எண்ணங்கள்
  பின்தொடரும் நிழலின் குரல்

இந்தப் பதிவு ஜெயமோகனைப் பற்றியில்லை. RSS பற்றியும் இல்லை! Trackback பற்றி.

Trackback அல்லது பின்தொடர்தல் என்றால் என்ன? வெங்கட் வலைப்பதிவுகளின் சாத்தியங்கள் பற்றி (மூன்றாம் வலை பற்றிய கட்டுரைத் தொடர்) எழுதிவருகிறார். அதையும் படிக்கவும்.

டயரியில் பென்சிலால் எழுதி வந்தீர்கள். அது யார் கையில் கிடைத்ததோ அவர்களால் மட்டுமே படிக்க முடிந்தது. அதுவே வலைப்பதிவு என்று இணையத்தில் வந்தவுடன் பல வழிகளில் மக்களால் படிக்க முடிந்தது.
  1. யாருக்கெல்லாம் உங்கள் வலைப்பதிவின் முகவரி தெரிகிறதோ, அவர்கள் நேரிடையாக அந்த முகவரியை உலாவியில் தட்டுவதன் மூலம்
  2. ஒருவரது இணையத்தளம்/வலைப்பதிவில் உங்கள் வலைப்பதிவு முகவரிக்குத் தொடர்பு கொடுத்திருப்பதைத் தட்டி, அதன் மூலம்
  3. கூகிள்/யாஹூ!/எம்.எஸ்.என் தேடுதல்கள் மூலம்

அதற்குமேல் என்ன செய்ய முடியும்?

உங்கள் வலைப்பதிவு, செய்தி நிறுவனங்கள் நடத்தும் தளம் அல்ல. அதனால் அமாவாசைக்கொருதரமோ, ஆடிக்கொருதரமோ தான் புதிய பதிவுகள் இருக்கும். சில நாட்கள் ஒன்றுமே எழுதியிருக்க மாட்டீர்கள். சில நாட்கள் பல குறிப்புகள் வரைந்திருப்பீர்கள். படிக்க ஆசைப்படுபவருக்கு எப்பொழுது புதிதாக உங்கள் வலைப்பதிவில் ஒரு துண்டு வந்துள்ளது என்று தெரியும்? அதற்குத்தான் RSS செய்தியோடை என்றதொரு வசதி உள்ளது. உங்கள் வலைப்பதிவிற்கென ஒரு செய்தியோடையை உருவாக்குகிறீர்கள். உங்கள் வலைப்பதிவைப் பெற விரும்புபவர் அந்த செய்தியோடையைத் தன் RSS செய்தியோடைத் திரட்டியில் புகுத்திவிடலாம்.

நீங்களாகப் பல்வேறு வலைப்பதிவுகள், இணையத்தளங்கள் என்று சுற்றிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. உங்கள் செய்தியோடைத் திரட்டி தானாகவே அந்த வேலையைச் செய்து, புதிதாக ஏதேனும் எழுதப்பட்டுள்ளதா என்று கண்டறிந்து அதனை உங்கள் திரைக்குக் கொண்டுவந்து சேர்க்கும். பல RSS திரட்டிகள் உள்ளன. அவற்றைப் பற்றி முழுதாக அறிந்துகொள்ள கீழ்க்கண்ட பதிவுகளைப் படியுங்கள். [வெங்கட், பரிமேலழகர், என்னுடையது, செல்வராஜ்]

உங்கள் வலைப்பதிவுச் செய்தி ஒன்றைப் பார்த்து பலர் உடனடியாக மறுமொழி கொடுக்க விரும்பலாம். நீங்கள் எழுதியிருப்பது அவருக்குப் பிடித்திருக்கலாம் [உங்கள் எழுத்து சூப்பர்!], கடுப்பேற்றலாம் [பெரிய புடுங்கின்னு நெனச்சிட்டு எழுத வந்திட்டியா?], உங்களை வேறு ஒருவர் எழுதியிருப்பதைப் பார்க்கச் சொல்லலாம் [சும்மா எழுத வரதுக்கு முன்னாடி அந்தாண்டப் போயிப் பார்த்து, படிச்சிட்டு வாய்யா!]. இதற்கென 'Comments/feedback/பின்னூட்டம்/மறுமொழி' எனும் வசதியை உங்கள் வலைப்பதிவுடன் சேர்க்கலாம். இந்த வசதி சேர்ந்தால்தான் உங்கள் வலைப்பதிவு அடுத்த தளத்திற்குச் செல்கிறது.

சரி, உங்கள் பதிவிற்கென நான் அளிக்க இருக்கும் மறுமொழி ஒன்றிரெண்டு வரிகள் என்றால் பரவாயில்லை. அதுவே ஒரு கட்டுரை முழுக்க (ஜெயமோகன் எழுதுவது போல்) நிரம்பி வழியக்கூடியது என்றால் என்ன செய்ய? அதை உங்கள் பதிவின் மறுமொழியில் போடுவது கடினம். சில 'இலவச மறுமொழி' வசதிகளில் 300 எழுத்துகளுக்கு மேல் இருக்க முடியாது. இதற்கு ஒரே வழி, என்னுடைய வலைப்பதிவில் உங்கள் வலைப்பதிவைச் சுட்டி, என் விவாதத்தை மேலே தொடருவதுதான்.

அப்படிச் செய்துவிட்டால், நான் உங்கள் பதிவு ஒன்றைப் பற்றி எழுதியிருக்கிறேன் என்று உங்களுக்கு எப்படி நான் தெரிவிப்பது? அப்பொழுதுதானே நீங்கள் வந்து என் பதிவைப் படிக்க முடியும், படித்தபின், என்னுடனான சண்டையைத் தொடர முடியும்? அதற்குத் துணைபுரிவதுதான் பின்தொடர்தல் (அ) trackback.

இது எப்படி வேலை செய்கிறது?

நான் எழுத வேண்டிய பதிவை முதலில் எழுதி முடிக்கிறேன். அதில் உங்கள் பதிவிற்கான சுட்டியை (எதை வைத்து நான் என் கட்டுரையை எழுதினேனோ, அதை/அவற்றை) கட்டுரையின் உள்ளேயே கொடுக்கிறேன். இந்தச் சுட்டிகள் பலருடைய வலைப்பதிவுகளாக இருக்கலாம். அவ்வாறு செய்தவுடன், என் வலைப்பதிவைப் பிரசுரிக்கிறேன். அதன்பிறகு, எந்தெந்தக் கட்டுரைகளை என் கட்டுரையின் சுட்டியுள்ளேனோ, அவற்றின் பின்தொடர் சுட்டிகளைச் (இவை trackback URLகள் எனப்படும். வலைப்பதிவு URLகள் அல்ல இவை.) சேர்த்தெடுத்து 'ping' செய்கிறேன். உங்கள் வலைப்பதிவின் பின்தொடர்தல் பகுதியில் இதற்கான வழிமுறை இருக்கும்.

எடுத்துக்காட்டினை இப்பொழுது பார்ப்போம்:

ஐராவதம் மகாதேவனின் பேச்சை வைத்து எழுதிய என் வலைப்பதிவு "தமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 3" என்பதன் சுட்டி http://thoughtsintamil.blogspot.com/2004_02_29_thoughtsintamil_archive.html#107806377479850385

இதே கட்டுரையின் பின்தொடர் சுட்டி http://haloscan.com/tb/bseshadri/107806377479850385

பா.ராகவன் தன் வலைப்பதிவில் என் கட்டுரையைச் சுட்டி "ஐராவதம் மகாதேவன்" என்ற தலைப்பில் எழுதினார். அதை எழுதியபின், என் வலைப்பதிவுக் கட்டுரைக்கு தன் 'பின்தொடர்தல் சேவை' மூலம் http://haloscan.com/tb/bseshadri/107806377479850385 என்ற என் பின்தொடர் சுட்டிக்கு 'ping' செய்தார். இதனால் என் வலைப்பதிவைப் பார்க்கும் அனைவருக்கும் Trackback என்னும் பகுதியை கிளிக் செய்தால் ராகவன் இந்தக் கட்டுரையைப் பற்றித் தன் வலைப்பதிவில் எழுதியுள்ளார் என்பது தெரிகிறது. இப்படி என் கட்டுரையை 'refer' செய்து, பின்தொடர் சுட்டியை 'ping' செய்த அனைவரது கட்டுரைகளும் என் வலைப்பதிவில் இடம் பெறுகின்றன. இதன் மூலம் யாரெல்லாம் என் கட்டுரையை அடியொட்டி எழுதியுள்ளனர் என்பதை நானும், என் வலைப்பதிவுக்கு வரும் மற்றவர்களும் கண்டுபிடிக்கலாம், அந்தந்த இடங்களுக்குச் சென்று அந்தக் கட்டுரைகளையும் படிக்கலாம்.

வலைப்பதிவுகளில் வேறென்ன வித்தை இருக்கிறது? உங்கள் வலைப்பதிவுக்கு எவ்வளவு பேர்கள் வருகின்றனர்? எங்கிருந்து வருகின்றனர்? வந்தபின் எங்கு செல்கின்றனர்? இப்படி 'access statistics' அனைத்தையும் அறிந்துகொள்ள உங்களுக்கு ஆசையாயிருக்கலாம். அதைச் செய்யவும் பல வழிகள் உள்ளன.

ஆக, ஒரு வலைப்பதிவில் என்னென்ன தொழில்நுட்பங்கள் அமைந்திருக்கவேண்டும் என்று இப்பொழுது ஒரு தொகுப்பாகப் பார்ப்போம்:

 

  தேர்தல் சுவரொட்டிகள் - 1

தேர்தல் நெருங்கியதும் சுவர்கள் எல்லாம் சுவரொட்டிகளாலும், வண்ணப் படங்களாலும் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் வித்தியாசமாகக் கண்ணில் படுவதைப் படமெடுத்து உங்களுக்குத் தருவதில் மகிழ்ச்சியடைகிறேன். முதலாவதாக 'இந்தியன்' என்ற பேர்/அமைப்பு எதையும் சொல்ல விருப்பமில்லாத நபர் அடித்து ஒட்டியுள்ள சுவரொட்டி இதோ:



இத்தாலிநாட்டு பெண்மணியும்,
இலங்கை விடுதலை புலிகளின் ஆதரவாளர்களும்,
இந்திய திருநாட்டை ஆளமுயற்ச்சிப்பதை
அனுமதியோம்..! அனுமதியோம்..!
- இந்தியன்

[ஒற்றுப்பிழைகளுடன் சுவரொட்டிகளை அச்சிடுவதே இப்பொழுது வாடிக்கை]
 

  பாரதீய பாஷா பரிஷத் விருது

பா.ராகவனுக்கு 'பாரதீய பாஷா பரிஷத்' விருது வழங்கப்பட்டதல்லவா? கொல்கத்தாவில் விருது வழங்கப்பட்டபோது எடுத்த புகைப்படம், இங்கே. சால்வையைப் போர்த்துபவர் உத்திரப் பிரதேச ஆளுநர் விஷ்ணு காந்த் சாஸ்திரி.



 

  RSS செய்தியோடைத் திரட்டு

RSS செய்தியோடைத் திரட்டு பற்றி காசி எழுதியுள்ளார். [காசி: பின்தொடர்தல் (trackback) வசதியை இன்னமும் செய்யவில்லையே? பரி தன் வலைப்பதிவில் நூக்ளியஸில் இதனைச் செய்துள்ளார், அவரைப் பிடிக்கவும்...]

ஒரு RSS படிப்பானை என்னுடைய வலைப்பதிவை நோக்கிக் காண்பித்தால் அது தானாகவே RSS செய்தியோடையின் முகவரியைக் கண்டுபிடித்து விடுகிறது என்றும், இது எப்படி சாத்தியம் என்றும் கேள்வியை எழுப்பியிருந்தார். இது RSS Auto discovery என்னும் முறையில் செயல்படுகிறது. பல RSS படிப்பான்கள் index.rdf என்றுள்ள முகவரி இந்த இணையப்பக்கத்தில் உள்ளதா என்று தேடும். அப்படி இருந்தால் அது ஒரு RSS செய்தியோடைதான் என்று நிச்சயம் செய்துகொண்டு தானாகவே அந்த RSS செய்தியோடையைப் படிக்க ஆரம்பித்து விடும்.

மற்றுமொரு வழியும் உண்டு. உங்கள் RSS செய்தியோடைக் கோப்பின் பெயர் .rdf என்று முடியவில்லை என்றால் (காசியின் செய்தியோடையின் பெயர் http://kasi.thamizmanam.com/xml-rss2.php), உங்கள் HTML பக்கத்தில், </head> வருமுன்னால் கீழ்க்கண்ட வாசகத்தை இணைத்துக்கொள்ளவும். இங்கு என்னுடைய செய்தியோடை முகவரியைத் தவிர்த்து உங்கள் செய்தியோடை முகவரியை எழுத வேண்டும்.
<link rel="alternate" type="application/rss+xml" title="RSS" 
href="http://thoughtsintamil.blogspot.com/rss/index.rdf">

நான் நியூஸ்மான்ஸ்டர் என்னும் மொசில்லா உள்ளிருந்து இயங்கும் RSS படிப்பானைப் பயன்படுத்துகிறேன். அதுபற்றி நான் முன்னர் எழுதியிருந்த பதிவு.

செல்வராஜ் தான் ஷார்ப்ரீடர் என்னும் செய்தியோடைத் தொகுப்பானைப் பாவிப்பதாக எழுதியிருந்தார். நான் அதைத்தான் நேற்று ராகவனது கணினியில் நிறுவியிருந்தேன். ஷார்ப்ரீடர் ஆடம் ஓடைகளையும் படிக்கிறது என்பதால் அதற்குத் தாவியுள்ளதாகச் சொல்கிறார். நான் இன்னமும் நியூஸ்மான்ஸ்டரில்தான் உள்ளேன். ஆடம் ஓடையை நேரிடையாகப் படிக்க முடியாவிட்டாலும் http://www.2rss.com/atom2rss.php?atom=http://writerpara.blogspot.com/atom.xml என்று RSS ஆக மாற்றிப் படிக்கிறேன்.
 

  ஐராவதம் மகாதேவன் பற்றி மேலும்

போனவாரம் சென்றிருந்த ஐராவதம் மகாதேவனின் பேச்சு பற்றி என் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். பகுதி ஒன்று | இரண்டு | மூன்று.

ஐராவதம் மகாதேவன் Frontline இதழில் எழுதிய கட்டுரையின் சுட்டி இதோ: Orality to literacy: Transition in Early Tamil Society

அன்றைய பேச்சிலிருந்து நான் குறிப்பிட மறந்த சில செய்திகள்:

* கல்வெட்டுகளில் எழுதியிருப்பதை ஆரம்பத்தில் ஆங்கிலேய, ஐரோப்பிய அறிஞர்கள் பிறரைக் கொண்டு (உள்ளூர்க் கூலிகளைக் கொண்டு என்று வைத்துக்கொள்வோமே?) தாளில் மை கொண்டு பூசி, கல்வெட்டு எழுத்துகள் தாளில் பதியுமாறு செய்து அதனைத் தங்களிடம் வரவழைத்து, (ஊட்டியிலோ, கொடைக்கானலிலோ உட்கார்ந்து கொண்டு) படித்தார்கள். இதனால் அவர்களது படிப்பில் பல குளறுபடிகள் நிகழ்ந்தன. கல்லின் மேடு பள்ளங்கள், நாளைடவில் ஏற்பட்டிருந்த சேதங்கள் ஆகியவை 'noise' ஐ உருவாக்கியதால் ஒழுங்காக இந்த எழுத்துகளை வகையறுக்க முடியவில்லை. அதனாலேயே மகாதேவன், தான் நேரடியாக இந்த இடங்களுக்குச் சென்று எழுத்துகளைப் படிக்க முயன்றதாகச் சொன்னார். தமிழக அரசுப் பணியில் கைத்தறித் துறைச் செயலராக இருந்தபோது இந்த வாய்ப்பு தானாகவே தனக்குக் கிடைத்தது என்றார்.

* இப்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்ததனால் டிஜிட்டல் கேமரா போன்றவைகளால் படம் பிடித்து, கணினிகளைக் கொண்டு படங்களின் தரத்தை உயர்த்தி (enhancing the digital images) பின்னர் அவற்றை வகைப்படுத்த முடிகிறது என்றார். ஐஐடி சென்னை இதற்கென இவருக்கு நிறைய உதவிகள் செய்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

* இந்த அரிய கல்வெட்டுகள் இப்பொழுது அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் ஆதங்கப்பட்டார். எப்படியெல்லாம் அழிகின்றன? இன்றைய காதலர்கள் இந்தக் கல்வெட்டுகளில் மீது தங்கள் பெயர்களைப் பொறித்து பழைய செய்திகளையெல்லாம் அழித்து விடுகின்றனர். கல் குவாரிகளுக்குக் குத்தகை விடுவதாலும் பலர் டயனமைட் வைத்து அரிய கல்வெட்டுகள் உள்ள மலைகளை உடைத்து கிரானைட் ஆக்கி விற்றுவிடுகின்றனராம்.

இந்த இரண்டினாலும் நம் வரலாற்றுப் பதிவுகளை நாம் தினமும் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த இழப்பை நிறுத்த, அரசுகளால்தான் முடியும்.

====

ஐராவதம் மகாதேவன் கல்வெட்டியல் அறிஞர் மட்டுமல்ல. தினமணி செய்தித்தாளின் ஆசிரியராக இருந்தவர். அவரைப் பற்றி பா.ராகவன் எழுதிய கட்டுரை இதோ.
 

  தமிழோவியம் கிரிக்கெட் பத்தி

இந்த வாரம் தமிழோவியத்தில் என்னுடைய கட்டுரை.
 

  அத்வானியின் ரதம்

அத்வானி 'பாரத் உதய் யாத்ரா' என்று கன்யாகுமரியிலிருந்து ஆரம்பித்து நாடெங்கிலும் சுற்றப் போகிறாராம். ஆக 'பாரத் உதய்' (India shining, இந்தியா ஒளிர்கிறது) மத்திய அரசின் சாதனையாக ஆரம்பித்து, தே.ஜ.கூ கூட்டணியின் சாதனையாகி, பா.ஜ.க சாதனையாகி, இப்பொழுது அத்வானியின் சாதனையாகியுள்ளது.

வீடியோ முன் கையும், களவுமாகப் பிடிபட்ட திலீப் சிங் 'மீசைக்கார' ஜுதேவின் ஸ்வராஜ் மாஸ்தா பஸ் இது.

அரசியலை விடுவோம். இந்த வண்டியில் உள்ள சவுகரியங்கள் இதோ:

* முற்றும் ஏர்-கண்டிஷன் செய்யப்பட்டது
* நான்கு ஓட்டுநர்கள், 12 பேர் அமரும் வசதி
* இரண்டு சோஃபாக்கள்
* இணைய இணைப்புள்ள மடிக்கணினி
* பேக்ஸ் கருவி
* தொலைக்காட்சிப் பெட்டி, CD/VCD/DVD பார்க்கும் வசதி
* ஹைட்ராலிக் லிப்ட் வசதியுடன் மேல் பக்கம் திறந்து அதன்வழியே அத்வானி மேலேற்றப்பட்டு மக்களை நோக்கிப் பேசக் கூடிய வசதி

கேள்விகள்:

1. இணைய இணைப்பு எப்படிக் கிடைக்கிறது? VSAT வழியாகவா? இல்லாவிட்டால் எல்லோருக்கும் கிடைக்கும் ரிலையன்ஸ் CDMA வழியாகவா? அத்வானி புண்ணியத்திலாவது இவர் போகும் வழியெல்லாம் அரசு செலவில் இலவச wi-fi hotspots போட்டுக்கொண்டே போகலாமே?

2. "எனக்கும் வேணும்" என்று ஜெயலலிதா எப்பொழுது அடம் பிடிக்கப் போகிறார்?

3. கருணாநிதி என்ன ஜோக் அடிக்கப்போகிறார்?
 

  அந்த நாள் ஞாபகம் - soc.culture.tamil

செல்வராஜ் 'இனிய தோழி சுனந்தாவிற்கு' என்று ஒரு கடித வரிசை எழுதுகிறார்.

இல்லை. ஏற்கனவே 1993இல் soc.culture.tamil (SCT) என்னும் usenet newsgroups இல் எழுதியதை இன்று வலைப்பதிவில் மீள்பதிவு செய்கிறார்.

முதலில் SCTஇல் இந்தக் கடிதங்கள் வந்தபோது அவற்றைப் படித்தவர்களில் நானும் ஒருவன். ரோமன் எழுத்துகளில் தமிழ் படிப்பது என்பது கொடுமையானது. கண் வலிக்கும். மதுரை எழுத்துமுறை என்று ASCII எழுத்துகளை வைத்து நான்கைந்து வரிகளில் தமிழ் எழுத்துகள் போல் தெரியுமாறு குண்டு குண்டாக தமிழ் எழுத்துகளை வடிவமைத்திருந்தார் பாலா சுவாமிநாதன் என்பவர். அதன்மூலம் ரோமன் எழுத்துகளில் எழுதியிருந்த தமிழைப் படிக்க ஒரு வழி இருந்தது.

பாலா சுவாமிநாதனின் தம்பி ஞானசேகரன் சுவாமிநாதன் என்பவர் அப்பொழுது X இல் தமிழ் எழுத்துகள் வருமாறு ஒருசில சோதனைகளைச் செய்து வந்தார். அந்த சமயத்தில் நானும் முன்-பின் ஒன்றும் தெரியாமல் X சாளரங்களுக்கு தமிழில் ஒரு .bdf எழுத்துரு ஒன்றைச் செய்து அதைப்பற்றி சந்தோஷமாக SCTக்கு தகவல் கொடுத்திருந்தேன்.

பின்னர் ஞானசேகரன் என்னிடம் தொடர்பு கொண்டு, ஆளாளுக்கு புதிய எழுத்துருவையும், எழுத்துக் குறியீட்டினையும் கண்டுபிடிக்க முயலாமல் ஒன்றாய்ச் சேர்ந்து உழைக்கலாமே என்று கேட்டுக்கொண்டார். ஞானசேகரனின் கைவண்ணத்தில் வெளியானதுதான் LibTamil, m2t ஆகியவை. [இதைப்பற்றியும் செல்வராஜ் தன் கட்டுரையில் எழுதியுள்ளார்.] LaTeX உடன் சேர்த்து தமிழில் லினக்ஸ்/யூனிக்ஸ் கணினிகளில் தமிழில் அச்சுக்கோர்ப்பது அனைவர் கைக்கும் கிடைத்தது.

LibTamil மூலமாக X செயலிகள் அனைத்திலும் தமிழில் படிக்கக்கூடிய வசதியினைச் செய்ய முடிந்தது. X செயலிகள் அனைத்தும் திறந்த ஆணைமூலச் செயலிகளாக இருந்ததனால், அவற்றினை LibTamil கொண்டு recompile செய்துவிட்டால் எங்கெல்லாம் \bt \et என்று வருகிறதோ அதற்கிடையில் உள்ளதை ரோமன் எழுத்துகளில் எழுதிய தமிழ் என்று கண்டுபிடித்து அதனைத் தமிழாக்கி தமிழ் எழுத்துருவில் நீங்கள் பயன்படுத்தும் X செயலி காண்பித்து விடும். xedit - தமிழில் எழுத; xmail - தமிழில் மின்னஞ்சல் அனுப்ப; xrn - தமிழில் usenet newsgroup SCTஐப் படிக்க என்று 1993இலேயே முடிந்தது. உதாரணத்திற்கு என்னுடைய இந்த அஞ்சலைப் பாருங்கள். இதை LibTamil கொண்டு மாற்றிய xrnஇல் தமிழிலேயே படிக்கலாம்.

அன்றைய தினத்தில் லினக்ஸ்/யூனிக்ஸ் கணினி கொண்டு இணையத்தில் புழங்கியவர்களே அதிகம். மைக்ரோசாஃப்ட் கணினிகள் இணையத்தில் இணைவது எப்படி என்று தடுமாறிய காலம். அதன்பின் இன்றுவரை எத்தகு மாற்றங்கள்!
 

  Livelihood Advancement Business School - LABS

நேற்று லாப்ஸ் எனப்படும் ஒரு கல்வி நிலையத்துக்குப் போயிருந்தேன்.

சோம.வள்ளியப்பன் (திசைகள் இயக்கத்தில் அவ்வப்போது அடிபடும் பெயர், பல சுய-முன்னேற்ற நூல்கள், வியாபாரம் பற்றிய நூல்கள் எழுதியுள்ளார்) சென்னையில் இந்த நிறுவனத்தின் மண்டல இயக்குனராக உள்ளார். ஆம்பூரிலிருந்து ரயில்வண்டியில் வரும்போது அவர் சொன்னதை வைத்து திங்கள் அன்று போய்ப் பார்த்தேன்.

Dr. Reddy's Labs எனப்படும் மருந்துகள் தயாரிக்கும் நிறுவனத்தின் (pharmaceutical company) நிறுவனர் டாக்டர் அஞ்சி ரெட்டியின் முயற்சியால் உருவான தொண்டு நிறுவனமே LABS. இந்த நிறுவனத்திற்கு Dr. Reddy's Labs மற்றும் Dr. Reddy's Foundation for Human and Social Development இரண்டும் நிதியுதவி அளிக்கின்றன. இவற்றைத்தவிர மற்ற பல லாபநோக்குள்ள நிறுவனங்களும், அரசுசாரா அமைப்புகளும் லாப்ஸுக்கு உதவிபுரிகின்றன. ஹைதராபாத், சென்னை, மும்பை, தில்லி ஆகிய இடங்களில் லாப்ஸ் பள்ளிகளை நடத்தி வருகிறது.

இந்த அமைப்பின் நோக்கம் சமுதாயத்தின் விளிம்புகளில் உள்ள, போதிய படிப்பில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வண்ணம் கல்வி அளித்து அவர்களுக்கு தக்க வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதே. முக்கியமாக பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களில் உள்ள இளைஞர்களுக்கு படிப்பு பாதியில் நிறுத்தப் படுகிறது. பலர் பத்தாவது, பனிரெண்டாவது படிப்புடன் மேற்படிப்பிற்குப் போக முடியாத நிலையில் உள்ளார்கள். பலர் 10/12 வகுப்புத் தேர்விலேயே தேறாமல் உள்ளனர். இந்நிலையில் வேலை என்பது இந்த இளைஞர்களுக்குக் கிடைப்பது வெகு கடினம். இதனால் வேலையின்றி வெட்டித்தனமாக ஊர் சுற்றுவதால் கெட்ட நட்பும், பழக்கங்களும் ஏற்படுகின்றது.

லாப்ஸ் அமைப்பின் மூலம் இருபால் இளைஞர்களுக்கும் தொழிற்கல்விப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு அறையில் கிட்டத்தட்ட பத்து பெண்களுக்கு முதியோர்/நோய்வாய்ப்பட்டோரைக் கவனித்துக் கொள்ளும் பயிற்சியினை (Health and Home Care Services) அளித்துக் கொண்டிருந்தார் ஒரு ஆசிரியை. அவர்களிடம் பேச்சுக் கொடுத்ததில் மாதம் ரூ. 1,500 வரை வருமானம் வருமாறு இந்தப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார். மற்றுமொரு அறையில் கணினிப் பயிற்சி (Data Entry) நடந்துகொண்டிருந்தது. உணவகங்களில் வேலை பார்க்கப் பயிற்சி (Hospitality Services), விற்பனை/நுகர்வோர் உதவி ஆகிய துறைகளில் பயிற்சி (Sales and Customer Support) மற்றுமொரு அறையில் நடந்து கொண்டிருந்தது.

பெப்ஸி நிறுவனத்தில் இருந்து ஒரு அதிகாரி வந்து சில மாணவர்களை நேர்முகத் தேர்வு செய்து கொண்டிருந்தார். பத்து, பதினைந்து பேருக்கு அந்த நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் வேலை கிடைக்கும் என்று சொன்னார் வள்ளியப்பன். இதுவரை லாப்ஸ், சென்னையில் 300க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகளுக்குப் பயிற்சி அளித்து அதில் பலருக்கு வேலை வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

இப்படி ஒரு தொண்டு நிறுவனம் பார்க்க மனதுக்கு நிறைவாக உள்ளது. நான் ஒருசில மாணவ, மாணவிகளுடன் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

இந்த நிறுவனம் மேலும் பல இளைஞர்களுக்கு வாழ வகைசெய்யுமாறு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருமென்று நம்பிக்கை இருக்கிறது.

சென்னை முகவரி:
LABS
617, First Floor, Anna Salai
Thousand Lights, Behind Saffire Theatre
Chennai 600 086
Ph: 044-2829-0041/3656/2080
 

  தமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 3

காப்பி முடிந்து, வந்திருந்த சென்னைப் பெரிய மனிதர்கள் ஒருவரோடொருவர் அளவளாவி முடிந்ததும், கேள்வி, பதில்கள் ஆரம்பித்தன. சுத்தமான ஆங்கிலத்தில் (அவ்வப்போது தமிழ்ச் சொற்களைத் தூவி) கேள்விகள் கேட்கப்பட்டன, அப்படியே பதில்களும் வழங்கப்பட்டன. (ஒருசிலர் அபத்தமான ஆங்கிலத்திலும் கேள்விகள் கேட்டனர், அபத்தமாக இருந்தாலும் ஆங்கிலத்தில் கேள்வி கேட்பதே பெருமை என்று நினைத்தனர் போலும்.) முதலில் கேள்விகள் கேட்ட சிலர் இரண்டு நிமிடங்கள் மகாதேவனின் பேச்சைப் புகழ்ந்து கடைசியில் சப்பென்ற கேள்விகளாய்க் கேட்டனர்.

கீழே ஒருசில கேள்விகளையும், பதில்களையும் தொகுத்துள்ளேன்.

1. தமிழ் எண்களுக்கான வரிவடிவம் எப்பொழுது தோன்றியது?

எழுத்துகளுக்கான வரிவடிவம் தோன்றியபோதே எண்களுக்கான வரிவடிவமும் தோன்றியிருக்க வேண்டும். அரிக்கமேடு கல்வெட்டுகளில் எண்களும் காணப்படுகின்றன.

2. இரண்டு 'ர'/'ற' ஏன்?

தொடக்கத்தில் 'ற'வுக்கு 'ர' சத்தம் கிடையாது. [நான் சொல்வது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். -பத்ரி], யாழ்ப்பாணத்தில் உச்சரிப்பதுபோல் 'ட்ர' (?) என்றுதான் இருந்தது, பின்னர் அழுத்தமான 'ர' ஆனது.

3. ஆயிரம் வருடங்களாக அப்படியே இருக்கிறதே தமிழ் [குறளைச் சுட்டிக்காட்டினார் கேள்வி கேட்டவர்: "சொல்லுதல் யார்க்கும் எளிதாம், அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்"], இது தமிழின் தேக்கத்தைக் குறிக்கிறதா (static), இல்லை, தமிழின் தாங்கும் சக்தியைக் (resistance power) குறிக்கிறதா?

இரண்டுக்குமிடையில் உள்ளது. ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகியும் தமிழால் பிறமொழியின் தாக்கத்தைத் தடுக்க முடிகிறது, தூய்மையை நிலைநிறுத்திக்கொள்ள முடிகிறது, சக்தியுடன் இருக்க முடிகிறது. அதன் சமகாலத்திய மொழிகளான வேதிக் சமஸ்கிருதம், லத்தீன், கிரேக்கம் ஆகியவை இன்று அழிந்துவிட்டாலும் தமிழால் இன்னமும் தாக்குப் பிடிக்க முடிகிறது. அதே சமயம் தமிழானது பிறமொழிச் சொற்களை ஒரேயடியாக விலக்கக் கூடாது. கணினித் துறைகளில் (தகவல் தொடர்புத் துறையில்) பல்லாயிரக்கணக்கான சொற்கள் புதிதாக ஆங்கிலத்தில் உருவாக்கப்படுகின்றன, அவற்றை தமிழில் கண்டுபிடித்தல் கடினமாக இருக்கலாம். இந்நிலையில் தமிழ், ஆங்கிலச் சொற்களை அப்படியே உள்வாங்கிக் கொள்ள வேண்டும். பழங்காலத்திலும் பல பிராக்ரிதச் சொற்கள் தமிழால் கடன்வாங்கிய சொற்கள் என்று தெரியாத வண்ணம் அழகாக உள்வாங்கப்பட்டிருக்கிறது.

[அவர் ஆங்கிலத்தின் சொன்னதை, கருத்து மாறாமல் தமிழாக்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.]

4. ரொமீலா தாப்பர் 'சிந்து சமவெளி நாகரிக' வரிவடிவம்/மொழி திராவிட வரிவடிவம்/மொழி அல்ல என்று எழுதியிருக்கிறாரே, அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சிந்து சமவெளி நாகரிக வரிவடிவம் இன்னமும் வகையறுக்கப்படவில்லை (decipher). சிந்து வரிவடிவம் படவடிவம் (pictograph). தமிழ் வரிவடிவம் நேர்க்கோட்டு வடிவம் (linear).

5. இப்பொழுதுள்ள தமிழ் வரிவடிவம் பரமேஸ்வரன் என்ற பல்லவ அரசனால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள். நீங்கள் வேறு யாரோலோ என்று சொன்னீர்களே?

இப்பொழுதுள்ள தமிழ் வரிவடிவம் மகேந்திரப் பல்லவனால் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. திருச்சி மலைக்கோட்டையில் உள்ள ஒரு கல்வெட்டில் 'சித்திரகாரப் புலி' என்ற சொற்றொடர் அப்படியே இன்றைய எழுத்துக்கு அருகில் காணப்படுகிறது.

6. தொல்காப்பியம் எந்த வரிவடிவில் முதலில் எழுதப்பட்டது? (இதுதான் கேள்வி, ஆனால் மகாதேவன் ஒருவேளை கேள்வியைச் சரியாகக் கேட்கவில்லையோ என்னவோ, கீழ்க்கண்ட பதிலைத் தந்தார்.)

பனையோலையில் சேமிக்கப்பட்ட எந்த எழுத்துமே முன்னூறு/நானூறு ஆண்டுகளுக்கு மேல் பாதுகாத்து வைக்க முடியாதவை. கொல்கத்தா அருங்காட்சியகம் ஒன்றில் 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஓலைச்சுவடு தொல்காப்பியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

7. உ.வே.சாமிநாதைய்யர் படித்த ஓலைகள் எந்த வரிவடிவத்தில் இருந்தன?

சாமிநாதைய்யர் படித்தவை 15-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அல்லது அதற்குப் பிந்தைய காலத்தைச் சேர்ந்த ஓலைகள். அதற்கு முந்தையதாக் இருந்திருக்க முடியாது. சாமிநாதைய்யரைப் பற்றிச் சொல்கையில் யாரோ ஒரு வெளிநாட்டவர் சொன்ன மேற்கோளைச் சுட்டினார்: "சாமிநாதைய்யர் தமிழுக்குச் செய்த தொண்டை இந்த உலகத்தில், எந்த மொழிக்கும், வேறு யாரும், எந்தக் காலத்திலும் செய்ததில்லை." [அரங்கம் கரகோஷத்தில் அதிர்ந்தது.]

8. தமிழில் வரிவடிவில் மட்டும் ஏன் ख, ग, घ, छ, ज, झ போன்றவை இல்லை?

எந்த வரிவடிவமுமே ஒரு மொழிக்கெனப் பிரத்தியேகமாக உருவாக்கப்படுகிறது. தமிழ் மொழியில் தொடக்கத்திலிருந்தே இந்த சத்தங்கள் கிடையாது, எனவே எழுத்துகள் கிடையாது, எனவே வரிவடிவம் தேவையில்லை. அதனால்தான் அசோகன் பிராமி எழுத்துகளைப் பயன்படுத்தி, தமிழ் பிராமியாக்கும் போது, தேவையற்ற சத்தங்களை/எழுத்துகளை/வரிவடிவங்களை விலக்கிவிட்டு, தேவையானதை மட்டும் வைத்துக்கொண்டனர்.

ராபர்ட் கால்டுவெல் தென்மொழிகளின் இலக்கணத்தை (?) எழுதும்போது எப்படி மெல்லினத்தை அடுத்து வல்லினம் வரும்போது சத்தம் மாறுகிறது (பால், அம்பு) என்று எழுதியுள்ளார். ஆனால் இதுகூட ஏற்க முடியாததாக இருக்கலாம். மலையாளத்தில் 'அம்பு' என்னும் தமிழ்ச்சொல் இன்றும் கையாளப்படுகிறது. அம்மொழியில் இப்பொழுது 'प', 'ब' என்னும் இரு சத்தங்களும் தரக்கூடிய எழுத்துகள் இருந்தாலும், அழுத்தமான 'ப' வே கையாளப்படுகிறது. எனவே தொடக்கத்தில் தமிழர்கள் வல்லினத்தை, எங்கு வந்தாலும் அழுத்தமாகவே உச்சரித்தார்கள் என்றும் கூடக் கருதலாம்.

கிரந்த எழுத்துகள், கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தமிழல்லா சத்தங்களைக் குறிக்கப் பயன்பட்டது.

9. ['Madras Musings' முத்தையா என்று நினைக்கிறேன் இந்தக் கேள்வியைக் கேட்டது. அவரது முகம் எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை. ஆனால் கேள்வி கேட்டபோது 'இப்படி நான் Madras Musings'இல் எழுதியிருந்தேன் என்றார். பேச்சைக் கேட்க வந்த வேறு யாராவதுதான் சொல்ல வேண்டும் இவர் யாரென.] தமிழில் மட்டும் ஏன் இன்னமும் நாகரியில் இருக்கும் மற்ற சத்தங்கள் வரவில்லை? எப்பொழுது நாம் இந்த நிலையை மாற்றப்போகிறோம்? தமிழர்கள் கொடுமையாக 'Brigitte Bardot" என்னும் பெயரை 'பிரிகெட்டி பார்தாத்' என்று கொலை செய்கின்றனர்! [இப்படியாகக் குமுதத்தில் வந்ததாம்]

[இந்த அபத்தமான கேள்விக்கும் பொறுமையாகப் பதில் சொன்னார் மகாதேவன்.] தமிழர்கள் பிறமொழியைக் கொல்வதைவிட மோசமானது தமிழர்கள் தமிழையே கொலை செய்வது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தாலே தெரியும். எனவே இன்றைய நிலையில் இதுவே கவலையை அதிகரிக்க வைக்கிறது. வேண்டிய இடத்தில் 'ஃ' போன்றவற்றை 'ப'வுக்கு முன்னால் போட்டு 'f' என்னும் சத்தம் வருமாறு செய்துகொள்கிறோம். அதுபோல் தேவைப்பட்டால் மற்ற குறியீடுகளையும் கொண்டுவரலாம்.

10. பலுசிஸ்தானில் தமிழ் போன்றதொரு மொழி இருக்கிறதாமே?

ஆம். அங்கு பிராஹுயி என்றொரு மொழி - இப்பொழுது கிட்டத்தட்ட மறைந்தே விட்டது. அம்மொழியில் 'ஒண்ணு', 'ரெண்டு', 'மூணு' என்றுதான் எண்கள் இருக்கும். ஏக், தோ, தீன் என்று இல்லை. உறவுகள், உடல் உறுப்புகள் ஆகியவற்றுக்கு தமிழ்ச் சொற்களைப் போன்றே இருக்கும். நமக்கு ஒன்றுவிட்ட உறவே இந்த மொழி.

11. நான் தற்பொழுது மதிவாணன் என்பவர் எழுதிய புத்தகத்தைப் படித்து வருகிறேன். அதில் அவர் சிந்து சமவெளி வரிவடிவம், மொழி ஆகியவை தமிழிலிருந்து வந்தது என்கிறார். உங்கள் கருத்து?

மதிவாணன் என் நண்பர். அவரை நன்கு அறிவேன். அவர் அவரது குருநாதர் தேவநேயப் பாவாணர் கருத்தையே எழுதி வருகிறார். தேவநேயப் பாவாணர் தமிழ்தான் உலகின் முதல் மொழி, முதல் வரிவடிவம், அதிலிருந்துதான் உலக மொழிகளே கிளைத்து வந்தன என்ற எண்ணம் கொண்டவர். அவர் கொள்கைகளைப் பின்பற்றினால்தான் மதிவாணன் சொல்வதை ஒருவர் ஒத்துக்கொள்ள முடியும். மற்றபடி இந்தக் கூற்றுக்கு எந்தவித ஆதாரமும் கிடையாது.

12. [படு உளறலாக ஒருவர் எழுந்து கேட்ட கேள்வி இது.] தொலைக்காட்சியில் பேசுவது மட்டமாக உள்ளது என்கிறீர்கள். நம் பிள்ளைகளே இப்படித்தான் பேசுகின்றனர். இதற்குக் காரணம் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது தமிழில் 'ண', 'ள', 'ற', 'ழ' போன்ற எழுத்துகளை ஒழித்து விட்டார். அதனால்தான் தமிழ்க் குழந்தைகளால் தமிழை ஒழுங்காகப் பேச முடிவதில்லை. [நிசமாகவே இப்படித்தான் பேசினார் இந்த 'அறிஞர்'.]

[பொறுமையாகக் கேட்ட மகாதேவன்] எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தபோது நான் அவரிடம் வேலை பார்த்துள்ளேன். அவர் மொழி அறிஞர் கிடையாது. ஆனால் ஒருசில மொழியறிஞர்கள் (குழந்தைசாமி போன்றவர்கள், நானும் உட்பட) சொன்னதைக் கேட்டு செயல்படுத்தக் கூடிய அரசியல் பலம் அவரிடம் இருந்தது. அவர் கொண்டுவந்தது ஆகார, ஐகார மெய்களில் ஒருசில சீர்திருத்தங்கள். நீங்கள் சொல்வது போல் ஒருசில தமிழ் எழுத்துகளை அவர் ஒழித்துவிடவில்லை.

நான் தினமணி ஆசிரியராக ஆனவுடன் செய்த முதல் காரியம் சீர்திருத்தத் தமிழ் எழுத்துகளை தினமணியில் அச்சிட வைத்ததே. என் உதவி ஆசிரியர்கள் இதனை வெகுவாக எதிர்த்தனர். [அவரது அப்பொழுதைய உதவி ஆசிரியர்களுல் ஒருவரான திருப்பூர் கிருஷ்ணன் அரங்கில் இருந்தார்.] ஆனால் நான் கணினி இயக்குபவர்களிடம் போய் உதவி ஆசிரியர்கள் எப்படி எழுதிக்கொடுத்தாலும் சீர்திருத்தப்பட்ட எழுத்துகளையே அச்சுக்கோருங்கள் என்று சொல்லிவைத்தேன்.

இதனை எதிர்த்தும், ஆதரித்தும் பல கடிதங்கள் வந்தன. இந்தச் சீர்திருத்த எழுத்துகள் 'பெரியார் எழுத்துகள்' என்று பெயரிடப்பட்டதால் ஒருவர் 'விடுதலைக்கு ஆசிரியராக வேண்டியவர் தினமணிக்கு ஆசிரியராக வந்துள்ளார்' என்று எழுதினார். அந்தக் கடிதத்தையும் வெளியிட்டோம். பலர் பெரியார் எழுத்துகளைக் கொண்டுவருவதால் தினமணியின் விற்பனை பாதிக்கப்படும் என்றனர். இவர்கள் தினமணியைப் படிப்பது 'தஞ்சைப் பிராமணர்கள்' மட்டுமே என்று நினைத்திருந்தனர் போலும். அப்படி விற்பனை குறைந்தாலும், நான் என் நிலையை மாற்ற மாட்டேன், தினமணிதான் வேறு ஆசிரியரை அமர்த்திக் கொள்ள வேண்டி வரும் என்று சொன்னேன். ஆனால் சில மாதங்களிலேயே விற்பனை 15,000 பிரதிகள் அதிகமானது.

இன்னமும் தேவை உகர, ஊகார சீர்திருத்தம். [மேற்கொண்டு என்னுடைய தமிழ் இணையம் 2003இல் குழந்தைசாமி பேசியதைப் பற்றிய குறிப்புகளைப் பார்க்கவும்.]

----

'சத்தியபுத்தோ' என்பது 'சத்யாவின் மகன்' என்று பிற்காலத்தில் வந்த ஒருவரைக் குறித்திருக்குமோ என்று பார்வையாளர் ஒருவர் அபத்தமாக ஜோக் அடிக்க, கேள்வி-பதில் நிகழ்ச்சி முடிந்தது.
 

  தமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 2

இதன்மூலம் மகாதேவனின் முடிவு:

- அசோகன் பிராமி வரிவடிவத்தைப் பின்பற்றியே தமிழ் பிராமி வரிவடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.

- இதனை சமண முனிவர்கள், மதுரை அரசனின் (பாண்டியன்) ஏற்பாட்டின் பேரில் செய்துள்ளனர் என்று சொல்லலாம். அதிகபட்சமான கல்வெட்டுகள் மதுரையைச் சுற்றிக் கிடைத்துள்ளன. சமணர் குகைகள் என்று கருதப்படும் இடங்களில் கிடைத்துள்ளன. இந்தக் கல்வெட்டுகளுக்கும், காஞ்சி/பிறவிடங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் வரிவடிவத்திற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. (இரண்டு வேறுபட்ட வரிவடிவங்கள் தமிழ்க் கல்வெட்டுகளில் காணக் கிடைக்கின்றன.)

- அசோகன் பிராமி தமிழுக்கு வந்தது போலவே, தேவநாகரியாக மாறியுள்ளது.

- அசோகன் பிராமி, தக்காணப் பிராமியாக மாறி, அதிலிருந்து கன்னட, தெலுங்கு வரிவடிவங்கள் உருவாகியுள்ளன.

- தமிழ் பிராமி, கிட்டத்தட்ட கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வட்டெழுத்தாக மாற்றம் அடைந்துள்ளது. அப்பொழுதுதான் பனையோலையில், இரும்பு எழுத்தாணி கொண்டு எழுதப்பட்டது.

- கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்கள் தமிழகத்தை ஆளுகைக்குள் கொண்டுவந்தபோது, கிரந்த எழுத்தாக மாறிய தக்காணப் பிராமியைக் கொண்டுவந்தனர். சோழர்கள், பல்லவர்களுக்குக் கீழ் இருந்து தமிழகம் முழுவதையும் ஆட்சி செய்தபோது இந்த கிரந்த வழித் தமிழெழுத்து, வட்டெழுத்தை முழுவதுமாக அழித்து விட்டு கோலோச்ச ஆரம்பித்தது. அதன் வழியே (பின்னர் வீரமாமுனிவர் வழியாக மாற்றத்துடன்) இன்று நம்மிடையே உலவி வருகிறது.

- கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் வட்டெழுத்து முற்றிலுமாய் அழிந்துவிட்டது.

- கி.பி. பதினாலாம் நூற்றாண்டில் கிரந்த எழுத்து, மலையாள எழுத்தாக மாற்றம் கொண்டது.

- வரிவடிவங்கள் மாறினாலும், மொழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதே தொடர்போடு உள்ளது. இந்தக் கல்வெட்டுகளில் கிட்டத்தட்ட 75% சொற்களை இன்றைய தமிழர்களால் புரிந்து கொள்ள முடியும். (சில கல்வெட்டுகளைப் படித்துக் காட்டினார்.) மீதமுள்ள 25% சொற்கள் பிராக்ரித் தழுவலாக உள்ளது.

- கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு, பிராக்ரித்துக்குப் பதில் சமஸ்கிருதக் கலவை அதிகமாக வருகிறது. [அரையர்/அரசர் என்பது பிராக்ரித வழிச் சொல் என்றும், இராசர்/ராஜன் என்பது சமஸ்கிருத வழிச்சொல் என்றும் குறிப்பிடுகிறார்.]

- குகைக் கல்வெட்டுகளில் சமணர்களைப் பற்றியே காணப்படுவதாகவும், புத்தர்கள், ஆஜீவகர்கள் பற்றி எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை என்றும் சொன்னார். [இதன் பொருள் எனக்கு விளங்கவில்லை.]

- ஒருசில தமிழ்க் காசுகள் எகிப்து, அலெக்சாண்டிரியா போன்ற இடங்களில் (அமெரிக்கத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்குக்) கிடைத்துள்ளது என்றும் அவற்றின் தேதி கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு என்றும், அதில் காணப்படும் எழுத்துகள் தமிழ் பிராமி என்றும் ஆதாரங்கள் உள்ளன என்றார்.

- தொல்காப்பியத்தில் மிகத் தெளிவாகப் புள்ளி எழுத்துகள் (மெய்), தமிழ் எழுத்துகள் 12+18=30 என்று சொல்லப்படுவதாலும், இது பல காலமாக இருக்கிறது என்று அழுத்தமாகச் சொல்வதாலும் தொல்காப்பியத்தின் காலம் கி.பி. 2-3ஆம் நூற்றாண்டு என்று தான் கருதுவதாகச் சொன்னார்.

- இப்படிப்பட்ட கூற்றைத் தமிழ் அறிஞர்கள் விரும்பமாட்டார்கள் என்றும், ஆனால் தன்னுடைய கண்டுபிடிப்பு கல்வெட்டியலை மட்டுமே சார்ந்திருப்பதாகவும், இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்கள் தன் கூற்றை நிரூபிப்பதாகவும் சொன்னார்.

- அசோகன் பிராமி எழுத்துக் கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும், அதற்கு முந்தைய கல்வெட்டுகள் எதுவும் இந்தியாவில் இதுவரை கிடைக்கவில்லை என்றும், அசோகருக்கு முந்தைய காலத்தில் கல்வெட்டுகள் இல்லாமல் துணியில் எழுதியிருக்கலாம் (அதாவது அசோகர் காலத்தைய பிராமி வடிவம் அதற்கு முந்தையதாக இருந்திருக்கலாம், ஆனால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை...), அழிந்துபோயிருக்கலாம் என்றும் சொன்னார்.

- கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்திகளைக் கொண்டு பதிற்றுப்பத்தின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று கொள்ளலாம்.

- "சத்தியபுத்தோ அதியமான் நெடுமான் அஞ்சி" (ஔவையாரின் நண்பர், தகடூர் அரசர், நெல்லிக்காய் வள்ளல்) என்று ஒரு கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் சத்தியபுத்தோ என்னும் பாலி மொழி யாரைக் குறிக்கும் என்று ஒரு புதிர் பல நாட்கள் இருந்ததாகவும், அது அதியமானையே குறிக்கும் [சத்திய புத்தோ -> சத்திய புத்திரன் -> சத்திய மகன் -> அதிய மான்] என்றும் சொன்னார்.

பேச்சு ஒரு மணி நேரம் நிகழ்ந்தது. அதன்பின், அருமையான காப்பி இருக்கையிலேயே அனைவருக்கும் வழங்கப்பட்டது. காலையில் வந்திருந்த அனைவருக்கும் காலையுணவும் (இலவசமாக) வழங்கப்பட்டதென அறிந்தேன்!
 

  தமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 1

தமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள்

இன்று சென்னை டி.டி.கே. சாலை டாக் செண்டரில் (Tag Centre), ஐராவதம் மகாதேவன் "Twin Puzzles in Tamil Epigraphy" என்ற தலைப்பில் பேசினார். இந்தப் பேச்சு, அவரது புத்தகம் "Early Tamil Epigraphy. From the Earliest Times to the Sixth Century A.D." முன்வைத்த கருத்துகளின் சுருக்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

நான் உள்ளே நுழையும்போது பேச்சு ஆரம்பித்திருந்தது. இந்த இயல் எனக்கு முன்பின் அறிமுகமில்லாதது. நான் இன்னமும் மகாதேவனின் புத்தகத்தைப் படிக்கவில்லை. (வாங்கவேண்டிய பட்டியலில் உள்ளது.) பேச்சு தமிழ் கல்வெட்டுகளைப் பற்றி இருந்தாலும், ஆங்கிலத்திலேயே அமைந்திருந்தது. தினமணியின் முன்னாள் ஆசிரியரால் நிச்சயம் தமிழிலேயே இந்த உரையை ஆற்றியிருக்க முடியும். கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் பெரும்பாலோரும் தமிழர்களே. ஒரேயொரு வெளிநாட்டவர் இருந்தார். அவர்கூட 'வட்டெழுத்து' என்பதை நன்கே உச்சரித்தார்.

---

கல்வெட்டுகளைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்களுக்கு எனக்குத் தெரிந்த வகையில் ஒரு சிறு அறிமுகம். பண்டைத் தமிழர்கள் கல்வெட்டுகளில் பொறித்துள்ள எழுத்துகளை நம்மால் இன்று படித்துப் புரிந்து கொள்ள முடியாது. இந்த வரிவடிவத்தில் ஒவ்வொரு குறியீடும் என்ன எழுத்தை/சத்தத்தைக் குறிக்கிறது என்பதை ஆராய்ச்சிகளின் மூலம், பல கல்வெட்டுகளைப் படிப்பதன் மூலம் கண்டுபிடிப்பதுதான் epigraphy எனப்படும் இயல் - கல்வெட்டியல் என்று நானாகப் பேர் கொடுத்துள்ளேன். தமிழில் என்ன சொல் கையாளப்படுகின்றதென்று தெரியவில்லை. இந்தக் கல்வெட்டுகள் ஒருசிலவற்றின் படங்கள் Frontline இதழின் இந்தக் கட்டுரையில் காணக்கிடைக்கிறது.

இனி மகாதேவனின் உரைக்கு வருவோம்:

* 1906ஆம் வருடத்தில் கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த வெங்கய்யா என்பவர், மேட்டுப்பட்டி என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டுகளைப் பார்த்துவிட்டு இதில் எழுதப்பட்டிருப்பது 'பிராக்ரித்' மொழியாக இருக்குமோ என்று நினைத்தார்.

* பின்னர் அவரது மாணவரான கிருஷ்ண சாஸ்திரி, 1919 வாக்கில் இந்தக் கல்வெட்டுகளில் திராவிட மொழிகளின் தாக்கம் இருக்கிறது, ஒருவேளை தமிழாக இருக்கலாம் என்று சொன்னார்.

* 1924இல் சுப்பிரமணிய அய்யர் தன் ஆராய்ச்சியின் முடிவாக இந்தக் கல்வெட்டுகள் பிராக்ரித் ஆக இருக்க முடியாது, ஏனெனில் இவற்றில் 'ள', 'ற', 'ண', 'ழ' போன்ற எழுத்துக்கள் காணக்கிடைக்கின்றன, நாகரி/பிராக்ரித் மொழியில் வரும் இரண்டாவது/மூன்றாவது/நான்காவது 'க', 'ச' க்கள் (ख, ग, घ, छ, ज, झ போன்றவை) இல்லை என்று கண்டுபிடித்தார். ஆனால் அதே நேரத்தில் 'தந்தை' என்னும் சொல் 'தாநதய' (?) என்று எழுதப்பட்டிருந்தது என்றும் கண்டார்.

* பின்னர், பட்டிப்ரோலு (ஆந்திரம்) என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டுகளைப் படிக்கையில் மெய் எழுத்துகள், அகர, ஆகார மெய்கள் ஆகியவற்றைக் குறிக்க நீட்டல் கொம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிந்தனர். [படமில்லாமல் இதனை விளக்குதல் கடினம், ஆனால் அந்தப் படங்களை இப்பொழுது இங்கு வரைய முடியாத நிலையில் உள்ளேன்.]

* K.G. கிருஷ்ணன் என்பவர் 1960களில் அரச்சாளூர் கல்வெட்டுகளைப் படிக்கையில் அங்கு புள்ளி வைத்த மெய் எழுத்துகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். இந்தக் கல்வெட்டுகள் கி.பி ஒன்றாம் நூற்றாண்டின் இறுதியைச் சேர்ந்தவை என்று கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாம். இந்தக் கல்வெட்டுகள் புள்ளி இல்லாத மெய்யெழுத்துகள் உள்ள மேற்சொன்ன கல்வெட்டுகளுக்குப் பிந்தைய காலமாக கண்டறியப்பட்டுள்ளன.

* சாதவாகன காசுகள் ஒரு பக்கம் பிராக்ரித் மொழியிலும், மற்றொரு பக்கத்தில் தமிழ் (புள்ளி எழுத்துக்களுடனும்) இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் காசுகள் வழங்கப்பட்டது கி.பி. 1-3 நூற்றாண்டுகளுக்குட்பட்டவை.

* இந்த ஆரம்பகால வரிவடிவங்கள் அசோகர் காலத்து பிராமி வரிவடிவங்களைப் பின்பற்றியுள்ளன. ஆனால் பிராக்ரித்தில் இருந்த, தமிழில் இல்லாத வரிவடிவங்கள் விலக்கப்பட்டு, பிராக்ரித்தில் இல்லாத 'ள', 'ற', 'ண', 'ழ' ஆகிய எழுத்துகளுக்கான புது வரிவடிவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அப்படிப் புது வரிவடிவங்கள் சேர்க்கப்படும்போதும், ஏற்கனவே இருக்கும் 'ல', 'ன', 'ர' ஆகியவற்றின் குறியீடுகளை எடுத்து, அவற்றினை நீட்டித்தது போல் உள்ளது.
 

  ஆம்பூர் திசைகள் கூட்டம்

நேற்று வீடு வந்து சேர்கையில் இரவு பத்து மணி. முந்தைய த்ரிஷா பதிவு பார்த்திருப்பீர்கள். அது எதற்காக செய்யப்பட்டது என்றும் அனைவருக்கும் புரிந்திருக்கும்! மாணவர்களை இப்படி பள்ளி ஆசிரியர்கள் ஊக்குவிக்காததால்தான் அவர்களும் படிக்கமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள்!

கிட்டத்தட்ட மூன்று மணிநேரம், நூறு மாணவர்கள் சின்ன அறையில் இடுக்கிப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து இணையத்தின் சாத்தியங்கள், தமிழில் எழுதுவது எப்படி என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மொத்தம் அந்தக் கல்லூரியில் படிப்பவர்கள் 900 மாணவர்களே. இந்தக் கணினிப் பட்டறை நடந்துகொண்டிருந்தபோது கவிதைப் பட்டறையும் இணையாக வேறிடத்தில் நடந்துகொண்டிருந்தது.

இன்று காலை ஐராவதம் மகாதேவனின் ஒரு பேச்சுக்குப் போயிருந்தேன். மதியம் முடிந்தவரை எழுத முயற்சிக்கிறேன்.
 

என் எண்ணங்களும், கருத்துகளும். என்னைத் தொடர்பு கொள்ள: மின்னஞ்சல் முகவரி



My English blog

விளம்பரம்
இணையத்தில் தமிழ்ப் புத்தகங்களை வாங்க

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி

கில்லி - புதுசு தினுசு ரவுசு

இயற்பியல்::2005, இயற்பியல் ஆண்டுக்கான தமிழ் இணையத்தளம்

களம் சார்ந்த பதிவுகள்
அறுசுவைச் சமையல்
எளிய தமிழில் மார்கெடிங்
பங்குச்சந்தை
இயற்பியல்
குவாண்டம் இயற்பியல்
பிபிசி தமிழ்
விளையாட்டு பற்றிய பதிவுகள்
கிரிக்கெட்
சதுரங்கம்

முந்தைய பதிவுகள்

சில சுட்டிகள்
இந்த வலைப்பதிவின் RSS செய்தியோடை
முகப்பு
என்னைப் பற்றி
என் கட்டுரைகள்
தமிழ் இணையம் 2003
திசைகள் | திண்ணை | தமிழோவியம் | காலச்சுவடு | உயிர்மை | அமுதசுரபி | தமிழ் சமாச்சார் சுவடுகள் | மரத்தடி

நான் படிக்கும் தமிழ் வலைப்பதிவுகள்
இணைய குசும்பன்
முகமூடி
தமிழ் ராம்வாட்ச்
சன்னாசி
ரவி ஸ்ரீநிவாஸ்
நாராயணன்
இராம.கியின் வளவு
நாகூர் ரூமி
மாலன்
சுரேஷ் கண்ணன்
ரோஸாவசந்த்
பெட்டைக்குப் பட்டவை
வெங்கட்
இரா.முருகன்
சசி
தமிழ் நிதி
ரஷ்யா இராமநாதன்
பி.கே.சிவகுமார்
சந்தோஷ் குரு
சுந்தரமூர்த்தி
மனுஷ்ய புத்திரன்
மதி கந்தசாமி
துளசி கோபால்
செல்வராஜ்
காசி ஆறுமுகம்
ஹரிமொழி
டோண்டு ராகவன்
தங்கமணி
சுந்தரவடிவேல்
ராஜ்குமார்
பாலாஜி
யளனகபக கண்ணன்
தேசிகன்
அருள் செல்வன்
பவித்ரா
அருண் வைத்யநாதன்
M.K.குமார்
கிச்சு
பரிமேலழகர்
ரஜினி ராம்கி
சுவடு ஷங்கர்
மூக்கு சுந்தர்
ஐகாரஸ் பிரகாஷ்
ராதாகிருஷ்ணன்
வெங்கடேஷ்
ஹரன் பிரசன்னா

Powered by Blogger

Creative Commons License
This work is licensed under a Creative Commons License.