எண்ணங்கள்
  சென்னைக்கு மெட்ரோ ரயில் எப்பொழுது வரும்?

மெட்ரோ ரயிலா, இல்லை மோனோ ரயிலா என்ற கேள்வி ஜெயலலிதா காலத்தில் எழுந்தது. இப்பொழுது ஜெயலலிதா அகன்றதும் மோனோ ரயில் இழுத்து மூடப்படும் என்று தெரிகிறது. அரசியலுக்கு அப்பால் தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தை வடிவமைத்து உருவாக்கிய ஸ்ரீதரனும் சென்னை மோனோ ரயில் திட்டம் சரியானதல்ல என்று சொல்லியிருக்கிறார். எனவே தில்லி முறையில் மெட்ரோ ரயில்தான் சென்னைக்கும் தீர்வாக அமையும் என்று முடிவு செய்து கொள்ளலாம்.

இன்று மஹாராஷ்டிரா அரசு மும்பை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த ரிலையன்ஸ் எனெர்ஜி நிறுவனத்தைப் பங்காளியாக சேர்த்துக்கொண்டுள்ளது. 146.5 கிலோமீட்டர் பாதை, கட்டுமானம் ஆகியவற்றை உருவாக்க ரூ. 19,500 கோடிகள் ஆகும் என்றும் டிசம்பர் 2009 முதல் பயணிகள் இந்தப் பாதையைப் பயன்படுத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

சென்னையும் உடனடியாக இதே வழியில் இறங்கினால் 2010-ல் உபயோகத்துக்கு வரலாம். கருணாநிதி அரசு இதுபோன்ற திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த விழையவேண்டும்.

 

  இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு தொடர்பாக என்னை நானே கேட்டுக்கொண்ட சில கேள்விகளும் எனக்குத் தோன்றிய சில பதில்களும். இந்தக் கேள்விகளுக்கான சில பதில்கள் நிச்சயமாக முழுமையாக இல்லை. என் நிலை வேறுபடும்போது, அல்லது புரிதல் அதிகமாகும்போது அவற்றைப் பற்றி எழுதுகிறேன்.

1. அரசினால் நடத்தப்படும் உயர் கல்விக்கூடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அவசியமா?

பதில்: ஆம். சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்ய இட ஒதுக்கீடு அவசியம். அரசினால் ஏற்படுத்தப்பட்டு, கல்வியிலும் ஆராய்ச்சியிலும் சிறந்து விளங்குவதாக அறியப்படும் கல்விச்சாலைகளில் அனைத்து சமூக மக்களும் படிப்பதற்கான வழிகளை ஏற்படுத்தித் தருவது மிக அவசியம். இதன்மூலம் மட்டும்தான் social capital வளர்ச்சி அடையும். இந்த social capital இந்தியாவைப் பொருத்தவரை மக்கள் தொகைக்கு நிகரான அளவு இல்லை. இதற்குக் காரணம் பல சமூக மக்களுக்கு உயர் கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றில் இடங்கள் கிடைப்பதில்லை. இதனால் தனிப்பட்ட சில சமூகங்களுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே கெடுதல். நாம் நினைத்த அளவு வேகமாக நம்மால் முன்னேற முடியாது. பிறபடுத்தப்பட்டோரின் நலம் என்பது அவரவர்களுடைய கவலை மட்டுமல்ல, நாட்டின் மொத்தக் கவலை.

2. மெரிட் மூலம் ஒரு கல்விக்கூடத்துக்கு மாணவர்களைச் சேர்க்காமல் இட ஒதுக்கீட்டினால் மாணவர்களைச் சேர்ப்பது சரியா?

பதில்: ஒரு கல்விக்கூடத்தில் குறிப்பிட்ட இடங்கள்தான் (2000 என்று வைத்துக்கொள்வோம்) உள்ளன என்ற நிலையில் அந்த இடங்களை ஒரு நுழைவுத்தேர்வின்மூலம் தீர்மானித்து அந்தத் தேர்வில் முதல் 2000 இடங்களில் இருப்போர் மட்டுமே அந்தக் கல்விக்கூடத்துக்குள் நுழைய முடியும் என்று தீர்மானிப்பதே சரியான செயல் என்று சிலர் வாதிக்கிறார்கள். இதனால் 2001 முதல் 10,000 வரையிலான இடத்தில் இருப்பவர்கள் தகுதியற்றவர்கள் என்று ஆகிவிடாது. தேர்வு நடந்த நாளன்று இருக்கும் மனநிலை, தேர்வுச்சூழல் உருவாக்கும் பதற்றம் ஆகிய பல காரணங்களால் சிலர் ஓரிரு தவறுகளை அதிகமாகச் செய்வதும், சிலர் குருட்டாம்போக்கில் சில கேள்விகளுக்கு பதில் கொடுக்க அதனால் அதிக மதிப்பெண்களைப் பெறுவதும் நிகழ்வதுதான். இந்த "மெரிட்" எனப்படும் முறை மட்டும்தான் ஒரு கல்விக்கூடத்தில் மாணவர்களைச் சேர்க்க சரியான முறையா?

இல்லை. ஒரு படிப்பைப் படிக்க விரும்பும் aptitude, அந்தப் படிப்பைத் திறம்படப் படித்து முடிக்கத் தேவையான குறைந்தபட்சத் திறமை - இந்த இரண்டே போதும். அப்படிப்பட்ட நிலையில் மேலிருந்து கீழாகத்தான் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு கல்வி நிலையம் நினைக்கவேண்டியதில்லை. பிற காரணங்கள் இருக்கலாம்; இருக்க வேண்டும். சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சமன்படுத்துவது மிக முக்கியமான ஒரு காரணம். வெறும் படிப்பை மட்டும் கருத்தில் கொள்ளாது, விளையாட்டுத் திறன், செயலாற்றும் திறன் கொண்ட மாணவர்களைச் சேர்ப்பது, (ஆண்-பெண்) பால் சமன்பாடு , சமூகச் சமன்பாடு, கிராம-நகரச் சமன்பாடு, பொருளாதாரப் பின்னணிச் சமன்பாடு, மதச் சமன்பாடு போன்ற பலவற்றை ஒரு கல்வி நிலையம் விரும்பி வரவேற்றுச் செயல்படுத்தவேண்டும். இதன்மூலமாகத்தான் பல கருத்துகள் ஒரே இடத்தில் பரவி, socially well rounded மாணவர்களை உருவாக்க முடியும்.

அனைத்து மக்களும் எல்லா நலன்களையும் பெறவேண்டும் என்ற கருத்து அரசுக்கு இருக்கவேண்டும்.

3. இட ஒதுக்கீட்டினால் தரம் குறையாதா?

பதில்: இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் வரும்போதெல்லாம் தரம் குறையும் என்றொரு சாக்கு சொல்லப்படுகிறது. தரம் என்பதை ஒரு பாடத்திட்டத்தின் மீதான தேர்வு நிர்ணயிக்கும் என்று எடுத்துக்கொண்டாலும்கூட இட ஒதுக்கீட்டினால் உள்ளே வந்த மாணவர்களும் அதே தேர்வை எழுதித்தான் வெற்றி பெறுகின்றனர். இட ஒதுக்கீடு என்பது தேர்வு முறையிலோ கற்பித்தல் முறையிலோ மாற்றத்தைக் கொண்டுவருவதில்லை. கொண்டுவரக்கூடாது.

இட ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசும்போது பலரும் மருத்துவர்களை உதாரணம் காட்டிப் பேசுகிறார்கள். "உனக்கு உடம்புக்கு வந்தால் நீ இட ஒதுக்கீட்டில் வந்த டாக்டரிடம் போவாயா, அல்லது மிகச்சிறந்த மருத்துவரிடம் போவாயா" என்று கேட்கிறார்கள். யாருக்கு உடம்புக்கு வந்தாலும் உடனே ஏதோ ஒரு டாக்டரிடம் போகிறார்கள். அந்த டாக்டரைத் தேர்வு செய்யும்போது அவர் அகில இந்தியாவிலும் சிறந்த டாக்டரா என்று யாரும் பார்ப்பதில்லை. அந்த டாக்டர் நம் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிறாரா? எவ்வளவு கட்டணம் வசூலிப்பார் - நம்மால் தாக்குப் பிடிக்க முடியுமா? நாம் போகும் நேரத்தில் அவர் மருத்துவமனையில் இருப்பாரா? இவற்றை மட்டும்தான் நாம் பார்க்கிறோம். மருத்துவர்களை அழைத்து அவர்கள் எத்தனை மார்க்குகள் வாங்கினர், நுழைவுத்தேர்வில் எந்த இடத்தில் இருந்தனர் என்றெல்லாம் பார்ப்பதில்லை.

இட ஒதுக்கீட்டு முறையில் டாக்டரானவர் மோசமான டாக்டர் என்றும், சிறந்த டாக்டர் நிச்சயமாக பொதுப்போட்டியில் வந்தவரென்றும் ஒருவர் நினைக்கிறார் என்றால் அது அவரது மோசமான மனநிலையைக் காண்பிக்கிறது. இட ஒதுக்கீட்டின் நோக்கம் குறைந்த தகுதியில் ஒருவரை நாட்டில் கட்டவிழ்த்துவிடுவது அல்ல. 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றிபெறும் ஏழு லட்சம் மாணவர்களின் ஒரு லட்சம் மாணவர்களை மருத்துவப் படிப்பு படிக்க வைக்க முடியும். ஆனால் 2,000 இடங்கள்தான் உள்ளன என்றால் இந்த ஒரு லட்சத்தில் எந்த 2,000 பேரையும் மருத்துவர்களாக்கலாம். அதனால் எந்தக் குறையும் ஏற்படாது.

4. இட ஒதுக்கீடு சலுகையா அல்லது உரிமையா?

பதில்: மிலிடண்ட் சமூக நீதிக்காரர்கள் இட ஒதுக்கீட்டை உரிமை என்கிறார்கள். இது எனக்கு ஏற்புடையதல்ல. இட ஒதுக்கீடு என்பது சலுகைதான். ஆனால் இந்தச் சலுகை இப்பொழுதைக்கு அவசியம். நம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனி மனிதர்களுக்கு என்று சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. தனி மனிதர்கள் அனைவருக்கும் பொதுவாக வழங்கப்படுபவனதான் உரிமைகள். ஒரு குறிப்பிட்ட சமுதாயம், தொழில்துறை, நிலப்பகுதி ஆகியோருக்கு மட்டும் வழங்கப்படுவது சலுகைதான். உரிமை அல்ல.

ஆனால் சலுகை என்பதாலேயே அது இருக்கக்கூடாது என்று யாரும் சொல்லமுடியாது. விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள் என்பதால் அவர்களுக்குக் கொடுத்த கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. சலுகையாக. அதையே அவர்கள் உரிமை கொண்டாடினால் என்ன ஆகும்? சலுகை என்பது தாற்காலிகமானது. அது எவ்வளவு வருடங்கள், எவ்வளவு தலைமுறைகள் என்பதை வெவ்வேறு காலகட்டத்தில் முடிவு செய்யவேண்டும்.

சலுகைகள் கொடுக்கப்படும்போதே எந்நிலையில் சலுகைகள் கொடுப்பது நிறுத்தப்படும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்பது அவசியமல்ல. ஆனால் ஒரு காலத்தில் சலுகைகள் கொடுப்பது நிறுத்தப்படவேண்டும் என்ற எண்ணம் இருக்கவேண்டியது அவசியம்.

5. இட ஒதுக்கீடு என்பது தனி மனிதர்களின் உரிமையை பாதிக்கிறதா?

பதில்: இட ஒதுக்கீடு தனி மனிதர்களின் உரிமையை பாதிப்பதில்லை. ஆனால் சிலரது விருப்பங்களை பாதிக்கிறது. அவர்களது கனவுகளை பாதிக்கிறது. ஆனால் ஓர் அரசால் எல்லாத் தனி மனிதர்களின் விருப்பங்களையும் பூர்த்தி செய்யமுடியாது. எனவே தத்தம் விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்ள தனி மனிதர்கள் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளவேண்டும். இன்று பல முற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்க ரஷ்யா, சீனா போன்ற பல நாடுகளுக்குச் செல்கிறார்கள்.

அரசின்மீது ஒரு குற்றத்தை இந்த மாணவர்கள் நியாயமாகச் சுமத்தலாம். சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் பெருத்த மக்கள் தொகையைக் கொண்டிருந்தாலும் வேண்டிய அளவுக்கு மருத்துவக் கல்லூரிகளையும் பிற கல்லூரிகளையும் கட்டியுள்ளன. இந்தியா அவ்வாறு செய்யவில்லை. தனியாரையும் ஊக்கப்படுத்துவதில்லை. ஆனால் இந்தக் குறைகளை மட்டுமே காரணம் காட்டி இட ஒதுக்கீட்டின் நியாயத்தை மறுக்க முடியாது.

இந்திய அரசு தானும் உயர்கல்விக்கூடங்களை அதிகமாக ஏற்படுத்தவேண்டும்; தனியாரையும் தரமான உயர்கல்விக்கூடங்களைக் கட்ட ஊக்குவிக்கவேண்டும்.

6. அரசு உதவிபெறாத தனியார் கல்விக்கூடங்களில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவேண்டுமா?

பதில்: செய்யவேண்டும். தவறில்லை. இத்தகைய இட ஒதுக்கீட்டினால் இந்தத் தனியார் கல்விக்கூடங்கள் தம் வருமானத்தை இழக்கப்போவதில்லை. யாரை மாணவர்களாகச் சேர்த்தாலும் குறிப்பிட்ட கட்டணத்தை அவர்கள் கட்டினால் கல்விக்கூடத்துக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் இட ஒதுக்கீட்டில் இடங்கள் நிரப்பப்படவில்லை என்றால் அந்த இடங்களை பிற மாணவர்களைக்கொண்டு நிரப்பலாம் என்ற உரிமையை இந்தக் கல்விக்கூடங்களுக்குத் தரவேண்டும்.

7. தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவேண்டுமா?

பதில்: இதற்கு 'unconditional ஆம்' என்ற பதிலைச் சொல்லமுடியாது. கல்விக்கூடங்களில் அல்லது அரசு நிறுவனங்களில் செய்வது போலல்லாமல் தனியார் நிறுவனங்கள் வேலை தடைபடுவதுபோல எதையும் சட்டமாகக் கொண்டுவரக்கூடாது. அவ்வாறு செய்வது தனியார் நிறுவனங்களின் உரிமையை மீறுவதாகும். தனியார் நிறுவனங்கள் discrimination செய்யக்கூடாது என்பதைச் சட்டமாக்கலாம். அதாவது தகுதி படைத்த பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை கொடுக்கமாட்டேன் என்று சொல்வது குற்றமாக்கப்படவேண்டும். ஆனால் வேலைக்குச் சேர்பவர்களில் இத்தனை சதவிகிதம் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்று திணிக்கக் கூடாது.

இட ஒதுக்கீடு என்பது தகுதிக்குறைவை ஏற்படுத்தும், அதனால் தனியார் நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்படும் என்ற எண்ணத்தால் நான் இதனைச் சொல்லவில்லை. ஆனால் அசீம் பிரேம்ஜி, கபில் சிபால் ஆகியோர் பேச்சுகளில் இந்தத் தொனிதான் உள்ளது.

லாப நோக்குள்ள நிறுவனங்கள் அனைத்துமே தமது லாபத்தை அதிகப்படுத்த, (சட்டத்தின் வழியில்) என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்வார்கள். இன்றைய சந்தைப்பொருளாதாரச் சூழ்நிலையில் நிறுவனங்களுக்கு வேகம் முக்கியம். கண்ணில்படும் தகுதியான முதல் ஆளை வேலைக்கு எடுத்துக்கொண்டு வேலையை உடனடியாகச் செய்துமுடிக்கவே அவர்கள் விரும்புவார்கள். நான் இதற்குமுன் வேலைசெய்த நிறுவனத்திலும் சரி, இப்பொழுது வேலை செய்யும் நிறுவனத்திலும் சரி, வேலைக்கு ஆள் வேண்டுமென்றால் அலுவலகத்தில் உள்ள பிறரிடம் யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று கேட்போம். அதற்கடுத்து ஏதாவது மனிதவள நிறுவனத்திடம் தகுதிபடைத்தவர்களை அனுப்பச் சொல்லிக் கேட்போம். இந்த இரண்டு முறையிலுமே சாதி, மதம் என்று எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை. நமது எதிர்பார்ப்புக்கு அருகில் வரும் முதல் ஆளைத் தேர்ந்தெடுப்போம். அவ்வளவே.

எல்லா சமூகத்தினருக்கும் தேவையான படிப்புப் பின்னணி இருக்கும்போது வேலை பார்க்கும் இடத்திலும் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பலாம். அவ்வாறு நடக்காமல் சிலரை வேண்டுமென்றே ஒதுக்குகிறார்கள் என்று தெரியவந்தால் அதனைச் சட்டபூர்வமாக எதிர்கொள்ளத் தகுந்தவாறு சட்டங்கள் கொண்டுவரலாம்.

அத்துடன் சமூக நீதிக்கு என்று அதிகமாகத் துணைபுரிய தனியார் நிறுவனங்கள் வந்தால் அவற்றை ஊக்குவிக்க அரசு முனையலாம்.

தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை சட்டபூர்வமாகத் திணிக்க முயல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

8. பிற்படுத்தப்பட்டோருள் Creamy layer என்று முடிவுசெய்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது எனலாமா?

பதில்: சமூகத்தின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட சலுகையை தமக்குள்ளாக எவ்வாறு பிரித்துக்கொள்வது என்று பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே முடிவு செய்ய வேண்டும். முற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இதனை வேண்டுவதை பிற்படுத்தப்பட்டோர் தவறாக எடுத்துக்கொள்ள நேரிடலாம்.

ஒருமுறை இட ஒதுக்கீட்டைப் பெற்றால் போதுமா, அல்லது இரண்டு அல்லது மூன்று தலைமுறைகள்வரை அது தொடர்ந்தபின்னர் அந்தக் குடும்பம் creamy layer என்ற வரையறைக்குள் வருமா? Creamy layer-இல் ஒருவர் உள்ளார் என்பதைக் கண்காணிக்க National database ஒன்றை உருவாக்க வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கான பதில் பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்களிடமிருந்து வந்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் creamy layer என்று இல்லாவிட்டால் அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது பிற பிற்படுத்தப்பட்டோர்தான்.

9. இட ஒதுக்கீடு 50%க்கு உட்பட்டுதான் இருக்கவேண்டுமா? அதற்கு மேலே ஏன் செல்லக்கூடாது?

பதில்: இட ஒதுக்கீடு என்பதை ஏற்றுக்கொண்டபிறகு ஏன் 50%-ல் நிற்கவேண்டும்? 60%? 70%?

ஒரு சிலர் ஒவ்வொரு சமூகத்தினரும் மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதம் இருக்கிறார்கள் என்று பார்த்து அதற்கேற்றவாறு அவரவர்களுக்கு இத்தனை என்று ஒதுக்கிவிடலாமே என்கிறார்கள். இது ஏற்கத்தக்கதல்ல. இது BC, MBC, SC, ST என்று மட்டும் நிற்காமல் மேற்கொண்டு பிரிவுகளை ஏற்படுத்திக்கொண்டே போக வழி செய்யும். ஏனெனில் ஒவ்வொரு சமூகத்திலும் அதிலுள்ள உட்பிரிவுகள் தங்களுக்கான இடங்கள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று நினைப்பார்கள். அதன் வெளிப்பாடுதான் தமிழகத்தில் MBC உருவானது.

50% என்பது ஓர் arbitrary position. இது 60% ஆக இருந்திருக்கலாம், அல்லது 45% ஆகவும் இருந்திருக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவாக வைத்திருப்பதன் நோக்கம் பொதுப்போட்டிக்கான களம் எப்பொழுதும் இருக்கும், அது முடிவில் 100% ஆகும் என்பதை முன்வைக்கவே. 50%க்கு மேலாக இட ஒதுக்கீடு என்றால் கண்ணில் இட ஒதுக்கீடு மட்டும்தான் தெரியும். அது இட ஒதுக்கீட்டை முழுமையான ஒரு தீர்வாகவும் எப்பொழுதும் நிரந்தரமாக இருக்கும் ஒரு தீர்வாகவும் காட்டும்.

அது அப்படிப்பட்ட தீர்வு என்று எனக்குத் தோன்றவில்லை.

10. முற்படுத்தப்பட்ட சமூகத்தில் உள்ள ஏழைகளுக்கு என்று தனி இட ஒதுக்கீடு வேண்டுமா?

பதில்: தேவையில்லை. இட ஒதுக்கீடு என்பது பொருளாதார நிலை சார்ந்ததல்ல. இன்றைய சந்தைப் பொருளாதாரச் சூழ்நிலையில் படிப்புக்குக் கடன் கொடுக்க பல வங்கிகள் முன்வருகின்றன. நல்ல கல்விக்கூடத்தில் இடம் கிடைக்கும் என்றால் அதற்கு ஆகும் செலவை இன்று ஒருவரால் கடனாகப் பெற முடியும்.

இட ஒதுக்கீட்டின் நோக்கம் ஜாதிகளுக்கு இடையேயான சமன்பாட்டைக் கொண்டுவருவதுதானே ஒழிய, பொருளாதார நிலையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சமன் செய்வதல்ல. புதிதாக ஏற்படும் வேலை வாய்ப்புகளும் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழ்நிலையும் ஏழைகளின் நிலையை நிச்சயமாக மேலே தூக்கும்.

======

பிற பதிவுகள்:

சுந்தரமூர்த்தி: முதல் தலைமுறையில் படித்து வந்த OBC நண்பர்கள் கவனத்திற்கு
அருள் செல்வன்: இட ஒதுக்கீடு - இன்று
ரவி ஸ்ரீனிவாஸ்: இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் சரியானதுதானா? | இட ஒதுக்கீடு - 2

 

  மேலவையின் தேவை?

ஒவ்வோர் ஆட்சி மாற்றத்தின்போதும் மேலவை வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதம் வருகிறது. எம்ஜிஆர் மேலவையை இழுத்து மூடியதிலிருந்து என்னவெல்லாம் நடந்துள்ளன என்று தினமணி விவரிக்கிறது. கருணாநிதியின் கடந்த இரண்டு ஆட்சியிலும் மேலவையைக் கொண்டுவரச் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

ஆனால் இம்முறை மேலவையை உருவாக்கத் தேவையான் அரசியல் வலு திமுகவுக்கு மாநிலத்திலும் உண்டு, மத்தியிலும் உண்டு.

அப்படி உருவாக்கப்படும் மேலவை என்ன சாதிக்கும்? அதற்கு என்று தனியாக என்ன சிறப்பு அதிகாரங்கள் கொடுக்கப்படும்?

நாடாளுமன்றத்தை எடுத்துக்கொண்டால், மாநிலங்களவையால் மக்களவை கொண்டுவரும் மசோதாக்களைத் திருப்பி அனுப்ப முடியும். அதை மக்களவை ஏற்காவிட்டால், இரு அவைகளையும் ஒன்றாக அமர்த்தி வாக்கெடுப்பு நடத்தி தான் விரும்பியதை சாதிக்கமுடியும். மேலும் நிதி தொடர்பான சட்டங்களை மாநிலங்களவையால் தடுக்க முடியாது. மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது சட்டமாகிவிடும்.

மாநிலங்கள் அவையில் இருப்பது அதிக பட்சமாக 250 உறுப்பினர்கள். மக்களவையில் இருப்பதோ 545 இடங்கள். அதனால் இரு அவைகளும் சேர்ந்து அமரும்போது மக்களவை நினைப்பதுதான் நடந்தேறும். இப்படிப்பட்ட நிலையில் மாநிலங்களவை என்று ஒன்று தேவையா என்றுகூடக் கேட்கலாம். தேர்தலில் நிற்க விரும்பாத ஆனால் பதவி வகிக்க ஆசைப்படுபவர்கள்; கட்சிக்கு விசுவாசமாக நடந்துகொள்ளும் சில அனுதாபிகள்; தேர்தலில் தோற்ற ஆனால் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டே ஆகவேண்டியவர்கள் போன்றவர்களுக்காக மட்டும்தான் மாநிலங்களவை பயன்படுகிறது. நியமன உறுப்பினர்களால் மாநிலங்கள் அவையில் நிறைய நல்ல விவாதங்கள் நடக்கும் என்பதும் கட்டுக்கதைதான். முதலில் நியமன உறுப்பினர்கள் ஏதாவது பேசுகிறார்களா என்பதே சந்தேகம். அடுத்து இவர்களை இரண்டாம் பட்சமாகத்தான் கருதுகிறார்கள். அதாவது தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்படும் பேசும் வாய்ப்பு நியமன உறுப்பினர்களுக்குக் கிடையாது. இதைப்பற்றி துக்ளக்கில் சோ எழுதியுள்ளார்.

ஆனால் ஒருவகையில் மாநிலங்களவை வண்டிக்கு பிரேக் போலச் செயல்படும் என்ற நம்பிக்கையில் அனுமதிக்கலாம் என்று தோன்றுகிறது.

அதைப்போலவே சட்டமன்ற மேலவையும் தேவைப்படும் நேரங்களில் சட்டப்பேரவைக்கு பிரேக் போலச் செயல்படுமா?

தற்போதைக்கு 28 மாநிலங்களில் ஐந்தே ஐந்து மாநிலங்களில்தான் மேலவை உள்ளது (உத்தர பிரதேசம், பீஹார், கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர்). மேலவையில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பேரவையில் உள்ளதில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் இருக்க முடியாது. எனவே தமிழ்நாட்டுக்கு 78 உறுப்பினர்கள் வரை இருக்கலாம்.

மேலவைக்கு உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படப் போகிறார்கள் என்பதையும் மேலவைக்குக் கிடைக்கும் சிறப்பு அதிகாரங்கள் என்னென்ன என்பதையும் வைத்துக்கொண்டுதான் மேலவை அவசியமா என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும்.

மேலவை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படலாம் என்பது குறித்து சில யோசனைகள்:

1. இங்காவது 50% பெண்களாக இருக்க வேண்டும் என்று முன்னதாகவே முடிவு செய்யலாம்.
2. பொதுவாக ஊனமுற்றோர் சட்டப்பேரவைத் தேர்தலில் அவ்வளவாகப் போட்டியிடுவதில்லை. ஊரெல்லாம் சுற்றி தேர்தல் கூட்டங்களில் ஈடுபட்டு வாக்கு சேகரிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. எனவே ஊனமுற்றோருக்கு என்று 5% இடங்களை ஒதுக்கலாம்.
3. பட்டதாரிகளுக்கு என்று தனியாக constituency இருந்தது - முந்தைய மேலவையில். இது சற்றே அபத்தமான ஒரு பிரிவாக இப்போது தோன்றுகிறது. எனவே இதை அறவே ஒழித்துவிடலாம். இதற்கு பதில் சில தொழில் பிரிவுகளுக்கு என்று இடங்களை ஒதுக்கலாம். உதாரணமாக
     (அ) விவசாயத் தொழில் புரிவோர்
     (ஆ) முறைசாராத் தொழிலாளர்கள்
     (இ) சொந்தமாக சிறுதொழில், நடுத்தரத் தொழில் புரிவோர் - அதாவது வேலை வாய்ப்பை உருவாக்குபவர்கள்
     (ஈ) ஆசிரியர்கள்
     (உ) வேறு ஏதாவது?
இப்படி ஒரு குழுவுக்கு இரண்டு இடங்கள் என்று மொத்தமாக 10 இடங்களை இதற்காக ஒதுக்கலாம்.
4. நியமன உறுப்பினர்கள் மிகச் சிறுபான்மையாக இருக்கும் சில சமுதாயப் பிரிவுகளிலிருந்து - ஆனால் தனித்தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படக்கூடிய ஷெட்யூல்ட் பிரிவுகளில் இல்லாதவர்களாக இருக்கலாம். உதாரணமாக மத, இனச் சிறுபான்மையினர் (1) சீக்கியர்கள் (2) ஜைனர்கள் (3) புத்த மதத்தினர் (4) யூதர்கள் (இருந்தால்) (5) பார்சி (6) ஆங்கிலோ இந்தியர் - என ஆறு பேர்கள் இருக்கலாம்.
5. கலைகளுக்கு என்று தனியாக இருக்கவேண்டுமா என்று தெரியவில்லை. பாடகர்கள், நாட்டியக்காரர்கள் என்றால் அது கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் என்று மட்டும்தான் என்றில்லாமல் பிற கலைஞர்களாகவும் இருக்கவேண்டும். இந்த constituency-ஐ ஒரேயடியாக மறந்துவிட்டாலும் குற்றமில்லை என்று தோன்றுகிறது.
6. பத்திரிகைக்காரர்கள் என்று சிலரை உறுப்பினராக்கவேண்டுமா? தேவையில்லை என்று தோன்றுகிறது.
7. பஞ்சாயத்துகள் மூலமாக மூன்றில் ஒரு பங்காவது உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். ஆனால் இது எப்படி நடக்க வேண்டும் என்று முழுமையான யோசனைகள் என்னிடம் இல்லை.

மேலவைக்கு எந்த மாதிரியான அதிகாரங்கள் கொடுக்கப்படலாம் என்பது பற்றி சில யோசனைகள்:

1. குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தில் மாநிலங்களவைக்கு உள்ள அதே அதிகாரங்கள் - நிதிக் கோரிக்கைகள் தவிர்த்து பிறவற்றை மீண்டும் சட்டப்பேரவைக்கு அனுப்பும் அதிகாரம், புதிய மசோதாக்களைத் தாக்கல் செய்யும் அதிகாரம் ஆகியவை
2. அதற்கு மேலாக, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு மசோதாவும் மேலவையில் 2/3 என்ற கணக்கில் வெற்றிபெறாவிட்டால் நிறைவேறாது என்பதுபோன்ற ஒரு கட்டுப்படுத்தும் அதிகாரம்
3. எந்த (மத, இன) சிறுபான்மைக் குழுவையும் பாதிக்கும் எந்தவொரு சட்டமாக இருந்தாலும் மேலவையில் 2/3 பெரும்பான்மை வாக்குகள் இல்லாவிட்டால் சட்டமாகாது என்ற அதிகாரம்

மற்றொன்று. இப்பொழுது மேலவை ஏற்படுத்தப்பட்டுவிட்டால் பின் அது எந்தத் தருணத்திலும் இழுத்துமூடப்படாது என்ற நிலையும் ஏற்படவேண்டும். ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஏற்படுத்துவதும் நீக்குவதுமாக இருந்தால் அதைவிட அபத்தம் வேறெதுவுமில்லை.

இன்னமும் சிலவற்றை யோசிக்கலாம். ஆனால் இதுபோன்ற சிறப்பு அதிகாரங்கள் இல்லாவிட்டால் மேலவை என்று ஒன்று இருப்பது அவசியமே அல்ல என்பது என் கருத்து. ஆனால் எந்த சட்டப் பேரவையாவது தனது அதிகாரங்களைக் குறுக்கிக்கொண்டு மற்றொரு அவையை உருவாக்குமா என்பது தெரியவில்லை. பார்க்கலாம்.

 

  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம்

என் பதிவிலிருந்து தேடி எடுத்து, இதற்கு இணைப்பு கொடுத்து, அதன்மூலம் இதை மீண்டும் என் நினைவுக்குக் கொண்டுவந்த பாஸ்டன் பாலாஜிக்கு நன்றி.

தேர்தலுக்கு முன்பே இவற்றை மீள்பதிவாகச் செய்திருக்கலாம். ஞாபகத்துக்கு வரவில்லை.

பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - ஒன்று | இரண்டு | மூன்று

 

  வாக்களிக்காதவர்களுக்கு "அர்ச்சனை"

பொதுவாக, குடியாட்சி முறையில் தேர்தலில் நின்று தோற்றால், 'மக்களின் முடிவை மதிக்கிறோம்' என்றுதான் நாகரிகம் மிகுந்தவர்கள் சொல்வார்கள். தாம் ஏன் தோற்றோம், அல்லது ஜெயித்திருந்தாலும் ஏன் தாம் எதிர்பார்த்த அளவு இடங்கள் கிடைக்கவில்லை என்பதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து, எப்படி அடுத்த தேர்தலில் சிறப்பாக வெற்றி பெறுவது என்று முயற்சி செய்வார்கள்.

ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் வித்தியாசமானவர்கள். தனக்கு வாக்களிக்கவில்லை என்றால், அல்லது தான் எதிர்பார்த்த பெரும்பான்மை இல்லையென்றால், அதற்குக் காரணமாக இருக்கும் குடிமகன் முட்டாளாகத்தான் இருக்கவேண்டும் என்று முடிவு செய்துவிடுவார்கள்.

சென்ற தேர்தலில் கருணாநிதி தோற்றபோது தனக்கு வாக்களிக்காதவர்களை "சோற்றாலடித்த பிண்டங்கள்" என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். இப்பொழுது ஜெயித்தபின்னும் தாங்கள் எதிர்பார்த்த பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் தமிழக மக்களை ஒரு வாங்கு வாங்கியுள்ளார்.
தமிழர்களுக்கு தங்களது இனம் குறித்த தெளிவு இல்லை. கடந்த ஆட்சியாளர்கள் தமிழ் இனத்துக்கு எதிராகச் செய்த செயல்களை எல்லாம் திமுக கூட்டணித் தலைவர்கள் சுட்டிக்காட்டிப் பிரசாரம் செய்தனர்.

முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் ராஜா உள்பட முக்கியத் தலைவர்கள் கடந்த ஆட்சியால் ஏற்பட்ட தீமைகள் குறித்து விளக்கிப் பிரசாரம் செய்தனர். இதன் பிறகும் கடந்த ஆட்சியாளர்களுக்கு நல்ல ஆதரவு அளித்துள்ள நிலையைப் பார்க்கும்போது தமிழர்களுக்குத் தெளிவு இல்லை என்பது புரிகிறது. தமிழர்களுக்கு தமிழர் என்ற எண்ணம் இல்லை. திராவிடர் என்ற எண்ணம் இருந்தால் தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்ட கடந்த ஆட்சியாளர்களுக்கு வாக்களித்து இருக்க மாட்டார்கள் என்றார் அன்பழகன்.
Bravo! இன உணர்வு, பரம்பரைப் பகை ஆகிய விஷயங்கள் தவிர்த்து வேறு ஏதேனும் இந்தத் தேர்தல் முடிவுகளுக்குக் காரணமாக இருக்குமா? கடந்த ஆட்சியாளர்கள் என்ன இனம்? குரங்கினம்? ஆரிய இனம்? கடந்த ஆட்சியாளர்களோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டவர்கள் என்ன இனம்? ஜெயலலிதாவை விட்டுவிடுவோம். வைகோ, திருமாவளவன் ஆகியோர் என்ன இனம்? கேப்டன் விஜயகாந்த் என்ன இனம்?

இந்தத் தேர்தலும் சரி, இனி வரப்போகும் தேர்தல்களும் சரி, இனங்களுக்கு இடையேயான தேர்தல் இல்லை. இனியும் திமுக இந்த பழைய பல்லவியைப் பாடிக்கொண்டிருக்க முடியாது. பார்ப்பனர்களை ஒட்டுமொத்தமாக அழித்து ஒழித்துவிட்டாலும் (அல்லது ஒரு வண்டியில் ஏற்றி மத்திய ஆசியாவுக்கு அனுப்பிவிட்டாலும்) தமிழகத்தில் ஏழெட்டுக் கட்சிகள் இருக்கும். அதில் யாரும் திராவிட/தமிழ் இனத்துக்குத் தனிச்சொந்தம் கொண்டாட முடியாது. எனவே வாக்குகள் சிதறும். அப்பொழுது இன உணர்வைத் தவிர வேறு காரணங்களும் இருக்கும் என்று பேராசிரியர் யோசிக்க வேண்டியிருக்கும்.

பேராசிரியருக்கு தான் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தோம் என்ற எண்ணம் கோபத்தை வரவழைத்துள்ளது போலும். அவர் சிறுமையான எண்ணங்களை விடுத்து தமிழக நிதி நிலையைப் பற்றி யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. சீக்கிரத்தில் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

 

My English blog
Tracking Microcredit - NEW

முந்தைய பதிவுகள்

ஆண்டுவாரியான பதிவுகள்



விளம்பரம்
இணையத்தில் தமிழ்ப் புத்தகங்களை வாங்க

சில சுட்டிகள்
என்னைப் பற்றி
முகப்பு
இந்த வலைப்பதிவின் RSS செய்தியோடை
என் வலையொலிபரப்பு ஓடை
என் கட்டுரைகள்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி

கில்லி - புதுசு தினுசு ரவுசு

Powered by Blogger


Creative Commons License
This work is licensed under a Creative Commons License.