ஆக, வருடம் தாண்டத் தாண்ட நமது அன்னியச் செலாவணிக் கையிருப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்த அன்னியச் செலாவணி எல்லாமே அமெரிக்க டாலர்கள் கிடையாது. இதில் யூரோவும் உண்டு, ஜப்பானிய யென்னும் உண்டு, பிரிடிஷ் பவுண்டும் உண்டு, இன்னபிற கரன்சிகளும் உண்டு. ஆனால் அத்தனையையும் டாலர்களில் மாற்றிச் சொல்வார்கள்.
முதலில் இந்த அன்னியச் செலாவணி எப்படி நம் நாட்டுக்கு வருகிறது என்று பார்ப்போம்.
இப்படியாக வெளிநாட்டுப் பணம் நம் நாட்டில் மிக அதிகமாக வரத்தொடங்கியுள்ளது. இத்தனை பணமும் வெளிச்சந்தையில் இருந்தால், இதனால் ரூபாயின் மதிப்பு அதிகமாகத் தொடங்கும். அதாவது எக்சேஞ் ரேட் என்று சொல்லப்படும் டாலர்-ரூபாய் பணமாற்று விகிதம் குறையும். முன்னர் 1 டாலருக்கு 46 ரூபாய்கள் என்பது, டாலர்கள் மலிவாகக் கொட்டிக்கிடக்கையில், 1 டாலருக்கு 40 ரூபாய் என்றாகி விடும். ஏனெனில் டாலர்கள் இஷ்டத்திற்குக் கிடைக்கின்றன, அதனால் டாலர்கள் வாங்க குறைந்த ரூபாய்கள் கொடுத்தாலே போதுமானது என்றாகி விடும். இப்படி டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு அதிகமாக ஆரம்பித்தால் அதனால் பலருக்குக் கஷ்டம்.
எனவே ரிசர்வ் வங்கி இப்படி உபரியாகக் கிடைக்கும் டாலர்களை (இதர கரன்சிக்களையும்) வாங்குகிறது. இப்படி வாங்குவதன் மூலம் பணமாற்று விகிதத்தை ஒரு கட்டுக்குள் வைக்கிறது. டாலர்-ரூபாய் பணமாற்று விகிதம் 2000-2004 காலகட்டத்தில் 43.4 - 49.0 என்ற கீழ்மட்ட-மேல்மட்ட வரம்புக்குள் இருந்துள்ளது. ஒருசில மோசமான நேரங்களைத் தவிர பெரும்பாலும் 45-47க்குள் தான் இருந்து வருகிறது. டாலர் மதிப்பு அதிகமாகும்போது ரிசர்வ் வங்கி தன் கையிருப்பில் உள்ள டாலர்களை விற்று அதைக் குறைக்கும். [இல்லாவிட்டால் இறக்குமதிக்குக் கஷ்டம்.] டாலர் மதிப்பு குறையத் தொடங்கினால் ரிசர்வ் வங்கி மேலும் டாலர்களை அதிகமாக வாங்கும். [இல்லாவிட்டால் ஏற்றுமதிக்குக் கஷ்டம்.]
ஆனால் பணமாற்று விகிதத்தை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிப்பதால், ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு அதிகமாகிக் போய் விட்டது.
கடந்த இரண்டாண்டுகளில் ரிசர்வ் வங்கியும் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. சில வெளிநாட்டுக் கடன்களை முன்னதாகவே இந்திய அரசு அடைப்பதற்கு உதவியது. இந்தியர்கள் விரும்பினால் வேண்டிய அளவிற்கு அன்னியச் செலாவணியைப் பெற்றுக்கொண்டு உலகம் சுற்றலாம் என்று அனுமதித்தது. தனியார்கள் $25,000 அளவிற்கு வெளிநாடுகளில் சொத்து வாங்க அனுமதித்தது. இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் பிற நிறுவனங்களை வாங்க இருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. முன்னர் அணு ஆயுதச் சோதனை செய்தபோது அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியா மீது தொழில்ரீதியாக முற்றுகையிட்டன. அப்பொழுது டாலர்கள் அதிகமாக வேண்டும் என்ற காரணங்களுக்காக இந்தியா ரிசர்ஜண்ட் இந்தியா பாண்டு என்று கடன்பத்திரங்கள் வெளியிட்டு, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலம் நிறைய டாலர்களைத் திரட்டியது. அந்த டாலர்களுக்கு அதிக வட்டி தருவேன் என்று ஆசை காட்டியது.
ஆனால் இப்பொழுது 'இனியும் டாலர்கள் தேவையில்லை' என்ற நிலை வந்தவுடன் என்.ஆர்.ஐக்கள் வங்கிகளில் போட்டிருக்கும் டாலர்/பவுண்டு வைப்பு நிதிகளுக்குக் கொடுக்கும் வட்டியின் மீது வரி விதிப்பேன் என்கிறது. இதனால் கூட இந்தியாவுக்கு வரும் டாலர்கள்/அன்னியச் செலாவணி குறைகிறதில்லை.
இந்த அன்னியச் செலாவணியை வைத்துக்கொண்டு என்ன செய்வது? இப்படியொரு கேள்வி இரண்டாண்டுகளுக்கு முன்னேயே எழுந்தது! அப்பொழுது நம்மிடம் வெறும் 60 பில்லியன் டாலர்கள்தான் இருந்தன. இப்பொழுதோ, அது இரண்டு மடங்காகி, 120 பில்லியன் டாலர்கள் ஆகிவிட்டது.
மேற்படி பணம், சும்மா இருந்தால் அதிகபட்சமாக 2-3% தான் சம்பாதிக்கிறது. அதில் ஒரு பகுதியை வைத்து உருப்படியாக வேறு ஏதாவது செய்யமுடியுமா?
அன்னியச் செலாவணிக் கையிருப்பை நாட்டின் உள்கட்டுமானத்திற்குப் பயன்படுத்த உகந்தாற்போன்ற ஒரு திட்டத்தைப் பற்றி அரசு யோசிக்கத் தொடங்கியுள்ளது என்பதை சென்ற வாரம் வெளியான சில செய்திகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அஹுலுவாலியா, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இந்தத் திட்டத்தைப் பற்றிப் பேசியுள்ளார். அதன்படி கிட்டத்தட்ட 20-30 பில்லியன் டாலர் அளவிற்கான பணத்தை நாட்டின் கட்டுமானத்தை விரிவுபடுத்த உபயோகப்படுத்துவார்கள் என்று தெரிகிறது.
அந்தத் திட்டத்தின் வரைவு இதோ:
ஆனால் முக்கியமானது - இந்தப் பணத்தை உள்நாட்டில் சொத்தாக மாற்றலாமே தவிர, இந்திய ரூபாய்களாக மாற்றி இந்தியாவிற்குள் மட்டும் செலவழிக்கவே கூடாது! செய்தால் பணவீக்கம் அதிகமாகி, விலைவாசி ஏறி, பொதுமக்கள் கஷ்டப்பட நேரிடும்!
இப்படிச் செய்வதனால் இந்தியாவின் உள்கட்டுமானம் விரிவடைந்து, அதன் பலனாக இந்தியாவின் பொருளாதாரம் விரிவடையும். பொதுமக்களின் வசதிகளும் அதிகமாகும்.
இது நடக்குமா என்று பார்ப்போம்.