக்கு இதுபோன்ற தொல்லைகள் எப்பொழுதுமே உண்டு. உடலிலிருந்து வியர்வை அதிகமாக வெளியேறுவதாலும் தசைப்பிடிப்பு (cramps) அதிகமாவதாலும் வெகுநேரம் பேட்டிங் செய்யும்போது கஷ்டப்படுவார். ஆனால் யுவராஜ் போன்ற இளைஞர்கள் இந்த மாதிரி கஷ்டப்படுவது ஏனென்று புரியவில்லை. ஆனாலும் கொஞ்சம் சுதாரித்து சதத்தைப் பெற்றார். உடனேயே ரன் அவுட். 122 பந்துகளில் 103 ரன்கள் (10x4, 3x6). தென்னாப்பிரிக்காவின் ஆஃப் ஸ்பின்னர் ஜான் போத்தாவை மிகவும் எளிதாக விளையாடினார். வேகம் குறைவாகப் பந்துவீசும் லாங்கவெல்ட், நெல் ஆகியோரையும் பிரச்னையின்றி விளையாடினார்.
ஹர்பஜன் கடைசி ஓவர்களில் ந்டினியையும் நெல்லையும் அடித்து விளாசினார். கடைசி மூன்று ஓவர்களில் 16, 10, 12 என்று ரன்கள் வந்தன. ஹர்பஜன் 17 பந்துகளில் 37* (4x4, 2x6). ஒருவழியாக இந்தியாவின் எண்ணிக்கை ஐம்பது ஓவர்களில் 249/9 என்றானது.
காலையில் 35/5 என்று இருந்தபோது ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்று இருந்த நிலை மதியம் கணிசமாகவே மாறியிருந்தது. ஆனாலும் இந்த ஸ்கோர் போதுமானதில்லைதான்.
தென்னாப்பிரிக்காவின் ஸ்மித் ஆரம்பத்திலிருந்தே மிகவும் ஆவேசமாக விளையாடினார். எப்படியாவது பந்துவீச்சாளர்களை கதிகலங்கச் செய்யவேண்டும் என்று இருந்தது அவரது ஆட்டம். பதான் அவருக்குப் பந்து வீச நிறையத் தடுமாறினார். நல்ல வேளையாக மறுமுனையில் அகர்கர் இரண்டு விக்கெட்டுகளை விரைவாகப் பெற்றார். டி வில்லியர்ஸ் எல்.பி.டபிள்யூ. ஆண்டாங் ஆஃப் ஸ்டம்புக்கு மிக வெளியே செல்லும் பந்தை ஓங்கி வெட்டி அடித்தார். அதை ஸ்லிப்பில் நின்ற திராவிட் நன்றாகப் பிடித்தார். ஸ்மித், நன்றாக விளையாடிக் கொண்டிருந்தவர், ஆர்.பி.சிங்கின் பந்தை ஸ்டம்பை நோக்கி இழுத்து அவுட்டானார்.
இந்தியா காலையில் சூப்பர் சப் கம்பீரை பேட்டிங் செய்யக் கொண்டுவந்ததால் முரளி கார்த்திக்கினால் பந்து வீச முடியவில்லை. பதானும் மிகவும் மோசமாகப் பந்து வீசியதால் இந்தியா சேவாக், டெண்டுல்கர் ஆகியோரை நம்ப வேண்டியிருந்தது. ஆர்.பி.சிங் மிக நன்றாக வீசினார். ஹர்பஜனும் கடந்த ஒரு மாதமாக வீசிக்கொண்டிருப்பதைப் பல ரன்கள் எதையும் தராமல் அற்புதமாக வீசினார். ஜாக் கால்லிஸ், ஆஷ்வெல் பிரின்ஸ் இருவருமே மெதுவாக ரன்கள் சேர்த்தனர். அடுத்தடுத்து பிரின்ஸ், பவுஷர் இருவரும் அவுட்டானாலும் கால்லிஸ், கெம்ப் இருவரும் ஜோடி சேர்ந்து 49வது ஓவரில் இந்திய எண்ணிகையைத் தாண்டினர்.
இந்தியாவின் பேட்டிங் சுதாரித்துக்கொண்டாலும் பவுலிங் ஓரிரு மாற்று குறைவாகவே இருந்தது. அதனால் முதல் சுற்றில் வெற்றி தென்னாப்பிரிக்காவுக்கு.
இரண்டாவது ஆட்டத்தின் நிலைமை தலைகீழ். பெங்களூரில் திராவிட் டாஸ் ஜெயித்து முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். இது பகல்-இரவு ஆட்டம். இரண்டாவது இன்னிங்ஸில் பனி காரணமாக பந்துவீச்சாளர்கள் சிரமப்பட நேரிடும் என்பதால் டாஸ் ஜெயிப்பவர் முதலில் பந்துவீசுவார் என்பதே முன்னரே தீர்மானிக்கப்பட்டது.
இம்முறை பதான் எடுத்த எடுப்பிலேயே ஃபார்முக்கு வந்துவிட்டார். அடுத்தடுத்து தன் முதல் நான்கு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளைப் பெற்றார். முதல் ஓவரில் டி வில்லியர்ஸ் கால்திசையில் வந்த பந்தை ஸ்கொயர் லெக்கில் நின்ற ஹர்பஜன் சிங் கையில் கேட்சாக அடித்தார். பதானின் மூன்றாவது ஓவரில் ஸ்டம்புக்கு நேராக வந்த பந்தை கால் திசையில் தட்டி ஆட முயன்று பந்தைக் கோட்டை விட்டதில் ஸ்மித் எல்.பி.டபிள்யூ. பதானின் நான்காவது ஓவரில் எங்கோ ஆஃப் ஸ்டம்புக்கு வெகு வெளியில் சென்ற பந்தை ஜாக் கால்லிஸ் துரத்திச் சென்று தோனியிடம் கேட்ச் கொடுத்தார். தென்னாப்பிரிக்கா 20/3.
இந்தியாவின் பிற பந்துவீச்சாளர்கள் தென்னாப்பிரிக்காவின் கழுத்தை நெறிக்க ஆரம்பித்தனர். ரன்கள் எங்கிருந்து வரும் என்றே தெரியவில்லை. அகர்கர், பதான் இருவருமே ரன் அடிக்கும் பந்துகளை வீசவேயில்லை. ஆர்.பி.சிங்கின் பந்துவீச்சு சற்று சுமார்தான். எனவே திராவிட் ஸ்பின்னர்களை அழைத்தார். ஹர்பஜன் சிங் - இந்த சீசனின் இந்தியாவின் தலைசிறந்த பந்துவீச்சாளர் இவர்தான்! - இங்கும் ரன்கள் தரவில்லை. ஆடுகளம் ஸ்பின்னுக்கு சாதகமாக இருந்ததால் கார்த்திக் 10-4-16-0 என்ற அளவில் பந்துவீசியிருந்தார். இது போதுமே திராவிடுக்கு... மிச்ச ஓவர்களை சேவாக், யுவராஜ் ஆகியோரை வைத்து வீசவைத்தார். விக்கெட்டுகளும் சரமாரியாக விழுந்தன.
ஆண்ட்ரூ ஹால், ஆஷ்வெல் பிரின்ஸ் ஆகிய இருவரும்தான் 30ஐத் தாண்டினர். சேவாக், ஹர்பஜன் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளைப் பெற்றனர். யுவராஜ் சிங்குக்குக் கூட ஒரு விக்கெட் கிடைத்தது. கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் அகர்கர் ஒரு விக்கெட்டைப் பெற்றார். தென்னாப்பிரிக்காவால் ஐம்பது ஓவர்களில் 169/9 என்ற ஸ்கோரை மட்டுமே எடுக்க முடிந்தது.
உணவு இடைவேளைக்குப் பின் தென்னாப்பிரிக்கா மிக அற்புதமாகப் பந்துவீச்சைத் தொடங்கியது. சேவாகின் மோசமான ஃபார்மை மனதில் வைத்து கம்பீர் (சூப்பர் சப்), டெண்டுல்கரை தொடக்க ஆட்டக்காரர்களாக அனுப்பினார் திராவிட். முதல் மூன்று ஓவர்களில் ஒரு ரன்னும் இல்லை. அதில் கம்பீர் அவுட்டாகியிருக்க வேண்டும். ஒரு நிச்சயமான எல்.பி.டபிள்யூவை நடுவர் ஜெயப்பிரகாஷ் கொடுக்கவில்லை.
நான்காவது ஓவரில்தான் சில ரன்கள் கிடைத்தன. அதில் ஒன்று வானளாவ தர்ட்மேனில் கம்பீர் அடித்த நான்கு. எட்டு ஓவர்களில் இந்தியா 13/0. இது ஒன்றும் மோசமில்லை. பதினைந்து ஓவர்கள் அமைதியாக விளையாடினால் பின்னர் ரன்கள் தானாகக் கிடைக்கும். ஆனால் டெண்டுல்கர் போலாக்கை மிட் ஆன் மேல் அடிக்கப்போய் மட்டை திரும்பியதால் சரியாக அடிகக் முடியாமல் ராபின் பீட்டர்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து திராவிட் வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வந்தது இர்ஃபான் பதான். நிச்சயமாக பிஞ்ச் ஹிட்டராக இல்லை.
பதான் அமைதியாக விளையாட, மறுபுறம் கம்பீர் எல்லாப் பந்துகளையும் அடிக்கப்போனார். நிறைய பந்துகள் மட்டையில் மாட்டின. சில மாட்டவில்லை. ரன்கள் வந்துகொண்டிருந்தன.
போலாக், ந்டினி ஆகியோரின் மாற்றுப் பந்துவீச்சாளர்கள் அவ்வளவு சரியாக வீசவில்லை. ஆண்ட்ரே நெல் வாய் ஓயாமல் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கம்பீர் விடவில்லை. ஒரு முறை கம்பீர் நெல்லின் பந்தை அடிக்க, அது விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் தலைக்கு மேலாக எல்லைக்கோட்டுக்குச் சென்றது. நெல் கம்பீரிடம் அதைப்பற்றிப் பேச, கம்பீர் பதிலுக்குப் பேச, நடுவர்கள் இடையிடவேண்டியிருந்தது. இதனால் கம்பீருக்கு எந்த பாதிப்பும் இல்லை. நெல்லின் பந்துவீச்சுதான் மோசமாகப் போனது.
சிறிது சிறிதாக இந்தியாவின் ரன் ரேட் அதிகரித்தது. ஆனால் கம்பீரும் பதானும் தென்னாப்பிரிக்காவின் பந்துத் தடுப்பாளர்களைச் சரியாக எடைபோடவில்லை. பதான் பந்தை கவர் திசைக்குத் தள்ளிவிட்டு ஒரு ரன் எடுக்கப்போனார். ஓடிவந்த ஆண்டாங் பந்தை விக்கெட் கீப்பர் பவுஷரிடம் கொடுக்க கம்பீர் ரன் அவுட் ஆனார்.
நான்காவதாக உள்ளே வந்தவர் சேவாக். இவர் வரும்போது நெல்லும் போத்தாவும்தான் பந்து வீசிக்கொண்டிருந்தனர். இந்தப் பந்துகளை எதிர்கொள்வதில் சேவாகுக்கு எந்த சிரமமும் இல்லை. எளிதாக ரன்கள் பெற்றார். மீண்டும் ஒரு ரன் அவுட் வந்துதான் இந்த ஜோடியைப் பிரித்தது. சேவாக் பந்தை கால்திசையில் தட்டிவிட்டு ஓட, ஆண்டாங் மீண்டும் பந்தை எடுத்து ஸ்டம்பைத் தட்டி பதானை ரன் அவுட்டாக்கினார். பதானின் நெல்லின் பந்தில் நேராக லாங் ஆஃப் மீது அடித்த சிக்ஸ் நினைவில் நிற்கும்!
அடுத்து திராவிட் உள்ளே வந்தார். கொஞ்சம் off-colour. ஆனால் சேவாக் முழு ஃபார்மில்.
ஆண்டாங் பந்தில் திராவிட் ரிடர்ன் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஓர் ஓவர் கழிந்து அடுத்த ஆண்டாங் ஓவரில் சேவாகும் யுவராஜ் சிங்கும் மூன்று பவுண்டரிகளை அடித்து ஆட்டத்தை முடித்துவிட்டனர். சேவாக் 62 பந்துகளில் 77* (11x4).
முதல் ஆட்டத்தில் யுவராஜுக்கும், இரண்டாவது ஆட்டத்தில் பதானுக்கும் ஆட்ட நாயகன் விருதுகள். மூன்றாவது ஆட்டத்தின் நாயகன் மழைதான்!
முதல் ஆட்டம் ஸ்கோர்கார்ட் |
இரண்டாம் ஆட்டம் ஸ்கோர்கார்ட்