Monday, April 26, 2004

இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும்

இன்று மாலை 6.30 மணியளவில் பாஸ்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் (இரண்டாவது மாடி, டி.டி.கே சாலை, சென்னை 18) "India and Ethnic Conflict in Sri Lanka" என்ற தலைப்பில் பேராசிரியர் V. சூர்யநாராயணன் பேசுகிறார். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் "Centre for South & South East Asean Studies" இயக்குநராக இருந்தவர்.

நான் இந்தப் பேச்சுக்குப் போகிறேன். நாளை இதுபற்றி பதிவு செய்கிறேன்.

Sunday, April 25, 2004

பா.ராகவனின் அலகிலா விளையாட்டு நாவலுக்குப் பரிசு

நாரதகான சபாவில் இலக்கியப்பீடம் இதழ் சார்பில் அமரர் ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியின் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பரிசு பெற்ற எழுத்தாளர் பா. ராகவனுக்கு (நாவல்: அலகிலா விளையாட்டு) சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் முன்னாள் இயக்குநர் திரு. ஏ. நடராசன் விருதும், ரூ. 10,000 மதிப்புள்ள காசோலையையும் வழங்கினார்.

இலக்கியப்பீடம் நிறுவனர், ஆசிரியர் திரு.விக்கிரமன், எழுத்தாளர் அனுராதா ரமணன், கலைமகள் பொறுப்பாசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கீழ்க்கண்ட படத்தில் ராகவன், அவரது பெற்றோர், சிறப்பு விருந்தினர் ஏ.நடராசன் ஆகியோர் உள்ளனர். பின்னால் நிற்பது நெய்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர் மாலா உத்தண்டராமன். இவர்தான் போன வருடத்திற்கான இலக்கியப்பீடம் நாவல் பரிசை தனது 'அம்மா வென்றாள்' என்ற நாவலுக்காக வென்றவர்.

இலக்கியப்பீடம் நாவல் போட்டி விருது

A country caught in cross-currents of neo-liberalism and Hindu nationalism

இந்து தேசியவாதத்திற்கும், நியோ-லிபரலிஸத்திற்கும் இடையில் மாட்டியுள்ள இந்தியா

அருந்ததி ராய் ஏப்ரல் 6, 2004 அன்று அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஐ.ஜி.கான் நினைவுப் பேச்சாகப் பேசியது இன்றைய தி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ளது.

நியோ-லிபரலிஸம்

அருந்ததி ராய் இந்தப் பேச்சில் தொட்டுச் செல்பவை:

- போடா சட்டம், மற்ற வெகுஜன எதிர்ப்பு சட்டங்கள், அதனை அப்பாவிகள் மீது கட்டவிழ்த்து விடும் அரசு இயந்திரங்கள்
- போடாவை ஒழிப்போம் என்று எதிர்க்கட்சிகள் சொன்னாலும் அவை செய்யப்போவதில்லை, ஏனெனில் அவர்கள் ஆட்சிக்கு வரும்போது இந்த சட்டம் அவர்களுக்கும் பயன்படும்
- போடா என்பதை யார்மீதும் பிரயோகிக்கலாம் - உங்கள் மீது, என் மீது. உதாரணமாக ஒருவரிடம் கடும் ஆயுதம் இருக்கிறது என்று சந்தேகித்தால் கூட - ஆம், சாட்சியோ, ஆயுதமோ கூட தேவையில்லை, வெறும் சந்தேகம் போதும் - போடாவில் கைது செய்யலாம். குற்றமற்றவர் என்று குற்றம் சாட்டப்பட்டவர்தான் நிரூபிக்க வேண்டும். அதாவது நிரூபிக்கப்படும் வரை குற்றமற்றவர் என்பது பழைய நீதி. நிரூபிக்கப்படும் வரை குற்றம் செய்தவர் என்பது புது போடா நீதி.
- காவல்துறையிடம் கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் "குற்றவாளிக்கு" எதிராக பயன்படுத்தப்படும். [சாதாரண குற்றவியல் குற்றங்களில் இது செல்லுபடியாகாது.] அதனால் காவல்துறையினர் சாட்சியங்களைத் தேடிப்போக வேண்டியதில்லை. குற்றம் சாட்டப்பட்டவரை சற்று 'கவனித்தாலே' போதும்.
- எப்படியெல்லாம் கவனிக்கிறார்களாம் தெரியுமா? சிறுநீரைக் குடிக்க வைப்பது, பொட்டுத் துணி இல்லாமல் அம்மணமாக்குவது, மின்சார ஷாக் கொடுப்பது, சிகரெட்டால் சுடுவது, இரும்புக் கம்பிகளை ஆசனவாயில் சொருகுவது... இதைவிட சிறந்த முறைகளை 'காதலன்' படத்தில் ஷங்கர் காண்பித்துள்ளார். அதை ஒவ்வொரு மாநிலத்தின் காவல்துறைக்கும் போட்டுக் காண்பிக்கலாம்.
- காஷ்மீர், குஜராத், வட-கிழக்குப் பிராந்தியங்கள், ஆந்திரப் பிரதேசம் (மற்ற நக்ஸல் பிரதேசங்கள்) ஆகிய இடங்களில் நடக்கும் ஜெயில் கொலைகள், என்கவுண்டர் கொலைகள்

- கடந்த பத்து வருடங்களில் நிகழ்ந்த பொருளாதார மாற்றங்கள் (நியோ-லிபரல்)
- இந்தியா ஜொலிக்கிறதா? பத்து வருடங்களுக்கு முந்தைய நிலையை விட இன்று ஏழைகள் உட்கொள்ளும் உணவுப்பொருள் வருடத்திற்கு 100 கிலோ குறைவாக உள்ளது
- 40% கிராமப்புற மக்கள் கிட்டத்தட்ட ஆப்பிரிக்காவின் சஹாராவைச் சுற்றியுள்ள நாடுகளில் உட்கொள்ளும் உணவின் அளவேதான் உட்கொள்கின்றனர். [எதியோப்பியா தெரியுமல்லவா?]. அதாவது பஞ்சத்தில் அடிப்பட்ட மக்கள்.
- கிராம-நகர இடைவெளி கடந்த ஐந்தாண்டுகளில் மிக அதிகமாகியுள்ளது

- தனியார் நிறுவனங்களின் (படிக்க: பன்னாட்டு நிறுவனங்களின்) முதலாளிகள் ஒரு பிரதமரை விட அதிக ஆளுமையுடன் இருக்கிறார்கள்.

- பாஜகவின் இந்து தேசியவாதம், குஜராத் கொலையாட்டம். அங்கு நடந்த நிகழ்ச்சிக்கு இதுவரை யாருக்கும் தண்டனை கிடைக்காதது
- ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து வலதுசாரி அமைப்புகள் மிக ஆழமாக தங்கள் அமைப்புகளை நிலைநிறுத்தி அதன்மூலம் தங்கள் கொள்கைகளைப் பரப்புவது
- அரசுசாரா அமைப்புகள் (NGOs) அரசுகளைச் சாராமல் அரசு கொடுக்கும் கையூட்டை வாங்கிக் கொள்ள அரசியலிருந்து விலகியிருப்பது தவறு.
- இந்து தேசியவாதம், நியோ-லிபரலிஸம் ஆகியவற்றை எதிர்க்க வேண்டும். அதற்கு நாடு முழுதும் கிராமப்புறங்களில் உள்ள அடிவேர் அமைப்புகள் சேர்ந்து உழைக்க வேண்டும்.

- ஏழைகளுக்கு ஆதரவான அரசியல் கட்சி, ஏழையாகவே இருக்கும். இடதுசாரிகள் தங்களுக்குள்ளேயே குழம்பிப்போய் இருக்கிறார்கள். அவர்களால் இப்பொழுதைக்கு ஒரு பிரயோசனமும் இல்லை.
- இந்து தேசியவாதத்திற்கும், நியோ-லிபரலிஸத்திற்கும் எதிரான கருத்துள்ளவர்கள் இன்று அரசியலில் ஈடுபட முடியாது. இதற்கு அரசியலை விட்டு விலகி இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. போரை நிகழ்த்த பலமான பின்னணி வேண்டும். பலம் குறைந்த நிலையில் போராட முடியாது. ஓரிரண்டு சமூக சேவகர்களை பாராளுமன்றத்தில் வைப்பதில் எந்த உபயோகமும் இல்லை.
- மாற்றம் நிச்சயம் வரும். அது கையில் ஆயுதம் ஏந்தி, இரத்தத்தைச் சிந்த வைக்கும் போராகவும் இருக்கலாம், அல்லது அஹிம்சை வழியிலும் இருக்கலாம். எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது நாம்தான்.


மேற்சொன்ன அரசு/அரசியந்திரம் அடக்குமுறைகள் மீது எனக்கு வேற்றுக் கருத்துகள் இல்லை. அருந்ததி ராய் இப்பொழுதுள்ள பிரச்சினைகளை மிக அழகாக விளக்குகிறார். இன்னமும் அதிகம் உழைத்து மாற்றுக் கருத்துகள், மாற்று அரசியலமைப்புகள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.

ஆனால் எனது பொருளாதாரச் சிந்தனைகள் நியோ-லிபரல் சிந்தனைகளே, அல்லது அதற்கு மிக அருகாமையில் வரும் சிந்தனைகளே. அதில் நான் அருந்ததி ராயுடன் வேறுபடுகிறேன்.

Friday, April 23, 2004

தமிழோவியம் கிரிக்கெட்

இந்த வாரம் முரளிதரன் பற்றியும், ஜிம்பாப்வே அணி பற்றியும்.

Thursday, April 22, 2004

இந்தியாவின் அயலுறவுக்கொள்கை - 1

இப்பொழுது நடப்பது இந்தியப் பாராளுமன்றத் தேர்தல். சட்டமன்றங்களால் தொடமுடியாத, பாராளுமன்றத்தால் மட்டுமே தொடக்கூடிய ஒரு துறை - அயலுறவுத்துறை.

அயலுறவை எடுத்துக்கொண்டால் நமக்கு எதெல்லாம் முக்கியம்?

1. பாகிஸ்தானுடனான உறவு, ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை
2. நம்மைச் சுற்றியிருக்கும் மற்ற அண்டை நாடுகள் - நேபாள், இலங்கை, பங்களாதேஷ், மாலத்தீவுகள் - அதாவது சார்க் நாடுகளுடனான உறவு
3. சீனாவுடனான உறவு, சிக்கிம், திபேத், அருணாசலப் பிரதேசம் பற்றிய பிரச்சினைகள்
4. மற்ற கிழக்காசிய நாடுகளுடனான உறவுகள் - சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து - முக்கியமாக இந்தியாவிலிருந்து இந்நாடுகளுக்கு வேலை செய்ய வருபவர்களின் உரிமைகள்
5. மற்ற ஆசிய நாடுகளுடனான உறவுகள் - முக்கியமாக ஆஃப்கானிஸ்தான், வளைகுடா எண்ணெய் வள நாடுகள், இராக், இரான், மத்திய ஆசிய நாடுகள் (சோவியத் குடியரசிலிருந்து பிரிந்த நாடுகளான கஸக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்றவை)
6. ரஷ்யாவுடனான உறவு, ரஷ்யாவின் செச்னியா பற்றிய நிலைப்பாடு
7. மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனான (ஐரோப்பிய பொதுச்சந்தை) உறவு
8. மற்ற ஐரோப்பிய நாடுகளுடனான உறவு
9. அமெரிக்காவுடனான உறவு, அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத்தனம் பற்றிய நமது கருத்துகள்
10. ஜப்பானுடனான உறவு
11. இந்திய வம்சாவளியினர் அதிகமாக இருக்கும் நாடுகளுடனான உறவு (கனடா, தென்னாப்பிரிக்கா, ஃபிஜி, ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து இன்ன பிற)
12. மற்ற அனைத்து நாடுகளும்

ஆனால் முக்கியக் கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் தங்களது தேர்தல் அறிக்கையில் என்ன பேசுகின்றன?

பாஜகவின் தேர்தல் அறிக்கை | காங்கிரஸ் வெளியுறவுக் கொள்கை பற்றிய தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் வெளியுறவுக் கொள்கை பற்றிச் சொல்வதை "DEFENCE, NATIONAL SECURITY AND FOREIGN POLICY" என்னும் தலைப்பில் பேசுகிறது. அதாவது வெளியுறவுக் கொள்கையை, நாட்டின் பாதுகாப்புடன் மட்டுமே இணைத்துப் பார்க்கும் பழைய போக்கே அதில் தென்படுகிறது. இன்றைய தேதியில் வெளியுறவுக் கொள்கை என்பது இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல. இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் பரஸ்பர நட்பு பற்றியதே முதன்மை வகிக்க வேண்டும் இந்தக் காலத்தில்.

காங்கிரஸ் மொத்தமாக பெயர் சொல்லி நான்கு நாடுகளையும் (பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான்), பொதுவாக ஐந்து பிரதேசங்களையும் (சார்க், கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா, ஐரோப்பிய ஒன்றியம், அணிசேரா நாடுகள்) சொல்லி கதையை முடித்து விடுகிறது. அணிசேரா நாடுகள் என்னும் அமைப்பு எப்பொழுதோ காலாவதியாகி விட்டது என்பதை அறியவில்லை இவர்கள். இலங்கை என்னும் நாடு பற்றி முழுவதுமாக மறந்து விட்டார்கள் காங்கிரஸார். தமிழர்கள்-சிங்களவர்கள் பிரச்சினையில் தங்கள் நிலை என்ன, அமைதிப் பேச்சு வார்த்தையில் எந்த விதத்தில் ஈடுபடப் போகிறோம் என்று ஒரு பேச்சைக் காணோம். சீனா பற்றி சொல்லிக் கொள்ள கான்கிரஸுக்கு ஒரு விஷயமும் இல்லை போல.

பாஜக தன் வெளியுறவுக் கொள்கைக்கு அழகான பெயர் மட்டும் கொடுத்துள்ளது: "India and the World". சற்றே விரிவாக இன்னமும் பத்து நாடுகளின் பெயர்கள் உள்ளன. ஆனால் பாகிஸ்தானுக்குப் பிறகு வெறும் சார்க்தான். இலங்கைப் பிரச்சினை பற்றி ஒரு பேச்சுமில்லை. பங்களாதேஷ், நேபாள், ஆஃப்கானிஸ்தான் என்று ஒன்றும் இல்லை. மற்றபடு மொழுக்கென்று எல்லோருடனும் நட்பை வளர்க்கப் போகிறோம் என்றுதான் சொல்கிறார்கள்.

இந்தியா தனது அண்டை நாடுகளுடன் என்றுமே சரியான உறவு வைத்துக்கொண்டிருந்ததில்லை.

1. பாகிஸ்தான்: நம் அனைவருக்கும் தெரிந்ததே பாகிஸ்தானுடனான உறவு. பாகிஸ்தான், காஷ்மீர், தீவிரவாதம் பற்றிய விஷயங்களில் கூட வாக்காளர்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு அவர்களுடன் எந்தவிதமான உரையாடலையும் வைத்துக்கொள்ளவில்லை இரண்டு கட்சிகளும். காங்கிரஸ் இன்னமும் 1972 சிம்லா ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசுகிறது. பாஜக இஸ்லாமாபாதில் பெப்ரவரி 2004இல் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் வெளிப்படையாக காஷ்மீரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைச் சொல்லவில்லை.

2. சீனா: இப்பொழுதுதான் உறவு ஓரளவுக்கு சரியாகி வருகிறது. ஆனாலும் எவ்வாறு மேற்கொண்டு இந்த உறவுகளை மேம்படுத்தப் போகிறோம் என்ற பேச்சில்லை. காங்கிரஸ் அறிக்கையில் அயலுறவுக் கொள்கை பற்றிப் பேசும்போது சீனா என்ற சொல்லே வருவதில்லை!

3. இலங்கை: அப்படியொரு நாடு இருப்பதாகவே இரு கட்சிகளுமே காட்டிக்கொள்ளவில்லை. எங்கிருந்தோ வந்து நார்வே தூதுக்குழு இலங்கையில் அமைதி காண முயலுகிறது. ரணில் விக்கிரமசிங்கே, சந்திரிகா குமரதுங்கே இருவருமே இந்திய அரசுடன் இலங்கை பற்றி பேசுகிறார்கள். விடுதலைப் புலிகளும் இந்தியா அமைதிப் பேச்சில் ஈடுபட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள். இந்தியாவின் இரு முக்கிய கட்சிகள் இலங்கை பற்றி ஒரு வரி கூட தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. பொதுவாக 'சார்க்' என்று வருகிறது - அவ்வளவே. தமிழகக் கட்சிகளான திமுக, அஇஅதிமுக இரண்டும் கூட இலங்கைப் பிரச்சினை, அமைதிப் பேச்சுவார்த்தை ஆகியவை பற்றி ஒரு வரி கூட குறிப்பிடாமல் விட்டது சோகம்தான். மதிமுகவின் தேர்தல் அறிக்கை எனக்குக் கிடைக்கவில்லை. (அஇஅதிமுக தேர்தல் அறிக்கையில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையும், இலங்கை மீனவர்களும் கடத்திச் செல்வது பற்றியும், முரசொலி மாறன் "சொந்த லாபத்திற்காக" இலங்கையிலிருந்து தேயிலையைக் குறைந்த விலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய அனுமதித்ததையும் பற்றி வரும்போதுதான் இலங்கை என்ற சொல்லே அடிபடுகிறது.)

(தொடரும்)

Monday, April 19, 2004

சுகமான வார இறுதி

கிரிக்கெட் முடிவு பெறவும், சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் ஆனந்தமாய்க் கழிந்தன.

குழந்தைகளுடன் நான்


சனி காலை சுமார் 10 சிறுவர், சிறுமிகளுக்கு இணையம் பற்றியும், தொலைக்காட்சி, வானொலி ஆகிய ஊடகங்களுக்கும் இணையம் வழியாக செய்திகளை/கேளிக்கைகளை பரப்புவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றியும் விளக்கினேன். இது ஒரு கோடைகால விடுமுறைக் குழாம். பங்கு பெற்றவர்களின் வயது 8-12 இருக்கும். மிகவும் சூட்டிகையான சிறுவர்கள். இவர்களுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் தெரிந்திருக்கின்றன. கேள்வி கேட்டுத் துளைத்தெடுக்கிறார்கள். கற்றுக்கொள்ளும் ஆர்வம் வெகு அதிகம்.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஏன் பள்ளிச்சிறுவர்களுடன் ஊடாடுவதை அதிகம் விரும்புகிறார் என்று இப்பொழுது தெரிகிறது. இதுபோல் இன்னமும் பல சிறுவர்களுடன் தொடர்ச்சியாகப் பேச வேண்டும்.

சனி மாலை Something's Gotta Give படம் பார்த்தேன். நல்ல சுவாரசியமான படம். பிறகு எழுதுகிறேன்.

ஞாயிறு காலை தமிழ்நாடு சிறுமுதலீட்டாளர்கள் சங்கக் கூட்டம்.

மாலை மியூசிக் அகாடெமியில் CRY பணம் சேர்ப்பதற்காக நடத்திய பால் தால் என்றொரு இசைக் கச்சேரி. உஸ்தாத் ஸாகிர் ஹுசேன், அவரது சகோதரர் ஃபஸல் குரேஷி இருவரும் தபலா. மாண்டலின் ஸ்ரீனிவாஸ், ராஜேஷ் சகோதரர்கள், செல்வ கணேஷ் கஞ்சிரா, ரஞ்சித் பாரோத் டிரம்ஸ். மிக அருமையாக இருந்தது. டிக்கெட் விலை அதிகம்தான். அதனால்தானோ என்னவோ அரங்கம் முழுமையும் நிரம்பவில்லை. அரங்கை விட்டு வெளியேறுகையில் கச்சேரி இன்னமும் மூன்று மணிநேரங்களுக்குத் தொடர்ந்திருக்கக் கூடாதா என்று தோன்றியது.

சில நாட்களாகப் படித்துக் கொண்டிருக்கும் மா.வே.சிவகுமாரின் 'வாத்தியார்' சிறுகதைத் தொகுதியினைப் படித்து முடித்தேன். எளிய நடை, உள்ளடங்கிய நகைச்சுவை. நாகூர் ரூமியின் இஸ்லாம் - ஓர் எளிய அறிமுகம் என்னும் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்துள்ளேன். ரூமியின் புத்தகம் தமிழில் இஸ்லாம் பற்றி வந்துள்ள மிக முக்கியமான ஒரு புத்தகம் என்று தோன்றுகிறது. மிகச் சரளமான நடை. அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். [Disclosure: மேற்சொன்ன இரண்டு புத்தகங்களும் 'கிழக்கு பதிப்பகம்' மூலம் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தில் எனக்கு பெரும்பான்மைப் பங்கு உள்ளது. இந்தப் புத்தகங்களைப் பிறர் வாங்குவதன் மூலம் எனக்கு நேரடி லாபம் கிடைக்கும்.]

பாகிஸ்தான் கதைகள் 2 - கழுதை வண்டி

பாகிஸ்தானில் என்னை மிகவும் கவர்ந்தது கழுதை இழுக்கும் வண்டிகள். நான் அங்கு சுற்றியவரை (இஸ்லாமாபாத், லாஹூர், ராவல்பிண்டி, ஹாரப்பா) கண்ணில் பட்டதெல்லாம் மாடுகளோ, குதிரைகளோ இழுக்கும் வண்டிகளல்ல, ஆனால் கழுதைகள் இழுக்கும் வண்டிகளே. அங்குள்ள கிராம வாசிகள், உழவர்கள் (அதாவது மோட்டார் வண்டி வைத்துக் கொள்ள முடியாதவர்கள் என்று வைத்துக் கொள்வோமே?) அனைவரும் வைத்திருந்தது இந்தக் கழுதை வண்டிகளே.

கழுதை வண்டிஇந்தக் கழுதைகள் நம்மூர் சலவைத் தொழிலாளர்கள் அல்லது பல வருடத்திற்கு முந்தைய உப்பு வாணிகர் வைத்திருக்கும் கழுதைகளைப் போலில்லை. பைபிளில் சொல்லப்படும் கோவேறு கழுதைகள் (கழுதை-குதிரை என்றும் சொல்லப்பட்டிருக்கும்) போல என்று நினைக்கிறேன். நான் படமெடுத்த போது இருட்டத் துவங்கியிருந்தது. அதனால் எனக்கு சுமாரான படம்தான் கிடைத்துள்ளது. வண்டியின் சக்கரங்கள் ரப்பர் டயரால் ஆனவை. அதிக சுமையைத் தாங்கி இழுக்கிறது. நல்ல திறனான வண்டிகள் என்றே தோன்றுகிறது.

இந்தியாவில் இதுபோன்ற கழுதை வண்டிகள் உண்டா என்று தெரியவில்லை. நிச்சயம் தமிழகத்தில் கிடையாது.

நான் ஐஐடி சென்னையில் மெக்கானிகல் எஞ்சினியரிங் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தபோது பிராஜெக்ட் என்ன செய்யலாம் என்று சில பேராசிரியர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ராம் மோஹன் ராவ் என்றொரு பேராசிரியர் இருந்தார். ஜனதா தளம் மத்தியில் ஆட்சியிலும், தேவிலால் துணைப் பிரதமராகவும் இருந்த நேரம் அது. தேவிலாலுடைய விவசாய அமைச்சரகம் கிராமப்புறத்தில் விவசாய மேம்பாட்டுக்கு உதவும் வகையில் செய்யப்படும் மாணவத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பதாகச் சொல்லியிருந்தது. என் பேராசிரியர் மாட்டு வண்டிகளை எப்படி மாற்றியமைக்கலாம், நல்ல தரமான அடி பம்புகளை எப்படி உருவாக்கலாம் போன்ற திட்டங்களைப் பற்றிப் பேசினார். (ஆனால் அமெரிக்கா போகவேண்டுமானால்) இதுபோன்ற திட்டங்கள் கவர்ச்சியாக இல்லை என்று அவற்றை நிராகரித்து விட்டு 'A Graphical Approach to Optimization of Non-linear Functions' என்று ஏதோ கதையடித்து ஒருவருக்கும் உபயோகமில்லாத வேலையைச் செய்து ஒப்பேற்றினேன்.

இன்றைய தேவை இப்பொழுது உள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் கிராமப்புறங்களில் நல்ல வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே. குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 'PURA - Providing Urban facilities in Rural Areas' திட்டத்தை நிறைவேற்ற பொறியியல் துறை மாணவர்கள் அதிகமாக முன்வர வேண்டும்.

பாகிஸ்தான் கதைகள் 1 - அலங்கார லாரி

Friday, April 16, 2004

தமிழோவியம் கிரிக்கெட்

இந்த வாரம் தமிழோவியத்தில்.

இதுவரை எழுதியுள்ள அனைத்துக் கட்டுரைகளும் இங்கே.

ராஹுல் "The Wall" திராவிட்

ஊரெங்கும் திராவிட் பற்றிய பேச்சுதான். தி எகனாமிக் டைம்ஸ் செய்தி ஒன்றில் ராஹுல் திராவிடுக்கு 'The Wall' என்று யார் பெயர் கொடுத்தது என்று தேடிக் கண்டுபிடித்துள்ளார்கள்.

ரீபாக் ஷூ நிறுவனத்திற்காக எடுக்கப்பட்ட விளம்பரத்தில் அசாருத்தீன், கும்ப்ளே, ஸ்ரீநாத், திராவிட் ஆகியோருக்காக லியோ பர்னெட் என்னும் விளம்பர நிறுவனம் குறிப்பெயர்களை உருவாக்கினராம். நிமா நாம்ச்சு, நிதின் பெர்ரி ஆகியோர் உருவாக்கிய பெயர்கள் முறையே:

அசாருத்தீன் - The Assassin
கும்ப்ளே - The Viper
திராவிட் - The Wall

பின்னர் கும்ப்ளே 'The Smiling Assassin' என்றழைக்கப்பட்டார். டெண்டுல்கருக்கு யாரும் உருப்படியாக ஒரு பெயரும் கொடுக்கவில்லை. மற்ற வீரர்களுக்குக் கொடுத்துள்ள பெயர்களும் நிலைக்கவில்லை. கங்குலிக்கு 'The Prince of Kolkotta' என்னும் பெயர் அர்த்தமற்றது.

'The Wall' மட்டும் தொடர்கிறது.

இன்று அலுவலகம் வரும் வழியில் ரேடியோ மிர்ச்சியில் திராவிட் டெண்டுல்கரின் இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டாரா என்ற கேள்விக்கு பலர் வழிசலாக பதில் சொல்லிக் கொண்டிருந்தனர். "டெண்டுல்கர் நிலா, திராவிட் வெறும் நட்சத்திரம்தான்" என்றெல்லாம் ஒரு பெண் கவிதை பாடினார்.

Thursday, April 15, 2004

ஓட்டு வாங்க கிரிக்கெட் மட்டை

கடந்த இரு தினங்களாக இளம் வாக்காளர்களை மயக்க வேட்பாளர்கள் கிரிக்கெட் மட்டைகளையும் இதர சாதனங்களையும் லஞ்சமாகத் தருவதாகப் படித்தேன்.

ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் பின்புறமாக சாக்குப்பையுடன் வரவேண்டுமாம். வெளியே தெரிந்து விடக்கூடாது அல்லவா!

ஆந்திராவிலும் இதே தொல்லையாம். அங்கு தெலுகு தேசம் வேட்பாளர்கள் கிரிக்கெட்டையும் தேர்தலையும் வெவ்வேறு நேரத்தில் வைத்திருக்கக் கூடாதா என்று புலம்புகிறார்களாம்.

இதுநாள் வரை பிரியாணி, சேலை (லால்ஜி டாண்டன் லக்னோவில் சேலை தருகிறேன் என்று சொல்லி 20 பேருக்கு மேல் சொர்க்கத்துக்கு அனுப்பி விட்டார்), சாராயம் என்று அழ வேண்டி வந்தது. இப்பொழுதோ பலருக்கு ரூ. 2,500-3,000 சமாச்சாரமாக அழ வேண்டியுள்ளது.

18 வயது இளைஞர்களுக்கு கிரிக்கெட் சாதனங்கள் என்றால், 18 வயது நிரம்பிய பெண்களுக்கு என்ன லஞ்சம் கொடுப்பது? தாலிக்குத் தங்கம் என்றெல்லாம் முன்னால் செய்தாகி விட்டது. யாருக்காவது நல்ல யோசனை இருந்தால் சொல்லவும்.

Wednesday, April 14, 2004

தமிழ்ப் புத்தாண்டு

ஏன் தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்கள் உள்ளன?

பல நாட்களாக எனக்கிருக்கும் கேள்வி இது. யாருக்காவது விடை தெரியுமா?

பாலாஜியின் சிரிப்பும், கருப்பும்

லக்ஷ்மிபதி பாலாஜி பாகிஸ்தானியர்களின் உள்ளங்கவர் கள்வனாகி விட்டாராம். ஏனென்றால் தெரியாது என்கிறார். எங்கு போனாலும் 'பாலாஜி, தீரே சே சல்னா' என்று பாடுகிறார்களாம் பாகிஸ்தானிகள்.

வெட்கத்தோடு ஒருவேளை தனது கருப்பு வண்ணம்தான் தன்னை அவர்களுக்குப் பிடிக்கும் காரணமோ என்கிறார் பாலாஜி. கருமையைக் காயும் தமிழர்கள் இனியாவது கருமையின் சிறப்பை உணர்வார்களாக. Fair & Lovely போன்ற களிம்புகளைப் பூசுவதை இனியாவது நிறுத்துவார்களாக.

கருப்பு பாலாஜி எப்பொழுதும் முகத்தை சிரித்தவாறு வைத்திருப்பதே அவரை அனைவருக்கும் பிடிக்கும் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. அவரது பந்தை நான்கடித்தாலும், ஆறடித்தாலும், அவரது பந்தில் கேட்ச் விடுபட்டுப்போனாலும் அவர் முகத்தில் சிரிப்பு மட்டும் மாறுவதில்லை.

Tuesday, April 13, 2004

லாராவின் 400உம், ஆட்டத்திற்கு இடையூறும்

பிரையன் லாரா நேற்று 400 ரன்கள் அடித்து கிரிக்கெட் டெஸ்டு போட்டிகளில் சாதனை புரிந்துள்ளார். தொலைக்காட்சியில் இதைப் பார்த்த எனக்கு ஏனோ மனநிறைவு இல்லை. கடைசி ஐம்பது ஓட்டங்கள் ஏனோதானோவென்று இருந்தது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது.

போகட்டும். 400ஐத் தொட முடியுமா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. மாத்தியூ ஹெய்டன் தொட்டுவிடுவாரோ என்றிருந்தது நடக்காமல் போனது.

டான் பிராட்மேனுக்குப் பிறகு இரண்டு முச்சதங்கள் அடித்த ஆசாமி லாராதான். (அடுத்த ஆசாமியாகப்போகிறவர் விரேந்தர் சேவாக் என்று பட்சி சொல்கிறது:-)

இப்பொழுது மேற்கிந்தியத் தீவுகள் அணியால் இந்த டெஸ்டை வெல்ல முடியுமா என்று பார்ப்போம்.

என்னதான் நாநூறு அடித்தார் ஒருவர் என்றாலும் ஆண்டிகுவாவின் பிரதமர் ஆடுகளத்தின் உள்ளே பிரவேசித்து லாராவை கட்டித் தழுவி 'ஷோ' காட்டியிருக்க வேண்டாம்! பார்க்க அசிங்கமாக இருந்தது. வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற கூத்துகள் நடக்காது. யோசித்துப் பாருங்களேன்? வேறெந்த விளையாட்டிலும், வேறெந்த நாட்டிலும் உலக சாதனை நடக்கும் போது நாட்டின் பிரதமரோ, பெரிய ஆட்களோ பாதி ஆட்டத்தில் ஓடிவந்து கட்டித் தழுவிக்கொண்டிருக்கிறார்களா என்ன?

நடுவர்கள் டாரைல் ஹேர், அலீம் தர் இருவரும் ஐசிசியிடம் இது பற்றி புகார் செய்ய வேண்டும்.

Sunday, April 11, 2004

ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு

ரஜினி இன்று பத்திரிகை நிருபர்களை சந்தித்துப் பேசியது விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

ரஜினி ஏற்கனவே எழுதிவைத்த அறிக்கையைப் படித்தார். படிக்கும்போது நிறையப் பிசிறல் இருந்தது. படித்து முடித்ததும், பத்திரிகையாளர்களிடம் வேறு ஏதும் பேசாமல், வேறெந்தக் கேள்விகளுக்கும் விடை கொடுக்காமல் கிளம்பி விட்டார். அவன் சொன்னதின் சாரம்:

* பாமகவின் ராமதாஸ் பாபா படத்தில் நான் பீடி குடித்தது போல வந்த காட்சிகளை எதிர்த்தார். அவர் என்னைவிட வயதில் பெரியவர். என்னை நேரடியாக வந்து சந்தித்திருக்க வேண்டியதில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டு இம்மாதிரியான காட்சிகளை நீக்கிவிடுமாறு சொல்லியிருந்தால், நான் முடிந்தால் நீக்கியிருப்பேன், அல்லது அடுத்த படத்தில் வராதமாதிரி செய்திருப்பேன். ஆனால் அதைச் செய்யாமல் அவரது அடியாட்கள் மூலமாக சினிமா திரைகளைக் கிழித்தார், திரைப்பெட்டிகளை, திரைப்பட அரங்குகளின் அதிபர்களைக் கடத்தினார். பல்லாயிரக்கணக்கான பணம் நஷ்டமாகுமாறு செய்தார்.

* என் ரசிகர்கள் வெகுண்டு எழுந்தனர். ஆனால் நான் அவர்களை அமைதியோடு இருக்குமாரு சொன்னேன். நான் அவர் வழிக்கு வந்ததில்லை. பின்னர் சமீபத்தில் நடந்த ஒரு அரசியல் கூட்டத்தில் என்னை 'சேற்றில் உழலும் பன்றி' என்று தரக்குறைவாகப் பேசினார்.

* என்னை தனிமனிதனாக அவர் விமரிசனம் செய்ததற்காக நான் அவரை எதிர்க்கவில்லை. அரசியலில் எனக்குப் பிடிக்காதது இரண்டு: (1) ஊழல், (2) வன்முறை. ராமதாஸ் வன்முறையைப் பிரதிபலிப்பவர். அதனால்தான் என் ரசிகர்களின் கருத்துக்கிணங்கி இந்தத் தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகளில் அந்தக் கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக வேலை செய்ய ஒப்புதல் கொடுத்தேன். இதனால் என் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கொலை மிரட்டல் வந்தது. என் ரசிகர் மன்றத்தவர்களை காவல் துறையினரால் எப்பொழுதும் காப்பாற்ற முடியாது என்பதால் அஇஅதிமுக/பாஜக வேட்பாளர்களை ஆதரிக்குமாறு சொன்னேன். அப்படிச் செய்தால் இந்தக் கட்சியினர் என் ரசிகர் மன்ற ஆட்களைக் காப்பாற்றுவார்கள் என்று நினைத்தேன்.

* ஜனநாயக முறைப்படி மதுரையில் ராமதாஸுக்கு கறுப்புக்கொடி காட்ட முனைந்த என் ரசிகர்களை கொலைவெறியோடு தாக்கினர் பாமகவினர். ராமதாஸ் மீது கொலை வழக்கு போட்டிருக்கும் தமிழகக் காவல்துறைக்கும், முதலமைச்சருக்கும் என் நன்றிகள். மதுரை மட்டுமல்ல, நாளை சென்னை, மும்பை, தில்லி, கோலா லம்பூர், ஏன் ஜப்பான் இங்கெல்லாம் என் ரசிகர்கள் உங்களுக்குக் கறுப்புக்கொடு காட்டினால் என்ன செய்வீர்கள்? அங்கும் ஆட்களை ஏற்பாடு செய்து அவர்களை அடித்து நொறுக்குவீர்களா?

* ராமதாஸை இதற்கு மேல் விமரிசிக்க நான் விரும்பவில்லை. அவர் என் நண்பர்களிடம் தஞ்சம் அடைந்து விட்டார்.

* நான் இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை. இது பாராளுமன்றத் தேர்தல். நாடு முழுதும் சுற்றிப்பார்த்ததில் எனக்கு அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் உள்ள தே.ஜ.கூ வே ஆட்சிக்கு வரும் என்று தோன்றியது. மேலும் இப்பொழுதைக்கு தமிழகத்தின் மிகப்பெரிய பிரச்சினை தண்ணீர்ப் பிரச்சினை. நம் மாநிலத்தைச் சுற்றியுள்ள மற்ற மாநிலங்களில் வற்றாத ஜீவநதிகள் உண்டு. நம் மாநிலத்தில் மட்டும்தான் இப்படி ஒரு நதியும் கிடையாது. இந்தத் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழி இந்திய நதிகளை ஒன்றிணைப்பது மட்டுமே. அப்படி இணைக்காவிட்டால் அதிகமாக பாதிக்கப்படப்போவது தமிழகம் மட்டுமே. அதனால் நதிநீர் இணைப்பிற்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக நான் ஒத்துக்கொண்டேன். பாஜக மட்டும்தான் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பைப் பற்றிப் பேசியுள்ளது. துணைப்பிரதமர் அத்வானியும் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நதிநீர் இணைப்பை தன் கட்சி/அரசு செய்தே தீரும் என்று உறுதி கொடுத்துள்ளார். எனவே என் தனிப்பட்ட வாக்கு பாஜகவுக்கே.

* இதனால் என் ரசிகர்கள் அனைவரையும் பாஜகவுக்கு வாக்களிக்கச் சொல்லவில்லை. என் ரசிகர்கள் பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள். ஆனால் வாக்களிக்கப் போகும்போது அவர்களை நான் கேட்டுக்கொள்வது - "சிந்தியுங்கள்" என்பதே. உங்களுக்கு விருப்பமான கட்சிக்கு வாக்களிப்பீர்களா அல்லது நம் மாநிலத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க உறுதியளிக்கும் கட்சிக்கு வாக்களிப்பீர்களா...?

* இந்தத் தேர்தலில் பாமக தோற்றால், நாம் வென்றதாகக் கருதக்கூடாது. பாமக வென்றால் நாம் தோற்றதாகக் கருதக்கூடாது. நம்முடைய எதிர்ப்பை ஜனநாயக முறையில் வெளிக்காட்டுவதே இந்த முயற்சி. இனி நம் ரசிகர்கள் கறுப்புக்கொடி காட்டுவது போன்றவற்றைத் தவிர்த்து விட்டு ஜனநாயக முறையில் வாக்குச் சாவடியில் எதிர்ப்பைக் காட்டட்டும்.

[முழு அறிக்கையும் இங்கு கிடைக்கிறது - நன்றி லாவண்யா.]

ஆக ரஜினி இப்பொழுதைக்கு சொல்வது:
1. பாமகவை எதிர்க்கிறேன் - என்னை நேரடியாக விமரிசனம் செய்ததால் அல்ல, ஆனால் அரசியலில் வன்முறையைப் பிரதிபலிப்பதால்.
2. பாஜகவை ஆதரிக்கிறேன் - தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தமான நதிநீர் இணைப்புத் திட்டத்தை ஆதரிப்பதால்.
3. அஇஅதிமுகவை பாமக போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் ஆதரிக்கிறேன்.
4. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் என் 'அமைப்பின்' ஆதரவில்லை. (!!)
5. திமுக, ப.சிதம்பரம் போன்றோர் இன்னமும் என் நண்பர்கள்.

எதிர்பார்த்த மாதிரியே சன் டிவி தன்னுடைய தலைப்புச் செய்திகளில் தேவையானவற்றை மட்டும் தக்கவைத்துக் கொண்டு மீதியை வெட்டி விட்டது. சன் டிவி செய்தி:

"எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை - ரஜினி."
"பாமக போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை எதிர்ப்போம்"
"இனி என் ரசிகர்கள் ராமதாஸை எதிர்த்து கறுப்புக்கொடி காட்ட மாட்டார்கள்."

பாகிஸ்தான் கதைகள் - 1

பாகிஸ்தானில் லாரிகள், ஆட்டோக்கள் ... ஏன், மோடார் பைக்குகள், சைக்கிள்கள் என்று எந்த வண்டியானாலும் ஒருவித அதீத அலங்காரம் இருக்கும். முதலில் பார்த்த போது ஓரிரு லாரிகளுக்கே இம்மாதிரியான அலங்காரம் இருக்கும் என்று நினைத்தேன். பின்னர் தெருவில் ஓடும் அனைத்து லாரிகளும் இப்படித்தான் என்று தெரிந்தது.

பாகிஸ்தான் அலங்கார லாரி


ஹாரப்பா போகும் வழியில் குளிர்பானம் அருந்த ஒரு கடையில் நின்றோம். அங்கு சில அலங்கார லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்படியான ஒரு வண்டியின் ஓட்டுநர் எங்களைப் பார்த்ததும் இந்தியர்கள் என்று தெரிந்து கொண்டார். எங்களிடம் வந்து பேசத் தொடங்கினார்.

(உருதுவில்) "போதும் இந்தச் சண்டைகள்... துப்பாக்கியும், தோட்டாவும் வேண்டாமே... வேண்டியதெல்லாம் அன்பும், காதலுமே" (प्यार और मोहबत)

(உடைந்த அரைகுறை ஹிந்தியில்) "ஆமாம். நீங்கள் சொல்வது சரியே..."

"ஆனால் ஏன் உங்கள் நாட்டில் முஸ்லிம்களைக் கொல்கிறீர்கள்? அவர்களைக் கொல்லாதீர்கள்..., பாவம்...."

அவரது விசனத்தில் பாகிஸ்தானில் இந்தியாவைப் பற்றிய எப்படியான கண்ணோட்டம் பரவியிருக்கிறது என்று புரிந்தது. குஜராத் கொடுமைகள் மூலம் 'இந்தியா ஒளிர்கிறது'. ஆனாலும் அந்த லாரி டிரைவரிடம் அரைகுறை மொழியில் நிலைமையை விளக்க ஆரம்பித்தோம். அதற்குள் எங்கள் வண்டியின் டிரைவரும் அவசரமாக வந்து (நாட்டின்) விருந்தினர்களைத் தொல்லைபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளவும், நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.

மாலனின் தேர்தல் 2004

மாலன் தேர்தல் 2004 பற்றிய கருத்துக்களை கடித வடிவில் வலைப்பதிவிடுகிறார்.

பயனுள்ளது.

Saturday, April 10, 2004

தமிழோவியம் கிரிக்கெட்

இந்த வாரம் தமிழோவியத்தில் இந்தியா-பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் பற்றி.

Thursday, April 08, 2004

பாகிஸ்தான் அணி வெற்றி

நான் லாஹூர் வந்த வேளை, இந்தியாவிற்கு நல்லதில்லை போல. இரண்டு மணிநேரங்களுக்கு முன்னர் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

இடையில் ஹாரப்பா சென்றபின், நேற்று இஸ்லாமாபாத், தக்ஷசீலம் சென்றேன். நிறைய படங்கள் எடுத்துள்ளேன். ஆனால் இங்கு இணைய இணைப்பு படுமோசம். அதனால் சென்னை வந்தபின்னர்தான் அதெல்லாம்.

இன்று மாலை வாகா எல்லைக்குப் போகலாம் என்ற எண்ணம்.

Tuesday, April 06, 2004

லாஹூர் டெஸ்ட் முதல் நாள்

அவசர அவசரமான பதிவு இது.

* ஆடுகளத்தில் எவ்வளவு புல் இருக்கும் என்பதுதான் பெரிய கேள்வி. பாகிஸ்தான் அணியில் யாரெல்லாம் வெளியே போகப் போகிறார்கள் என்பது அடுத்த கேள்வி.

* மோயின் கான், சக்லைன் முஷ்டாக் இருவரும் நீக்கப்படுகிறார்கள். ஷப்பீர் அஹமதுக்கு காலில் ஏதோ சரியில்லை. அப்துர் ரஸாக் தானாகவே கழண்டு கொள்கிறார். கம்ரான் அக்மல், அசீம் கமால், உமர் குல், டேனிஷ் கனேரியா உள்ளே வருகின்றனர். இந்தியாவிற்கு அஜீத் அகர்கார், ஜாகீர் கானுக்கு பதில்.

* திராவிட் டாஸில் வென்று தைரியமாக பேட்டிங் என்கிறார்.

* ஆடுகளத்தில் புல் சிறிது இருந்தாலும், பிரவுன் வண்ணத்திலேயே இருக்கிறது. அவ்வளவு பச்சை இல்லை. ஒருநால் மட்டுமே பந்து எழும்பி வரும் என்று தோன்றுகிறது.

* மொஹம்மத் சாமி தன் முதல் ஓவரில் ஆகாஷ் சோப்ராவை வீழ்த்தினாலும் அடுத்து சோயப் அக்தரும், சாமியும் சுமாராகவே பந்து வீசுகின்றனர். சேவாக் தன் ஆட்டத்தை சிறிது குறைத்துக் கொண்டாலும் ஆஃப் திசையில் அகலம் கொடுத்தால் அக்தரை தர்ட்மேனுக்கு மேல் சிக்ஸ் அடிக்கிறார். ஓட்டங்கள் குவிகின்றன.

* உமர் குல் பந்து வீச வருகிறார். ராவல்பிண்டி எக்ஸ்பிரஸை வீழ்த்தியவர்கள் பெஷாவர் ரிக்ஷாவை என்ன செய்யப்போகிறார்கள் என்ற கேள்விக்கு வித்தியாசமான விட கிடைக்கிறது.

* மிகத் துல்லியமான பந்து வீச்சால் குல் ஓட்டங்களே கொடுப்பதில்லை. முதலில் சேவாக் விக்கெட் கீப்பருக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆகிறார். அடுத்து டெண்டுல்கர் உள்ளே வரும் பந்து ஒன்றில் எல்.பி.டபிள்யூ ஆகிறார். சிறிது ஏமாற்றம்தான். திராவிடும், லக்ஷ்மணும் விளையாடுவது மிகவும் திருப்தி அளிப்பதாகவே இருக்கிறது. ஆனால் குல் பந்துவீச்சில் லக்ஷ்மண் விளிம்பில் தட்டி மீண்டும் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்கிறார். உணவு இடைவேளை 107/4.

* உணவு இடைவேளைக்குப் பின் திராவிடும், யுவ்ராஜ் சிங்கும் ஓட்டங்களை எடுக்கின்றனர். ஆனால் ஏமாற்றம் தரும் விதமாக திராவிட் தவறு செய்து முதல் ஸ்லிப்பிற்கு கேட்ச் கொடுக்கிறார். குல் நான்கு விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தி இந்தியாவின் முதுகெலும்பை உடைக்கிறார். இத்துடன் நிற்பதில்லை. அடுத்து பார்திவ் படேல் ஷாட் எதுவும் விளையாடாமல் எல்.பி.டபிள்யூ ஆகிறார். குல் முதல் முறையாக ஐந்து விக்கெட் எடுக்கிறார். தரையைக் குனிந்து முத்தமிடுகிறார். அடுத்து 'ஆல்-ரவுண்டர்' எனப்படும் அகர்கார் வருகிறார். சிறிது தடவி விளையாடி ஷோயப் அக்தரின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட். அக்தருக்கு இந்தத் தொடரின் முதல் விக்கெட்.

* அதைத் தொடர்ந்து யுவ்ராஜும், இர்ஃபான் பதானும் மிக அற்புதமாக விளையாடுகின்றனர். இதற்கிடையில் குல் ஏதோ காயம் காரணமாக உள்ளே சென்று விடுகிறார். 12 ஓவரில் 31 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் அக்தரும், சாமியும், கானேரியாவும் ஒன்றுக்கும் உதவாமல் பந்து வீசுகின்றனர். பதான் 49இல் கானேரியாவின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்கிறார். ஒரு நிமிடம் அங்கேயே நிற்கிறார், வெளியே போகவே விருப்பமில்லாமல். யுவ்ராஜ் அருமையான சதம் அடிக்கிறார், கடைசியாக கானேரியாவை அரங்கை விட்டு வெளியே அடிக்கப் போய் டீப் மிட்விக்கெட் திசையில் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழக்கிறார்.

* அரங்கில் 2000 பேர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

* இந்தியா பந்து வீச்சில் பதான் வெகுவாக ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசிக்கொண்டிருக்கிறார். அகர்கார் பந்து வீச்சில் சிறப்பாக எதுவும் இல்லை. பாலாஜியின் ஒரு நல்ல பந்தில் தக்ஃபீக் உமர் நடு ஸ்டம்பை இழக்கிறார். மற்றபடி யாரும் விக்கெட் எடுப்பது போலவே வீசுவதில்லை. கும்ப்ளே நன்கு வீசுகிறார். இன்று இந்தியா கும்ப்ளேயையே வெகுவாக நம்பியிருக்கும்.

* பாகிஸ்தான் நிச்சயமாக முன்னணியில் உள்ளது.

Sunday, April 04, 2004

பாகிஸ்தான் பயணம்

நேற்று அதிகாலை சென்னையிலிருந்து கிளம்பி, புது தில்லி வந்து, மாலை 17.30க்கு லாஹூர் கிளம்பினோம்.

பாகிஸ்தான் இண்டெர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் எங்களோடு கூட பயணம் செய்தவர்கள் அனில் கும்ப்ளே (அவசர அவசரமாக பெங்களூர் வந்து தனக்குப் பிறந்த குழந்தையைப் பார்த்து விட்டு இரண்டாவது டெஸ்டுக்காக மீண்டும் லாஹூர் வருகிறார்), நான்கு இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினர்கள் (கிர்மானி, மோரே ஆகியோர்), இர்ஃபான் பதானின் பெற்றோர்கள், மற்றும் கிரிக்கெட் பார்க்க வருபவர்கள்.

அனில் கும்ப்ளே லாஹூர் இறங்கியதும்தான் தனது விசா 'single entry' என்று கவனித்தார், அதை போனமுறை அணியோடு உள்ளே வந்தபோதே உபயோகித்திருந்தார். அவசர அவசரமாக குடியேற்றத்துறை அதிகாரிகள் ஏதோ முயற்சிகள் செய்துகொண்டிருந்தனர். ஒருவழியாக அவரை மீண்டும் பாகிஸ்தானுக்குள் அனுமதித்திருப்பார்கள் என்று நம்புவோம்!

பாகிஸ்தானில் என் நண்பர்கள் விமான நிலையம் வந்திருந்தனர். புதிதாகக் கட்டப்பட்டுள்ள, அழுக்ககள் அற்ற விமான நிலையம், சிறியதாக இருந்தது. எங்கள் தங்கும் விடுதி கதாஃபி ஸ்டேடியம் மிக அருகில் இருக்கிறது. (ஐந்து நிமிடங்கள் நடை)

ஹோட்டல் மேனேஜர் 'welcome to home' என்று வரவேற்றார். சிலர் பல இடங்களில் எழுதியிருந்தது போல வரவேற்பு எங்கும் பிரமாதமாக இருந்தது.

நேற்றி இரவு ஒரு புத்தகக் கடை சென்றிருந்தோம். இரண்டு புத்தகங்கள் வாங்கினேன்.

'The clash of fundamentalisms - Crusades, Jihads and Modernity' - Tariq Ali, Verso, 2002
'How to think like Benjamin Graham and invest like Warren Buffett' - Lawrence A. Cunningham, McGraw Hill, 2001 (Hardbound)

இரண்டும் சேர்த்து பாக். ரூ. 290 க்கு(!!) என்றார் கடைக்காரர். புதிய புத்தகம், ஒரிஜினல் பேப்பர் - நிச்சயமாக pirated இல்லை. இந்தியரா என்று வினவினார். ஆம் என்றவுடன், வைத்துக்கொள்ளுங்கள் ரூ. 250க்கு என்றார்! தேநீர் அருந்துவீர்களா என்னுடன் என்றார். அப்பொழுதுதான் இரவு உணவு முடித்து சென்றிருந்தோம். மறுத்தவுடன், 'போத்தல்' (மது) அருந்துவீர்களா என்றார். திகைத்து நின்றோம். பிறகு நன்றி கூறி, மறுத்து விட்டு, மீண்டும் வரும் நாட்களில் சந்திப்போம் என்று கூறி விட்டு வெளியே வந்தோம்.

தெருவில் போக்குவரத்து மிக மோசமாக இருக்கிறது. பைக்கில் செல்லும் இளைஞர்கள் கன்னா-பின்னாவென்று ஓட்டுகிறார்கள். தெருக்களில் கார்கள் எங்கும் இடைவெளியே இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன.

இன்னமும் அரை மணி நேரத்தில் ஹாரப்பா செல்கிறோம். நம் முன்னோர்கள் என்ன கட்டிடங்களை கட்டியிருந்தனர் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

Friday, April 02, 2004

தமிழோவியம் கட்டுரை

இந்த வாரம் தமிழோவியம் கிரிக்கெட் கட்டுரை.

முருகனின் மூன்று விரல்

இரா.முருகனின் அதி அற்புதமான இந்த நாவலின் விமரிசனத்தை மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு திண்ணையில் எழுதியுள்ளார். ஆங்காங்கே 'ஆ' காணாமல் போயுள்ளது. கவனமாகப் படிக்கவும்!

இரா.முருகனது படைப்புகளிலேயே இந்த நாவல்தான் நான் படித்த முதலாவது. இம்ம்மாதிரியான கதை சொல்லும் விதம், அதீத நகைச்சுவையுள் அமுங்கியிருக்கும் அதீத சோகம், மொழியின் சரளமும், ஈர்ப்பும் என்று என்னை மிகவும் கவர்ந்த நாவல்களின் முதலிடத்தைத் தொட்டது இந்நாவல்.

நான் எப்பொழுதோ எழுத ஆரம்பித்த விமரிசனம் இங்கே. பாதியிலேயே நிற்கிறது. இப்பொழுது ரெ.கா வின் விமரிசனம் இக்கதையை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது.

Wednesday, March 31, 2004

பாகிஸ்தான் தூதரகத்தில் ஒரு நாள்

இன்று காலை பாகிஸ்தான் விசா வாங்க சென்னையிலிருந்து புது தில்லிக்கு வந்தேன். லாகூரில் நடக்கவிருக்கும் இரண்டாவது டெஸ்டு போட்டியைப் பார்ப்பதாக எண்ணம்.

காலையில் விண்ணப்பத்தைக் கொடுத்து விட்டு, மாலை நான்கு மணியளவில் பாஸ்போர்ட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தகவல் கிடைத்தது. இன்று மாலையே மீண்டும் விமானம் ஏறி சென்னை போய்விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்.

இன்று நடந்த நிகழ்ச்சிகள் கீழே:

06.45 சென்னையில் விமானம் ஏறல்

09.20 புது தில்லி வந்தடைதல்

10.15 பாகிஸ்தான் தூதரகம் வந்தடைதல்.

தூதரகம் வாசலில் பலர் தட்டச்சு இயந்திரத்துடனும், கையில் விண்ணப்பப் படிவங்களுடனும் அமர்ந்துள்ளனர். அவர்களிடம்தான் விண்ணப்பப் படிவங்களைப் வாங்கி அதில் அவர்களையே தட்டச்சு செய்து தரச்சொல்லிப் பெற வேண்டும். விண்ணப்பப் படிவம் நான்கு இதழ்களாக உள்ளது. கார்பன் பேப்பரில் செய்யப்பட்டது. தட்டச்சு செய்தால் நான்கு படிவங்களிலும் நிரப்பப் பெறும். இதற்கான செலவு ரூ. 60.

10.25 விண்ணப்பப் படிவம் நிரப்பி முடிதல்

கிரிக்கெட் பார்ப்பவர்களுக்கு விசா வழங்கவென்று தனியாக ஒரு வரிசை துவங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ஏற்கனவே பலர் இருந்தனர்.

10.40 விண்ணப்பப் படிவத்தை பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் கொடுத்தல். அவர் பதிலுக்கு எந்த ரசீதையும் கொடுக்கவில்லை. மாலை வந்து பாஸ்போர்ட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு சொல்கிறார். விசா பெறும் கட்டணம் ரூ. 15 (!!)

ஆகா, வேலை முடிந்தது, மாலை 16.00 மணிக்கு விசா அடித்த பாஸ்போர்ட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கிளம்பி, தில்லி சரவணபவனில் உணவை முடித்தோம். மதியம் எங்கள் அலுவலகத்தில் தில்லிக் கிளைக்குச் சென்று சற்று கிரிக்கெட் பார்த்துவிட்டு (அதுதான் எங்கள் வேலையே!) நான்கு மணியளவில் மீண்டும் பாகிஸ்தான் தூதரகம் சென்றோம்.

16.00 வரிசையில் நிற்றல்

16.30 வரிசையில் நிற்றல்

17.00 கால் வலித்ததால் கீழே சிறிது உட்கார்ந்து விட்டு மீண்டும் வரிசையில் நிற்றல்

17.30 கவுண்டரில் ஆள் யாரையும் இன்னமும் காணவில்லை. விமான நிலையத்தைக் கூப்பிட்டு இரவு 16.50க்கு திரும்பிப் புறப்படவிருந்த பயணச்சீட்டை தற்காலிகமாக நிறுத்தியாயிற்று.

18.00 இன்னமும் ஆள் யாரையும் காணோம். சுற்றி சுமார் 60 பேர் விசா எதிர்பார்த்து நின்று கொண்டிருக்கின்றனர். அப்பொழுதுதான் முதல் டெஸ்ட் நான்காம் நாள் ஆட்டம் நிறைவு பெறுகிறது. பாகிஸ்தான் 207/9 இரண்டாவது இன்னிங்ஸில். சிலர் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளும் தொலைக்காட்சியில் கிரிக்கெட்டைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்றும், அது முடிந்துதான் பாஸ்போர்ட்டுகளை வழங்க வருவார்கள் என்றும் தெரிவிக்கின்றனர்!

18.35 கவுண்டர் திறக்கப்படுகிறது. சுமார் 2.35 மணி நேரம் தாமதமாக!

18.45 ஒரே குழப்பம். 70 பேர்கள் கவுண்டரைச் சுற்றிக் குழுமிக் கொள்கிறார்கள். இதற்கிடையில் கூட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் உரசி, கொஞ்சம் அடிதடி, கைகலப்பு ஏற்படுகிறது.

19.15 ஒருவழியாக என் பெயர் கூப்பிடப்பட்டு என் பாஸ்போர்ட் கிடைக்கிறது.

19.45 என்னுடன் வந்த மற்றவர்களின் பாஸ்போர்ட்டுகள் ஒரு வழியாகக் கையில் கிடைக்கின்றன

விசா அதிகாரி டமாலென்று கதவைச் சாத்திக் கொண்டு 'எஸ்கேப்' ஆகிறார்! இன்னம் பலருக்கு பாஸ்போர்ட்டுகள் கிடைக்கவில்லை. அவர்களுக்கு அடுத்த நாள் கிடைக்கும் என்கிறார். எப்பொழுது என்று சொல்லவில்லை. பலர் தங்கள் பாஸ்போர்ட் எப்பொழுது கிடைக்கும் என்று பரிதாபமாக நின்று கொண்டிருக்கின்றனர்.

ஒரு மாதிரியாக அந்த இடத்தை விட்டகன்று இரவு தங்க ஒரு விடுதியைப் பிடிக்கிறோம். நாளைக் காலை விமானம் பிடித்து சென்னை மீண்டும் வர வேண்டும். பிறகு சனியன்று சென்னை->புது தில்லி->லாகூர். ஆரம்பமே படு குழப்பம். பார்க்கலாம் போகப் போக எப்படியென்று.

Monday, March 29, 2004

விரேந்தர் சேவக் முச்சதம்

விரேந்தர் சேவக்
© Wisden CricInfo
கிரிக்கெட் டெஸ்டு போட்டிகளில் விரேந்தர் சேவக் இந்தியாவிற்காக முதல் முச்சதத்தை இன்று அடித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் நடந்த முதல் டெஸ்டு போட்டியில் இது நடந்தது.

எக்கச்சக்க அதிர்ஷ்டம் அவருக்கு. நான்கைந்து கேட்சுகள் கோட்டை விடப்பட்டன. ஒரு ரன்-அவுட் தடவப்பட்டது. இருந்தும், மிக வேகமாக, ஒரு மர்மக்கதையைப் படிக்கும் உணர்வைத் தூண்டிய 309 ரன்கள் சேவக்குடையது.

நூறாவது ரன் ஷோயப் அக்தரின் பந்தை தர்ட்மேன் திசையில் ஆறாக அடித்து எடுத்தார். முன்னூறாவது ரன் சக்லைன் முஷ்டாக்கின் பந்தை மிட் விக்கெட் திசைக்கு மேல் ஆறாக அடித்து எடுத்தார். இருநூறாவது ரன் நான்காகப் போய் விட்டது.

மற்றொரு பக்கத்தின் சச்சின் டெண்டுல்கர் இருநூறுக்கு ஆறு ரன்கள் குறைவாக இருக்கையில் திராவிட் ஆட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். பைத்தியக்காரத்தனமாக இருந்தது இந்த முடிவு! தனியொரு விளையாட்டு வீரரின் புள்ளிவிவரக் கணக்குகள் ஒரு அணிக்கு முக்கியமல்லதான். ஆனால் என்னவோ அந்த கடைசி ஆறு ரன்கள் எடுக்க டெண்டுல்கர் பல மணிநேரங்கள் செலவழித்துவிடுவது போலவும், அந்த நேரத்தில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆயிரக்கணக்கில் விக்கெட்டுகளைக் குவித்து விடுவது போலவும் திராவிடுக்கு ஒரு எண்ணம்.

அல்லது, ஒருவேளை கங்குலி சும்மா இல்லாமல் திராவிடை தூண்டிவிட்டுக்கொண்டே இருந்திருக்க வேண்டும். எதுவானாலும் இன்னமும் ஐந்து ஓவர்கள் கூட இந்தியா விளையாடியிருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

ஸ்கோர்போர்டு

கொசுறுச் செய்தி: ரஞ்சிக் கோப்பை இறுதியாட்டத்தில் மும்பையிடம் தமிழ்நாடு உதை வாங்கிக்கொண்டிருக்கிறது. நாளை ஒரு இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் ஜெயித்து மும்பை கோப்பையை வென்றுவிடும்.

Sunday, March 28, 2004

கட்டாயமா என்க்கு ஓட் போட்வீங்க!

பதர் சயீத், வக்ஃப் வாரியத் தலைவர், மற்றும் தென் சென்னைத் தொகுதிக்கான அஇஅதிமுக வேட்பாளர், தி.நகரில் பேசிய பேச்சு என்று தினமலரில் வந்ததிலிருந்து:
நம்ம எம்.பி., இப்ப சொன்னரு, அம்மாக்கு என்னா புட்க்கும். உண்மாய், நாண்யம், உழைய்ப்பு. இந்த மூனும் எங்கிட்ட இர்க்கு. அதனால என்ன வேய்ப்பாளரா நிர்த்தி வெச்சாங்க. என்க்கு கட்டாயமா ஓட் போட்வீங்க. எனக்கு ஜெயிக்க விட்டா நாட்க்கு நல்து செய்வன். என்க்கு டமில், இங்க்லீஷ், ஹிந்தி, பிரென்ச், உருது தெர்யும். எது தெர்யன்மோ அது என்க்கு தெர்யுது.

ஜெய்ச்சு வந்தா தொகதிக்கு வர்வீங்ளான்னு கேட்குது. கட்டாயமா வர்வேன். இருவத்தஞ்சு வர்ஷமா ஏழங்களுக்கு சேய்வை செய்றன். சுய உத்வி குழுக்கள்ல ஆயிரம் பெண்கள் இருக்கு.

எல்லா எட்த்துலயும் எங்கிட்ட ஒரு கேழுவி கேட்குது. முன்னால் எம்.பி., தொக்தி பக்கமா வர்லேன்னு. மொஹமே மர்ந்துட்டாங்க. என் மொஹம் மர்க்க முடியாது. ஒங்கள்க்கு என்ன தேய்வையோ ஒங்க குர்லே கொட்ப்பேன். அம்மாகிட்ட, டமில் நாட்ட முதல் மாநிலமா பண்றதுக்காக ஒழைப்பேன்னு கூறிக்கறேன். டமில் நாட்டுக்காக ஏழங்கள்க்காக ஒழைப்பேன். எதுமோ எதிர்பார்க்கலை. ஆண்டவன் நல்லபட்யா என்ன வெச்சிர்க்கான். ஒங்கள்க்கு சேய்வை செய்ணும். கட்டாயமா என்க்கு ஜெய்ச்சு வெப்பீங்க. இந்தியாவ இந்தியர்தான் ஆளுனும். வாஜ்பாய் வர்றதுதான் நல்லுது. ஒங்கள்க்காக அங்கே சண்ட போட்டுக் கொண்டு வர்வேன். என் தொகதிய மொதல் தொகுதியா பண்ணனும். நான் சிங்ஹம். கட்டாயமா என்க்கு ஓட் போட்வீங்க.

சாகித்ய அகாதமி விருது: அன்றும், இன்றும்

தமிழ்நாட்டில் எல்லோராலும் நேசிக்கப்பட்ட செல்லப்பிள்ளை அவர் [கண்ணதாசன்]. கல்கியில் அவர் தொடராக எழுதிய 'சேரமான் காதலி' சரித்திர நாவலுக்குச் சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தது. 'இதைவிட உங்கள் கவிதை நூல் எதற்காவது பரிசு கொடுத்திருக்கலாம்.' என்றேன் நான் அவரிடம். 'இதற்குக் கூடப் பரிசு கொடுக்காமலும் இருந்திருக்கலாம்!' என்றார் அவர் என்னிடம்! பரிசுகளை ஒருபோதும் அவர் பொருட்படுத்தியதில்லை.
பக். 117, சுவடுகள், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், 2003, பக் 184, ரூ. 200

கவிப்பேரரசு வைரமுத்துவை சாகித்திய அகாதமி விருதுபெற்ற விவகாரத்தில் வம்புக்கிழுத்தவர்கள், வைரநெஞ்சம் படைத்த என்னையும் சீண்டிப் பிடரியைச் சிலிர்க்கச் செய்திருக்கிறார்கள்.

நான் அகாதமி விருது பெற்றபோது அநியாயமாக என்னையும் விமரிசித்தார்கள்.

...

நான் ஓர் இலக்கணச் சுத்தமுள்ள இசைஞன். தம்பூரில் ஒலிக்கும் நுட்பமான அந்தரகாரத்தைப் போன்றவை என் படைப்புகள். எந்த ஆலாபனையையும் ஆலோசித்துச் செய்பவன். எனக்கே பிடித்த பைரவி (சரித்திரம்) ராகமானாலும், அதன் பாஷாங்க (கலப்புச்) சரமான சதுர்ஸ்ருதி தைவதத்தை எங்கு எப்படிப் பிரயோகித்தால் மூர்ச்சனை காட்டி மக்களைக் கவரும், மகோன்னதம் அடையும் என்கிற வித்தாரத்தை விதந்து அறிந்தவன்.

நான் எழுதிய 145 நூல்களும் 2 பத்திரிகைகளின் முதற்பரிசுகளும் 32 விருதுகளும் இதற்குச் சான்று பகரும். மிகுந்து நிற்பது ஞானபீடம்; அதையும் என் தமிழ் பெற்றுத் தரும்.
'இலக்கிய சாம்ராட்' கோவி.மணிசேகரன், அமுதசுரபி மார்ச் 2004.

தேர்தல்: அன்றும், இன்றும்

காமராஜ் பேச எழுந்தார். நல்ல உயரம். கறுப்பு நிறம். கண்களில் இனந்தெரியாத பிரகாசம். முழங்கால் வரை நீண்ட ராஜலட்சணமான கைகள். கிராமியப் பேச்சு. 'ஸ்தாபன காங்கிரசுக்கு வோட்டுப் போடுங்கள்' என்று அவர் ஒருபோதும் கேட்கவில்லை. 'இந்தக் கட்சியின் அறிக்கை, இவற்றையெல்லாம் வாக்குறுதியாகத் தருகிறது. எதிர்க்கட்சிகளும் வேறு சிலவற்றைச் சொல்கின்றன. மக்கள் சீர்தூக்கிப் பார்த்து, தங்களுக்கு நல்ல கட்சி என்று தோன்றும் கட்சிக்கு மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்.' இப்படிப் பேசிவிட்டுப் புறப்பட்டார்.

அடுக்குமொழி இல்லை. ஆரவாரம் இல்லை. நகைச்சுவை இல்லை. இலக்கணத் தமிழைக்கூட அவர் பயன்படுத்தவில்லை. ஆனால் நெஞ்சைத் தொடும் பனியன்களைத் தயாரிக்கும் திருப்பூர் நகர மக்கள் அனைவரின் நெஞ்சைத் தொட்ட பேச்சு அது. காரணம் அவர் பேச்சில் சத்தியம் இருந்தது. நான் உங்களில் ஒருவன் என்கிற தொனி இருந்தது. உதட்டிலிருந்து பேசாமல் மனத்திலிருந்து பேசினார் அவர்.
பக்: 72, சுவடுகள், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், 2003, பக் 184, ரூ. 200

சோனியாவுக்கு தேச பக்திதான் இல்லை. பதி பக்தியாவது இருக்க வேண்டாமா? தன் கணவரின் கொலைக்குக் காரணமாயிருந்தவர்களை ஆதரித்தவர்களுடன் கூட்டு சேர்கிறாரே?
ஜெயலலிதா, தேர்தல் கூட்டம், circa மார்ச் 2004

Buy NHM BOOKS on

Amazon

Kizhakku Nalam Varam

ஷெர்லாக் ஹோம்ஸ்

என் புத்தகங்களை வாங்க!

  
  
  
  

துறைகள்